#தமிழ்ப்பொங்கல்
பனியில்
மழையில்
மெல்லிய சூரிய ஒளியில் தைத்திங்கள் பூக்க
தமிழ்ப் பொங்கல் பொங்கிற்று
ஆட்சியாளர்களால் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டே வந்தாலும்
நம்பிக்கையைக் கிஞ்சித்தும் கைவிடாமல்
தொடர்கிறது பொங்கல்
திசையெங்கும் பசுமை பூக்க
உழைப்பவன் வாழ்வில்
புதுவழி கிடைக்க
மறக்காமல் சொல்லி விடுகிறோம்
"தை பிறந்தால் வழி பிறக்கும்"
போர் வரட்டும் என
காத்திருப்பவன் அல்ல
உலகத்தின் உணவுக்கென
வயல் தோறும்
வாழ் நாள் தோறும்
பசுமைப் புரட்சி செய்பவன் உழவன்
உலகம் சுருங்கி விட்டது
கைக்குள் உலகம்
போன்ற சொல்லாடல்களால் சொக்கிப் போகிறோம்
விவசாயிகளின் தற்கொலையை குறுந்தகவல்களால் ஏனோ
கடந்து போகிறோம்
மீத்தேன்
ஹைட்ரோ கார்பன்
நியூட்ரினோ
எட்டுவழிச்சாலை
திட்டங்கள் எல்லாம்
வயலுக்குள் குழி தோண்டுகிறது
நவீனம்
அவசியம்
தேவை என்ற பெயரில்
உலக வாழ்வின் நலனுக்குக் கொள்ளி வைக்கிறது
உரக் கடை வைத்திருப்பவன்
ஒவ்வொரு நாளும்
உயர்கிறான்
விவசாயம் செய்பவன்
விரக்தியில் ஏதோ ஒருநாள்
பூச்சி மருந்து குடித்துச் சாகிறான்
50 நாட்களுக்கும் மேலாக
வேளாண் சட்டங்களை
பசி என்றும்
பனி என்றும் பாராமல்
எதிர்த்துக் களம் காணுகிறார்கள்
50 உயிர்களுக்கும் மேலாக
உயிர் ஈந்தும் தீரமாக நிற்கிறார்கள்
விவசாய மக்கள்
அதிகாரத்தின் அடிமையாக
இவர்களை நினைக்கிறது சர்வாதிகாரக் கூட்டம்
அதிகாரம் உழைப்பவனுக்கு
என்னும் வரை பரவட்டும்
பசுமைப் போராட்டம்...
இத்தனைக்கு மத்தியிலும் தான்
தமிழர்களுக்கான பெருவிழா
இழிவும் கேடும் இல்லாத ஒரு விழா
பிறப்பு இறப்புத் தீட்டு களால் பாதிக்கப்படாத திருவிழா
பச்சரிசியை உடலாகவும் குங்குமத்தைக் குருதியாகவும் வடித்து
தமிழ் நில மக்கள்
பொங்கல் சமைத்துப்
பண்பாட்டுக் களமாடும்
தனித்துவ விழா
தும்பைப்பூ
பூலாம்பூ
பிரண்டை
ஆவாரம் பூ
வேப்பம்பூ
மாவிலை
இணைத்துக் கட்டும்
காப்புக்கட்டில்
முகூர்த்தக்கால்
ஊன்றிக்கொள்கிறது
பொங்கல்.
சேனைக் கிழங்கு
சேப்பங்கிழங்கு
கருணைக்கிழங்கு
சிறுகிழங்கு
பனங்கிழங்கு
பார்ப்பனர்களால் விலக்கப்பட்டவை.
உழவு குடியால்
உலகம் உயர்த்தும் குடியால்
விரும்பப்பட்டவை.
பொங்கல் வழிபாட்டில் வைத்து
வணங்கப்பட்டவை.
யானை கட்டிப் போரடித்த
உழவு வாழ்வில்
நடைமுறை வாழ்வில்
இணைந்து வருவது மாடு.
மேய்ச்சல் சமூகத்தின்
உச்ச மிச்சம் மாடு.
வேளாண் சமூகத்தின்
முதன்மை மாடு.
பசுவைக் கொண்டாடுதலும்
சல்லிக்கட்டும்
ஆதி விழாவின் நீட்சி.
தமிழன் தேசிய இனத்தான் எனப்
பெருமைபடத் தக்கதான சாட்சி.
இயற்கைக்கும்
உழைப்பவர்களுக்கும்
கால்நடைகளுக்கும்
நன்றி நவிலல்
கடமையாக இல்லாமல்
களிப்பாக அமையட்டும்
வரும் பொங்கல்.
வயல் செழிப்பில்
உழவர் மிளிரட்டும்.
பசுமைத் திறப்பில்
பசி மறையட்டும்.
விவசாயம் மதிக்கும்
ஆட்சி தோன்றட்டும்.
வேளாண் குடி வாழ்வில்
வெளிச்சம் பூக்கட்டும்.
அனைவருக்கும்
தமிழ்ப் பொங்கல் வாழ்த்துக்கள்.
வாய்ப்பிற்குப் பேரன்பும் மகிழ்வும்.
மும்பை இலக்கியக் கூடம்
வ.இரா. தமிழ் நேசன்தோழர்.
நன்றியோடு யாழ் தண்விகா

No comments:
Post a Comment