Thursday, 29 January 2026

மதிக்குட்டி #வேல்முருகன்

 


மதிக்குட்டி 

வேல் முருகன் 

பக்கங்கள் 130

விலை 150

Vetrimozhi Veliyeetagam 


கவிஞருக்கு இது நான்காவது தொகுப்பு. பேரன்பின் நன்றிகள் & என்னுரை என இரண்டு இடங்களில் என்னுடைய பெயர் நன்றி கவிஞரே.


தொட்டிலில் தூங்கும் குழந்தையை பார்த்து எவ்வளவு சேட்டை செய்கிறாள் என்று நினைப்பதுண்டு. நல்ல அறிவான குழந்தையாக வருவாள் என்று எண்ணுவதுண்டு. ரொம்ப வினையம் புடிச்ச குழந்தையாக இருக்கிறாளே என்று வேதனைப்படுவதுண்டு. இந்த குழந்தைக்காக நாம் வாழ வேண்டும், இந்த குழந்தையின் ஆசையினை நாம் நிறைவேற்றித் தரும் அளவு வளர வேண்டும், இந்த குழந்தையின் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்று தொலைநோக்குப் பார்வையில் சிந்திப்பதுண்டு. இதுபோல் குழந்தைகளை மட்டும் தான் உறங்கும் பொழுது பார்த்து, எல்லை கடந்து ஆச்சரியப்படுதல், வேதனைப்படுவது உண்டு. 


மதிக்குட்டி கவிதைத் தொகுப்பில் குழந்தையின் உலகம் பற்றி அழகாக கூறுகிறார் கவிஞர் வேல்முருகன். குழந்தையின் மேலான அன்பைப் பற்றி கூறும் பொழுது அதைப்போல / அதைவிட மேலாக நம்முடைய குழந்தைகளையும் நாம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வளரும். நாம் பார்த்த பார்வை வேறு. வேல்முருகன் அவர்கள் பார்த்த பார்வை வேறு என்று கூறும் அளவிற்கு எண்ணற்ற கோணங்களில் குழந்தையை பார்த்திருக்கிறார், ரசித்திருக்கிறார், அதை கவிதைகளில் கொண்டு வந்திருக்கிறார். 


"தொட்டிலில் 

இருபுறமும் 

கால்களை தொங்கப் போட்டு

அமர்ந்து 

விழுந்து விடக்கூடாது என்று

இடுப்புடன் சேர்த்து 

கட்டப்பட்ட துண்டின் துணையோடு

தலையை 

ஒரு புறம் நீட்டி 

கால்களின் உந்துதலால் புன்னகையோடு ஆடுகிறாள். 

நம்பி ஆடலாம் மகளே 

அது அம்மாவின் சேலை 

அது அப்பாவின் துண்டு"

முதல் கவிதை இது. நம்பி ஆடலாம் மகளே / அது அம்மாவின் சேலை / அது அப்பாவின் துண்டு - என்ற வரியில் சேலையும் துண்டும் உனக்குத் தரும் பூரண பாதுகாப்பு என்று கூறுகிறார் கவிஞர். உடலுக்குள் உணர்வுக்குள் சில்லிப்பு தட்டும் வரி அது.


குழந்தையிடம் இன்று நாளை நேற்று என்பதற்கு மூன்று காலங்களையும் ஒன்றாக மாற்றி கூறும் லாவகம் இருக்கிறது. அது எதுவும் புரியாத லாவகம். அந்த ஒரு லாவகத்திற்குள் நாமும் மாட்டிக்கொள்ள ஏங்குவோம். மனிதர்களாக உருமாறத் தொடங்கிய பொழுது அனுபவிக்கும் துன்பங்களுக்குள், மீளப் பெறத் துடிக்கும் இன்பங்களுக்குள் இந்த இன்று நேற்று நாளை என்னும் லாவகம் கைக்கு எட்டாமல் போகும். அந்தப் பிரச்சனை குழந்தைகளுக்கு இல்லை.

"மதிக்குட்டி 

எப்போ வந்தீங்க 

என்ற கேள்விக்கு 

நாளைக்குத்தான் வந்தேன் என்ற

உன் பதிலில் 

எதிர்காலம் திகைத்து 

இறந்த காலம் அதிர்ந்து 

நிகழ்காலம் ஸ்தம்பித்தது. 

ஒரு வாக்கியத்தில் 

காலத்தை மாற்றி வைக்கும் சக்தி உன்னிடம் தான் இருந்தது மகளே"

என்ற கவிதையில் காலத்தை ஸ்தம்பிக்க வைக்கக்கூடிய வல்லமை வாய்ந்தவளாக குழந்தைதான் இருக்கிறாள் என்பது புலனாகிறது. 


