Sunday, 8 February 2026

வாய்தாவில் இருக்கும் பதினைந்து இலட்சம்

 வாய்தாவிலிருக்கும் பதினைந்து இலட்சம்

கவிதைத் தொகுப்பு

கோபி சேகுவேரா 

படைப்பு பதிப்பகம்

பக்கங்கள் 84

விலை ரூ. 100


கவிதைகள் என்ன செய்துவிடும்...? சம்பவங்கள் செய்யும்.


நம்மைப் போல் ஒருவனைக் கண்டால் ஆரத் தழுவிக்கொள்ளும் மனம் எல்லோருக்கும் வாய்த்ததே. இத்தொகுப்பைப் படிக்கப்படிக்க அதே எண்ணம் தான் எனது மனதிலும் வந்து சேர்ந்தது. மக்களுக்கு எதிரான நிலையெடுக்கும் சனாதன அரசைக் கண்டிக்க எழுத்தை ஆயுதமாக்கியிருக்கிறார் கவிஞர். தமிழ், தமிழர், தமிழ் தேசியம் என்று கூறிக்கொண்டே பொய்யையும் புரட்டையும் பேசி சாதிய மனப்பான்மையில் பெருமிதம் கொள்ளும் ஒரு கும்பலை வளர்த்தெடுக்கும் நாம் தம்பி குழுவை புரட்டி எடுத்திருக்கிறார். மக்கள், வாழ்க்கை, காதல் குறித்த கவிதைகளும் தொகுப்பில் கிடைக்கின்றன. மேலாக இசைஞானி இளையராஜாவின் பெயர் ஐந்து கவிதைகளுக்கும் மேல் இடம்பெறுகிறது. ஆக ஆரத் தழுவிக்கொள்ள ஒரு கவிஞன், கவிதைத்தொகுப்பு என்று மனதாரச் சொல்லுவேன். 


அட்டைப்படம் தொடங்கி ஆரவாரம். புரட்சியாக பூவாக நம்மை வசீகரிக்கிறது சொற்களும் கருவும் கவிதையும். அட்டைப்பட வடிவமைப்பாளர் ஜெ.கோ.புவன் அவர்களுக்கு பேரன்பு. பெரும்பாலும் அரசியல் இல்லை என என்னுரையில் சொல்லியிருக்கும் கவிஞரின் அரசியல் தொகுப்பெங்கும் மிளிர்கிறது. ஒவ்வொரு புதிய திட்டம் தொடங்கும்பொழுதும் புதிய இந்தியா தொடங்குகிறது என்ற கூச்சல். வந்தே பாரத் ரயிலுக்கும் அப்படியே. அதன் முன்பக்கம் மாடு முட்டி சேதமாகிறது. வேறொரு ரயில் எஞ்சினால் இழுத்துச் செல்லப்படுகிறது. நாம் வேடிக்கை பார்க்கிறோம் பழைய இந்தியர்களாகவே. 

“வந்தே பாரத் ரயிலோடு

ஐநூறாவது புதிய இந்தியா வந்துகொண்டிருக்கும்

இந்த ரயில் பாதையில்தான்

உயர்ந்த விலைவாசிக்காக

வழியற்ற வாழ்வுக்காக 

தலைவைத்துக் கிடக்கிறார்கள்

ஐநூறாவது புதிய இந்தியாவின்

பழைய மற்றும் புதிய இந்தியர்கள்” 

வெற்றுப் பம்மாத்துக்களை மட்டும் ரயில் போல நீளமாக மக்களிடம் காட்டிக்கொண்டிருக்கும் அரசுக்கு இந்தக் கவிதை. 


ரஃபேல் ஊழல் என்பதிலிருந்து தகிடுதத்தங்கள் செய்து தப்பித்து வந்தாலும் ரஃபேல் வாட்ச் என்பதும் அதன் பில்லும் பேசுபொருளானது மலையால். தொடர்ந்து பேசுவது அனைத்தும் பொய் என்று மாறிய சமயம் இன்னும் நேரடியாக மக்களிடம் சென்று அந்தப் பொய்களைச் சொல்ல யாத்ரா முடிவாகிறது. செல்லும் இடமெல்லாம் கூட்டப்பட்ட கூட்டம். அண்ணா மன்னிப்பு என்றொரு பொய் ஒரு இடத்தில். வீரசிவாஜி வந்து போன கோவில் என்று ஒரு பொய் ஒரு இடத்தில் என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரும் யாத்ரா குறித்த கவிதை ஒன்று. ஊடகப் பதிவுகளில் மலை குறித்த பதிவுக்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல் என்று கமெண்ட் செய்யும் சனாதன எதிர்ப்பாளர்கள் வழியில் இந்தக் கவிதைக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று தலைப்பு. மிரட்டி விட்டுருக்காப்டி மனுஷன்.

