Sunday, 8 February 2026

விருட்சங்களாகும் விதைகள் #பாமா

 விருட்சங்களாகும் விதைகள் 

பாமா

என் சி பி எச் வெளியீடு

198 பக்கங்கள் 

இருநூற்று ஐம்பது ரூபாய்


பணிக்கு வந்த பின் கூறப்படும் மலர்விழியின் (பாமா) ஒரு சுயசரிதை நூல் எனக் கொள்ளலாம். நர்சரி ஸ்கூல், நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என பல்வேறு இடங்களில் பணியாற்றிய பின் தொடக்கப்பள்ளியில் சேர்ந்து 20 வருடம் பணி செய்கிறார் பாமா தோழர். தன்னுடைய பணியில் செய்த சாதனைகள், பணியின் போது ஏற்பட்ட மனத்தாங்கல்கள், வேதனைகள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் இந்த நூலில் கூறியுள்ளார். நேதாஜி துவக்கப்பள்ளியில் சேர்ந்த பின் கிடைத்த அனுபவங்கள் தான் இந்த புத்தகம். அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் சேர்ந்தால் அது ஒரு தனி சாம்ராஜ்யம். அங்கு தான் அவர்கள் பணி காலம் முழுக்க பணி செய்ய வேண்டும். தாளாளருக்கு கட்டுப்பட்டு பணி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். தன்னுடைய பிரச்சனைகளை எங்கு கொண்டு சென்றாலும் மீண்டும் பள்ளிக்குத் தான் திரும்பும். ஒவ்வொரு ஆசிரியரும் தாளாளருக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஆசிரியரும் சில ஆயிரங்களை தாளாளருக்கு கொடுத்து விட வேண்டும். அதில் மாணவர்களை அழைத்து வருதல், வேன் ஃபீஸ், ஆட்டோ ஃபீஸ் முதலியவற்றிற்கு பார்த்துக் கொள்ளுதல் என்பது எழுதப்படாத சட்டம். இது போன்ற பணிகளை செய்தாலும் நிம்மதியான பணி என்பது தாய்மை மனப்பான்மையுடன் கூடிய தாளாளர், சக ஆசிரியருடன் புரிந்துணர்வு, மாணவர்களின் நல்லொழுக்கம், மாணவர்களின் தேவை, மாணவர்களின் கல்வி முதலானவை சிறப்பாக அமைய வேண்டும். இது எதுவுமே அமையவில்லை என்றால் சிரமம்தான். போராட்டம் போராட்டம் போராட்டம் இதற்குள்ளாகவே இந்த ஆசிரிய பணியை சிறப்பாக செய்ய வேண்டிய காலகட்டம். தன்னிடம் படித்த குழந்தைகள் மேற்படிப்பு படிக்க வெளியில் கல்லூரி செல்லும் பொழுது அதுவும் அந்த வளாகத்தில் நம்மை அடையாளம் கண்டு கொண்டால் அதற்கு இணையான ஒரு சந்தோஷம் வராது. அது போன்றதொரு சந்தோசங்களை பாமா தோழர் அடைந்திருக்கிறார். ஒருவேளை உணவாவது குழந்தைகளுக்கு கிடைக்கிறதே என்ற திருப்தியில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்று விடுவார்கள். இன்று இரண்டு வேளை உணவு அளிக்கப்படுகிறது. ஆனால் அன்றைய சூழலில் ஒருவேளை உணவுக்காக பள்ளியில் குழந்தைகளை விட்டுவிட்டு செல்லும் அந்த சூழலை நினைத்துப் பார்த்து அவர்களை பசியாற்ற பள்ளியில் என்னென்ன முயற்சி எடுக்கிறார்கள் என்பதெல்லாம் அருமையாக விளக்குகிறார் தோழர். காலையில் பட்டினியோடு வரும் குழந்தைகளுக்கு என ஹேண்ட் பேக்கில் எப்பொழுதும் பிஸ்கட் பாக்கெட்டுகளுடன் வருவதை பதிவு செய்திருக்கிறார். சக ஆசிரியர் வகுப்பறையில் சதா சர்வ காலமும் ஒன்றும் சொல்லித் தராமல் இருக்கும் அவல நிலையை சுட்டிக் காட்டுகிறார் தோழர். அப்படிப்பட்ட ஆசிரியரிடம் ஒரு வருடம் இருந்து மறு வருடம் ஒரு வகுப்பிற்கு செல்லும் குழந்தை வாழ்க்கை என்னாகும் என்பதை வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார். இப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு பயந்து அல்லது வேறு ஏதோ காரணத்தினாலோ தாளாளர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார். என்ன செய்வது...


