Thursday, 19 February 2026

அம்பேத்கரைப் புரிந்து கொள்வோம்


 அம்பேத்கரைப் புரிந்துகொள்வோம்

தொல்.திருமாவளவன் 


தொகுப்பு: ராமதாஸ் சென்றாயன்


வெளியீடு: விடுதலை கலை இலக்கியப் பேரவை

மதுரை தெற்கு


விலை ரூ 20/=

பக்கங்கள் 28


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புரட்சியாளர் அம்பேத்கர் நெடுந்தொடருக்கான பாடல் வெளியீட்டுக்கு வந்திருந்தபோது புரட்சியாளர் அம்பேத்கரைக் கொண்டாடும் தமிழா தமிழா என்னும் நிகழ்விலும் பங்குபெறவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர். தொல்.திருமாவளவன் அவர்கள் அழைக்கப்படுகிறார். அந்த நிகழ்வில் அவர் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் மற்ற அனைவரும் பேசியதைக் கேட்டு முடித்தபின்னர் எவ்வித முன் தயாரிப்பும் இன்றிப் பேசிய உரை இது என்று ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நெறியாளரும் இயக்குனருமான கரு.பழனியப்பன் கூறுகிறார்.


அம்பேத்கரைக் கொண்டாடுவோம் என்று சொன்னால் அம்பேத்கரைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும். இங்கு இந்த சனாதன சமூகம் எந்த அளவில் அவரைப் புரிந்துகொண்டிருக்கிறது? அவர்களின் புரிதலை மாற்றும் உத்தி எது? அவர்கள் ஏன் மாறாமல் இருக்கிறார்கள்? எது அவர்களைத் தடுக்கிறது? என்பதை தன்னுடைய உரையின் வழியே விளக்கிக்கூறுகிறார் திருமா. அண்ணாவிற்குப் பெரியார் ஆசான். விவேகானந்தருக்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆசான். காந்திக்கு லியோ டால்ஸ்டாய் ஆசான். ஆனால் அம்பேத்கருக்கு புத்தர், கபீர்தாசர், மகாத்மா பூலே ஆசான்கள். புத்தர்  பல அம்பேத்கர் காலத்தவர் அல்ல. நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவர். அவரை அம்பேத்கர் ஏற்க என்ன காரணம். அவரின் சனாதன எதிர்ப்புதான். தந்தை பெரியாருக்கு முன்பே நாங்கள் இந்துக்கள் இல்லை என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தவர்கள் அயோத்திதாசரும் இரட்டைமலை சீனிவாசரும். 


இன்னும் இங்கு இப்போதெல்லாம் யார் சார் சாதி பார்க்குறா என்ற கேள்வி கேட்கப்படுகிறது. கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் கூட நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் எச்சில் உமிழ கீழே தள்ளிவிட இங்குள்ள சாதி இந்துவின் மனநிலை இருக்கிறது. இவர்கள் யார் இவர்கள் தன்னை சாதி இந்துவாக தன்னை மாற்றிக் கொண்டவர்கள். இந்துக் கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டவர்கள். இந்த வர்ணாசிரமக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாததால் தான் ஒடுக்கப்பட்டோருக்கு அவர்ணாஸ் என்று பெயர். 


மொகலாயர்கள் 800 ஆண்டுகள் ஆண்டபோதும், வெள்ளைக்காரன் வந்து ஆண்டபோதும், சுதந்திரம் பெற்றபின்னும் இன்னும் இந்த நிலை மாறாமல் இருப்பதற்கு யார் காரணம் என்ற கேள்வியை முன்வைத்து திருமா அவர்கள் விளக்கம் அளிப்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டியது கட்டாயம். 2000 ஆண்டுகளாக நாங்கள் வீழ்த்தப்பட்டோம் என்பது தவறு. நாங்கள் எதிர்த்து நின்றவர்கள். கலகக்காரர்கள். எதிர்ப்பாளர்கள். கும்பகோணம் பகுதியில் பார்ப்பனர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் பகுதிக்கு வந்தால் சாணியைத் துடைப்பத்தில் முக்கி அடிப்பார்கள் உள்ளே வராதீர்கள் என்று அடித்து விரட்டுவார்கள் என்ற தகவலை அம்பேத்கர் தனக்குக் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் கூறுவதாக திருமா கூறுகிறார். இந்தச் சூழல் மாறி இன்று வெறும் மூன்று சதவீதம் உள்ளவர்கள் எப்படி அதிகாரம் படைத்தவர்களாக மாற முடிந்தது? காரணம் இந்துக் கொள்கைகளில் சமரசம் செய்துகொள்பவர்களுடன் கூட்டணி சேர்ந்துகொண்டு இதை நிகழ்த்துகிறார்கள். இதை எப்படி தடுப்பது? இந்தச் சுரண்டல் எப்போது முடிவுக்கு வரும்? இது முடிவுக்கு வர வேண்டிய அவசியம் என்ன? என்பதை எல்லாம் உணரவேண்டுமாயின் அம்பேத்கரைக் கொண்டாடுவதற்கு முன் அவரைப் புரிந்துகொள்ளவேண்டும் என்கிறார் திருமா அவர்கள்.


வாசிக்க வேண்டிய உரை.

No comments:

Post a Comment