Saturday, 14 February 2026

சேத்துமான் கதைகள் #பெருமாள் முருகன்

 


சேத்துமான் கதைகள்

பெருமாள் முருகன்

காலச்சுவடு பதிப்பகம்

விலை ரூ 95

64 பக்கங்கள்


எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய வறுகறி(2012) மற்றும் மாப்புக் குடுக்கோணுஞ் சாமீ...(2011) என்ற இரு கதைகள் அடங்கிய புத்தகம். இரு கதைகளையும் சேத்துமான் என்ற திரைப்படமாக எடுத்து வெற்றிகண்ட இயக்குனர் தமிழ் முன்னுரையுடனும், இலக்கியத்திலிருந்து எடுத்த கதையை படமாக எடுப்பதற்கு உதவியாக இருந்த தயாரிப்பாளர் பா.ரஞ்சித் எழுதிய அணிந்துரையுடனும், எழுத்தாளர் பெருமாள்முருகன், தன்னுடைய கதைகள் படமாக வரக் காத்திருந்த காலங்கள், சேத்துமான் உருவான விதம், அதில் தன்னுடைய பங்களிப்பு பற்றிக் கூறும் முன்னுரையுடனும் இந்த நூல் என்பது இதன் சிறப்பு. 


இரு கதைகளும் ஒடுக்கப்பட்டவனின் வலிகளைப் பற்றிப் பேசுகிறது. சேத்துமான் என்றழைக்கப்படும் பன்றிக்கறியை வீட்டில் எடுத்துக்கொடுத்து சமைத்துத் தரச் சொல்லி சாப்பிட முடியாது என்னும் சூழலில் பன்றிக்கறி எடுத்துத் தின்ன ஒரு குழு. இவர்கள் குடியானவர்கள். அதற்கு தலைவனாக வெள்ளையன். அவன் பன்றிக்கறி வேண்டும் நபர்களின் பெயர்களைக் கேட்டுக்கொண்டு அதற்கேற்ப பன்றியைத் தேடி அலைகிறான். தோதான பன்றி ஒன்றினை ரங்கனிடம் (பன்றி வளர்ப்பவன்) இருந்து வாங்கிவந்து அதை வறுகறி ஆக்கி கூறு போட்டுப் பிரித்துக்கொள்ளவேண்டும் என்பது திட்டம். வாங்கி அதனை வறுகறிக்குத் தயார் செய்கிறார்கள். கூடவே ஒத்தாசையாக இருக்கும் நபர் குமரேசனின் தாத்தா பூச்சி. இவர்கள் ஏரிக்கரை ஓரமாக ஒரு குழுவாக வசிப்பவர்கள். ஊருக்குள் முன்னிரவின்போது சென்று சோறு வாங்கி உண்ணுவார்கள். கூடை முடைபவர்கள். பன்றி விற்பவன், ஒத்தாசையாக வரும் தாத்தா, அதைத் தின்ன ஓடும் குடியானவர்கள் இப்படி இவர்களுக்கிடையே கதை நிகழ்கிறது. இதில் செல்லையனுக்கும் வெள்ளையனுக்கும் தகராறு. இருவரும் குடியானவர்கள். இவர்களுக்கு இடையே வரும் சண்டையை விலக்கிவிட தாத்தா முயல்கிறார். செல்லையனின் அரிவாள் வெட்டு தாத்தா மேல் விழுகிறது. தாத்தாவைத் தாங்கிப் பிடிக்க பேரன் குமரேசனைத் தாண்டி அங்கு யாருமில்லை என்பதாகக் கதை முடிகிறது. குடியானவர்களுக்கு உள்ளே நிலவும் பூசல் ஆயிரம் இருந்தாலும் பிற சாதியை இழிவாகக் காணும் போக்கு பல இடங்களில் காட்டப்பட்டுள்ளது. நாடோடியாகத் திரியும் குமரேசன், மதிய நேர உணவாவது கிடைக்கும் என பள்ளியில் சேர்க்கப்ப்டுகிறான். அங்கு ஆசிரியர் அவனுக்கு வைக்கும் எலியான் என்ற பட்டப்பெயர், அவன் உண்ணும் உணவு குறித்து அடிக்கும் கிண்டல் போன்றவை அவரது சாதிய வன்மத்தைக் காட்டுகிறது. குடியானவர்கள் தமக்குள் அடித்துக்கொள்ளும் சண்டையில் விலக்கிவிட வந்த குமரேசனின் தாத்தா வெட்டுப்பட்டு விழும்போது கூட அருகே இருக்கும் குடியானவர்கள் யாரும் தாங்கவில்லை. உடன்வந்த பேரன் குமரேசன் தான் தாங்குகிறான். தாத்தாவின் உயிருக்கு இங்கு மதிப்பு இல்லை என்பதோடு கதை முடிகிறது. கதை முடியும் இடத்திலிருந்து நினைத்துப் பார்த்தால் கதை முழுவதும் பரவிக்கிடக்கும் சாதியமுகங்களை எளிதில் கண்டடையமுடியும்.