ஒருமுறை கல்வி ஆய்வாளர் ஒருவர் பள்ளியில் ஆய்வு நடத்த வந்திருக்கிறார். வந்தவர் திருவள்ளுவர் குறித்து கேள்வி எழுப்புகிறார். ஒருமுறை திருவள்ளுவரின் மனைவி கிணற்றில் நீர் இறைத்து கொண்டு இருக்கும் பொழுது திருவள்ளுவர் அழைத்தவுடன் நீர் இறைத்த வாளியை அப்படியே விட்டுவிட்டு திருவள்ளுவரிடம் வருகிறார். அந்த வாளி அப்படியே நிற்கிறது. அது ஏன் நிற்கிறது என்று கேள்வி எழுப்புகிறார். பதில் தெரிந்தவர்கள் யாராவது கையை உயர்த்துங்கள் என்றவுடன் ஒரு சிறுவன் மட்டும் கையை உயர்த்துகிறான். அதெல்லாம் வாளி நிற்காது சார். கிணற்றுக்குள் விழுந்துவிடும் சார் என்று கூறுகிறான். மற்ற மாணவர்கள் அனைவரும் சிரிக்கிறார்கள். உடனே கோபித்துக் கொண்டு அவர் தலைமை ஆசிரியர் அறைக்கு சென்று விடுகிறார். மாலை ஆய்வாளர் தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதைப் போன்ற கதைகளை கூறாமல் விட்டது உங்கள் தவறு என்று கூறுகிறார் அதற்கு அந்த ஆசிரியர் அந்த வாளி அப்படியே நிற்கிறது என்றால் அதற்கு காரணம் கற்பின் மகிமை என்று சொன்னால் அவனுக்கு புரியாது என்பதனால் நான் கூறாமல் விட்டுவிட்டேன் சார் என்று கூறுகிறார். அந்த ஆசிரியரிடம் ரொம்ப அதிக பிரசிங்கித்தனமா நடக்க வேண்டாம் என்று கூறுகிறார் ஆய்வாளர். ஆசிரியர் அமைதியாக நின்று விட்டு அமர்நதுவிடுகிறார். 


ஆசிரியர்கள் தமக்குள் உள்ள காழ்ப்புணர்ச்சி என்பது வெறும் பொருளாதார ரீதியிலோ திறமையிலோ மட்டும் வருவது அல்ல அது ஜாதியை வைத்தும் வரலாம். ஒரு வகுப்பில் ஆங்கிலம் கற்பிப்பது தொடர்பாக கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் வராமல் போக பாமா தோழரிடம் அந்தப் பணியை ஒப்படைக்கிறார். இதன் காரணமாக உண்டாகும் பிரச்சனைகள் இருந்தாலும் அதையெல்லாம் மீறும் செயலாக ஜாதியை வைத்து உண்டாகும் பிரச்சனைகள் நீறு பூத்த நெருப்பாக உள்ளுக்குள்ளே பல ஆசிரியர்களிடம் கனன்று கொண்டு இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி உள்ளார். "அந்த ஏகலைவன் ஒரு வேட்டுவப்பயல் தான். அவ்வளவு குரு பக்தி. ஆனா இப்ப இங்க எஸ் சி பசங்க இருக்காங்களே இவங்களுக்கு படிப்பும் ஏறாது மண்ணும் ஏறாது. ஆனால் இதுங்கள வச்சுக்கிட்டு நாம தான் மாரடிக்கணும். அவனுங்கள லேசா தொட்டுட்டா போதும். அம்புட்டு பேரும் காக்கா கூட்டங்கணக்கா சண்டைக்கு வந்துருவானுங்க. அதனால அவனுடைய படிச்சா என்ன, பாழாப் போனா என்னன்னு உட்டுறது பெட்டர்" என்று ஒரு ஆசிரியர் பேசுகிறார். இவருக்கு வரலாறும் தெரியவில்லை. ஜாதி உரித்த புரிதலும் இல்லை. எல்லாம் மாணவர்கள் என்ற எண்ணம் இருந்தால் இந்த எண்ணம் வரவும் வராது. இதற்கு எதிர்த்து கேள்வி கேட்ட பாமா தோழர் மனம் நொந்து விடுகிறார். காரணம் எல்லா ஆசிரியர்களும் இவர் பக்கம் எதிர்த்து நிற்கிறார்கள். சில ஆசிரியர்கள் "இப்படித்தான் டீச்சர் எங்க ஸ்கூலிலும் இருக்கு" என்ற வார்த்தையை தனியாக வந்து கூறுகிறார்கள். ஆனால் பொதுவெளியில் அவர்கள் ஆதரிக்க கூட முன்வருவதில்லை. இது போன்ற பல பிரச்சனைகள். எல்லா பிரச்சனைகளையும் கடந்து ஆசிரியர் பணியில் தம்மால் இயன்ற அளவு சொல்லித்தந்தது மாணவர்களின் மத்தியில் தனக்கு திருப்தி அளித்ததாக கூறுகிறார் பாமா தோழர். 


வாழ்த்துக்கள் தோழர். ஆசிரியர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.


யாழ் தண்விகா

No comments:

Post a Comment