Saturday, 14 February 2026

நிறத்தைத் தாண்டிய நேசம் #ச.மாடசாமி

 


நிறத்தைத் தாண்டிய நேசம்

To Sir with Love வாசிப்பனுபவம்

ச.மாடசாமி

வாசல் பதிப்பகம், மதுரை

பக்கங்கள் 104

விலை ரூ.150


 பிரைத்வைட் கயானா தீவைச் சேர்ந்த கருப்பு இனத்தவர். பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த பகுதி. பிரிட்டனை வியந்து பார்க்கும் பிரைத்வைட், இங்கிலாந்துக்கு வந்தபிறகு அதன் இன்னொரு முகத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இங்கிலாந்து ராணுவத்தில் இணைந்து பணி செய்கிறார். அப்போது அவரின் நிறம் யாருக்கும் பெரிதாகப் படவில்லை. இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் பிரைத்வைட் பணி இழக்கிறார். பல பகுதிகளில் வேலை தேடுகிறார். செல்லும் வேலைக்கெல்லாம் இவரின் நிறம் காரணமாக புறக்கணிக்கப் படுகிறார். முன்பின் தெரியாத நண்பர் ஒருவரின் உரையாடலின்போது லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள கிரீன்ஸ்லேடு பகுதியில் ஆசிரியர் வேலை காலியாக இருப்பது அறிந்து அங்கு செல்கிறார். அப்பகுதி வறுமையில் உழலும் வெள்ளை மனிதர்கள் வசிக்கும் பிரிட்டனின் சேரிப்பகுதி. அங்கு பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் வெள்ளை இனத்தவர். மாணவர்கள் சுதந்திரமான முறையில் கல்வி கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருபவராக தலைமையாசிரியர் புளோரியன் இருக்கிறார். அங்கு பணிபுரியும் வெஸ்டன் என்ற ஆண் ஆசிரியர் எந்த முயற்சி என்றாலும் அதை ஏற்காதவர். எதையும் கிண்டலாக அணுகக்கூடியவர். பிரைத்வைட்டிற்கு முன்னர் ஹெக்மேன் என்பவர் ஆசிரியராக வந்து மானவர்களின் செயல்களைத் தாக்குப்பிடிக்காமல் ஓடியவர். பெண் ஆசிரியர்களிடத்தில் கொஞ்சம் தோழமை உணர்வு இருப்பது கண்டு அவர்களிடம் மாணவர்களின் முன்னேற்றத்திற்குத் தேவையான ஆலோசனைகள் பெறுகிறார். கொஞ்சம் தடுமாறினாலும் பின்னர் தொடர் முயற்சியின் பலனாக மாணவர்களை நல்வழிப்படுத்தும் பணியில் வெற்றி பெறுகிறார். கில்லியன் என்ற ஆசிரியருடன் காதல் பிறக்கிறது. அவள் வெள்ளை இனத்தவள். பிரைத்வைட் கருப்பினர் என்ற வேறுபாடு இவர்களுக்கிடையில் இல்லையெனினும் கில்லியனின் தந்தை வாயிலாக பிரிவு ஏற்படுகிறது. கடைசியில் திருமணம் முடிந்ததா என்பதை வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம். கலப்புத் திருமணம் முடிந்த ஒரு தம்பதியரின் மகன் சீயல்ஸ் அப்பள்ளியில் படிக்கிறான். வெள்ளை இனத்தைச் சேர்ந்த அவன் தாய் இறக்கிறாள். அந்த இறப்பிற்கு செல்லவேண்டும் என  பள்ளிக் குழந்தைகளுக்கு விருப்பம். ஆனால் பெரியோர்கள் திட்டுவார்கள் என்பதால் செல்வதற்கு மறுக்கிறார்கள். பிரைத்வைட், தான் கற்பித்த அனைத்தும் வீண். இவ்வளவு நாள் நடத்திய விவாதம் அனைத்தும் வீண். இவர்களும் பெரியவர்கள் போல் இன துவேசத்தை தூக்கிச் சுமக்க விரும்பும் நபர்கள் தான் என்ற முடிவிற்கு வருகிறார். பமீலா எனும் மாணவி மட்டும் வருவதற்கு சம்மதிக்கிறாள். சக மாணவிகள், மாணவர்கள் யாருக்கும் பெரியவர்களை எதிர்த்து இறப்பு வீட்டிற்கு வரும் துணிச்சலில்லை. மறுநாள் சீயல்ஸ் வீட்டை பிரைத்வைட் நெருங்கியபோது அங்கு வகுப்பு மாணவர்கள் அனைவரும் திரண்டு நிற்பது கண்டு பிரைத்வைட்டிற்கு கண்களில் கண்ணீர். இன்று பள்ளியில் நடைபெறும் பெரும்பாலான பிரச்சனைகள் 1940 ஆம் ஆண்டில் பிரைத்வைட் தன்னுடைய 28 வயதில் பள்ளி ஆசிரியராகப் பணியேற்க செல்லும்போதே இருந்துள்ளது. பாலியல் பிரச்சனைகள், இனத் துவேஷம், சக ஆசிரியருடன் காதல், பிரைத்வைட் வகுப்பில் படிக்கும் மாணவி அவரின்மேல் கொண்ட அன்பு, அதனால் உண்டாகும் சந்தேகங்கள், சக ஆசிரியர்கள் ஒத்துழைக்காமை என பல பிரச்சனைகள். ஆனால் அத்தனையையும் கடந்து சாதித்த மனிதனாக பிரைத்வைட் இருக்கிறார். போராட்டம், உருக்கம், தோல்வி, காதல், வெற்றி என பல உணர்வுகளின் கலவையாக இருக்கிறது பிரைத்வைட் வாழ்க்கை. வழக்கம்போல தன்னுடைய இயல்பான எழுத்தால் வாசிக்கத் தூண்டுகிறார் தோழர் ச.மாடசாமி. ஆசிரியர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல். தம்மைத் தாம் ஊக்குவித்துக்கொள்ள இது போன்ற நூல் நிச்சயம் கைகொடுக்கும் என்பது திண்ணம்.


