பொன்னி
(நீள் கதைகள் இரண்டு)
அகரன்
பன்முக மேடை பதிப்பகம்
92 பக்கங்கள்
120 ரூபாய்
கிராமத்துச் செம்மண் வீட்டு வாசமும் சில குழந்தைகளும்...
குட்டிப்பிள்ளையார் முதல் கதை. வளவன், சரவணன் இருவரும் நண்பர்கள். கிராமத்திற்கான அத்தனை விளையாட்டுகளை, சேட்டைகளைச் செய்யும் சிறுவர்கள். அம்மா வைக்கும் புளிச்சோறு தின்ன செய்யும் களவாணித்தனம், மீன் சுட்டுத் தின்னுதல் என எல்லாம் அடடா. இவர்கள் ஊருக்கு வருகை தரும் பார்வதி அத்தை மகள் பரிமளா, வளவனுக்குப் பிடித்தவள். அவளோடு கூட்டணி போட்டுக்கொண்டு திருவிழா நாட்களைக் கடக்கிறார்கள். நம்மூரில் சிறு வயதில் இளம் பிராயத்தில் வாழ்ந்த நினைவுகளை மீட்கொணர்வது போல திருவிழாக் காட்சிகளைக் கூறுவதில் அகரன் சிறக்கிறார். வளவன், சரவணன் இருவரும் குட்டிப் பிள்ளையாருக்கு ஒரு கோயில் கட்டியிருக்கிறார்கள். அங்கு பரிமளாவை அழைத்துச் செல்கிறார்கள். அங்கு அவள் வேண்டியது என்ன? அதை வளவன் பெற்றுத் தந்தானா? என்பதை பரிமளா பெரிய மனுஷி ஆகும் காலத்தின் வழி கவிதை போலச் சொல்லி நிறைவாகிறது கதை. அறியாத வயசு, புரியாத மனசு பாடலின் சிறிசுகள் போல பச்சக் என மனதில் பதிகிறார்கள் வளவனும் பரிமளாவும். காரணம் கதை சொல்லும் பாங்கும் கிராமச் சொல்லாடலும்.
பொன்னி, இரண்டாவது கதை. பவித்ரா வளர்க்கும் கோழியின் பெயர் தான் பொன்னி. பொன்னி அரிசி தின்று வளர்பவள். பவித்ராவின் செல்லம். தாத்தா வீட்டில் வளரும் பவித்ரா வீட்டிற்கு அவளின் பெரியப்பா குடும்பம் வருகிறது. அப்போது கோழி அடித்து குழம்பு வைக்கலாம் என்ற யோசனை முன்வரும்போது பவித்ராவுக்காக அந்த யோசனையைப் புறந்தள்ளி கடன் வாங்கி ஆட்டுக்கறி வாங்கிச் சமைக்க ஏற்பாடு செய்கிறார் முத்தையன் தாத்தா. பவித்ராவின் தாத்தா வீட்டுக்கு வந்த பெரியப்பா வீட்டுக்கு அவள் செல்லும் சமயம் எதிர்பாராத விதமாக முத்தையன் தாத்தா இறந்து விடுகிறார். அதன்பின்னர் அந்த பொன்னி என்னானது என்பது கதை. நம்மால் யூகிக்க முடியும் என்றாலும் பவித்ராவின் கேள்விக்கென்ன பதில் நம்மிடம் இருக்கிறது? முதல் கதை போலவே இதுவும் கிராமத்தை கண்முன் கொண்டுவரும் கதை. குழந்தைகள், சக உயிர்களிடம் எவ்வளவு அன்பு செலுத்துகிறார்கள் என்பதெல்லாம் காண இன்று நம்முன் என்ன இருக்கிறது? கோழி என்றால் பிராய்லர் கோழிகள் கண்ணுக்குத் தெரிய நாட்டுக்கோழிகள் கண்கள் பார்க்கும் தூரம் வரை தெரியாத காலமாக மாறிவிட்டது நவீன காலம். வாசிக்க வாசிக்க கதையும் காட்சியும் ஒருசேர கண்முன் நாம் காண்பது போல அமைவது தோழர் அகரனின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி. கிராமத்து மண்ணின் மொழியையும், மக்களையும் காண்பது தொலைத்த காலங்களை மீட்டுணர்வது போல இருக்கிறது.
தேனி மாவட்டம் தனது படைப்பாளர்கள் பட்டியலில் புதிதாக ஒரு பெயரைச் சேர்த்துக்கொள்ளும் என்பதோடு அவர் நட்சத்திரப் படைப்பாளராக வரும் வல்லமை உடையவராக அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. தொடர்ந்து எழுதுங்கள். இன்னும் பல தளங்கள், உயரம் தொட இப்புத்தகம் தொடக்கப்புள்ளியாக இருக்கட்டும்.
வாழ்த்துகள் தோழர்.
யாழ் தண்விகா
❣️

No comments:
Post a Comment