#அலைவரிசை நாவல்
அகரம் வெளியீடு, தஞ்சாவூர்.
Kamuthurai MA
MA Kamuthurai
இரு தலைமுறைகளின் வாழ்க்கையை கிராமத்துப் பின்னணியில், தான் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய பகுதிகளின் இயல்பு மாறாத வண்ணம், அம்மக்களின் மொழி, கலாச்சாரம் இதனை கிஞ்சித்தும் மாறுபட்ட வண்ணம் கூறிடாது, வழக்கமான தன்னுடைய பாணியில் அலைவரிசை நாவலை வழங்கியுள்ளார் காமுத்துரை தோழர் அவர்கள்.
மொத்தம் 8 பகுதிகளாக நாவல். ஒவ்வொன்றுக்கும் இடையில் வருடங்களின் நீளம் கால இடைவெளியாக இருக்கிறது.
ஒரு பெண் குழந்தை பிறப்பில் நாவலின் தொடக்கம். சிறுவயதில் அந்த குழந்தையை கொஞ்சி மகிழும் அந்த சந்தோசம் குழந்தையை பள்ளியில் சேர்த்த சில நாட்களில் எவ்வாறு மாறிப்போகிறது... பெண் குழந்தைகளின் மேல் அக்கறை எடுத்துக் கொள்வதை போல பாவிக்கும் அந்த கிராமத்து மனநிலையானது அவர்கள் அறிந்தும் அறியாமலும் அடிமைத்தனத்தை பெண்களின் மேல் திணிப்பதை அற்புதமாக காட்சிப்படுத்தியுள்ளார் நாவலாசிரியர். பெண் குழந்தைகள் பள்ளிப்படிப்பு என்பதை வண்ணாங்கணக்கு எழுதும் அளவிற்கு தெரிந்தால் போதும் என்று சொல்லும் அம்மாச்சி மூலமாக காலம் காலமாக இருந்து வரும் பெண்ணடிமைத்தனம் எவ்வாறு வேரூன்றியுள்ளது என்பதைக் காண ஓர் இடம். அதே பெண் குழந்தை தன் வயதொத்த சிறுவர்களுடன் விளையாட ஆசைப்படுகிறாள். ஆனால் அந்த ஆசையையும் ஆண் பெண் பாகுபாட்டை காண்பித்து ஒரு பெண் எப்படி ஆண்களுடன் சேர்ந்து விளையாடலாம் என அவளை அடித்து வீட்டிற்குள் இழுத்துச்செல்லும் பெற்ற தகப்பனின் எண்ணத்தின் மூலமாக வெளிக்காட்டி இருக்கிறார். ஆக ஆணும் பெண்ணும் பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை வரையறுத்து அதற்குள்தான் அவர்களின் வாழ்க்கை என விரும்புவதை கிராமத்துச் சூழலில் இருந்து காட்டுகிறது நாவல்.
14 வயதில் கதை நாயகிக்கு திருமணம் முடிகிறது. மிகக்குறுகிய காலத்திலேயே ராணுவத்திற்கு சென்ற அவன் இறக்கிறான். அப்பொழுது அவள் கர்ப்பமாக இருக்கிறாள் அவளுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. 16வது வயதில் மறுமணம் நடக்கிறது. மறுமணம் என்பது அவளுடைய வாழ்வில் வெளிச்சத்தை பாய்ச்சுவதற்கு பதிலாக வலியை கொடுக்கிறது. முதல் கணவனுக்கு குழந்தை பெற்று தந்தாலும் இரண்டாவது கணவனால் இவளுக்கு குழந்தை உண்டாகவில்லை. ஆனால் அவன் இவள் மேல் குறை இருப்பதாக கூறி இவளுடைய தங்கையையும் மணமுடித்துக் கொடுக்க மீண்டும் மீண்டும் தூண்டுகிறான். ஆனால் அவள் மறுக்கிறாள்.
அந்த வலியிலிருந்து மீள அவ்வப்போது தன்னுடைய தாய் வீட்டிற்கு வருகிறாள். அவள் மறு மணம் முடித்ததால் மற்ற மூன்று தங்கைகளுக்கும் திருமணம் நடக்காமல் தள்ளிப் போவதாக கூறுகிறாள் தாய். ஒருபுறம் கணவனின் கொடுமை. மறுபுறம் தாய் இப்படி கூறியதால் உண்டான வலி. இரண்டிலிருந்தும் அவள் எப்படி மீள்கிறாள்... முடிவு திரைப்படத்தில் ஒரு பாடலில் பெரு மாற்றம் உண்டாவது போல, கதையிலிருந்து ஒரு பெருத்த இடைவெளியை உண்டாக்குவது போல வலியத் திணிக்கப்பட்டது போல இருக்கிறது. ஒரு பெண்ணின் வளர்ச்சி இப்படியாகவும் இருக்கலாம், அவள் அடிமைப்படுத்தும் ஆண்களின் சிந்தனையை பொடிப்பொடியாக சிதைக்க வல்லவள் என்பதாக நாவலின் அணிந்துரையில் இப்போக்கை எழுத்தாளர் போப்பு அவர்கள் பாராட்டி இருக்கிறார்.
தோழர் காமுத்துரை அவர்கள் ஒரு வயதான பாட்டியை முதன்மைப்படுத்தி எழுதிய கோட்டை வீடு நாவலின் இயல்புப்போக்கு இந்நாவலில் இல்லையோ என நினைக்க வைக்கிறது. ஆனாலும் நான் பார்த்த இடங்கள், அவற்றில் நான் பார்க்காத மனிதர்களின் வாழ்வை, எளிய மக்களின் வாழ்வியலை தனக்கேயுரிய எள்ளல், வலி, அன்பு, ஆணாதிக்க சிந்தனை இவற்றை உறவுகளோடு தொடர்புபடுத்தி மண்ணின் மணம் மாறாமல் காட்சிப்படுத்திய விதத்தில் நாவலில் எப்போதும் தான் கைதேர்ந்தவர் என நிரூபித்துள்ளார் தோழர் காமுத்துரை.
பேரன்பும் வாழ்த்துகளும் தோழர்...
யாழ் தண்விகா

No comments:
Post a Comment