Friday, 20 February 2026

சிலேட்டுக்குச்சி #ச.க.முத்துக்கண்ணன்


 #சிலேட்டுக்குச்சி 

கட்டுரைத்தொகுப்பு 

#சக_முத்துக்கண்ணன் 


பாரதி புத்தகாலயம் வெளியீடு

விலை ரூ 110/-


Muthukannan Muthukannan


பள்ளியில் பயின்ற காலத்திலிருந்து பள்ளியில் பணியாற்றும் காலம் வரை தான் வாழ்ந்த வாழ்க்கையில் பல பக்கங்களை நம் கண்முன் படர்த்தி வைத்திருக்கிறார் ஆசிரியர். அரசுப் பள்ளி ஆசிரியர் என்றாலே இளக்காரம் தான். ஆனால் அரசுப் பள்ளிக்கு வரும் குழந்தைகள் என்ன மனநிலையில் வருவார்கள்? அவர்களின் வாழ்க்கைச் சூழல் எப்படி இருக்கும்? அவர்களுக்கான கல்வி எத்தகையதாக நாம் அளிக்க வேண்டும்? அக்குழந்தைகளின் பெற்றோர்கள் இடத்தில் நாம் என்ன வகையான உறவு நிலையைப் பேண வேண்டும்? அக்குழந்தைகளை நாம் எவ்வாறு கையாள வேண்டும்? அக்குழந்தைகளுக்கு என்ன விதமான கல்வி பிடிக்கும்? என்பதையெல்லாம் தன்னுடைய கட்டுரையில் கதைகளை கூறுவதைப் போல அழகாக எடுத்து வைத்திருக்கிறார் ஆசிரியர். கட்டுரைகளைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு கட்டுரையும் ஒரு அனுபவத்தைச் சொல்லுகிறது. ஒவ்வொரு கட்டுரையும் ஏதோ ஒரு இடத்தில் மனதைக் காயம் செய்கிறது. அரசுப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளைக் கூறுவதுபோல பல அனுபவங்கள் எழுத்துக்களில் கொட்டிக்கிடக்கிறது. எழுத்தாளரும் சமூகச் செயல்பாட்டாளருமான தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் அணிந்துரை அழகு.


ஆசிரியர் அடித்ததால் மனோஜ் என்ற மாணவனுக்கு சொல்லக் கூடாத இடத்தில் வலி அதிகரித்ததாக கூறுகிறான். படிக்கவில்லை என்பதற்காக அடித்தது இப்படி ஆகும் என்று ஆசிரியர் நினைத்திருக்க மாட்டார். பள்ளியில் நடந்த சம்பவம் வீட்டில், மறுநாள் பயிற்சிக்கு செல்லும் இடத்தில் மனதின் நிம்மதியைக் கலைத்த படியே இருக்க, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவன் எப்படி இருக்கிறான் எனக் கேட்கும் ஆசிரியரின் மனநிலையில் அவர் அடித்தது தவறா என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் அந்தக் காயம் அந்த மாணவனை விட்டுச்செல்லும் வரை ஒரு தாயாக தந்தையாக ஆசிரியர் காட்டும் கரிசனம் ஒவ்வொரு ஆசிரியருக்கும் இருக்க வேண்டும். பள்ளியில் ஓடி விளையாடும் ஒரு சிறுவன் தவறி விழுந்தான் என்றாலும் அதனை வீட்டிற்குத் தெரியப்படுத்தும் பொழுது அதைக் கேள்விப்பட்டு ஓடிவரும் பெற்றோர் தன்னுடைய கோபத்தை முதலில் காட்டுமிடம் ஆசிரியர்தான். ஆனால் காயம் பட்ட குழந்தையிடம் அந்த நேரத்தில் ரத்தம் வழியும் இடம் எதுவானாலும் அவ்விடத்தைக் கழுவி மேலும் ரத்தம் வடிந்துகொண்டிருப்பின் உடனே மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று காயத்தின் மேல் கட்டுப் போட வைத்து ஊசியினை போடச்செய்து மாத்திரையை வாங்கிக் கொடுத்து தேநீரின் உதவியுடன் அதை குடிக்கச் செய்து பெற்றோர்கள் வந்தவுடன் அவர்களிடம் நிலவரத்தைச் சொல்லி அந்தக் குழந்தையை ஒப்படைக்கும் வரை ஓர் ஆசிரியர் அனுபவிக்கும் அவஸ்தை ஒரு தந்தைக்கும் மேலானது தாய்க்கும் மேலானது. ஆனால் இங்கு மனோஜ் வேறுபட்டு வேறு மாதிரி பயமுறுத்துகிறான். பாவம்டா வாத்தியார்...


ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு பள்ளியிலும் பட்டப்பெயர்கள் மாணவர்கள் சூட்டி இருப்பார்கள். அரசனுக்கு பட்டங்களை சூடுவதைப் போல இது இல்லை. ஒவ்வொரு ஆசிரியரின் உருவத்தைப் பொறுத்து, அவருடைய பாடம் நடத்தும் தன்மையைப் பொறுத்து, அவரின் குணத்தைப் பொறுத்து, அவர் அளிக்கும் தண்டனையைப் பொறுத்து இந்த பட்டப்பெயர்கள் ஆசிரியர்களுக்கு மாறுபடும். அதனைக் குறித்தும் ஒரு கட்டுரை இருக்கிறது அதற்குள் தேடிப் பாருங்கள். உங்களுக்கான பட்டப் பெயரும் கூட ஒளிந்திருக்கலாம்.


