Sunday, 22 February 2026

அலைவரிசை #ம. காமுத்துரை

 

#அலைவரிசை நாவல்

அகரம் வெளியீடு, தஞ்சாவூர்.


Kamuthurai MA


MA Kamuthurai


இரு தலைமுறைகளின் வாழ்க்கையை கிராமத்துப் பின்னணியில், தான் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய பகுதிகளின் இயல்பு மாறாத வண்ணம், அம்மக்களின் மொழி, கலாச்சாரம் இதனை கிஞ்சித்தும் மாறுபட்ட வண்ணம் கூறிடாது, வழக்கமான தன்னுடைய பாணியில் அலைவரிசை நாவலை வழங்கியுள்ளார் காமுத்துரை தோழர் அவர்கள். 


மொத்தம் 8 பகுதிகளாக நாவல். ஒவ்வொன்றுக்கும் இடையில் வருடங்களின் நீளம் கால இடைவெளியாக இருக்கிறது. 


ஒரு பெண் குழந்தை பிறப்பில் நாவலின் தொடக்கம். சிறுவயதில் அந்த குழந்தையை கொஞ்சி மகிழும் அந்த சந்தோசம் குழந்தையை பள்ளியில் சேர்த்த சில நாட்களில் எவ்வாறு மாறிப்போகிறது... பெண் குழந்தைகளின் மேல் அக்கறை எடுத்துக் கொள்வதை போல பாவிக்கும் அந்த கிராமத்து மனநிலையானது அவர்கள் அறிந்தும் அறியாமலும் அடிமைத்தனத்தை பெண்களின் மேல் திணிப்பதை அற்புதமாக காட்சிப்படுத்தியுள்ளார் நாவலாசிரியர். பெண் குழந்தைகள் பள்ளிப்படிப்பு என்பதை வண்ணாங்கணக்கு எழுதும் அளவிற்கு தெரிந்தால் போதும் என்று சொல்லும் அம்மாச்சி மூலமாக காலம் காலமாக இருந்து வரும் பெண்ணடிமைத்தனம் எவ்வாறு வேரூன்றியுள்ளது என்பதைக் காண ஓர் இடம். அதே பெண் குழந்தை தன் வயதொத்த சிறுவர்களுடன் விளையாட ஆசைப்படுகிறாள். ஆனால் அந்த ஆசையையும் ஆண் பெண் பாகுபாட்டை காண்பித்து ஒரு பெண் எப்படி ஆண்களுடன் சேர்ந்து விளையாடலாம் என அவளை அடித்து வீட்டிற்குள் இழுத்துச்செல்லும் பெற்ற தகப்பனின் எண்ணத்தின் மூலமாக வெளிக்காட்டி இருக்கிறார். ஆக ஆணும் பெண்ணும் பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை வரையறுத்து அதற்குள்தான் அவர்களின் வாழ்க்கை என விரும்புவதை கிராமத்துச் சூழலில் இருந்து காட்டுகிறது நாவல். 


14 வயதில் கதை நாயகிக்கு திருமணம் முடிகிறது. மிகக்குறுகிய காலத்திலேயே ராணுவத்திற்கு சென்ற அவன் இறக்கிறான். அப்பொழுது அவள் கர்ப்பமாக இருக்கிறாள் அவளுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. 16வது வயதில் மறுமணம் நடக்கிறது. மறுமணம் என்பது அவளுடைய வாழ்வில் வெளிச்சத்தை பாய்ச்சுவதற்கு பதிலாக வலியை கொடுக்கிறது. முதல் கணவனுக்கு குழந்தை பெற்று தந்தாலும் இரண்டாவது கணவனால் இவளுக்கு குழந்தை உண்டாகவில்லை. ஆனால் அவன் இவள் மேல் குறை இருப்பதாக கூறி இவளுடைய தங்கையையும் மணமுடித்துக் கொடுக்க மீண்டும் மீண்டும் தூண்டுகிறான். ஆனால் அவள் மறுக்கிறாள். 


அந்த வலியிலிருந்து மீள அவ்வப்போது தன்னுடைய தாய் வீட்டிற்கு வருகிறாள். அவள் மறு மணம் முடித்ததால் மற்ற மூன்று தங்கைகளுக்கும் திருமணம் நடக்காமல் தள்ளிப் போவதாக கூறுகிறாள் தாய். ஒருபுறம் கணவனின் கொடுமை. மறுபுறம் தாய் இப்படி கூறியதால் உண்டான வலி. இரண்டிலிருந்தும் அவள் எப்படி மீள்கிறாள்... முடிவு திரைப்படத்தில் ஒரு பாடலில் பெரு மாற்றம் உண்டாவது போல, கதையிலிருந்து ஒரு பெருத்த இடைவெளியை உண்டாக்குவது போல வலியத் திணிக்கப்பட்டது போல இருக்கிறது. ஒரு பெண்ணின் வளர்ச்சி இப்படியாகவும் இருக்கலாம், அவள் அடிமைப்படுத்தும் ஆண்களின் சிந்தனையை பொடிப்பொடியாக சிதைக்க வல்லவள் என்பதாக நாவலின் அணிந்துரையில் இப்போக்கை எழுத்தாளர் போப்பு அவர்கள் பாராட்டி இருக்கிறார். 


