Thursday, 19 February 2026

வெட்கச் சலனம் #அகராதி


 வெட்கச் சலனம்


கவிதைகள்


கவிஞர் அகராதி


படைப்பு குழுமம் வெளியீடு


பக்கங்கள் 96, விலை ரூ 90/=


காட்டு ராணியின் ஒற்றைக் குரல்


துளிர்க்கும் வளர்பிறை விழியாடினாலோ, வருடும் மென்காற்றில் சருகொன்று கால் விரலின் நுனி தீண்டிச் சென்றாலோ போதும், கவிதை என்பது தனக்குத் துளிர்க்க என்கிறார் கவிஞர். கவிதைகளும் அப்படித்தான்... பார்வைத் துளியில் படும் அத்தனையிலும் கவிதைக்கான பாடுபொருள் கிடைத்திருக்கிறது இவருக்கு. கவிதை பாடும் தான் யார் என்பதற்கான விளக்கத்தையும் இவரே தந்துவிடுகிறார்.

“தனிமைப் பேயும்

நினைவுச் சாத்தானும் 

கொன்று கொண்டிருக்க,

நேசமடர் கானகத்தின் 

ஒற்றைக்குரலாய் அகவும்

காட்டுராணி நான்”... 

அன்பொன்றே பிரதானமாக, பிரமாதமாக தொகுப்பெங்கும். சில கவிதைகள் அன்பிற்காக கை நீட்டுகின்றன. சில தொட்டுக் கொள்கின்றன. சில கட்டியணைக்கின்றன. சில மயக்கம் தோற்றுவிக்கின்றன. சில அதையும் தாண்டிய மாயம் செய்கின்றன. சில வலிகளைக் கொடுக்கின்றன. எப்படியோ ஏதோவொரு சலனத்தை உண்டுபண்ணிவிடுகின்றன ஒவ்வொன்றும்.


பெரும்பாலானவை சிரமத்தைக் கொடுக்காத குட்டிக் கவிதைகளே. உணர்வுகள் காதலாக மிளிர்கிறது. பிரசவிக்காதே என்னும் கவிதையில் காதல் என்ன விதமான பதட்டம் அடைகிறது...!

“எப்பொழுதென்று தெரியவில்லை

நடந்துவிட்டது.

வளர்ந்தும்விட்டது

பிரசவித்து மட்டும் விடாதே

உனக்குள் தரித்த என்னை...”. 


உணவு என்னும் தலைப்பில் சிறு வயதில் அறிவியல் பாடம் படித்திருப்போம். உணவு கெட்டுப்போதல் என்பதற்குக் காரணமாக இயல்பு நிலையில் மாற்றம் அடைதல் என்ற வார்த்தை வந்திருக்கும். காதலில் இங்கு வேறொரு நிலையை அடைந்துவிடுகிறது அதே காரணம்.

“இயல்பு கெட்டுத்

திரிந்து போகிறேன்

உன் நினைவில்...” என்கிறார் கவிஞர்.


மார்கழிக் குளிர் காலை அறிவோம். குளிர் ரசிக்க எழும் மனது பாக்கியம் பெற்றவை. இங்கு காதலன் உறங்கிக் கிடக்க காதலி அதிகாலையில் எழுந்து புத்துணர்வுடன் வேலைகளைத் தொடங்கி முடித்துவிட்டு அக்கடா என்று வந்து அமரும்போது புரண்டு படுக்கிறான் காதலன். புன்னகையை ஒளித்து முகம் மறைத்து குளிர்வது போல நடிக்கிறான் நடுங்குகிறான். பதறுகிறாள் காதலி.  நீளும் கவிதை எல்லையைத் தொடுகிறது இப்படியாக.