மாப்புக் குடுக்கோணுஞ் சாமீ... கதை தொடங்கும் இடம் முதல் வேகம் தான். ஊரெங்கும் திடீர் திடீரென செத்து விழுகிறது மாடுகள். ஊரில் உள்ள வைத்தியராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன காரணமாக இருக்கும் என்று ஊருக்காரர்கள் பேசும்போது இறக்கும் மாடுகளைக் கொண்டுசென்று அவற்றை உண்ணும் மக்களை நோக்கி அவர்கள் பார்வை திரும்புகிறது. அவர்களின் ஊருக்குள் சென்று அவர்களைத் தடியால் அடித்து எங்கே அவன் என்று கேட்கிறார்கள். அவன் மாடு வைத்திருக்கும் கூட்டத்தில் ஒருவன் வைத்திருக்கும் தோட்டக் கிணற்றில் ஒருநாள் குளித்ததற்காக தோட்டக்காரனால் அடிவாங்கியவன். அவன் அடிவாங்கி ஓடும்போது டேய், செங்கான்... என்னை அடிச்சிட்டல்லடா... ஒன்னப் பாத்துக்கிறேன்டா... என்று ஓடியவன். அவன் தான் செய்திருப்பான், இவன்தான் செய்திருப்பான் எனக் கருதி ஊரின் ஓரமாக வசிக்கும் எளியமக்களை அடித்துத் துன்புறுத்தும் காட்சிகளை கண்முன்னே நிறுத்துகிறார் எழுத்தாளர். மாட்டை விடக் கேவலமாக நடத்தப்படும் அந்த மக்கள் குற்றுயிரும் கொலைஉயிருமாகக் கிடந்தாலும் அவர்கள்மேல் நிகழ்த்தப்படும் வன்மம் சாதியை நேசித்து மனிதத்தை வெறுக்கும் யாவருக்கும் சாத்தியம் தான். 


இந்த இரு கதைகளும் தான் சேத்துமான் என்ற திரைப்படம். வாசிக்கவேண்டிய கதைகள். சாதி, எளிய மக்களை எப்படியெல்லாம் காயம் செய்யும், செய்கிறது, செய்தது என்பதை வாசிக்கத்தந்த வார்த்தைகள் மூலமாக சமூக அவலத்தைக் மனக்கண் முன்னால் கொண்டுவந்து காட்டிய எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு வாழ்த்துகள்.

அவள் நாம சங்கீர்த்தனம் #லார்க் பாஸ்கரன்

 


அவள் நாம சங்கீர்த்தனம்

லார்க் பாஸ்கரன் Lark Bhaskaran 

கடல் பதிப்பகம்

விலை ரூ.100

76 பக்கங்கள்


தண்டவாளத்தை விட்டுத் தடம் புரளாமல் பயணிக்கும் ரயிலினைப் போல ஒரு பயணம். காதல் பயணம். காதலையும் காதலியையும் கொண்டாடிக்கொள்ள ஒரு தொகுப்பு. காதலிடமும் காதலியிடமும் மன்றாடித் திளைத்தலை சொற்களாக்கிக் காண்பித்திருக்கும் தொகுப்பு. ஒவ்வொரு சொல்லும் காதல், ஒவ்வொரு பத்தியும் காதல், ஒரு தொகுப்பு முழுக்கக் காதல். 


தீர்வதல்ல காதல். காதலி பிரிந்து சென்றாலும் காதல் இல்லை என்றாகிவிடுமா? உனக்குப் பரிசளித்த காதலின் பரிசுத்தம் உணர். என்னைக் காப்பாற்று. என் தவறுகளைச் சரியாக்குகிறேன். தொடங்குவோம் முதலிலிருந்து... என்ற வரிகள் சாதாரணமானதா? இல்லை. அது இறைஞ்சுதல். காதலை அப்படிப் பெறுதல் சரியா? ஆம். சரியானது தான். காரணம் காதலி உண்மை. அவள் பேசிய காதல் உண்மை. அந்தக் காலங்கள் உண்மை. அதை மீட்கொணரவே இக்கவிதைகள்.


