மதிக்குட்டி
வேல் முருகன்
பக்கங்கள் 130
விலை 150
Vetrimozhi Veliyeetagam
கவிஞருக்கு இது நான்காவது தொகுப்பு. பேரன்பின் நன்றிகள் & என்னுரை என இரண்டு இடங்களில் என்னுடைய பெயர் நன்றி கவிஞரே.
தொட்டிலில் தூங்கும் குழந்தையை பார்த்து எவ்வளவு சேட்டை செய்கிறாள் என்று நினைப்பதுண்டு. நல்ல அறிவான குழந்தையாக வருவாள் என்று எண்ணுவதுண்டு. ரொம்ப வினையம் புடிச்ச குழந்தையாக இருக்கிறாளே என்று வேதனைப்படுவதுண்டு. இந்த குழந்தைக்காக நாம் வாழ வேண்டும், இந்த குழந்தையின் ஆசையினை நாம் நிறைவேற்றித் தரும் அளவு வளர வேண்டும், இந்த குழந்தையின் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்று தொலைநோக்குப் பார்வையில் சிந்திப்பதுண்டு. இதுபோல் குழந்தைகளை மட்டும் தான் உறங்கும் பொழுது பார்த்து, எல்லை கடந்து ஆச்சரியப்படுதல், வேதனைப்படுவது உண்டு.
மதிக்குட்டி கவிதைத் தொகுப்பில் குழந்தையின் உலகம் பற்றி அழகாக கூறுகிறார் கவிஞர் வேல்முருகன். குழந்தையின் மேலான அன்பைப் பற்றி கூறும் பொழுது அதைப்போல / அதைவிட மேலாக நம்முடைய குழந்தைகளையும் நாம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வளரும். நாம் பார்த்த பார்வை வேறு. வேல்முருகன் அவர்கள் பார்த்த பார்வை வேறு என்று கூறும் அளவிற்கு எண்ணற்ற கோணங்களில் குழந்தையை பார்த்திருக்கிறார், ரசித்திருக்கிறார், அதை கவிதைகளில் கொண்டு வந்திருக்கிறார்.
"தொட்டிலில்
இருபுறமும்
கால்களை தொங்கப் போட்டு
அமர்ந்து
விழுந்து விடக்கூடாது என்று
இடுப்புடன் சேர்த்து
கட்டப்பட்ட துண்டின் துணையோடு
தலையை
ஒரு புறம் நீட்டி
கால்களின் உந்துதலால் புன்னகையோடு ஆடுகிறாள்.
நம்பி ஆடலாம் மகளே
அது அம்மாவின் சேலை
அது அப்பாவின் துண்டு"
முதல் கவிதை இது. நம்பி ஆடலாம் மகளே / அது அம்மாவின் சேலை / அது அப்பாவின் துண்டு - என்ற வரியில் சேலையும் துண்டும் உனக்குத் தரும் பூரண பாதுகாப்பு என்று கூறுகிறார் கவிஞர். உடலுக்குள் உணர்வுக்குள் சில்லிப்பு தட்டும் வரி அது.
குழந்தையிடம் இன்று நாளை நேற்று என்பதற்கு மூன்று காலங்களையும் ஒன்றாக மாற்றி கூறும் லாவகம் இருக்கிறது. அது எதுவும் புரியாத லாவகம். அந்த ஒரு லாவகத்திற்குள் நாமும் மாட்டிக்கொள்ள ஏங்குவோம். மனிதர்களாக உருமாறத் தொடங்கிய பொழுது அனுபவிக்கும் துன்பங்களுக்குள், மீளப் பெறத் துடிக்கும் இன்பங்களுக்குள் இந்த இன்று நேற்று நாளை என்னும் லாவகம் கைக்கு எட்டாமல் போகும். அந்தப் பிரச்சனை குழந்தைகளுக்கு இல்லை.