“உன் குளிரும்

என் பதட்டமும்

பொய் என்றே 

மார்கழி அறியும்”... கவிதை முடிந்துவிட்டது என்று கூறிவிட முடியுமா... குளிர் போக்க வெப்பம் வளர்க்க காதலுக்குக் கற்றுத்தரவா வேண்டும்... கணவன் மனைவிக்குள் தானே இப்படி நடக்கும். இதென்ன காதலன் காதலி? என்றால் கணவன் மனைவி என்போர் காதலன் காதலியாக இருப்பது தான் சரி என்று சொல்லாமல் சொல்லுகிறது கவிதை.


“நீயாகிப் போன தினசரி

தினம் சரியாக

தினமும் சரி ஆக

இனியும் தவறவிடக்கூடாதென்று

குறிப்பெடுத்து வைக்கிறேன்

நாளையிலிருந்து 

உண்ணவேண்டும் குளிக்கவேண்டும்

இரவுகளில் உறங்கவேண்டும் என...” 

காதல் என்பது வந்துவிட்டால் எதுவும் புரியாது. எந்த வேலையும் நடக்காது என்பதும் பொது நியதி தான் போல. தினமும் சரி ஆக இனியாவது சரியாக இருக்கவேண்டும் என்று மனம் எத்தனிக்கும். ஆனால் என்ன செய்வது எத்தனை பேருக்கு காதலை ஒதுக்கி வைக்கச் சாத்தியம் கிடைத்துவிடுகிறது...


காமம் இல்லாத காதல் காதலே இல்லை. இங்கு காமம் இருக்கிறது. காமமும் பூடகமாக இல்லாமல் நேரடியாக காதல் பூசிய கவித்துவத்துடன். 

“பத்து விரல்களைப் பாந்தமாய்ப்

பின் கழுத்துச் செலுத்தி 

கோல மயிர்க்கோதி

புள்ளிகளற்ற பூக்கோலமிடு

உன் இதழ் வரிகளில்

உன்னிதழ் விரிகையில்

தாமதியாது பதியனிட்டு 

ஏன் தோளில் முயங்கு


வரிகள் 

கவனிக்கப்படவேண்டியவை

காதலானாலும்

கவர்ன்மென்ட்டானாலும்...

இடை கோர்த்து இடைவெளியறு...”


“தீர விழுங்கப் போகிறதா

அந்தக் கண்கள்!

சுவாசம் மாற்றப் போகிறதா

அந்த நாசி!

பூக்களைச் செய்யப் போகிறதா

அந்தக் கன்னம்!

உயிர்க்கூடை மாற்றப் போகிறதா 

அந்த இதழ்கள்!

தடமாக்கித் தொடரப் போகிறதா

அந்தப் பற்கள்!

தடையில்லாச் சான்று பெற்று வரப் போகிறதா 

அவ்விரல்கள்!

சயனம் கொள்ளுமிடமெனவே

சட்டமியற்றுமா அந் நெஞ்சம்!”

காதலையும் காமத்தையும் கொண்டாட்டக் களமாக்கிய கவிதை வரிகள் தொகுப்பெங்கும். கொஞ்சமாக சோகம் இருக்கிறது. தாய் மகன் அன்பு பூக்கும் கவிதை, காலக் கவிதை இருக்கிறது. வேட்டுவ எண்ணங்கள், நீ வராது போன நேரம், தடாகம் தடதடத்தது, பெருவெளி, சிறு வாழ்வு, அரனே, ஏன்எனக்கு உன்னைப் பிடிக்கும் போன்ற கவிதைகள் நவீனத்தின் முகத்தைக் கொண்டுள்ளன. நிறப்பிரிகை என்ற தலைப்பிலான கவிதை...

“குரல்களின் வண்ணங்களை

வாரி இறைத்தபடிச்

செல்கிறது

பள்ளி வாகனமொன்று.

வீதியெங்கும் நிறப்பிரிகை!


கவிதைகளின் வண்ணங்கள் மனதில் உண்டாக்கும் நிறப்பிரிகையும் வெட்கச் சலனத்தின் மீது தனி ஈர்ப்பை உண்டுபண்ணுகிறது.


வாழ்த்துகள் தோழர்.


No comments:

Post a Comment