காதலில் புதைதல் என்பது அசாதாரணமானது. கவிஞர் அதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார். நம்மையும் இத்தொகுப்பை வாசிக்க வைப்பதன் மூலம், அந்தப் புதைதல் என்னும் அசாதாரணத்தில் இலகுவாகத் தள்ளி விட்டிருக்கிறார். பிடித்த கவிதைகளைச் சொல்லி அது உணர்வினுள்ளுள்  உண்டாக்கிய மாற்றங்களைக் கூற வழியில்லை. ஒவ்வொன்றும் வலி. ஒவ்வொன்றும் காதல். வலி கடக்க காதலொன்றே வழி.


காதல் கடலின் சில துளிகள்...


ஒரு கப் தேனீர் கொடு

உற்சாகமாக்கு

தொடு 

விளையாடு

புன்னகைத்துக் கொள்

நீ நானாக இருப்பதும் சாத்தியமே...


பைத்திய போதையைத் தந்தவள் நீ

ஆறுதல் பித்தும் எட்டவில்லை


என் வலிகளில் கொஞ்சம் 

ஆஸ்பிரின் செலுத்து

தூங்கும் நேரமாவது அதிகரிக்கட்டும்.


அன்பின் விரதத்தை முடித்து வைக்க

நான் என்ன செய்யவேண்டும்

உனக்காக பத்திய சாவை ஏற்றுக்கொள்ளவா...


நீ இல்லாத வாழ்வை 

யோசிக்க முடியவில்லை

தயவுசெய்து அணைத்துக்கொள் என்னை...


நீங்களும் வாசியுங்கள். காதல் கடல் பருகலாம்.


வாழ்த்துகள் தோழர் லார்க் பாஸ்கரன்.

ரோஸ் #ஆயிசா இரா.நடராசன்

 


ரோஸ்

ஆயிசா இரா.நடராசன்

Books for children பதிப்பகம்

64 பக்கங்கள்


முழுக்க உரையாடல்களால் நிரம்பிய நூல். அப்பொழுது அவன் பேசினான், சூரியன் கண் விழித்தது, பைக்கில் வேகமாகச் சென்றான், அவள் அமைதி வெயிலற்ற வான் போலிருந்தது என்றெல்லாம் வார்த்தைகளில்லை. முழுக்க உரையாடல்கள் தாம். தேவா என்பவன் பள்ளிச் சிறுவன். வீட்டில் செடியில் பூத்திருக்கும் ரோஜாவைப் பார்க்க ஆசைப்படுகிறான். ஆனால் வீடு அதற்கு எவ்வளவு முட்டுக்கட்டை போடுகிறது, பள்ளிப் பாடங்களை முடிக்க வைக்க பெற்றோர் காட்டும் அதீத அழுத்தம் கடந்தும் தேவாவின் ஆசை ரோஜாவில் தான் இருக்கிறது. பள்ளிக்குக் கிளம்பும் பொழுதிலும், வழியிலும், பள்ளியின் ஒவ்வொரு பாடவேளையின்போதும் ரோஜா குறித்த ஏதோ ஒன்று தேவாவைப் பேச வைக்கிறது. ஆனால் எல்லாச் சூழலிலும் அவன் கேள்விகள் அடுத்தகட்டமாகச் செல்ல பெற்றோரும், எந்த ஆசிரியரும் அனுமதிப்பதில்லை. அவன் விருப்பங்கள் பின்தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அவனின் குழந்தைமையை பள்ளியும் பாடத் திட்டமும் பிள்ளையின் எதிர்காலம் என்று சொல்லி பெற்றோரும் காவு வாங்குகிறார்கள். யார் தேவா போன்ற குழந்தையின் ஆசையைக் கண்டுகொள்ளப் போகிறார்கள் என்பதை கதையின் மூலமாகக் கேள்வி கேட்கிறார் ஆயிசா இரா.நடராசன். ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாசிக்க வேண்டிய நூல்.


வாழ்த்துகள் தோழர்.