யாழ் தண்விகா

ஊரடங்கு உயிரடங்கு #ஏகாதசி

 


ஊரடங்கு உயிரடங்கு

ஏகாதசி 

சமம் பதிப்பகம் 

பக்கங்கள் 66

விலை ரூ.70


கொலை மேகம் சூழ்ந்திருந்த காலம்...


ஊரடங்கு காலத்து அரசியல் பேச துணிச்சல் வேண்டும். அதுவும் நேரடியாக சொல்லுமளவு என்றால் இன்னும் துணிச்சல் வேண்டும். காரணம் அநீதிக்கு ஆதரவு சக்திகள் பெருகிக்கொண்டிருக்கும் காலம் இது. அவ்வகையில் இத்தொகுப்பு கொரோனோ காலத்து அரசியலைப் பேசுகிறது. கவிஞர் இரா.பூபாலன் எழுதிய தீ நுண்மி காலம் கவிதைத் தொகுப்பிற்குப் பின்னர் நான் வாசித்த கொரோனோ காலக் கவிதைகள் இவை. 


அவ்வளவு வேகமாகக் கடந்துசெல்ல நாம் மகிழ்வையா கடந்தோம்? துயர் நாட்கள் கொரோனோ காலம் என்பவை. கொரோனோ என்பது நோயே அல்ல என்று ஒருபுறம். கொரோனோ நோய் என்பது உயிர்க்கொல்லி என்பது ஒருபுறம். வரும், ஆனா போயிடும் என்று ஒருபுறம் என பீதியில் ஒரு நோய் வைத்திருந்தது என்றால் அது கொரோனோ காலம் தான். எப்படா மருந்தைக் கண்டுபிடிப்பார்கள் என்று காத்திருந்து காத்திருந்து ஏறக்குறைய எல்லாம் முடிவுக்கு வரும் சூழலில் தடுப்பூசி வந்தது. ஆபத்பாந்தவன் தடுப்பூசி என்று சொல்லிக்கொண்டிருந்த சமயத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் கொரோனோ வந்தது. தடுப்பூசி, மருந்து, மாத்திரை, முகக்கவசம் என எல்லாவற்றிலும் உலகக் கைங்கர்யம் இருந்ததாகச் சொல்லப்பட்ட காலகட்டம். இவற்றிற்குள் நடக்கும் கூத்தினை தோழர் உமர்ஃபாரூக் எழுதிய கோடிக்கால் பூதம் என்ற நாவலில் காணலாம். பதட்டப்படுத்தியே, பயமுறுத்தியே ஒரு மனிதனுக்கு மருத்துவத் தேவையைக் கட்டாயமாக்கும் கண்கட்டு வித்தையை இந்தக் காலத்தில் தான் கண்ணாரக் காண நேர்ந்தது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல அமைந்ததுதான் ஒன்றிய மாநில அரசுகளின் நகைச்சுவைத்தனமான நடவடிக்கைகள். இவற்றைக் காட்சிப்படுத்துவது தான் ஓர் எழுத்தாளனின் கடமை. அதைச் செவ்வனே தன்னுடைய கவிதைகளில் கொண்டுவந்துள்ளார் தோழர் ஏகாதசி.


