Sunday, 14 December 2025

இது என்ன மாயம்... இரவாக நீ... நிலவாக நான்...


 #இது_என்ன_மாயம் #திரைப்படம்


#இரவாக_நீ 

#நிலவாக_நான்...என்ற பாடல்


மழை மனதிற்குள் மெல்ல மெல்ல இறங்கி உயிரின் வேர்கள் பரவும் திசை அனைத்தையும் தொட்டு தொட்டு தொட்டு மெல்ல நிலமெங்கும் படர... பரவ... உயிர்ப்பிக்கிறதா அல்லது மயக்கமடையச் செய்கிறதா என எண்ணக் கூடிய அளவிற்கு ஒரு சுகந்தம் அளிப்பதுபோல்...


எப்பொழுதெல்லாம் மழையில் நனைய வேண்டுமோ அப்பொழுதெல்லாம் நான் இரவாக நீ நிலவாக நான் என்று பாடலுக்குள் குடிபுகுந்து கொள்கிறேன். வேறு மாதிரியாக கூறுவது என்றால் இப்பொழுது எல்லாம் பெரும்பாலும் இந்தப் பாடல் தரும் மழையில் நனைந்து கொண்டு தான் இருக்கிறேன் ஒரு நூறு முறைக்கு மேல் இந்தப் பாடலை கேட்டிருப்பேன்... நனைந்திருப்பேன்...


சாரலுக்கு அடுத்த நிலை. மழைக்கு முந்தைய நிலை... அப்படிப்பட்ட ஒரு பதத்தில்தான் பாடல் தொடங்குகிறது...

உள்ளிருந்து வரும் பெண் குரலில்


"இரவாக நீ 

நிலவாக நான்..."

என ஒலிக்கத் தொடங்கும் பாடல் வரிகளை அடுத்து அப்பெண் குரலை கொஞ்சமும் இம்சை செய்யாமல் ஆண்குரல் அடுத்து தொடங்குகிறது 


"தொலையும் நொடி கிடைத்தேனடி இதுதானோ காதல் அறிந்தேனடி... 

கரை நீ பெண்ணே 

உன்னைத் தீண்டும் அலையாய் நானே ஓ... நுரையாகி நெஞ்சம் துடிக்க..."

விளிம்பில் நின்று வாழ்வைப் பார்க்கும் ஒருவனுக்கு காதல் பரிசு கிடைத்தால் எப்படியிருக்கும் என்பதை பாடல் வரிகளைப் பாடி பார்த்தால் மட்டுமே உணர முடியும்...


கொஞ்சம் இசை கசிகிறது வரிகள் ஏதுமில்லாமல். மீண்டும் பல்லவி வரிகள்.

தொடரும் இசை முதல் சரணத்தின் பாடல் வரிகளைக் கொண்டு வருகிறது....


காதலன் பாடுகிறான்...

"விழி தொட்டதா 

விரல் தொட்டதா 

எனது ஆண்மை தீண்டி 

பெண்மை பூ பூத்ததா..."

ஒரு பார்வை 

பார்த்தவுடன் காதல் 

அந்த காதலைத் தாண்டி கூடல் என்பதை மிகவும் நளினமாக இந்த மூன்று வரிகளுக்குள் அடக்கி இருக்கிற வித்தையை என்னவென்று சொல்வது...

அடடா...


காதலி பாடுகிறாள்...

"அனல் சுட்டதா 

குளிர் விட்டதா 

அடடா என் நாணம் 

இன்று விடை பெற்றதா..."

இந்த மூன்று வரிகளையும் மேற்சொன்ன மூன்று வரிகளையும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வைத்துப் பார்த்தால் இன்னும் ஒரு கவித்துவத்தை உணர முடியும்.


விழி தொட்டதா அனல் சுட்டதா 

விழி தொட்டதால் அந்தப்பார்வை அனல் போல் சுட்டதா 


விரல் தொட்டதா

குளிர் விட்டதா

விரல் தொட்டதால் உடம்பில் படர்ந்திருந்த குளிர் விட்டு விட்டதா

என்று பொருள் கொள்ளலாம்..


எனது ஆண்மை தீண்டி பெண்மை பூ பூத்ததா 

அடடா என் நாணம் இன்று விடை பெற்றதா 

ஒரு பெண்மையை பெண்மை நிலையிலிருந்து வெளிக்கொணரக்கூடிய ஒரு தருணமாக ஒரு ஆகச்சிறந்த காமம் அமையும். அந்தச் சூழலை இந்த வரிகளில் பார்க்கமுடியும் எனது ஆண்மை தீண்டி பெண்மை பூ பூத்ததா என்ற அவனின் கேள்விக்கு அடடா என் நாணம் இன்று விடை பெற்றது என்று இவள் கூறுவதாக பொருத்திப் பார்க்கலாம்...


காதலன் பாடுகிறான் 

"நீ நான் மட்டும் 

வாழ்கின்ற உலகம் போதும் 

உன் தோள் சாயும் இடம் போதுமே..."

பல பாடல்களில் நாம் கேட்டிருப்போம் ஒரு தனி உலகம் அதில் நாம் மட்டும் சுதந்திரமாக காதலை வாழ்வை அனுபவிப்போம் என்று பொருள்படக்கூடிய வரிகள் இருக்கும். ஆனால் இந்த வரிகளில் காதலன் என்ன கூறுகிறான் என்று உற்று நோக்கினால் உனக்கும் எனக்குமான ஒரு தனி உலகம் என்பது முதல்வரி 

ஆனால் அடுத்த வரியில் உன் தோள் சாயும் இடம் போதுமே...

ஒரு உலகம் முழுவதையும் வாங்கிக் கொண்டாலும் உன் தோள் சாயும் இடம் போதுமே என்று கூறும்பொழுது அந்தத் தோள் தரக்கூடிய ஒரு சுகந்தம் வேறு எங்கும் கிடையாது. அந்த உலகத்தில் எங்கும் இல்லாத ஒரு சுகம் அவளின் தோளில் இருக்கிறது. ஆக அது காமத்திற்கு அப்பாற்பட்ட ஒரு காதல். அந்தக் காதல் மட்டுமே இந்த வரிகளை தரமுடியும்.


காதலி பாடுகிறாள் 

"உன் பேர் சொல்லி 

சிலிர்க்கின்ற இன்பம் போதும்

இறந்தாலும் மீண்டும் பிழைப்பேன்... ஒன்றோடு ஒன்றாய் கலக்க 

என்னுயிரே காதோரம் காதல் உரைக்க..."

இந்த வரிகளை ஒரு பெண் பாடுவது போல் பாடலில் வருகிறது. ஆனால் இந்த வரியைக் கேட்கும் பொழுது ஒரு ஆணாக நானும் அந்த வரிகளை உச்சரித்து பார்க்கிறேன். உன் பேர் சொல்லி சிலிர்க்கின்ற இன்பம் போதும் என்னும் பொழுது அவரவர் மனதில் நிறைந்து இருக்கக்கூடிய அந்தக் காதலியின் பெயரை உச்சரிக்கக் கூடிய ஒரு கட்டளையை இந்த வரிகள் பிறப்பிக்கிறது என்று நான் உணர்ந்தேன். நானும் அவள் பெயரை உச்சரித்து பார்த்தேன் அவ்வளவு அற்புதமாக அந்த வரிகள் இருபாலினருக்கும் பொருந்துவதாக அமைந்திருக்கிறது. 

பெயர் உச்சரிக்கும் அந்த சுகந்தம் என்பது இறந்தாலும் மீண்டும் பிழைப்பதற்கான ஒரு அசாத்தியத்தை சாத்தியப்படுத்துவதாக ஒரு மெட்டு இந்த வரிகளில் காணக்கிடைக்கும். முக்கியமாக இந்தப் பாடலில் வரக்கூடிய என்னுயிரே என்ற ஒரு  சொல் மீண்டும் மீண்டும் மீண்டும் உயிரை ஒரு பாடு படுத்தவே செய்யும். அத்தனை அற்புதமாக அத்தனை இலாவகமாக உயிரை தாலாட்டக்கூடிய ஒரு உணர்வை தரக்கூடிய சொல்லாக அது அமைந்திருக்கிறது.


சரணம் இரண்டில் அவன் பாடுகிறான் "மழை என்பதா 

வெயில் என்பதா 

பெண்ணே உன் பேரன்பை 

நான் புயல் என்பதா..."