❣️


Friday, 13 February 2026

ரோலக்ஸ் வாட்ச் #சரவணன் சந்திரன்

 


ரோலக்ஸ் வாட்ச்
நாவல்
சரவணன் சந்திரன்
உயிர்மை பதிப்பகம்
பக்கம் 160
விலை 150
மார்ச் 2016 பதிப்பு

நட்பு காதல் கொலை குரூரம் இயல்புத்தனம் துரோகம் என எல்லாம் உண்டு இந்நாவலில். கதாசிரியர் தான் நாயகன். வலிந்து திணிக்கப்படாத பாதை வழியே கதை நகர்கிறது. என்ன கதை என்பது சுவாரஸ்யம். ஒவ்வொரு பகுதியும் ஒரு சிறுகதைதான். எங்கிருந்தும் தொடங்கலாம். சரவணன் மற்றும் கதை கூறுபவன், அவன் தோழி, தோழியின் தோழி, ஜோதிடர் சுந்தர் எனச் சில பாத்திரங்கள் முக்கியமானவை. பிற எல்லாம் வந்து போகின்றன. எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் இருக்கிறது. சரவணன், கதை சொல்பவனுக்கு வாழ்வில் பல உதவிகள் செய்பவன். செய்தவன். ஆனால் கதை சொல்பவனுக்கு ஒரு தனி உலகம். காலமெல்லாம் சரவணனின் கையைப் பிடித்து நடக்க தன்னால் இயலாது என்னும் உறுதி கொண்டவன். அவனிடம் அதனை நேராகச் சொல்லும் தைரியம் அற்றவன். கோழை என்றில்லை. அது கதாசிரியன் சுபாவம். இவர்களுக்கு ஒரு நண்பர் குழாம். அதில் ஒருத்தி திவ்யா. அவளோடு அன்பு காதல் காமம் எல்லாம். அவள் திருமணம் முடித்தவள். அவளோடு ஒரு வாழ்க்கை. வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்கள் செல்ல சில தகிடுதத்தங்கள் செய்து கதை சொல்பவன் மேலே வருகிறான். வெளிநாடு செல்கிறான். தனியாக அறை எடுக்கிறான். அங்கு பெண்களோடு உல்லாசித்துத் திரிகிறான். பணம் சேர்க்கிறான். ஒரு மனிதனுக்கான கூறுகள் இப்படி இருப்பதில்லையே என நினைக்கும்போது மனிதன் என்பவன் இப்படியும் இருக்கிறான் எனச் சொல்ல, இப்படித்தான் இருக்கிறான் எனச் சொல்ல பல பாதைகளை கதை வழியே சொல்கிறார் நாவலாசிரியர். கதை சொல்லுதலில் இப்படியும் ஓர் உத்தி எனக் காண்பித்து உள்ளார். டயரி எழுதுவது போலுள்ளது என்று கூறி ஒதுக்கி விடாத வண்ணம் எழுத்து நடை அமைந்துள்ளது சிறப்பு. பிடித்தது எனச் சொல்ல நான் கண்ட மனிதரில் கதாசிரியன் போன்ற நபர்களைக் கண்டுள்ளதும் காரணமாக இருக்கலாம். மனிதன் செய்யும் பண அரசியல் எப்படியெல்லாம் இருக்கும் என்றெல்லாம் ஆங்காங்கே வருகிறது. கதையும் முடிச்சும் இதுதான் எனச் சொல்ல வாய்ப்பில்லை. வாசித்தால் தான் அதை உணர முடியும் எனச் சொல்லும் நாவல். வாசிக்கலாம் தாராளமாக.

யாழ் தண்விகா 


❣️

போன்சாய் மரங்களுக்கு நீர் வார்ப்பவள்

 


போன்சாய் மரங்களுக்கு நீர் வார்ப்பவள்

செ. கார்த்திகா 

பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வெளியீடு

பக்கங்கள் 72

விலை ரூ.90


இறகென இருத்தல் தொகுப்பிற்குப் பின்னான இரண்டாவது தொகுப்பு தோழர் கார்த்திகாவிற்கு. ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் விளையாட்டு வீரன் கொண்டாடப்படுவான். போலவே கார்த்திகா அவர்களின் கவிதைத் தொகுப்பு இரண்டும் இரண்டு ஆட்டம் தான். இரண்டும் சிறப்பாக கொண்டாடப்படவேண்டியவை. ஒவ்வொரு கவிதையும் கொண்டாடப்படுவதற்கான பலப்பல காரணங்களை உள்ளடக்கியவை என்பது கூடுதல் சிறப்பு. 