ஒலி அலர்ஜி மற்றும் ஒளி அலர்ஜி உடையது கொரோனோ என்பது உலக அறிவியல் அறிஞர்களுக்கு முன்பே இங்கு ஒரு நபருக்குத் தெரிந்து அதனை நாடே செயல்படுத்தச் சொன்னார். அதனை நாடும் செயல்படுத்தியது. அது என்னவென்று தெரியுமா... எவ்வளவு பகடி பாருங்களேன்... கவிதையைப் படியுங்களேன். 

கொரோனோவுக்குப் 

பாரதப் பிரதமர் 

மோடி கண்டுபிடித்த 

இரண்டு மருந்துகளின் 

பெயர்களைக் கீழ்க்காண்க.

கைதட்டல் 250 mg

விளக்கு ஏற்றுதல் 500 mg.


தான் யாருக்காக பாடுபடுகிறேன் என்பதைச் சொல்லிவிடுதல் அரசியல். அதுவும் ஒடுக்கப்படும் பக்கம் நின்று பேசுதல் என்பதற்கு துணிச்சல் வேண்டும். தன்னுடைய நிலைப்பாட்டை, தான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் கொள்கைகளையும் எடுத்துச் செல்பவராக தோழர் இருக்கிறார் என்பதை இக்கவிதைகளை வாசிக்கும்போது உணர முடிகிறது. ஊரே சிங்கிள் சோர்ஸ் என்று கதை வளர்க்க ஒரு கூட்டம் திட்டமிட்டு மீண்டும் மீண்டும் பேசியது. தமிழகத்தில் தலைமைச் செயலாளர் கூட மீண்டும் மீண்டும் கூறினார். அவர்கள் இல்லாவிட்டால் அங்கு கூடாவிட்டால் இங்கு கொரோனோ வந்திருக்கவே செய்யாது என்ற தகவல் கட்டவிழ்க்கப்பட்டு ஓடிய போது கவிஞர் இது யாரால் விளைந்தது என்று கூறுகிறார். ஆம் அந்தக் கதை வலதால் வந்தது என்பதைக் கூறும் அதே சமயம் அதை முறியடிக்க இடதால் முடியும் என்கிறார். கவிதை இது.

“வலது” காலை எடுத்துவைத்து

வந்த கொரோனோ அழிய

வேறு வழியே இல்லை

நம்

“இடது” கை ஓங்கினால் ஒழிய...


கோபம் தலைதூக்கும்போது ஆக்ரோஷம் வந்துவிழும். அதற்கு யோசிக்கத் தெரியாது. போலவே கிண்டல் வந்தும் விழும். அந்தக் கிண்டல் முழுதும் உணர்ந்து பூக்கும் கிண்டலாக இருக்கும். ஊரடங்கில் வீட்டில் அடைந்து கிடக்கும் குடும்பங்கள் பசியால் அல்லாடும்போது இங்குள்ள அரசுகள் செய்த கூத்துக்கள் சொல்லி மாளாதவை. அதனை பின்வரும் கவிதையில் பட்டவர்த்தனமாகவே கவிஞர் எடுத்துவைத்துள்ளார்.

“ஏழைகளுக்கு 

புவா போடுறான்னா

ஆஸ்பத்திரி மேல

பூவா போடுறான்” 

இவனை என்ன பண்ணலாம், இவனையெல்லாம் உக்கார வச்சவனச் சொல்லணும் என்பது தொக்கி நிற்கும் வரிகள். இப்படிப்பட்ட பகடி வரிகளால் அரசைச் சாடும் கவிஞர், சில இடங்களில் நேரடியாகத் தன்னுடைய தாக்குதலை நிகழ்த்துகிறார். 

