Thursday, 29 January 2026

மதிக்குட்டி #வேல்முருகன்

 


மதிக்குட்டி 

வேல் முருகன் 

பக்கங்கள் 130

விலை 150

Vetrimozhi Veliyeetagam 


கவிஞருக்கு இது நான்காவது தொகுப்பு. பேரன்பின் நன்றிகள் & என்னுரை என இரண்டு இடங்களில் என்னுடைய பெயர் நன்றி கவிஞரே.


தொட்டிலில் தூங்கும் குழந்தையை பார்த்து எவ்வளவு சேட்டை செய்கிறாள் என்று நினைப்பதுண்டு. நல்ல அறிவான குழந்தையாக வருவாள் என்று எண்ணுவதுண்டு. ரொம்ப வினையம் புடிச்ச குழந்தையாக இருக்கிறாளே என்று வேதனைப்படுவதுண்டு. இந்த குழந்தைக்காக நாம் வாழ வேண்டும், இந்த குழந்தையின் ஆசையினை நாம் நிறைவேற்றித் தரும் அளவு வளர வேண்டும், இந்த குழந்தையின் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்று தொலைநோக்குப் பார்வையில் சிந்திப்பதுண்டு. இதுபோல் குழந்தைகளை மட்டும் தான் உறங்கும் பொழுது பார்த்து, எல்லை கடந்து ஆச்சரியப்படுதல், வேதனைப்படுவது உண்டு. 


மதிக்குட்டி கவிதைத் தொகுப்பில் குழந்தையின் உலகம் பற்றி அழகாக கூறுகிறார் கவிஞர் வேல்முருகன். குழந்தையின் மேலான அன்பைப் பற்றி கூறும் பொழுது அதைப்போல / அதைவிட மேலாக நம்முடைய குழந்தைகளையும் நாம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வளரும். நாம் பார்த்த பார்வை வேறு. வேல்முருகன் அவர்கள் பார்த்த பார்வை வேறு என்று கூறும் அளவிற்கு எண்ணற்ற கோணங்களில் குழந்தையை பார்த்திருக்கிறார், ரசித்திருக்கிறார், அதை கவிதைகளில் கொண்டு வந்திருக்கிறார். 


"தொட்டிலில் 

இருபுறமும் 

கால்களை தொங்கப் போட்டு

அமர்ந்து 

விழுந்து விடக்கூடாது என்று

இடுப்புடன் சேர்த்து 

கட்டப்பட்ட துண்டின் துணையோடு

தலையை 

ஒரு புறம் நீட்டி 

கால்களின் உந்துதலால் புன்னகையோடு ஆடுகிறாள். 

நம்பி ஆடலாம் மகளே 

அது அம்மாவின் சேலை 

அது அப்பாவின் துண்டு"

முதல் கவிதை இது. நம்பி ஆடலாம் மகளே / அது அம்மாவின் சேலை / அது அப்பாவின் துண்டு - என்ற வரியில் சேலையும் துண்டும் உனக்குத் தரும் பூரண பாதுகாப்பு என்று கூறுகிறார் கவிஞர். உடலுக்குள் உணர்வுக்குள் சில்லிப்பு தட்டும் வரி அது.


குழந்தையிடம் இன்று நாளை நேற்று என்பதற்கு மூன்று காலங்களையும் ஒன்றாக மாற்றி கூறும் லாவகம் இருக்கிறது. அது எதுவும் புரியாத லாவகம். அந்த ஒரு லாவகத்திற்குள் நாமும் மாட்டிக்கொள்ள ஏங்குவோம். மனிதர்களாக உருமாறத் தொடங்கிய பொழுது அனுபவிக்கும் துன்பங்களுக்குள், மீளப் பெறத் துடிக்கும் இன்பங்களுக்குள் இந்த இன்று நேற்று நாளை என்னும் லாவகம் கைக்கு எட்டாமல் போகும். அந்தப் பிரச்சனை குழந்தைகளுக்கு இல்லை.

"மதிக்குட்டி 

எப்போ வந்தீங்க 

என்ற கேள்விக்கு 

நாளைக்குத்தான் வந்தேன் என்ற

உன் பதிலில் 

எதிர்காலம் திகைத்து 

இறந்த காலம் அதிர்ந்து 

நிகழ்காலம் ஸ்தம்பித்தது. 

ஒரு வாக்கியத்தில் 

காலத்தை மாற்றி வைக்கும் சக்தி உன்னிடம் தான் இருந்தது மகளே"

என்ற கவிதையில் காலத்தை ஸ்தம்பிக்க வைக்கக்கூடிய வல்லமை வாய்ந்தவளாக குழந்தைதான் இருக்கிறாள் என்பது புலனாகிறது. 


பல நேரங்களில் குழந்தை தான் நம்மை பாதுகாப்பாக வைத்திருப்பதாக எண்ணுவோம். அதற்கு நாம் ராசி என்ற பெயர் சூட்டிக் கொள்வோம். குழந்தையின் அன்பிற்குள் நாம் வாழ்வதன் பொருள் அதுவாகத்தான் இருக்கும். அதை 

"பாதுகாப்பாய் 

வைத்துக் கொள் 

என்னை. 

சுட்டு விரலை 

இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் 

உன் பிஞ்சு விரல்களுக்குள்"

என்ற வரிகளில் நுட்பமாய் சொல்லிச் விடுகிறார் கவிஞர். 

யார் சுட்டுவிரலை யார் பற்றி இருப்பது என்பதை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்க்கும் பொழுது அன்பின் நிமித்தமாய் குழந்தையின் இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் பிஞ்சு விரல்களால் பாதுகாப்பாக என்னை வைத்துக் கொள் என்பதாக இருக்கிறது. வித்தியாசமான கோணம்.


கவிஞரின் நாத்திகப் பார்வை குழந்தைக் கவிதையையும் விட்டு வைக்கவில்லை. அது இன்னும் குழந்தைக்குள் சென்று சேரவில்லை என்பது மகிழ்வா துயரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

"ஏதும் அறியாத குழந்தை 

தூக்கத்தில் சிரிக்கையில் 

கடவுள் கிச்சுகிச்சு மூட்டுகிறார்

என்கிறார்கள்.

அழுகையில் 

கிள்ளி வைக்கிறார் 

என்கிறார்கள். 

அவன் 

ஒரு விளையாட்டுக்காரப்பயல்.

தூங்குகையில் மட்டும் வந்து

போய்விடுகிறான். 

விழித்த பின்னும் சரி 

வளர்ந்த பின்னும் சரி

எங்கே தொலைந்து போகிறான்"

இந்த கவிதையைப் படிக்கும் பொழுது, குழந்தை முழித்திருக்கும் பொழுது கடவுள் எங்கே செல்கிறான்? என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வந்து போகும். கிச்சுகிச்சு மூட்டுவதும் கிள்ளி வைப்பதும் கடவுள் செயல் அல்ல. அது ஒரு இயல்பான செயல். குழந்தை காணும் கனவு என்று புரிந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார் கவிஞர்.


என்னுரையில் உள்ள கவிஞரின் ஏக்கத்தைத் தணிக்க ஒரு கவிதை...

தொகுப்பில் உள்ள கவிஞரின் கவிதைதான்.

"உன் அண்ணன் தான் 

நான் பெத்த புள்ள 

நீயி என் புள்ள இல்ல 

போ.


போம்மா 

நானு அப்பா புள்ள

ஏம்ப்பா நீதானப்பா என்ன பெத்த"


கவிதைத் தொகுப்பெங்கும் மதிக்குட்டியின் தொகுப்பாக இருக்கிறது. ஆங்காங்கே உள்ள Poondi Jeyaraj திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் தோழரின் ஓவியம் மதிக்குட்டியைக் காணும் அழகு. வெற்றிமொழி வெளியீட்டகம் சார்பில் நல்ல கட்டமைப்பு.


பயணம் தொடர்க. வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


💝

சீமையில் இல்லாத புத்தகம் - தேனி சுந்தர்


 சீமையில் இல்லாத புத்தகம்

தேனி சுந்தர்

பாரதி புத்தகாலயம்

112 பக்கங்கள்

100 ரூபாய்


குழந்தைமையில் தூளி கட்டிக்கொண்ட உலகம்


தோழர் Visagan Theni தன்னுடைய முகநூலில் பகிர்ந்திருந்த ஒரு கவிதையைப் பார்த்தேன், சீமையில் இல்லாத புத்தகம் என்ற புத்தகத்திற்கு வாசிப்பனுபவம் தயார் செய்ய எத்தனிக்கும்போது. மகேஷ் சிபி எழுதிய அக்கவிதை பின்வருமாறு.

“மின்கம்பியில் வரிசையாய் குருவிகள்

கவிதை வேண்டுமென்பவர்கள்

ஒருமுறை கை தட்டுங்கள்”.