குருவி தலையில் பனங்காய் என்பார்களே அப்படி மிகக் கனமான பொருண்மையைக்கொண்ட தோழர் கார்த்திகாவின் கவிதைகள் இத்தொகுப்பிலும் நிறைய இடம்பெற்றுள்ளது. முதல் கவிதையின் சாரம், திருமணம் முடித்த தம்பதியினரிடம் முன்வைக்கப்படும் கேள்விதான். ஏதும் விசேசமில்லையா என்ற கேள்வியை எதிர்கொள்ள திருமணம் முடித்து குழந்தைக்காக காத்திருப்பவர்கள் யாரும் விரும்புவதில்லை தான். ஆனால் அதைக் கேட்க எல்லோரும் விரும்புகிறார்கள். எதிர்மறை பதிலைக் கைக்கொண்டவள் என்ன செய்வாள்? அவளுக்கென்ன இப்படிப்பட்ட கேள்விகளை எதிர்கொள்ள ஆசையா? இருக்காதுதானே? அவளுக்குள் உண்டாகும் ஏக்கங்கள், ஏமாற்றங்கள் எல்லாம் கொஞ்சமல்ல. அதைக் கவிதையில் கொண்டுவருகிறார் இவ்வாறு.

“ஏதும் விசேசமா?

எப்போதும் ஒலிக்கும் ஒரே கேள்விக்கு

வெவ்வேறு பதில்களை உருவாக்குவதே

வாடிக்கையான அவளுக்கு 

குளியலறைத் தரையில் 

நீரோடு போகிற

தீட்டுத்துளியின் நகர்தலும்

ஒரு குழந்தை தவழ்வதையே 

நினைவூட்டுகிறது”

கவிதையின் முடிவிலுள்ள இரு வரிகளும் கண்முன்னே கைவிட்டுப் போகும் குழந்தையை காட்சியாக விரியச் செய்கின்றன.


காலத்தின் கைகளில் அகப்பட்ட பொம்மைகள் நாம். காலத்தின் வீரியம் என்பது திட்டமிடப்படாத சில செயல்கள் அரங்கேறும்போது புரிகிறது. அப்படிக் கவிதைகளாக 20, 21 ஆகிய பக்கங்களில். உப்புமா என்பது விருப்பமற்ற உணவு என்பது பொதுப்புத்தியில் ஏற்றிவைக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. ஆனால் அதனை ஏற்கும் பொழுது என்பது எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை 

“நேரமில்லை

அதீத அசதி

வேலை மிகுதி

ஏதாவது ஒரு காரணத்தில்தான்

இரவு உணவாக

உப்புமா ஒருமனதாகத்

தேர்ந்தெடுக்கப்படுகிறது” வாசித்தலின் பின்னர் உப்புமாவை ஏற்கும் பக்குவம் மனதிற்குள் பூக்கத் தொடங்குகிறது. உப்புமா செய்யும் நபரின் மனநிலைக்குள், அவரின் உடலுக்குள் நாமும் புகுந்து கொண்டு உப்புமாவை நேசிக்கும் மனநிலைக்கு வந்துவிடுகிறோம்.


“உறவினர் குழந்தையின்

எதிர்பாரா துர்மரணத்திற்குப் பின்

இரண்டாவது குழந்தை 

பெற்றுக்கொள்வதென

முடிவாகிறது” பாடம் என்பது நம்மிலிருந்து கற்றுக்கொள்வது, பிறரிடமிருந்து கற்றுக்கொள்வது என்று இருக்கிறது. இக்கவிதையின் பாடம், ஒரு பதட்டத்தில் பிறக்கிறது. எதிர்பாராத துர்மரணம் என்பது நிலைகுலையச் செய்துவிடும். அது உண்டாக்கும் எண்ணம் தான் இக்கவிதை.


திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் எழுதிய கவிதையொன்றில், ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம் இரண்டு குடம் தண்ணி ஊத்தி இரண்டு பூ பூத்துச்சாம் என்று விளையாடிய சிறுமியை அவளுடைய தாயார் அழைக்கிறாள். இந்தச் சிறுமியும் அம்மாவின் பேச்சைக் கேட்டு விரைகிறாள். பூங்கா அமைக்கும் பணி பாதியிலேயே நின்று போனது என்று முடியும் அக்கவிதை. அது போலவே தோழர் கார்த்திகா,

“விடுமுறைக்கு வந்திருந்த பவனிக்குட்டி

ஒருகுடம் தண்ணி ஊத்தி

ஒரு பூ பூத்துச்சாம்

என தூக்கத்தில் உளறிய இரவொன்றில்

அறையெங்கும் பூக்களானது

பள்ளித் திறப்பிற்குப்பின்

எத்தனை குடம் தண்ணீர் ஊற்றியும்

ஒரு பூ கூட இங்கு பூப்பதேயில்லை” என்கிறார். குழந்தைமையைத் தொலைக்க வைக்கும் வன்மத்தில் இன்றைய பள்ளிக்கல்வி இருக்கிறது என்பதை உணர்த்துகிறது கவிதை.


