சேத்துமான் கதைகள்
பெருமாள் முருகன்
காலச்சுவடு பதிப்பகம்
விலை ரூ 95
64 பக்கங்கள்
எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய வறுகறி(2012) மற்றும் மாப்புக் குடுக்கோணுஞ் சாமீ...(2011) என்ற இரு கதைகள் அடங்கிய புத்தகம். இரு கதைகளையும் சேத்துமான் என்ற திரைப்படமாக எடுத்து வெற்றிகண்ட இயக்குனர் தமிழ் முன்னுரையுடனும், இலக்கியத்திலிருந்து எடுத்த கதையை படமாக எடுப்பதற்கு உதவியாக இருந்த தயாரிப்பாளர் பா.ரஞ்சித் எழுதிய அணிந்துரையுடனும், எழுத்தாளர் பெருமாள்முருகன், தன்னுடைய கதைகள் படமாக வரக் காத்திருந்த காலங்கள், சேத்துமான் உருவான விதம், அதில் தன்னுடைய பங்களிப்பு பற்றிக் கூறும் முன்னுரையுடனும் இந்த நூல் என்பது இதன் சிறப்பு.
இரு கதைகளும் ஒடுக்கப்பட்டவனின் வலிகளைப் பற்றிப் பேசுகிறது. சேத்துமான் என்றழைக்கப்படும் பன்றிக்கறியை வீட்டில் எடுத்துக்கொடுத்து சமைத்துத் தரச் சொல்லி சாப்பிட முடியாது என்னும் சூழலில் பன்றிக்கறி எடுத்துத் தின்ன ஒரு குழு. இவர்கள் குடியானவர்கள். அதற்கு தலைவனாக வெள்ளையன். அவன் பன்றிக்கறி வேண்டும் நபர்களின் பெயர்களைக் கேட்டுக்கொண்டு அதற்கேற்ப பன்றியைத் தேடி அலைகிறான். தோதான பன்றி ஒன்றினை ரங்கனிடம் (பன்றி வளர்ப்பவன்) இருந்து வாங்கிவந்து அதை வறுகறி ஆக்கி கூறு போட்டுப் பிரித்துக்கொள்ளவேண்டும் என்பது திட்டம். வாங்கி அதனை வறுகறிக்குத் தயார் செய்கிறார்கள். கூடவே ஒத்தாசையாக இருக்கும் நபர் குமரேசனின் தாத்தா பூச்சி. இவர்கள் ஏரிக்கரை ஓரமாக ஒரு குழுவாக வசிப்பவர்கள். ஊருக்குள் முன்னிரவின்போது சென்று சோறு வாங்கி உண்ணுவார்கள். கூடை முடைபவர்கள். பன்றி விற்பவன், ஒத்தாசையாக வரும் தாத்தா, அதைத் தின்ன ஓடும் குடியானவர்கள் இப்படி இவர்களுக்கிடையே கதை நிகழ்கிறது. இதில் செல்லையனுக்கும் வெள்ளையனுக்கும் தகராறு. இருவரும் குடியானவர்கள். இவர்களுக்கு இடையே வரும் சண்டையை விலக்கிவிட தாத்தா முயல்கிறார். செல்லையனின் அரிவாள் வெட்டு தாத்தா மேல் விழுகிறது. தாத்தாவைத் தாங்கிப் பிடிக்க பேரன் குமரேசனைத் தாண்டி அங்கு யாருமில்லை என்பதாகக் கதை முடிகிறது. குடியானவர்களுக்கு உள்ளே நிலவும் பூசல் ஆயிரம் இருந்தாலும் பிற சாதியை இழிவாகக் காணும் போக்கு பல இடங்களில் காட்டப்பட்டுள்ளது. நாடோடியாகத் திரியும் குமரேசன், மதிய நேர உணவாவது கிடைக்கும் என பள்ளியில் சேர்க்கப்ப்டுகிறான். அங்கு ஆசிரியர் அவனுக்கு வைக்கும் எலியான் என்ற பட்டப்பெயர், அவன் உண்ணும் உணவு குறித்து அடிக்கும் கிண்டல் போன்றவை அவரது சாதிய வன்மத்தைக் காட்டுகிறது. குடியானவர்கள் தமக்குள் அடித்துக்கொள்ளும் சண்டையில் விலக்கிவிட வந்த குமரேசனின் தாத்தா வெட்டுப்பட்டு விழும்போது கூட அருகே இருக்கும் குடியானவர்கள் யாரும் தாங்கவில்லை. உடன்வந்த பேரன் குமரேசன் தான் தாங்குகிறான். தாத்தாவின் உயிருக்கு இங்கு மதிப்பு இல்லை என்பதோடு கதை முடிகிறது. கதை முடியும் இடத்திலிருந்து நினைத்துப் பார்த்தால் கதை முழுவதும் பரவிக்கிடக்கும் சாதியமுகங்களை எளிதில் கண்டடையமுடியும்.
மாப்புக் குடுக்கோணுஞ் சாமீ... கதை தொடங்கும் இடம் முதல் வேகம் தான். ஊரெங்கும் திடீர் திடீரென செத்து விழுகிறது மாடுகள். ஊரில் உள்ள வைத்தியராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன காரணமாக இருக்கும் என்று ஊருக்காரர்கள் பேசும்போது இறக்கும் மாடுகளைக் கொண்டுசென்று அவற்றை உண்ணும் மக்களை நோக்கி அவர்கள் பார்வை திரும்புகிறது. அவர்களின் ஊருக்குள் சென்று அவர்களைத் தடியால் அடித்து எங்கே அவன் என்று கேட்கிறார்கள். அவன் மாடு வைத்திருக்கும் கூட்டத்தில் ஒருவன் வைத்திருக்கும் தோட்டக் கிணற்றில் ஒருநாள் குளித்ததற்காக தோட்டக்காரனால் அடிவாங்கியவன். அவன் அடிவாங்கி ஓடும்போது டேய், செங்கான்... என்னை அடிச்சிட்டல்லடா... ஒன்னப் பாத்துக்கிறேன்டா... என்று ஓடியவன். அவன் தான் செய்திருப்பான், இவன்தான் செய்திருப்பான் எனக் கருதி ஊரின் ஓரமாக வசிக்கும் எளியமக்களை அடித்துத் துன்புறுத்தும் காட்சிகளை கண்முன்னே நிறுத்துகிறார் எழுத்தாளர். மாட்டை விடக் கேவலமாக நடத்தப்படும் அந்த மக்கள் குற்றுயிரும் கொலைஉயிருமாகக் கிடந்தாலும் அவர்கள்மேல் நிகழ்த்தப்படும் வன்மம் சாதியை நேசித்து மனிதத்தை வெறுக்கும் யாவருக்கும் சாத்தியம் தான்.
இந்த இரு கதைகளும் தான் சேத்துமான் என்ற திரைப்படம். வாசிக்கவேண்டிய கதைகள். சாதி, எளிய மக்களை எப்படியெல்லாம் காயம் செய்யும், செய்கிறது, செய்தது என்பதை வாசிக்கத்தந்த வார்த்தைகள் மூலமாக சமூக அவலத்தைக் மனக்கண் முன்னால் கொண்டுவந்து காட்டிய எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு வாழ்த்துகள்.