பன்னீர் சார் கொஞ்சம் நாசூக்கானவர். ராமரய்யா குழந்தையாக மனநிலையில் வகுப்பு எடுப்பவர். அவரிடம் அன்பு காட்டும் குழந்தைகளாக நாம் மாறுவதா அல்லது ராமரய்யாவாக மாறுவதா... ராமரய்யாவின் நண்பராக, சக ஆசிரியராக முருகன் சார். இருவருக்கும் இடையில் உள்ள நட்பு - அந்த நட்பு வகுப்பறைக்குள் எப்படி இருக்கிறது, அந்த நட்பால் அந்த வகுப்பு எப்படி கலகலப்பாக மாறுகிறது, அவர்கள் குழந்தைகளிடம் எப்படிப் பழகுகிறார்கள் அந்த அன்னியோன்யம் எத்தனை குழந்தைகளுக்குக் கிடைத்துவிடும்... 


டீச்சர் ஒண்ணுக்கு என்ற கட்டுரையில் வரும் "அந்த வகுப்பில் இருந்து டீச்சர்ஸ் பாத்ரூம் வரையிலான தூரம் என்பது தேச அவமானத்தின் நீளம்" என்ற வார்த்தை வெறும் வார்த்தை மட்டுமல்ல, அது அரசுப்பள்ளியில், தனியார் பள்ளிகளில் இந்தக் காலமும் பல இடங்களில் நடந்து வரும் கழிப்பறை இல்லாத அவலம் சுட்டப்படும் இடம்.


டியூசன் எடுக்கும் சாந்தி அக்கா ஒவ்வொரு ஊரிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடம் மாணவர்கள் காட்டும் அன்பு இன்னும் கொஞ்சம் நெருக்கமானது. ஆசிரியரின் வாசிப்பு அனுபவம் எந்த அளவிற்கு அதிகம் இருந்தால் ஒரு வகுப்பறையை அழகாகக் கொண்டு செல்லலாம் என்பதற்கு நூலாசிரியர் அவர்களின் பிரபஞ்சன், வண்ணதாசன் உள்ளிட்ட ஆளுமைகளின் கதைகளை வாசித்து அவற்றை மாணவர்களிடமும் கொண்டு செல்லுதலும் சிறப்பான ஒரு வழிகாட்டலாகக் கொள்ளலாம். 


ஒவ்வொரு குழந்தைகளுக்கும் குழந்தைப் பருவத்தில், உள்ள ஆசை என்பது பெற்றோர்களால் திணிக்கப்படாத பொழுது உள்ள ஆசை நிச்சயமாக எதிர்காலத்தில் அவர்கள் கூறுவதைக் காட்டிலும் வேறு மாதிரியாகத்தான் இருக்கும். அதை ஒரு கட்டுரை அலசுகிறது. 


யானை என்ற கட்டுரையில் முற்போக்கு இருக்கிறது, பக்தி இருக்கிறது, எல்லாவற்றிற்கும் மேலாக மத நல்லிணக்கம் இருக்கிறது. முடிப்பு அருமை பல கட்டுரைகள் போல இதிலும்.

வீட்டுப்பாடம் என்ற தண்டனை யதார்த்த கட்டுரை. குடிகாரத் தந்தைகளால் சீரழியும் குழந்தைகள் பாடு பரிதாபம்.


முழு ஆண்டுத் தேர்வு முடிந்தவுடன் ஒவ்வொரு மாணவனும் ஒரு காலத்தில் அதனை ஒரு கொண்டாட்ட காலமாக வாழ்ந்திருப்பான். நேரத்திற்கு உணவு இல்லை என்ற போதிலும், வீட்டில் அம்மா அப்பா இருவரும் வேலைக்குச் சென்ற பொழுதிலும், வெயில் வாட்டி எடுக்கும் பொழுதிலும், பக்கத்து வீட்டு நண்பர்கள் ஊருக்குச் சென்ற பொழுதிலும், திருவிழாக்கள் வரும் அந்த காலகட்டத்தில் கடன் வாங்கித் துணிகளை உடுத்தும் பொழுதிலும் இருந்த சந்தோசம் இன்று கோடை விடுமுறைகளில் தனித் திறனை வளர்ப்பதற்காக வகுப்புகளை உருவாக்கி வைத்திருப்பவர்களிடம் குழந்தைகளை தள்ளிவிடும் மனப்போக்கு வளர்ந்து வருகிறது. கொரோனா காலத்தில் உயிர் குறித்த பயம் ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருந்தாலும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பணம் பறிக்கும் வேலையும், குழந்தைகளை அலைபேசியின் முன்னால் அமர வைக்கும் போக்கும் அதிகரித்து வருவது கண்கூடு. கடைசிக் கட்டுரையான அவன விட்ருங்க பாஸ் என்ற கட்டுரையில் கடைசிப்பத்தி "கோடை அழகாகத் தெரியும். ஏனெனில் அவர்களைப் பொறுத்த மட்டிலும் இதுதான் நிழல் மாதம்" இதுதான் மாணவன். ஆயிரம் பொருள் பொதிந்த வார்த்தைகள்.


உளவியல் ரீதியாக மாணவனை அணுகும் வித்தையைக் கட்டுரைத் தொகுப்பு என்ற பெயரில் சிறு சிறு சம்பவங்களைச் சிறுகதை போல அழகாக, உயிரில் பதியும் வண்ணம் எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர் சக.முத்துக்கண்ணன். வாசியுங்கள் நான் சொன்னதை விட பலப்பல வாசிப்பனுபவம் கிட்டும் உங்களுக்கும்.