“புலம் பெயர் தொழிலாளர்களின் 

சுடும் கால்தடமே

எங்கள் தேசத்தின்

வரைபடம் இனி” என்கிறார். பாதம் வெடித்து, ரத்தம் கசியக் கசிய கைக்குழந்தைகளைத் தூக்கிக்கொண்டும் முதியோர்களைச் சுமந்துகொண்டும் பசியோடும் பட்டினியோடும் கிலோமீட்டர் கணக்கில் நடந்து உயிரை மாய்த்துக்கொண்ட அவலம் கண்முன் வந்துபோகிறது. கொரோனோவை விட பெரும்பெரும் கொடுமைகள் அரசால் அனுபவித்தோம். ஆக, கொரோனோ காலம் என்பது அவலங்கள் நிறைந்த காலமாக இருந்ததை அறியலாம்.


கொரோனோ காலத்தில் நடந்த அவலங்களைத் தொகுப்பாக்கியுள்ளார். மாநில அரசோ, மத்திய அரசோ எந்த அரசும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பதைப் போல நடந்து கொண்டதை தன்னுடைய கவிதைகள் ஒவ்வொன்றிலும் வாசிப்பாளனுக்கு முன்வைக்கிறார். 

"கொரோனோவே 

நெஞ்சுவலி வந்து

செத்தாலொழிய

அதை நமது அரசாங்கம்

அழித்துவிடும் என்பதெல்லாம்

வடிகட்டிய பொய்” என்கிறார் கவிஞர். உண்மைதான். எத்தனையோ இடர்பாடுகள் கடந்தே ஒவ்வொரு நாளையும் கடந்தோம். ஆனால் காலப்போக்கில் கொரோனோவே காலாவதி ஆனபின்னும் கூட அதனைக் கைவிடாத அரசைச் சாடுகிறார். கொரோனோவை வைத்து மூட நம்பிக்கையை ஒழிக்கும் வித்தையையும் கையாண்டுள்ளார் கவிஞர்.

“நோய்த் தொற்றாளர்களைத்

தனிமைப்படுத்துகிறோம்

என்னதான் செய்வது

சாதி மதத் தொற்றாளர்களை”


“கடவுள் ஒரு போலி டாக்டர்

கண்டுபிடித்துப் பூட்டிவிட்டீர்கள்

கோயில்களுக்கு

பகுத்தறிவுப் பாடம் கற்பித்தமைக்கு 

நன்றி கொரோனோ...


கொரோனோ காலத்தைக் காட்டும் கவிதைத்தொகுப்பு. அரசின் கையாலாகாத்தனத்தையும் மக்களின் நிலையையும் முற்போக்கின் வழிநின்று அலசி ஆராய்ந்திருக்கிறார். மென்மேலும் தொடரட்டும் கவிஞரின் கவிதை. வாழ்த்துகள்.


யாழ் தண்விகா

கவிஞர் தமிழ் ஒளி

 


கவிஞர் தமிழ் ஒளி

சிகரம் ச.செந்தில்நாதன்

பாரதி புத்தகாலயம்

பக்கம் 16


படைப்பாளி தமிழ் ஒளி குறித்த அறிமுகத்திற்கு இந்நூல் உதவும். திராவிட சித்தாந்தத்தில் இருந்தவர். மார்க்சிய கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளர் அமைப்பிற்குள் வந்து பொறுப்பேற்று செயல்பட்டவர். பட்டுக்கோட்டையின் சம காலத்தவர். பாரதி தாசனால் தமிழ் ஒளி என பெயர் சூட்டப்பட்டவர். தந்தைக்கு பூர்வீகம் புதுவை. இவர் கடலூர் மாவட்டத்தில் பிறந்தவர். ஒன்பது காவியங்கள், நான்கு கவிதை நூல்கள், நான்கு ஆய்வு நூல்கள், நான்கு கதைத் தொகுதிகள், இரண்டு குறு நாவல்கள், ஒரு வரலாற்று நூல், நான்கு நாடகங்கள் எழுதியவர். குழந்தைப் பாடல்கள் எழுதுவதில் கை தேர்ந்தவர். சிறந்த விமர்சகர். வறுமையால் மிகக் குறுகிய ஆயுள் காலத்தில் மறைந்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அவர்களின் குரலாக படைப்புகளில் ஒலித்தவர். இவர் குறித்த பல தகவல்கள் கிடைக்கவில்லை என நூலாசிரியர் கூறுகிறார். 1949லேயே முன்னணி என்ற இதழில் மே தினமே வருக என்ற தலைப்பில் 6 பக்கங்கள் கவிதை எழுதியுள்ளார். பிறப்பு 21.09.1924.  இறப்பு 23.03.1965. பெரும்பாலான தகவல்கள் நூலில் முழுமையாக இல்லை.  இவர் குறித்த முழுமையான ஆய்வு நடந்தால் இன்னும் இவரின் மேலான ஆளுமை புலப்படும் என நம்பலாம்.

