Monday 15 April 2024

ஆடு ஜீவிதம் - நாவல்

 


ஆடு ஜீவிதம்
பென்யாமின்
தமிழில் விலாசினி
எதிர் வெளியீடு
216 பக்கங்கள்
300 ரூபாய்

வெளிநாட்டிற்கு /கல்ஃப்/ வேலைக்குச் செல்லும் நஜீப், ஹக்கீம் இருவரின் துயரங்களும் தான் நாவல்.   வாழ்வின் பல்வேறு சிக்கல்களுக்கு நடுவில் வெளிநாடு செல்ல பணம் திரட்டி கிளம்புகிறான் நஜீப். உடன் ஹக்கீம். வெளிநாட்டில் இறங்கிய பின் அவர்களை அழைத்துச் செல்ல யாருமில்லை. நீண்ட நேர காத்திருப்பிற்குப் பின்னர் ஒருவன் வந்து பாடாவதியான ஒரு வாகனத்தில் அழைத்துச் செல்கிறான். கனவுகள் உடையும் வண்ணம் செல்லும் பாதை. பாலைவனத்தில் முதலில் ஓரிடத்தில் இறக்கி விடப்படுகிறான் ஹக்கீம். அடுத்து நஜீப். அவ்விடங்களில் ஆடு மேய்ப்பது இவர்கள் வேலை. அந்த வேலை எப்படி அவர்களின் வாழ்வை பாடாய்ப் படுத்தியது என்பதை வாசிக்கும்போது நேரடியாக அனுபவிப்பது போல உணர முடிகிறது. மூன்றாண்டுகளுக்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறி தப்பிக்க ஒரு வாய்ப்பு. அவர்கள் தப்பித்தார்களா? அதற்கான பாதை எளிதில் அமைந்ததா என்பதை நாவல் பேசுகிறது. உண்மையில் இப்படிப் பயணம் சென்ற ஒருவரின் கதை கேட்டு பென்யாமின், ஒரு சுயசரிதையைப் போல எழுதியுள்ளார். மொழிபெயர்ப்பு நாவல் என்பது ஒரு அயற்ச்சியையும் உண்டுபண்ணவில்லை. சிறப்பாகவே இருந்தது. வெளிநாட்டு வேலை என்பது இப்படியும் இருக்கும் என்ற அச்சத்தைத் தருகிற வகையில் நாவல். நஜீப் அனுபவித்த கொடுமைகள், வெளிநாட்டு வேலை என்றாலே யோசிக்க வைக்கும். இனி இதுதான் வாழ்வு. இதனை இப்படித்தான் கடந்தாக வேண்டும் என்ற சூழலில் அந்த வாழ்க்கைக்குள் தன்னை உட்படுத்திக்கொண்டு சகித்தும் கடந்தும் வாழும் நஜீப் எல்லாவற்றிற்கும் அல்லாவை துணைக்கு வைத்துக்கொள்கிறான். ஒரு கட்டத்தில் நாவல் இஸ்லாமியப் பிரச்சாரம் போலவும் எனக்குத் தோன்றிவிட்டது. ஹக்கீம் உடன் வந்த இப்ராஹிம் கதிரி பாலைவனம் கடக்க உதவிய பின்னர் மறைந்து விடுகிறான். அவனை அல்லா என்கிறான் நஜீப். அடுத்து ஒரு வாகனப் பயணம். வாகனத்தை நிறுத்தியவரை அல்லா உருவில் காண்கிறான் நஜீப். தான் படும் அவஸ்தைகள் யாவற்றிற்கும் அல்லா காரணம் என்கிறான். கிடைக்கும் ஒருசில நல்லவற்றிற்கும் அல்லா காரணம் என நம்புகிறான். இப்ராஹிம் கதிரி அல்லா என்றால் ஹக்கீம் பாவம் எனத் தோன்றவில்லையா? எனக் கேள்வி எழாமல் இல்லை. ஆட்டுக் கொட்டம், பாலைவனம், முரட்டு மனிதன், அர்பாப், காவல் நிலையம் எல்லாம் ஒரு புதிய காட்சியை அறிமுகப்படுத்துகிறது. ஒரு புதிய அனுபவத்தைத் தருகிறது. உறவுகளைத் துறந்த ஒரு வாழ்வை வாழ பணிக்கப்பட்ட மனிதனின் கதை இது. வாசிக்கலாம். 

யாழ் தண்விகா 

❣️


Sunday 31 March 2024

எழுத்துலகம் – அகமும் புறமும் அ.ம.அங்கவை யாழிசை


எழுத்துலகம் – அகமும் புறமும்

அ.ம.அங்கவை யாழிசை

யாப்பு வெளியீடு

72 பக்கங்கள்

70 ரூபாய்


 ஊற்று நீர், மணல் நனைத்து நனைத்து நதியெனப் பயணிக்கத் தொடங்கும் தருணம்... எவ்வளவு அற்புதமானது..! போலான ஒரு பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் அங்கவை யாழிசை. கொடியசைத்துத் தொடங்கி வைத்திருக்கிறார் தோழர் ஏர் மகாராசன் . தோழர், ஏற்கனவே எழுதி இணைய இதழ்களில் வெளிவந்துள்ள வாசிப்பனுபவக் கட்டுரைகளைத் தொகுத்து தொகுப்பாக்கி உள்ளார். அச்சு உலகில் முதல் பயணம். பேரன்பு வாழ்த்துகள். 


 6 நூல் குறித்த 6 கட்டுரைகள். வறீதையா, தமிழ்மகன், தீபச்செல்வன், ஜெயமோகன், சோ.தர்மன் மற்றும் முத்துநாகு ஆகியோரின் நூல்கள் குறித்தவை. வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய கையறு நதி நூல் மனப்பிறழ்வு அடைந்த மகளுக்கும் தந்தைக்குமிடையே உள்ள அரவணைப்பு குறித்துப் பேசுகிறது. மனப்பிறழ்வு அடைந்த பெண்ணாக தன்னை நினைத்துக்கொள்ளும் அளவுக்கு நூல் தனக்குள் உண்டாக்கிய பாதிப்புகள் குறித்து வாசிப்பு அனுபவத்தை முன்வைத்துள்ளார். நிறைவைத் தரும் எழுத்து. இன்னும் கொஞ்சம் நூல் குறித்து எழுதியிருக்கலாமோ என எண்ண வைக்கிறது. “மனம் மாயம் செய்யும் கருவி. நம்மால் செய்ய முடிந்தவையும் செய்ய முடியாதவையும் நம் மனம் நிர்ணயிப்பது தான். மனதை ஆளவும் கற்றுக்கொள்ள வேண்டும். அடக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று உளவியலாளர் போல எழுத்தைப் பேச வைத்திருக்கிறார் நூலாசிரியர். 


 தமிழ்மகன் எழுதிய படைவீடு நூல் ஆட்சி அதிகாரத்தை இழந்த கடைசி தமிழ்ப் பேரரசன் சம்புவராயன், மகன் ஏகாம்பரநாதன், அவரது மகன் மல்லிநாதர் ராசா நாராயணர் ஆட்சிக் காலம் பற்றிப் பேசுகிறது. விஜயநகரப் பேரரசு தமிழ் மண்ணில் காலூன்ற காஞ்சி பிராமணர்களின் போதிப்பான சாதிக்கொரு புராணம் எந்தளவுக்கு எடுபட்டு தமிழ்ப் பேரரசைத் தூக்கி எறிய உதவியது என்பதைச் சுருக்கமாகக் கூறியுள்ளார். சாதிப் பிரிவுகளையும், சாதி வன்மங்களையும் இப்போதுதான் பிறந்த சிக்கல் என்று எண்ணிக்கொண்டிருந்ததாக தோழர் குறிப்பிட்டுள்ளார். வர்ணாசிரமம் இங்கு எப்போது வந்தது என்பதைக் கணக்கிட்டாலே அதற்கு விடை கிடைத்துவிடும். நூலாசிரியரின் தந்தையும் தோழருமான ஏர் மகாராசன் மாணவர்கள் குறித்து சில மாதங்களுக்கு முன் வெளிவந்த கட்டுரை நூலில் சொன்னவாறு தாழ்த்தப்பட்ட சாதி, உயர்த்தப்பட்ட சாதி என்ற சொல்லை தாழ்ந்த சாதி, உயர்த்த சாதி என்று சொல்ல வைத்ததன் பின்னணியில் இருந்தும் சாதியின் ஆதியைத் தேடிக் கண்டடையலாம்.