 எவ்வளவு எவ்வளவு கற்பனைகளை, கதவுகளை, காட்சியை மனதிற்குள் கொண்டுவந்தது தெரியுமா இவ்வரிகள். இதே காலகட்டத்தில்தான் மதுரையைச் சேர்ந்த பெற்றோர் இருவர், தன்னுடைய 4 வயது குழந்தையைப் பள்ளியில் சேர்த்துவிட்டு அவனைக் கண்டித்து வளர்க்க, படிக்க வைக்க 4 அடி பிரம்புக் கம்பு ஒன்றைப் பள்ளி ஆசிரியரிடம் கொடுத்து அதனைப் புகைப்படமாக எடுத்து ஊடகங்களில் பகிர்ந்து வருவதும். இருவர் அன்பில் ஒருவராக வாழ்தல் வாழ்க்கை. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்றெல்லாம் அன்பை மையப்படுத்தி வாழ்ந்த வாழ்வைச் சுக்குநூறாக்கும் விதமாக 4 வயது மகனும் 4 அடி பிரம்புக் கம்பும் என்ற வார்த்தைகள் என்னுடைய மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. இங்கே சைக்கோத்தனத்தில் ஒருமித்த கருத்துடன் குழந்தையை அடிக்க பிரம்புக்கம்பு என்ற ஆயுதம். எப்படி அந்தக் குழந்தை வீட்டில் வசிக்கப்போகிறதோ என்ற அச்சம் தான் மீண்டும் மீண்டும் மேலெழுகிறது. இப்போதெல்லாம் அடியாத பிள்ளை படியாது, ஆடுற மாட்ட ஆடித்தான் கறக்கணும், பாடுற மாட்ட பாடித்தான் கறக்கணும், முருங்கைக்காய ஒடிச்சு வளக்கணும் பிள்ளைகள அடிச்சு வளக்கணும் என்பது போன்ற பழமொழிகளுக்கு வரவேற்பு அதிகம்.

 இந்த இடத்தில்தான் மேற்சொன்ன கவிதையைப் பார்க்கிறேன் நான். மின்கம்பியில் வரிசையாய் குருவிகள் என்பதனை பள்ளிக்கூடத்தில் வரிசை வரிசையாய் குழந்தைகள் எனப் பொருள் கொள்ளலாம். கவிதை வேண்டுமென்பவர்கள் ஒருமுறை கை தட்டுங்கள் என்பதற்கு மாணவர்களின் திறன் அறியவேண்டுமென்பவர்கள் ஒருமுறை மெதுவாகக் கை தட்டுங்கள் என்பதே பொருளாக இருக்கவேண்டும் என்று நான் பார்க்கிறேன். மெதுவாகக் கைதட்டுதல் என்பது ஆசிரியர்கள். மெதுவாகக் கை தட்டுதல் என்பதற்குப் பதிலாக ஓங்கி என்றிருக்கலாம். ஒரு வெடிகுண்டை வெடிக்கச் செய்யலாம். ஆனால் குழந்தைகளின் மனநிலை என்னாவது? குழந்தைகளின் மனம், மகிழ்வில் சிறகடித்துப் பறக்கும்போது எல்லாம் சிறப்பாகும், கல்வி, கலை எதுவாயினும். இதனையே நான் கவிதையில் காண்கிறேன். சீமையில் இல்லாத புத்தகம் தொகுப்பைப் பொருத்தமட்டிலும் இங்கு பறவைகளாக டார்வின், புகழ்மதி, கீர்த்தி இருக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது வரிசையாகவோ, கலைத்துப்போட்டோ அமர்கிறார்கள். அவர்களுக்கென யாரும் கை தட்டவில்லை. அவர்களாக பறக்கிறார்கள். இதையெல்லாம் வேடிக்கை பார்க்கும் கலைஞனாக மட்டும் தோழர் தேனி சுந்தர் இருக்கிறார். அதை தனது நூலில் பதிவு செய்திருக்கிறார். அவ்வளவும் அவ்வளவு சுவாரசியத்தைத் தூண்டும் வண்ணம் அமைந்திருக்கிறது. 

மீண்டும் அக்கவிதையை வாசியுங்கள்.

“மின்கம்பியில் வரிசையாய் குருவிகள்

கவிதை வேண்டுமென்பவர்கள்

ஒருமுறை கை தட்டுங்கள்”

-மகேஷ் சிபி


 சீமையில் இல்லாத புத்தகம், முழுக்க குழந்தைமையைக் கொண்டாடும் புத்தகம். கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்குத் தெரியும், ‘ஊர்ல இல்லாத அருவமா பிள்ளையப் பெத்து வச்சிருக்கா, என்னமோ சீமையில இல்லாத பிள்ள மாதிரி இப்படி கொஞ்சிட்டிருக்கா, இதெல்லாம் எங்க போயி முடியப்போகுதோ” என்றெல்லாம் ஒரு தரப்பு அங்கலாய்ப்பதையும் அதைக் கண்டுகொள்ளாமல் தாயானவள் குழந்தையைக் கொஞ்சுவதையும் பார்த்திருக்கலாம். தாயானவள் கொஞ்சும் சீமையிலில்லாத குழந்தை போல, நாம் கொண்டாடக் கிடைத்த சீமையில் இல்லாத புத்தகம் இது. இது குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்க்கு மட்டுமல்ல, குழந்தைகள் பெற்று பேரன், பேத்தி பார்த்தவர்களும் படிக்கலாம். பதின் பருவத்தினரும் படிக்கலாம். குழந்தையைக் கொஞ்சும் யாவரும் படிக்கலாம் என்பது இந்நூலிற்கான சிறப்பம்சம். வளரும் சமுதாயம் இது போன்ற நூல்களைப் படிக்கும்போது குழந்தைகளின்மேலான வன்முறை என்பது தவிர்க்கப்படும், தடுக்கப்படும் என்பது திண்ணம். 

 பள்ளியில் குழந்தைகளிடம் அந்தந்தப் பருவத்திருக்குரிய பாடப் புத்தகங்களைக் கொடுத்தவுடன் செய்யும் செயல் என்ன தெரியுமா? புத்தகத்தில் முதலில் அவங்கவங்க பேர எழுதுங்க என்று ஏற்கனவே சொல்லியிருப்பார் ஆசிரியர். அந்த பணியை முடித்தவுடன் குழந்தைகள் ஒவ்வொரு பக்கமாக எடுத்து படங்களைப் பார்த்து முடித்துவிடுவார்கள். புத்தகத்தையே படித்து முடித்த அயர்ச்சி தோன்ற புத்தகத்தை மூடி வைத்துவிடுவார்கள். இதனைப் போன்றதொரு பதிவை கீழ்க்கண்டவாறு பதிவு செய்திருப்பார் தோழர்.

“அறுபது பக்க புத்தகத்த

அஞ்சே நிமிசத்துல 

படிக்க முடியுமா?


புகழ்மதி படிச்சுட்டாங்க


ஒவ்வொரு பக்கமா புரட்டுவாங்க

படம் இருக்கும்

பக்கத்த மட்டும் பாப்பாங்க


இது அம்மா

இது அண்ணன்


இது அக்கா

இது அப்பா


இது போனு

இது வீடு


இது டி‌வி

இது மரம்


இது போனு

இது குருவி

இது கண்ணாடி

இது காரு

இது பாட்டில் தண்ணீ


நான் படிச்சு முடிச்சிட்டேன்ப்பா

இன்னொரு தடவ படிக்கவா?

புகழ்மதியின் இந்தக் கேள்விக்கு போதும் படிச்சது என்றால் இன்னும் நாம் குழந்தைமையை ரசிக்கத் தொடங்கவில்லை என்று பொருள். தோழரின் பதில் என்ன தெரியுமா?

ம்‌ம்... சூப்பர் பாப்பா.

குழந்தைமையைக் கொண்டாடும் ஒருவரின் பதில் இப்படித்தான் இருக்கும். குழந்தைமை இன்னும் சிறக்க விரும்பும் ஒருவரின் பதிலும் இப்படித்தான் இருக்கும். இந்த பதிலுக்காக தோழருக்கு நானும் சொல்லிக்கொள்கிறேன் “சூப்பர் தோழர்....” 