 ஒரு பெண்ணின் காதலை எதனுடன் ஒப்பிடுவது 

அதனை கொட்டும் மழை என்று சொல்வதா 

நனைக்கும் மழை என்று சொல்வதா

நனையத் தூண்டும் மழை என்று சொல்வதா 


சுடும் வெயில் என்று சொல்வதா 

இதமாக இருக்கும்  வெயில் என்று சொல்வதா 

ஒரு பயிருக்கு தேவையான அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான வெயில் என்று சொல்வதா 


இத்தனையையும் கேட்டு விட்டு கடைசியாக மீண்டும் ஒரு கேள்வியை முன் வைக்கிறான் 

பெண்ணே உன் பேரன்பை 

நான் புயல் என்பதா 

இந்த மழைக்கும் வெயிலுக்கும் அப்பாற்பட்ட ஒரு பார்வையாக பேரன்பை புயல் என்று நான் கூறி கொள்ளட்டுமா அப்படி புயல் என்றால் அது சாத்தியப்படுமா... 

சில புயல்கள் மண்ணிற்கு மழையைத் தருவிக்கும் 

அந்த மழை மண்ணை வாழவைக்கும்

மண்ணிற்கு தேவையான ஒரு புயலாக இருக்கும் ஆதலால் அந்தப் பேரன்பை புயலோடு ஒப்பிட்டு கேட்கிறான் என்று நாம் நினைத்துக் கொள்வோம்


அடுத்து காதலி பாடுகிறாள் 

"மெய் என்பதா 

பொய் என்பதா 

மெய்யான பொய் தான் இங்கே 

மெய் ஆனதா..."

இந்தக்காதல் என்பது சாத்தியப்படும் பொழுது எல்லாம் வசந்தம் பெறும். எல்லாம் இனிதே நிறைவேறிவிட்டது என்ற எண்ணத்தில் அந்த கனவு வாழ்க்கையை வாழ தொடங்கியதால் இதனை மெய் என்று கூறுவதா 

அல்லது ஒரு கனவு கண்ட வாழ்க்கையை நனவில் அடையத் தொடங்கி விட்டால் அந்த நனவு வாழ்க்கையின் கனவு போலத் தோன்றும் என்பதால் பொய் என்பதா என்று கேள்வியை முன்வைக்கிறான் காதலன்.  இது மெய்யும் இல்லை பொய்யும் இல்லை இரண்டுக்கும் நடுவில் ஆனது என்பதை மனதில் கொண்டு இவள் மெய்யான பொய் தான் இங்கே மெய் ஆனதா என்கிறாள். நன்றாக யோசித்து பார்த்தோமென்றால் ஒரு காதலை அனுபவிக்க மட்டுமே முடியும்.  அது நினைவெனினும் வாழ்ந்து கொண்டிருக்க முடியும்.  ஆக மெய்யான பொய் ஆம் நினைவு என்பதைப்போல இந்த காதலும் மெய்யான பொய் போல நனவு போன்ற கனவு போல கனவு போன்ற நனவு போல அத்தனை அழகானது.


காதலன் பாடுகிறான் 

"அடியே பெண்ணே 

அறியாத பிள்ளை நானே 

தாய் போல் என்னை 

நீ தாங்க வா..."  என்று.

சரணம் ஒன்றில் 

நீ நான் மட்டும் 

வாழ்கின்ற உலகம் போதும் 

உன் தோள் சாயும் இடம் போதுமே

என்றவன் தான் இங்கு 

அடியே பெண்ணே 

அறியாத பிள்ளை நானே 

தாய் போல் என்னை 

நீ தாங்க வா... 

என்கிறான்.


ஒரு தாய் தன்னுடைய தோளில் தன்னுடைய இடுப்பில் தன்னுடைய மடியில் போட்டு தன் குழந்தையைத் தாங்கிக் கொள்வதைப் போல காதலன் தன்னுடைய காதலியை, தாய் போல் என்னை நீ தாங்க வா என்று அழைக்கிறான். வரிகளோடு நாம் பயணிக்க இந்த மெட்டு இன்பத்துடன் கூடிய எளிமையைக் கொண்டுள்ளது. 


காதலன் கேட்டுவிட்டால் காதலி செய்து தராமல் போய் விடுவாளா... ஆகையால் அவனுடைய ஆசையை அவளும் நிறைவேற்றுவதற்கு தயாராகிறாள்... பின்வரும் வரிகள் வாயிலாக...

"மடி மேல் அன்பே 

பொன் ஊஞ்சல் நானும் செய்தே

தாலாட்ட உன்னை அழைப்பேன்..."

இந்த வரிகள் ஒவ்வொன்றும் கற்பனைக்கு எட்டாத ஒரு உலகத்தை கண் முன்னே நிறுத்தும். கற்பனையான வரிகள். ஆனால் அந்த கற்பனையில் வாழ்ந்து பார்க்க தூண்டும் வரிகள்.


தொடர்ந்து 

"ஒன்றோடு ஒன்றாய் கலக்க 

என் உயிரே 

காதோரம் காதல் உரைக்க...

இரவாக நீ  இரவாக நீ

நிலவாக நான் நிலவாக நான்...

உறவாடும் நேரம் சுகம் தானடா..."

என பாடல் நிறைவு பெறுகிறது.


மறைந்த நா.முத்துக்குமார் பாடல் வரிகள். இசை ஜி வி பிரகாஷ் குமார்.

இறப்பிற்கு முன்னான உன்னுடைய கடைசி ஆசை என்னவென்று கேட்டு நிறைவேற்றக்கூடிய சந்தர்ப்பம் ஒன்று அமைந்தால் 

என் முதல் ஆசையாக என்னுடைய காதலியின் மடியில் அவளைப் பார்த்துக் கொண்டே என் உயிர் பிரிய வேண்டும். அல்லது இப்படி பாடலொன்றில் அவளோடு வாழ்ந்து கொண்டு இந்த உயிர் மறைய வேண்டும் என்றுதான் வேண்டுவேன். 


நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு பாடலை நூறு முறை அளவிற்கு கேட்டு இருக்கிறேன் என்றால் அது இந்தப்பாடல் தான். வாய்ப்பு இருந்தால் கண்களை மூடிக்கொண்டு இந்தப் பாடலை ஒலிக்கவிட்டு நீங்களும் கேளுங்கள். மன்னிக்க நீங்களும் வாழுங்கள் உங்களுக்கு பிடித்தமான காதலியோடு அந்த கற்பனை உலகத்தில் நீங்கள் வாழலாம். அதி அற்புதம் காணலாம்.


யாழ் தண்விகா

Monday, 1 December 2025

காதலின் பின் கதவு - பழநி பாரதி

 


காதலின் பின் கதவு

Palani Bharathi

கவிதைத் தொகுப்பு...


 நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு கவிதைத் தொகுப்பை வாசித்தேன். தலைப்பே ஒரு வசீகரத்திற்குள் அழைத்துச் சென்றது முதல் காரணம். கவிக்கோ அப்துல் ரகுமான் முன் கதவு வழியாக அணிந்துரை அளித்திருக்கிறார். 


காதல் கவிதைகள் தொகுப்பு என்றெண்ணி ஆர்வம் மேலிடப்புகுந்தேன் தொகுப்பிற்குள். அதற்கேற்ப உற்சாகம் தூண்ட முதல் கவிதையும்...

"தண்டவாளத்தில்

தலை சாய்த்துப் பூத்திருக்கும்

ஒற்றைப்பூ

என் காதல்


நீ நடந்து வருகிறாயா

ரயிலில் வருகிறாயா?"

எப்போதோ காதல் படிக்கட்டுகள் என்ற நூலில் படித்த கவிதை. இதயத்தை விட்டு இன்றளவும் மறையாதிருந்த கவிதை . ஒரு மனிதனின் காதல் ஏற்கப்படுமா ஏற்கப்படாதா என்பதை உணர்தல் நிமித்தமாக எழுதப்பட்ட கவிதை. சிறப்பு. தொகுப்பின் உள் செல்கிறேன். 


ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு பரிமாணத்தில் மிளிர்கிறது . மலையேற்றம் கவிதை வர்ணனை அழகு.