தோழர் காமுத்துரை அவர்கள் ஒரு வயதான பாட்டியை முதன்மைப்படுத்தி எழுதிய கோட்டை வீடு நாவலின் இயல்புப்போக்கு இந்நாவலில் இல்லையோ என நினைக்க வைக்கிறது. ஆனாலும் நான் பார்த்த இடங்கள், அவற்றில் நான் பார்க்காத மனிதர்களின் வாழ்வை, எளிய மக்களின் வாழ்வியலை தனக்கேயுரிய எள்ளல், வலி, அன்பு, ஆணாதிக்க சிந்தனை இவற்றை உறவுகளோடு தொடர்புபடுத்தி மண்ணின் மணம் மாறாமல் காட்சிப்படுத்திய விதத்தில் நாவலில் எப்போதும் தான் கைதேர்ந்தவர் என நிரூபித்துள்ளார் தோழர் காமுத்துரை. 


பேரன்பும் வாழ்த்துகளும் தோழர்...


யாழ் தண்விகா

Saturday, 21 February 2026

நேச அலைகள் #மொசைக் குமார்


 நேச அலைகள் 

சிறுகதைத்தொகுப்பு 

ஆசிரியர் மொசைக்குமார்

பாரதி புத்தகாலயம் வெளியீடு 

விலை ரூபாய் 150


தொகுப்பில் மொத்தம் 25 சிறுகதைகள். ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு நிகழ்வை பேசுகிறது.


சிறு கதைக்காக மெனக்கெடல் என்பது அவசியமில்லை என்பது போன்ற ஒரு தோற்றத்தை வாசித்தவுடன் ஒவ்வொரு கதையும் ஏற்படுத்திவிடுகிறது. ஆனால் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு கதையை கொண்டிருக்கிறது. ஆனால் அதனை நாம் பதிவாக மாற்றாமல் அல்லது அதனை ஒரு விஷயமாக கருதாமல் கடந்து வந்துவிடுவதால் அந்த நிகழ்வு குறித்து பிறருக்கு நம் பகிர்தல் சென்று சேராமல் போய்விடுகிறது. தொகுப்பில் ஒவ்வொரு கதையும் இட்டுக்கட்டி கூறாமல் தான் சந்தித்த ஒவ்வொரு நிகழ்வையும் கதை ஆக்கியிருக்கிறார் மொசைக்குமார். 


பிறநாட்டு கதைகள், மொழிபெயர்ப்புக் கதைகள், புனைவுக் கதைகள் என நம்முடைய அறிவுத் தளத்தை விரிவுபடுத்திக் கொண்டே செல்லக்கூடிய சூழலில் நேச அலைகள் நமக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் கதையை, நாம் வாழவேண்டிய கதையை அறிய ஒரு வாய்ப்பு அளித்து இருக்கிறது என்றே கூறலாம்.


கட்டுமான தொழில் செய்து வரும் மொசைக்குமார் அவர்கள் தன் பணி சார்ந்த பல கதைகளை இத்தொகுப்பில் கூறியுள்ளார். இவர் கதை கூறும் பாணி கொஞ்சம் வித்தியாசமானது. ஒவ்வொரு கதையும் ஒரு நிகழ்வை பேசத் தொடங்குகிறது. பின்னர் அந்த நிகழ்வின் பின்னணியில் உள்ள அரசியலைப் பேசி வளர்கிறது. தொடர்ந்து முடிவாக கதையின் ஆரம்பத்தில் கூறிய நிகழ்வின் தொடர்ச்சியைக்கூறி கதை முற்றுப்பெறுகிறது.


