Wednesday, 2 July 2025

Super Star பாரதிதாசன்

 


சூப்பர் ஸ்டார் பாரதிதாசன்


பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். அப்பொழுது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் என்பதில் புரட்சிக்கவிஞர் என்றால் என்ன என்ற கேள்வியை முன்வைத்தேன். அவரோட முழுப்பெயர் சார் அது என்றனர். எது முழுப் பேரா? அடேய் சூப்பர் ஸ்டார் என்று சொல்லுவாங்கல்ல. அது யாரு என்று கேட்டேன். சார் ரஜினிகாந்த் பெயர் சார் அது என்று கூறினர். அடுத்து தளபதி என்று யாரடா சொல்லுவீங்க என்று கேட்டவுடன் உடனே விஜய் என்று பதில் வந்தது. அடுத்து அவர்கள் சார், தல நம்ம அஜித் சார் என்றனர். என்னடா பாடத்துல வர்றவங்க பேரு தெரிய மாட்டேங்குது. நடிகர்கள் என்றவுடன் இப்படி சொல்கிறீர்களே என்று கேட்டேன். சார் இவங்க எல்லாம் பெரிய ஆளுங்க சார் என்று கூற திகைத்துப் போய், இது வில்லங்கமாவுல்ல இருக்கு. நடிகர்கள பத்தி சொன்னா இவ்வளவு தீவிரமா இருக்காங்க. பாடத்தில் உள்ள தலைவர்களைப் பற்றிக் கேட்டால் இப்படி சொல்றாங்களே.... சரி. நேருவுக்கு  மனிதருள் மாணிக்கம் என்ற பட்டம் இருக்கு. காமராஜருக்கு கர்மவீரர் என்ற பட்டம் இருக்கு. பாரதியாருக்கு மகாகவி என்ற பட்டம் இருக்கு. பாரதிதாசனுக்கு புரட்சி கவிஞர் என்ற பட்டம் உண்டு. இதுபோல தலைவர்களுக்கு என்று சில பட்டங்கள் இருக்கு. நாம் பட்டங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.  சார் இதை நீங்க முன்னாடியே சொல்லக் கூடாதா, போங்க சார் என்றனர் மாணவர்கள். 


அதுக்கடுத்து ஒரு இடி. பாரதிதாசன் அப்படின்னா யாருன்னு கேட்டேன். கேட்டவுடன், அவரு தான் பாரதியார்ன்னு சொன்னாங்க. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. டேய் பாரதிதாசன் அப்படின்றவர் வேற. பாரதியார் அப்படின்றவர் வேற. பாரதியார் மேல அளவுகடந்த பாசம் வச்சிருந்ததனால் கனகசுப்புரத்தினம் அப்படின்ற இவரு பேர பாரதிதாசன் என்று வச்சிக்கிட்டாரு. பாரதியார் மீசையை முறுக்கி வைத்திருப்பார் தலையில் தலைப்பாகை அணிந்திருப்பார். ஆனால் பாரதிதாசன் அப்படி அல்ல. இப்பொழுது பாரதிதாசனை பாருங்கள் என்று படத்தைக் காட்டினேன்.


மாணவர்கள் மத்தியில், ஒரு சூப்பர் ஸ்டாராக பாரதிதாசன் என்ற நிலை வரவேண்டும்.


பெ.விஜயராஜ் காந்தி

காற்றால் நடந்தேன் - சீனு ராமசாமி


 

காற்றால் நடந்தேன்

சீனு ராமசாமி 

என் சி பி எச் வெளியீடு 

100 ரூபாய் 

96 பக்கங்கள்


தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் கவிஞர். தோழர் சீனு ராமசாமியை கவிஞராக நான் வாசிக்கும் முதல் நூல் காற்றாய் நடந்தேன். கவிஞராக தன்னுடைய பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார் எனலாம். வாடகை வீடு குறித்து பேசுவது என்றால் மேலாக சந்தோசம் தென்பட்டாலும் உள்ளூர வருத்தம் இழையோடும். வீட்டில் உரிமையாளர் அருகில் இல்லாவிட்டால் அந்த சுகமே சொர்க்கம். இந்த கவிதையை பாருங்கள் இரண்டு பேருக்கு மேல் தங்க அனுமதி மறுக்கப்பட்ட ஒரு வாடகை வீடு என்ன செய்ய இயலும்?