 தீபச்செல்வன் எழுதிய நடுகல் குறித்த வாசிப்பனுபவம் ஈழத்தை, அதன் வலிகளை, கண்ணீர்க் கதையை, வீரம் செறிந்த போர்க்களக் காட்சிகளை, விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை, பல்வேறு நாடுகளின் துரோகங்களை கண்முன் கொண்டு வந்துவிட்டது. ஒரு துயர் கனவு போல நினைவைவிட்டு அகற்றிவிட்டு இன்று அவரவர் வேலைகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். மீளாய்வு செய்வதற்குக் கூட அவசியமற்ற ஒரு நிகழ்வாக ஈழப்போர் பெரும்பான்மையோருக்கு அமைந்துவிட்டது ஒருபுறம். அதை மறக்கடிக்கும் ஊடகம் ஒருபுறம். மண்ணையும் மக்களையும் உரிமைகளையும் மீட்டெடுக்க நிகழ்ந்த போரை அசாதாரணமாகக் கடந்துவிட முடியாது. அந்தப் பணியை, நடுகல் செய்கிறது. வீர மரணம் அடைந்துவிட்ட மகனின் புகைப்படம் கூட கையில் இல்லாமல் அவனின் நினைவுகளை மட்டுமே நடுகல்லாகச் சுமக்கும் தாய் பற்றிய நூல் என்கிறார் நூலாசிரியர். நூலை வாசிக்கத் தூண்டும் கட்டுரை.


 ஜெயமோகனின் புறப்பாடு குறித்த கட்டுரை. அவருடைய எழுத்தைச் சிலாகித்துப் பேசுகிறார் நூலாசிரியர். அவர் குறிப்பிடும் ஒப்புமைகள் சிலவற்றையும் கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார். ஓரிடத்தில், “இந்தப் பயணம் முழுக்க ஒரு இடத்தில் கூட, ஒரு பொருளின்மீது கூட அலட்சியம் இல்லை. அங்கு உள்ள அனைத்துமே தனக்குத் தகவல்தான் என்று எடுத்துக்கொண்டார் போலும்” என்பது உட்பட. சென்னையில் ஒரு சேரியில் அவர் தங்கும்போது வருகின்ற சம்பவங்கள் பீதி ஊட்டுகின்றன என்று கூறியுள்ள நூலாசிரியர், இதை இப்படியே வைத்திருக்கும் அதிகார மையம் குறித்து ஜெயமோகன் போன்றவர்கள் பேசாமலிருப்பதையும் சக மனிதன் குறித்து, எழுத்தாளர்கள் குறித்து, சமூகம் குறித்து இவ்வுலகின் அனைவருக்கும் மேலான ஓரிடத்தில் நின்று பேசும் அவருடைய வார்த்தைகளை கூர்ந்து நோக்கத் தொடங்கினால் அவர் யாரெனப் புரியும். புறப்பாடு வாசிக்கும்போது ஜெயமோகனின் பிம்பம் மீண்டும் மீண்டும் வந்து தொலைக்கிறது. இதற்கு நூலாசிரியர் என்ன செய்ய முடியும்...


 சோ.தர்மனின் சூல், விவசாயம், அது சார்ந்த மக்கள், யாரிடம் அது இருந்தது, அது எப்படியெல்லாம் அதிகாரத்தின் கைகளில் சென்று சேர்ந்தது என்பது போன்ற பல்வேறு புதிய தகவல்களைத் தருகிறது என்பது மறுக்கவியலாத உண்மை. மாடுகளைக் கொன்று மாமிசம் உண்டவன், ஒரு கால்நடையைப் போலவே நடக்க நேரிடும், ஊர்க் கண்மாயை விரோதம் காரணமாக உடைப்பவன் பிள்ளை ஊமையாகப் பிறக்கும் இப்படிப் பல நம்பிக்கைகள் உண்மையில் அப்படியே நடந்திருக்கின்றன என்கிறார் நூலாசிரியர். நல்ல விசயத்தைப் பாதுகாக்க, எதையாவது சொல்லிப் பயம்காட்டி வைத்திருப்பது என்பது நடந்திருக்கும். அதற்காக எல்லாவற்றையும் நல்லது என்பதை நம்புவதும் தவறு. பயம் காட்டுவதும் தவறு. மாட்டுக்கறி தின்ன இறந்த மாடுகளை மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் என்பது போல உள்ளது நூலாசிரியர் கருத்து. மாடுகளைக் கொன்று சாப்பிடுபவன் ஒரு கால்நடையைப் போலவே நடப்பான் என்பதை எப்படி அறுதியிட்டுக் கூறுகிறார் எனத் தெரியவில்லை. கண்மாய் வைத்து அரசியலாடும் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் யாருமிங்கே ஊமையாகப் பிறக்கவில்லை என்பதையும் நாம் பார்க்கவேண்டும். இதில் பாதிக்கப்படும் மக்கள் அதிகாரம் அற்றவர்கள் மட்டுமே. இது சமகாலத்தில் அரசியல்வாதியைக் கண்டுகொள்ளாமல் கடந்துவிடவேண்டும் என்பதற்காகப் பயன்படுத்திய உத்திபோல இருப்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். விவசாயம் உரியவர்களிடம் போய் சேராததால் இங்கு உழைப்பவனிடம் ஒன்றுமில்லாமலும், பண்ணையிடம் எல்லாம் கூடுதலாக நிறைந்திருப்பதையும் இன்றும் காண்கிறோம். அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் இங்கு விவசாயத்தினை துச்சமாக நினைத்துத்தான் தொடங்குகிறது. அதன்பலனை வருங்காலம் எப்படித் தாங்குமோ தெரியவில்லை. சூல் வாசிக்க வேண்டிய நூல்.


 முத்துநாகு எழுதிய சுளுந்தீ நூல் குறித்த வாசிப்பனுபவம், தனது துறை சார்ந்திருப்பதால் நூலாசிரியர் பேரார்வத்துடன் எழுதியது போலிருக்கிறது. கதைச் சுருக்கத்தையும் அருமையாகக் கூறித் தொடங்குகிறார். எவ்விதம் தனது துறையில் இந்நூல் உதவுகிறது என்பதையும் கூறுகிறார். தமிழரின் மருத்துவப் பண்பாட்டியலை விவரிக்கும் வரலாற்றுக் கதை என்ற தலைப்பு பொருத்தமே. சித்த மருத்துவத் துறையில் பயின்று வரும் நூலாசிரியருக்கு தகுந்த சமயத்தில் இந்நூல் கிடைத்ததை சித்தர்கள் அருளால் தான் கிடைத்தது என்று நூலாசிரியர் கூறுவதை எப்படி ஏற்பது எனத் தெரியவில்லை. இருந்தபோதிலும் சுளுந்தீ என்பது வாசிக்க வேண்டிய நூல் என்பதில் ஐயமில்லை.