"உடைந்த 

வளையல் துண்டுகளையாவது 

கொடுத்துவிட்டுப் 

போ


கலைடாஸ்கோப்பில்

உன்னைப்

பார்த்துக்கொண்டிருப்பேன்"


முதல் கவிதை போலவே இதுவும் காதலில் மூழ்கிக் கிடக்கும் மனதின் கவிதை...


மழைக் குரல் கவிதையில் காதல் மழை.  அவள் இல்லாத நேரத்தில் பொழியும் மழை. அது உண்டுபண்ணும் வலியை ஒப்பிட்ட விதம் அத்தனை அழகு அதே நேரத்தில் வலியும் ...


இன்று

நீ இல்லாமல்

விட்டு விட்டு

விடாமல் பொழியும்

இந்த மழையில்

ஒரு மண் குடிசைவாசியாக

மறுகிக் கொண்டிருக்கிறது

காதல்


அதைக் கடக்கும் அடுத்த பத்தியில்

அரசியல் நுழைக்கிறார் கவிஞர் ... ஆனால் அந்த ரசனை வேறொரு உச்சத்தில் .. 

"வெள்ளப் பிரதேசத்தை

ஹெலிகாப்டரில் பார்வையிடும்

பிரதமர் மாதிரி

கண்ணாடி ஜன்னலுக்குப்

பின்னாலிருந்தாவது

கை நீட்டித் தொடு

இந்த மழையை"

என்கிறார் கவிஞர். ஒரு காட்சியை கண்முன் வர வைத்து ஏங்குதலை நிகழ்த்தும் அற்புதம் இது. 

 


உறைந்த நதி என்னும் கவிதையில்

"எந்த நிழலிலும் 

உன் ஆறுதல் இல்லை

எந்த வாழ்த்திலும்

உன் குரல் இல்லை" என்ற வரிகள் உரைக்கும் தலைப்பிற்கான நியாயத்தை .


நீ இல்லாத போது தலைப்பில் 3 கவிதைகள். 

ஒவ்வொன்றிலும்

ஒவ்வொரு ரசனைக்கான கூறுகள்...

"நீ வராத வெறுமையில்

பூங்காவின் காவலாளிக்கு

ஒரு புன்னகையைக் கூட

திருப்பித் தராமல் 

இன்று நான் வெளியேறியது

எத்தனை உறுத்தலானது"

ஒருமுறை காதலிக்காக பூ வாங்கிச் செல்கிறேன். அவள் வரவியலா சூழல் திடீரென. சந்திக்கும் நட்பு அத்தனையிடமும் மெளனம் மட்டுமே பேச்சாக எனக்கு. கவிதையில் உள்ளது போலென்றால் காவலர் போல் எத்தனை மனங்களுக்கு நான் அந்நியமாக இருந்திருப்பேன் என்ற உறுத்தல் தோன்றுகிறது இப்போது...


இப்படிக் கடக்கும் காதல் கவிதைகள் சட்டென வேறு பாதையில் பயணிக்கத் தொடங்குகிறது.


உலகம் பயணிக்கும் பாதை, பெண் குறித்த கவிதைகள், நடிகைக்கு, நகைக்கு, தாத்தாவுக்கு ஒரு கவிதை என நீள்கிறது.


செடி மகள் என்ற கவிதையில்

"செடியை வளர்ப்பது 

சுலபமாக இருக்கிறது

பூக்களைப்

பத்திரப்படுத்துவதுதான்

எப்படியென்று தெரியவில்லை" ...

வன்புணர்வு குறித்த வலி உயிரெங்கும் பரவுகிறது வரிகள் வாயிலாக ...


இரத்தத்தின் நிறம் பச்சை என்ற கவிதையில்

தாயாக, மனைவியாக, குழந்தையாக என உயிர் உறவுகளை ஒப்பிட்டு மரத்தின் உச்ச குணத்தினை அழகுறக் கூறியுள்ளார். 


ரயிலில் வந்த 3 வது கவிதை.

"எங்கு இறங்குவாள் 

என்று தெரியாது

எதிரில் உட்கார்ந்திருந்தாள்


அவளிடம் கொஞ்சம்

தண்ணீர் கேட்க நினைத்து

கேட்காமலேயே

கண்ணயர்ந்துவிட்டேன்


விழித்தபோது

அவள் இல்லை

இருந்தது

ஒரு தண்ணீர் பாட்டில்"

எத்தனை பரவசம் அளித்திருக்கும் அந்த கணம். தாகம் தோற்றுவிக்கிறது ரயிலில் கிடக்கும் அந்தத் தண்ணீர் பாட்டில் ...


"நான் யோசித்துக் கொண்டிருப்பேன்

தடயங்களற்றுப்

பறக்கும் சுகத்தை" என்கிறார் கவிஞர் ...

தொகுப்பானது உலகில் தடம் பதித்து ஏறக்குறைய 20 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனாலும் சம காலத்திற்கும் பொருந்தும் பொருண்மையால் இது கவிஞர் பழநி பாரதி அவர்களின் தடயம் என இன்னும் பறைசாற்றிக் கொண்டிருப்பதே போதும் கவிதைக்கான வெற்றியெனக் கூற...


வாழ்த்துகள் கவியே...


யாழ் தண்விகா

Saturday, 15 November 2025

நிலா காயுது - பாடல்

 


காமத்தின்போதான பாடல் எப்படி இருக்கவேண்டும் என்று இளையராஜா என்ற மகான் இசை வழியே பல படங்களில் பாடம் எடுத்துள்ளார். அதில் ஒன்றுதான் சகலகலா வல்லவன் என்ற படம். முறையே அப்பாடல்கள்

நிலாக் காயுது நேரம் நல்ல நேரம்...

நேத்து ராத்திரி எம்மா...

இதை உணர்வுப் பூர்வமாக உணர அந்தப் பாடல்களைக் கேளுங்கள். 


இரவின் கூர்மை என்பது காமத்திற்கு எப்படி உகந்ததாக இருக்கும் என்பதை இசையில் இவர்போல உணர்த்தியவர் யாருமில்லை என்றே சொல்லலாம். மலேசியா வாசதேவனின் குரல் ஜானகியின் குரலில் குழைந்து உருகியிருப்பதும் கேட்கக் கிடைத்த அபூர்வம். இன்று இது போல சூழல்கள் படங்களில் இடம்பெறவில்லை என்பது உண்மை. இருந்தாலும் ராஜாவின் காமம் சார்ந்த பாடல்கள் போல அவை இருக்காது என்பதும் உண்மை. மாசி மாசம் ஆளான பொண்ணு இசையை எடுத்தும், நிலாக்காயுது பாடலில் வருகிற இடையிசை மற்றும் குரல் ராகத்தை (தண்ணி கேட்டியே புள்ள... என்பதற்கு முன் வரும்... குரல்களும் இசையும்... முடிவில் ச்சீய்...) எடுத்தும், கட்டிப்பிடி கட்டிப் பிடிடா பாடலுக்குப் பயன்படுத்தி  குஷி படத்தில் தேனிசைத் தென்றல் தேவா வெற்றி கண்டிருப்பார். இன்றும் என்றும் நிலவைக் குறித்து பல பாடல்கள் வந்து போனாலும் இடையில்/குறுக்கே வந்து மென் புன்னகையை வன்மமாகச் சிரித்து வைத்துப் போகும் இந்தப் பாடல். ஆம் இதுவும் நிலாப் பாடல் தான். காமத் தனிமை.

https://youtu.be/sxh8JP4obiU


❣️

Sunday, 9 November 2025

சரக்கொன்றை நிழற்சாலை - ஷாஜிலா பர்வீன் யாகூப்



 சரக்கொன்றை நிழற்சாலை

ஹைக்கூ கவிதைத் தொகுப்பு


ஷாஜிலா பர்வீன் யாகூப்

Mohamad Sarjila Yakoop 


படைப்பு பதிப்பகம்


விலை ரூ: 100


பக்கங்கள் : 112


ஹைக்கூ ஒளியில் வாழ்வின் நிழல்...


மூன்று வரிகளில் எடுத்துக்கொண்ட கருவை கவிதையாக்கும் வித்தகம் ஹைக்கூ... மிஷ்கின் மொழிபெயர்த்த ஹைக்கூ ஒன்று. "நத்தை போன

பாதையில்

வெயிலடித்தது".