நானும் ஓர் ஆசிரியர் என்ற முறையில், தேனி மாவட்டம் என்ற முறையிலும் தோள்களில் கை போட்டு மகிழ்வைத் தெரியப்படுத்திக்கொள்கிறேன் நிறைய நிறைய...


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா

மழை முத்தம் #தனலட்சுமி பாஸ்கரன்

 


மழை முத்தம்' 

கவிதை நூல் 

- கவிஞர் யாழ் தண்விகா  


(விமர்சனம் கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன், திருச்சி)


தலைப்புக்குப் பொருத்தமாய் கவிஞரின் மழை நாளில் முகிழ்க்கும் காதல் உணர்வுகள் கவிதைக் களத்தை ஈரப் பதமாகவே வைத்திருக்கின்றன . எல்லோர் வாழ்விலும் வந்து போகும் யவனப் பருவம் . யவனத்தைக் காதலோடு கடக்காத மனிதரே இல்லை. சிலரது காதல் வெல்லும், சில தோற்கும், சில ஒருதலைக் காதலாகவே,. 

 காதல் திருமணத்தில் முடியலாம், முடியாமலும் போகலாம் . எந்த நொடியில் எப்போது, எப்படி வரும் என்றே சொல்லமுடியாதது காதல். காதல் உணர்வு தோன்றிவிட்டால் உலகமே சொர்க்கமாகி விடுகிறது! காதல் இள மனங்களை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது, ஆட்டிவைக்கிறது என்பதை யாழ் தண்விகாவின் ஒவ்வொரு கவிதை வரிகளும் உயிர்ப்போடு சொல்கிறது . இளம்பருவத்தினர் கையில் இந்த புத்தகம் கிடைத்தால் போதும். காதல் உணர்வுகள் இல்லாதவர் மனத்திலும் காதல் உணர்வுகள் கொப்பளித்து ,பட்டாம்பூச்சியை சிறகடிக்கத் தொடங்கி விடும் என்பது தான் இத்தொகுப்பின் சிறப்பம்சம் என்பேன் .


        "யார் தூண்டில் ? /யார் மீன் ?/ யார் யாரை/உண்ணுகிறோம் ?" கேள்வியில் போட்டிபோடுகிறது, காதலும், காமமும் .


"நிறம் தந்து கரையும்/பஞ்சு மிட்டாய்போல /காதல் நிறுத்திப் பசியாற்றுகிறது / நீயூட்டும் உணவு! ..."/ 

ஒன்று வயிற்றுப் பசி, இன்னொன்று உடற்பசி என்பதை பூடகமாய்ச் சொல்லும் வரிகள் ரசமானவை !


‘பார்த்த இடத்திலெல்லாம் நீதானே கண்ணம்மா!’ - காதலைக் கொண்டாடும் பாரதியின் பதிவு! தோற்ற மயக்கங்களைப் பாடியவனின் தோற்றமும்கூட மயக்கம்தான். அகநானூறு படைத்த சங்கத் தமிழ் சமுதாயத்தின் நாத வேர் - காதல். காதலைக் கொண்டாடுவதில் பாரதியொன்றும் விதிவிலக்கல்ல. 


“காமத்தின் திரி/ எங்கெங்கு என்று தெரிந்திருக்கிறது/ உன் மோகத்திற்கு"

“வியர்வைக் காம்புகள்/ அனைத்துமே/ வாகைப் பூக்கள் ..மிகச் சிறப்பு . துளிர்க்கும் வியர்வைத் துளிகள் ஒவ்வொன்றும் வெற்றி வாகை சூடிய வாகைப்பூக்கள் என்ற வரிகள் காதலின் உச்சம்.


“அந்த நேரத்து / உன் மூர்க்கத்தனங்களுக்கு /கொஞ்சமும் எதிர்பேச்சு பேசுவதில்லை நான்"/

      இந்த வரிகளில் ஒரு பெண்ணை தன்னிலை மாறாது தன்னிலையில் தக்க வைத்துக்கொள்வதில் இருக்கிறது ஒரு ஆணுடைய காதல் என்பதைக் காட்டுகிறது. ஒவ்வோர் ஆண் மனதுக்குள்ளும் ஒரு பெண்பிம்பம் அவரவர் ரசனைக்கேற்ப செதுக்கப்பட்டிருக்கும். அதற்கு பெயர் இருக்காது உருவம் இருக்காது. ஆனால், அதற்கான இருப்பு ஒரு பெண் கை கோத்திரும் நிலையைக் கொண்டிருக்கும் 

காதலுக்கு அளவீடென்று எதுவுமில்லை; ஒருவர் மீதான விருப்பத்துக்கு அளவென்று அனுமானித்து "என்னை உனக்கு எவ்ளோ பிடிக்கும்" என்று கேட்பது பேரபத்தம். கவி.யாழ் தண்விகாவின் காதலும் அப்படிப்பட்ட அளவீடுகளைக் கடந்தது.