 நூலின் பக்கங்கள் மற்றும் விலையையும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மொழிநடை அருமையாகக் கூடி வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள். அரசியல், முற்போக்கு இரண்டின் போதாமை பல இடங்களில் தெரிகிறது. இதைக் குற்றமாகக் கருதாமல் ஆலோசனை என்ற அளவில் எடுத்துக்கொள்ள தோழரிடம் கேட்டுக்கொள்கிறேன். எழுத்தோடு எந்நேரமும் உறவாடிக் களித்திருக்கும் தந்தையின் கரம் பற்றுங்கள். அதேசமயம் உங்கள் வழியில் பயணம் செய்யுங்கள். சிறப்பான தொடக்கம். வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️

என் காட்டில் அடைமழை - ராஜிலா ரிஜ்வான்


என் காட்டில் அடைமழை

ராஜிலா ரிஜ்வான் 

வேரல் பதிப்பகம்

90 பக்கங்கள்

120 ரூபாய்


 உலகில் சலிக்காதது எது என்று கேட்டால் அது காதல் மட்டும்தான் என்பேன். அதுதான் மழையின் ஒவ்வொரு துளியையும் ரசிக்க வைக்கும். அதுதான் பூவின் ஒவ்வொரு இதழ்களையும் தொட்டு ரசிக்க வைக்கும். நட்சத்திரங்களை எண்ணி வானத்திடமே சொல்லி சரியா எனக் கேட்க வைக்கும். உறங்கும் நேரம் விழிக்க வைக்கும். விழிக்கும் நேரம் உறங்க வைக்கும். கனவு காண வைக்கும். முட்டாள்தனத்தில் மூழ்கவைக்கும். கற்பனையைக் கவிதையாக்கும். இருவருக்கு மட்டுமான உலகம் உருவாக்க வைக்கும். ஓரிணை இறக்கையில் இருவரையும் பறக்கவைக்கும். என் காட்டில் அடைமழை தொகுப்பை வாசிக்கும்போது இவை அத்தனையையும் உயரலாம்.. ஹைக்கூ கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ள தோழர் ராஜிலா காதல் கவிதைத் தொகுப்பை எழுதி அதனை ரிஜ்வான் தோழருக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். தொகுப்பு, ஒட்டுமொத்த காதலர்களும் தங்களுக்கு எழுதியது என நினைத்துக்கொள்வதையும் சமர்ப்பணம் என்றுதானே எடுத்துக்கொள்ள முடியும்... எடுத்துக்கொள்ளட்டும். அது காதலின் வெற்றி. தொகுப்பின் வெற்றி. வாழ்த்துகள் தோழர்.


 திரைப்பட இயக்குநரும் பாடலாசிரியருமான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் அணிந்துரை வழங்கியுள்ளார். இசைஞானி இளையராஜாவின் டைட்டில் சாங் கதையை சுருக்கமாகச் சொல்லி படத்திற்கு உள்ளே இழுத்துச் செல்வது போல அணிந்துரையும் அழகாக நம்மை தொகுப்பின் உள்ளே இழுத்துச் செல்கிறது. 

“வீடு முழுவதும் தனிமை

நீயில்லாத வீட்டில் 

எதைச் சாப்பிடுவது

எப்பொழுது தூங்குவது

எப்படிச் சிரிப்பது


இதை எழுதிக் கொண்டிருக்கும் 

இந்நேரத்தில் தோளில் ஆறுதலாய்

கை போடுகிறது


சுவரில் தொங்கும் உன் சட்டை”

கண்ணுறங்கும் நேரத்தில் திடீரென விழித்துப் பார்க்கும் குழந்தை அருகில் தாய் இல்லையென்றால் என்ன அழுகை அழும்... எதையெதையோ காட்டி ஏமாற்றினாலும் அதற்கு தாயின் தேவை, அவளின் அருகாமை எது குறித்தும் எந்தப் புரிதலும் இல்லாத வயதிலும் அந்த இடத்திலிருந்து பூக்கும் அழுகைக்கு என்ன பதில் இருக்கும் ஆறுதல் சொல்பவர்களுக்கு... குழந்தையைப் பொறுத்தமட்டில் தாய் இல்லாத அந்த இடத்தின் தனிமை போலான உணர்வு மட்டுமே. இக்கவிதையில் காதலன் இல்லாத இடத்தின் தனிமை என்பது காதலிக்கு. எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் காதலன் (அருகில் இல்லையென்றாலே அது தொலை தூரம் தானே) அவளின் தனிமையைப் போக்க வேண்டும். என்ன செய்வது இத்துயரைக் களைய... அவன் உடுத்திய சுவரில் தொங்கும் சட்டை ஆறுதலாகத் தோளில் கைபோடுகிறது என்ற சித்திரம் கற்பனை என்றபோதிலும் நம் தோளில் விழும்\விழுந்த கையை நாம் இறுக்கமாகப் பற்றிக்கொள்ள எத்தனிக்கிறோமே அதுதான் காதல். அதுவும் தனிமையின்போது வந்து விழும் கைகள் எத்தனை தேவை என்பதை வரிகள் உணர்த்துகின்றன. 


“முன்பைவிட என் கவிதைகளில்

அதிகம் காதல்ரசம் சொட்டுவதாகக்

கூறிக்கொள்கிறார்கள்.

அவர்களுக்குத் தெரியாது

நாம் தற்சமயம் பிரிந்திருப்பது”

பிரிவென்பது காதல் கூட்டும். இக்கவிதையும் அதைத்தான் சொல்கிறது. காதலின் ஒவ்வொரு நொடியையும் ரசிக்கக் கற்ற ஒருவனுக்கு பிரிவின் ஒவ்வொரு நொடியின் வலியும் புரியும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலரைக் கொண்டாடும் நாம் நம்மைச் சுற்றிப் பூத்திருக்கும் எத்தனை மரங்களை பார்த்துக் கொண்டாடியிருக்கிறோம்... காதல் என்பது நொடிதோறும் பூத்துக்கொண்டிருக்கும் ஒரு ரகசியம். அதன் சூட்சுமம் உணர்ந்தவர்களுக்கு மட்டும்தான் சேர்தல் பிரிதல் இரண்டின் வலியும் புரியும்.


 வாங்கியதை மீண்டும் கொடுத்து ஈடு கட்டிக் கொள்ளுதல் என்பது ஒரு காதலின் வேலையல்ல. கொடுப்பதும் வாங்குவதும் இயல்பாக அதனதன் போக்கில் நடக்கும் ஒரு வித்தை. 

“கொடுத்தது 

திரும்பக் கிடைத்துவிடுகிறது

வட்டியுடன்

உன்னிடமிருந்து மட்டும்.

முத்தமில்லை என்று சொன்னால்

நம்பவா போகிறீர்கள்...”

காதலைப் பொறுத்தவரை சேமிப்புக்கு அதிக வட்டி தரும் தனியார் வங்கி போலத்தான். வட்டியுடன் திரும்பக் கிடப்பது முத்தம் மட்டுமில்லை என்பதும் வாழ்ந்த, வாழும் காதலர்களுக்குப் புரியும். காதலில் வாழ்பவர்களுக்கும் புரியும். 


 தனது இணையரை சிறப்பாகக் கவனிக்க நினைத்து மொக்கைச் செயல்களைச் செய்யும் பலர் இருக்கிறார்கள். அதற்காக அதனைப் புறம் தள்ளிவிடுமா மனம்... அதற்குள்ளும் ஆனந்தம் கண்டு ஆர்ப்பரிக்கும் காதல். சிறப்பான கவனிப்பு உள்ளபடியே சிறப்பாக அமைந்தால் அப்போது நமக்கு நாமே “நான் கொடுத்து வைத்தவள் / ன்” என்று உள்ளுக்குள் சொல்லிக் கொள்வோமே... அப்பேரதிசயம் பூக்கும். மிக மிக இயல்பான கவிதைதான். மிக மிக எளிய சூழல் தான். மல்லிகைப்பூ காலம் காலமாக வெள்ளை நிறத்தில்தான் பூக்கிறது. அதற்கு வண்ணமடித்துப் பார்ப்பதில்லை நாம். அதன் இயல்பில் வைத்தே நாம் மணம் நுகர்கிறோம்.. அதுவும் நிறம் மாற்றாமல் நம்மை ஈர்க்கிறது. இக்கவிதையும் அப்படித்தான்.