யாழ் தண்விகா

சேத்துமான் கதைகள் #பெருமாள் முருகன்

 


சேத்துமான் கதைகள்

பெருமாள் முருகன்

காலச்சுவடு பதிப்பகம்

விலை ரூ 95

64 பக்கங்கள்


எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய வறுகறி(2012) மற்றும் மாப்புக் குடுக்கோணுஞ் சாமீ...(2011) என்ற இரு கதைகள் அடங்கிய புத்தகம். இரு கதைகளையும் சேத்துமான் என்ற திரைப்படமாக எடுத்து வெற்றிகண்ட இயக்குனர் தமிழ் முன்னுரையுடனும், இலக்கியத்திலிருந்து எடுத்த கதையை படமாக எடுப்பதற்கு உதவியாக இருந்த தயாரிப்பாளர் பா.ரஞ்சித் எழுதிய அணிந்துரையுடனும், எழுத்தாளர் பெருமாள்முருகன், தன்னுடைய கதைகள் படமாக வரக் காத்திருந்த காலங்கள், சேத்துமான் உருவான விதம், அதில் தன்னுடைய பங்களிப்பு பற்றிக் கூறும் முன்னுரையுடனும் இந்த நூல் என்பது இதன் சிறப்பு. 


இரு கதைகளும் ஒடுக்கப்பட்டவனின் வலிகளைப் பற்றிப் பேசுகிறது. சேத்துமான் என்றழைக்கப்படும் பன்றிக்கறியை வீட்டில் எடுத்துக்கொடுத்து சமைத்துத் தரச் சொல்லி சாப்பிட முடியாது என்னும் சூழலில் பன்றிக்கறி எடுத்துத் தின்ன ஒரு குழு. இவர்கள் குடியானவர்கள். அதற்கு தலைவனாக வெள்ளையன். அவன் பன்றிக்கறி வேண்டும் நபர்களின் பெயர்களைக் கேட்டுக்கொண்டு அதற்கேற்ப பன்றியைத் தேடி அலைகிறான். தோதான பன்றி ஒன்றினை ரங்கனிடம் (பன்றி வளர்ப்பவன்) இருந்து வாங்கிவந்து அதை வறுகறி ஆக்கி கூறு போட்டுப் பிரித்துக்கொள்ளவேண்டும் என்பது திட்டம். வாங்கி அதனை வறுகறிக்குத் தயார் செய்கிறார்கள். கூடவே ஒத்தாசையாக இருக்கும் நபர் குமரேசனின் தாத்தா பூச்சி. இவர்கள் ஏரிக்கரை ஓரமாக ஒரு குழுவாக வசிப்பவர்கள். ஊருக்குள் முன்னிரவின்போது சென்று சோறு வாங்கி உண்ணுவார்கள். கூடை முடைபவர்கள். பன்றி விற்பவன், ஒத்தாசையாக வரும் தாத்தா, அதைத் தின்ன ஓடும் குடியானவர்கள் இப்படி இவர்களுக்கிடையே கதை நிகழ்கிறது. இதில் செல்லையனுக்கும் வெள்ளையனுக்கும் தகராறு. இருவரும் குடியானவர்கள். இவர்களுக்கு இடையே வரும் சண்டையை விலக்கிவிட தாத்தா முயல்கிறார். செல்லையனின் அரிவாள் வெட்டு தாத்தா மேல் விழுகிறது. தாத்தாவைத் தாங்கிப் பிடிக்க பேரன் குமரேசனைத் தாண்டி அங்கு யாருமில்லை என்பதாகக் கதை முடிகிறது. குடியானவர்களுக்கு உள்ளே நிலவும் பூசல் ஆயிரம் இருந்தாலும் பிற சாதியை இழிவாகக் காணும் போக்கு பல இடங்களில் காட்டப்பட்டுள்ளது. நாடோடியாகத் திரியும் குமரேசன், மதிய நேர உணவாவது கிடைக்கும் என பள்ளியில் சேர்க்கப்ப்டுகிறான். அங்கு ஆசிரியர் அவனுக்கு வைக்கும் எலியான் என்ற பட்டப்பெயர், அவன் உண்ணும் உணவு குறித்து அடிக்கும் கிண்டல் போன்றவை அவரது சாதிய வன்மத்தைக் காட்டுகிறது. குடியானவர்கள் தமக்குள் அடித்துக்கொள்ளும் சண்டையில் விலக்கிவிட வந்த குமரேசனின் தாத்தா வெட்டுப்பட்டு விழும்போது கூட அருகே இருக்கும் குடியானவர்கள் யாரும் தாங்கவில்லை. உடன்வந்த பேரன் குமரேசன் தான் தாங்குகிறான். தாத்தாவின் உயிருக்கு இங்கு மதிப்பு இல்லை என்பதோடு கதை முடிகிறது. கதை முடியும் இடத்திலிருந்து நினைத்துப் பார்த்தால் கதை முழுவதும் பரவிக்கிடக்கும் சாதியமுகங்களை எளிதில் கண்டடையமுடியும்.