 அங்கொன்றும் இங்கொன்றுமாக குறித்து வைத்துக்கொண்டு கொண்டாட இத்தொகுப்பல்ல. அங்கிங்கெனாதபடி எல்லாம் சிறப்பாக அமையப்பெற்ற ஒரு குழந்தைமையைக் கொண்டாடும் தொகுப்பாக இப்புத்தகம். குழந்தைகளின் ஏக்கம் தீர்க்கும் தகப்பன் தான் கடவுள். இயலாத ஒன்றைச் சொல்லும் குழந்தையிடம் சொல்லிப் புரியவைக்கும் தகப்பன் கடவுளுக்கும் கடவுள். ஒரு குழந்தை தன்னுடைய அப்பாவிடம் தன்னைத் தூக்கச் சொல்கிறாள். அப்பா அமர்ந்தவாறே ம் என்கிறார். குழந்தை எந்திரிச்சு நிண்டு தூக்குப்பா என்கிறாள். தூக்கியவுடன் மேலே தூக்கிப் போடுப்பா என்கிறாள். அதனையும் செய்தாயிற்று. முத்தம் கொடுப்பா என்று கேட்கிறாள். அதனையும் செய்தாயிற்று. கடைசியாக இனிமேல் நீயும் அம்மாவும் என்னய மட்டுந்தான் தூக்கணும் என்கிறாள். அதற்கும் சரி பாப்பா என்று அப்பா சொல்கிறார். இதையெல்லாம் எதற்காக குழந்தை சொல்கிறாள் என்றால் ஏதோ ஒரு சம்பவம் நடந்திருக்கு. அதனால்தான் குழந்தை இதனை ஒரு ப்ரோட்டோகால் போல செய்யச் சொல்லி கடைசியாக இனிமே நீயும் அம்மாவும் என்னைய மட்டுந்தான் தூக்கணும் என்று கட்டளையும் விதிக்கிறாள். இதைப் புரிந்த அப்பா, சம்பந்தப்பட்ட பாப்பாவுக்கு நாளைக்கு இருக்கு பதிலடி என்று முடிக்கிறார்.

“யாரோ ஒரு அப்பா

யாரோ ஒரு பாப்பா

கொஞ்சல் நடந்திருக்கணும்

இல்ல கிண்டல் நடந்திருக்கணும்

அதான் இந்த ரியாக்சன்.

எங்க அப்பாவுந்தான் என்னய தூக்குச்சு

 தூக்கிப்போட்டுப் புடிச்சுச்சு

எங்க அப்பாவுந்தான்

எனக்கு முத்தங்கொடுத்துச்சு

எங்க அப்பாவுந்தான் ஏங்கூட வெளையாடுனாரு” என்று பாப்பா மறுநாள் சம்பந்தப்பட்ட பாப்பாவிடம் சொல்வாள் என்றால், இது தோழரின் பாப்பாவிற்கு இன்னும் தேவை. குழந்தையை இன்னும் அதிகமாக தூக்கணும், தூக்கிப் போட்டுப் பிடிக்கணும், முத்தம் கொடுக்கணும் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆதலால் தோழர் இதனையும் செய்யுங்கள். குழந்தைகளோடு பயணித்து அவர்கள் மொழியில் தொகுப்புமேல் தொகுப்பை அவர்கள் மொழியிலேயே கொண்டுவந்து சிறப்பித்தாலும் குழந்தையின் ஏக்கம் இக்குறிப்பில் எப்படி இருக்கிறது பாருங்கள்.


 வீட்டில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நடக்கும் ஊடலைத் தீர்க்கும் ஒரு துருப்புச்சீட்டாக குழந்தைகள் பல வீடுகளில் இருப்பார்கள். சொல்லி அதன்மூலம் அடுத்தடுத்த வேலைகள் நடக்கும். அப்படியான ஒரு குறிப்பு. டார்வின், புகழ்மதி இருவரும் செய்யும் சேட்டைகள் பொறுக்காமல் அம்மா, இப்படியே சேட்டை பண்ணிட்டு இருந்தா உங்கள விட்டுப்புட்டு நான் அம்மாச்சி வீட்டுக்குப் போயிடுவேன், ஹாஸ்டலுக்குப் போயிடுவேன், ஆபீஸ்லயே இருந்துக்கிறேன் என்று சொல்கிறார். எல்லாவற்றுக்கும் புகழ்மதி போவக்கூடாது என்று சொல்லி தனதன்பை வெளிக்காட்டுகிறாள். இடையில் புகுந்த அப்பா, அம்மா போகும்போது பாப்பா தான் டிப்பன எடுத்து நல்லாக் கழுவி சாப்பாடு போட்டுக் கொடுக்குமாம், அப்புறம் டிரஸ் எல்லாம் எடுத்து பையில வச்சு அம்மா கிட்ட கொடுக்குமாம் என்றவுடன், புகழ்மதி ‌ம்‌ம் சரிப்பா. எப்பம்மா போவ சொல்லும்மா எப்பம்மா போவ என சுட்டி மாற்றி கேட்கத் தொடங்கிவிடுகிறாள். இந்த கணத்தை உணராத குடும்பம் இருக்குமா என்ன... இதற்குப் பின் தலைவி பார்க்கும் பார்வையும் தலைவன் பார்க்கும் பார்வையும் முட்டிக்கொள்ளும் இடத்தில் பூக்கும் கூடலுக்கு குழந்தைகளின் நிரத்தைச் சூடி அழகு பார்க்கலாம். எந்த இடத்திலும் கூடுதலான வார்த்தைகளைச் சேர்க்காமல் குழந்தைகளை அவர்களின் இயல்பில் காட்சிப்ப்டுத்தியிருப்பதில் முழுதாகத் தேர்ச்சி பெற்றிருக்கிறார் தோழர்.

 அறிவியலைக் குழந்தைகள் கற்றுக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதும், பதிலைப் பெறுவதும் ஒரு கலை தான். அப்படியான குறிப்புகள் நாய்க்கும் அறிவு இருக்கு என்ற பதிலை டார்வின் கண்டுபிடிப்பது. செத்துப்போன பூச்சி எப்படிப்பா வந்து மனுசனைத் திங்கும் என்று கேள்வி கேட்பது. குழந்தைகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் தப்பிக்கும் அப்பாவையும் பல பக்கங்களில் காணலாம். அதற்குக் காரணம் பதில் தெரியவில்லை என்பதால் அல்ல. குழந்தைகளுக்கு புரியும் காலம் வரவில்லை, வரட்டும் என்ற தெளிவு அப்பாவிடம் இருப்பதால் தான்.

 சிறு வயதில் தெருக்குழாயில் பெண்கள் உதிர்க்கும் வசவுச்சொற்கள் காதில் விழாதவாறு கதவு, ஜன்னல்களை அடைத்து டேப் ரெக்கார்டரில் பாடலை எனது தாயார் ஒலிக்கவிடுவார். அந்தக் காலம் மலையேறிவிட்டது. இன்று தொலைக்காட்சி, சினிமா, அலைபேசி என எல்லாம் வீட்டுக்குள் குப்பைகளைக் கொண்டுவந்து கொட்டத் தொடங்கிவிட்டது. கதாநாயகன், கதாநாயகி நெருக்கமாக வரும் காட்சியை மாற்றத் துடிக்கும் அப்பாவிற்கு வேலை வைக்காமல் அந்த இடம் வரும்போது டார்வின் ரிமோட்டில் வேறு சேனலுக்குத் தாவுகிறான். நம்மைக் கடந்து அவர்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் குறிப்பு அது.

 பதிலளிக்காமல் தப்பிப்பது தவறல்ல. அந்த இடத்தில் தப்பிக்கும் நுணுக்கம் கைவருதல் ஒரு கலைதான். ஆனால் தவறான ஒன்றைச் சொல்லி கடத்தல் என்பது சரியாக இருக்காது. அப்படித்தான் ஒரு குழந்தை பதின்ம வயதை அடைவதை ஒட்டிச் செய்யும் சடங்கு நிகழ்வுக்கு டார்வினும், புகழ்மதியும் செல்கிறார்கள். அங்கு புகழ்மதி எதற்காக மஞ்சத் தண்ணி ஊற்றுகிறார்கள் என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் எழுப்புகிறாள். ஒருகட்டத்தில் டிரஸ்லயே ஆய் இருந்திட்டா மஞ்சத்தண்ணி ஊத்துவாங்களா? என்ற கேள்வியைக் கேட்கிறாள். யாரோ நமக்கு முன்னாடி சிக்கி, தப்பிச்சிருக்காங்க என்று அக்குறிப்பை முடிக்கிறார் தோழர். அந்த யாரோவிற்கு வன்மையான கண்டனங்கள். இதுதான் குழந்தைகளிடம் பதிலளிக்கும் முறையா அன்பரே எனக் கேட்கவேண்டும்.

 கையால் துவைப்பதே துவைப்பு மற்றெல்லாம்

 வாஷிங்மெஷின்கணக்கில் வரவு வைக்கப்படும் என்றொரு புதுக்குறள் எனக்குத் தோன்ற ஒரு குறிப்பு இருக்கிறது தொகுப்பில். ஏய் எப்புர்ரா என்று கேட்டு வைரல் ஆன தம்பி போல இங்கு டார்வின் யுட்யூப் ஆரம்பித்து கேள்விகேட்கிறான். எங்களைப்போல சட்டை இல்லாமல் பெண்கள் வெளியில் போக முடியுமா என்ற கேள்வி ஒருவனால் கேட்கப்பட்டது. இத்தொகுப்பில் இது போலவே அவர்களுக்கு வேர்க்காதா? என்ற கேள்வியை தான் சார்ந்தோருக்கென டார்வின் கேட்கிறான். பாலின சுதந்திரம் என்பதை அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். இதுபோல தொகுப்பில் விடுபட்ட அனைத்தும் முக்கியக் குறிப்புகள் என்பதால் சீமையில் இல்லாத புத்தகம் என்பதைக் குழந்தைமையைக் கொண்டாடும் முக்கியப் புத்தகமாக எல்லோருக்கும் பரிந்துரை செய்யலாம். செய்கிறேன்.