“வழக்கத்தைவிட

சுவை கொஞ்சம் கூடுதலாக உள்ளதாக

வீட்டில் சொல்கிறார்கள்.

அவர்களுக்குத் தெரியாது

இன்று உனக்காகச் சமைத்தேன்”


 கவிப் பேரரசு வைரமுத்து சொல்லும் காதலித்துப் பார் உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும். உலகம் அர்த்தப்படும். உனக்கும் கவிதை வரும்... என நீளும் வரும் வரிகளை மூன்று வரிகளில் ஹைக்கூவாக மாற்றித் தந்திருக்கிறார் தோழர் ராஜிலா. தன்னுடைய இணையர் ஊடலுக்காகவோ பகடிக்காகவோ அல்லது சோதிப்பதற்காகவோ “காதல் என்ன செய்யும்” எனக் கேட்கிறார். காதல் மனம் படைத்தவர்கள், அதில் மூழ்கித் திளைத்தவர்கள் என்ன இப்படிக் கேட்டுட்டீங்க என்பதை தோழர், “ஐயோ” எனச் சுருக்கி, அது ஒரு மாயம் செய்யும் செயல். அதன் வீரியம் அதனை உணர்பவர்களுக்கு விளங்கும். வெறுமனே அதனைப் பார்த்துவிட்டு நீங்குபவர்களுக்கு அதன் முழு சக்தி புரியாது, தெரியாது. அதனை அறிய காதலித்துப்பார் என்பதை, “எல்லாமே செய்யும்ப்பா. காதலித்துப்பார்” என்னும்போது அதன்மீது ஒரு தெய்வாம்சத்தன்மை வந்துவிடுகிறது. காதல் எதைத்தான் செய்யாமல் விடுகிறது... எல்லாம் செய்யும். அக்கவிதை,

“காதல் என்ன செய்யும்


ஐயோ

எல்லாமே செய்யும்ப்பா

காதலித்துப்பார்”.


 காதலில் தன்னைக் கரைத்தல், ஒப்புக் கொடுத்தல், சரணாகதி அடைதலைப்போல் பூரணத்துவம் எதுவும் இருப்பதில்லை. அதற்கு சண்டையும் ஒன்றுதான். சமாதானமும் ஒன்றுதான். இதோ இந்தக் கவிதையை வாசிக்கும்போது காதலை யாசிக்கும் வனம், மழையில் மட்டுமல்ல, வெயிலிலும் தன் பச்சையத்தால் தன்னைச் சுற்றிய பிரபஞ்சத்தை அழக்கூட்டவே செய்யும் என்பதைக் காட்டுகிறது.

“அத்தனைப் பூக்களையும்

நீயே எடுத்துக்கொள்


நான் பூரிக்க

உன்னிடமிருந்து 

ஒரு முள் போதும்”


 வெண்ணிலா கபடிக்குழு என்னும் திரைப்படத்தில் பரோட்டா உண்ணும் போட்டியில் கலந்துகொள்ளும் திரைக் கலைஞர் சூரி, போட்டி நடத்துபவனின் கள்ள ஆட்டத்தில் கலங்கியும், தனது நேர்மையான உண்ணுதலுக்குப் பங்கம் வந்துவிடக்கூடாது என்றும் நடத்தும் நேர்மைப் போராட்டம் இங்கு முத்தத்திற்காக நடக்கிறது. 

“எல்லாக் கோட்டையும் 

அழித்துவிட்டு 

முதலிலிருந்து வா


முதல் முத்தத்தில் துவங்கி

மீண்டும் காதலித்துத் தொலைவோம்”

முத்தமோ, காதலோ காதலர்களுக்கு இடையில் நிகழும்போது அதற்கு எல்லைக்கோடு வைத்துக்கொண்டா இயங்குகிறது... இவையெல்லாம் காதல் வளர்வதற்கான காற்றல்லவா...! 


 யெம்மா ஏய் கேட்டுச்சா... நீயும்தான் இருக்கியே, ஒருநாள் ஒருபொழுதாவது இப்படியெல்லாம் சொல்லிருக்கியா... என தன்னோட காதலிகிட்ட கேட்டுப் பெறவேண்டிய நிலையில்தான் ஆண்கள் இருக்கிறார்கள், “நீ என் ஆண் தேவதை” என்பது போலான வார்த்தையை. காதல் பற்றாக்குறையா... கவிதை பற்றாக்குறையா... “இதெல்லாம் மனசுக்குள் இருக்கு. சொல்லித்தான் தெரியணுமா” என்ற மன நிலையா... ஆண்களின் குணம் கண்டு வெதும்பிப்போய் “சொல்லிட்டாலும் கிளுகிளுன்னு இருக்கும்” என்ற நினைப்பா... தெரியவில்லை. ஆண்களும் மனுசாள் தானே. அவர்களும் தனதிணையர் புகழ்தலை விரும்புவார்கள் தானே...

“தேவதை எனும் சொல்லின்

அத்தனை அம்சமும்

உனக்கும் பொருந்திப் போகிறது


நீ என் ஆண் தேவதை”


 காதல் குறித்து எழுதுவதென்றால், பேசுவதென்றால் அது முடிவிலியாக நீண்டுகொண்டே செல்லும். காதலின் ஆயுள் என்பது பூமி பிறந்த காலம் முதல் தொடங்குகிறது. காதலைப்போல் இப்பூமியை வாழவைக்கும் ஆகச்சிறந்த செயல் ஏதுமில்லை. 

“நீ முறைக்கிறாய்

நானும் முறைக்கிறேன்


நீ சிரிக்கிறாய்

நானும் சிரிக்கிறேன்


நீ அழுகிறாய்

நான் உன்னை அணைக்கிறேன்”

முதல் நான்கு வரிகள் உலகப் பொது உணர்வு. கடைசி இருவரிகள் காதல் பொது. முன்னது ஊடல். பின்னது ஆறுதல். தேற்றுதல். காப்பாற்றுதல். அரவணைத்தல். எல்லாவற்றுக்கும் மேலாக நானிருக்கிறேன் என்று சொல்லும் அணைத்தலின் மூலம் ஆசீர்வதித்தல்.


 தொகுப்பெங்கும் காதல். இவை மட்டும் தான் பிடித்த நட்சத்திரம் என்று நிலவோ வானமோ என்றாவது சொல்லியிருக்கிறதா... எல்லாம் காதல் பேசுபவை. எல்லாம் காதலர்கள் பேசுபவை. எல்லாம் காதலுக்காகப் பேசுபவை. காதலைக் கொண்டாட வாய்த்த மனம் உலகை நேசிக்கத் தொடங்கும். இவை உலகை நேசிப்பதற்கான சொற்கள். வார்த்தைகள். இன்னும் பல தொகுப்புகள் காதல் / Mohamed Rizwan தோழர்/ புகழ் பாடவும் கவிஞர் தோழரின் மனம் உதிர்க்கட்டும். காதல் சிறக்கட்டும். 

வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️

Sunday 22 October 2023

மகள் - கவிதைத் தொகுப்பு - கவிஞர் கபிலன்

 


#நூல்_விமர்சனம்


மகள்

கபிலன்

கவிதைகள்

தூரிகை வெளியீடு

பக்கங்கள் : 128

விலை : 150


தந்தை மகளுக்கெழுதிய இரங்கற்பா


இருபது வயதுகளில் மகளைப் பறிகொடுக்கும் ஒரு மனிதனால் எழுப்பப்படும் பேரோலம் எப்படிப்பட்டதாக இருக்கும்? அதைச் சொல்ல வாய்த்த மனிதன் இங்கு கவிஞனாகவும் இருப்பது பேரவலம். தொகுப்பில் ஆரம்பத்திலேயே கவிஞர் கபிலன் எழுதிய உரையே கண்ணீரை உகுக்க பாதை தந்துவிடுகிறது. ஒரு பக்கம் தூரிகையின் ஒளிப்படங்களும் மறுபுறம் கவிஞரின் எழுத்துகளும் போட்டி போட்டு துயரைத் தருகிறது. தூரிகை” கவிஞர் தன் மகளுக்குச் சூட்டிய ஓவியப் பெயர். கதறுகிறார் எல்லாப் பக்கங்களிலும். சொல்ல முடிந்த வரிகள் இவ்வளவுதான். சொல்லாத வலி எவ்வளவோ...? 

