Friday, 20 February 2026

மழை முத்தம் #தனலட்சுமி பாஸ்கரன்

 


மழை முத்தம்' 

கவிதை நூல் 

- கவிஞர் யாழ் தண்விகா  


(விமர்சனம் கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன், திருச்சி)


தலைப்புக்குப் பொருத்தமாய் கவிஞரின் மழை நாளில் முகிழ்க்கும் காதல் உணர்வுகள் கவிதைக் களத்தை ஈரப் பதமாகவே வைத்திருக்கின்றன . எல்லோர் வாழ்விலும் வந்து போகும் யவனப் பருவம் . யவனத்தைக் காதலோடு கடக்காத மனிதரே இல்லை. சிலரது காதல் வெல்லும், சில தோற்கும், சில ஒருதலைக் காதலாகவே,. 

 காதல் திருமணத்தில் முடியலாம், முடியாமலும் போகலாம் . எந்த நொடியில் எப்போது, எப்படி வரும் என்றே சொல்லமுடியாதது காதல். காதல் உணர்வு தோன்றிவிட்டால் உலகமே சொர்க்கமாகி விடுகிறது! காதல் இள மனங்களை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது, ஆட்டிவைக்கிறது என்பதை யாழ் தண்விகாவின் ஒவ்வொரு கவிதை வரிகளும் உயிர்ப்போடு சொல்கிறது . இளம்பருவத்தினர் கையில் இந்த புத்தகம் கிடைத்தால் போதும். காதல் உணர்வுகள் இல்லாதவர் மனத்திலும் காதல் உணர்வுகள் கொப்பளித்து ,பட்டாம்பூச்சியை சிறகடிக்கத் தொடங்கி விடும் என்பது தான் இத்தொகுப்பின் சிறப்பம்சம் என்பேன் .


        "யார் தூண்டில் ? /யார் மீன் ?/ யார் யாரை/உண்ணுகிறோம் ?" கேள்வியில் போட்டிபோடுகிறது, காதலும், காமமும் .


"நிறம் தந்து கரையும்/பஞ்சு மிட்டாய்போல /காதல் நிறுத்திப் பசியாற்றுகிறது / நீயூட்டும் உணவு! ..."/ 

ஒன்று வயிற்றுப் பசி, இன்னொன்று உடற்பசி என்பதை பூடகமாய்ச் சொல்லும் வரிகள் ரசமானவை !


‘பார்த்த இடத்திலெல்லாம் நீதானே கண்ணம்மா!’ - காதலைக் கொண்டாடும் பாரதியின் பதிவு! தோற்ற மயக்கங்களைப் பாடியவனின் தோற்றமும்கூட மயக்கம்தான். அகநானூறு படைத்த சங்கத் தமிழ் சமுதாயத்தின் நாத வேர் - காதல். காதலைக் கொண்டாடுவதில் பாரதியொன்றும் விதிவிலக்கல்ல. 


“காமத்தின் திரி/ எங்கெங்கு என்று தெரிந்திருக்கிறது/ உன் மோகத்திற்கு"

“வியர்வைக் காம்புகள்/ அனைத்துமே/ வாகைப் பூக்கள் ..மிகச் சிறப்பு . துளிர்க்கும் வியர்வைத் துளிகள் ஒவ்வொன்றும் வெற்றி வாகை சூடிய வாகைப்பூக்கள் என்ற வரிகள் காதலின் உச்சம்.


“அந்த நேரத்து / உன் மூர்க்கத்தனங்களுக்கு /கொஞ்சமும் எதிர்பேச்சு பேசுவதில்லை நான்"/

      இந்த வரிகளில் ஒரு பெண்ணை தன்னிலை மாறாது தன்னிலையில் தக்க வைத்துக்கொள்வதில் இருக்கிறது ஒரு ஆணுடைய காதல் என்பதைக் காட்டுகிறது. ஒவ்வோர் ஆண் மனதுக்குள்ளும் ஒரு பெண்பிம்பம் அவரவர் ரசனைக்கேற்ப செதுக்கப்பட்டிருக்கும். அதற்கு பெயர் இருக்காது உருவம் இருக்காது. ஆனால், அதற்கான இருப்பு ஒரு பெண் கை கோத்திரும் நிலையைக் கொண்டிருக்கும் 

காதலுக்கு அளவீடென்று எதுவுமில்லை; ஒருவர் மீதான விருப்பத்துக்கு அளவென்று அனுமானித்து "என்னை உனக்கு எவ்ளோ பிடிக்கும்" என்று கேட்பது பேரபத்தம். கவி.யாழ் தண்விகாவின் காதலும் அப்படிப்பட்ட அளவீடுகளைக் கடந்தது.


"பாரதிக்குக் கண்ணம்மா நீயெனக்கு உயிரம்மா" என்று ஒரு பெண்ணுக்குக்கான காதல் உயிருக்கு நிகரென்று பாரதி - கண்ணம்மாவுக்கு ஒப்பிடுகிறார் கவிஞர் அறிவுமதி. கண்ணம்மாவை பாடிய அந்த பாரதியைப்போல சமீபத்தில் கண்ணம்மாவை அழகு பூஞ்சிலையாக்கி பாடியிருந்தார் நம் யுகபாரதி. அதில் ஒரு பெண்ணின் அழகை எழுதுவதற்கு "பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான்" என்று எழுதியிருப்பார். அது அத்தனை உண்மை என்பதை காதல் சொட்டச் சொட்ட தன் கவிதைகள் முழுவதிலும் அள்ளித் தெளித்திருக்கிறார் கவிஞர். காதலர்கள் ஒருவருக்கொருவர் அன்புத் பரிசாக பரிமாறிக்கொள்ள ஏற்றதொரு புத்தகமாகஅதுவும் காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதியன்று படைத்திருப்பதில் , வெளியிட்டதில் கவிஞர் நூறு சதம் தன் எண்ணத்தில் வெற்றி கண்டிருக்கிறார் என்றே சொல்லவேண்டும் . 

காதலுக்கு வயதில்லை. கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் பரிசளிக்க உகந்த படைப்பு இது.  

நன்றி: 

கவிஞர் தனலட்சுமி பாஸ்கரன், திருச்சி

தோழர் திரு, வடுகபட்டி

No comments:

Post a Comment