உதாரணமாக மணியாசுக்கட்டை என்ற கதை. இக்கதையில் சிறுவன் பள்ளிக்குச் செல்லும் சிறுவன் அடிக்கடி பென்சில் ரப்பர் இவற்றை தொலைத்து விடுகிறான். இவன் இப்படி செய்வான் என்பதை அறிந்த தந்தை மொத்தமாக பென்சில்களை, ரப்பர்களையும் வாங்கி வைத்திருக்கிறார். ஒவ்வொரு முறை மகன் தொலைத்த பொழுதும் அவனைத் திட்டிக் கொண்டே தான் வாங்கி வைத்திருக்கும் பென்சிலை, ரப்பரை அவனுக்கு கொடுக்கிறார். வீட்டில் உள்ள அம்மா தன் பங்குக்கு அவனை திட்டுகிறார். இருந்தாலும் இந்தப் பழக்கம் நீடிக்க கூடாது என்பதற்காக தந்தை இனிமேல் நீ பென்சிலை தொலைத்தால் திரும்ப நான் வாங்கித் தர மாட்டேன். இதுதான் கடைசி எனக்கு ஒரு பென்சிலை தருகிறார். இதனைத்தொடர்ந்து வேலைக்குச் செல்லும் பகுதிக்கு தந்தை கிளம்பிவிடுகிறார். அங்கு சென்று கட்டிடம் கட்டும் பணிக்குத் தேவையான பொருள்களை எடுத்து வைத்துவிட்டு பணிகளை தொடங்குகிறார். அந்த சமயம்தான் பணிக்குத் தேவையான மணியாசுக்கட்டை இல்லை என்பது தெரிய வருகிறது. வீட்டிலிருந்து வரும் பொழுது அதனை எடுத்து வந்தோமா அல்லது கடந்த முறை பணியாற்றிய இடத்திலேயே மணியாசு கட்டையை வைத்துவிட்டு வந்து விட்டோமா அல்லது வரும் வழியில் எங்கேயாவது விழுந்து இருக்குமா என்ற குழப்பம். இந்தக் குழப்பத்தின் வாயிலாக ஒரு ஞானம் பிறக்கிறது தந்தைக்கு. அது என்னவென்றால் இவ்வளவு வயதான தனக்கு பணிக்குத் தேவையான பொருளை எங்கே வைத்தோம் எங்கே தொலைத்தோம் என்பது குறித்த ஞாபகம் இல்லாத பொழுது பள்ளிக்குச் செல்லும் சிறுவன் பென்சில், ரப்பரை எப்படி தொலைத்தோம் என்பதை எப்படி நினைவில் வைத்திருப்பான் என்ற எண்ணம் தோன்றுகிறது. அதன்பின் மகனிடம் பென்சிலை தொலைத்ததற்காக திட்டியது குறித்து தன்னுடைய வருத்தத்தை தெரிவிக்கிறார் தந்தை என்பதாக கதை முடிகிறது.


சின்னச் சின்ன சில்லறை வேலைகளுக்கு மட்டும் தம்மைப் பயன்படுத்திக்கொண்டு பெரிய வேலைகளுக்கு வெளியூர் ஆட்களைப்போட்டு கட்டிட வேலைகள் பார்க்கும் முதலாளிகளைத் தோலுரிக்கிறது ஒரு கதை.


தன்னிடம் வேலை பார்த்த ஒருவன் பெரிய கொத்தனார் ஆன பின் அவனிடம் வேலைக்குச் செல்லுதல் பற்றிய ஒரு கதை.


மனைவியுடன் பயணித்துச் செல்கையில் பேருந்தில் நிகழும் சம்பவம், மனைவி தேர்வெழுத உடன் சென்றிருந்த பொழுது அங்கு மல்லிக்கட்டி வாங்கிய தயிர்சாதம் பற்றிப் பேசும் கதை, பழையன கழிதலும் எனபது எப்படிப்பட்ட வலி என்பதை உணர ஒரு கதை இப்படி எல்லாம் ஒவ்வொருவர் வாழ்விலும் கடந்து போன நிகழ்வை நினைவுபடுத்தி நம்மை கடந்து போன வாழ்வை மீண்டும் வாழவைக்கும் பணியைச் செய்கிறது.


வாசித்து தோழர் மொசைக் குமார் வாழ்வை அறியலாம். அப்படியே அதன் வாயிலாக நமது வாழ்வையும்...


வாழ்த்துகள் தோழர்...

எம்.ஆர்.ராதா கலகக்காரனின் கதை #முகில்

 எம் ஆர் ராதா

கலகக்காரனின் கதை


முகில்


சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்


ராதா குறித்து பல தகவல்கள் நூல் முழுதும். சிறு சிறு தகவல்கள் ஆயினும் வரலாற்றின் போக்கிலும் அது பதியும் வகையிலும் ஆசிரியரின் மொழி நடை.

நாடகத்தை, கலையை உயிராகக் கருதி கடைசி வரை வாழ்ந்த ஓர் அசாத்திய கலைஞனின் வரலாறு.


முற்போக்கு நாடகங்கள், புராணக் குப்பைகளைக் கிண்டலடிக்கும் நாடகம் இவற்றிற்கெல்லாம் எவ்வளவு எதிர்ப்புகள் அதை ராதா கையாண்ட விதம் இன்றைய ஹீரோக்கள் அறியவேண்டிய பாடம். Time to lead என்று துணைத் தலைப்பு கொடுத்துவிட்டு படம் ஓட அரசிடம் மண்டியிட்டு வாழ்ந்த நடிகர்கள் போலில்லை ராதா.