வாழ்த்துகள் தேனி சுந்தர் தோழர்.


யாழ் தண்விகா

தனித்திருக்கும்_அரளிகளின்_மதியம் #கவிஞர்_ப_காளிமுத்து

 


#தனித்திருக்கும்_அரளிகளின்_மதியம்

#கவிஞர்_ப_காளிமுத்து

#கவிதைத்தொகுப்பு


கவிதை எப்போதும் ஒரு வழிப்பாதையாக அமைந்துவிட்டால் அது எத்தகைய அனுபவத்தையும் கடத்தும் வேலையைச் செய்யாது. அதே கவிதை இருவழிப் பாதையாக அமையும் பொழுது ஒரு வாசகன் கவிதையை கண்டடைகிறான். ஒரு கவிதை ஒரு நல்ல அனுபவத்தை கடத்தும் பணியை செய்து விடுகிறது. புத்தகம் வாசகன் இரண்டுக்குமான செயல் இங்கு ஒரு ஆத்மார்த்தமான எண்ண ஓட்டத்தை இருதரப்பிலும் கடத்தும் பணியை செய்ய வேண்டும். அத்தகைய அதிசயத்தக்க ஒரு பணியை தனித்திருக்கும் அரளிகளின் மதியம் என்ற இக்கவிதைத்தொகுப்பு அனாயசமாக செய்து முடித்திருக்கிறது.


ஒரு கவிதை நம்மைப் பேச வைக்க வேண்டும். ஒரு கவிதையோடு நாம் பேசவேண்டும். இந்தக் கவிதை நூல் நம்மைப்பேச வைக்கிறது. நாமும் கவிதையோடு பேசுகிறோம். இதற்கும் மேலாக கவிதை நம் குரலை காது கொடுத்துக் கேட்கிறது. இதனை எப்படி நாம் உணர்வது.

ஒரு கவிதை...


சிறு நிலம் 

கொஞ்சம் தீனி 

பரிவு நிழல் 

பசி தீர்க்க அவகாசம் 

ஒரு வேடனும் 


மற்றும் ஒரு கவிதை...


அது வேடன் வீடு தான் 

எனக்கும் தெரியும் 

அந்தப் பறவைக்கும் தெரியும் 

பிறகு கீச்சிடுவதெதற்கென்றுதான் தெரியவில்லை...


கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முடிப்பினைக் கைவசம் வைத்திருக்கின்றன. அந்த முடிப்பு என்பது நாம் அறியாத ஒன்றாக இருப்பதுதான் கவிதையின் சிறப்பு எனக் கருத வேண்டியிருக்கிறது

"மாதக் காலண்டரில் இத்தேதி அடிக்கோடிடப்படவில்லை 

மகிழ் தினங்களின் வரிசையிலும் இல்லை 

ஒரு மழை 

காதல் செடிக்குத் தூறாத 

ஒரு நாளை 

எவரின் சபித்தலுக்கும் 

ஆட்படாத ஒரு நாளை 

வேண்டுமானால் 

பிறந்த தேதியே அறியாத ஒருத்தியின்

பிறந்தநாளை 

இன்றைக்குக் 

கொண்டாடினால் என்ன?"

சொற்களில் காணப்படும் வித்தகத் தன்மை ஒரு புறம் இருந்தாலும் அதனுள் பொதிந்து கிடக்கும் அன்பிற்கு சொற்கள் தன்னை ஒப்புக்கொடுக்கும் வித்தை மிகவும் இலகுவாக கைகூடியிருக்கிறது கவிஞருக்கு. எவரின் சபித்தலுக்கும் ஆட்படாத ஒரு நாளை என்ற வார்த்தையும் பிறந்த தேதியே அறியாத ஒருத்தியின் பிறந்தநாளை இன்றைக்குக் கொண்டாடினால் என்ன என்ற வார்த்தையும் கவிதையின் தளத்தை மிகச் சிறப்பாக வேறொரு இடத்தில் நிறுத்துகிறது...


காதல் கவிதைகளும் தொகுப்பில் காணக் கிடைக்கின்றன 

"ஒரு மரத்தின் 

எப்போதும் 

உதிர்க்காத இலையை 

உன் பெயர் எழுதித் தந்து செல்கிறாய்

அவ்விலை 

என்னுள் ஒரு பெரும் மரமானது 

எக்கிளை காணினும்

உதிரவே உதிரா இலைகள்..."


"காத்திருத்தலைச் சுவையூட்ட 

ஒரு மழையை அனுப்பினாய் 

அது வேடிக்கை பார்த்தபடி இருந்த

நிலத்தை துள்ளல் இசைக்கு ஆடச் செய்தது 

ஓர் உடலின் ஒட்டுமொத்த சூட்டையும் 

ஒரு கோப்பையில் இறக்கித் தந்தது 

காலிக் கோப்பையை நிரப்பத் தொடங்கினேன் 

வழியும் முன்னமே வருகிறாய் 

பிறகு 

அந்த மழையை 

சுமந்தபடி பயணமானோம்..."


பெயர் எழுதி தந்து செல்லக்கூடிய இலை மனதில் பெரும் மரமாகி நிற்கிறது. கிளைகள் எங்கும் உதிரவே உதிரா இலைகள்! காதலின் தனித்துவம் சொல்லும் அற்புத வரிகள்.


 ஒரு மழையை காதலி அனுப்புகிறாள். மழையால் நிலமாடுகிறது. உடலின் ஒட்டுமொத்த சூட்டையும் கோப்பையில் நிரப்புகிறது. தொடர்ந்து காலி கோப்பையை மழையால் நிரப்ப தொடங்குகிறார் கவிஞர். ஆனால் காலி கோப்பை நிரம்புவதற்கு முன்னரே காதலி வருகிறாள். காலி கோப்பை அப்படியே இருக்கிறது. இன்னும் வழியவில்லை மழை காலிக் கோப்பையில். மழையை என்னசெய்ய... அந்த மழையை சுமந்தபடி பயணம் ஆகின்றனர் காதலர்கள். ஒரு அற்புத உணர்வை காதல் கொடுக்கிறது. அந்த உணர்வை கவிதையும் கொடுக்கும் என்று நிரூபித்துள்ளார் கவிஞர்.


தொகுப்பெங்கிலும் மென் ரசனைக் கவிதைகளே அதிகளவில் இருக்கின்றன. சில கவிதைகளில் ரசனையின் உச்சம் வெளிப்படுகிறது. கவிதையை கவிதையாக கண்டறியும் வாகு இவருடைய கவிதை எனலாம்.

அப்படி ஒரு கவிதை இது.

"பறத்தலில் சற்று குறைபாடுள்ள பறவை மேல் செல்கிறது 

சக பறவைகளின் விரைவைப் பொருட்படுத்துவதில்லை 

சின்னஞ்சிறு பறவைகள் முந்திச் செல்கையில் 

சுருக்கமாய் தேற்றிக்கொள்கிறது மழைக்காலங்களில் சிறகுதற்றும் பறவைகளை நேசிக்கிறது உடன்பிறப்பு பறவைகளின் கவனிப்புகளை விரும்புவதில்லை 

வழக்கமான இடங்களில் இருக்கும் தீனிகளே போதுமானதாகிறது  

யார் மீதும் புகார்கள்அற்ற அந்தப் பறவைக்கு 

உயரப் பறத்தல் இல்லை பறத்தலின் பொருட்டே திருப்தியுறுகிறது"


ஒரு கவிதையை ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாசித்தல் என்பது புரியாமல் வாசித்தல் ஒன்று. ரசனையின் பால் மீண்டும் மீண்டும் வாசித்தல் மற்றொன்று. காளிமுத்து அவர்களின் கவிதை ரசனையின் பால் வாசிக்கத் தூண்டும் கவிதை. மேலும் கவிதையின் பால் நம்மை இழுத்துச் செல்லக்கூடிய வகைமை.