“கொஞ்ச தூரமாவது நிடந்து செல்

சொம்பு கொடுத்து கூட்டத்தைக் கூடாதே

வெறுப்புப் பிரச்சாரம் செய்

தேவைப்பட்டால் ராணுவம், ராம ராஜ்ஜியம்

இந்து, சந்து என ஏதாவது உளறி வை.

எங்கு பார்த்தாலும் 

பிரியாணி ஆண்டாவை 

கண்டுகொள்ளாமல் கடந்து போ.

இரட்டைத் தலைமையிடம்

பிடுங்கிய இலைகளை

ஆட்டுக்குட்டிக்கு உண்ணக்கொடு”

எனச் செல்லும் கவிதை சமகாலத்தின் கண்ணாடி. கோமாளித்தன அரசியலைக் கண்முன் நிறுத்தும் கவிதை, அவர்களுக்கெதிரான தீப்பந்தத்தையும் நம் கைகளில் தந்துசெல்கிறது.


எப்பொழுது என்ன மாதிரியான விலை உயர்வு, வரி உயர்வு வரும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதை அரசின் நடவடிக்கைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். நூறாவது பொய்பொழிவு என்ற தலைப்பிலான கவிதையில் 

“முதலாவது மன் கி பாத் நிகழ்ந்தபோது

சமையல் எரிவாயு விலை பற்றி 

உங்களுக்கும் சொல்லத்தான் கேட்டுக்கொண்டிருந்தேன்.

ஒரு ரகசியம் சொல்கிறேன்

இன்று நூறாவது மன் கி பாத்

அப்போது விலை 410 ரூபாய்

இப்போது விலை 1100 ரூபாய்” சமகால அரசியலையும், அரசியல் போகும் பாதையையும், மக்கள் அதனால் படப்போகும் இன்னல்களையும் இவ்வரிகளை வாசிக்கும் யாவரும் உய்த்துணரக்கூடும்.


அணிந்துரையில் தோழர் Vijayakumar Gurusamy கவிஜி சொன்னது போல, பல கவிதைகள் வாசிக்கும்போது இதழ்களில் புன்னகை பூக்கக்கூடும். அவை அரசியல் சார்ந்து இருப்பது அவலம் தான். அந்த அரசியலைச் சுமந்துகொண்டுதான் நாமும் இந்த மண்ணில் வாழ்கிறோம். வாடுகிறோம். அரோமா பேக்கரியில் உட்கார்ந்துகொண்டு வேட்பாளர்களின் கூச்சலைக் கேட்டுப் பொங்குகிறார். அப்படி என்னதான் வேட்பாளர்கள் சொல்லிவிட்டார்கள்...

“மல்லிகை மலர்ந்தே தீரும்”

“நமது சின்னம் தேக்கு விவசாயி”

“நமது மம்மியின் சின்னம்”

“ஆக, இது டாடியின் சின்னம்”

“இது தக்காளிப்பழ சீசன், உங்கள் ஓட்டு தக்காளிக்கே”

அரசியல்வாதிகளுக்கு என்று தீரப்போகிறதோ இந்த கூச்சல் மோகம்?


ஊடகத்தினர் முன்னால், பொதுக்கூட்டத்தில், தனி நேர்காணலில் என எங்கு பார்த்தாலும் கொஞ்சம்கூட கூச்சப்படாமல் பொய்களை அவிழ்த்துவிடுவதற்குத் தனித்திறமை வேண்டும் என முதலில் நினைப்பேன். ஆனால் அதற்கு அவர்கள் அசிங்கப்படவேண்டும். நாம் அதனைக் கண்டு காறி உமிழ வேண்டும். குறைந்தபட்சம் எழுத்தாளனாக இருப்பவன் தனது கவிதைகளிலேனும். கவிஞர் பாராட்டுக்குரியவர். அவர் தன்னுடைய எழுத்தை முட்டாள்தனத்திற்கு எதிராக கொம்பு சீவி விட்டிருக்கிறார். ஆமை ஓட்டுப் படகு, ஏகே 74, ஆமைக்கறி, உடைத்த கறி இட்லி, பன்றி அடித்தல், வந்தேறி அடையாளம், சாத்தானின் பிள்ளைகள், படித்த பட்டதாரிகள் ஆடு மாடு மேய்க்க, குடிப்பெருமை பேச, இடையிடையே தமிழ்த் தேசியம், அத்தனையையும் பொங்குதமிழில் பேசி புக்காகாகா என பகடி செய்து வயிறு வளர்க்கும் தலைவனென்று சொல்லிக்கொள்ளும் ஒருவரை கவிதையில் பந்தாடியிருக்கிறார் கவிஞர். 