மாப்புக் குடுக்கோணுஞ் சாமீ... கதை தொடங்கும் இடம் முதல் வேகம் தான். ஊரெங்கும் திடீர் திடீரென செத்து விழுகிறது மாடுகள். ஊரில் உள்ள வைத்தியராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன காரணமாக இருக்கும் என்று ஊருக்காரர்கள் பேசும்போது இறக்கும் மாடுகளைக் கொண்டுசென்று அவற்றை உண்ணும் மக்களை நோக்கி அவர்கள் பார்வை திரும்புகிறது. அவர்களின் ஊருக்குள் சென்று அவர்களைத் தடியால் அடித்து எங்கே அவன் என்று கேட்கிறார்கள். அவன் மாடு வைத்திருக்கும் கூட்டத்தில் ஒருவன் வைத்திருக்கும் தோட்டக் கிணற்றில் ஒருநாள் குளித்ததற்காக தோட்டக்காரனால் அடிவாங்கியவன். அவன் அடிவாங்கி ஓடும்போது டேய், செங்கான்... என்னை அடிச்சிட்டல்லடா... ஒன்னப் பாத்துக்கிறேன்டா... என்று ஓடியவன். அவன் தான் செய்திருப்பான், இவன்தான் செய்திருப்பான் எனக் கருதி ஊரின் ஓரமாக வசிக்கும் எளியமக்களை அடித்துத் துன்புறுத்தும் காட்சிகளை கண்முன்னே நிறுத்துகிறார் எழுத்தாளர். மாட்டை விடக் கேவலமாக நடத்தப்படும் அந்த மக்கள் குற்றுயிரும் கொலைஉயிருமாகக் கிடந்தாலும் அவர்கள்மேல் நிகழ்த்தப்படும் வன்மம் சாதியை நேசித்து மனிதத்தை வெறுக்கும் யாவருக்கும் சாத்தியம் தான். 


இந்த இரு கதைகளும் தான் சேத்துமான் என்ற திரைப்படம். வாசிக்கவேண்டிய கதைகள். சாதி, எளிய மக்களை எப்படியெல்லாம் காயம் செய்யும், செய்கிறது, செய்தது என்பதை வாசிக்கத்தந்த வார்த்தைகள் மூலமாக சமூக அவலத்தைக் மனக்கண் முன்னால் கொண்டுவந்து காட்டிய எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு வாழ்த்துகள்.

அவள் நாம சங்கீர்த்தனம் #லார்க் பாஸ்கரன்

 


அவள் நாம சங்கீர்த்தனம்

லார்க் பாஸ்கரன் Lark Bhaskaran 

கடல் பதிப்பகம்

விலை ரூ.100

76 பக்கங்கள்


தண்டவாளத்தை விட்டுத் தடம் புரளாமல் பயணிக்கும் ரயிலினைப் போல ஒரு பயணம். காதல் பயணம். காதலையும் காதலியையும் கொண்டாடிக்கொள்ள ஒரு தொகுப்பு. காதலிடமும் காதலியிடமும் மன்றாடித் திளைத்தலை சொற்களாக்கிக் காண்பித்திருக்கும் தொகுப்பு. ஒவ்வொரு சொல்லும் காதல், ஒவ்வொரு பத்தியும் காதல், ஒரு தொகுப்பு முழுக்கக் காதல். 