பல நேரங்களில் குழந்தை தான் நம்மை பாதுகாப்பாக வைத்திருப்பதாக எண்ணுவோம். அதற்கு நாம் ராசி என்ற பெயர் சூட்டிக் கொள்வோம். குழந்தையின் அன்பிற்குள் நாம் வாழ்வதன் பொருள் அதுவாகத்தான் இருக்கும். அதை 

"பாதுகாப்பாய் 

வைத்துக் கொள் 

என்னை. 

சுட்டு விரலை 

இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் 

உன் பிஞ்சு விரல்களுக்குள்"

என்ற வரிகளில் நுட்பமாய் சொல்லிச் விடுகிறார் கவிஞர். 

யார் சுட்டுவிரலை யார் பற்றி இருப்பது என்பதை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்க்கும் பொழுது அன்பின் நிமித்தமாய் குழந்தையின் இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் பிஞ்சு விரல்களால் பாதுகாப்பாக என்னை வைத்துக் கொள் என்பதாக இருக்கிறது. வித்தியாசமான கோணம்.


கவிஞரின் நாத்திகப் பார்வை குழந்தைக் கவிதையையும் விட்டு வைக்கவில்லை. அது இன்னும் குழந்தைக்குள் சென்று சேரவில்லை என்பது மகிழ்வா துயரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

"ஏதும் அறியாத குழந்தை 

தூக்கத்தில் சிரிக்கையில் 

கடவுள் கிச்சுகிச்சு மூட்டுகிறார்

என்கிறார்கள்.

அழுகையில் 

கிள்ளி வைக்கிறார் 

என்கிறார்கள். 

அவன் 

ஒரு விளையாட்டுக்காரப்பயல்.

தூங்குகையில் மட்டும் வந்து

போய்விடுகிறான். 

விழித்த பின்னும் சரி 

வளர்ந்த பின்னும் சரி

எங்கே தொலைந்து போகிறான்"

இந்த கவிதையைப் படிக்கும் பொழுது, குழந்தை முழித்திருக்கும் பொழுது கடவுள் எங்கே செல்கிறான்? என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வந்து போகும். கிச்சுகிச்சு மூட்டுவதும் கிள்ளி வைப்பதும் கடவுள் செயல் அல்ல. அது ஒரு இயல்பான செயல். குழந்தை காணும் கனவு என்று புரிந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார் கவிஞர்.


என்னுரையில் உள்ள கவிஞரின் ஏக்கத்தைத் தணிக்க ஒரு கவிதை...

தொகுப்பில் உள்ள கவிஞரின் கவிதைதான்.

"உன் அண்ணன் தான் 

நான் பெத்த புள்ள 

நீயி என் புள்ள இல்ல 

போ.


போம்மா 

நானு அப்பா புள்ள

ஏம்ப்பா நீதானப்பா என்ன பெத்த"


கவிதைத் தொகுப்பெங்கும் மதிக்குட்டியின் தொகுப்பாக இருக்கிறது. ஆங்காங்கே உள்ள Poondi Jeyaraj திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் தோழரின் ஓவியம் மதிக்குட்டியைக் காணும் அழகு. வெற்றிமொழி வெளியீட்டகம் சார்பில் நல்ல கட்டமைப்பு.


பயணம் தொடர்க. வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


💝

Friday, 23 January 2026

சபலப் பயணி


ஆண்டிபட்டியில் ஒரு மணி நேரமாக காத்துக் கொண்டிருந்தாள் ராணி. திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள சென்று திரும்பி இருந்தாள். இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்தவள் என்று அவளை கூறவே முடியாது. கூடவே மணப்பெண் தோழி என்று கூறுவதை விட மணப்பெண் போலவே காட்சியளித்தாள் அவள். பேருந்து நிலையத்தில் பல கண்கள் அவளையே நோட்டமிட்டுக் கொண்டு இருந்தன. ஆனாலும் பேருந்துதான் வந்தபாட்டைக் காணோம். ஏதாவது பக்கத்து ஊரில் திருவிழா என்றால் பேருந்து விடமாட்டார்கள். ஏதாவது பஸ்ல ரிப்பேர் என்றால் பேருந்து விடமாட்டார்கள். ஏதாவது கட்சி மாநாடு என்றால் பேருந்து விடமாட்டார்கள். ராணி பொறுமையை இழந்து விட்டாள். அதன்பின் சும்மா இருக்கவேமாட்டாள். வாயில் வந்ததெல்லாம் சொல்லித் திட்டுவாள். 

"சனியன் புடிச்சவய்ங்க பஸ் நேரத்துக்கு வந்தே தொலையாது" 

"வெளங்காம போறவய்ங்க" 

"நாசமா போறவய்ங்க"

"எங்க போய் தொலைஞ்சாய்ங்களோ"

என்று கங்கு கணக்கில்லாமல் வார்த்தைகள் வந்து விழுந்து கொண்டிருந்தன. அந்த நேரம் பேருந்து நிறுத்தத்தில் "என்ன மதினி போகலாமா?" என்று குரல் கேட்க, குரல் வந்த திசையில் திரும்பினால்

"என்ன பூமி, என்ன இந்த பக்கம்? வரவா நான்?" என்று கேட்டுக்கொண்டே பைக்கில் ஏறி உட்கார்ந்தாள் ராணி.