"பாரதிக்குக் கண்ணம்மா நீயெனக்கு உயிரம்மா" என்று ஒரு பெண்ணுக்குக்கான காதல் உயிருக்கு நிகரென்று பாரதி - கண்ணம்மாவுக்கு ஒப்பிடுகிறார் கவிஞர் அறிவுமதி. கண்ணம்மாவை பாடிய அந்த பாரதியைப்போல சமீபத்தில் கண்ணம்மாவை அழகு பூஞ்சிலையாக்கி பாடியிருந்தார் நம் யுகபாரதி. அதில் ஒரு பெண்ணின் அழகை எழுதுவதற்கு "பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான்" என்று எழுதியிருப்பார். அது அத்தனை உண்மை என்பதை காதல் சொட்டச் சொட்ட தன் கவிதைகள் முழுவதிலும் அள்ளித் தெளித்திருக்கிறார் கவிஞர். காதலர்கள் ஒருவருக்கொருவர் அன்புத் பரிசாக பரிமாறிக்கொள்ள ஏற்றதொரு புத்தகமாகஅதுவும் காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதியன்று படைத்திருப்பதில் , வெளியிட்டதில் கவிஞர் நூறு சதம் தன் எண்ணத்தில் வெற்றி கண்டிருக்கிறார் என்றே சொல்லவேண்டும் . 

காதலுக்கு வயதில்லை. கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் பரிசளிக்க உகந்த படைப்பு இது.  

நன்றி: 

கவிஞர் தனலட்சுமி பாஸ்கரன், திருச்சி

தோழர் திரு, வடுகபட்டி

ஐரோப்பிய நாடோடிக் கதைகள்


 ஐரோப்பிய நாடோடிக் கதைகள்

லெஸ்லி ப்ரூக்


தமிழில்: சரவணன் பார்த்தசாரதி


பாரதி புத்தகாலயம் வெளியீடு


4கதைகள்


நன்னெறிக் கதைகள், துணைப்பாடம் இப்படியெல்லாம் பள்ளிக் குழந்தைகள் கதைகள் மூலம் வாழ்வியலை அறிந்த காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. நல்லன தீயன குறித்தோ வாழ்வு குறித்தோ மனிதர்கள் குறித்தோ எவ்வித கருத்தும் இல்லாத தலைமுறை உருவாகிவருவது பெரும் சிக்கலை விளைவிக்கவே செய்யும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.


எளிமையான பேச்சு மொழியில் உள்ள கதைகள். நகைச்சுவையாக குட்டிப் பிள்ளைகளை பாடம் நோக்கி கவனத்தைத் திருப்ப இக்கதைகள் உதவும். தங்க வாத்து, மூன்று கரடிகள், குட்டிக் கட்டையன், ஓநாயும் மூன்று பன்றிக் குட்டிகளும். எந்தக் கதையும் எந்த கதாபாத்திரத்தையும் பகடி செய்யவில்லை. தங்க வாத்து கதை, உதவும் குணம் நமக்கு நன்மையைச் செய்யும் என்ற கருத்தை உணர்த்துகிறது. மூன்று கரடிகள் கதை, எக்கருத்தையும் சொல்லவில்லை. ஆனாலும் நன்று. குட்டிக் கட்டையன் கதை நகைச்சுவை. உருவக் கேலி இல்லை. ஓநாயும் மூன்று பன்றிக் குட்டிகளும் கதை, ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து எப்படி இந்த வாழ்வைத் தக்க வைப்பது என்பதைக் கூறுகிறது. 


வாசிக்கலாம் குழந்தையாக.

குழந்தைகளுக்காக.

குழந்தைகளோடு.


வாழ்த்துகள் தோழர்.

மூன்னா வான்னா சொன்ன இழவு வீட்டுக் கதைகள் #தோழர் புலியூர்


 மூன்னா வான்னா சாமி சொன்ன

இழவு வீட்டுக் கதைகள்

#சிறுகதைகள்


தோழர் புலியூர் முருசேசன்


குறி வெளியீடு

74 பக்கங்கள்

80/- ரூபாய்


7கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு களம். சக்லனா எனும் பனி உருண்டைக் கதை பணி நிமித்தம் குழந்தையை தாத்தா பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு வேறிடத்தில் வசிக்கும் பெற்றோர், அவர்கள் வாழ்வு குறித்து, சிறுமியின் ஆசை, வயதானோர் ஒரு குழந்தையின் ஆசையை எவ்வளவு நிறைவேற்றிட இயலும் என்பதைப் பேசுகிறது. ஒரு புது வாழ்வை அறிந்து கொள்ளக் கிட்டியது இக்கதை.


செம்போத்துவின் மாணிக்கப்பரல் நவீனம் நோக்கி நகரும் வாழ்வின் அவலங்களை குறியீடுகளாகக் காட்டுகிறது.


கழற்றி வைக்கப்பட்ட மகளின் தலை கதையானது அதிகாரம், அதற்கு கீழ்ப்படியும் ஒருவன் தொழிலாளர்களை நடத்தும் விதம் குறித்து பேசுகிறது. தலையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு முண்டமாக செய்ய வேண்டிய வேலையைத் தவிர வேறெதையும் யோசிக்க விடாத கார்ப்பரேட்தனம் குறித்தும் அதற்கு கையாளாக விளங்கும் ஒருவனுக்கு பணம் ஒன்றே பிரதானம், அதற்காக என்ன மாதிரி அவன் மாறுகிறான் என்பதை அருமையாக உணர்த்துகிறது.


பூர்வீகம் பிடுங்கப்பட்ட, அடையாளம் அழிக்கப்பட்ட குடிகளின் துயர் வாழ்வை வாழ்பவர்களால் மட்டுமே உணரமுடியும். அதனை கை விலங்கிடப்பட்ட நீல நிற ஏரி கதை உணர்த்துகிறது.