"நகர வீட்டு உரிமையாளரின் 

நீர் செலவீடு பற்றிய நிபந்தனையாலும் 

இரண்டு பேருக்கு மேல் 

தங்க அனுமதி மறுக்கப்பட்ட 

இரவில் 

பையுடன் வந்து நிற்கிறான் 

என்ன சொல்லி 

திருப்பி அனுப்புவது 


கனவுகளும் 

கற்பனைகளும் 

நம்பிக்கைகளும் 

கண்களில் ஒளிரும்

வளரிளம் பருவத்து 

என் சிற்றூர் தம்பியை..."


கட்டிடங்கள் கட்டி முடித்தபின் அழகாக இருக்கும். அதுவரை இப்படித்தான் என்று கூறுவார்கள் என்று பொதுவாக கூறுவது உண்டு. ஆனால் எதற்காக அப்படி சொல்லுவார்கள் என்று அறுதியிட்டு கூற முடியாது. தோழரின் கவிதை ஒன்று. பால் சுண்ணாம்பு என்னும் தலைப்பில்... "சுவர் பூசாத கட்டிடத்தில் 

கிடந்த உள்ளாடையின் 

பின்புறத்தை இணைக்கும் கொக்கிகளுக்குப் பதிலாக ஊக்குகள்

கொக்கிகளுக்குப் பதில் எப்படி

ஊக்குகள் வந்தன 


அது தனிக்கதை 

தனிக்கவிதை" 

சொல்ல வந்ததை பூடகமாக கவிதையில் வைக்கும் லாவகம் தோழருக்கு இயல்பாக கைகூடி வந்துள்ளதை காணலாம்.


குழந்தைகள் பெற்ற இல்லத்தில், குழந்தை முழித்திருக்கும் சமயம் சந்தோஷத்திலும் தூக்க நேரத்தில் சந்தோஷ அமைதியாகவும் இருப்பதை காணலாம். அந்தச் சமயத்தில் நடக்கும் செயல்களை உருவ ஒற்றுமை என்ற தலைப்பில் தோழர் காட்சிப்படுத்தியுள்ளதை காண்போம்.

"குருவி நடப்பது 

குருவி பறப்பது 

குருவி சிறிய அலகுகளால்

தானியத்தை உண்பது 

குளிரில் நடுங்குவது 

பதற்றமாக இங்குமங்கும் 

பார்ப்பது 

அறைக்குள் நுழைவது 

இவை யாவும் 

மகள் பிறந்த வீட்டில் நடக்கிறது...

உயர்திணை மட்டுமல்ல அஃறிணையாக வீட்டுக்குள் இருந்தாலும் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லி "அடடா" என்று வியக்க வைக்கிறார்.


இன்னொரு கவிதையில் நிழல் கொலை பற்றி கூறும்பொழுது 

"தெருவில் தன் நிழல் அழிக்க தரையைத் தடவுகிறான் 


நிழல் 

தன் அழிவைக் காண முடியாது கெஞ்சுகிறது 


விளக்கனைத்த நொடியில்

அழியா நிழலோ 

இருளில் பதுங்கி 

உயிர் பிழைத்தது" 

என்று நிழலுக்கு ஆதரவாக நிற்கிறார்.


எனது ஆட்டம் என்பது கவிதையில்

"உனது துரோகத்தை ரகசியமாக

நான் அறிந்த பிறகு 

பழிவாங்கும் நடவடிக்கையாக மனதால் விலகியும் 

உடலால் இரக்கமின்றி இணைவதுமாகத் தொடங்கியது

எனது துரோகத்தின் ஆட்டம்" என்கிறார். இதில் துரோகம் எதுவென்பதைப் பொறுத்து உடலால் இரக்கமின்றி இணையும் படலம் தொடரும். 


"பூவும் 

காயும் 

கனியும் 

காடென 

பூத்துக் குலுங்கும் 

சிறு தெய்வக் கோவிலின் 

வெண்கல மணி நாவுகளை இசைக்கிறாள் 


பிள்ளை வரம் வேண்டிப் பெண் தெய்வங்கள்

அலைந்திருக்குமாயென அறிந்ததில்லை... 