"அம் மேசையிலிருந்து 

இடறி விழுந்த 

இரு குவளைகளில் 

ஒன்று என்னுடையது" 

அவ்வளவுதான் கவிதை. மேஜையில் பார்வை விழுதல், அந்த பார்வையின் திசை அடுத்து இடறி விழும் குவளையின் பக்கம் செல்லுதல், அடுத்து விழுந்த குவளை தன்னுடையது என்று அறிதல், அந்த மற்றொரு குவளை யாருடையது என்று வினவுதல், ஏன் விழுந்தது என்று கேள்வி எழும்புதல், எந்த மாதிரியான சூழலில் இந்த விழுதல் சாத்தியம் என்ற வினா தோன்றுதல், யார் யார் சந்தித்துக் கொண்டது என்று எண்ண வைத்தல், இப்படியான எண்ணத்தை உருவாக்கி விடுவது இவர் திட்டமிட்டு அமைத்ததா அல்லது கவிதை அமைக்கிறதா என்பதுதான் மீண்டும் மீண்டும் படிக்கச் செய்தலில் காணக்கிடைக்கும் லாவகம்...


கவிதைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையான கரு, கவிதைக்கான சொற்கள் பிரயோகம் என்பது ஒரு தேர்ந்த அனுபவசாலியான கவிஞன் கையாள்வது போல அவ்வளவு நேர்த்தி, என் கவிதைகள் இப்படித்தான் இருக்கும் என்பது போலான உத்தியை கையாளுதல், இயற்கையை பாடுதல் என தன்னுடைய முதல் தொகுப்பிலேயே கவிதையை கொண்டாடித் தீர்த்திருக்கிறார் கவிஞர். அவரோடு சேர்ந்து நாம் கொண்டாடும் அதே கணம் ஆச்சரியத்தையும் முன்வைத்து கொண்டாடித் தீர்க்கிறோம். 


இறுதியாக ஒரு கவிதை...


"இந்நேரமாகியும் 

ஒளிரும் அவ்வீட்டை 

கடப்பவளின் கைகளுக்குள் 

ஒரு மெல்லிய பகை 

சிணுங்கிக் கொண்டிருந்தது"

இந்நேரம் என்பது எவ்வளவு நேரம், ஒளிரும் வீடு யார் வீடு, கடப்பவள் என்பவள் யார், அவளுக்குள் எதற்கான பகை சிணுங்கிக் கொண்டிருந்தது, எப்பொழுது வீரியமாகும்... 


கவிஞர் அம்சப்ரியா கூறுவது போல

"கவிஞன் தனக்குள் இடைவிடாமல் கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற வேளையில் தனக்கான பாதிப்பை வெளிப்படுத்துகிற போது அது தனக்கான வடிவத்தை தேர்ந்தெடுக்கிறது. அது ஒரு சிறந்த கவிதையும் ஆகிறது..." அப்படித்தான் கவி காளிமுத்துவின் கவிதைகளும்.


வாழ்த்துகள் தோழர் ப. காளிமுத்து

9629446203

இருவாட்சி பதிப்பகம்...

Friday, 23 January 2026

சபலப் பயணி


ஆண்டிபட்டியில் ஒரு மணி நேரமாக காத்துக் கொண்டிருந்தாள் ராணி. திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள சென்று திரும்பி இருந்தாள். இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்தவள் என்று அவளை கூறவே முடியாது. கூடவே மணப்பெண் தோழி என்று கூறுவதை விட மணப்பெண் போலவே காட்சியளித்தாள் அவள். பேருந்து நிலையத்தில் பல கண்கள் அவளையே நோட்டமிட்டுக் கொண்டு இருந்தன. ஆனாலும் பேருந்துதான் வந்தபாட்டைக் காணோம். ஏதாவது பக்கத்து ஊரில் திருவிழா என்றால் பேருந்து விடமாட்டார்கள். ஏதாவது பஸ்ல ரிப்பேர் என்றால் பேருந்து விடமாட்டார்கள். ஏதாவது கட்சி மாநாடு என்றால் பேருந்து விடமாட்டார்கள். ராணி பொறுமையை இழந்து விட்டாள். அதன்பின் சும்மா இருக்கவேமாட்டாள். வாயில் வந்ததெல்லாம் சொல்லித் திட்டுவாள். 

"சனியன் புடிச்சவய்ங்க பஸ் நேரத்துக்கு வந்தே தொலையாது" 

"வெளங்காம போறவய்ங்க" 

"நாசமா போறவய்ங்க"

"எங்க போய் தொலைஞ்சாய்ங்களோ"

என்று கங்கு கணக்கில்லாமல் வார்த்தைகள் வந்து விழுந்து கொண்டிருந்தன. அந்த நேரம் பேருந்து நிறுத்தத்தில் "என்ன மதினி போகலாமா?" என்று குரல் கேட்க, குரல் வந்த திசையில் திரும்பினால்

"என்ன பூமி, என்ன இந்த பக்கம்? வரவா நான்?" என்று கேட்டுக்கொண்டே பைக்கில் ஏறி உட்கார்ந்தாள் ராணி.

"அணைக்கரப்பட்டிக்கு ஒரு விசேஷத்துக்கு வந்தேன். இந்த பக்கம் வந்தோம்னா ஒரு பஸ் கூட கிடைக்க மாட்டேங்குது. நீ என்னா இந்த பக்கம்?" என்று அவள் கேட்க,


"டாஸ்மாக் கடையில் இன்னைக்கு நான் லீவு போட்டு பிள்ளையார் சத்திரம் போயிட்டு திரும்புகிறேன்" என்று அவன் கூறினான்


பைக் போய்க்கொண்டு இருந்தது. அவளுக்கு தன்னுடைய கணவனின் ஞாபகம் வந்தது. ஒழுங்கா அடங்கி ஒடுங்கி வேலை வெட்டிக்குப் போயிட்டு வீட்டுல இருந்தா இன்னைக்கு நான் இரண்டு பிள்ளைகளோட நல்லா இருந்திருப்பேன். வீட்டில் பொண்டாட்டி குத்துக்கல் கணக்கா இருக்கிறா, இந்த லட்சணத்தில் இன்னொருத்திய பாத்துகிட்டு திரிஞ்சா எப்படி இருக்கும்? 


மனசு கேட்காம, "நீ போ சாமி, போ. இந்த ஊர்ல இருக்க வேணாம். போ. நான் வந்து உன்ன பாத்துக்குறேன். அந்த ஊர்ல நீ நல்ல வேலை செஞ்சு, உன் அளவுக்கு சம்பாதிச்சு இருந்துக்க. அது கூடப் போதும்" என்று அவள் தன்னுடைய கணவனிடம் கடைசியாகச் சொன்னதை மனதில் நினைத்துக் கொண்டே வந்தாள்.


மெல்ல தலைமுடி பறக்க, காற்று மோதும் திசையில் தலையை பைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டே வந்தாள். பூமி பைக்கின் முன்புறம் பார்த்து ஓட்ட, இவளும் அவன் பின்னால் இருந்து முன் பாதையை பார்த்தபடியே பயணம் செய்தாள். ஆனால் பூமியின் பயணம் நேராக இருந்தாலும் அடிக்கடி கண்ணாடியில் ராணியை பார்ப்பதும் பார்க்காத விதமாகத் தொடர்ந்து வந்தான். இவளுக்கு "ஏன் இவன் இப்படி பார்க்கிறான்? என்ற ஒரு எண்ணம். "என்ன பூமி, என்னைக்கும் பார்க்காத உலகத்த பாக்குற. பாதையை பார்த்து ஓட்டு. கீழே விழுந்து பல்லக் காமிச்சிராத" என்று முகத்தை கடிந்து வைத்துக் கொண்டு முன்புறம் பார்த்தவள் உட்கார்ந்த திசையிலேயே பார்வையை திருப்பிக் கொண்டாள்.


மீண்டும் ஓர் எண்ணம், தன் கணவன் கூட இருந்தால் இதுயெல்லாம் நடக்குமா. கூனோ, குருடோ வீட்டுல அவன் இருந்திருந்தால் யாரு சாவுகாசமும் இல்லாமல் இருந்திருப்பேன். சொந்தக்காரனாய் இருந்தாலும் இப்படி எவனோ ஒருவனுடன் பைக்ல வரும் சூழல் வந்திருக்குமா? கண்கள் ஓரத்தில் மெல்ல ஒரு துளி கண்ணீர் வந்தது.


சற்று பைக் இடது புறமாக திரும்பி உள்ளே செல்ல தொடங்கியது. "என்ன வண்டி இந்த பக்கம் போகுது?" என்ற உடன் பூமி "ஒரு சின்ன வேலை பார்த்துட்டு போவோம்" என்றான். "என்ன சின்ன வேலை? வண்டியை வீட்டுக்கு விடு. வேலை கெடக்கு. பிள்ளைக வந்து இருக்கும்" என்றாள் ராணி. "மதினி, ரொம்ப நாள் எனக்கு ஒரு ஆசை. உன்னோட நான் வாழனும். எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. நீ சரின்னு சொன்னேன்டா பயணியர் மாளிகையில போயி தங்கிட்டு நைட்டு நம்ம வீட்டுக்கு கிளம்பிப் போய்விடலாம். ஒன்னும் பயக்க வேணாம். அங்க இருக்கவங்க எல்லாம் எனக்கு தெரிஞ்சவங்க தான். அங்க ஒரு முறை மட்டும் வா. என்ன சொல்ற? உன்னிடம் நான் கேட்கிறதை விட, நீ வருவ என்ற நம்பிக்கை இருக்கு. இப்ப நாம அங்க தான் போறோம்" என்று கூறிக் கொண்டே பைக்கை வேகமாக ஓட்டினான்.


