நேச அலைகள்
சிறுகதைத்தொகுப்பு
ஆசிரியர் மொசைக்குமார்
பாரதி புத்தகாலயம் வெளியீடு
விலை ரூபாய் 150
தொகுப்பில் மொத்தம் 25 சிறுகதைகள். ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு நிகழ்வை பேசுகிறது.
சிறு கதைக்காக மெனக்கெடல் என்பது அவசியமில்லை என்பது போன்ற ஒரு தோற்றத்தை வாசித்தவுடன் ஒவ்வொரு கதையும் ஏற்படுத்திவிடுகிறது. ஆனால் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு கதையை கொண்டிருக்கிறது. ஆனால் அதனை நாம் பதிவாக மாற்றாமல் அல்லது அதனை ஒரு விஷயமாக கருதாமல் கடந்து வந்துவிடுவதால் அந்த நிகழ்வு குறித்து பிறருக்கு நம் பகிர்தல் சென்று சேராமல் போய்விடுகிறது. தொகுப்பில் ஒவ்வொரு கதையும் இட்டுக்கட்டி கூறாமல் தான் சந்தித்த ஒவ்வொரு நிகழ்வையும் கதை ஆக்கியிருக்கிறார் மொசைக்குமார்.
பிறநாட்டு கதைகள், மொழிபெயர்ப்புக் கதைகள், புனைவுக் கதைகள் என நம்முடைய அறிவுத் தளத்தை விரிவுபடுத்திக் கொண்டே செல்லக்கூடிய சூழலில் நேச அலைகள் நமக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் கதையை, நாம் வாழவேண்டிய கதையை அறிய ஒரு வாய்ப்பு அளித்து இருக்கிறது என்றே கூறலாம்.
கட்டுமான தொழில் செய்து வரும் மொசைக்குமார் அவர்கள் தன் பணி சார்ந்த பல கதைகளை இத்தொகுப்பில் கூறியுள்ளார். இவர் கதை கூறும் பாணி கொஞ்சம் வித்தியாசமானது. ஒவ்வொரு கதையும் ஒரு நிகழ்வை பேசத் தொடங்குகிறது. பின்னர் அந்த நிகழ்வின் பின்னணியில் உள்ள அரசியலைப் பேசி வளர்கிறது. தொடர்ந்து முடிவாக கதையின் ஆரம்பத்தில் கூறிய நிகழ்வின் தொடர்ச்சியைக்கூறி கதை முற்றுப்பெறுகிறது.
உதாரணமாக மணியாசுக்கட்டை என்ற கதை. இக்கதையில் சிறுவன் பள்ளிக்குச் செல்லும் சிறுவன் அடிக்கடி பென்சில் ரப்பர் இவற்றை தொலைத்து விடுகிறான். இவன் இப்படி செய்வான் என்பதை அறிந்த தந்தை மொத்தமாக பென்சில்களை, ரப்பர்களையும் வாங்கி வைத்திருக்கிறார். ஒவ்வொரு முறை மகன் தொலைத்த பொழுதும் அவனைத் திட்டிக் கொண்டே தான் வாங்கி வைத்திருக்கும் பென்சிலை, ரப்பரை அவனுக்கு கொடுக்கிறார். வீட்டில் உள்ள அம்மா தன் பங்குக்கு அவனை திட்டுகிறார். இருந்தாலும் இந்தப் பழக்கம் நீடிக்க கூடாது என்பதற்காக தந்தை இனிமேல் நீ பென்சிலை தொலைத்தால் திரும்ப நான் வாங்கித் தர மாட்டேன். இதுதான் கடைசி எனக்கு ஒரு பென்சிலை தருகிறார். இதனைத்தொடர்ந்து வேலைக்குச் செல்லும் பகுதிக்கு தந்தை கிளம்பிவிடுகிறார். அங்கு சென்று கட்டிடம் கட்டும் பணிக்குத் தேவையான பொருள்களை எடுத்து வைத்துவிட்டு பணிகளை தொடங்குகிறார். அந்த சமயம்தான் பணிக்குத் தேவையான மணியாசுக்கட்டை இல்லை என்பது தெரிய வருகிறது. வீட்டிலிருந்து வரும் பொழுது அதனை எடுத்து வந்தோமா அல்லது கடந்த முறை பணியாற்றிய இடத்திலேயே மணியாசு கட்டையை வைத்துவிட்டு வந்து விட்டோமா அல்லது வரும் வழியில் எங்கேயாவது விழுந்து இருக்குமா என்ற குழப்பம். இந்தக் குழப்பத்தின் வாயிலாக ஒரு ஞானம் பிறக்கிறது தந்தைக்கு. அது என்னவென்றால் இவ்வளவு வயதான தனக்கு பணிக்குத் தேவையான பொருளை எங்கே வைத்தோம் எங்கே தொலைத்தோம் என்பது குறித்த ஞாபகம் இல்லாத பொழுது பள்ளிக்குச் செல்லும் சிறுவன் பென்சில், ரப்பரை எப்படி தொலைத்தோம் என்பதை எப்படி நினைவில் வைத்திருப்பான் என்ற எண்ணம் தோன்றுகிறது. அதன்பின் மகனிடம் பென்சிலை தொலைத்ததற்காக திட்டியது குறித்து தன்னுடைய வருத்தத்தை தெரிவிக்கிறார் தந்தை என்பதாக கதை முடிகிறது.
சின்னச் சின்ன சில்லறை வேலைகளுக்கு மட்டும் தம்மைப் பயன்படுத்திக்கொண்டு பெரிய வேலைகளுக்கு வெளியூர் ஆட்களைப்போட்டு கட்டிட வேலைகள் பார்க்கும் முதலாளிகளைத் தோலுரிக்கிறது ஒரு கதை.
தன்னிடம் வேலை பார்த்த ஒருவன் பெரிய கொத்தனார் ஆன பின் அவனிடம் வேலைக்குச் செல்லுதல் பற்றிய ஒரு கதை.
மனைவியுடன் பயணித்துச் செல்கையில் பேருந்தில் நிகழும் சம்பவம், மனைவி தேர்வெழுத உடன் சென்றிருந்த பொழுது அங்கு மல்லிக்கட்டி வாங்கிய தயிர்சாதம் பற்றிப் பேசும் கதை, பழையன கழிதலும் எனபது எப்படிப்பட்ட வலி என்பதை உணர ஒரு கதை இப்படி எல்லாம் ஒவ்வொருவர் வாழ்விலும் கடந்து போன நிகழ்வை நினைவுபடுத்தி நம்மை கடந்து போன வாழ்வை மீண்டும் வாழவைக்கும் பணியைச் செய்கிறது.
வாசித்து தோழர் மொசைக் குமார் வாழ்வை அறியலாம். அப்படியே அதன் வாயிலாக நமது வாழ்வையும்...
வாழ்த்துகள் தோழர்...

No comments:
Post a Comment