பெரியார், அண்ணா, கலைஞர், எம் ஜி ஆர் என பலர் வந்து போகின்றனர். ரத்தக்கண்ணீர் இவர் தனது ஐம்பதுகளின் தொடக்கத்தில் நடித்த படம் என்பது ஆச்சர்யம். எம் ஜி ஆரைச் சுட்டதற்கான காரணம், அதற்காக அலட்டிக் கொள்ளாமல் அதை சரியென்று சொல்லும் துணிச்சல் ராதாவுக்கு மட்டும் தான் இருந்திருக்கும். காமராஜர், பெரியார், அண்ணா இவர் மேல் வைத்திருக்கும் அன்பு குறித்த பல தகவல்கள். சிவாஜியிடம் ஒருமுறை வீட்டில் சென்று சாப்பாடு எடுத்துவர காரைக் கேட்கிறார் ராதா. சிவாஜி, அண்ணே அது இம்பாலாண்ணே என்று சொல்கிறார் விலை உயர்ந்த கார் என்று சொல்லாமல். சில காலத்திலேயே அதே இம்பாலா காரில் வைக்கோல் ஏற்றி வந்து சிவாஜி முன் நிறுத்த அவர் திகைக்கிறார். அப்போது ராதா அது வெறும் தகரம் தான். வைக்கோல் ஏற்ற வண்டி கிடைக்காததால் இதில் ஏற்றச் சொல்லிவிட்டேன் என்று மனிதம் போதிக்கிறார். நடிகர் அசோகனிடம் பேசும் போது ஹீரோ நடிகர்களின் எண்ணத்தை வெளிப்படையாகச் சொல்கிறார்.


ராதாவின் பேட்டி, மலேசியாவில் பேசிய பேச்சு, நடித்த படங்களின் பட்டியலும் பின் இணைப்பாக தந்திருக்கிறார்.


வாசிக்க வாசிக்க மனதில் இருந்த ராதாவின் பிம்பம் உச்சத்திற்குச் சென்று நிற்பதை மாற்றவே இயலாது.


வாழ்த்துகள் Mugil Siva தோழர்.


யாழ் தண்விகா

வருச நாட்டு ஜமீன் கதை #வட வீர பொன்னையா

 