இது தெய்வ அலைச்சல்"

பிள்ளை வரம் வேண்டி பெண் தெய்வங்களை வேண்டும் பெண்கள், பிள்ளை வரம் வேண்டி பெண் தெய்வங்கள் அலைந்திருக்குமா என்று என்றாவது யோசித்து இருப்பார்களா என்பது யோசிக்க வேண்டிய விஷயம். 


இன்னும் இது போன்ற கவிதைகள் தொகுப்பு எங்கும் நிரம்பிக் கிடக்கின்றன. தாராளமாக வாசிக்கலாம் தோழரின் கவிதை எழுத்துக்களை. 


பெ.விஜயராஜ் காந்தி

பெரியோன் - ராஜிலா ரிஜ்வான்



பெரியோன் 

ராஜிலா ரிஜ்வான் 

நாற்கரம் வெளியீடு 

நூற்று எழுபது ரூபாய்

136 பக்கங்கள்

 

புதினா போட்டி 2024 குறும்பட்டியலில் இடம் பெற்ற நாவல்.


சாரா, ஆமினா, தேவி, மேனகா, சுமையா, தேவ், சதீஷ் மற்றும் அபூபக்கர் மதுரையில் சேர்ந்து பி.எட். காலேஜ் படித்து வருகிறார்கள். பி.எட். பயிற்சி காலம் முடிந்தவுடன் ஒவ்வொருவர் வீடாக இரண்டு இரண்டு நாள் தங்கி மகிழ்வை வெளிப்படுத்துகிரார்கள். கடைசியாக சாராவின் வீட்டில் பயணம் முடிகிறது. இவ்வாறு பயணம் முடிந்த பின் இனி அடுத்து அவரவர் திருமணத்தில் நாம் சந்திப்போம் என்று கூறி விடைபெறுகிறார்கள். இந்த காலகட்டத்தில் சாராவுக்கு திருமணம் நிச்சயமாகிறது. நிச்சயதார்த்தத்தை வைத்துத்தான் வில்லங்கம் தொடங்குகிறது. 


சாரா முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண். சதீஷ் இந்து மதத்தைச் சார்ந்தவன். இருவருக்கும் காதல் உள்ளது தெரியவருகிறது சாராவிற்கு திருமணம் நிச்சயம் என்னும் பொழுது தான் சதீஷிற்கு அவள் மேல் காதல் வருகிறது. சாராவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யும்பொழுது தான் சதீஷ் மேல் காதல் வருகிறது. இந்த காதல் கைகூடியதா என்பதுதான் மீதிக்கதை. சமகாலத்தில் இந்து முஸ்லிம் பிரச்சனையை வைத்து எவ்வளவோ பிரச்சனைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த காலகட்டத்தில் காதல் திருமணம், அதுவும் இந்து முஸ்லிம் திருமணம் என்பதை நாவலில் கொண்டு வந்தமைக்காக தோழர் ராஜிலா ரிவ்வான் அவரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். அபூபக்கர் சதீஷ் நம்பர்களில் வரக்கூடிய ஒரு முஸ்லிம் இளைஞன். ஆமினா, சுமையா சாராவின் நண்பர்களாக வரக்கூடியவர்கள். இவர்கள் இந்த காதலை வேண்டாம் என்று கூறினாலும் சாராவின் பெற்றோரிடம் கூறுவதைப் போல ஒரு காட்சிகூட இல்லை. இது முரணாக உள்ளது. அப்துல்லா, சாஜிதா இருவரும் சாராவின் பெற்றோர். இவர்கள் இருவரும் மகளின் மேல் பிரியமாக இருக்கிறார்கள். இந்த பிரியத்தை இன்னும் கொஞ்சம் பலப்படுத்துமாறு ஏதாவது காட்சி அமைப்புகள் வைத்திருக்கலாம். முத்துகிருஷ்ணன் லட்சுமி இவர்கள் சதீஷின் பெற்றோர்கள். இவர்கள் வீட்டில் ஒரு கலப்பு திருமணம் நடக்கிறது. சதீஷ் அக்காள் கலப்பு திருமணம் செய்வதால் வீட்டை விட்டு விரட்டப்படுகிறாள். இச்சூழலில் சதீஷும் காதல் திருமணம் செய்ய முயற்சி செய்கிறான். இரண்டு குடும்பங்களும் கடைசியாக காவல் நிலையத்தில் சந்திக்கிறது. அங்கு காதல் கைகூடியதா என்பதை ஒரு நீள் வசனம் போல் கொண்டு செல்கிறார்கள். ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுமா என்ற பதட்டத்தை கொண்டு வரும் காட்சிகள் இல்லை. பெரியோன் நாவலில் வரும் சமூகம் இங்கு உருவாக வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஒரு மதத்திற்கு உள்ளே ஜாதியை வைத்து மோதல், வேறு மதம் என்றால் மதங்களுக்கு இடையே மோதல் என்பன போன்ற சிக்கல்கள் இன்றும் நடந்து கொண்டுதான் வருகிறது. சதீஷின் சித்தப்பா, பயாஸ் கேரக்டர்கள் இன்னும் பூமியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்கள் அமைதியான சமூகம் உருவாக என்றைக்கும் எதிராக இருப்பார்கள். இவர்களை எல்லாம் மீறி நல்லபடியாக வாழ வேண்டி இருக்கிறது. 


