அறிவே கடவுள்
வைரமுத்து
NCBH வெளியீடு
35 ரூ 40 பக்கங்கள்
08.08.2017ஆம் தேதி ஈரோடு புத்தகத் திருவிழாவில் வைரமுத்து அவர்கள் ஆற்றிய உரை. மிகச் சமீபமாக பெரியகுளத்தில் தென்கரை நூற்றாண்டு நூலக விழாவில் கலந்துகொண்டு நூலக மலரை வெளியிட்டுப் பேசினார். இதற்கும் சில மாதங்களுக்கு முன்னர் தேனி புத்தகத் திருவிழாவில் கலந்துகொண்டு பேசினார். தெளிந்த நீரோட்டம் போல அங்கும் இங்கும் திசை மாறும் போக்கில்லாமல் அமைந்த பேச்சு. அதே போன்றதொரு உரை தான் 2017லிலும். அவரின் ஒவ்வொரு பேச்சும் இது போலத்தான் இருக்கும் என்பதை ஒப்பிட்டு உணரக் கிடைத்த வாய்ப்பு.
மிக எளிமையான சொற்கள். புரிந்து கொள்ளக்கூடிய வகையிலமைந்த மிக எளிய கதைகள். மிக அழகான தமிழ். ஒரு பேச்சு, கேட்பவரையும் படிப்பவரையும் சென்று சேர இதைவிட வேறு வகையில் பேசிவிட முடியாது. பெரும் குரலெடுத்து கத்துவது, உணர்வுகளைத் தூண்டுவது, பிறரைக் காயப்படுத்துவது என எந்தத் தொனியும் இல்லை. தலைப்பிற்கு, சமூகத்திற்கு நியாயம் செய்யும் பேச்சு. அறிவே கடவுள் என்ற நூலிலும் பேச்சை எழுத்தாக்கியதை வாசிக்கும்போது அதைக் காணலாம்.
கடவுள் உள்ள இடத்தில் அறிவுக்கு வேலை இருக்காது. அறிவினுள்ள இடத்தில் கடவுளுக்கு வேலை இருக்காது. அறிவு வினாக்களை உண்டு பண்ணும். அறிவு வினாக்களுக்கு பதிலைக் கொணரக் கொணர அங்கிருக்கும் கடவுள் பின்னால் நகர்ந்து செல்வார். அறிவுதான் கடவுள் என்பதைச் சொல்கிறது நூல்.
கலைஞரிடம் ஒருமுறை யார் பெரிய தயாரிப்பாளர் என்ற கேள்வி சில தயாரிப்பாளர்களின் பெயர்களைச் சொல்லி முன்வைக்கப்பட்டது. அவர் சொல்கிறார் மனிதன்தான் உலகில் மிகப்பெரிய தயாரிப்பாளர். ஏன் என்றதற்கு பதில் " அவன்தானே கடவுளையே தயாரித்தான்". வியக்க வைக்கும் பதில். புத்தக வாசிப்பையும், கேட்கும் தன்மையையும் அதிகரிக்க இது போன்ற பேச்சும் உதாரணங்கள் எவ்வளவு அவசியம். இதை பலரிடம் காணவும் முடியாது. சில நிமிடங்களிலேயே அங்கும் இங்கும் திரும்பி கூட்டத்தினரை வேடிக்கை பார்க்க வைத்து விடும் பல பெரிய பேச்சாளர்கள் பேச்சு. எம் தேனி மண் தந்த கவிஞரின் பேச்சு அவ்வகைப்பட்டதல்ல என்பதில் எங்களுக்கு பெரும் மகிழ்வு.
அக்பர் - பீர்பால் இருவரிடம் வரும் புலவன் முன்வைக்கும் கேள்விக்கு பீர்பால் அளிக்கும் பதில்கள் கண நேர அறிவுச் செயல்பாட்டிற்கு அவ்வளவு பொருத்தம். அறிவையும் பயன்படுத்த வேண்டும். அதே சமயம் எதிராளியை அவர் தம் தவறு உணரச் செய்ய வேண்டும். இரண்டையும் செய்கிறது சில உதாரணங்கள். பாரதியார் 11 வயதில் புலவர் பட்டம் பெற்றதைத் தாங்கவியலாத காந்திமதி நாதன் என்பவர் பாரதி சின்னப்பயல் என்னும் ஈற்றடி வருமாறு ஒரு பாடல் பாடச் சொல்கிறார். பாரதியை அவர் வாயாலேயே சின்னப்பயல் என ஒத்துக்கொள்ள, சொல்ல வைக்க செய்யும் செயல். பாரதி கேள்வி கேட்டவரையே பாடலின் உள்ளிழுத்து அவரை மூக்குடை பட வைப்பது மட்டுமில்லாமல் தன்னுடைய புலமைத் தன்மையையும் வெளிக்காட்டிய பாடல் நினைவில் வந்து போனது.
பெர்முடா முக்கோணம், கடலில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள், விக்கிரமாதித்தன் கதை என பல உதாரணங்கள் வாயிலாக சொல்லும் கருத்துகள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை. முக்கியமாக கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள். மூன்றாம் உலகப்போர் என்பது கவிஞர் எழுதிய நூல். அதில் ஒரு பறவையின் வெற்றி எதில் இருக்கிறது என்ற கேள்வி எழுப்பி இருப்பேன். அடையும் இலக்கா? பறக்கும் வேகத்திலா? எந்தக் கூட்டத்தோடு பறக்கிறது என்பதிலா? எதிலும் இல்லை. மொத்த வானத்தையும் மறக்கடித்து தன்னை மட்டும் கவனிக்கச் செய்யும் வித்தையில் தந்திரத்தில் இருக்கிறது என்று பதில் சொல்லியிருக்கிறேன். அது போல கோடி கோடி மக்கள் வாழும் உலகில் நீங்கள் கவனிக்கப்பட இந்த யுகம் அறிவை முன் வைக்கிறது. ஆக, நீங்கள் அறிவை நோக்கி பயணம் செய்யுங்கள் என்ற வார்த்தை எவ்வளவு நேர்த்தி...
இன்னும் நிறைய தகவல்களுடன் கூடிய அருமையான புத்தகம்.
வாசியுங்கள்.
வாழ்த்துகள் கவிஞருக்கு.
யாழ் தண்விகா
❣️