தீர்வதல்ல காதல். காதலி பிரிந்து சென்றாலும் காதல் இல்லை என்றாகிவிடுமா? உனக்குப் பரிசளித்த காதலின் பரிசுத்தம் உணர். என்னைக் காப்பாற்று. என் தவறுகளைச் சரியாக்குகிறேன். தொடங்குவோம் முதலிலிருந்து... என்ற வரிகள் சாதாரணமானதா? இல்லை. அது இறைஞ்சுதல். காதலை அப்படிப் பெறுதல் சரியா? ஆம். சரியானது தான். காரணம் காதலி உண்மை. அவள் பேசிய காதல் உண்மை. அந்தக் காலங்கள் உண்மை. அதை மீட்கொணரவே இக்கவிதைகள்.


காதலில் புதைதல் என்பது அசாதாரணமானது. கவிஞர் அதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார். நம்மையும் இத்தொகுப்பை வாசிக்க வைப்பதன் மூலம், அந்தப் புதைதல் என்னும் அசாதாரணத்தில் இலகுவாகத் தள்ளி விட்டிருக்கிறார். பிடித்த கவிதைகளைச் சொல்லி அது உணர்வினுள்ளுள்  உண்டாக்கிய மாற்றங்களைக் கூற வழியில்லை. ஒவ்வொன்றும் வலி. ஒவ்வொன்றும் காதல். வலி கடக்க காதலொன்றே வழி.


காதல் கடலின் சில துளிகள்...


ஒரு கப் தேனீர் கொடு

உற்சாகமாக்கு

தொடு 

விளையாடு

புன்னகைத்துக் கொள்

நீ நானாக இருப்பதும் சாத்தியமே...


பைத்திய போதையைத் தந்தவள் நீ

ஆறுதல் பித்தும் எட்டவில்லை


என் வலிகளில் கொஞ்சம் 

ஆஸ்பிரின் செலுத்து

தூங்கும் நேரமாவது அதிகரிக்கட்டும்.


அன்பின் விரதத்தை முடித்து வைக்க

நான் என்ன செய்யவேண்டும்

உனக்காக பத்திய சாவை ஏற்றுக்கொள்ளவா...


நீ இல்லாத வாழ்வை 

யோசிக்க முடியவில்லை

தயவுசெய்து அணைத்துக்கொள் என்னை...


நீங்களும் வாசியுங்கள். காதல் கடல் பருகலாம்.


வாழ்த்துகள் தோழர் லார்க் பாஸ்கரன்.

ரோஸ் #ஆயிசா இரா.நடராசன்

 


ரோஸ்

ஆயிசா இரா.நடராசன்

Books for children பதிப்பகம்

64 பக்கங்கள்


முழுக்க உரையாடல்களால் நிரம்பிய நூல். அப்பொழுது அவன் பேசினான், சூரியன் கண் விழித்தது, பைக்கில் வேகமாகச் சென்றான், அவள் அமைதி வெயிலற்ற வான் போலிருந்தது என்றெல்லாம் வார்த்தைகளில்லை. முழுக்க உரையாடல்கள் தாம். தேவா என்பவன் பள்ளிச் சிறுவன். வீட்டில் செடியில் பூத்திருக்கும் ரோஜாவைப் பார்க்க ஆசைப்படுகிறான். ஆனால் வீடு அதற்கு எவ்வளவு முட்டுக்கட்டை போடுகிறது, பள்ளிப் பாடங்களை முடிக்க வைக்க பெற்றோர் காட்டும் அதீத அழுத்தம் கடந்தும் தேவாவின் ஆசை ரோஜாவில் தான் இருக்கிறது. பள்ளிக்குக் கிளம்பும் பொழுதிலும், வழியிலும், பள்ளியின் ஒவ்வொரு பாடவேளையின்போதும் ரோஜா குறித்த ஏதோ ஒன்று தேவாவைப் பேச வைக்கிறது. ஆனால் எல்லாச் சூழலிலும் அவன் கேள்விகள் அடுத்தகட்டமாகச் செல்ல பெற்றோரும், எந்த ஆசிரியரும் அனுமதிப்பதில்லை. அவன் விருப்பங்கள் பின்தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அவனின் குழந்தைமையை பள்ளியும் பாடத் திட்டமும் பிள்ளையின் எதிர்காலம் என்று சொல்லி பெற்றோரும் காவு வாங்குகிறார்கள். யார் தேவா போன்ற குழந்தையின் ஆசையைக் கண்டுகொள்ளப் போகிறார்கள் என்பதை கதையின் மூலமாகக் கேள்வி கேட்கிறார் ஆயிசா இரா.நடராசன். ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாசிக்க வேண்டிய நூல்.


