Friday, 20 February 2026

என்னைச் சந்திக்க கனவில் வராதே #நா.முத்துக்குமார்


 என்னைச் சந்திக்க கனவில் வராதே…


தமிழில்: நா. முத்துக்குமார்


ஜப்பானியக் கவிதைகள்


பட்டாம்பூச்சி பதிப்பகம்


முழுக்க முழுக்க காதலால் நிரம்பிக் கிடக்கிறது தொகுப்பு. உலகப் பொதுமறை திருக்குறள் என்பதுபோல் உலகப் பொதுச்செயல் காதல் என தவறாமல் சொல்லிவிடலாம் தான். 


காதல் ஒரு தனித்துவம். ஒவ்வொருவரின் காதலும் ஒவ்வொரு உணர்வால் அவரவர் உணரும் விதத்தால் அவரவர்க்குள் ஊடுருவும் விதத்தால் வித்தியாசப்படுகிறது. 


இவை எல்லாம் ஜப்பானியக் கவிஞர்கள் எழுதியது, ஜப்பானியக் கவிதைகள் என்றெல்லாம் இல்லை. உலகினரின் காதலின் இயல்புக் கூறுகள் அத்தனையும் இதில் உள்ளன. நம் மொழியில், நம் மனிதர்களிடம் உள்ள அதே காதல். அதே விரகம். அதே தேடல். அதே வலி. அதே சுகம். பல கவிதைகள் ஜப்பானியப் பெண் கவிஞர்கள் எழுதியவை. கவிதைகளைக்   கொண்டாடித் தீர்க்க உணர்ச்சிப் பூர்வமாக அவற்றை வாசிக்கும் ஒவ்வொரு நொடியும் காதலை உணரவைக்கும் ரசனையான எழுத்திருந்தால் போதும். வலியை நமக்குள் கடத்தும் உத்தி இருந்தால் இன்னும் உசிதம். வாசித்தபின் ஆர்ப்பரிக்கச் செய்தால், இது போல நமக்கும் நடந்திருக்கிறதே என யோசிக்க வைத்தால், வலி கொண்டு கடந்த காதலை மீண்டும் மீட்டுணரச் செய்தால் அதுதான் காதல். அப்படிப்பட்ட கவிதைகள் தான் இதில். 


கவிக்கோ அப்துல் ரஹ்மான் மொழிபெயர்த்த கவிதை ஒன்று

“நீயும் நானும் சேரக்கூடாது 

என்றுதான் ஒவ்வொரு முறையும் 

நான் கடவுளிடம் வேண்டுகிறேன்

ஏனென்றால் என் பிரார்த்தனைகள்

ஒருபோதும் நிறைவேறுவதில்லை” என்றிருக்கும். நிறைவேற்றித் தராத கடவுளை அவன்போக்கில் விட்டு காதலை அடைந்துவிட காதலியோ காதலனோ செய்யும் உத்தி அற்புதமாக கவிதையில். 

அதேபோல  இருவரில் ஒருவர் செய்யும் பிடிவாதத்தில் எதிர்மறையான செயல்களில் அதைத் தனக்குச் சாதகமாக மாற்றி காதலை அடைந்துவிட முயற்சிக்கும் ஜப்பானியக் கவிதை.

நீ சொன்னாய்

“நான் வருவேன்”

ஆனால் வரவில்லை

இப்போது சொல்கிறாய்

“நான் வரமாட்டேன்” என்று.

ஆகையால் உன்னை எதிர்பார்க்கிறேன்.

உன்னைப் புரிந்துகொள்ள

கற்றுக்கொண்டேனா...?


ஒரு சிறு ஓரப் பார்வையும் காதலில் கொடுக்கும் சுகம் அதிகம். மனதிற்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கவிடும். ஆகாயத்தில் மிதக்க வைக்கும். உலகத்தை கைக்குள் கொண்டுவந்தது போல் சந்தோசிக்க வைக்கும். காதல் ஒரு மாய சக்தி. நிரந்தரமாக தொடரும். அல்லது சட்டென கைகளை விட்டுப் பறந்தோடிவிடும். 

“கொஞ்ச காலம் தான்

ஒன்றாகயிருந்தோம்

என்றாலும் 

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும்

எங்கள் காதல் வாழும்.”


“உன்னைக் காதலிக்காதவளை

நீ விரும்புவது என்பது

கோயிலுக்குச் சென்று 

சைத்தானை 

வணங்குவது போன்றது.”


இதற்கு மேலும் எப்படி நெருக்கம் காட்டுவது, என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதற்கெல்லாம் விளக்கம் கொடுத்தல் என்பது எப்படி சாத்தியம் ஆகும்... இங்கு அதனை இப்படிச் சாத்தியப் படுத்துகிறது கவிதை

“உன் வியர்வை உறிஞ்சுகிற

உள்ளாடை போல

உனக்கு நெருக்கமாக இருக்க

விரும்புகிறேன்.

எப்போதும் உன்னையே

நினைக்கிறேன்...”


பிரிவில் வாழும் காதலர்கள் வெளிப்படுத்தும் அன்பு அதீதமானது. அது அருகிலிருப்பதை விட பல மடங்கு வெளிப்படும். அது ஏக்கமாக, வலியாக, வெறுமையை உணர்த்த, இன்னும் நான் உன்னை நினைத்துக்கொண்டிருக்கிறேன், நீதான் என் உலகமாக இருக்கிறாய் இருப்பாய், என் காதல் வலிமையானது, நாம் ஒன்று சேர்வோம் எனப் பலப்பல வழிகளில் நம்பிக்கையைக் கூட்டும் வரிகளில் பூக்கும். காதல் என்பதை நம்பிக்கைதானே...

“வருடங்கள் என்னைத் தொடுகிறது

வயது என்னைப் பலவீனமாக்கி

கவலையில் தள்ளுகிறது.

என் கவலையும் கனமும்

விலகவேண்டும்

மலரைப் போன்ற 

உன் அழகிய முகத்தைப்

பார்க்க விரும்புகிறேன்...”


“இந்த நிலவில்லா இரவில்

நீ வரவில்லை

உனக்காக விழித்திருந்தேன்

என் மார்பகங்கள்

விம்மித் தளர்கிறது

என் இதயம் எரிகிறது”


இப்படிப் பல கவிதைகள். அத்தனை கவிதையிலும் காதல் இருக்கிறது. காதலர்கள் இருக்கிறார்கள். மகிழ்ச்சி இருக்கிறது. கவலை இருக்கிறது. முக்கியமாக அவற்றில் நாம் இருக்கிறோம். வேறென்ன கவலை... நம்மை நாம் திருப்பிப் பார்க்க காதலை விட பெரும்பாக்கியம் இருக்கிறதா என்ன...

வாசிப்போம். காதலில் வசிப்போம்.


யாழ் தண்விகா

No comments:

Post a Comment