ஆண்டிபட்டியில் ஒரு மணி நேரமாக காத்துக் கொண்டிருந்தாள் ராணி. திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள சென்று திரும்பி இருந்தாள். இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்தவள் என்று அவளை கூறவே முடியாது. கூடவே மணப்பெண் தோழி என்று கூறுவதை விட மணப்பெண் போலவே காட்சியளித்தாள் அவள். பேருந்து நிலையத்தில் பல கண்கள் அவளையே நோட்டமிட்டுக் கொண்டு இருந்தன. ஆனாலும் பேருந்துதான் வந்தபாட்டைக் காணோம். ஏதாவது பக்கத்து ஊரில் திருவிழா என்றால் பேருந்து விடமாட்டார்கள். ஏதாவது பஸ்ல ரிப்பேர் என்றால் பேருந்து விடமாட்டார்கள். ஏதாவது கட்சி மாநாடு என்றால் பேருந்து விடமாட்டார்கள். ராணி பொறுமையை இழந்து விட்டாள். அதன்பின் சும்மா இருக்கவேமாட்டாள். வாயில் வந்ததெல்லாம் சொல்லித் திட்டுவாள்.
"சனியன் புடிச்சவய்ங்க பஸ் நேரத்துக்கு வந்தே தொலையாது"
"வெளங்காம போறவய்ங்க"
"நாசமா போறவய்ங்க"
"எங்க போய் தொலைஞ்சாய்ங்களோ"
என்று கங்கு கணக்கில்லாமல் வார்த்தைகள் வந்து விழுந்து கொண்டிருந்தன. அந்த நேரம் பேருந்து நிறுத்தத்தில் "என்ன மதினி போகலாமா?" என்று குரல் கேட்க, குரல் வந்த திசையில் திரும்பினால்
"என்ன பூமி, என்ன இந்த பக்கம்? வரவா நான்?" என்று கேட்டுக்கொண்டே பைக்கில் ஏறி உட்கார்ந்தாள் ராணி.
"அணைக்கரப்பட்டிக்கு ஒரு விசேஷத்துக்கு வந்தேன். இந்த பக்கம் வந்தோம்னா ஒரு பஸ் கூட கிடைக்க மாட்டேங்குது. நீ என்னா இந்த பக்கம்?" என்று அவள் கேட்க,
"டாஸ்மாக் கடையில் இன்னைக்கு நான் லீவு போட்டு பிள்ளையார் சத்திரம் போயிட்டு திரும்புகிறேன்" என்று அவன் கூறினான்
பைக் போய்க்கொண்டு இருந்தது. அவளுக்கு தன்னுடைய கணவனின் ஞாபகம் வந்தது. ஒழுங்கா அடங்கி ஒடுங்கி வேலை வெட்டிக்குப் போயிட்டு வீட்டுல இருந்தா இன்னைக்கு நான் இரண்டு பிள்ளைகளோட நல்லா இருந்திருப்பேன். வீட்டில் பொண்டாட்டி குத்துக்கல் கணக்கா இருக்கிறா, இந்த லட்சணத்தில் இன்னொருத்திய பாத்துகிட்டு திரிஞ்சா எப்படி இருக்கும்?
மனசு கேட்காம, "நீ போ சாமி, போ. இந்த ஊர்ல இருக்க வேணாம். போ. நான் வந்து உன்ன பாத்துக்குறேன். அந்த ஊர்ல நீ நல்ல வேலை செஞ்சு, உன் அளவுக்கு சம்பாதிச்சு இருந்துக்க. அது கூடப் போதும்" என்று அவள் தன்னுடைய கணவனிடம் கடைசியாகச் சொன்னதை மனதில் நினைத்துக் கொண்டே வந்தாள்.
