தீட்டு
குறுநாவல்
அழகிய பெரியவன்
காமாட்சி என்பவளின் வலி மிகுந்த வாழ்க்கை. கோவிந்தனைக் கட்டிக்கொண்டு ஒரு குழந்தையையும் பெற்றுவிடுகிறாள். வாழ்க்கையின் குரூரத்தில் ரிக்சா ஓட்டும் கோவிந்தன், லாரியில் அடிபட்டுச் செத்துவிடுகிறான். காமாட்சியை அந்த ஏரியா தாதா தாமு அழைப்பதாக அவனின் கையாள் வந்து சொல்ல, குழந்தையைத் தூக்கிக்கொண்டு செல்கிறாள். ஒரு சம்பவத்தில் வயிற்றுப் பகுதியில் கத்தியால் கிழிக்கப்பட்டதால் உடலுறவுக்கு உடல் ஒத்துழைக்காத நிலையிலும் வேறு வகையில் தன்னுடைய பாலியல் இச்சைக்கு பலவந்தமாக காமாட்சியைப் பணியவைக்கிறான். வீடு வந்தவள் நாளடைவில் அவளை விபச்சாரம் செய்யும் நிலைக்குச் செல்கிறாள். தாமுவின் வலதுகரமாகச் செயல்படும் முனியாண்டியும் மாரியப்பனும் காமாட்சியை பாலியல் தொழிலில் பயன்படுத்திக்கொள்கிறார்கள். போலீசு ஸ்டேசனுக்குச் சென்றாலும் போலீசுக்கும் இரையாகிறாள் காமாட்சி. அண்ணீ... அண்ணீ என்று வளைய வரும் பட்டினத்தை அடித்து உதைத்ததால் மாயாண்டி, முனியாண்டி, சூரவேலு ஆகியோரைத் திட்டிவிட்டு மாயாண்டியை மண்டையை உடைத்துவிட்டு பட்டினத்தை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வருகிறாள் காமாட்சி. மறுநாள் மாயாண்டி ஆட்களைச் சேர்த்துக்கொண்டு காமாட்சி வீட்டுக்கு வருகிறான். அங்கு அவளிடம் பணம் கேட்டுத் தகராறு செய்து வீட்டில் உள்ள பொருட்களைத் தூக்கி வெளியில் எறிகிறான். வீட்டை விட்டு காமாட்சி, அவள் குழந்தை, குப்பு, பட்டினம் வெளியேறுகின்றனர். காமாட்சிக்கு நோய் வந்துவிட்டது. குழந்தைக்கு காய்ச்சல். கையில் பணம் இல்லை. பேருந்து நிலைய கழிப்பறை ஓரமாகத் தங்கல். இச்சூழலில் தன்னை விற்று சம்பாதிக்கப் போகிறாள் காமாட்சி. வகையில்லாமல் போலீஸிடம் மாட்டி ஸ்டேசனுக்குச் செல்கிறாள். பின்னர் வெளியில் வரும்போது குப்பு, தாமுவின் காலில் விழுந்து மீட்ட குடிசைக்கே மீண்டும் வருகிறாள். அங்கு வந்த போது குப்பு என்ன செய்துகொண்டிருந்தாள்? குழந்தையின் நிலை என்னவாக இருந்தது? மீண்டும் காமாட்சி பாலியல் தொழிலுக்குப் போனாளா என்பது கதை. கதையில் இன்னும் பல கிளைக்கதைகள் இருக்கின்றன. கோவிந்தன் பிறப்பு, பட்டினம் பிறப்பு, தாமு வாழ்க்கை, யசோதாம்மாவின் பாலியல் தொழில் சாம்ராஜ்யம், சுமதி என்ற பெண் யசோதாம்மாவிடம் இருந்து தப்பித்தல்... இப்படி. முழுக்க சேரியின் மொழியில் சேரியின் வாழ்க்கை. வாழ்க்கை என்றால் என்ன ஏது என்று தெரியாத காமாட்சியின் வாழ்க்கை எப்படியெல்லாம் இந்த சமூகத்தால் சூறையாடப்படுகிறது என்பதை அருமையாகக் காட்சிப்படுத்தியுள்ளார் கதாசிரியர். காமாட்சி என்பவள் தன் “வாழ்க்கையைச் சுமக்க, வருபவனையெல்லாம் சுமக்க வேண்டிய கொடுமை”யை எழுத்தில் படரவைத்துள்ளார். வாசிக்கவேண்டிய கதை.
யாழ் தண்விகா
No comments:
Post a Comment