Friday, 20 February 2026

பூனைகள் இல்லாத வீடு #சந்திரா


 பூனைகள் இல்லாத வீடு


சிறுகதைத் தொகுப்பு


#சந்திரா


உயிர்மை பதிப்பகம்

110பக்கங்கள்


11கதைகள். பால்யத்தை நினைவுபடுத்தும் காட்சியமைப்புகள். கதை சொல்லும் ஒரு இயக்குனரின் பார்வையில் தான்  கதைகள் பெரும்பாலும். எக்கதையும் இயல்பிலிருந்து அன்னியமாகப் படவில்லை என்பதை கதைகளின் ஆகச்சிறந்த சிறப்பெனக் கொள்ளலாம்.


புளியம்பூ, அடித்தட்டில் வசிக்கும் ஒருவனின் வாழ்க்கை, ஆசை, கடைசியில் அது எப்படி கடனால் மூழ்கிப் போகிறது என்பதைச் சொல்கிறது. இதே போல் ஒரு கதை படித்தது போலிருக்கிறது. ஆனால் எதுவெனக் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.


திறக்கப்படாத பள்ளிக்கூடத்தின் கதவுகள்... பள்ளிக்குப் போன நாட்களை, வகுப்பை, ஆசிரியர்களை, நண்பர்களை, தோழிகளை நினைவுபடுத்தியது. அருமை 


பூனைகள் இல்லாத வீடு, காலத்தின் முன்னால் நினைவுகள் எதுவுமற்றுப் போய்விடும் அளவிற்கு வேகமெடுக்கும் சூழலை காட்சிப்படுத்தியது.


கிழவிநாச்சி, நல்ல பேய்க் கதை. பிசாசு படம் போல. நிகிலா கதை காதலித்துத் திருமணம் செய்தவளை விட்டுப் போய் விடுகிறான் ஒருவன். அவள் படும் பாடுகள் தான் கதை. போனவன் திரும்பி வரவில்லை. அவன் காதல் செய்ததை தவறு என கதாசிரியர் சொல்கிறாரா, காதல் தவறு என்கிறாரா புரியவில்லை. காதல் தவறு என்ற எதிர்ப் போக்கை வலியுறுத்தி எழுதியது போலுள்ளது. ஏழு கன்னிமார் குழந்தைகளின் வாழ்வில் பெரியவர்கள் யார் என்பதை கோவில், சாமி கும்பிடு என்பதன் மூலமாக காட்டியுள்ளது. 


கள்வன் கதை திருடும் முத்துமாயன் கதை. திருட காரணம், பஞ்சம், பசி எனப் பல காரணங்களோடு. திருமணத்திற்கு தயாராக இருக்கும் மணப்பெண்ணின் நகைகளை கொள்ளையடித்ததால் இறக்கிறாள் அவள். அதன் காரணமாக திருடும் தொழிலை விடுத்து வாழத் தொடங்கினாலும் அந்நிகழ்வு மீண்டும் மீண்டும் முததுமாயன் மனதில் தோன்றி சித்திரவதை செய்வதாக முடித்திருக்கிறார். பாவத்திற்கு இந்த உயிர்ச் சித்திரவதை மட்டும் தான் தண்டனையா என்ற எண்ணம் ஒருபுறம் தோன்றுவதை மறுக்க முடியவில்லை.


அசிஸ்டன்ட் டைரக்டர் ஆவதை ஒரு கதையாக்கியிருக்கிறார். குடிகார புருஷனை திருத்த பாடுபடும் கிராமத்து மனுசி பற்றி ராஜா ராணி ஜோக்கர் கதை பேசுகிறது. 


தோழர்கள் கடத்தல்காரர்களான கதை இத்தொகுப்பின் மேலுள்ள இயல்பாகக் காட்சிப்படுத்தும் பார்வையை ஒட்டுமொத்தமாகக் கந்தல் கந்தலாக்கிவிடுகிறது. கம்யூனிஸ்ட் தோழர்கள் இருவர், அவர்கள் கட்சியில் சேர்ந்து படும் பாடு, அவர்கள் திருமண வாழ்வு, அவர்களின் தலைவர் குறித்தெல்லாம் எதிர்மறையான பிம்பத்தை வைக்கும் அதே சூழலில் அந்த அமைப்பு, அதன் தலைவர்கள், மக்களுக்காகப் போராடும் காம்ரேடுகள் எதுவுமில்லாமல் குறை சொல்ல மட்டுமே எழுதப்பட்டது போலிருக்கிறது. இந்தக் கட்சியில் தான் பணத்தால் வெற்றி பெறும் பலரிடையே தற்போது சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குடிசை வீட்டு மாரிமுத்து போன்ற தோழர்களும் இருக்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டியதிருக்கிறது.


எங்கள் தேனி மாவட்ட எழுத்தாளர் ஒருவரின் நூலை வாசித்துணர்ந்தது உள்ளபடியே பெரும் மகிழ்வு.


வாழ்த்துகள் தோழர்.

No comments:

Post a Comment