புத்தகம்:     வருச நாட்டு ஜமீன் கதை

ஆசிரியர்:   வடவீர பொன்னையா

பதிப்பகம்:  விகடன் பிரசுரம்


மூன்று தலைமுறைகளை இந்த நூல் பேசுகிறது. ஆண்டி வேலப்ப நாயக்கர், அவருடைய தம்பி இளைய ஆண்டி வேலப்ப நாயக்கர் இருவரின் காலகட்டத்தில் கதை தொடங்குகிறது. இளைய ஆண்டி வேலப்ப நாயக்கர் மூன்று திருமணம் முடித்த பின்பு நான்காவதாக ஆண் வாரிசுக்காக வெள்ளையம்மா என்பவரை திருமணம் முடிக்கிறார். அவருக்கு பிறந்த மகன்தான் திருமலை ராமகிருஷ்ண சாமியப்ப நாயக்கர். மக்களிடம் இருந்து வரக்கூடிய வரிப்பணம், தானியங்கள், விலங்குகள் இப்படி பல வரும்படிகளை வைத்துக்கொண்டு ஜமீனுக்கு உரிய பலான வேலைகளையெல்லாம் செய்துவருகிறார்.  இடையில் பளியன் சித்தன் என்பவனோடு நட்பு ஏற்படுகிறது. அந்த நட்பின் மூலமாக பல்வேறு சித்துவேலைகளை கற்றுக் கொள்கிறார்  ஆண்டி வேலப்ப நாயக்கர். ஒரு கட்டத்தில் பளியன் சித்தன் வேலப்ப  நாயக்கரிடம் பள்ளிகளுக்கும் ஜமீனில் பளியர் இனத்திற்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும். அவர்களையும் ஜமீனுக்கு இணையான பணிகளில் அமர்த்தவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறான். இதைக் கேட்ட வேலப்ப நாயக்கர் சித்தனை வேல் கொண்டு  எய்தி கொன்றுவிடுகிறார். இறப்பதற்கு முன் சித்தன், உன் ஜமீனுக்கான ஆண் வாரிசு பிறப்பதற்கு முன்பு நீ இறந்து விடுவாய். அதுபோலவே அது காலம் முழுவதும் தொடரும். ஆண் வாரிசுகள் பார்ப்பதற்கு முன்பே தகப்பன் உயிர் இருக்காது என்று சாபம் விடுகிறான். அதுபோலவே சாமியப்ப நாயக்கரைப் பார்க்காமலேயே வேலப்ப நாயக்கரின் உயிர் பிரிகிறது.  சிறு வயதில் அரியணை ஜமீனாக வரமுடியாது என்பதால் வெள்ளைத்தாயம்மா பொறுப்பில் ஜமீன் வருகிறது. சாமியப்ப நாயக்கர் சென்னையில் படிக்க செல்கிறார். சென்னையிலிருந்து திரும்பி வரும்பொழுது ஜனகம் என்ற நாட்டியக்காரி உடன் திரும்பி வருகிறார். அவள் வெள்ளைக்கார துரையுடன் செல்ல வேண்டியவள். அவளின் அழகில் மயங்கி இழுத்து வருகிறார் சாமியப்ப நாயக்கர்.  நீண்ட காலம் ஜனகத்துடன் காதல், காம வாசம் தொடர்கிறது. அவளுக்காக அனைத்து வசதிகளுடன் மாளிகை ஒன்றும் கட்டித் தருகிறார். பொன்னும் பொருளும் அள்ளி இறைக்கிறார். அத்தனையும் மக்கள் பணம். இச்சூழலில் சாதியிலிருந்து வேலுத்தாயம்மாள் என்ற பெண்ணை கட்டி வைக்கிறார்கள். வேலுத்தாயம்மாளை கட்டிய பின்னரும் சாமியப்ப நாயக்கரின் பெண் வாசம் நிற்கவில்லை. செல்லும் இடங்களில் எல்லாம் பெண் பித்து பிடித்துத் திரிகிறார். இது தெரிந்த  வேலுத்தாயம்மாள் ஜனகத்தை ஆள் வைத்து கொன்றுவிடுகிறார். எவ்வளவு சொல்லியும் சாமியப்ப நாயக்கர் கேட்காததால் தெப்பம்பட்டி சென்றுவிடுகிறார் வேலுத்தாயம்மாள். ராஜமாணிக்கம் முதல் பெண்ணாக பிறக்கிறார், பிரச்சினை இல்லை. மனம் திருந்தி வந்த சாமியப்ப நாயக்கருடன் கூடல் நடக்க, இரண்டாவதாக ஒரு ஆண் பிறக்கிறது. அந்த ஆண் குழந்தையைப் பார்க்கும் முன்னரே சாமியப்ப நாயக்கர் மறைந்துவிடுகிறார். சாமியப்ப நாயக்கர் மக்களிடமிருந்து வாங்கிய வரிப்பணம் முறையாக வெள்ளையர்களுக்கு கப்பமாக செல்லாததால் கண்டமனூர் ஜமீன் ஏலம் போகிறது, கொஞ்ச பகுதிகளைத் தவிர்த்து அனைத்தையும் எட்டயபுரம் ஜமீன் ஏலத்திற்கு எடுத்துக்கொள்கிறார். எல்லாம் பறிபோன நிலையிலும் ஆட்டம் மட்டும் அடங்கவில்லை சாமியப்ப நாயக்கருக்கு. ஜமீனை மீட்க உதவி செய்வதாக திருவாங்கூர் ராஜா சொல்ல அவரைப் பார்க்க குமுளி வழியாகச் செல்லும்போது நெஞ்சு வலி வந்து பாளையம் ராவுத்தர் வீடு வர அங்குதான் உயிர் பிரிகிறது சாமியப்ப நாயக்கருக்கு. அவர் இறந்த இந்தச் சூழலில் பிறந்த கதிர்வேல் சாமி பாண்டியன் என்ற மைனர் பாண்டியன் சென்னைக்கு சென்று படிக்கும் சூழல் வந்தபோதிலும் அங்கு வேண்டாமென்று வேலு தாயம்மாள் மறுத்துவிடுகிறார்.  மைனர் பாண்டியன் தன்னுடைய தந்தையைப் போலவே பெண் பித்து பிடித்து திரிகிறார். முறையான படிப்பும் இல்லை சேவகர்கள் பலரை வைத்துக்கொண்டு அடாவடியில் ஈடுபடுகிறார். பித்தனின் வாக்கு பலித்துக் கொண்டு வருவதை நம்ப மறுக்கிறார். எத்தனையோ பெண்களிடம் சல்லாபம் செய்த மைனர் பாண்டியன் ஒரு கட்டத்தில் 13 வயதான வேலம்மா என்பவரை தூக்கி சென்று திருமணம் முடிக்கிறார். முடித்த போதிலும் வழக்கம்போல் அடாவடி தொடர்கிறது. பெண் சகவாசம் தொடருகிறது. ஜமீன் ஒருபக்கம் வெள்ளையர்களுக்கு கப்பம் கட்டாமல் மூழ்கிக் கொண்டிருக்கிறது இன்னொரு பக்கம் சுதந்திரப்போராட்டம் நடந்து கொண்டிருக்க மக்கள் ஜமீனில் இருந்து விடுபடும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசி காலத்தில் உடல்நிலை சரியில்லாமல் சித்தன் வாழ்ந்த அதே குகையில் வாழத் தொடங்கிய மைனர் பாண்டியன் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் கூழைக் குடித்து நாட்களைக் கடத்துகிறார். அப்படியே அவருடைய வாழ்க்கையும் முடிந்துவிடுகிறது. அடக்கம் செய்வதற்கு கூட சொந்த நிலம் இல்லாத ஒரு ஜமீனாக மைனர் பாண்டியன் கடைசியில் இறக்கிறார். 

        ஜம்புலிபுத்தூர் கோவிலில் பெண்களை கோவிலுக்கு பொட்டுக்கட்டி விட, அந்தப் பெண்களை ஜமீன் ஏகபோகமாக அனுபவித்தல், வயசுக்கு வந்த பெண்களை காத்துக் கருப்பு அண்டக்கூடாது என்று அரண்மனைக்கு கொண்டு வந்து விட அவர்களை அனுபவித்தல், விரும்பும் பெண்களை சேவகக்காரர்கள் துணையோடு தூக்கி வந்து அனுபவித்தல், பிறரின் சொத்துக்களை அடித்துப் பிடுங்குதல், தாம் தூம் செலவு, சாதகம் செய்யும் பிறருக்கு ஊரைத் தானமாக வழங்குதல், வெள்ளைக்காரன் கண்களை மறைத்து பல திருட்டுத் தனங்களைச் செய்தல், பெண்களை போகப் பொருளாகப் பார்த்தல், சொத்துக்களை பாதுகாக்க பெண்களை ஜமீன் பொறுப்பில் அமர வைத்தல் வரலாறெங்கும் உள்ள அவலங்களை மண்ணின் மொழியோடு வட வீர பொன்னையா கூறியுள்ளார். வாசிக்க வாசிக்க அந்தக் காலத்திற்குள் பயணிக்கும் எண்ணம் பீறிடுகிறது. இன்னொன்றையும் சொல்லவேண்டும்.