அவள் கோபத்தின் உச்சிக்குச் சென்று, "இப்ப பைக்க நிறுத்த முடியுமா? முடியாதா?" என்றவுடன் அவன் வண்டியை நிறுத்தினான். பின்னால் திரும்பி பார்த்தான். "ப்ளீஸ், ஒரு தடவை. என்ன ராணி இப்படி பண்ற. எனக்கு உன் மேல எவ்வளவு ஆசை இருக்கு தெரியுமா? நீயும் எத்தனை காலத்துக்கு இப்படியே இருப்ப?" என்று அவன் கெஞ்சும் தொனியில் கேட்டவுடன் பைக்கில் இருந்து இறங்கினாள்.


"யாருன்னு நெனச்சு இப்படி பேசிகிட்டு இருக்க. நீ நினைக்கிற ஆள் கிடையாது. நானும் அந்த கிராமத்தில் தான் இருக்கிறேன். இதை நான் வெளியில் சொன்னாலும் என்னதான் கேவலமா நினைப்பாங்க. உன்னை மாதிரி பலர நான் கடந்து வந்துட்டேன். தங்கம் மாதிரி ரெண்டு புள்ளைங்க இருக்குடா எனக்கு. இப்படியே நீ போயிரு. நான் ஒரு ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு போயிடுவேன்" என்று பின்னால் திரும்பாமல் வேகம் வேகமாக நடந்து செல்ல தொடங்கினாள் ராணி.

Sunday, 18 January 2026

மனசைக் கீறி முளைத்தாய் #மு.முருகேஷ்


மனசைக் கீறி முளைத்தாய்...

கவிஞர் முருகேஷ் மு


வெளிச்சம் வெளியீடு


ஒரு காதல் கதையும்

பல காதல் கவிதைகளும்...


காதலைச் சொல்ல ஓர் ஆகச் சிறந்த வழி கவிதை. காதல் கதை சொல்லவும் அவ்வழியே பொருத்தம் என நினைத்து நீள் கவிதை வாயிலாக நண்பரின் காதலை கூறியிருக்கிறார் கவிஞர். பார்க்காமல் உயிரெங்கும் பரவிய காதல், சொல்லாமல் கொள்ளாமல் பிரிந்து சென்றால் அதன் வலி எப்படியிருக்கும் என்பதை வலிச் சொற்களால் பதிவு செய்திருக்கிறார். தவறும் சந்திப்புகள், குறும்புகள், கனவுகள் என நடைபோடுகிறது காதல். இடையிடையே கவிதைகளும்.


மெதுவாக நட

உன் பாதங்களுக்குக் கீழ்

என் இதயம் - எனும்போது

தானாகவே நம் கண்களும் 

பூமி பார்த்துச் செல்கிறது.


வேதத்தை காதலாக்கியிருக்கிறார் கவிஞர். வேதம் என்பதும் அன்பைப் போதிப்பது தானே.


காதலைச் செய்

பலனை எதிர்பாராதே.


ஒரு கன்னத்தில்

முத்தமிட்டால்

மறு கன்னத்தையும் காட்டு


உனக்கு முன்னால்

என் காதல் செல்லும்


எம்மதமும்

சம்மதம் தான்

காதலுக்கு...

என காதலைப் பொதுமைப்படுத்தியிருக்கிறார் கவிஞர்.


அரசுப் பேருந்து, தனியார்ப் பேருந்தும் கவிதைத் தேராகிவிடுகிறது காதலில்.

அரசுப் பேருந்தைப் போல்

காலியாக இருந்த

என் மனசை

ஒரு நொடிக்குள்

தனியார்ப் பேருந்தைப் போல்

நிறைத்துக்கொண்டு

சென்றவள் நீ

என்கிறார்.


காதல் ஆத்திச் சூடி

அருமையான வார்ப்பு.


அன்பே உயிர்

ஆசை விதையிடு

இதயம் கண்டுணர்

ஈரம் கசி

உள்ளம் உணர்

ஊசி நூலாகுக

எண்ணுக புதுமை

ஏறெடுத்து முகம் காண்

ஐயம் விலக்கு

ஒழிக சாதி

ஓருயிராகுக

ஒளவியம் களை.


ஒழிக சாதி என்பதில் முற்போக்கும் காதலுக்கான தடை சாதி... அது ஒழியவேண்டும் என்பதும் வெளிப்படை. நீளும் ஆத்திச் சூடி இன்னும் சிறப்பு.


வாழ்த்துகள் தோழர். 

Sunday, 14 December 2025

இது என்ன மாயம்... இரவாக நீ... நிலவாக நான்...


 #இது_என்ன_மாயம் #திரைப்படம்


#இரவாக_நீ 

#நிலவாக_நான்...என்ற பாடல்


மழை மனதிற்குள் மெல்ல மெல்ல இறங்கி உயிரின் வேர்கள் பரவும் திசை அனைத்தையும் தொட்டு தொட்டு தொட்டு மெல்ல நிலமெங்கும் படர... பரவ... உயிர்ப்பிக்கிறதா அல்லது மயக்கமடையச் செய்கிறதா என எண்ணக் கூடிய அளவிற்கு ஒரு சுகந்தம் அளிப்பதுபோல்...


எப்பொழுதெல்லாம் மழையில் நனைய வேண்டுமோ அப்பொழுதெல்லாம் நான் இரவாக நீ நிலவாக நான் என்று பாடலுக்குள் குடிபுகுந்து கொள்கிறேன். வேறு மாதிரியாக கூறுவது என்றால் இப்பொழுது எல்லாம் பெரும்பாலும் இந்தப் பாடல் தரும் மழையில் நனைந்து கொண்டு தான் இருக்கிறேன் ஒரு நூறு முறைக்கு மேல் இந்தப் பாடலை கேட்டிருப்பேன்... நனைந்திருப்பேன்...


சாரலுக்கு அடுத்த நிலை. மழைக்கு முந்தைய நிலை... அப்படிப்பட்ட ஒரு பதத்தில்தான் பாடல் தொடங்குகிறது...

உள்ளிருந்து வரும் பெண் குரலில்


"இரவாக நீ 

நிலவாக நான்..."

என ஒலிக்கத் தொடங்கும் பாடல் வரிகளை அடுத்து அப்பெண் குரலை கொஞ்சமும் இம்சை செய்யாமல் ஆண்குரல் அடுத்து தொடங்குகிறது 


"தொலையும் நொடி கிடைத்தேனடி இதுதானோ காதல் அறிந்தேனடி... 

கரை நீ பெண்ணே 

உன்னைத் தீண்டும் அலையாய் நானே ஓ... நுரையாகி நெஞ்சம் துடிக்க..."

விளிம்பில் நின்று வாழ்வைப் பார்க்கும் ஒருவனுக்கு காதல் பரிசு கிடைத்தால் எப்படியிருக்கும் என்பதை பாடல் வரிகளைப் பாடி பார்த்தால் மட்டுமே உணர முடியும்...


கொஞ்சம் இசை கசிகிறது வரிகள் ஏதுமில்லாமல். மீண்டும் பல்லவி வரிகள்.

தொடரும் இசை முதல் சரணத்தின் பாடல் வரிகளைக் கொண்டு வருகிறது....


காதலன் பாடுகிறான்...

"விழி தொட்டதா 

விரல் தொட்டதா 

எனது ஆண்மை தீண்டி 

பெண்மை பூ பூத்ததா..."

ஒரு பார்வை 

பார்த்தவுடன் காதல் 

அந்த காதலைத் தாண்டி கூடல் என்பதை மிகவும் நளினமாக இந்த மூன்று வரிகளுக்குள் அடக்கி இருக்கிற வித்தையை என்னவென்று சொல்வது...

அடடா...


காதலி பாடுகிறாள்...

"அனல் சுட்டதா 

குளிர் விட்டதா 

அடடா என் நாணம் 

இன்று விடை பெற்றதா..."

இந்த மூன்று வரிகளையும் மேற்சொன்ன மூன்று வரிகளையும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வைத்துப் பார்த்தால் இன்னும் ஒரு கவித்துவத்தை உணர முடியும்.


விழி தொட்டதா அனல் சுட்டதா 

விழி தொட்டதால் அந்தப்பார்வை அனல் போல் சுட்டதா 


விரல் தொட்டதா

குளிர் விட்டதா

விரல் தொட்டதால் உடம்பில் படர்ந்திருந்த குளிர் விட்டு விட்டதா

என்று பொருள் கொள்ளலாம்..