மிக இயல்பாக வாசித்துக் கடக்கும் ஒரு கவிதை. ஆனால் உள்ளே பொதிந்திருக்கும் வரலாற்றைத் தோண்டிப் பார்க்க மெனக்கெட வைக்கும் சூட்சுமம் கவிதையில் இருக்கிறது. அவ்வாறு வாசிக்க வைப்பதுதான் ஹைக்கூவின் சாமர்த்தியம் மற்றும் சாகசம். தோழர் ஷர்ஜிலா அவர்களின் ஹைக்கூக்கள் பல அவ்வாறான தேடலை உண்டுபண்ணும் கவிதைகள். வாசிக்க வாசிக்க இயற்கையின் உள்ளார்ந்த அதிசயங்களில் நம்மை மூழ்கடிக்கிறார் தோழர்.


இயற்கையை அழித்தல் என்பது வெறும் அழித்தல் என்பதோடு முடிந்து விடுகிறதா... அது சூழலை அழித்தல், உயிர்களை அழித்தல், உயிர்களுக்கிடையேயான சங்கிலியை உடைத்தல். அதனை மனிதனுக்குக் கடத்தும் வரிகள் இவை.

தன்கூட்டைப் பின்தொடரும் பறவை

ஜேசிபியில் செல்கிறது

வேருடன் மரம்.

ஏனோ நம் குழந்தையை யாரோ பறித்துப் போக நாம் பின்னால் ஓடுவது போலான வலி.


இயற்கைப் பேரழிவுகள் பெரும்பாலானவை மனிதன் தனக்குத்தானே உண்டாக்கிக் கொண்டவையோ என்றெண்ணும் வண்ணம் அவ்வப்போது வெள்ளம், புயல் உள்ளிட்ட பாதிப்புகளைக் காணும்போது ஏற்படும். சென்னையில் முழுதும் நிடம்பியபின் நள்ளிரவில் திறக்கப்பட்ட நீர்த்தேக்கம் உண்டாக்கிய பாதிப்புகள் சொல்லி மாளாது. அலையாத்திக்காடுகளை கடற்கரை ஓரங்களில் அமைக்காததால் ஊருக்குள் சுனாமி பாய்ந்து கொத்துக்கொத்தாக கடலுக்குள் இழுத்துச் சென்ற உயிர்கள் பல லட்சங்கள். இது போன்ற சம்பவங்கள் நடந்து முடிந்தபின் காணும் காட்சிகள் போர் முடிவுற்றபிறகு காணும் ஓலங்கள் போலவிருக்கும். அது போன்ற ஒரு காட்சி.

வெள்ளம் வடிந்த வீதி

வீட்டுக் கூரையின் மேல்

தரைதட்டி நிற்கும் படகு.


இனி எப்போது பெங்குவின்களைப் பார்த்தாலும் இக்கவிதையே கண்முன் விரியும். ஆச்சர்யப்பட வைத்த ஒப்பீடு.

கருப்பு மேலங்கி

கழட்டாத வழக்கறிஞர்களா

கடற்கரை பெங்குவின்கள்...!


பால்யங்களைக் கண்முன் நிறுத்தும் பல ஹைக்கூக்கள் தொகுப்பெங்கும். அதற்குள் நம்மைப் புகுத்தி விளையாட வைத்த ஒரு ஹைக்கூ...

மணல்வீடு கட்டும் அண்ணனுக்கு

காத்திருக்கும்

பாப்பாவின் சிரட்டைமண் இட்டிலி... 

சிறுவயது அன்பின் நேர்த்தி எவ்வளவு சுவாரஸ்யமானது... அருமை.


குழந்தைகள் பள்ளிக்குச் சென்றபின் வீடு அனுபவிக்கும் கொடுமை என்பது பேரவலம் தான். அப்படி வீடு என்ன கொடுமை அனுபவித்து விடப் போகிறது... தோழர் சொல்கிறார்.

பள்ளி சென்ற குழந்தைகள்

தனித்துக் கேட்கும்

நகரும் கடிகார முட்கள்.

வீடு யாருக்கு? கடிகார ஒலிகள் யாருக்கு? என்ற கேள்விகள் உதிக்கும் அதே நேரத்தில் பள்ளியிலிருந்து குழந்தைகள் திரும்பும் நேரத்தைக் கணக்கிட்டு காத்திருக்கிறதோ கடிகாரம் என ஆறுதல் கொள்கிறது மனம்.


நத்தையாகிறேன்

நிழலெல்லாம் பூக்களுடன்

சரக்கொன்றை நிழற்சாலை...

பூ வீதி எதுவென்றாலும் அது உண்டாக்கும் சலனம் மனித மனத்தை ஒரு பாடுபடுத்த் வேண்டும். உதிர்ந்த பூ என்று அவ்வளவு வேகமாக மிதித்து விடுகிறதா நமது காலடிகள்? அவற்றை மிதிப்பதால் என்ன பாதகம் இந்த மண்ணுக்கு நேர்ந்துவிடப் போகிறது... ஆயினும் நாம் யோசிப்பதால் தான் மனிதம் ஒவ்வொரு உயிருக்குள்ளும் தன் வேர்களை ஆழப் பாய்ச்சுகிறது. அதுவே இந்த பூமி இன்னும் வாழ காரணமாக இருக்கிறது. உதிர்ந்துகிடக்கும் சரக்கொன்றைப் பூக்கள்... கடக்க நத்தையாகும் மனிதம்... நிழலெல்லாம் பூக்கள்... நத்தை சுரக்கும் திரவம்... இதுபோன்ற காரணிகளுக்குள் ஒளிந்து கிடக்கும் ஏதோவொன்று உண்டாக்கும் கிளர்ச்சி கவிதையின் சிறப்பை மிளிரச் செய்கிறது. 


பதிப்பாளர் Mohamed Ali Jinna தோழரின் பதிப்புரை, Surulipatti Si Vaji அண்ணன் அவர்களின் அணிந்துரை, இந்து தமிழ் திசை மு.முருகேஷ் தோழரின் தொகுப்பு குறித்த  ஹைக்கூப் பார்வை ஆரணி இரா. தயாளன் தோழர் கூறும் தறி வீட்டுப் பூனைகள், ஷர்ஜிலா தோழரின் என்னுரை இவையே ஒரு ஹைக்கூ வகுப்பைப் பார்த்த பெரும் திருப்தி அளிக்கிறது.


நிறைய கவிதைகள். நிறைவான பார்வை. 


வாசிப்போம், ஹைக்கூ மிளிர.


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️

பெறுநர், தேவதை, வானவில் வீதி - 143 #துளசி வேந்தன்


பெறுநர், தேவதை, வானவில் வீதி – 143

துளசி வேந்தன் 

படைப்பு பதிப்பகம்

விலை : 100

பக்கங்கள் : 116


காதலாகிப் போன கவிஞனின் கவிதைகள்...


நாடி, நரம்பு, எலும்பு, தசை அத்தனையிலும் காதலால் ஆன மனிதரால் தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியும் என்றெண்ணும் வகைக் கவிதைகள். தபூ சங்கரை வாசிக்கும்போது உண்டான வியப்பையும் கடந்து நிற்க வைத்துவிட்டன கவிதைகள். பதிப்பாளரும் கவிஞருமான Mohamed Ali Jinna தோழர் அவர்கள் தன்னுடைய பதிப்புரையில் ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராகப் பணி புரிவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனக்கென்னமோ காதல் தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறாரோ என்று தோன்றுகிறது. கவிஞர், தன்னுடைய நூலை மனைவிகளையும் காதலிகளையும் தேவதைகளாய் கொண்டாடித் தீர்க்கும் மொத்த ஆடவர் உலகத்திற்கும் சமர்ப்பணம் செய்துள்ளார். அது, மனைவிகளையும் காதலிகளையும் “தேவைதைகளாய்” கொண்டாடித் தீர்க்கும் மொத்த ஆடவர் உலகத்திற்கும் சமர்ப்பணம் என்று உள்ளது. பிழையாக இதைக் கருத முடியவில்லை. மனைவியோ காதலியோ இல்லாமல் அது ஒரு வாழ்வா... காதலுக்கும் காதலிக்கவும் அவர்கள் இல்லாமல் எப்படி... இவை போன்ற கவிதைகளை உடனிருந்து ரசிக்கக் கிடைத்த மனைவிகள், காதலிகள் கொடுத்து வைத்தவர்கள். மனித வாழ்வு சுபிட்சம் பெறத் “தேவை” தேவதைகள்...!