முதல் நாவல். நல்ல துவக்கம். வாழ்த்துக்கள் தோழர். 


பெ.விஜயராஜ் காந்தி 

நாத்திகனின் பிரார்த்தனைகள்



நாத்திகனின் பிரார்த்தனைகள்

அகரன் 

திராவிடியன் ஸ்டாக் வெளியீடு

88 பக்கங்கள் 

99 ரூபாய் 


நூலின் பெயரை கேட்டவுடன் பலருக்கு கைத்தடி ஞாபகம் வந்து போகும். அந்த அளவிற்கு தந்தை பெரியார் பெயர் மூலை முடுக்கெல்லாம் பதிந்து போய் உள்ளது. தோழர் அகரனுக்கு இரண்டாவது நூல். முதல் நூல் பொன்னி, சிறுகதை தொகுப்பு. இரண்டாவது நூல் நாத்திகனின் பிரார்த்தனைகள், கவிதைத் தொகுப்பு. பெயருக்கு ஏற்றவாறு பல கவிதைகள் புத்தகத்தில் உள்ளன.


கடவுள் வாழ்த்தைப்போல பெரியார் வாழ்த்தோடு நூல் தொடங்குகிறது. போதி மரத்தடி, பிணாக் கூற்று, சாலை மனிதனின் பிரதிநிதி ஆகிய மூன்று பிரிவுகளாக கவிதைகளை பிரித்துத் தந்திருக்கிறார் தோழர்.


கடலைப் பற்றி எப்போது பேசுவதோ எழுதுவதோ இருந்தாலும் ஒரு அச்சம் சூழ்ந்து கொள்ளும். சுனாமி வந்த முதலாம் ஆண்டுக்கு ஒரு போஸ்டர் அடித்தோம். "ஏ... கடலே

அலையால் உயிரை வாரிச் சுருட்டினாய்

கண்ணீரால் உப்பின் அளவினை கூட்டினாய்

எச்சரிக்கை 

உனக்கு இதுதான் கடைசி வரை முறை" என்று போஸ்டர் அடித்தது இன்றும் நினைவில் இருக்கிறது. அந்தக் கவிதை நினைவில் வந்து போனது தோழர் எழுதிய வாழ்க்கை என்ற கவிதையை வாசிக்கும் பொழுது. 

"கால் நனைக்க மட்டுமே 

கடற்கரை செல்பவனுக்கும்

சுனாமியில் குடும்பத்தைத்

தொலைத்தவனுக்கும் 

ஒரே மாதிரியான

தாக்கத்தைக் கொடுப்பதில்லை கடல். 

கடல் அழகானது கடல் கொடூரமானது" 

கவிதை கடலின் கொடூரம் பற்றி கூறும் அதே சமயம் வந்து போன சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பையும் கவலையையும் கண் முன் மீண்டும் நிறுத்தும் என்பது உண்மை.