எனது ஆண்மை தீண்டி பெண்மை பூ பூத்ததா 

அடடா என் நாணம் இன்று விடை பெற்றதா 

ஒரு பெண்மையை பெண்மை நிலையிலிருந்து வெளிக்கொணரக்கூடிய ஒரு தருணமாக ஒரு ஆகச்சிறந்த காமம் அமையும். அந்தச் சூழலை இந்த வரிகளில் பார்க்கமுடியும் எனது ஆண்மை தீண்டி பெண்மை பூ பூத்ததா என்ற அவனின் கேள்விக்கு அடடா என் நாணம் இன்று விடை பெற்றது என்று இவள் கூறுவதாக பொருத்திப் பார்க்கலாம்...


காதலன் பாடுகிறான் 

"நீ நான் மட்டும் 

வாழ்கின்ற உலகம் போதும் 

உன் தோள் சாயும் இடம் போதுமே..."

பல பாடல்களில் நாம் கேட்டிருப்போம் ஒரு தனி உலகம் அதில் நாம் மட்டும் சுதந்திரமாக காதலை வாழ்வை அனுபவிப்போம் என்று பொருள்படக்கூடிய வரிகள் இருக்கும். ஆனால் இந்த வரிகளில் காதலன் என்ன கூறுகிறான் என்று உற்று நோக்கினால் உனக்கும் எனக்குமான ஒரு தனி உலகம் என்பது முதல்வரி 

ஆனால் அடுத்த வரியில் உன் தோள் சாயும் இடம் போதுமே...

ஒரு உலகம் முழுவதையும் வாங்கிக் கொண்டாலும் உன் தோள் சாயும் இடம் போதுமே என்று கூறும்பொழுது அந்தத் தோள் தரக்கூடிய ஒரு சுகந்தம் வேறு எங்கும் கிடையாது. அந்த உலகத்தில் எங்கும் இல்லாத ஒரு சுகம் அவளின் தோளில் இருக்கிறது. ஆக அது காமத்திற்கு அப்பாற்பட்ட ஒரு காதல். அந்தக் காதல் மட்டுமே இந்த வரிகளை தரமுடியும்.


காதலி பாடுகிறாள் 

"உன் பேர் சொல்லி 

சிலிர்க்கின்ற இன்பம் போதும்

இறந்தாலும் மீண்டும் பிழைப்பேன்... ஒன்றோடு ஒன்றாய் கலக்க 

என்னுயிரே காதோரம் காதல் உரைக்க..."

இந்த வரிகளை ஒரு பெண் பாடுவது போல் பாடலில் வருகிறது. ஆனால் இந்த வரியைக் கேட்கும் பொழுது ஒரு ஆணாக நானும் அந்த வரிகளை உச்சரித்து பார்க்கிறேன். உன் பேர் சொல்லி சிலிர்க்கின்ற இன்பம் போதும் என்னும் பொழுது அவரவர் மனதில் நிறைந்து இருக்கக்கூடிய அந்தக் காதலியின் பெயரை உச்சரிக்கக் கூடிய ஒரு கட்டளையை இந்த வரிகள் பிறப்பிக்கிறது என்று நான் உணர்ந்தேன். நானும் அவள் பெயரை உச்சரித்து பார்த்தேன் அவ்வளவு அற்புதமாக அந்த வரிகள் இருபாலினருக்கும் பொருந்துவதாக அமைந்திருக்கிறது. 

பெயர் உச்சரிக்கும் அந்த சுகந்தம் என்பது இறந்தாலும் மீண்டும் பிழைப்பதற்கான ஒரு அசாத்தியத்தை சாத்தியப்படுத்துவதாக ஒரு மெட்டு இந்த வரிகளில் காணக்கிடைக்கும். முக்கியமாக இந்தப் பாடலில் வரக்கூடிய என்னுயிரே என்ற ஒரு  சொல் மீண்டும் மீண்டும் மீண்டும் உயிரை ஒரு பாடு படுத்தவே செய்யும். அத்தனை அற்புதமாக அத்தனை இலாவகமாக உயிரை தாலாட்டக்கூடிய ஒரு உணர்வை தரக்கூடிய சொல்லாக அது அமைந்திருக்கிறது.


சரணம் இரண்டில் அவன் பாடுகிறான் "மழை என்பதா 

வெயில் என்பதா 

பெண்ணே உன் பேரன்பை 

நான் புயல் என்பதா..."

 ஒரு பெண்ணின் காதலை எதனுடன் ஒப்பிடுவது 

அதனை கொட்டும் மழை என்று சொல்வதா 

நனைக்கும் மழை என்று சொல்வதா

நனையத் தூண்டும் மழை என்று சொல்வதா 


சுடும் வெயில் என்று சொல்வதா 

இதமாக இருக்கும்  வெயில் என்று சொல்வதா 

ஒரு பயிருக்கு தேவையான அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான வெயில் என்று சொல்வதா 


இத்தனையையும் கேட்டு விட்டு கடைசியாக மீண்டும் ஒரு கேள்வியை முன் வைக்கிறான் 

பெண்ணே உன் பேரன்பை 

நான் புயல் என்பதா 

இந்த மழைக்கும் வெயிலுக்கும் அப்பாற்பட்ட ஒரு பார்வையாக பேரன்பை புயல் என்று நான் கூறி கொள்ளட்டுமா அப்படி புயல் என்றால் அது சாத்தியப்படுமா... 

சில புயல்கள் மண்ணிற்கு மழையைத் தருவிக்கும் 

அந்த மழை மண்ணை வாழவைக்கும்

மண்ணிற்கு தேவையான ஒரு புயலாக இருக்கும் ஆதலால் அந்தப் பேரன்பை புயலோடு ஒப்பிட்டு கேட்கிறான் என்று நாம் நினைத்துக் கொள்வோம்


அடுத்து காதலி பாடுகிறாள் 

"மெய் என்பதா 

பொய் என்பதா 

மெய்யான பொய் தான் இங்கே 

மெய் ஆனதா..."

இந்தக்காதல் என்பது சாத்தியப்படும் பொழுது எல்லாம் வசந்தம் பெறும். எல்லாம் இனிதே நிறைவேறிவிட்டது என்ற எண்ணத்தில் அந்த கனவு வாழ்க்கையை வாழ தொடங்கியதால் இதனை மெய் என்று கூறுவதா 

அல்லது ஒரு கனவு கண்ட வாழ்க்கையை நனவில் அடையத் தொடங்கி விட்டால் அந்த நனவு வாழ்க்கையின் கனவு போலத் தோன்றும் என்பதால் பொய் என்பதா என்று கேள்வியை முன்வைக்கிறான் காதலன்.  இது மெய்யும் இல்லை பொய்யும் இல்லை இரண்டுக்கும் நடுவில் ஆனது என்பதை மனதில் கொண்டு இவள் மெய்யான பொய் தான் இங்கே மெய் ஆனதா என்கிறாள். நன்றாக யோசித்து பார்த்தோமென்றால் ஒரு காதலை அனுபவிக்க மட்டுமே முடியும்.  அது நினைவெனினும் வாழ்ந்து கொண்டிருக்க முடியும்.  ஆக மெய்யான பொய் ஆம் நினைவு என்பதைப்போல இந்த காதலும் மெய்யான பொய் போல நனவு போன்ற கனவு போல கனவு போன்ற நனவு போல அத்தனை அழகானது.


காதலன் பாடுகிறான் 

"அடியே பெண்ணே 

அறியாத பிள்ளை நானே 

தாய் போல் என்னை 

நீ தாங்க வா..."  என்று.

சரணம் ஒன்றில் 

நீ நான் மட்டும் 

வாழ்கின்ற உலகம் போதும் 

உன் தோள் சாயும் இடம் போதுமே

என்றவன் தான் இங்கு 

அடியே பெண்ணே 

அறியாத பிள்ளை நானே 

தாய் போல் என்னை 

நீ தாங்க வா... 

என்கிறான்.


ஒரு தாய் தன்னுடைய தோளில் தன்னுடைய இடுப்பில் தன்னுடைய மடியில் போட்டு தன் குழந்தையைத் தாங்கிக் கொள்வதைப் போல காதலன் தன்னுடைய காதலியை, தாய் போல் என்னை நீ தாங்க வா என்று அழைக்கிறான். வரிகளோடு நாம் பயணிக்க இந்த மெட்டு இன்பத்துடன் கூடிய எளிமையைக் கொண்டுள்ளது. 


காதலன் கேட்டுவிட்டால் காதலி செய்து தராமல் போய் விடுவாளா... ஆகையால் அவனுடைய ஆசையை அவளும் நிறைவேற்றுவதற்கு தயாராகிறாள்... பின்வரும் வரிகள் வாயிலாக...

"மடி மேல் அன்பே 

பொன் ஊஞ்சல் நானும் செய்தே

தாலாட்ட உன்னை அழைப்பேன்..."