தாழம்பூ டீச்சர் கதை பணத்திற்காக மனிதர்கள் எதையும் செய்வார்கள் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது. அன்பிற்காக ஏங்கும் மனிதர்களை ஏமாற்ற அதற்காக காத்திருக்கும் மனிதர்கள் வந்து சேர்கிறார்கள். அன்பை வதம் செய்கிறார்கள். காலம் சில பல இடங்களில் வாழ்வைக் கலைத்துப் போடும் வேலையை அனாயசமாகச் செய்து முடிக்கிறது. எனக்கென்ன என்று வேடிக்கை பார்த்தோம் என்றால் வாழ்வு வாழும் அதன் விருப்பத்திற்கு. நம் வாழ்வையே நாம் வேடிக்கை பார்க்கும் அவலத்திற்கு ஆளாவோம் என்பதை அருமையாக காட்சிப் படுத்தியுள்ளது. காரைக்கால் அம்மையாராக தாழம்பூ டீச்சர் நிறைவாக இருக்கிறது. தொகுப்பில் எனக்கு மிகப் பிடித்த கதை.


தொகுப்பின் தலைப்புக் கதை, தொகுப்பெங்கும் இழவு வீட்டுக் கதைகளாக இருக்குமோ என்ற எண்ணம் தந்தது. ஆனால் அப்படி இல்லை. இறந்த கிராமத்து மனிதர்களின் வீட்டில் வைக்கப்படும் ஒப்பாரியில் அவர்களின் வாழ்ந்த வாழ்வை உயர்த்திச் சொல்லும் பாங்கு, அதனை சில ஒப்பாரிப் பாடல்கள் மூலம் கடந்து கதைக்குள் பயணித்தல், கிராமத்தில் நடக்கும் இழவுக்குச் சென்று வேடிக்கை பார்ப்பது போன்ற உணர்வை உண்டுபண்ணியது.


வாழ்வுணர வாசிக்க வேண்டிய நூல்.

வாழ்த்துகள் தோழர் புலியூர் முருகேசன்.

புத்தக அச்சாக்கம் கட்டமைப்பு பிடித்திருந்தது.

வாழ்த்துகள் தோழர் குறி மணிகண்டன்.

பூனைகள் இல்லாத வீடு #சந்திரா


 பூனைகள் இல்லாத வீடு


சிறுகதைத் தொகுப்பு


#சந்திரா


உயிர்மை பதிப்பகம்

110பக்கங்கள்


11கதைகள். பால்யத்தை நினைவுபடுத்தும் காட்சியமைப்புகள். கதை சொல்லும் ஒரு இயக்குனரின் பார்வையில் தான்  கதைகள் பெரும்பாலும். எக்கதையும் இயல்பிலிருந்து அன்னியமாகப் படவில்லை என்பதை கதைகளின் ஆகச்சிறந்த சிறப்பெனக் கொள்ளலாம்.


புளியம்பூ, அடித்தட்டில் வசிக்கும் ஒருவனின் வாழ்க்கை, ஆசை, கடைசியில் அது எப்படி கடனால் மூழ்கிப் போகிறது என்பதைச் சொல்கிறது. இதே போல் ஒரு கதை படித்தது போலிருக்கிறது. ஆனால் எதுவெனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.


திறக்கப்படாத பள்ளிக்கூடத்தின் கதவுகள்... பள்ளிக்குப் போன நாட்களை, வகுப்பை, ஆசிரியர்களை, நண்பர்களை, தோழிகளை நினைவுபடுத்தியது. அருமை 


பூனைகள் இல்லாத வீடு, காலத்தின் முன்னால் நினைவுகள் எதுவுமற்றுப் போய்விடும் அளவிற்கு வேகமெடுக்கும் சூழலை காட்சிப்படுத்தியது.


கிழவிநாச்சி, நல்ல பேய்க் கதை. பிசாசு படம் போல. நிகிலா கதை காதலித்துத் திருமணம் செய்தவளை விட்டுப் போய் விடுகிறான் ஒருவன். அவள் படும் பாடுகள் தான் கதை. போனவன் திரும்பி வரவில்லை. அவன் காதல் செய்ததை தவறு என கதாசிரியர் சொல்கிறாரா, காதல் தவறு என்கிறாரா புரியவில்லை. காதல் தவறு என்ற எதிர்ப் போக்கை வலியுறுத்தி எழுதியது போலுள்ளது. ஏழு கன்னிமார் குழந்தைகளின் வாழ்வில் பெரியவர்கள் யார் என்பதை கோவில், சாமி கும்பிடு என்பதன் மூலமாக காட்டியுள்ளது. 


கள்வன் கதை திருடும் முத்துமாயன் கதை. திருட காரணம், பஞ்சம், பசி எனப் பல காரணங்களோடு. திருமணத்திற்கு தயாராக இருக்கும் மணப்பெண்ணின் நகைகளை கொள்ளையடித்ததால் இறக்கிறாள் அவள். அதன் காரணமாக திருடும் தொழிலை விடுத்து வாழத் தொடங்கினாலும் அந்நிகழ்வு மீண்டும் மீண்டும் முததுமாயன் மனதில் தோன்றி சித்திரவதை செய்வதாக முடித்திருக்கிறார். பாவத்திற்கு இந்த உயிர்ச் சித்திரவதை மட்டும் தான் தண்டனையா என்ற எண்ணம் ஒருபுறம் தோன்றுவதை மறுக்க முடியவில்லை.