"அணைக்கரப்பட்டிக்கு ஒரு விசேஷத்துக்கு வந்தேன். இந்த பக்கம் வந்தோம்னா ஒரு பஸ் கூட கிடைக்க மாட்டேங்குது. நீ என்னா இந்த பக்கம்?" என்று அவள் கேட்க,


"டாஸ்மாக் கடையில் இன்னைக்கு நான் லீவு போட்டு பிள்ளையார் சத்திரம் போயிட்டு திரும்புகிறேன்" என்று அவன் கூறினான்


பைக் போய்க்கொண்டு இருந்தது. அவளுக்கு தன்னுடைய கணவனின் ஞாபகம் வந்தது. ஒழுங்கா அடங்கி ஒடுங்கி வேலை வெட்டிக்குப் போயிட்டு வீட்டுல இருந்தா இன்னைக்கு நான் இரண்டு பிள்ளைகளோட நல்லா இருந்திருப்பேன். வீட்டில் பொண்டாட்டி குத்துக்கல் கணக்கா இருக்கிறா, இந்த லட்சணத்தில் இன்னொருத்திய பாத்துகிட்டு திரிஞ்சா எப்படி இருக்கும்? 


மனசு கேட்காம, "நீ போ சாமி, போ. இந்த ஊர்ல இருக்க வேணாம். போ. நான் வந்து உன்ன பாத்துக்குறேன். அந்த ஊர்ல நீ நல்ல வேலை செஞ்சு, உன் அளவுக்கு சம்பாதிச்சு இருந்துக்க. அது கூடப் போதும்" என்று அவள் தன்னுடைய கணவனிடம் கடைசியாகச் சொன்னதை மனதில் நினைத்துக் கொண்டே வந்தாள்.


மெல்ல தலைமுடி பறக்க, காற்று மோதும் திசையில் தலையை பைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டே வந்தாள். பூமி பைக்கின் முன்புறம் பார்த்து ஓட்ட, இவளும் அவன் பின்னால் இருந்து முன் பாதையை பார்த்தபடியே பயணம் செய்தாள். ஆனால் பூமியின் பயணம் நேராக இருந்தாலும் அடிக்கடி கண்ணாடியில் ராணியை பார்ப்பதும் பார்க்காத விதமாகத் தொடர்ந்து வந்தான். இவளுக்கு "ஏன் இவன் இப்படி பார்க்கிறான்? என்ற ஒரு எண்ணம். "என்ன பூமி, என்னைக்கும் பார்க்காத உலகத்த பாக்குற. பாதையை பார்த்து ஓட்டு. கீழே விழுந்து பல்லக் காமிச்சிராத" என்று முகத்தை கடிந்து வைத்துக் கொண்டு முன்புறம் பார்த்தவள் உட்கார்ந்த திசையிலேயே பார்வையை திருப்பிக் கொண்டாள்.


மீண்டும் ஓர் எண்ணம், தன் கணவன் கூட இருந்தால் இதுயெல்லாம் நடக்குமா. கூனோ, குருடோ வீட்டுல அவன் இருந்திருந்தால் யாரு சாவுகாசமும் இல்லாமல் இருந்திருப்பேன். சொந்தக்காரனாய் இருந்தாலும் இப்படி எவனோ ஒருவனுடன் பைக்ல வரும் சூழல் வந்திருக்குமா? கண்கள் ஓரத்தில் மெல்ல ஒரு துளி கண்ணீர் வந்தது.


சற்று பைக் இடது புறமாக திரும்பி உள்ளே செல்ல தொடங்கியது. "என்ன வண்டி இந்த பக்கம் போகுது?" என்ற உடன் பூமி "ஒரு சின்ன வேலை பார்த்துட்டு போவோம்" என்றான். "என்ன சின்ன வேலை? வண்டியை வீட்டுக்கு விடு. வேலை கெடக்கு. பிள்ளைக வந்து இருக்கும்" என்றாள் ராணி. "மதினி, ரொம்ப நாள் எனக்கு ஒரு ஆசை. உன்னோட நான் வாழனும். எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. நீ சரின்னு சொன்னேன்டா பயணியர் மாளிகையில போயி தங்கிட்டு நைட்டு நம்ம வீட்டுக்கு கிளம்பிப் போய்விடலாம். ஒன்னும் பயக்க வேணாம். அங்க இருக்கவங்க எல்லாம் எனக்கு தெரிஞ்சவங்க தான். அங்க ஒரு முறை மட்டும் வா. என்ன சொல்ற? உன்னிடம் நான் கேட்கிறதை விட, நீ வருவ என்ற நம்பிக்கை இருக்கு. இப்ப நாம அங்க தான் போறோம்" என்று கூறிக் கொண்டே பைக்கை வேகமாக ஓட்டினான்.