மெல்ல தலைமுடி பறக்க, காற்று மோதும் திசையில் தலையை பைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டே வந்தாள். பூமி பைக்கின் முன்புறம் பார்த்து ஓட்ட, இவளும் அவன் பின்னால் இருந்து முன் பாதையை பார்த்தபடியே பயணம் செய்தாள். ஆனால் பூமியின் பயணம் நேராக இருந்தாலும் அடிக்கடி கண்ணாடியில் ராணியை பார்ப்பதும் பார்க்காத விதமாகத் தொடர்ந்து வந்தான். இவளுக்கு "ஏன் இவன் இப்படி பார்க்கிறான்? என்ற ஒரு எண்ணம். "என்ன பூமி, என்னைக்கும் பார்க்காத உலகத்த பாக்குற. பாதையை பார்த்து ஓட்டு. கீழே விழுந்து பல்லக் காமிச்சிராத" என்று முகத்தை கடிந்து வைத்துக் கொண்டு முன்புறம் பார்த்தவள் உட்கார்ந்த திசையிலேயே பார்வையை திருப்பிக் கொண்டாள்.
மீண்டும் ஓர் எண்ணம், தன் கணவன் கூட இருந்தால் இதுயெல்லாம் நடக்குமா. கூனோ, குருடோ வீட்டுல அவன் இருந்திருந்தால் யாரு சாவுகாசமும் இல்லாமல் இருந்திருப்பேன். சொந்தக்காரனாய் இருந்தாலும் இப்படி எவனோ ஒருவனுடன் பைக்ல வரும் சூழல் வந்திருக்குமா? கண்கள் ஓரத்தில் மெல்ல ஒரு துளி கண்ணீர் வந்தது.
சற்று பைக் இடது புறமாக திரும்பி உள்ளே செல்ல தொடங்கியது. "என்ன வண்டி இந்த பக்கம் போகுது?" என்ற உடன் பூமி "ஒரு சின்ன வேலை பார்த்துட்டு போவோம்" என்றான். "என்ன சின்ன வேலை? வண்டியை வீட்டுக்கு விடு. வேலை கெடக்கு. பிள்ளைக வந்து இருக்கும்" என்றாள் ராணி. "மதினி, ரொம்ப நாள் எனக்கு ஒரு ஆசை. உன்னோட நான் வாழனும். எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. நீ சரின்னு சொன்னேன்டா பயணியர் மாளிகையில போயி தங்கிட்டு நைட்டு நம்ம வீட்டுக்கு கிளம்பிப் போய்விடலாம். ஒன்னும் பயக்க வேணாம். அங்க இருக்கவங்க எல்லாம் எனக்கு தெரிஞ்சவங்க தான். அங்க ஒரு முறை மட்டும் வா. என்ன சொல்ற? உன்னிடம் நான் கேட்கிறதை விட, நீ வருவ என்ற நம்பிக்கை இருக்கு. இப்ப நாம அங்க தான் போறோம்" என்று கூறிக் கொண்டே பைக்கை வேகமாக ஓட்டினான்.
அவள் கோபத்தின் உச்சிக்குச் சென்று, "இப்ப பைக்க நிறுத்த முடியுமா? முடியாதா?" என்றவுடன் அவன் வண்டியை நிறுத்தினான். பின்னால் திரும்பி பார்த்தான். "ப்ளீஸ், ஒரு தடவை. என்ன ராணி இப்படி பண்ற. எனக்கு உன் மேல எவ்வளவு ஆசை இருக்கு தெரியுமா? நீயும் எத்தனை காலத்துக்கு இப்படியே இருப்ப?" என்று அவன் கெஞ்சும் தொனியில் கேட்டவுடன் பைக்கில் இருந்து இறங்கினாள்.
"யாருன்னு நெனச்சு இப்படி பேசிகிட்டு இருக்க. நீ நினைக்கிற ஆள் கிடையாது. நானும் அந்த கிராமத்தில் தான் இருக்கிறேன். இதை நான் வெளியில் சொன்னாலும் என்னதான் கேவலமா நினைப்பாங்க. உன்னை மாதிரி பலர நான் கடந்து வந்துட்டேன். தங்கம் மாதிரி ரெண்டு புள்ளைங்க இருக்குடா எனக்கு. இப்படியே நீ போயிரு. நான் ஒரு ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு போயிடுவேன்" என்று பின்னால் திரும்பாமல் வேகம் வேகமாக நடந்து செல்ல தொடங்கினாள் ராணி.

No comments:
Post a Comment