குடை என்னும் நீள் கவிதை ஒன்று. வயது முதுமையில் வாழும் தாத்தா ஒருவரின் வாழ்க்கையை சொல்லும் கவிதை. தாத்தாவிடம் உதவி செய்துவிட்டு காசு வாங்குவதாக இருக்கட்டும். தாத்தா, உண்ணும் உணவை பிறருக்குக் கொடுத்து உண்ண வேண்டும் என்று கூறும் பண்பை வளர்ப்பதாக இருக்கட்டும் என்று வாழ்ந்த அந்த தாத்தா இறந்த பின்பு

"சொத்து பத்து சேர்க்காத

மனுஷனுக்கு

சுத்துப் பத்து சொந்தமெல்லாம்

ஒப்பு வச்சு 

சொல்லிச் சொல்லி

அழுகையில... வருத்தத்திலயும் 

கர்வம் எனக்கு...

ஆமா 

தாத்தன் சொத்பேரன் அனுபவிக்கிறேன்"

என்று கூறும் பொழுது தாத்தாவின் குணநலன்கள் கண் முன் வந்து போகிறது. தாத்தாவை பிரிந்து செல்கிறோம் என்ற வருத்தத்தின் மத்தியில் இப்படிப்பட்ட தாத்தாவிற்கு நாம் பேரனாக பிறந்திருக்கிறோம் என்ற கெத்து என்று சொல்வோமே அப்படி இருக்கிறது.


கவிதை நூல் என்றால் ஒரு கவிதையாவது குழந்தை சம்பந்தப்பட்ட கவிதையாக அமைவது சிறப்பை உண்டு பண்ணும். இந்த நூலிலும் அப்படி கவிதைகள் உண்டு. "குழந்தையுடனான சண்டையில்

கோபித்துக் கொண்ட

பொம்மையை 

என்ன சொல்லி சமாதானப்படுத்துவது?"

இந்த கவிதையில் குழந்தைக்கும் பொம்மைக்கும் சண்டை. பொம்மையிடம் குழந்தை கோபித்துக் கொள்ளும் என்று நாம் அறிவோம். ஆனால் இந்த கவிதையில் கோபித்துக் கொண்டது பொம்மை. இதில் பொம்மையை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று கேட்கிறார். என்ன சொல்லி சமாதானப்படுத்துவது, எப்படி சமாதானப்படுத்துவது, யார் சமாதானப்படுத்துவது? அந்த குழந்தைதான் அறியும், சமாதானப்படுத்துவதற்கான மொழியை. அருமையாக உள்ளது கவிதை.


பொட்ட பிள்ளைய வளக்கறதுக்கு இடுப்புல நெருப்பக் கட்டி திரிய வேண்டி இருக்கு என்ற வார்த்தையை கூறாத பெற்றோர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஒவ்வொரு நேரமும் பெண்களை வளர்ப்பதற்குள் உயிர் போய் உயிர் வருகிறது என்று அஞ்சி அஞ்சி வளர்க்க வேண்டி இருக்கிறது. இந்த வார்த்தைகளை சொல்லிக்கொண்டே காலகாலத்துல ஒருத்தன பிடிச்சு அவன் கிட்ட உன்ன ஒப்படைச்சுட்டேன்னா நான் நிம்மதியா போய் சேருவேன் என்ற சொல்லையும் வார்த்தையையும் கூறிவிடுகிறார்கள். திருமணம் என்னும் கூட்டுக்குள் தெரியாத இரு நபர்களை ஒன்று சேர்த்து வாழ வைக்கும் ஒரு கண் கட்டி வித்தை காலகாலமாக இங்கு நடந்து வருகிறது. என்ன செய்வது? தோழருக்கு கிராமிய நடை எளிதாக வருகிறது. இப்படி ஒரு நடையானது பொம்ம கல்யாணம் என்ற கவிதையில் சிறப்பாக வெளிப்படுகிறது. "என்னோட விருப்பம் இல்லாம 

இடம் பார்த்து 

நேரம் பார்த்து 

நாள் பார்த்து 

ஆள் பார்த்து... 

படுக்க நிர்பந்திப்பது மட்டும் 

கற்பழிப்புல சேராதா... 