சேலம் ராஜா எழுதிய கவிதை ஒன்றில் 

“அழகான கோபுரத்தில் தொடங்கி

அம்பேத்கார் சிலையோடு முடிகிறது 

எங்கள் ஊர்” என சாதியச் சமூக ஊர்ச் சித்திரத்தை சொல்லியிருப்பார். கவிஞர் கோபி சேகுவேரா கூறும் ஊர்ச் சித்திரம் இப்படியாக இருக்கிறது...

“உடைபட்ட எலும்போடும்

அறுபட்ட கழுத்தோடும்

சேரியில் வாழும் 

காந்திக்கும்

நேருவுக்கும்

ஊர்த்தெருக்களில்

புத்தகம் ஏந்திக்கொண்டு

ஒரு அம்பேத்கர் கூட துணைக்கு இல்லை”.


புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்ததை, நம்மிடம் தொடர்பில்லாத ஒருவர் நம்மை அறிய நம் பெயர், அடுத்து ஊர்ப் பெயர், தெருப்பெயர் எல்லாம் கேட்டு நம்மை என்ன சாதி என அறிய முற்படுவதை கவிதையாக மாற்றி வைத்துள்ளார் கவிஞர். 


அறிமுகப் பிணக்கு கவிதை காதல் துயரை கண்ணீரால் எழுதியிருக்கிறது. அதிலும் அந்த கடைசி வரிகள்...

“தற்செயலின் கதவுகளை உடைத்து

நிரூபிக்க என்னிடம் என்ன இருக்கிறது

எப்போதோ கிசுகிசுக்கப்பட்ட

நம் பெயர்களைத் தவிர”


நினைவு மாதிரிகள், பண்டிகை உள்ளிட்ட சில கவிதைகள் பீஃப் பிரியாணியை, வருவலை, குழம்பை, சத்துக்களை சொல்லும் கணம் நாவினில் எச்சிலூற வைக்கிறது. நாம் தம்பியாக உயர்வது எப்படி என்பதை தமிழ்த்தேசியம் என்ற கவிதை பாடமெடுக்கிறது. இசைஞானி இளையராஜா பற்றிப் பேசும் சில கவிதைகள் அவரின் இசைபோல உள்ளுள் பரவுகிறது சுகமாக. 

வெ....கு....தூ....ர....ம் என்ற கவிதை

கண்ணம்மா காதலென்னும் கவிதை சொல்லடி பாடலைப் பாடி கவிதையைமனதோடு அணைத்துக்கொள்ளும் வேலையைச் செய்கிறது... ஒரு பாடலின் சொற்களை எப்படியெல்லாம் இணைத்து பிரித்து ராகமாக்கலாம் என்ற வித்தை கற்றவர் அவர்... 

“வெண்ணிலவின் ஒளி

கனலாய்

கொதிக்குதடி...

எண்ணம்

நிலை இல்லாமல்

தவிக்குதடி...

எப்போது வேண்டுமானாலும் இசைஞானி இப்படிச் சொக்கும்படி ஏதாவது செய்துகொண்டிருப்பார்....” கவிதைக்குள்ளும் ராஜாவின் இசைபோல சொற்கள்.


சொல்லித் தீரா கவிதைகள் இன்னும் பல தொகுப்பிற்குள். வாசிக்க வாசிக்க சுவாரஸ்யம். அரசியல், தனிமனித வாழ்க்கை, காதல் என பலரசங்கள். ரசித்து வாசிக்கலாம். ரசித்து மகிழலாம். ரசித்து மயங்கலாம். நல்லதொரு சமூக, அரசியல் கவிதைத் தொகுப்பிற்கு வாய்ப்பு நல்கிய படைப்பு குழுமம் Mohamed Ali Jinna தோழருக்கு பேரன்பு.


கவிஞரை வாழ்த்த கவிஞரின் வரியை கவிஞருக்கே சொல்லக்கூடாதா என்ன...

“என்னுடன் நீ மிஞ்சியிருக்க இந்த வாழ்வு போதாது”


வாழ்த்துகள் கவிஞரே.


யாழ் தண்விகா

No comments:

Post a Comment