ஆம்பளை அழக்கூடாது என்று சொல்லி வைத்திருக்கும் சமூகம் இது. பெண்களுக்கு அழும் சுதந்திரம் கூட மறுக்கப்படும் இடங்கள் உண்டு. சில இடங்களில் அழுபவரை ஆசை தீர அழச் சொல்லுதலும் உண்டு. அழுகை என்பது வலியை நீராக்கி மன பாரம் குறைத்தல்தானே தவிர வேறென்ன?

“அழுமூஞ்சியென 

யாரையும் அடையாளப்படுத்தாதீர்கள். 

எல்லோருக்கும் வாய்ப்பதில்லை

பெருங்குரலெடுத்து அழும் வாய்ப்பு” 

இக்கவிதைக்குப் பின்னர் அழுதலின்மீது பெரும் ஆர்வமமே வந்துவிட்டது. தொகுப்பெங்கும் இப்படிப் பல கவிதைகள். அகச்சிக்கல்கள் குறித்து பேசுகின்றன. மனதிற்கு நெருக்கான இக்கவிதைகளை எல்லோரும் வாசியுங்கள். கொண்டாடுங்கள்.


வாழ்த்துகள் தோழர்

யாழ் தண்விகா

கருப்பும் காவியும் #சுப.வீரபாண்டியன்

 



கருப்பும் காவியும்

சுப.வீரபாண்டியன்

கருஞ்சட்டைப் பதிப்பகம்

விலை ரூ.110

பக்கங்கள் 120


சமகாலத் தேவை கருப்பு


நாடெங்கும் பாசிச சக்திகளின் ஆதிக்கம் வளர்ந்துவரும் சூழலில் கருப்பும் காவியும் என்ற நூலானது வாசிப்பிற்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதில் ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் உள்ள மோதலுக்கான மூல காரணம், ஆரியம் எப்படியெல்லாம் இண்டு இடுக்குகளில் தன்னுடைய வேர்களைப் பதிக்கிறது, அது களையப்படவேண்டியதன் கட்டாயத்தை பல்வேறு தரவுகள் மூலம் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். ஒரு நூற்றாண்டு அரசியலை எளிமையாக வாசித்தறியலாம். மண்டைக்காடு, மீனாட்சிபுரம் உள்ளிட்ட கலவரங்கள் மூலம் இங்கு கால் பதிக்க சமயம் பார்த்திருந்த மதத் தீவிரவாதம் நீர்த்துப் போவதற்கு தமிழகத்தில் பரவிக் காணப்படும் கருப்பு சித்தாந்தம் தான் காரணம். இங்கு ஒரு சிக்கல் இருக்கிறது. தான் ஓர் ஆத்திகன் என்று சொல்லும் துணிச்சல் உள்ளவர்களைப் பார்க்க முடிகிறது. ஆனால் நாத்திகன் என்று சொல்லும் நபர்களை விரல்விட்டு எண்ணும் நிலையில்தான் இருக்கிறோம். அதற்குக் காரணம் ஒன்று. ஆத்திக ஆதரவாளர்கள் என்ற கூட்டத்தினை சனாதனத்தை வளர்க்க விரும்பும் தலைமை உருவாக்கும். அதனை மூலதனமாக்கி மக்களை முட்டாளாக்கி தனக்கான பலன்களை அறுவடை செய்யத் தொடங்குகிறது சனாதனத் தலைமை. தன்னுடைய தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுவருகிறோம் என்பதைக்கூட அறியாதபடி தன்னுடைய செயல்திட்டங்களைச் செயல்படுத்த அடிமைக்கூட்டத்தை  உருவாக்குகிறது. இரண்டு. நாத்திகத்தை ஊன்றிச் சொல்வதற்கும், வருணாசிரமத்தை இங்கு திணிக்க ஆத்திகம் என்ற பெயரில் நடைபெறும் ஆபத்தான அரசியலையும் பேசுவதற்கு ஆத்திக ஆதரவிற்கு மேல் காரணங்கள் இருப்பினும் அதனைச் சொல்வதற்கான தரவுகளை அறியாமல் இருப்பது தான். இந்நூல் தரவுகள் பலவற்றை எடுத்துச் சொல்கிறது. ஆரம்ப நிலை வாசகர்களுக்கு இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் எளிதில் சென்று சேரும். திராவிடத்தைப் பரப்பவும் துணை நிற்கும். டாக்டர் ராதாகிருஷ்ணன் இந்து மதம் சார்பாக கூறியுள்ள கருத்துக்கள், பசு பாதுகாப்பு அமைப்பிடம் சுவாமி விவேகானந்தர் பேசிய உரையாடல் உள்ளிட்ட தகவல்கள் முக்கியமானவை.