"மதிக்குட்டி
எப்போ வந்தீங்க
என்ற கேள்விக்கு
நாளைக்குத்தான் வந்தேன் என்ற
உன் பதிலில்
எதிர்காலம் திகைத்து
இறந்த காலம் அதிர்ந்து
நிகழ்காலம் ஸ்தம்பித்தது.
ஒரு வாக்கியத்தில்
காலத்தை மாற்றி வைக்கும் சக்தி உன்னிடம் தான் இருந்தது மகளே"
என்ற கவிதையில் காலத்தை ஸ்தம்பிக்க வைக்கக்கூடிய வல்லமை வாய்ந்தவளாக குழந்தைதான் இருக்கிறாள் என்பது புலனாகிறது.
பல நேரங்களில் குழந்தை தான் நம்மை பாதுகாப்பாக வைத்திருப்பதாக எண்ணுவோம். அதற்கு நாம் ராசி என்ற பெயர் சூட்டிக் கொள்வோம். குழந்தையின் அன்பிற்குள் நாம் வாழ்வதன் பொருள் அதுவாகத்தான் இருக்கும். அதை
"பாதுகாப்பாய்
வைத்துக் கொள்
என்னை.
சுட்டு விரலை
இறுகப் பற்றிக் கொண்டிருக்கும்
உன் பிஞ்சு விரல்களுக்குள்"
என்ற வரிகளில் நுட்பமாய் சொல்லிச் விடுகிறார் கவிஞர்.
யார் சுட்டுவிரலை யார் பற்றி இருப்பது என்பதை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்க்கும் பொழுது அன்பின் நிமித்தமாய் குழந்தையின் இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் பிஞ்சு விரல்களால் பாதுகாப்பாக என்னை வைத்துக் கொள் என்பதாக இருக்கிறது. வித்தியாசமான கோணம்.
கவிஞரின் நாத்திகப் பார்வை குழந்தைக் கவிதையையும் விட்டு வைக்கவில்லை. அது இன்னும் குழந்தைக்குள் சென்று சேரவில்லை என்பது மகிழ்வா துயரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
"ஏதும் அறியாத குழந்தை
தூக்கத்தில் சிரிக்கையில்
கடவுள் கிச்சுகிச்சு மூட்டுகிறார்
என்கிறார்கள்.
அழுகையில்
கிள்ளி வைக்கிறார்
என்கிறார்கள்.
அவன்
ஒரு விளையாட்டுக்காரப்பயல்.
தூங்குகையில் மட்டும் வந்து
போய்விடுகிறான்.
விழித்த பின்னும் சரி
வளர்ந்த பின்னும் சரி
எங்கே தொலைந்து போகிறான்"
இந்த கவிதையைப் படிக்கும் பொழுது, குழந்தை முழித்திருக்கும் பொழுது கடவுள் எங்கே செல்கிறான்? என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வந்து போகும். கிச்சுகிச்சு மூட்டுவதும் கிள்ளி வைப்பதும் கடவுள் செயல் அல்ல. அது ஒரு இயல்பான செயல். குழந்தை காணும் கனவு என்று புரிந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார் கவிஞர்.
என்னுரையில் உள்ள கவிஞரின் ஏக்கத்தைத் தணிக்க ஒரு கவிதை...
தொகுப்பில் உள்ள கவிஞரின் கவிதைதான்.
"உன் அண்ணன் தான்
நான் பெத்த புள்ள
நீயி என் புள்ள இல்ல
போ.
போம்மா
நானு அப்பா புள்ள
ஏம்ப்பா நீதானப்பா என்ன பெத்த"
கவிதைத் தொகுப்பெங்கும் மதிக்குட்டியின் தொகுப்பாக இருக்கிறது. ஆங்காங்கே உள்ள Poondi Jeyaraj திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் தோழரின் ஓவியம் மதிக்குட்டியைக் காணும் அழகு. வெற்றிமொழி வெளியீட்டகம் சார்பில் நல்ல கட்டமைப்பு.
பயணம் தொடர்க. வாழ்த்துகள் தோழர்.
யாழ் தண்விகா
💝