அவள் கோபத்தின் உச்சிக்குச் சென்று, "இப்ப பைக்க நிறுத்த முடியுமா? முடியாதா?" என்றவுடன் அவன் வண்டியை நிறுத்தினான். பின்னால் திரும்பி பார்த்தான். "ப்ளீஸ், ஒரு தடவை. என்ன ராணி இப்படி பண்ற. எனக்கு உன் மேல எவ்வளவு ஆசை இருக்கு தெரியுமா? நீயும் எத்தனை காலத்துக்கு இப்படியே இருப்ப?" என்று அவன் கெஞ்சும் தொனியில் கேட்டவுடன் பைக்கில் இருந்து இறங்கினாள்.


"யாருன்னு நெனச்சு இப்படி பேசிகிட்டு இருக்க. நீ நினைக்கிற ஆள் கிடையாது. நானும் அந்த கிராமத்தில் தான் இருக்கிறேன். இதை நான் வெளியில் சொன்னாலும் என்னதான் கேவலமா நினைப்பாங்க. உன்னை மாதிரி பலர நான் கடந்து வந்துட்டேன். தங்கம் மாதிரி ரெண்டு புள்ளைங்க இருக்குடா எனக்கு. இப்படியே நீ போயிரு. நான் ஒரு ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு போயிடுவேன்" என்று பின்னால் திரும்பாமல் வேகம் வேகமாக நடந்து செல்ல தொடங்கினாள் ராணி.

Sunday, 18 January 2026

மனசைக் கீறி முளைத்தாய் #மு.முருகேஷ்


மனசைக் கீறி முளைத்தாய்...

கவிஞர் முருகேஷ் மு


வெளிச்சம் வெளியீடு


ஒரு காதல் கதையும்

பல காதல் கவிதைகளும்...


காதலைச் சொல்ல ஓர் ஆகச் சிறந்த வழி கவிதை. காதல் கதை சொல்லவும் அவ்வழியே பொருத்தம் என நினைத்து நீள் கவிதை வாயிலாக நண்பரின் காதலை கூறியிருக்கிறார் கவிஞர். பார்க்காமல் உயிரெங்கும் பரவிய காதல், சொல்லாமல் கொள்ளாமல் பிரிந்து சென்றால் அதன் வலி எப்படியிருக்கும் என்பதை வலிச் சொற்களால் பதிவு செய்திருக்கிறார். தவறும் சந்திப்புகள், குறும்புகள், கனவுகள் என நடைபோடுகிறது காதல். இடையிடையே கவிதைகளும்.


மெதுவாக நட

உன் பாதங்களுக்குக் கீழ்

என் இதயம் - எனும்போது

தானாகவே நம் கண்களும் 

பூமி பார்த்துச் செல்கிறது.


வேதத்தை காதலாக்கியிருக்கிறார் கவிஞர். வேதம் என்பதும் அன்பைப் போதிப்பது தானே.


காதலைச் செய்

பலனை எதிர்பாராதே.


ஒரு கன்னத்தில்

முத்தமிட்டால்

மறு கன்னத்தையும் காட்டு


உனக்கு முன்னால்

என் காதல் செல்லும்


எம்மதமும்

சம்மதம் தான்

காதலுக்கு...

என காதலைப் பொதுமைப்படுத்தியிருக்கிறார் கவிஞர்.


அரசுப் பேருந்து, தனியார்ப் பேருந்தும் கவிதைத் தேராகிவிடுகிறது காதலில்.

அரசுப் பேருந்தைப் போல்

காலியாக இருந்த

என் மனசை

ஒரு நொடிக்குள்

தனியார்ப் பேருந்தைப் போல்

நிறைத்துக்கொண்டு

சென்றவள் நீ

என்கிறார்.


காதல் ஆத்திச் சூடி

அருமையான வார்ப்பு.


அன்பே உயிர்

ஆசை விதையிடு

இதயம் கண்டுணர்

ஈரம் கசி

உள்ளம் உணர்

ஊசி நூலாகுக

எண்ணுக புதுமை

ஏறெடுத்து முகம் காண்

ஐயம் விலக்கு

ஒழிக சாதி

ஓருயிராகுக

ஒளவியம் களை.


ஒழிக சாதி என்பதில் முற்போக்கும் காதலுக்கான தடை சாதி... அது ஒழியவேண்டும் என்பதும் வெளிப்படை. நீளும் ஆத்திச் சூடி இன்னும் சிறப்பு.


வாழ்த்துகள் தோழர்.