“இமைகளைத்

துண்டித்துக்கொண்டு 

போவதற்கா

தூரிகை என்று

பெயர் வைத்தேன்...?”

கனக்கிறது மனம்.

பகுத்தறிவுக் கொள்கைகளைப் பேசி, பகுத்தறிவு மேடைகளில் ஏறி அதனை ஒரு பிரச்சாரமாக வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தன்னுடைய வரிகளில் பயன்படுத்திவரும் கவிஞர், மகளுக்கான வரிகளிலும் அதனைப் பதியமிட்டுள்ளார். அன்பு கொள்ளும் மனிதர்களும், உதவும் மனிதர்களும் கடவுள் நிலையை மனித மனங்களில் உண்டுபண்ணுதல் இயற்கை. இங்கு மகள் கடவுளாகிறாள். மகளின் இழப்பால் அன்பைத் தொலைத்தவராகி விடுகிறார். அன்பை இழந்தவராகிவிடுகிறார். வாழ்வின் வெறுமையை அபத்தத்தை தன்னோடு பொருத்திக் கொள்பவராகிறார்.

“பகுத்தறிவாளன்

ஒரு கடவுளைப் 

புதைத்துவிட்டான்”


இயல்பாக குடும்பத்தில் எல்லோரோடும் பேசுபவள், குடும்பத்தில் ஒருத்தி, வளரும் தலைமுறை, இன்றைய காலகட்ட நவீனத்துவம் அனைத்தையும் தன்னோடு பிணைத்துக்கொண்டும் இயங்கிக்கொண்டும் வருபவள், முக்கியமாக தற்கொலை குறித்த எண்ணத்தை மாற்றி ஊடகவெளியில் கருத்திட்டவள் திடீரென தனது அறையில் பிணமாகத் தொங்குகிறாள் என்பதை எப்படி ஏற்கமுடியும்? அந்த அறையை அவளின் அறையாக எப்படிச் சொல்வது? அவளின் வார்த்தைகளே இங்கு மீண்டும்... இப்படி எழுதியவள்தான் இறந்துபோனாள் என்றால் எந்தத் தகப்பன் தாங்குவான்... அவளின் அறிவாண்மையை கவிஞர் குறிப்பிட்டுள்ளமையை ஒப்பிட்டுப் பார்க்கிறேன்... 

“குடும்பத்தோடு

தூங்கியவள்

தனியாக

இரவு முழுக்க

பிணவறையில்”

தற்கொலைக்கு எதிராகப் பதிவிட்டவள் தற்கொலை செய்துகொள்ளும் காரணத்தை என்னவென்று சொல்வது?


பிறக்கும்போது மருத்துவமனையில் குழந்தையை வாங்கும் கைகள், அவளின் பிணவுடலை வாங்க கையெழுத்திட முனையும் கைகள்... உயிர் கதற ஒரு தகப்பனுக்கு இப்படியொரு சாபத்தைத் தந்துசென்றிருக்க வேண்டாம் தான். “எவ்வளவோ நேரங்களில் உனக்காக நான் அவளுடைய அப்பா என்று சொல்லி கையெழுத்திட்டிருக்கிறேன். இப்பொழுது முதன்முதலாக அவளின் உயிரற்ற உடலைப் பெற தகப்பன் என்ற முறையில் கையெழுத்திடுகிறேன்” என்பதைச் சொல்லும்போது கண்முன் காணும் காட்சியில் பொங்கிப் பெருகும் கண்ணீர்...

“கொரியர் இளைஞனிடம்

உனக்காக

கையொப்பமிட்டிருக்கிறேன்

கடைசியில்

உன்னையே

கையொப்பமிட்டுதான்

வாங்கினேன்”


ஒரு வகையில் சொல்வதானால் தொகுப்பின் நினைவுகள் அனைத்தும் தகப்பனின் ஒப்பாரி தான். அவர் மட்டும் கண்ணீர் வடிக்கவில்லை. குழந்தைகளைப் பெற்ற எல்லோருக்குமான வலி இவைகள். அன்பின் இழப்பை உணரத் தலைப்பட்ட மனிதர்களுக்கான வலி. எனக்கென்ன என்பதுபோல, அது உனதுயிர் என்பதுபோல, உன்மீது அன்பு செலுத்தும் எல்லோரையும் போல நினைத்து என்னையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் சென்றுவிட்டாய். எல்லோரும்போல் எல்லாம் மறந்து திரிய அவர்களா நான், நான் உன் தகப்பன், தோழன், எல்லாவற்றிற்கும் மேல்... என்பதை எப்படி வார்த்தைகளாக மாற்ற முடியும்...

"எல்லா 

தூக்க மாத்திரைகளையும்

நீயே

போட்டுக்கொண்டால்

நான் எப்படி

உறங்குவது?"

என் அன்பைத் துயரத்தில் தள்ளிவிட்டு நீ மட்டும் உறங்குகிறாயே... என் அன்பான உன்னைத் தொலைத்து நான் எப்படி வாழ்வேன்...? எனக்கும் கொடு / கொடுத்திருக்க வேண்டாமா அந்தத் தூக்க மாத்திரைகளை? எனத் தகப்பன் தவிப்பது சாதாரணமா என்ன? உயிர் போகும் ரணம்.


இல்லாமல் போனாய் என்று சொல்ல என்னால் இயலாது. ஆனாலும் அருகாமை என்றொன்று உள்ளதல்லவா? ஒரு பெண்ணைத் தத்தெடுக்க வேண்டும். உன்னைப்போல் அவளைப் பார்த்துக்கொள்ள வேண்டும். உனக்கான அன்பு முழுமையையும் அவளிடம் கைமாற்ற வேண்டும். யாரிடம் அளிப்பது? யார் அந்த அளப்பரிய அன்பிற்குப் பொருத்தம்? யார் தாங்கிக்கொள்ளும் தன்மையவள்? என்று யோசிக்கும்போது யாரைத் தத்தெடுப்பது? என்ற கேள்வி முன் நிற்கிறது. கவியீர மனதின் பார்வை இப்படி எழுத வைக்கிறது... 

"எல்லாப்

பெண் குழந்தையிலும்

உன் முகம்

யாரைத்

தத்தெடுப்பது"


வாழும்போதே சாகும் சாபத்தை அளித்துவிட்டுச் சென்ற மகளுக்கு கேட்கும் திறனிருந்தால் இந்த எளிய சொற்களின் வலி புரியும்.

"செத்துப் பிழைக்க

நான் ஒன்றும் 

ஏசு அல்ல"


இழப்பின் கண்ணீருக்குப் பொருள் சொல்ல அவசியமில்லை. எல்லாம் வாழ்ந்த வாழ்க்கை. எல்லாம் வாழ நினைத்த வாழ்க்கை. இரண்டின் சாரெடுத்து மகளாக நம் கைகளில் தந்திருக்கிறார் கவிஞர். மருத்துவ ஆய்வு முடித்து கைகளில் அளிக்கப்படும் மகளின் உடலைப் பெறும் மனநிலையில் /நூலை வாசித்து முடிக்கும்போது/ கைகளில் உள்ள இந்நூல் இருப்பதாக உயிருணர்கிறது.   