இந்த வரிகள் ஒவ்வொன்றும் கற்பனைக்கு எட்டாத ஒரு உலகத்தை கண் முன்னே நிறுத்தும். கற்பனையான வரிகள். ஆனால் அந்த கற்பனையில் வாழ்ந்து பார்க்க தூண்டும் வரிகள்.


தொடர்ந்து 

"ஒன்றோடு ஒன்றாய் கலக்க 

என் உயிரே 

காதோரம் காதல் உரைக்க...

இரவாக நீ  இரவாக நீ

நிலவாக நான் நிலவாக நான்...

உறவாடும் நேரம் சுகம் தானடா..."

என பாடல் நிறைவு பெறுகிறது.


மறைந்த நா.முத்துக்குமார் பாடல் வரிகள். இசை ஜி வி பிரகாஷ் குமார்.

இறப்பிற்கு முன்னான உன்னுடைய கடைசி ஆசை என்னவென்று கேட்டு நிறைவேற்றக்கூடிய சந்தர்ப்பம் ஒன்று அமைந்தால் 

என் முதல் ஆசையாக என்னுடைய காதலியின் மடியில் அவளைப் பார்த்துக் கொண்டே என் உயிர் பிரிய வேண்டும். அல்லது இப்படி பாடலொன்றில் அவளோடு வாழ்ந்து கொண்டு இந்த உயிர் மறைய வேண்டும் என்றுதான் வேண்டுவேன். 


நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு பாடலை நூறு முறை அளவிற்கு கேட்டு இருக்கிறேன் என்றால் அது இந்தப்பாடல் தான். வாய்ப்பு இருந்தால் கண்களை மூடிக்கொண்டு இந்தப் பாடலை ஒலிக்கவிட்டு நீங்களும் கேளுங்கள். மன்னிக்க நீங்களும் வாழுங்கள் உங்களுக்கு பிடித்தமான காதலியோடு அந்த கற்பனை உலகத்தில் நீங்கள் வாழலாம். அதி அற்புதம் காணலாம்.


யாழ் தண்விகா

Monday, 1 December 2025

காதலின் பின் கதவு - பழநி பாரதி

 


காதலின் பின் கதவு

Palani Bharathi

கவிதைத் தொகுப்பு...


 நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு கவிதைத் தொகுப்பை வாசித்தேன். தலைப்பே ஒரு வசீகரத்திற்குள் அழைத்துச் சென்றது முதல் காரணம். கவிக்கோ அப்துல் ரகுமான் முன் கதவு வழியாக அணிந்துரை அளித்திருக்கிறார். 


காதல் கவிதைகள் தொகுப்பு என்றெண்ணி ஆர்வம் மேலிடப்புகுந்தேன் தொகுப்பிற்குள். அதற்கேற்ப உற்சாகம் தூண்ட முதல் கவிதையும்...

"தண்டவாளத்தில்

தலை சாய்த்துப் பூத்திருக்கும்

ஒற்றைப்பூ

என் காதல்


நீ நடந்து வருகிறாயா

ரயிலில் வருகிறாயா?"

எப்போதோ காதல் படிக்கட்டுகள் என்ற நூலில் படித்த கவிதை. இதயத்தை விட்டு இன்றளவும் மறையாதிருந்த கவிதை . ஒரு மனிதனின் காதல் ஏற்கப்படுமா ஏற்கப்படாதா என்பதை உணர்தல் நிமித்தமாக எழுதப்பட்ட கவிதை. சிறப்பு. தொகுப்பின் உள் செல்கிறேன். 


ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு பரிமாணத்தில் மிளிர்கிறது . மலையேற்றம் கவிதை வர்ணனை அழகு.


"உடைந்த 

வளையல் துண்டுகளையாவது 

கொடுத்துவிட்டுப் 

போ


கலைடாஸ்கோப்பில்

உன்னைப்

பார்த்துக்கொண்டிருப்பேன்"


முதல் கவிதை போலவே இதுவும் காதலில் மூழ்கிக் கிடக்கும் மனதின் கவிதை...


மழைக் குரல் கவிதையில் காதல் மழை.  அவள் இல்லாத நேரத்தில் பொழியும் மழை. அது உண்டுபண்ணும் வலியை ஒப்பிட்ட விதம் அத்தனை அழகு அதே நேரத்தில் வலியும் ...


இன்று

நீ இல்லாமல்

விட்டு விட்டு

விடாமல் பொழியும்

இந்த மழையில்

ஒரு மண் குடிசைவாசியாக

மறுகிக் கொண்டிருக்கிறது

காதல்


அதைக் கடக்கும் அடுத்த பத்தியில்

அரசியல் நுழைக்கிறார் கவிஞர் ... ஆனால் அந்த ரசனை வேறொரு உச்சத்தில் .. 

"வெள்ளப் பிரதேசத்தை

ஹெலிகாப்டரில் பார்வையிடும்

பிரதமர் மாதிரி

கண்ணாடி ஜன்னலுக்குப்

பின்னாலிருந்தாவது

கை நீட்டித் தொடு

இந்த மழையை"

என்கிறார் கவிஞர். ஒரு காட்சியை கண்முன் வர வைத்து ஏங்குதலை நிகழ்த்தும் அற்புதம் இது. 

 


உறைந்த நதி என்னும் கவிதையில்

"எந்த நிழலிலும் 

உன் ஆறுதல் இல்லை

எந்த வாழ்த்திலும்

உன் குரல் இல்லை" என்ற வரிகள் உரைக்கும் தலைப்பிற்கான நியாயத்தை .


நீ இல்லாத போது தலைப்பில் 3 கவிதைகள். 

ஒவ்வொன்றிலும்

ஒவ்வொரு ரசனைக்கான கூறுகள்...

"நீ வராத வெறுமையில்

பூங்காவின் காவலாளிக்கு

ஒரு புன்னகையைக் கூட

திருப்பித் தராமல் 

இன்று நான் வெளியேறியது

எத்தனை உறுத்தலானது"

ஒருமுறை காதலிக்காக பூ வாங்கிச் செல்கிறேன். அவள் வரவியலா சூழல் திடீரென. சந்திக்கும் நட்பு அத்தனையிடமும் மெளனம் மட்டுமே பேச்சாக எனக்கு. கவிதையில் உள்ளது போலென்றால் காவலர் போல் எத்தனை மனங்களுக்கு நான் அந்நியமாக இருந்திருப்பேன் என்ற உறுத்தல் தோன்றுகிறது இப்போது...


இப்படிக் கடக்கும் காதல் கவிதைகள் சட்டென வேறு பாதையில் பயணிக்கத் தொடங்குகிறது.


உலகம் பயணிக்கும் பாதை, பெண் குறித்த கவிதைகள், நடிகைக்கு, நகைக்கு, தாத்தாவுக்கு ஒரு கவிதை என நீள்கிறது.


செடி மகள் என்ற கவிதையில்

"செடியை வளர்ப்பது 

சுலபமாக இருக்கிறது

பூக்களைப்

பத்திரப்படுத்துவதுதான்

எப்படியென்று தெரியவில்லை" ...

வன்புணர்வு குறித்த வலி உயிரெங்கும் பரவுகிறது வரிகள் வாயிலாக ...


இரத்தத்தின் நிறம் பச்சை என்ற கவிதையில்

தாயாக, மனைவியாக, குழந்தையாக என உயிர் உறவுகளை ஒப்பிட்டு மரத்தின் உச்ச குணத்தினை அழகுறக் கூறியுள்ளார். 


ரயிலில் வந்த 3 வது கவிதை.

"எங்கு இறங்குவாள் 

என்று தெரியாது

எதிரில் உட்கார்ந்திருந்தாள்


அவளிடம் கொஞ்சம்

தண்ணீர் கேட்க நினைத்து

கேட்காமலேயே

கண்ணயர்ந்துவிட்டேன்


விழித்தபோது

அவள் இல்லை

இருந்தது

ஒரு தண்ணீர் பாட்டில்"

எத்தனை பரவசம் அளித்திருக்கும் அந்த கணம். தாகம் தோற்றுவிக்கிறது ரயிலில் கிடக்கும் அந்தத் தண்ணீர் பாட்டில் ...


"நான் யோசித்துக் கொண்டிருப்பேன்

தடயங்களற்றுப்

பறக்கும் சுகத்தை" என்கிறார் கவிஞர் ...

தொகுப்பானது உலகில் தடம் பதித்து ஏறக்குறைய 20 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனாலும் சம காலத்திற்கும் பொருந்தும் பொருண்மையால் இது கவிஞர் பழநி பாரதி அவர்களின் தடயம் என இன்னும் பறைசாற்றிக் கொண்டிருப்பதே போதும் கவிதைக்கான வெற்றியெனக் கூற...


வாழ்த்துகள் கவியே...


யாழ் தண்விகா