நாளைய அபலைக்குத்தான்

இப்ப பட்டுப் புடவை

சுத்துறாங்க

பொம்மக் கல்யாணம் ஒன்னு 

செஞ்சு வச்ச பொம்மலாட்டம் ஆடுறாங்க"

இந்த கவிதையின் ஆரம்பம் முதல் வாசித்துப் பாருங்கள். ஒரு தாய் படும் பாடு தெரியும். பூட்டிப் பூட்டி வைத்து இன்னும் எத்தனை காலம்தான் பெண்களை வாழ வைக்க போகிறோமோ தெரியவில்லை...


இப்படி ஒரு கவிதையை ஆத்திகர்கள் வாசிக்க நேர்ந்தால் எந்த கோவிலிலும் புறா வளர்க்க தடை செய்யப்படும் என்று தான் நினைக்கிறேன். "கோபுரத்தில் ஜீவிக்கும் 

கோவில் புறா

ருதுவானால்

தீட்டாகிடுமா சாமி...?

நல்லாஅருக்குல்ல என்று சொல்ல தோன்றுகிறது.


நாத்திகனின் பிரார்த்தனைகளில் ஒன்று. 

"தூணிலும் துரும்பிலும்

இருந்திடும் கடவுளே!

என் தட்டு

மாமிசத்திலிருந்து மாத்திரம்

வெளிநடப்பு செய்திடேன்.

இப்பிரபஞ்சம் முழுமையும் விடுத்து என் எச்சில் தட்டினில் அல்லவா 

உன்னைத் தேடி வருகிறது? அரிவாளுடன் ஒரு கும்பல்.."

என் உணவு என்ற சொல்லில் கூட இன்று அரசியல் ஊடுருவி விட்டது. மாட்டுக் கறி வைத்திருந்தால் பிரச்சனை, மாட்டுக்கறி இல்லை என்றாலும் அதனை மாட்டுக்கறி என்று சொல்லி பிரச்சனை என்று பிரச்சனை செய்வதற்கு என்று உள்ள ஒரு கூட்டம் இங்கே இருக்கிறது. அந்த கூட்டத்தினால் அதிக அளவில் ஏற்றுமதி செய்ய முடியும். ஆனால் இங்கு உண்ண மட்டும் தடை எப்படி என்பதுதான் அரசியல். "என் தட்டு மாமிசத்தில் இருந்து மட்டும் வெளிநடப்பு செய்திடேன்" என்று கூறுவது மாட்டிற்காக அல்ல. மனிதர்களுக்காக என்பது எப்பொழுது புரியப்போகிறது?


தொகுப்பெங்கும் முற்போக்காக பல கவிதைகள். ஒவ்வொன்றும் பெரும் வீச்சாக தெறி"க்கிறது. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்.


வாழ்த்துக்கள் தோழர் அகரன். 

No சொல்லுங்க



 நோ சொல்லுங்க

(மறுத்துப் பேசும் திறன் பற்றிய சிறார் நூல்)

சக.முத்துக்கண்ணன் 

ச.முத்துக்குமாரி

மேஜிக் லாம்ப் வெளியீடு ஓவியங்கள்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

72 பக்கங்கள் 

199 ரூபாய்


நோ சொல்வது ஒரு திறன் 

நோ சொல்வது ஒரு கலை 

நோ சொல்வது ன்னம்பிக்கை 

நோ என்பது சிறந்த பதில் 

நோ சொல்பவர் கெட்டவர் இல்லை

நோ சொல்லக் கற்றுக் கொள்வது அவசியம்

இதுதான் இந்த நூலின் சாராம்சம். இன்று குழந்தைகளிடம் மறுத்து பேசும் திறன் என்பதே இல்லாமல் போய்விட்டது. ஆசிரியர் சொன்னால் அப்படியே கேட்பது. பெற்றோர்கள் சொன்னால் அப்படியே கேட்பது. அவர்களை ஒரு பொம்மையைப் போல வளர்த்துக் கொண்டு வரும் சூழல் உள்ளது. அல்லது விட்டேத்தியாக வளரும் சூழல் உள்ளது.