வாசிக்கவேண்டிய நூல்.


யாழ் தண்விகா

புளிக்கும் வெயில் #ராம்போ குமார்

 






















புளிக்கும் வெயில்
ராம்போ குமார்
Rambo Kumar 
வேரல் புக்ஸ்
96 பக்கங்கள் 
100 ரூபாய்

ஒரு நாயகன் உருவாகிறான்...
(சிஸ்டம் சரியாகிவிட்டது தல)
எந்த உலகத்தில் என்றும் தொக்கி நிற்கும் கேள்விக்கு கவிதை உலகத்தில் என்று பதில் அளிக்கலாம். தோழர் ராம்போ குமார் தன்னுடைய தனித்துவமிக்க நடிப்பால், பேச்சால் மனம் கவர்ந்தவர். இப்போது கவிதையிலும். தொகுப்பின் முதல் கவிதையை அதற்கு அச்சாரமாகக் கூறலாம்.
“என்னிடம் ஒரு ஆழ்ந்த கல்லறைக்குண்டான
சிறு அமைதி இருந்தது
காற்றின் காமம் பசி தீர்க்கும்
புல்லாங்குழலின் சில துளைகள்
பருக முடியா ஆதி நிலத்தின் வழிந்த ஈரத்தின் மிச்சம் 
பழைய சொற்களின் புழுக்கம் கொஞ்சம்
குகை இருட்டின் முகம் 
ஒன்றுகூட இருந்ததாய் ஞாபகம்
அத்தனையும் நழுவிக்கொண்டிருக்கிறது
முதல் மாத சம்பளம் எண்ணிக்கொண்டிருக்கும்
எனது விரல்களின் வழியே..” எனத் தொடங்கும் கவிதையின் சொற்களில் கருவைக் காண்பதா... இவ்வளவு நாள் கண்ட கவியின் புதிய முகத்தைக் காண்பதா... சந்தோஷ மிரட்சி. 

ஒரு கவிதையில் 
“பசி ஒன்றும் பெரிய வலியில்லை
அதனூடே தோன்றும்
கவிதைதான்...” கொஞ்சம் நீள்கிறது முற்றுப்பெறாமல். கவிஞனின் பசியா? பசியை எழுதப் போகும் கவிதையின் தீவிரமா? என்ற கேள்வியின் முன்னாள் எனக்கென்னமோ பசியை எழுதும் கவிதையின் ஆத்திரம் மிகு சொற்களின் தீச்சுவாலை அதிகமாக இருக்கும்போல் உணரமுடிகிறது. இன்னொரு கவிதையில்
“முன்னிரவு காமத்தைப் 
பின்னிரவுக்கு 
ஒத்தி வைக்கிறது
ஒரு நல்ல கவிதை” என்னும்போது கவிதை என்ன செய்யும் என்ற கேள்விக்குப் பதில் கிடைத்துவிடுகிறது. மேலும் கவிதை காமத்தை ஒத்தி வைக்கிறதாகக் கூறும் தன்மையிலிருந்து கவிதை எதையும் செய்யும் என்பதையும் அழகாகக் கூறிவிடுகிறது.

“அப்பத்தாவுக்குத் தங்கமுத்து மாரியம்மன்
தாத்தாவுக்குச் சுடலைசாமி
எங்க ஆச்சிக்கு முப்பிடாதி அம்மன்...
மேலத்தெரு மாமாவுக்குக் கருப்பண்ணசாமி
அத்தைக்குக்கூடச் செல்லத்தம்மன்னு கேள்வி...
கொடைக்குக்கொடை
கூட்டத்திற்குள்ளேயே ஆடிக்கொண்டிருக்கும்
சாமி கொண்டாடிகள்,
இதுவரை 
சன்னதம் சொன்னதேயில்லை தனிமையில்”
கிராமத்துச் சாமிகளின் அருளேறி ஆடும் மனிதர்கள் கண்முன்னே வருகிறார்கள். அவர்களின் ஆங்காரக் கூச்சல் காதுகளில் ஒலிக்கத் தொடங்குகிறது. திருவிழாக்கூட்டம் கிறங்க வைக்கிறது. ஊரே அருள் வந்து நிற்க, நாக்கைக் கடித்து அரிவாள் ஏறும் ஆண்கள், இருக்கும் இடம் தெரியாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் பெண்கள் மேல் அருள் வந்து ஆடும் சாமிகள் குறித்து திருவிழா கடந்தபின் நினைக்க என்ன இருக்கும்? அதனைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார் கவிஞர். “இதுவரை சன்னதம் சொன்னதேயில்லை தனிமையில்...” சாமி கொண்டாடிகளிடம் கேட்கவேண்டும்தான்.

