சூழ்நிலை
பேரறிஞர் அண்ணா
திராவிடர் கழக வெளியீடு
நன்கொடை : 15
பக்கங்கள் : 56
9.2.52 ல் சென்னையில் பள்ளியொன்றில் நடந்த முத்தமிழ் விழாவில் அண்ணா அவர்கள் பேசிய உரை. கடந்த காலம் என்பது பழங்காலம் இல்லை. புராண காலம் தான் பழங்காலம். நவீன வாழ்க்கைக்கு ஏற்ப ஒவ்வொன்றும் மாறுகிறது. அந்த மாற்றத்துக்கு ஏற்ப தன்னையும், தான் வாழும் வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளும் நபர்கள் புராணங்கள் குறித்து மட்டும் சொன்னால் அவை தரம் மிகுந்தவை. அவற்றை மாற்றினால் தரம் கெட்டுவிடும். கேடு விளைந்துவிடும் என்று பயமுறுத்துவது குறித்து பல உதாரணங்கள் மூலம் பேசியிருக்கிறார்.
காட்டுமிராண்டித்தனமான வாழ்வை வாழ்ந்த மனிதன் பிற உயிரினங்களிடம் இல்லாத பகுத்தறிவைப் பெற்றதே வாழ்வின் வளர்ச்சிக்கு காரணம். ஆனாலும் இங்கு ஏழ்மை இன்னும் நிலைத்திருக்க என்ன காரணம்? ஏதோ நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான். நம்மால் ஆவது என்ன? எல்லாம் விதிப்படிதான் நடக்கும். கொடுத்து வைத்தவன் வாழ்கிறான், கொடுத்து வைக்காதவன் வறுமையில் புரண்டு வாடி நெளிகிறான். புண்ணியம் செய்தவனப்பா, நன்றாக வாழ்கிறான், அனுபவிக்கிறான் என்றெல்லாம் சொல்லி கடவுள் மேல் காரணத்தைச் சொல்லக் கற்றுக்கொடுத்த கூட்டத்தை அம்பலப்படுத்துகிறார்.
இயல், இசை, நாடகத்தை முக்கனிகளோடு ஒப்பிடும் லாவகம் அழகு. அறிவுக்கு அப்பாற்பட்ட இலக்கியங்கள், அப்பாலேயே நிற்கட்டும். மனிதனது அறிவுக்கு வேலை தரும் அறிவு இலக்கியங்களே தேவை என்ற நிலை நிச்சயம் வந்தே தீரும். உறுதி என்று அவர் ஆற்றிய போர்ப்பரணி சிறப்பு. "தரம்" குறைந்துவிடும். "தரம்" கெட்டுவிடும் என்று எதற்கெடுத்தாலும் பேசுவது, குறிப்பிடுவது ஏன்? எதற்காக இந்தப் பீதி, பயம் எல்லாம்? என்ற வினா சனாதனத்திற்கு ஆதரவாக கிளம்பும் படைகளுக்கும் பொருந்தும் வினாவாக இருக்கிறது. காரைக்காலம்மையார், கண்ணப்பர் இவர்களுக்கு ஒரு நீதி, சம்பந்தருக்கு ஒரு நீதி... இது தவறில்லையா என்று வினவுகிறார். திருவிளையாடற்புராண கதை ஒன்று என குலத்திற்கு ஒரு நீதி வழங்கும் புராணப் புரட்டுகளை அண்ணா அவர்கள் எடுத்துக்காட்டுகிறார். இன்றும் நாட்டைச் சூழ்ந்திருக்கும் மதம் குறித்த கட்டுகளை உடைக்க அன்றே குரலுயர்த்திய அண்ணா சனாதனத்தை ஆதரிக்கும் நபர்களுக்கு தீப்பிழம்புபோல இருப்பதற்குக் காரணம் இது போன்ற பேச்சும் நூல்களும் தான் பெரும்காரணம் எனலாம்.
அவசியம் வாசியுங்கள்.
யாழ் தண்விகா
❣️
No comments:
Post a Comment