தபூவின் கவிதை ஒன்று...

“பல நூற்றாண்டுகள் ஆகுமாமே

ஒரு வைரம் உருவாக

நீ மட்டும் எப்படி

பத்தே மாதத்தில் உருவானாய்” தேவதைகளின் தேவதை விகடனில் வெளிவந்த காலத்தில் படித்தவுடன் சிலிர்த்த காலம் அது. கவிஞர் துளசி வேந்தன் தொகுப்பின் முதல் கவிதையாக கீழ்க்கண்ட கவிதையை வைத்துள்ளார்.

“நீ சிசேரியன்

செய்துதான் பிறந்தாயாமே?

என்ன செய்வது,


வெட்டித்தானே 

எடுக்கவேண்டும் வைரத்தை!” மிரண்டுட்டேன் கவிஞரே. சிசேரியனை இப்படியெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா... காதலி கொடுத்து வைத்தவர். (காதலியின் அம்மா ஓரமாக நின்று தனக்கு செய்யப்பட்ட சிசேரியனையும் சிசேரியனுக்கான காரணத்தையும் மருமகன் எழுதிய கவிதையை வைத்து (மகளுக்காக) ரசித்துக்கொள்ளவும்!)


“உன் அரை மணி நேர அலங்காரம்

நான் அரை நொடியில் 

கலைக்கத்தானே...” 

என்கிறது ஒரு கவிதை.

கொஞ்சம் பொறுமையும் கொஞ்சும் கால அவகாச நீட்டிப்பும் காதல் கேட்கிறது கவிஞரே. செவி மடுக்கவும்.


காவல் நிலையமா? காதல் நிலையமா? குழப்பம் தந்துவிட்டது ஒரு கவிதை. ஆனால் விழும் அடி ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று உயிரைக் கேட்க வைக்கிறது. 

“விசாரணை என்று

காதல் நிலையம் அழைத்துவந்து


வெட்கத்தால் அடிக்கிறாய் நீ!”

வலிக்குமா என்ன வெட்க அடிகள்...!


மச்சம் என்றால் என்ன? என்பதற்கு விளக்கம் தருகிறது ஒரு கவிதை. மச்சமே விழித்துப் பார்க்கும் கணம் அது.

“உன் அழகில்

பிரம்மன் மெய்மறந்த 

இடமெல்லாம்,


“மச்சங்கள்”.


தொகுப்பெங்கும் துணுக்குகள் போலிருக்கும் ஒவ்வொன்றும் கூட மின்மினிகளாய் கவிதை வாசம் பரப்புகிறது.

“ஆயுள் சந்தா கட்டி

படிக்கவேண்டிய இதழ்

உன்னுடையது”

“அடிக்கும் பறை நானுனக்கு

அதிர்வுகள் நீயெனக்கு”

“குழந்தை போல

பேசுமுனக்கு

முப்பத்தி இரண்டும் 

பால் பற்கள்”

“உன் நிழலுக்கு

நெத்திச் சுட்டியாய்,

உதிர்ந்த பூவொன்று...” (22 & 28 இரு பக்கங்களில் உள்ளது)


மதங்கள் நிறைய இருந்தாலும் மும்மதம் மட்டுமே பிரதானமாக சொல்லக் கேட்டிருக்கிறோம். தொகுப்பில் மூன்று மதம் சார்ந்த கவிதைகள் சொல்லி, காதலின் மதச் சார்பின்மையைக் காட்டுகிறார் கவிஞர். காணும் காட்சி யாவும் காதல் என்றால் மதமும் காதலாதல் சரிதான்.

“அய்யர் உன் தலையில்

சடாரி வைக்கும்போது

அனிச்சையாய் குனிகிறார்

பெருமாள்”

(சடாரி என்றால் பெருமாளின் திருப்பாதமாகப் பாவித்து தலையில் வைக்கப்படும் கிரீடமாம். கூகுள் சொன்ன தகவல். இன்னைக்குத்தான் தெரியும்)

“நீ சொல்லும்

ஸ்தோத்திரங்கள்


சிலுவையில் அறையுண்ட

இயேசுவுக்கு ஒத்தடங்கள்”


உசைன் பாய்

சாம்பிராணி தூவி

தூபமிட்டுப் போவது போலவே

நீயுன் வெட்கத்தைத் தூவி

காதலிட்டுப் போகிறாய்...”

சநாதனத்திற்கு எதிராக, எல்லா மதத்தையும் சமமாகப் பாவித்து காதலிட்ட கவிதைகள் படைத்திட்ட கவிஞருக்கு வாழ்த்துகள்...


ஒன்றிரண்டு கவிதைகள் ஒரே சாயலில் இருக்கிறது கவிஞரே.

“புயலுக்குப் பெயர் சூட்டும்

வழக்கத்தைக் கண்டுபிடித்தது

உன் அப்பன் தான்...”

“நான் மட்டும் 

வானிலை ஆய்வுத்துறையில்

இருந்திருந்தால்

உன் செல்லப் பெயர்களைத்தான்

புயல்களுக்குச் சூட்டிக் கொண்டிருப்பேன்...”

(போலவே 28 ம் பக்க பிள்ளையார் கவிதையும் 110 ம் பக்க கண்ணாடிக் கவிதையும்...) கூறியது கூறல் ஒரு குற்றம் என்பார்கள். காதலில், காதல் கவிதைகளில் குற்றம் காண்பது தவறு என்றாலும் சொல்லி வைக்கிறேன்.


அறிவியலைக் காட்சிப்படுத்துவது போல பல கவிதைகள். கற்பனை எண்ணத்தை ஓடவிட்டு காதலை ரசிக்க வைக்கிறது வரிகள்.

“இரவும் 

மழையும்

சன்னலும்

மின்னலும்

உன் முகமும்

ஒரே நேர்கோட்டில்

சந்திக்கிற நிகழ்வுதான்

எனக்குக் காதல் கிரகணம்”

எப்படியெல்லாம் மனுஷன் யோசிக்கிறார் என யோசிக்க வைக்கிறார் கவிஞர். இப்படித்தான் போகிற போக்கில் பெரும் ஏக்கமொன்றையும் கவிதையாக்கி வைத்திருக்கிறார் கவிஞர்.

கனவில் கூட 

கதவடைத்துக்கொண்டுதான்,

ஆடை மாற்றுகிறாய்

நீ...”


காதலில் நனைந்து, மூழ்கி, திளைத்து, அதற்குள்ளேயே மூர்ச்சையாக்குவதுபோல கவிதைகள். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பது போல காண்பவை யாவும் காதலாகவே தெரிவது கவிஞருக்கு கிடைத்த வரம்தான். அட, ஆமால்ல… அடடா... ப்ச் என்னா மனுஷன்யா... கவிஞன்யா... என்று வாசிக்கும்போது நம்மை உச்சரிக்க வைத்த சொற்கள் அனைத்தும் கவிஞருக்கான மகுடங்கள். அவை எப்போதும் கவிஞருக்குக் கிடைக்கும். கவிஞரின் பார்வைக்கு பேரன்பு.

“சிவாஜிகணேசன் நடிக்குமளவு

இல்லையென்றாலும்

ஓரளவு காதலிக்கத் தெரியும் உன்னை” என்கிறார் கவிஞர். ஓரளவில்லை. மிகச் சிறப்பாகவே காதலிக்கிறீர்கள். இலக்கிய உலகிலும், சமூகத்திலும் காதல் பரவ, காதலைக் கொண்டாட கவிதைகள் படைத்துக் கொண்டேயிருங்கள். அட்டைப்படம் சிறப்பு. வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️

Thursday, 23 October 2025

நீ துளையிட்ட எனது புல்லாங்குழல் - ஜின்னா அஸ்மி

 

நீ துளையிட்ட எனது புல்லாங்குழல்

ஜின்னா அஸ்மி

Mohamed Ali Jinna 

படைப்பு பதிப்பகம்

பக்கங்கள் : 114

விலை : 120


கண்ணீரிலும் காதலிலும் கரைந்த கவிதைகள்


 காதலாகக் கசிந்துருகுபவரின் கஸல் கவிதைகள், நீ துளையிட்ட எனது புல்லாங்குழல். இசையாக ராகமாக கவிதையாக கண்ணீராக கடவுளாக வலியாக காதலாக ஒவ்வொரு கவிதையும் தன் முகம் காட்டுகிறது. தொடர்ந்து காதலை தான் படைப்பாக்குவதோடு, காதலை கவிதையாக்கும் பல கவிஞர்களையும் ஊக்குவிக்கும் ஜின்னா அஸ்மி தோழரின் கவிதைகளை கடவுள் மறந்த கடவுச் சொல் தொகுப்பிலேயே ருசித்திருக்கிறேன். இத்தொகுப்பு அதன் தொடர்ச்சி நிலை.


