எறும்பு முட்டுது யானை சாயுது.
கவிஜி
Vijayakumar Gurusamy
படைப்பு வெளியீடு
கவிதைத்தொகுப்பு
சற்று இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் வாசிக்கும் கவிதை நூல். ஓய்விலிருந்த கணினியை இயக்கத் தொடங்கும்பொழுது ரெஃப்ரெஷ் செய்வோம் அல்லவா... இப்பேரிடர் காலம் முடியும் தருவாயில் மனதில் மேலும் பாரங்களைக் குவித்து விடாமலிருப்பது போல, அதே சமயம் மனதை நேர்மறையாக ஆற்றுப்படுத்துவதுபோல கவிதையாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் வாசிக்கத் தேடிக் கிடைத்த நூல். மனம் பூரித்துக் கிடக்கிறது. கட்டிய மாலை அழகு தான். மணமகளின் கூந்தலை அலங்கரிக்கும் பூக்கள் அழகுதான். கொஞ்சம் வளர்ந்திருந்தாலும் குட்டிக் குழந்தைகள் வைத்திருக்கும் பூக்கள் தான் பேரழகு. இக்கவிதைகள் குட்டிக் குழந்தைகள் சூடியுள்ள குட்டிக் குட்டிப் பூக்கள்.
வசீகரத் தலைப்பு. குழந்தைகளுக்கான தொகுப்பாக இருக்கும் என நினைத்தால் அது இல்லை. இல்லையில்லை. நாம் குழந்தையாக இல்லை. 3 பால்கள் வகுத்துக்கொண்ட வள்ளுவனைப் போல 3 தலைப்புகளில் கவிதைகள்.
காதலை, காதல் கவிதைகளைக் கண்டாலே பலருக்கு ஒவ்வாமை வந்து விடுகிறது. அவர்களுக்கும் கவிஜியின் காதல் பிடிக்கும். காதல் எப்போதும் சிறப்பு பொருந்திய ஒன்று. இறையில் வைத்து ரசிக்கத் தக்கது. பூஜிக்கவல்லது. காதல் கவிதைகள் பல கோவிலை மையமாக வைத்துப் பூத்திருக்கின்றன. பார்வையால் வணங்கலாம் அவற்றை. காதல், கடவுளாக நாம் கண்ணுக்கு காட்சி அளிக்கும்.
“எப்போது வாசலிலிருந்து எழுவாய்
சிற்பம் அசையுமென்று
பந்தயம் கட்டியிருக்கிறேன்”
“நடை சாத்திய பிறகு
நீ நின்ற இடத்தில்
நின்று பார்க்கிறார் கடவுள்”
“என்ன வாரம் தருவதாகச் சொன்னாய்
விடிந்ததும் கோயில் திறந்து
அமர்ந்து விடுகிறார் கடவுள்”
இப்படியாக கோயில் போல பல களங்கள். பல கவிதைகள். காதல் தேன் நிரம்பிக் கிடக்கிறது “தீ மிதிர்க்காதல்’’ என்னும் தலைப்பின் கீழ்.
“நையப்புடை” என்ற தலைப்பின் கீழ் சமூகம் சார்ந்த கவிதைகள். நம்மை நோக்கி நாம் கேட்க வேண்டிய கேள்விகள், சமூகத்தை நோக்கி கேட்கவேண்டிய கேள்விகள், எங்கு இந்த சமூகம் வெட்கித் தலை குனியவேண்டும், எங்கு நையப்புடைத்தல் நிகழவேண்டும் என்பதை வாசிப்பின் வாயிலாக கண்டடைய கவிதைகள் என்ற பெயரில் பூகம்பமாக, புரட்சியாக காட்சிப் படுத்துகிறார் கவிஜி.
