Sunday, 8 February 2026

நான் உன்னைக் காதலிக்கிறேன்

 நான் உன்னைக் 

         காதலிக்கிறேன்...

-----------------------------------------


- யாழ் தண்விகா 

- கவிதை நூல்

விலை - ரூ.66


 தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் பிறந்த கவிஞருக்கு இது நான்காவது நூல்.


" எத்தனை விழிகள் தின்றாலும் தீர்ந்து போகாத நிலா " என்கிற வரிகளில் பொதிந்திருக்கும் உண்மையைப் போலவே அனைவரின் அகத்தில் தோன்றும் காதல் அதீத அழகாகவே வெளி வருகிறது. வார்த்தைகளின் வழியே வாசிப்பவனுக்கும் பூச்சொரிகிறது, மழை நின்ற பின்பும் காற்று வீசுகிற போதெல்லாம் இதமாய் தூரிவிடும் மரக்கிளைகளைப் போல சில்லிடச் செய்கிறது கவிதைகள் ஒவ்வொன்றும்.


" நீ பதித்த கால் தடத்தில் 

   பூச்செடி நட்டு வைத்தேன்

   காதல் பூக்கிறது .."


-வாசிக்கும் நம் கண்களும் காதல் பூத்துக் கிடக்கும் வனத்தினில் கால் பதிக்கிறது.


" உனது ஊரில் மழை என்றாய் 

   எனது ஊருக்கு நீ வரும்போது 

   நானும் சொல்வேன் 

   எனது ஊரில் மழையென்று "


- அடடா காதலின் கர்ப்ப கிரகத்தில் தான் எத்தனை கவிதை குழந்தைகள் சூல் கொள்கின்றன. பார்வைகள் பற்றிக்கொள்கிற போதெல்லாம் கவிதைப் பிள்ளைகள் பிறந்து கொண்டே இருக்கின்றன.


 " அழகால் வதைக்காதே என்றால் 

   நீ என்ன செய்வாய் ...


   தப்பிக்கதான் 

   நான் கவிதை எழுத கற்றேன் "


-சில நொடிகள் சிறைப்படுவதும் சில நொடிகள் தப்பிப்பதுமான போராட்டம் தான் காதலில் கூட,


" என் அனைத்து கவிதைகளும் 

   உன்னை பற்றி தான் பேசுகின்றன

   என்றாலும் 

   உன்னை போல் 

   அழகாய் பேசி விடுவதில்லை அவை.."


- என்கிறது ஒரு கவிதை எத்தனை முறை தான் கைகாட்டி காட்டிக்கொடுக்கிறீர்கள் உங்கள் காதலை . ஆனாலும் சலிக்கவில்லை வாசிக்கும் எங்களுக்கும் வானவில்லின் வண்ணங்களைப் போல கண்களுக்குள் ஒட்டிக் கொள்கிறது .

 பொதுவான கற்பிதங்களை காதல்தான் உடைத்தெறிகிறது சமூகத்திலும் தனிமனித வாழ்விலும். காதல் எவ்வளவு மெல்லியது ஆனாலும் உடைக்கும் பொழுது அது பேருளி.


" தேவதை 

   வெள்ளை உடையில் மட்டுமே 

   வருவாள் என்ற கட்டமைப்பை 

   உடைத்தவள் நீ "


-என்கிறது கற்பிதமுடைத்த கவிதை ஒன்று.


" புடவை மட்டுமே எனக்கு 

   பிடித்த உடை 

   என்கிறாய்...

    

   என்னிடம் 

   சிபாரிசுக்கடிதம் கேட்கின்றன 

   பிற உடைகள் "


-இன்னும் இன்னும் படிக்கச் சொல்லி சிபாரிசு செய்து கொண்டே இருக்கிறது இந்நூலில் இருக்கும் ஒவ்வொரு கவிதைகளும்.


" உன்னை 

  கட்டிக்கொண்டு இருப்பதை 

  நீ புடவை என்பாய் 

  நான் புண்ணியம் என்பேன் "


- ஒரே ஒரு மழைதான் அவரவர் நனைகிறபோது ஏற்படும் ஜில்லிடலைப் போல, ஒரே ஒரு காதல் தான் எத்தனை எத்தனை வர்ணஜாலங்களை மனதளவில் தோன்ற வைக்கிறது.


" நான் உன்னை 

   காதலிப்பதற்காக வாழ்கிறேன் ..


   வாழ்வதற்காக 

   உன்னை காதலிக்கிறேன் "


-காதல் மலர்ந்த இதயத்தின் ஆன்மாவிலிருந்து உதிரும் பூக்களாய் ஒவ்வொரு கவிதையும் அவரவர் மனதின் காதலை திறக்கவும் வைக்கிறது_ மரணிக்கவும் வைக்கிறது. என் கவிதைகளை வாசிக்கப் போவதாக சொல்லி பெரியகுளத்திற்கு அழைத்தீர்கள், ஆனால் கவிதையின் காதலனை பார்த்துவிட்டு கைநிறைய காதல் புத்தகங்களோடு வீடு திரும்பியிருக்கிறேன் . வாசிக்க வாய்ப்பளித்த கவிஞனுக்கு நன்றி.  


 " மரணம் என்று 

   ஒன்று உண்டெனில் ,

   அது உன்னால் வேண்டும் 

   அல்லது ,

   உன்னுடன் வேண்டும் "


-என பதின் பருவத்திலொருவன், கண்களும் இதயமும் பனிக்கச் சொன்ன வரிகளை ஞாபகப்படுத்தியதற்கு மீண்டும் ஒரு நன்றி.


-பா.மகாலட்சுமி-

No comments:

Post a Comment