 என்னுரையில், காதலில் வெற்றி என்பது தோல்வி. தோல்வி என்பது வெற்றி என்றும் நான் கஸலை நினைக்கிறேன் கஸலாகிறேன் என்கிறார் கவிஞர். கவிதைகளில் அடிநாதமாக இவ்வரிகளே அமைந்திருக்கிறது. கவிக்கோ எழுதிய மொழிபெயர்ப்புக் கவிதை ஒன்று. எப்போதும் மனதிற்குள் இருந்து உருத்திக்கொண்டே இருக்கும் வரிகள் அவை. 

“நீயும் நானும் சேரக்கூடாது என்றுதான்

ஒவ்வொரு முறையும் வேண்டுகிறேன்.

ஏனென்றால் என் பிரார்த்தனைகள்

ஒருபோதும் நிறைவேறுவதில்லை”

எதுவும் நடக்காத விரக்தியிலும் இணை உயிர் தேடும் ஒரு காதல் மனம் இப்படியெல்லாம் பாடுமா என்று வியக்க வைத்த வரிகள் இவை. போலவே பல கவிதைகள் இன்மையைப் போற்றி ஞானம் தேடும் தன்மையுடையதாக தொகுப்பில் காணக் கிடைக்கின்றன. மெல்லப் பயணித்து வேகம் கூடிச் செல்லும் திரைப்படம் போல கவிதைகளும் தன்னுடைய வலியை கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி வேகம் கூட்டுகின்றன தொகுப்பின் இறுதி செல்லச் செல்ல.


“வாசலுக்கும் 

வருகைக்கும்

எந்தச் சம்மந்தமுமில்லை

காதலென்பது காற்றைப் போல”

எங்கும் காதல் வியாபித்திருக்கும். அது இதயத்தின் உள்ளே வர கதவு திறந்திருக்க வேண்டிய அவசியமில்லை. காதல் இது போன்ற சூழல் இல்லாமலே காற்றைப்போல எங்கும் நிறைந்திருக்கும். காதல் என்பது அன்பைச் சூடிக்கொண்டிருக்கும் அனைவருக்குள்ளும் நிறைந்திருக்கும் இறை. அதை வணங்கினால் போதாதா இறை வரம் பெற என்றுணர்த்தும் வரிகள் இவை.


“இந்தக் கணம் 

ஒரு நிச்சயமற்ற பொழுதாகிவிட

காதல் ஒன்று போதும்”

காதல், ஒரு மாயம் நிகழ்த்தும் கடவுள். அது எப்பொழுதும் ஒரே போன்றதொரு சுகம் தராதெனினும் அது தரும் சுகமனைத்தும் வலியாக இருந்தாலும் துயராகயிருந்தாலும் சுகமே. மயக்கம் தரும். விழிப்பு தரும். விஷம் தரும். உலகை மறக்க வைக்கும். இதோ இப்போது வாழும் வாழ்வை நிச்ச்சயமற்ற ஒன்றாக்க காதல் போதும் என்கிறார் கவிஞர். நிச்சயமற்ற ஒன்று என்பதில் எதை நிரப்பிக்கொள்வது என்பது அவரவர் காதல் சூழல் பொறுத்தது.


 காதலை பல நேரங்களில் ஒரு மிகப்பெரும் வக்கிரமமாக பார்த்திருக்கிறேன். அது மன்றாடுதலை ஏளனம் செய்வதை உணர்ந்திருக்கிறேன். தன்னிலை தொலைத்து சரணாகதி அடைதலை தூக்கி எறிவதை அனுபவித்திருக்கிறேன். ஆனாலும் காதலைத் தொடர்ந்திருக்கிறேன் என்பது எதனை நோக்கிய பயணம்? அது மனதை வாழவைத்தல். கண்ணீரை வாழ வைத்தல். காதலை வாழவைத்தல். இந்தக் கவிதையில் கவிஞர், கண்ணீருக்கு என்ன பெயர் சூட்டுகிறார் பாருங்கள்...

“நான் 

கண்ணீரைப் பிரசவிக்கிறேன்

நீ 

“காதல்” எனப் பெயர் சூட்டுகிறாய்”


 அனுபவங்களே கவிதைகளாகின்றன பலருக்கு. அது பார்ப்பதாக, கேட்பதாக, அனுபவித்தலாக என எப்படியும் அமையலாம். உலகின் ஏதோ ஒரு மூலையில் உருவாக்கப்படும் மீம்ஸ் பார்த்து நாம் சிரிப்பது போல, அட ஆமாப்பா என்பது போல. உணர்வு என்பது உலகப் பொது. அதிலும் காதல் தரும் உணர்வுகள் அவ்வளவு இயல்பாக காதலர்களுக்குப் பொருந்திப் போகும். காதலில் ஓர் ஆணின் சொல்லோ, பெண்ணின் சொல்லோ உண்டாக்கும் வலி இரு தரப்பிற்கும் பொதுவானதாக இருக்கும். அன்பின் கண்களுக்கு அதன் வலி புரியும். வெறுமனே வேடிக்கை பார்க்கும் கண்களுக்கு ஒன்றும் புரியாது. சிறுபிள்ளைத்தனமாக இருக்கும். கத்தியால் குத்தினால் மட்டும்தான் காயமா? தழும்பு இருந்தால்தான் காயமா? இதோ கவிஞர் கூறுகிறார்.

“உன் காதல் வார்த்தைகள்

எப்போதும் காயங்களாக இருந்ததில்லை

ஆனால் வலி நிறைந்தவை”


 “பெண்மனசு ஆழமென்று ஆம்பளைக்குத் தெரியும் அது பொம்பளைக்கும் தெரியும் அந்த ஆழத்திலே என்ன உண்டு யாருக்குத்தான் தெரியும்...” என்றொரு பாடல் உண்டு. பெண் ஒரு ஆணை என்ன செய்கிறாள் எப்படி வழி நடத்துகிறாள் எவ்வாறான அன்பை வழங்குகிறாள் வழங்கத் தலைப்படுகிறாள் என்பதை எப்போதும் உணர முடியாது. சரணாகதி என்ற ஒன்றை செய்தபிறகும் அவளின் விருப்பம் சார்ந்த விசயங்களைத் தான் அரங்கேற்றுவாள். அது நாம் விரும்பியதாக இருக்கலாம். துயரானதாக இருக்கலாம். நாம் நிர்ணயித்து வைத்திருந்த எல்லைக்கும் மேலாக பறந்து விரிந்திருக்கலாம். எல்லாம் உணரும்போது பெண் என்பவளை, காதல் என்பதை வைத்த கண் மாறாது அதிசயிக்கும் சூழல் வாய்க்கும். அந்தச் சூழல் மகிழ்வின் உச்சமாக கிடைக்கப்பெறும் காதலிணை கொடுத்து வைத்தவர்கள் தான்.

“உனக்குள்ளே நான் மிதந்துகொண்டிருந்தாலும்

உன் ஆழம் பற்றி அறியமுடியாத

ஒரு தக்கையைப் போலவே வைத்திருக்கிறாய்

என்னை...”


 கண்ணீர் வெளிச்சம் என்பது எவ்வளவு ஆற்றாமைகள் நிறைந்தது. அதுதான் நான் உனக்கு அளிக்கும் பரிசு. அதில் நீ என்னைக் காண்பாய். அது உன்னை மேலும் ஒளியாய் மாற்றும். அதற்கு உனதருகில் வாழும் வரம் கிட்டிவிடும். கண்ணீர் தனது பாவத்தை, நீ பெற்றுக்கொண்டதால் கழுவிக்கொள்ளும். கண்ணீர் வெறும் நீர்மப் பொருள் அல்ல. அது காதல். விருப்பம் இல்லை என்றால் சொல்லிவிடு என்று முடியவேண்டிய கவிதையை “வெளிச்சம் வேண்டாமெனில் ஊதி அணைத்துவிடு” என்கிறார் கவிஞர். “அவள் பெறாமல் போவது வெளிச்சம். எனக்கு வாழ்வு” என்பதான பொருளில் காதல் வெளிச்சம்!