“அவளை 

மின்தகனத்திற்கு அனுப்பவில்லை

ஒரு 

பட்டாம்பூச்சி

தீக்குளிப்பதை

கவிஞனால்

தாங்கமுடியாது”


பூப்போல பார்த்து வளர்த்த குழந்தையை சிறு எறும்பு தீண்டினாலும் பெற்றமனம் பதறிவிடும்.

காயங்கள் ஆறினாலும் தழும்புகள் நிலைத்திடுவதுபோல சில இழப்புகள் எவ்வளவு கண்ணீரைச் சிந்தினாலும் மாறாது. அது நிலைத்திருக்கும். காரணம் ஒன்றே ஒன்றுதான். எல்லா அன்பையும் கொட்டித் தீர்க்க ஓர் உறவு வாய்த்திருக்கும். அவ்வுயிரின் பிரிவு / இழப்பு தாங்கவியலாத் துயர் தரும். 

“கண்ணீரின் வெளிச்சம் 

வீடு முழுக்க

நிரம்பியிருக்க

இருந்தாலும் இருக்கிறது

இருட்டு”


மீண்டு வாருங்கள் தோழர்.

யாழ் தண்விகா



Monday 2 October 2023

சரக்கொன்றை நிழற்சாலை


 சரக்கொன்றை நிழற்சாலை

ஹைக்கூ கவிதைத் தொகுப்பு

ஷாஜிலா பர்வீன் யாகூப்

Mohamad Sarjila Yakoop 

படைப்பு பதிப்பகம்

விலை ரூ: 100க்

பக்கங்கள் : 112


ஹைக்கூ ஒளியில் வாழ்வின் நிழல்...


மூன்று வரிகளில் எடுத்துக்கொண்ட கருவை கவிதையாக்கும் வித்தகம் ஹைக்கூ... மிஷ்கின் மொழிபெயர்த்த ஹைக்கூ ஒன்று. "நத்தை போன

பாதையில்

வெயிலடித்தது".

மிக இயல்பாக வாசித்துக் கடக்கும் ஒரு கவிதை. ஆனால் உள்ளே பொதிந்திருக்கும் வரலாற்றைத் தோண்டிப் பார்க்க மெனக்கெட வைக்கும் சூட்சுமம் கவிதையில் இருக்கிறது. அவ்வாறு வாசிக்க வைப்பதுதான் ஹைக்கூவின் சாமர்த்தியம் மற்றும் சாகசம். தோழர் ஷர்ஜிலா அவர்களின் ஹைக்கூக்கள் பல அவ்வாறான தேடலை உண்டுபண்ணும் கவிதைகள். வாசிக்க வாசிக்க இயற்கையின் உள்ளார்ந்த அதிசயங்களில் நம்மை மூழ்கடிக்கிறார் தோழர்.


இயற்கையை அழித்தல் என்பது வெறும் அழித்தல் என்பதோடு முடிந்து விடுகிறதா... அது சூழலை அழித்தல், உயிர்களை அழித்தல், உயிர்களுக்கிடையேயான சங்கிலியை உடைத்தல். அதனை மனிதனுக்குக் கடத்தும் வரிகள் இவை.

தன்கூட்டைப் பின்தொடரும் பறவை

ஜேசிபியில் செல்கிறது

வேருடன் மரம்.

ஏனோ நம் குழந்தையை யாரோ பறித்துப் போக நாம் பின்னால் ஓடுவது போலான வலி.


இயற்கைப் பேரழிவுகள் பெரும்பாலானவை மனிதன் தனக்குத்தானே உண்டாக்கிக் கொண்டவையோ என்றெண்ணும் வண்ணம் அவ்வப்போது வெள்ளம், புயல் உள்ளிட்ட பாதிப்புகளைக் காணும்போது ஏற்படும். சென்னையில் முழுதும் நிடம்பியபின் நள்ளிரவில் திறக்கப்பட்ட நீர்த்தேக்கம் உண்டாக்கிய பாதிப்புகள் சொல்லி மாளாது. அலையாத்திக்காடுகளை கடற்கரை ஓரங்களில் அமைக்காததால் ஊருக்குள் சுனாமி பாய்ந்து கொத்துக்கொத்தாக கடலுக்குள் இழுத்துச் சென்ற உயிர்கள் பல லட்சங்கள். இது போன்ற சம்பவங்கள் நடந்து முடிந்தபின் காணும் காட்சிகள் போர் முடிவுற்றபிறகு காணும் ஓலங்கள் போலவிருக்கும். அது போன்ற ஒரு காட்சி.

வெள்ளம் வடிந்த வீதி

வீட்டுக் கூரையின் மேல்

தரைதட்டி நிற்கும் படகு.


இனி எப்போது பெங்குவின்களைப் பார்த்தாலும் இக்கவிதையே கண்முன் விரியும். ஆச்சர்யப்பட வைத்த ஒப்பீடு.

கருப்பு மேலங்கி

கழட்டாத வழக்கறிஞர்களா

கடற்கரை பெங்குவின்கள்...!


பால்யங்களைக் கண்முன் நிறுத்தும் பல ஹைக்கூக்கள் தொகுப்பெங்கும். அதற்குள் நம்மைப் புகுத்தி விளையாட வைத்த ஒரு ஹைக்கூ...

மணல்வீடு கட்டும் அண்ணனுக்கு

காத்திருக்கும்

பாப்பாவின் சிரட்டைமண் இட்டிலி... 

சிறுவயது அன்பின் நேர்த்தி எவ்வளவு சுவாரஸ்யமானது... அருமை.


குழந்தைகள் பள்ளிக்குச் சென்றபின் வீடு அனுபவிக்கும் கொடுமை என்பது பேரவலம் தான். அப்படி வீடு என்ன கொடுமை அனுபவித்து விடப் போகிறது... தோழர் சொல்கிறார்.

பள்ளி சென்ற குழந்தைகள்

தனித்துக் கேட்கும்

நகரும் கடிகார முட்கள்.

வீடு யாருக்கு? கடிகார ஒலிகள் யாருக்கு? என்ற கேள்விகள் உதிக்கும் அதே நேரத்தில் பள்ளியிலிருந்து குழந்தைகள் திரும்பும் நேரத்தைக் கணக்கிட்டு காத்திருக்கிறதோ கடிகாரம் என ஆறுதல் கொள்கிறது மனம்.


நத்தையாகிறேன்

நிழலெல்லாம் பூக்களுடன்

சரக்கொன்றை நிழற்சாலை...

பூ வீதி எதுவென்றாலும் அது உண்டாக்கும் சலனம் மனித மனத்தை ஒரு பாடுபடுத்த் வேண்டும். உதிர்ந்த பூ என்று அவ்வளவு வேகமாக மிதித்து விடுகிறதா நமது காலடிகள்? அவற்றை மிதிப்பதால் என்ன பாதகம் இந்த மண்ணுக்கு நேர்ந்துவிடப் போகிறது... ஆயினும் நாம் யோசிப்பதால் தான் மனிதம் ஒவ்வொரு உயிருக்குள்ளும் தன் வேர்களை ஆழப் பாய்ச்சுகிறது. அதுவே இந்த பூமி இன்னும் வாழ காரணமாக இருக்கிறது. உதிர்ந்துகிடக்கும் சரக்கொன்றைப் பூக்கள்... கடக்க நத்தையாகும் மனிதம்... நிழலெல்லாம் பூக்கள்... நத்தை சுரக்கும் திரவம்... இதுபோன்ற காரணிகளுக்குள் ஒளிந்து கிடக்கும் ஏதோவொன்று உண்டாக்கும் கிளர்ச்சி கவிதையின் சிறப்பை மிளிரச் செய்கிறது. 