         இப்படிப் பட்டவர்களின் செயல்களைத்தான் அப்படியே தொடர ஆண்ட பரம்பரை என்று சொல்லி கொண்டாடி வருகிறதோ பல கூட்டம், அக்காலம் போல இப்பவும் சொத்துக்களை களவாடுதல், பெண்களை வன்புணர்வு செய்தல் போன்ற செயல்களைச் செய்ய நினைக்கிறதோ என்ற எண்ணமும் மேலிடாமல் இல்லை.


வாழ்த்துகள் வட வீர பொன்னையா தோழர்.


யாழ் தண்விகா

Friday, 20 February 2026

பாவக் கதைகள்

 

பாவக் கதைகள்


கௌதம் வாசுதேவ் இயக்கம்.


கௌதம், சிம்ரன், இரு பெண் குழந்தைகள், ஒரு பையன். அமைதியான வாழ்க்கை. வயதுக்கு வராத இளைய மகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறாள். போலீசுக்கு செல்வதா வேண்டாமா என குழப்பம். பின் வேண்டாம் என முடிவெடுக்கிறார்கள். மகன், இப்படிச் செய்தவன் யாராக இருக்கும் என நண்பனுடன் சேர்ந்து தேடுகிறான். ஒரு கட்டத்தில் மகளைக் கொன்றுவிட தாய் நினைத்து சில பல யோசனைக்குப் பிறகு கற்பு என்பது மயிருக்குச் சமம். அவள் படித்து பெரியாளா வருவா. அவளுக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று நல்ல முடிவை எடுக்கிறாள். மகன் பாலியல் வல்லுறவு செய்தவனைக் கண்டுபிடித்தானா அவனுக்கு தண்டனை கொடுத்தானா என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.


வான்மகள்

நம்பிக்கை...!


விக்னேஷ் சிவன், சுதா கொங்காரா இயக்கிய பாவக்கதைகள் பார்த்தேன்.


சாதி ஆணவப் படுகொலை, லெஸ்பியன் குறித்த காட்சிகளோடு விக்னேஷ் சிவன் படம் அருமை. கொலை செய்யத் துணிந்தபின் வருகின்ற காட்சிகள் பெரும் பதட்டத்தை மனதிற்குள் உண்டுபண்ணின. லெஸ்பியன் என்பதை நிரூபிக்க முத்தக் காட்சி! கடைசியில் குறிப்பாக அந்த குட்டி மனிதனை அவன் கூறிய சொல்லால் அவனையே திட்டும் இடம் செம. விச தே... பையா. அதை வில்லன் சொல்லிச் சிரிக்கிறான். அவனுக்கும் இது பொருத்தம் தான்.


திருநங்கைகளின் ஆசைகள், அவர்களின் மேலான சமூகப் பார்வை குறித்த சுதா கொங்காரா படம். திருநங்கையாக நடித்தவர் சிறப்பாகச் செய்திருந்தார். வெற்றிலை மெல்லல் அவ்ளோ அழகு. மதம் கடந்த திருமணம், அவர்கள் அடையும் இன்னல்கள், பெற்றவர்கள் மனம் திருந்தியதாக நினைத்து ஊர் வந்து ஏமாந்து திரும்புதல் என காட்சிகள். பாடல் சுகம். அருமை...


பாவக் கதைகள்


வெற்றிமாறன் இயக்கிய பகுதியைப் பார்த்தேன். சாதி மறுப்பு திருமணம் செய்த தனது மகளுக்கு வளைகாப்பு நிகழ்த்த ஊருக்கு அழைத்து வருகிறார் பிரகாஷ்ராஜ். மகளும் மருமகனும் அருமையான வாழ்வை வாழ்கிறார்கள். அதை கண்ணெதிரே காண்கிறார் தந்தை அதுவும் அவ்வாழ்வை பிரகாஷ்ராஜ் குடும்பம் இதுவரை அனுபவித்திராத நிலையில். அழைத்து வரப்பட்ட மகள் படிப்பு சுதந்திரம் தரும், நல்வாழ்க்கை தரும் என்று தங்கைகளிடம் கூறுகிறார். குடும்பத்தினர் அனைவருடனும் இரவில் உணவு உண்கிறார். இடையில் மகளுக்கு விக்கும்போது தண்ணீர் கொண்டுவரச் செல்லும் தந்தை அதில் விசம் கலந்து மகளுக்கு கொடுக்கிறார். இரவில் குடும்பத்தினர் அனைவரையும் மண்டபத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு மகள் வாந்தி எடுப்பதையும், இரத்தம் கக்குவதையும் பார்த்து சாகும் வரை வேடிக்கை பார்க்கிறார். எதிர்த்துப் பேசும் மனைவியை அடித்து வேறொரு அறையில் பூட்டி விடுகிறார். மறுநாள் மருமகன் வந்து வில்லங்கம் நடப்பது, ஊர் கூடுவது, வழக்கு என்பதெல்லாம் ஓவியமாக எழுத்தாக திரையில் தெரிகிறது.