“என் அழுகையை ஏற்றுக்கொள்

அது உனது சன்னதியில் என் கண்கள் ஏற்றும் தீபம்

வெளிச்சம் வேண்டாமெனில் 

ஊதி அணைத்துவிடு


 காதலிடும் கட்டளைகள் பல சமயம் அபத்தமாக இருக்கும். ஆனாலும் அபத்தத்தையும் ஏற்கும் வேண்டுதலைக் கைக்கொண்டிருக்கும் மனம் என்ன செய்யும்? ஏற்று தன்னை வருத்தியபடி மீண்டும் துளிர்க்கும் காதலுக்காக காத்திருக்கும். இது காதலிடும் சாபம். காதல் தந்த சாபம் என்பதால் கைகளில் பெருமையோடு ஏந்திக்கொள்ளும் நம்முயிர். 

“இது என்ன சாபம்

வாசம் வேண்டாம் என்றால்தான்

பூவுக்கான வரம் கொடுப்பேன் என்பது”


“உன் கூண்டுக்காகவே 

உருவாக்கப்பட்ட பறவை நான்

ஏன் வானம் வரைந்து வேடிக்கை காட்டுகிறாய்” (55)

“என் இறகுகளைக் கொய்து

கூடு கட்டுகிறேன்

இப்பொழுது 

வானத்தைக் காட்டி விளையாடுகிறாய்” (22)


“நான் விசமாக இருந்தாலென்ன...

நீ மகுடி ஊதியதும்

நான் ஆடத்தானே செய்கிறேன்

ஒரு பாம்பைப் போல” (31)

“நான் இசையைக் கேட்டேன்

நீ மகுடி ஊதுகிறாய்

நான் இப்போது 

எதற்காக ஆடுகிறேன் எனத் தெரியவில்லை” (71)

மேற்சொன்ன ஈரிரு கவிதைகளும் பொருண்மையில் வேறுபட்டிருப்பினும் சொல்லாடல் ஒன்றாகவே தெரிவதால் படித்த கவிதையைப் படிப்பது போலொரு தோற்றத்தைத் தருகிறது. இணையில் ஒன்றை தொகுப்பில் இல்லாமல் செய்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அவற்றில் என்மனதிற்குப் பிடித்தவையாக கீழ்க்கண்டவற்றைச் சொல்லலாம்.

“என் இறகுகளைக் கொய்து

கூடு கட்டுகிறேன்

இப்பொழுது 

வானத்தைக் காட்டி விளையாடுகிறாய்” 

“நான் விசமாக இருந்தாலென்ன...

நீ மகுடி ஊதியதும்

நான் ஆடத்தானே செய்கிறேன்

ஒரு பாம்பைப் போல”

தொகுப்பெங்கும் மைய இழையாகப் பரவிக்கிடக்கும் காதலின் வலி சொல்லும் அடர்த்தி இக்கவிதைகளிலிருக்கிறது.


தொகுப்பின் தலைப்பையொட்டிய இக்கவிதை,

“வெட்டு 

துளையிடு

மூங்கிலாகப் பிறந்த என்னை

உன் உதட்டருகில் வைத்து

ஒருமுறையாவது இசைத்துவிடு”

இன்முறைக்குத் தூபமிடும் வன்முறைக் கவிதை. ஆமாம், ஒருமுறையாவது உன் உதட்டருகில் வைத்து இசைத்துவிடு என்று கெஞ்சுகிறது. மூங்கில் மரம் இசையாகவேண்டும். உன் உதடுகள் வழியாக காற்று மூங்கிலில் ஊடுருவி இசையை காதல் உருவாக்கவேண்டும். நீ துளையிட்ட எனது புல்லாங்குழல் என்பது அலாதி சுகமல்லவா!


நிறைவாக...

“உன் சாயலில்தான்

காதலும் மரணமும் இருக்கிறது

உன்னைத் தேடி வரத்தானே செய்வேன்”

கவிஞரின் கவிதைகளை மீண்டும் மீண்டும் வாசிக்கத் தேடி வருவேன். அந்தக் காதல் மனம் தரும் கவிதையில் நான் காதலைக் காண்கிறேன். கடவுளைக் காண்கிறேன். என்னைக் காண்கிறேன்.


கஸல் வழியில் காதல் வேள்வி...

வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️

Wednesday, 22 October 2025

கடவுளைத் தோற்றுவித்தவன் - யாழ் தண்விகா


 

சிறார் கதை 2


கடவுளைத் தோற்றுவித்தவன்


யாழ் தண்விகா 


 பள்ளிக்கூடத்திலிருந்து வந்தும் வராததுமாக பையைத் தூக்கி எறிந்துவிட்டு “அம்மா உனக்கு எதுக்கும்மா நாகம்மான்னு பேரு வச்சாங்க” என்றான் நவீன். “ஏன்டாப்பா இந்தப் பேருக்கு என்ன குறைச்சல்? நாகம்மா மகனுக்கெல்லாம் பள்ளிக்கூடத்தில் இடமில்லைன்னு உங்க பள்ளிக்கூடத்துல சொல்லிட்டாங்களா” என்றாள் நாகம்மா. 


 “கிண்டல் பண்ணாதம்மா. என்னோட வகுப்புல படிக்குற கண்ணன், உங்கம்மா பேரு நாகம்மா தான. நாகப்பாம்பு மாதிரி படமெடுத்து ஆடுமான்னு கேக்குறான். எனக்குக் கோவம் கோவமா வருது. ஒரு நா இல்லைன்னாலும் ஒருநா என்கிட்ட செமக்க அடி வாங்கப் போறையான்” நவீன் கோவமாகப் பேசினான். 


 “நாகம்மாங்குறது சாமிப் பேருன்னு அவங்கிட்ட சொல்லவேண்டியது தானடா. இல்லன்னா சாருகிட்ட சொல்லவேண்டியது தானடா. சாரு கண்டிச்சு வப்பாருல்ல. இவ்வளவு கோவம் ஆகாதுடா நவீன்” அவனைச் சாந்தப்படுத்தும் விதமாக நாகம்மா பேசினாள்.


 “சரிம்மா. நாளைக்கு நான் சார்கிட்ட சொல்றேன் அவனை. அதுக்கப்புறமும் ஏதாவது சொன்னான்னா அவனுக்கு இருக்கு” என்ற நவீனை முறைத்துப் பார்த்த நாகம்மா சட்டென யோசனை வந்தவளாக சிரித்துக்கொண்டே “ சரிடா. எம்பேருக்கே அவன் கிண்டல் பண்ணுனதுக்கு இவ்வளவு கோவப்படுறயே. ஒன் தாத்தா பாட்டி பேரு உனக்குத் தெரியும்ல. காத்தவராயன். இருளாயி. இதெல்லாம் அவனுக்குத் தெரிஞ்சா இன்னும் கிண்டல் பண்ணுவான்ல. அப்ப என்னடா பண்ணுவ” என எதிர்க் கேள்வியைக் கேட்டாள். “அது தெரிஞ்சாத்தான. அப்படியே தெரிஞ்சாலும் அதையும் சாமிப்பேருன்னு சொல்லி சமாளிச்சுடுவேன்” என்ற அவனை “என்னது சமாளிச்சிடுவியா? உண்மையிலேயே அது சாமிப் பேர் தான்டா” என்ற நாகம்மாளை நிமிர்ந்து பார்த்து “என்னம்மா சொல்ற? நெசமாவா?” என்றான் நவீன் ஆச்சரியத்துடன்.