அசிஸ்டன்ட் டைரக்டர் ஆவதை ஒரு கதையாக்கியிருக்கிறார். குடிகார புருஷனை திருத்த பாடுபடும் கிராமத்து மனுசி பற்றி ராஜா ராணி ஜோக்கர் கதை பேசுகிறது. 


தோழர்கள் கடத்தல்காரர்களான கதை இத்தொகுப்பின் மேலுள்ள இயல்பாகக் காட்சிப்படுத்தும் பார்வையை ஒட்டுமொத்தமாகக் கந்தல் கந்தலாக்கிவிடுகிறது. கம்யூனிஸ்ட் தோழர்கள் இருவர், அவர்கள் கட்சியில் சேர்ந்து படும் பாடு, அவர்கள் திருமண வாழ்வு, அவர்களின் தலைவர் குறித்தெல்லாம் எதிர்மறையான பிம்பத்தை வைக்கும் அதே சூழலில் அந்த அமைப்பு, அதன் தலைவர்கள், மக்களுக்காகப் போராடும் காம்ரேடுகள் எதுவுமில்லாமல் குறை சொல்ல மட்டுமே எழுதப்பட்டது போலிருக்கிறது. இந்தக் கட்சியில் தான் பணத்தால் வெற்றி பெறும் பலரிடையே தற்போது சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குடிசை வீட்டு மாரிமுத்து போன்ற தோழர்களும் இருக்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டியதிருக்கிறது.


எங்கள் தேனி மாவட்ட எழுத்தாளர் ஒருவரின் நூலை வாசித்துணர்ந்தது உள்ளபடியே பெரும் மகிழ்வு.


வாழ்த்துகள் தோழர்.

எறும்பு முட்டுது யானை சாயுது #கவிஜி


 எறும்பு முட்டுது யானை சாயுது.


கவிஜி

Vijayakumar Gurusamy


படைப்பு வெளியீடு


கவிதைத்தொகுப்பு


சற்று இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் வாசிக்கும் கவிதை நூல். ஓய்விலிருந்த கணினியை இயக்கத் தொடங்கும்பொழுது ரெஃப்ரெஷ் செய்வோம் அல்லவா... இப்பேரிடர் காலம் முடியும் தருவாயில் மனதில் மேலும் பாரங்களைக் குவித்து விடாமலிருப்பது போல, அதே சமயம் மனதை நேர்மறையாக ஆற்றுப்படுத்துவதுபோல கவிதையாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் வாசிக்கத் தேடிக் கிடைத்த நூல். மனம் பூரித்துக் கிடக்கிறது. கட்டிய மாலை அழகு தான். மணமகளின் கூந்தலை அலங்கரிக்கும் பூக்கள் அழகுதான். கொஞ்சம் வளர்ந்திருந்தாலும் குட்டிக் குழந்தைகள் வைத்திருக்கும் பூக்கள் தான் பேரழகு. இக்கவிதைகள் குட்டிக் குழந்தைகள் சூடியுள்ள குட்டிக் குட்டிப் பூக்கள். 


வசீகரத் தலைப்பு. குழந்தைகளுக்கான தொகுப்பாக இருக்கும் என நினைத்தால் அது இல்லை. இல்லையில்லை. நாம் குழந்தையாக இல்லை. 3 பால்கள் வகுத்துக்கொண்ட வள்ளுவனைப் போல 3 தலைப்புகளில் கவிதைகள். 

காதலை, காதல் கவிதைகளைக் கண்டாலே பலருக்கு ஒவ்வாமை வந்து விடுகிறது. அவர்களுக்கும் கவிஜியின் காதல் பிடிக்கும். காதல் எப்போதும் சிறப்பு பொருந்திய ஒன்று. இறையில் வைத்து ரசிக்கத் தக்கது. பூஜிக்கவல்லது. காதல் கவிதைகள் பல கோவிலை மையமாக வைத்துப் பூத்திருக்கின்றன. பார்வையால் வணங்கலாம் அவற்றை. காதல், கடவுளாக நாம் கண்ணுக்கு காட்சி அளிக்கும்.


“எப்போது வாசலிலிருந்து எழுவாய்

சிற்பம் அசையுமென்று

பந்தயம் கட்டியிருக்கிறேன்”


“நடை சாத்திய பிறகு

நீ நின்ற இடத்தில்

நின்று பார்க்கிறார் கடவுள்”


“என்ன வாரம் தருவதாகச் சொன்னாய்

விடிந்ததும் கோயில் திறந்து

அமர்ந்து விடுகிறார் கடவுள்”


இப்படியாக கோயில் போல பல களங்கள். பல கவிதைகள். காதல் தேன் நிரம்பிக் கிடக்கிறது “தீ மிதிர்க்காதல்’’ என்னும் தலைப்பின் கீழ்.


“நையப்புடை” என்ற தலைப்பின் கீழ் சமூகம் சார்ந்த கவிதைகள். நம்மை நோக்கி நாம் கேட்க வேண்டிய கேள்விகள், சமூகத்தை நோக்கி கேட்கவேண்டிய கேள்விகள், எங்கு இந்த சமூகம் வெட்கித் தலை குனியவேண்டும், எங்கு நையப்புடைத்தல் நிகழவேண்டும் என்பதை வாசிப்பின் வாயிலாக கண்டடைய கவிதைகள் என்ற பெயரில் பூகம்பமாக, புரட்சியாக காட்சிப் படுத்துகிறார் கவிஜி.