எதைச் சொல்ல விழைகிறார் வெற்றிமாறன் என்பது புரியவில்லை. இப்படி செய்கிறார்கள் என்பதை காட்சிப்படுத்த இந்த கால கட்டத்தில் அவசியம் என்ன வந்தது. அதற்கு தீர்வு என்ன என்பதை எழுத்துகள் போட்டு நீதி சொல்வதை எத்தனை பேர் பார்ப்பார்கள்... அசுரனில் கல்வி எனும் தீர்வு சொன்ன வெற்றிமாறன் இப்படி சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை ஏமாற்றி அழைத்து வந்து இப்படிப் பிரிக்கலாம் என்கிறாரா... பாவக் கதைகள் என்னும் தலைப்புக்கு நியாயம் செய்ய இதை மட்டும் காட்சிப் படுத்தினால் போதும் என நினைத்து விட்டாரா...


பெருத்த ஏமாற்றம்.

மாவீரர் ஒண்டிவீரன் பகடை #எழில்.இளங்கோவன்

 

மாவீரர் ஒண்டிவீரன் பகடை

எழில். இளங்கோவன்


கருஞ்சட்டைப் பதிப்பகம்


நெற்கட்டும் செவ்வயல் பாளையத் தலைவர் பூலித்தேவன். அப்பாளையத்தின் படைத்தலைவன் ஒண்டிவீரன். இருவரும் சாதியால் வேறுபட்டு நிற்பினும் நட்பால் இணைந்து பாளையத்தைக் காத்துவந்துள்ளனர். பிரெஞ்சு, பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்துப் பல போர்க்களங்களில் இணைந்தே போரிட்டுள்ளனர். நெற்கட்டும் செவ்வயல் பாளையம் பல காலமாக அருந்ததியர்கள் ஆண்டுவந்த பாளையம். அங்கு பஞ்ச காலத்தில் பூலித்தேவன் பாட்டனார்கள் வருகை தர, காலப்போக்கில் பூலித்தேவன் தலைவனாகவும் வர வாய்ப்பு அளிக்கிறது. அது குறித்த தகவல்கள் இல்லை. மேலும் எப்படி அருந்ததிய மக்களிடம் இருந்த ஜமீன் எப்படி பூலித்தேவன் வசம் சென்றது என்பது குறித்த தகவல் இல்லை. ஒண்டிவீரன் களம் கண்ட போர்கள் நாட்கள், வருடத்தோடு இருக்கின்றன. ஆனால் அவரின் பிறந்த வரலாறு இல்லை. இன்னும் பல தகவல்கள் தேடி அளித்திருக்கலாம். ஒண்டிவீரன் குறித்த கதைப்பாடல்கள் நம்பும்படியாக இல்லை என்று ஆசிரியர் கூறுகிறார். ஒரு வீரன் வரலாறு இப்படி இருந்திருக்காது என்றே நமக்கும் தோன்றுகிறது. பூலித்தேவன் கடைசிப் போருக்குப் பின்னால் காலாடி, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில், பின் தன்னுடைய குலதெய்வ கோவில் என்று தப்பித்துச் செல்கிறார். அதன்பின் என்ன ஆனார் என்று வரலாற்றில் தகவல் இல்லை. பூலித்தேவன் தலைமறைவுக்குப் பின் பாளையத் தலைவராக வந்த ஒண்டிவீரன், பூலித்தேவனின் 3 குழந்தைகளையும் தன்னுடைய பாதுகாப்பில் வைத்திருக்கிறார். அதே நேரம் ஒண்டிவீரன் மறைவு குறித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்கிறார் ஆசிரியர். இன்னும் தேடலை அதிகப்படுத்தி வரலாற்றை முழுமைப் படுத்தவேண்டிய அவசியம் இருக்கிறது. ஒரு தொடக்கமாக நாம் எடுத்துக்கொண்டு நாமும் வாசிப்பின் மூலம் இன்னும் ஒண்டிவீரன் குறித்தும் பூலித்தேவன் குறித்தும் அறியவேண்டும்.


வாழ்த்துகள் தோழர்.

