Thursday, 12 March 2026

வித்தியாசம் தான் அழகு #ச.மாடசாமி


 நூல் விமர்சனம் 


வித்தியாசம்தான் அழகு

(குழந்தைகளுக்கான கதைகளும் பெரியவர்களுக்கான நீதிகளும்) 

ச.மாடசாமி 

பாரதி புத்தகாலயம் 

112 பக்கங்கள்

120 ரூபாய்


குழந்தைகள் உலகம் வித்தியாசமானது. அங்கு அவர்கள் தான் எல்லாம். வருத்தம் கோபம் சந்தோஷம் என்று அனைத்து விதமான கலவையான உணர்வுகள் பெருகிக் கிடக்கும். குழந்தைகளிடம் காணப்படும் உணர்வுகள் அவர்களாக நாம் மாறினால் ஒழிய அறிய முடியாது. இந்த புத்தகம் குழந்தைகள் படிப்பதற்கும் பயன்படும். பெரியவர்களுக்கு நீதியை போதிக்கவும் பயன்படும். 20 தலைப்புகளின் கீழ் தோழர் ச.மாடசாமி அவர்கள் கதைகளை படைத்துள்ளார். இந்த கதைகளை படிக்கும் பொழுது குழந்தைகள் உலகம் எவ்வளவு பரந்துபட்டு இருக்கிறது என்பதை அறிய முடியும். இந்த உலகம் எங்கும் வியாபித்து கிடக்கிறது என்ற எண்ணம் நாம் அறிய முடியும். எல்லா உலகத்திலும் குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். பெரியவர்கள் தான் வளர்ந்து விட்ட காரணத்திற்காக தன்நிலை மாறி தனக்கான அறிவோடு வளரத் தொடங்கி விடுகிறார்கள். அந்த அறிவுக்கு ஏற்ற சந்தோசம், வெறுப்பு, குரோதம் முதலானவை தன்னுடைய அறிவு நிலையில் இருந்து வளரத் தொடங்கி விடுகிறது. அறநெறி ஒன்று, அது தொடர்பான கதை ஒன்று என்று இந்த நூலின் முழுவதும் நம் கைபிடித்து அழைத்துச் செல்கிறார் தோழர் அவர்கள். 


மிகச் சமீபமாக இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் நடந்தது. அந்த போரின்போது மழலைகளின் கருத்துக்கள் எங்கும் பகிரப்பட்டு வந்தது. அதுபோன்ற பேரழிவு சம்பந்தமான கதையும் உண்டு. ஆனால் அந்தக் கதையானது மழலைகள் புரிந்து கொள்ளும் அளவில் உள்ளது சிறப்பம்சமாகும். காலில் மிதிபடும் பட்டாம்பூச்சிகள், நஸ்ரின் படித்த ரகசியப் பள்ளி போன்ற கதைகள் போருக்கு எதிரான கதைகளாக இருக்கிறது. மேலும் அதன் மூலம் பெரியவர்களும் உணர வேண்டிய அறநெறி ஒன்றும் உள்ளது. 


ஒரு கால் ஒரு கதாநாயகன் கதையின் மூலம் முயற்சி என்பது எவ்வளவு முக்கியம் என்பது கதையில் கூறப்பட்டுள்ளது. பரிவு கோரல் என்பதை மறுத்து அதிலிருந்து விடுபட்டு முயற்சி என்பதன் மூலம் இந்த உலகில் தானும் வாழ்வதற்கு பிறந்தவன் என்பதை அழகாக கூறுகிறார்.


 

கொரோனா காலகட்டத்தில் உலகமே ஸ்தம்பித்துப் போன நிலையில் பள்ளியின் நிலை பற்றி சொல்லவா வேண்டும்? இதுபோல் வேறு ஒரு சூழல். கல்வி என்பது இல்லாத சூழலில் கழுதைகளை ஓட்டிக்கொண்டு கையில் கிடைக்கக்கூடிய ஒரு 50 நூல்களைக் கொண்டு அந்தப் பகுதிகளில் பயணம் செய்கிறார். ஒரு ஆசிரியர் மிகவும் குறைவான சம்பளம் இருந்த போதும் அங்கு செல்கிறார். அந்தப் பகுதிகளில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு கதைகளை சொல்லித் தருகிறார். மாணவர்களை படிக்கச் சொல்கிறார். அதன் பின் கல்வி கற்றுத் தருகிறார். ஒருநாள் யானை மறுநாள் சிங்கம் நரி போன்ற கதைகளை எல்லாம் சொல்கிறார். ஒரு சிறுமி கேட்கிறாள், கழுதையைப் பற்றி ஒரு கதை சொல்லுங்கள் என்று. யானை குதிரை நரி போன்ற கதையை நான் கூறினேன் நீ எழுத வேண்டியது தானே கழுதைகளைப் பற்றி. உனக்கும் கதை எழுதத் தெரியும் தானே என்று கூற அவளும் கதை எழுதுகிறாள். இப்பொழுது அந்த கதை பலரும் படிக்க கூடிய அளவிற்கு ஆசிரியரிடம் சென்று சேருகிறது. அந்தக் கதை தான்

கழுதைகள் கொண்ட வந்த கதைகள்.


ஆட்டிசம் வந்த குழந்தை எவ்வாறு கற்றலில் மேம்பாடு அடைகிறது என்பதனை ஒரு கதையில் கூறுகிறார். ஹிரோஷிமா நாகசாகி குறித்த கதை ஒன்று உள்ளது. குழந்தைகளுக்கு பிடித்தமான விலங்குகள் பற்றிய கதைகள் உண்டு. இப்படி எங்கெங்கோ உள்ள கதைகளை நாம் படிக்கும் வண்ணம் நூலில் கொடுத்துள்ளார் தோழர் அவர்கள். வித்தியாசம்தான் அழகு. வித்தியாசம்தான் தோழர் அவர்கள் கதைகளும்.


வாசியுங்கள் அனைவரும்.


யாழ் தண்விகா

No comments:

Post a Comment