பதிப்பாளர் Mohamed Ali Jinna தோழரின் பதிப்புரை, Surulipatti Si Vaji அண்ணன் அவர்களின் அணிந்துரை, இந்து தமிழ் திசை மு.முருகேஷ் தோழரின் தொகுப்பு குறித்த ஹைக்கூப் பார்வை ஆரணி இரா. தயாளன் தோழர் கூறும் தறி வீட்டுப் பூனைகள், ஷர்ஜிலா தோழரின் என்னுரை இவையே ஒரு ஹைக்கூ வகுப்பைப் பார்த்த பெரும் திருப்தி அளிக்கிறது.


நிறைய கவிதைகள். நிறைவான பார்வை. 


வாசிப்போம், ஹைக்கூ மிளிர.


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️

Thursday 21 September 2023

மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து - ஏர் மகாராசன்


மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து

கட்டுரை நூல்

மகாராசன்

ஆதி பதிப்பகம்

விலை: ரூ 90

பக்கங்கள் : 72


எங்கே செல்கிறார்கள் மாணவர்கள்...? என்ன செய்யப் போகிறோம் நாம்?


இரண்டு முக்கியச் செய்திகள் என்று கூறுவதை விட இரண்டு அதிர்ச்சிச் செய்திகள் என்று கூறிவிடலாம் இரு கட்டுரைகளை. கல்வித்துறை, மாணவர்கள், சமூகம் மற்றும் ஆசிரியர்களிடையே மலிந்து கிடக்கும் பிற்போக்குத்தனங்களையும், அச்சீர்கேடுகளைக் களைவதற்கான ஆரோக்கியமான வழிமுறைகளையும் கூறும் கட்டுரைகள் இவை. இரண்டும் கல்வித்துறையோடு நேரடித் தொடர்பு உடையவை என்ற வகையில் கல்வி கற்ற அனைவரும் அல்லது சமூகம் உருப்பட நினைக்கும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய விழிப்புணர்வுப் புத்தகம். 


முதல் கட்டுரை 2022 – 23 ஆம் கல்வியாண்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வில் 50,000க்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. அது எதனால் என்பது குறித்துப் பேசுகிறது. முதல் பத்தியிலேயே இத்தகவல் சமூகம் முழுமைக்குமான பேசுபொருளாக இருந்தது என்றிருக்கிறது. ஆம். இருந்தது. கடந்தகாலத்தில் நடந்த ஒன்று, அதிலிருந்து பாடம் கற்று அனைத்து மாணவர்களையும் தேர்வெழுத வைக்க என்னென்ன திட்டங்கள் கல்வித்துறையில் உருவாக்கப்படவேண்டும் என்பது குறித்து அலசுகிறது. மெல்லக் கற்போர், சராசரியாகக் கற்போர், மீத்திறன் வாய்ந்த கற்போர் இவர்கள் அனைவருக்குமான பாடத்திட்டமாக இருக்கவேண்டிய கல்வி, மீத்திறன் பெற்றவர்களுக்கான பாடத்திட்டமாகவே இருக்கிறது. அதையும் முழுமையாக சொல்லிவிட முடியவில்லை. மீத்திறன் பெற்றவர்களே பாடத்திட்டத்தைப் பார்த்து மலைக்குமாறு இருக்கிறது. அப்படியானால் சராசரியாகக் கற்போர் நிலையைப் பற்றிச் சொல்லவேண்டாம். தொடர்ந்து மூன்று வருட பொதுத் தேர்வு முறை. 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு மட்டும் உள்ள பொதுத் தேர்வு முறையால் என்ன சிக்கல் நிகழ்ந்தது எனத் தெரியவில்லை. மாணவர்களை அடிமாட்டுத்தனமாக, பாடம் தவிர்த்த செயல்பாடுகள் எதுவுமற்ற இயந்திரத் தன்மையுடன் வார்த்து இக்கல்விமுறை எதைச் சாதிக்கப் போகிறது என்று பார்த்தால் மெல்லக் கற்கும் மாணவர்கள் இத்துயரிலிருந்து தப்பித்து ஓட நினைக்கிறார்கள். அதுதான் இடைநிற்றல், விலகல், தேர்வு எழுதாமை போன்றனவற்றிற்குக் காரணமாக அமைகிறது. இதனைக் களைய மேற்கண்ட மூன்று பிரிவினருக்கான பாடத்திட்டத்தை உருவாக்கவேண்டியதன் அவசியத்தைப் பற்றியும், ஆசிரியர்களிடம் கல்வித்துறையில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் குறித்துப் பேசி தீர்வுகாண மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைப் பற்றியும் பேசுகிறது முதல் கட்டுரை. 


இரண்டாம் கட்டுரை, சமீபத்தில் நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலைப் பற்றியும், பகுத்தறிவு வாய்ந்த மனித சமூகம் செல்லும் இழிபாதை எப்படி படிப்படியாக பரிமாணம் பெற்று இன்று வன்முறையின் உச்சத்தில் நிற்கிறது என்பதையும், அதற்குக் காரணமாகத் திகழும் கூறுகள் எவையெவை என்பது பற்றியும், அதனை மாற்றியமைக்கும் வழிமுறைகளையும் முன்வைக்கிறது. மிகுந்த அச்சத்தையும் பதட்டத்தையும் தோற்றுவிக்கும் களங்களாக அரசுப் பள்ளிகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் மாறி வருகின்றன என்பது கண்கூடான உண்மை. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள் மத்தியில் இதுபோன்ற வன்முறை வெறியாட்டங்கள் நடந்து வந்திருந்தாலும் அவை பல்வேறு சமூகக் காரணிகளால் திசை திருப்பப்பட்டுவிட்டன என்கிறார் கட்டுரையாளர். அதே சமயம் நாங்குநேரியில் நடந்த கொலைவெறிச் சம்பவம் சமூகத்தால் பேசப்பட்டபோதும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் முன்னரே, நாங்குநேரி சம்பவத்தின் இரத்தம் காயும் முன்னரே குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதும் சமூகத்தின் முன்னால் தான் என்பது வருத்தம்தரும் ஒன்றாகவே பார்க்க நேரிடுகிறது. 


சின்னத்துரை மற்றும் சந்திராசெல்வி இருவரும் பள்ளி மாணவர்கள். தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள். தாக்கியவர்களும் மாணவர்கள். தாக்கியவர்கள் அனைவரும் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தத்து. இது வெறுமனே திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு நிகழ்ந்த ஒன்றல்ல. சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் பல காலங்களாக ஊறிக் கிடந்த சாதியானது, சமூகங்களால் பல்வேறு விழாக்கள் மூலமாக வெளிப்படையாகவே இன்று தனது முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. இளைஞர்கள், பெரியவர்கள் அரசியல் கட்சிகளில் இருப்பதைவிட சாதிச் சங்கங்களில்தான் திரண்டிருக்கிறார்களோ என்கிற அளவுக்கு சாதியக் கூட்டங்கள் நிரம்பி வழிகின்றது. இவற்றிற்கு பள்ளி மாணவர்கள், குழந்தைகள் என்ற கணக்கெல்லாம் கிடையாது. அனைவரும் பங்கேற்கிறார்கள். இதனை அவ்வவரின் குடும்பத்தினரே சாதிப் பெருமிதமாக நினைக்கிறார்கள். இதனை பல்வேறு தரவுகளின்மூலமாக கட்டுரையாளர் கூறும்பொழுது சாதியானது சமூகத்தில் உண்டாக்கும் தாக்கம், இனி உண்டாக்கப்போகும் தாக்கம் எப்படி இருக்குமோ என்ற பதட்டத்தை உருவாக்குகிறது. சாதி மற்றும் மதத்தால் உண்டாகும் வன்முறைகள் தாழ்த்தப்பட்ட மற்றும் உயர்த்தப்பட்ட சாதிகள் என இருபுறம் வாயிலாகவும் நடைபெறுகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மாணவர்களிடம் இன்று பரவலாகி வரும் அடாவடித் தாட்டியங்கள், வன்முறைத் தாக்குதல்கள், பாலியல் வன்முறைச் சீண்டல்கள் என நீளும் பட்டியலை கட்டுரையாளர் கூறுகிறார். இவை ஆங்காங்கே நாம் கண்ட, கேட்ட பட்டியலின் தொகுப்புதானே ஒழிய மிகையல்ல. இவற்றை மாற்ற சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம். கல்வித்துறை, தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை அறம் சார் வகுப்புகளை நடத்தவேண்டியதன் அவசியத்தை உணரவேண்டும். ஆசிரியர்களிடம் உள்ள சாதிய மனப்பான்மை மாற வேண்டும். இட ஒதுக்கீட்டைக் கூட தவறாகப் புரிந்துகொண்டிருக்கக்கூடிய ஆசிரியர்களால் அம்பேத்கரைப் பற்றி எப்படி உயர்வாகப் பேசிவிடமுடியும் என தனது ஆதங்கங்களையும் கட்டுரையாளர் கூறியுள்ளார். இன்னும் பல தகவல்கள். வெறும் தரவாக மட்டுமல்லாமல் தவறான பாதையில் செல்லும் இந்தச் சமூகத்தின், மாணவர்களின், ஆசிரியர்களின், கல்வித்துறையின் குறுக்கு வெட்டுச் சித்திரத்தை கண்முன் நிறுத்துகிறது. சமூக உதிரிகளாக மாணவர்கள் மாறுவதற்கு முன்பாக நாம் செய்யவேண்டிய பணிகள் நிறைய உண்டு. அவற்றை அறிந்து களைய சமூக அக்கறையுள்ள ஒவ்வொரு மனிதரும், கல்வித்துறை தொடர்புடைய ஊழியர்கள் அனைவரும் வாசிக்கவேண்டிய நூல் இது. வாசியுங்கள். சமூகத்தின் மீது விழும் நல்ல வெளிச்சத்திற்கு திறப்பாக இந்த நூல் அமையும் என்பதில் மாற்றமில்லை.