“காசு போட்டவனின் சாயலில்

சாலையில் வரைந்திருந்த

சாமி ஓவியம்” 


ஒரு கதையை மூன்று வரிகளில், அளவான சொற்களில் அற்புதமாக வார்த்திருக்கிறார் கவிஞர். வரைந்தவனின் வறுமை, சமூக அவலம், காசு போட்டவனை கடவுளாகப் பார்க்கும் ஓவியன் என வரிகள் ஒவ்வொன்றிலும் நாம் உற்று நோக்க நிறைய உண்டு.


“ஐந்தாவது ஆளாகச் செல்கையில்

கொஞ்சம் சுலபமாக இருக்கிறது

வன்புணர்வு”


எளிய வார்த்தைகளில் வலி தரும் வரிகள். கண்முன் இந்தக் காட்சி படர்கிறது. வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணின் எரிச்சலில், கோபத்தில் திசையில் நின்று இந்த வரிகளை மடைமாற்றிக் காண்கிறேன். அவ்வளவும் துயர். அந்தக் கண நேர இயலாமையை சுவீகரிக்கும் அற்ப மனிதனின் பார்வைக்கு சுலபமாகத் தான் இருக்கும் இது போன்ற வன்புணர்வும், வரிகளும்.


“எப்போதும் பிரியாத

தண்டவாளத்தில் தான்

செத்துக் கிடந்தார்கள் பிரிந்தவர்கள்”


சட்டென ஒரு ரயில் தண்டவாளம். வெள்ளை நிற சட்டை, நீல நிற ஜீன்ஸ் பாண்ட் சகிதமாக இறந்துகிடக்கும் இளவரசன். சுற்றிலும் கண்ணீரோடு சில மக்கள். மையமாக யார் பார்வைக்கும் தெரியாமல் அழுது அரற்றிக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தது பிரிந்த காதல். காதல் கடந்த சமூகம் சாத்தியம் என்பது காலத்தை ஏமாற்றும் நாடகம் என்பதை சாதி எப்போது உணரப்போகிறதோ... 


தத்துவம் சார்ந்த ஹைக்கூக்கள் கனவை நிறுத்துகிறேன் என்ற தலைப்பில். வாழ்வின் நிலையாமை உணர்ந்தவன் உயிர்களின்மேல் அன்பு செலுத்துவான். ஆனால் இங்கு அன்பு என்பதை உறவுகளிடம் மட்டுமே காட்டவேண்டும் என்றே கொள்கைப் பித்தர்கள் புரிந்துகொண்டார்கள் போல. பல கவிதைகள் புன்னகையை வரவழைத்து புத்தி புகட்டுகிறது. எதற்காக இந்தக் கவிதை இப்படி புன்னகையை வரவழைக்கவேண்டும் என்று யோசிக்க யோசிக்க கவிதையின் உள்மனதைப் புரிந்துகொள்ள முடிகிறது. வாழ்ந்துவிடலாம் என நினைக்கும்பொழுது வரிசை கட்டி வந்து நிற்கும் துயர்கள் கடப்பதும் பெரிய சவால்தானே. 


“ரயிலைத் தவறவிட்டவன்

பச்சைச் சட்டை

அணிந்திருக்கிறான்”


“கடலை வரைந்து முடித்தவன் 

காலை

இழுத்துக் கொள்கிறான்”


“சட்டென வாய்ப்பாட்டை

நிறுத்திக்கொண்ட மழைக்கு

அதன்பிறகு தவளை வாய்”


சொல்லிக்கொண்டே இருக்கலாம் இன்னும் பல கவிதைகளை. கவிஜி கவிஞரின் நான்காவது கவிதைத் தொகுப்பை முதலாக வாசித்து அவரறிகிறேன். கவிதையாக வாழ்ந்திருக்கிறார். கவிதைகளோடு வாழ்ந்திருக்கிறார். மொத்தத்தில் இவை வாழ்வுணர்த்தும் கவிதைகள் என்பதில் மாற்றமில்லை. வாழ்த்துக்கள் தோழர் கவிஜி.

என்னைச் சந்திக்க கனவில் வராதே #நா.முத்துக்குமார்


 என்னைச் சந்திக்க கனவில் வராதே…


தமிழில்: நா. முத்துக்குமார்


ஜப்பானியக் கவிதைகள்


பட்டாம்பூச்சி பதிப்பகம்


முழுக்க முழுக்க காதலால் நிரம்பிக் கிடக்கிறது தொகுப்பு. உலகப் பொதுமறை திருக்குறள் என்பதுபோல் உலகப் பொதுச்செயல் காதல் என தவறாமல் சொல்லிவிடலாம் தான். 


காதல் ஒரு தனித்துவம். ஒவ்வொருவரின் காதலும் ஒவ்வொரு உணர்வால் அவரவர் உணரும் விதத்தால் அவரவர்க்குள் ஊடுருவும் விதத்தால் வித்தியாசப்படுகிறது. 