தமிழ்ப் பொங்கல்


 #தமிழ்ப்பொங்கல்


பனியில் 

மழையில் 

மெல்லிய சூரிய ஒளியில் தைத்திங்கள் பூக்க 

தமிழ்ப் பொங்கல் பொங்கிற்று


ஆட்சியாளர்களால் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டே வந்தாலும் 

நம்பிக்கையைக் கிஞ்சித்தும் கைவிடாமல் 

தொடர்கிறது பொங்கல்


திசையெங்கும் பசுமை பூக்க

உழைப்பவன் வாழ்வில் 

புதுவழி கிடைக்க 

மறக்காமல் சொல்லி விடுகிறோம்

"தை பிறந்தால் வழி பிறக்கும்"


போர் வரட்டும் என 

காத்திருப்பவன் அல்ல 

உலகத்தின் உணவுக்கென 

வயல் தோறும் 

வாழ் நாள் தோறும் 

பசுமைப் புரட்சி செய்பவன் உழவன் 


உலகம் சுருங்கி விட்டது 

கைக்குள் உலகம் 

போன்ற சொல்லாடல்களால் சொக்கிப் போகிறோம்

விவசாயிகளின் தற்கொலையை குறுந்தகவல்களால் ஏனோ

கடந்து போகிறோம்


மீத்தேன் 

ஹைட்ரோ கார்பன் 

நியூட்ரினோ 

எட்டுவழிச்சாலை 

திட்டங்கள் எல்லாம் 

வயலுக்குள் குழி தோண்டுகிறது

நவீனம் 

அவசியம் 

தேவை என்ற பெயரில்  

உலக வாழ்வின் நலனுக்குக்   கொள்ளி வைக்கிறது


உரக் கடை வைத்திருப்பவன்

ஒவ்வொரு நாளும் 

உயர்கிறான் 

விவசாயம் செய்பவன் 

விரக்தியில் ஏதோ ஒருநாள் 

பூச்சி மருந்து குடித்துச் சாகிறான் 


50 நாட்களுக்கும் மேலாக 

வேளாண் சட்டங்களை 

பசி என்றும்

பனி என்றும் பாராமல் 

எதிர்த்துக் களம் காணுகிறார்கள் 

50 உயிர்களுக்கும் மேலாக

உயிர் ஈந்தும் தீரமாக நிற்கிறார்கள்

விவசாய மக்கள் 


அதிகாரத்தின் அடிமையாக

இவர்களை நினைக்கிறது சர்வாதிகாரக் கூட்டம் 

அதிகாரம் உழைப்பவனுக்கு 

என்னும் வரை பரவட்டும் 

பசுமைப் போராட்டம்...


இத்தனைக்கு மத்தியிலும் தான்

தமிழர்களுக்கான பெருவிழா

இழிவும் கேடும் இல்லாத ஒரு விழா

பிறப்பு இறப்புத் தீட்டு களால் பாதிக்கப்படாத திருவிழா 

பச்சரிசியை உடலாகவும் குங்குமத்தைக் குருதியாகவும் வடித்து 

தமிழ் நில மக்கள் 

பொங்கல் சமைத்துப் 

பண்பாட்டுக் களமாடும் 

தனித்துவ விழா


தும்பைப்பூ 

பூலாம்பூ 

பிரண்டை 

ஆவாரம் பூ 

வேப்பம்பூ 

மாவிலை 

இணைத்துக் கட்டும் 

காப்புக்கட்டில் 

முகூர்த்தக்கால் 

ஊன்றிக்கொள்கிறது 

பொங்கல்.


சேனைக் கிழங்கு 

சேப்பங்கிழங்கு 

கருணைக்கிழங்கு 

சிறுகிழங்கு 

பனங்கிழங்கு 

பார்ப்பனர்களால் விலக்கப்பட்டவை.

உழவு குடியால் 

உலகம் உயர்த்தும் குடியால்

விரும்பப்பட்டவை. 

பொங்கல் வழிபாட்டில் வைத்து

வணங்கப்பட்டவை.


யானை கட்டிப் போரடித்த 

உழவு வாழ்வில் 

நடைமுறை வாழ்வில் 

இணைந்து வருவது மாடு. 

மேய்ச்சல் சமூகத்தின் 

உச்ச மிச்சம் மாடு. 

வேளாண் சமூகத்தின் 

முதன்மை மாடு. 

பசுவைக் கொண்டாடுதலும்

சல்லிக்கட்டும்

ஆதி விழாவின் நீட்சி.

தமிழன் தேசிய இனத்தான் எனப்

பெருமைபடத் தக்கதான சாட்சி.


இயற்கைக்கும் 

உழைப்பவர்களுக்கும்

கால்நடைகளுக்கும் 

நன்றி நவிலல் 

கடமையாக இல்லாமல் 

களிப்பாக அமையட்டும் 

வரும் பொங்கல்.


வயல் செழிப்பில் 

உழவர் மிளிரட்டும்.

பசுமைத் திறப்பில் 

பசி மறையட்டும்.


விவசாயம் மதிக்கும் 

ஆட்சி தோன்றட்டும். 

வேளாண் குடி வாழ்வில் 

வெளிச்சம் பூக்கட்டும்.


அனைவருக்கும் 

தமிழ்ப் பொங்கல் வாழ்த்துக்கள்.


வாய்ப்பிற்குப் பேரன்பும் மகிழ்வும்.

மும்பை இலக்கியக் கூடம்

வ.இரா. தமிழ் நேசன்தோழர்.


நன்றியோடு யாழ் தண்விகா