வாழ்த்துகள் தோழர் ஏர் மகாராசன் 


யாழ் தண்விகா

Wednesday 6 September 2023

ரவிக்கைச் சுகந்தம் - ஜான் சுந்தர்


ரவிக்கைச் சுகந்தம்

ஜான் சுந்தர்

கவிதைத் தொகுப்பு

காலச்சுவடு பதிப்பகம்

விலை ரூ 90


பாரதியைக் கொண்டாட வேண்டும் என்றால் பல அபத்தங்களை நாம் சகித்தே ஆகவேண்டும். பாரதியின் வரிகளில் தோய்ந்துபோய்க் கிடக்கும் மனம் அவரின் வாழ்வோடு அந்த வரிகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் ஏனிந்த முரண் என்று கேள்வி கேட்கவே செய்யும். குடிப்பது கூழ் கொப்பளிப்பது பன்னீர் என்ற சொலவடை உண்டு. தனக்கே வாழ, உண்ண திராணியில்லாதபோது கூட காக்கை குருவி எங்கள் சாதி என்று கூற கவிதைத் திராணி வேண்டும் தான். ஆனால் அது வாழ்விற்கான கதவுகளைத் திறந்து வைத்ததா என்றால் அவர் காலத்தில் இல்லை என்றே சொல்லலாம். இறப்பதற்கு முன்னர் கூட எட்டையபுர அரசரிடம் எட்டப்பனின் வரலாறை எழுதித் தருகிறேன் என்று இறைஞ்சி நின்ற வரலாறு பாரதிக்கு உண்டு. என்ன தான் இரக்கம் காட்டினாலும் விலங்குகளிடம் எச்சரிக்கை உணர்வோடுதான் இருக்கவேண்டும். அந்தக் கவனம் இல்லாததால் யானையிடம் தோற்றது கவி வாழ்வு. தொகுப்பில் ஒரு கவிதை சாதாபாரதியின் சகி. வாசிக்க வாசிக்க பாரதியின்மேல் உண்டான கோபம் சொல்லிலடங்காது. வாசிப்போருக்கும் அந்தக் கோபம் உண்டானால் நாம் செல்லம்மாவின் வலியை உணர்ந்த மனிதராக இருக்கிறோம் எனப் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

@

சிலிண்டர்க்காரனுக்குக் கொடுக்க

உரூவா இல்லாமல்

செல்லம்மா அல்லாடிக்கொண்டிருக்க 

புலவர் பெருஞ்சபையில்

அயலகத் திரைப்படங்கள் குறித்த

விவாதத்திலிருந்தான் சாதாபாரதி.

@

அவள் மளிகைக் கடையிலிருந்து

அழைத்தபோது மாலிலும்

ரேஷன் புழுக்கத்தில் நெளிந்தபோது

ஏசி பாரிலுமிருந்து

பண்டிதருடன் சொற்சமரஞ் செய்துவந்தான்


.... இப்படியாக நீளும் கவிதைகள் எட்டாம் கவிதையில் உயிரை அரற்றிவிடுகிறது. 

@

வால்விட்ட தலைப்பாகையினை

அவன் சூடிப் பார்த்த முகூர்த்தத்தில்

கூறைப்புடவையினைக் கீறி

தூமைத் துணியாக்கிக் கொண்டாள் சகி.


கவிஞனாக இருப்பவன் குடும்பத்தில் எப்படி இருந்திருக்க வேண்டும், குடும்பத்தை எப்படிப் பார்த்திருக்கவேண்டும் என்பதை அவனின் செயல்கள் வாயிலாகவே கவிதையாக வடித்து அவனுக்குப் பாடம் எடுத்திருக்கிறது என்று இக்கவிதை வரிகளை வாசிக்கும்போது உணர முடிந்தது. 


அரண்மனைக் கிளி என்ற திரைப்படத்தில் புத்திமதி சொல்லயிலே தட்டிச்சென்ற பாவியடி, விட்டுவிட்டுப் போனபின்னே வேகுது என் ஆவியடி... என்ற வரிகளை ராஜாவின் குரலில் கேட்கும்போது உண்டாகும் தாயின் மீதான மதிப்பும் கரிசனையும் நேரம் கடக்கக் கடக்க மாறிவிடுகிறது. அதனை கவிதையாக்கி வைத்திருக்கிறார் ஜான் சுந்தர் தோழர்.

@

சைக்கிள் காணாமல் போனபின்

கவனமாய் பூட்டுகிறேன்.

அம்மா படத்துக்கு

பூ வைப்பதும் அப்படித்தான்...


அருமை தோழர்.


ஊரே ஞாயிறைக் கொண்டாடும் பணியை செவ்வனே செய்கிறது. பக்கத்து வீட்டில் கோழிக்கறி. இன்னொரு பக்கம் ஆடு. இவற்றிற்கு வாய்ப்பில்லாத எளியவன் என்ன செய்வான்...

@

எனது கிழமையின் எளிய உடலில்

மீனை வரைய ஆயத்தமானபோது

மாதக் கடைசி என்றதென் சட்டைப்பை


ஐம்பது ரூபாய்த்தாளுக்குள்

அரைக்கிலோ மீன்களையாகிலும்

வரைந்துவிட முடியாதா...


வீட்டுக்குப் போனதும் மனைவியிடம்

பழைய ஹார்லிக்ஸ் பாட்டிலொன்றை

கழுவித்தரக் கேட்டேன்.

வாழும்நாள் வரையில்

என் வீட்டின் அலங்காரமாயிருக்குமிந்த ஜோடி மீன்கள்...


வருத்தங்களையும், இயலாமையையும் தூக்கி எறிந்து அங்கே மகிழ்வை உட்காரவைக்கும்வழியாய் இந்தக் கவிதை எனக்குள் ஊடுருவியது. இது போல இன்னும் பல கவிதைகள். வாய்ப்பு உள்ளோர் வாசியுங்கள். ரவிக்கைச் சுகந்தம் உணருங்கள். 


வாழ்த்துகள் தோழர் John Sundar.


யாழ் தண்விகா