இவை எல்லாம் ஜப்பானியக் கவிஞர்கள் எழுதியது, ஜப்பானியக் கவிதைகள் என்றெல்லாம் இல்லை. உலகினரின் காதலின் இயல்புக் கூறுகள் அத்தனையும் இதில் உள்ளன. நம் மொழியில், நம் மனிதர்களிடம் உள்ள அதே காதல். அதே விரகம். அதே தேடல். அதே வலி. அதே சுகம். பல கவிதைகள் ஜப்பானியப் பெண் கவிஞர்கள் எழுதியவை. கவிதைகளைக்   கொண்டாடித் தீர்க்க உணர்ச்சிப் பூர்வமாக அவற்றை வாசிக்கும் ஒவ்வொரு நொடியும் காதலை உணரவைக்கும் ரசனையான எழுத்திருந்தால் போதும். வலியை நமக்குள் கடத்தும் உத்தி இருந்தால் இன்னும் உசிதம். வாசித்தபின் ஆர்ப்பரிக்கச் செய்தால், இது போல நமக்கும் நடந்திருக்கிறதே என யோசிக்க வைத்தால், வலி கொண்டு கடந்த காதலை மீண்டும் மீட்டுணரச் செய்தால் அதுதான் காதல். அப்படிப்பட்ட கவிதைகள் தான் இதில். 


கவிக்கோ அப்துல் ரஹ்மான் மொழிபெயர்த்த கவிதை ஒன்று

“நீயும் நானும் சேரக்கூடாது 

என்றுதான் ஒவ்வொரு முறையும் 

நான் கடவுளிடம் வேண்டுகிறேன்

ஏனென்றால் என் பிரார்த்தனைகள்

ஒருபோதும் நிறைவேறுவதில்லை” என்றிருக்கும். நிறைவேற்றித் தராத கடவுளை அவன்போக்கில் விட்டு காதலை அடைந்துவிட காதலியோ காதலனோ செய்யும் உத்தி அற்புதமாக கவிதையில். 

அதேபோல  இருவரில் ஒருவர் செய்யும் பிடிவாதத்தில் எதிர்மறையான செயல்களில் அதைத் தனக்குச் சாதகமாக மாற்றி காதலை அடைந்துவிட முயற்சிக்கும் ஜப்பானியக் கவிதை.

நீ சொன்னாய்

“நான் வருவேன்”

ஆனால் வரவில்லை

இப்போது சொல்கிறாய்

“நான் வரமாட்டேன்” என்று.

ஆகையால் உன்னை எதிர்பார்க்கிறேன்.

உன்னைப் புரிந்துகொள்ள

கற்றுக்கொண்டேனா...?


ஒரு சிறு ஓரப் பார்வையும் காதலில் கொடுக்கும் சுகம் அதிகம். மனதிற்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கவிடும். ஆகாயத்தில் மிதக்க வைக்கும். உலகத்தை கைக்குள் கொண்டுவந்தது போல் சந்தோசிக்க வைக்கும். காதல் ஒரு மாய சக்தி. நிரந்தரமாக தொடரும். அல்லது சட்டென கைகளை விட்டுப் பறந்தோடிவிடும். 

“கொஞ்ச காலம் தான்

ஒன்றாகயிருந்தோம்

என்றாலும் 

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும்

எங்கள் காதல் வாழும்.”


“உன்னைக் காதலிக்காதவளை

நீ விரும்புவது என்பது

கோயிலுக்குச் சென்று 

சைத்தானை 

வணங்குவது போன்றது.”


இதற்கு மேலும் எப்படி நெருக்கம் காட்டுவது, என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதற்கெல்லாம் விளக்கம் கொடுத்தல் என்பது எப்படி சாத்தியம் ஆகும்... இங்கு அதனை இப்படிச் சாத்தியப் படுத்துகிறது கவிதை

“உன் வியர்வை உறிஞ்சுகிற

உள்ளாடை போல

உனக்கு நெருக்கமாக இருக்க

விரும்புகிறேன்.

எப்போதும் உன்னையே

நினைக்கிறேன்...”


பிரிவில் வாழும் காதலர்கள் வெளிப்படுத்தும் அன்பு அதீதமானது. அது அருகிலிருப்பதை விட பல மடங்கு வெளிப்படும். அது ஏக்கமாக, வலியாக, வெறுமையை உணர்த்த, இன்னும் நான் உன்னை நினைத்துக்கொண்டிருக்கிறேன், நீதான் என் உலகமாக இருக்கிறாய் இருப்பாய், என் காதல் வலிமையானது, நாம் ஒன்று சேர்வோம் எனப் பலப்பல வழிகளில் நம்பிக்கையைக் கூட்டும் வரிகளில் பூக்கும். காதல் என்பதை நம்பிக்கைதானே...

“வருடங்கள் என்னைத் தொடுகிறது

வயது என்னைப் பலவீனமாக்கி

கவலையில் தள்ளுகிறது.

என் கவலையும் கனமும்

விலகவேண்டும்

மலரைப் போன்ற 

உன் அழகிய முகத்தைப்

பார்க்க விரும்புகிறேன்...”


“இந்த நிலவில்லா இரவில்

நீ வரவில்லை

உனக்காக விழித்திருந்தேன்

என் மார்பகங்கள்

விம்மித் தளர்கிறது

என் இதயம் எரிகிறது”


இப்படிப் பல கவிதைகள். அத்தனை கவிதையிலும் காதல் இருக்கிறது. காதலர்கள் இருக்கிறார்கள். மகிழ்ச்சி இருக்கிறது. கவலை இருக்கிறது. முக்கியமாக அவற்றில் நாம் இருக்கிறோம். வேறென்ன கவலை... நம்மை நாம் திருப்பிப் பார்க்க காதலை விட பெரும்பாக்கியம் இருக்கிறதா என்ன...

வாசிப்போம். காதலில் வசிப்போம்.


யாழ் தண்விகா