கொஞ்சம் கொஞ்சம் அன்பைக் கொஞ்சும் கவிதைகள் நட்சத்திரங்கள் போல ஆங்காங்கே மின்னிக்கொண்டிருக்கின்றன. யாரந்த யாழினி என்ற கேள்விக்குப் பின்னால் ஓடத் தொடங்குகிறது வாசிக்கும் பார்வை.
“உன்னை அகம் தள்ளியபின்
புறவெளியில் 
எதைத்தேடப்போகிறேன் யாழினி”
“வலது ஆரிக்களிலும்
இடது ஆரிக்களிலும்
சமமாக நின்றுதொலை 
யாழினி
அவ்வப்போது சரிந்து விடுகிறதென்
இதயம்” 
“இன்னும் வேகமாக
வீசியெறி உன் சொற்களை
நான் இன்னுமொரு 
கவிதை செய்யவேண்டும்”
கவிதை ஊரில் காதல் வழிச் சாலையிலும் சிறப்பானதொரு பயணம் மேற்கொள்ள வாழ்த்துகள்...

“ஒரு பச்சிலையின் 
கணம் தாங்கும் கிளைகளுக்கு
ஒரு சருகின் கணம் 
தாங்க முடிவதில்லை”
வாசிக்க வாசிக்க தந்த காட்சி முடியவில்லை. சருகு என்பது அத்தனை சாதாரணமானதாக இருக்க முடியாது. அதன் கணம் குறித்து எழுந்த கேள்விகளுக்குள் பச்சிலை வாழ்ந்த வாழ்க்கையை உணர்த்தும் வரிகள் அபாரமான வெளிப்பாடு.

எல்லாவற்றிலும் நேரம் காலம் பார்த்து செயல்படும் அச்சம்பத்து என்னும் ஊரைச் சேர்ந்த மாமா பற்றிய கவிதை...
...
“அச்சம்பத்து விபத்தில்
மாமா இறந்துபோன அன்று,
நாட்காட்டியில் அவரின்
விருச்சிக ராசிக்கு
நம்பிக்கை என்றுதான் இருந்தது...” காலம் என்னென்ன மாய வித்தைகள் செய்யும் என்பதை காலம் மட்டுமே அறியும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு ஈடுபாடு, ஒரு வழி. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேடமிட்டுத் திரிக்கிறோம். ஆனால் அந்திமக் காலமாகட்டும், உயிர் போகும் தருணமாகட்டும், மனிதன் மகிழ்வோடு இந்த உலகைத் துறக்கத் தயாராகிவிடுகிறானா என்றாள் இல்லை. காலம் நமது அபிலாசைகளையெல்லாம் பூர்த்தி செய்து வைக்கிறதா என்றால் இல்லை. அக்கணம், நாமெல்லாம் சாதாரண மனிதர்கள் மட்டுமே என்பதை உணர்த்தும் கவிதை.

“இரு நீலங்களுக்கு மத்தியில் 
பறந்துவந்த பறவையொன்று
என் ஜன்னலில் வந்தமர்கிறது
அதன்மேனியில்
தாய்மண் வாசத்தை
நுகரத் தெரிந்த 
அந்தப் பெயர் தெரியா பறவை 
மிச்சமிருக்கும் தன் நிலத்தை
எனக்குக் கடத்துகிறது
தன் கண்களின் வழி”
கவிஞன் என்பவனின் பார்வை உன்னதப்படும் இடம் என்பது உலகின் எல்லாவுயிர்களிடத்தில் காட்டும் இடம் மட்டுமே. அவனின் ஆக்ரோசமும் மனிதம் சார்ந்திருக்கும். மௌனமும் மனிதம் சார்ந்திருக்கும். அன்பு அவன் இயல்பாகயிருக்கும். பெயர் தெரியாத அந்தப் பறவையின் வலியைக் கண்கள் வழியாகக் காணும் ராம்போ குமார் என்னும் தோழர்-கவிஞர் இயல்பாகவே சமூகப் பார்வையுடன் பயணிப்பவர். அதனை அச்சு வடிவில், கவிதை உருவில் வெளிக்கொணர்ந்துள்ளார். சொல்ல இன்னும் பல கவிதைகளுண்டு. வாசியுங்கள். பன்முகத் திறன் கொண்ட தோழர் ராம்போ குமார் இன்னும் பல உயரங்கள் கவிதை உலகிலும் தொட வாழ்த்துகிறேன்.

யாழ் தண்விகா