வாழ்த்துகள் தோழர்.


❣️


Friday, 13 February 2026

ரோலக்ஸ் வாட்ச் #சரவணன் சந்திரன்

 


ரோலக்ஸ் வாட்ச்
நாவல்
சரவணன் சந்திரன்
உயிர்மை பதிப்பகம்
பக்கம் 160
விலை 150
மார்ச் 2016 பதிப்பு

நட்பு காதல் கொலை குரூரம் இயல்புத்தனம் துரோகம் என எல்லாம் உண்டு இந்நாவலில். கதாசிரியர் தான் நாயகன். வலிந்து திணிக்கப்படாத பாதை வழியே கதை நகர்கிறது. என்ன கதை என்பது சுவாரஸ்யம். ஒவ்வொரு பகுதியும் ஒரு சிறுகதைதான். எங்கிருந்தும் தொடங்கலாம். சரவணன் மற்றும் கதை கூறுபவன், அவன் தோழி, தோழியின் தோழி, ஜோதிடர் சுந்தர் எனச் சில பாத்திரங்கள் முக்கியமானவை. பிற எல்லாம் வந்து போகின்றன. எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் இருக்கிறது. சரவணன், கதை சொல்பவனுக்கு வாழ்வில் பல உதவிகள் செய்பவன். செய்தவன். ஆனால் கதை சொல்பவனுக்கு ஒரு தனி உலகம். காலமெல்லாம் சரவணனின் கையைப் பிடித்து நடக்க தன்னால் இயலாது என்னும் உறுதி கொண்டவன். அவனிடம் அதனை நேராகச் சொல்லும் தைரியம் அற்றவன். கோழை என்றில்லை. அது கதாசிரியன் சுபாவம். இவர்களுக்கு ஒரு நண்பர் குழாம். அதில் ஒருத்தி திவ்யா. அவளோடு அன்பு காதல் காமம் எல்லாம். அவள் திருமணம் முடித்தவள். அவளோடு ஒரு வாழ்க்கை. வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்கள் செல்ல சில தகிடுதத்தங்கள் செய்து கதை சொல்பவன் மேலே வருகிறான். வெளிநாடு செல்கிறான். தனியாக அறை எடுக்கிறான். அங்கு பெண்களோடு உல்லாசித்துத் திரிகிறான். பணம் சேர்க்கிறான். ஒரு மனிதனுக்கான கூறுகள் இப்படி இருப்பதில்லையே என நினைக்கும்போது மனிதன் என்பவன் இப்படியும் இருக்கிறான் எனச் சொல்ல, இப்படித்தான் இருக்கிறான் எனச் சொல்ல பல பாதைகளை கதை வழியே சொல்கிறார் நாவலாசிரியர். கதை சொல்லுதலில் இப்படியும் ஓர் உத்தி எனக் காண்பித்து உள்ளார். டயரி எழுதுவது போலுள்ளது என்று கூறி ஒதுக்கி விடாத வண்ணம் எழுத்து நடை அமைந்துள்ளது சிறப்பு. பிடித்தது எனச் சொல்ல நான் கண்ட மனிதரில் கதாசிரியன் போன்ற நபர்களைக் கண்டுள்ளதும் காரணமாக இருக்கலாம். மனிதன் செய்யும் பண அரசியல் எப்படியெல்லாம் இருக்கும் என்றெல்லாம் ஆங்காங்கே வருகிறது. கதையும் முடிச்சும் இதுதான் எனச் சொல்ல வாய்ப்பில்லை. வாசித்தால் தான் அதை உணர முடியும் எனச் சொல்லும் நாவல். வாசிக்கலாம் தாராளமாக.

யாழ் தண்விகா 


❣️