“காசு போட்டவனின் சாயலில்
சாலையில் வரைந்திருந்த
சாமி ஓவியம்”
ஒரு கதையை மூன்று வரிகளில், அளவான சொற்களில் அற்புதமாக வார்த்திருக்கிறார் கவிஞர். வரைந்தவனின் வறுமை, சமூக அவலம், காசு போட்டவனை கடவுளாகப் பார்க்கும் ஓவியன் என வரிகள் ஒவ்வொன்றிலும் நாம் உற்று நோக்க நிறைய உண்டு.
“ஐந்தாவது ஆளாகச் செல்கையில்
கொஞ்சம் சுலபமாக இருக்கிறது
வன்புணர்வு”
எளிய வார்த்தைகளில் வலி தரும் வரிகள். கண்முன் இந்தக் காட்சி படர்கிறது. வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணின் எரிச்சலில், கோபத்தில் திசையில் நின்று இந்த வரிகளை மடைமாற்றிக் காண்கிறேன். அவ்வளவும் துயர். அந்தக் கண நேர இயலாமையை சுவீகரிக்கும் அற்ப மனிதனின் பார்வைக்கு சுலபமாகத் தான் இருக்கும் இது போன்ற வன்புணர்வும், வரிகளும்.
“எப்போதும் பிரியாத
தண்டவாளத்தில் தான்
செத்துக் கிடந்தார்கள் பிரிந்தவர்கள்”
சட்டென ஒரு ரயில் தண்டவாளம். வெள்ளை நிற சட்டை, நீல நிற ஜீன்ஸ் பாண்ட் சகிதமாக இறந்துகிடக்கும் இளவரசன். சுற்றிலும் கண்ணீரோடு சில மக்கள். மையமாக யார் பார்வைக்கும் தெரியாமல் அழுது அரற்றிக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தது பிரிந்த காதல். காதல் கடந்த சமூகம் சாத்தியம் என்பது காலத்தை ஏமாற்றும் நாடகம் என்பதை சாதி எப்போது உணரப்போகிறதோ...
தத்துவம் சார்ந்த ஹைக்கூக்கள் கனவை நிறுத்துகிறேன் என்ற தலைப்பில். வாழ்வின் நிலையாமை உணர்ந்தவன் உயிர்களின்மேல் அன்பு செலுத்துவான். ஆனால் இங்கு அன்பு என்பதை உறவுகளிடம் மட்டுமே காட்டவேண்டும் என்றே கொள்கைப் பித்தர்கள் புரிந்துகொண்டார்கள் போல. பல கவிதைகள் புன்னகையை வரவழைத்து புத்தி புகட்டுகிறது. எதற்காக இந்தக் கவிதை இப்படி புன்னகையை வரவழைக்கவேண்டும் என்று யோசிக்க யோசிக்க கவிதையின் உள்மனதைப் புரிந்துகொள்ள முடிகிறது. வாழ்ந்துவிடலாம் என நினைக்கும்பொழுது வரிசை கட்டி வந்து நிற்கும் துயர்கள் கடப்பதும் பெரிய சவால்தானே.
“ரயிலைத் தவறவிட்டவன்
பச்சைச் சட்டை
அணிந்திருக்கிறான்”
“கடலை வரைந்து முடித்தவன்
காலை
இழுத்துக் கொள்கிறான்”
“சட்டென வாய்ப்பாட்டை
நிறுத்திக்கொண்ட மழைக்கு
அதன்பிறகு தவளை வாய்”
சொல்லிக்கொண்டே இருக்கலாம் இன்னும் பல கவிதைகளை. கவிஜி கவிஞரின் நான்காவது கவிதைத் தொகுப்பை முதலாக வாசித்து அவரறிகிறேன். கவிதையாக வாழ்ந்திருக்கிறார். கவிதைகளோடு வாழ்ந்திருக்கிறார். மொத்தத்தில் இவை வாழ்வுணர்த்தும் கவிதைகள் என்பதில் மாற்றமில்லை. வாழ்த்துக்கள் தோழர் கவிஜி.

No comments:
Post a Comment