Friday, 20 February 2026

மூன்னா வான்னா சொன்ன இழவு வீட்டுக் கதைகள் #தோழர் புலியூர்


 மூன்னா வான்னா சாமி சொன்ன

இழவு வீட்டுக் கதைகள்

#சிறுகதைகள்


தோழர் புலியூர் முருசேசன்


குறி வெளியீடு

74 பக்கங்கள்

80/- ரூபாய்


7கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு களம். சக்லனா எனும் பனி உருண்டைக் கதை பணி நிமித்தம் குழந்தையை தாத்தா பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு வேறிடத்தில் வசிக்கும் பெற்றோர், அவர்கள் வாழ்வு குறித்து, சிறுமியின் ஆசை, வயதானோர் ஒரு குழந்தையின் ஆசையை எவ்வளவு நிறைவேற்றிட இயலும் என்பதைப் பேசுகிறது. ஒரு புது வாழ்வை அறிந்து கொள்ளக் கிட்டியது இக்கதை.


செம்போத்துவின் மாணிக்கப்பரல் நவீனம் நோக்கி நகரும் வாழ்வின் அவலங்களை குறியீடுகளாகக் காட்டுகிறது.


கழற்றி வைக்கப்பட்ட மகளின் தலை கதையானது அதிகாரம், அதற்கு கீழ்ப்படியும் ஒருவன் தொழிலாளர்களை நடத்தும் விதம் குறித்து பேசுகிறது. தலையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு முண்டமாக செய்ய வேண்டிய வேலையைத் தவிர வேறெதையும் யோசிக்க விடாத கார்ப்பரேட்தனம் குறித்தும் அதற்கு கையாளாக விளங்கும் ஒருவனுக்கு பணம் ஒன்றே பிரதானம், அதற்காக என்ன மாதிரி அவன் மாறுகிறான் என்பதை அருமையாக உணர்த்துகிறது.


பூர்வீகம் பிடுங்கப்பட்ட, அடையாளம் அழிக்கப்பட்ட குடிகளின் துயர் வாழ்வை வாழ்பவர்களால் மட்டுமே உணரமுடியும். அதனை கை விலங்கிடப்பட்ட நீல நிற ஏரி கதை உணர்த்துகிறது.


தாழம்பூ டீச்சர் கதை பணத்திற்காக மனிதர்கள் எதையும் செய்வார்கள் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது. அன்பிற்காக ஏங்கும் மனிதர்களை ஏமாற்ற அதற்காக காத்திருக்கும் மனிதர்கள் வந்து சேர்கிறார்கள். அன்பை வதம் செய்கிறார்கள். காலம் சில பல இடங்களில் வாழ்வைக் கலைத்துப் போடும் வேலையை அனாயசமாகச் செய்து முடிக்கிறது. எனக்கென்ன என்று வேடிக்கை பார்த்தோம் என்றால் வாழ்வு வாழும் அதன் விருப்பத்திற்கு. நம் வாழ்வையே நாம் வேடிக்கை பார்க்கும் அவலத்திற்கு ஆளாவோம் என்பதை அருமையாக காட்சிப் படுத்தியுள்ளது. காரைக்கால் அம்மையாராக தாழம்பூ டீச்சர் நிறைவாக இருக்கிறது. தொகுப்பில் எனக்கு மிகப் பிடித்த கதை.


தொகுப்பின் தலைப்புக் கதை, தொகுப்பெங்கும் இழவு வீட்டுக் கதைகளாக இருக்குமோ என்ற எண்ணம் தந்தது. ஆனால் அப்படி இல்லை. இறந்த கிராமத்து மனிதர்களின் வீட்டில் வைக்கப்படும் ஒப்பாரியில் அவர்களின் வாழ்ந்த வாழ்வை உயர்த்திச் சொல்லும் பாங்கு, அதனை சில ஒப்பாரிப் பாடல்கள் மூலம் கடந்து கதைக்குள் பயணித்தல், கிராமத்தில் நடக்கும் இழவுக்குச் சென்று வேடிக்கை பார்ப்பது போன்ற உணர்வை உண்டுபண்ணியது.


வாழ்வுணர வாசிக்க வேண்டிய நூல்.

வாழ்த்துகள் தோழர் புலியூர் முருகேசன்.

புத்தக அச்சாக்கம் கட்டமைப்பு பிடித்திருந்தது.

வாழ்த்துகள் தோழர் குறி மணிகண்டன்.

No comments:

Post a Comment