 “ஆமா. இதெல்லாம் சாமிப் பேர் தான். உன் பாட்டி பேர் இருளாயி. அந்தக் காலத்துல ஆதி மனுசன் இருட்டைப் பார்த்து மிகவும் பயப்படுவான். நெருப்பைக் கண்டுபிடிக்குறதுக்கு முன்னரும் பின்னரும் இருட்டின் மேலிருந்த பயம் அவனுக்குப் போகவே இல்லை. இரவு நேரங்களில் எதையாவது பார்த்து பயந்து அதிர்ச்சியில் இறந்து போவது அடிக்கடி நடந்தது. அவங்களைப் பேய் அடிச்சு செத்ததாக நெனச்சாங்க. அதனால இதையெல்லாம் கோரக் கடவுள்களாக நெனச்சு அதைத் திருப்திப்படுத்த தம்மோட குழந்தைகளுக்கு கருப்பன், கருப்பாயி, இருளன், இருளாயின்னு பேர் வச்சாங்க. அப்படி வந்த பேர் தான் இருளாயி. புரியுதாடா?” என்றாள் நாகம்மா.


 “புரியுதும்மா. அப்ப தாத்தாவுக்கு எதுக்கு காத்தவராயன்னு பேரு?” என்று கேட்டான் நவீன். “ஆதி காலத்தில் இந்த மண்ணு உழுதுபோடாம அப்படியே கிடந்துச்சு. பெரும் சூறாவளிக் காத்து அப்பப்போ அடிக்கும். அந்தச் சூறாவளி மேல் மண்ணை அள்ளிப் பறக்கும்போது அதிலிருக்க பாஸ்பரஸ் காத்தோட சேர்ந்து தீப்பிடிக்கும். அதைப் பார்த்த ஆதிமனுசன் அதை கொள்ளிவாய்ப் பேய் என நெனச்சான். அந்தப் பயத்திலிருந்து விடுபட காற்றை வழிபட ஆரம்பிச்சான். அப்படி காற்றைத் திருப்திப் படுத்த உண்டான பேர் தான் உன் தாத்தா பேரு, காத்தாயி, காத்தப்பன், காத்தவீரி, காத்துக்கருப்பு இப்படிப் பேரெல்லாம்” என்ற நாகம்மாவை வச்ச கண் மாறாமப் பார்த்துக்கொண்டிருந்தான் நவீன். 


 “எவ்ளோ விசயம் தெரிஞ்சு வச்சிருக்கம்மா. சூப்பர்ம்மா. அப்படியே உன் பேருக்கும் ஒரு விளக்கத்தைச் சொல்லிடும்மா. யார் கேட்டாலும் இனி நல்லா பதில் சொல்லிக்கிறேன்” என்றான் நவீன். “பாம்பைக் கண்டால் படையே நடுங்கும்” என்ற பழமொழியைக் கேட்டருக்கிறயா?” என்றாள் நாகம்மா. “ம்‌ம்‌ம் கேட்ருக்கேன்” என்றான் நவீன். “ஆதி மனுசன் நல்லா பலசாலியா இருந்தான். வேட்டைக்குப் போற வழில ஏதாவது பாம்பு கடிச்சாக்கூட அதுக்குப் பசிக்கும்போல. அதான் கடிக்குதுன்னு நெனச்சிட்டே நடந்து போவான். கொஞ்ச தூரம் போன பின்னாடி விஷம் தலைக்கேறி உயிர் போயிரும் கடிச்சவனுக்கு. கூடப் போற மத்த ஆளுங்க எல்லாம் அவன் தூங்குறான்னு நெனச்சு விட்டுட்டுப் போயிடுவாங்க. கொஞ்சநா கழிச்சு அந்த உடம்பு கழுகு கொத்தி புழு ஏறி கெட்ட வாடை அடிக்கும். அந்தச் சமயத்திலதான் பொதைக்குற வழக்கமே வந்திருக்கும்னு சொல்றாங்க. சரி. விசயத்துக்கு வாரேன். பாம்புக்குப் பிடிச்ச உணவு கறையான் தான். கறையான் புத்துக்குள்ள போயி கறையானை நல்லாத் தின்னுட்டு, புத்தை விட்டு வெளில வர நினைக்குறப்ப பாம்புக்கு வயிறு முழுக்க இரை இருக்குற தன்னோட உடம்பைத் தூக்கிட்டு வர முடியாம தத்தளிக்கும். அப்போ படமெடுத்து ஆடும். அதைப் பார்த்து பயந்த ஆதி மனுசன் புத்துக்கு முன்னால இறைச்சி, பால் இதெல்லாம் வச்சு “ஏய் பாம்பு, இதெல்லாம் உனக்குத்தான். நல்லாச் சாப்பிடு. எங்க பக்கத்துக்கு வராத”ன்னு சொல்லி வேண்டிக்குவாங்க. அப்படிப் பாம்புக்குப் பயந்த மக்கள், பாம்பால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களோட குழந்தைகளுக்கு வச்ச பேரு தான் நாகம்மா, நாகப்பன், பாம்புலம்மா, பாம்புலய்யா இதெல்லாம். இனிமே கண்ணன் கிண்டலா சொன்னா என்னோட அம்மா பேருக்கு இதுதான்டா விளக்கம்னு சொல்லுடா. கேட்டுக்குவான். கிண்டலடிக்கமாட்டான்” என விளக்கம் சொன்னாள் நாகம்மா. “இனிமேல் அவன் நக்கலடிக்கட்டும். அப்புறம் பார்த்துக்கிறேன்ம்மா” எனச் சொல்லிக்கொண்டே கிளம்பினான் நவீன். கிளம்பியவனிடம் “லேய், உங்கப்பா பேருக்கு என்ன விளக்கம் தெரிஞ்சுக்க. இங்க வா” என்றாள். “எனக்குத் தெரியும்மா. எங்க சார் சொன்னார்” என்றவுடன் அவள் “என்ன சொன்னார் உங்க சார்? எங்க சொல்லு பார்ப்போம். அவர் சொன்னது சரியா இல்லையான்னு சொல்றேன்” என்றாள் நாகம்மா.

 “ஆதி காலத்தில் வாழ்ந்த மனுசங்க எல்லாம் குழுவாக வாழத் தொடங்கியபின்னர் அவர்களுக்குள் எழும் சச்சரவுகளைத் தீர்க்க, பிற குழுவுடன் உண்டாகும் சச்சரவுகளைத் தீர்க்க தங்கள் குழுவில் தலைவன் ஒருவனைத் தேர்ந்தெடுத்தனர். குழுவினர் அனைவரும் அவனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டனர். சில சமயங்களில் தனது குழுவைக் காக்க, பிற குழுவோடு சண்டையிட்டு இறந்தும் போயிருக்கிறான். தம்மை வழிநடத்தியவன் என்பதாலும் தம்மை ஆண்ட, காத்த தலைவன் என்பதாலும் தான் தம்மில் வாழ்ந்த அவனுக்கு ஆண்டவன் என்று பெயர் வந்ததாம். சார் சொன்னார். நம்ம குடும்பத்தைக் காப்பவராக அப்பா இருப்பதால் அப்பாவுக்கும் ஆண்டவன் என்ற பேர் பொருத்தம் தானம்மா?” என்றான் நவீன். 

 “அப்பா மட்டும் தான் வீட்டைக் காப்பாத்துறார். நானெல்லாம் காப்பாத்தலயாடா?” என்றாள் நாகம்மா. “எனக்கு எப்பவும் அப்பா, ஆண் ஆண்டவர். அம்மா, பெண் ஆண்டவர்” என்றவனின் நெற்றியில் முத்தமிட்டு மகிழ்ந்தாள் நாகம்மா.

 விரைந்து கிளம்பியவன் சட்டென நின்று “எல்லாருக்கும் சாமிப் பேர் இருக்கு. எனக்கு ஏன்ம்மா நவீன் என்ற பெயர்?” என்றவுடன் நாகம்மா சொல்லத் தொடங்கினாள் “என்னோட அப்பா, அம்மா, அவங்களோட அப்பா, அம்மா எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை இருந்துச்சு. வச்சாங்க. நான் உனக்கு கொஞ்சம் நவீனமா பேர் வைக்கணும்னு தோணுச்சு. அதான் நவீன் என்று பேர் வச்சிட்டேன்” என்று சொல்லியதைக் கேட்டபடி விளையாடச் சென்றான். சுவற்றில் தொங்கவிடப்பட்டிருந்த நாகம்மா ஆண்டவர் திருமணத்தின்போது வழங்கப்பட்ட பெரியார் புகைப்படத்தில் ஒரு கம்பீரம் தோன்றி மறைந்தது அப்போது.