அம்மா எடுத்து வந்த சுடிதார் வேண்டாம் என்றால் கூட திட்டி விடுவாரோ என்ற எண்ணத்தில் மகள் இருப்பார். ஆனால் அந்த நோ சொல்ல வேண்டியதை மாற்று மொழியில் கூறலாம். அம்மா, இந்த கலர் சுடிதார் என்னிடம் இருக்கிறது / அடுத்த முறை என்னையும் துணிக்கடைக்கு கூட்டிட்டு போங்க / என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம் அம்மா என்பது போன்று எல்லாம் சொன்னால் அம்மா தடுக்க முடியாது. அதை அணுகும் முறை வேறுபடும் என்று ஆலோசனை வழங்குகின்றனர் நூல் ஆசிரியர்கள். 


நோ சொல்லி பழகுவது எப்படி என்பதற்கு கதைகள் மூலம் விளக்குகிறார்கள்.


ஒருவன் ஒரு பெண்ணிற்கு தொடர்ந்து சாட் செய்கிறான். நல்லபடியாக போய்க்கொண்டிருந்த சாட் ஒரு குறிப்பிட்ட சூழலுக்குப் பின் திசை மாறிப் போகிறது. இதனை அந்தப் பெண் விரும்பவில்லை. பின் அவள் சாட் செய்வதை தொடர்கிறாள்.  இது சரியா தவறா? புதியதாக நம் வீட்டுக்கு அருகில் ஒரு குடி வருகிறார். கணவன் மனைவி இருக்கிறார்கள். ஒரு நாள் மனைவி ஊருக்கு செல்ல அவர் மட்டும் இருக்கிறார். அங்கு பக்கத்து வீட்டுப் பெண் செல்வது சரியா தவறா? இப்படிப்பட்ட விவாதங்கள் இந்த புத்தகத்தில் இருக்கின்றன. புதியவர் வந்தால் அந்த வீட்டிற்கு நாம் பெண் பிள்ளைகளை கவனத்துடன் அனுப்ப வேண்டும். புதியவர் வந்தால் என்று இல்லை பழையவர்களாக இருந்தாலும் நாம் கவனத்துடன் இருக்க வேண்டும்.


சரியான தொடுதல், தவறான தொடுதல் குறித்து பள்ளிகளில் பாடம் எடுக்கும் சூழல் உள்ளது. அந்த பாடம் குறித்த தகவலும் நூலில் உண்டு.


வீட்டில் அம்மாவோ அப்பாவோ மொபைல் போன் பயன்படுத்தும் பொழுது கண்டித்து வாங்கி விடுகிறார். திரும்பவும் மல்லுக்கட்டி அந்த மொபைல் போனை வாங்கி விடுவோம். அம்மா சொல்லும் நோ நியாயமானதா இல்லையா என்பதை விவாதிக்கச் சொல்லி ஒரு பக்கம் ஒதுக்குகிறார்கள். இன்று செல்போன் வாங்கித் தரவில்லை என்றால் மாணவர்கள் தவறான முடிவை எடுக்கிறார்கள். பைக் வாங்கி தரவில்லை என்றால் தவறான முடிவு எடுக்கிறார்கள். எது சரி எது தவறு இது இந்த வயதிற்கு தேவையா என்பதை புரிந்து கொள்ளும் மனப்பான்மை மாணவர்களுக்கு வருவதில்லை. இந்த வயதிற்கு ஏற்றதுதானா என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். வீட்டின் பொருளாதாரம் இதற்கெல்லாம் கட்டுபடியாகுமா? என்று மாணவர்கள் யோசிப்பதில்லை. நோ சொல்லிவிட்டால் தலைகீழாக குதிக்கிறார்கள். இதையெல்லாம் விவாதம் தொடர்பான பக்கங்கள் ஒதுக்கி மாணவர்களை பேச வைக்கிறார்கள்.


நோ சொன்னதால் என்னென்ன நன்மை விளைந்திருக்கிறது என்று விளக்குகிறார்கள் நூல் ஆசிரியர்கள். சித்தார்த்தன் நோ சொன்னதால் ஒரு போர் நிறுத்தப்பட்டது. ரோசா பார்க்ஸ் என்பவர் பேருந்தில் எழுந்து நிற்க மறுத்துவிட்டார். வெள்ளைக்காரர் வந்து நின்றால் எழுந்து நிற்க வேண்டும் என்ற ஒரு நடைமுறை. அதை மீற வேண்டும். தனக்கு சுதந்திரம் இருக்கிறது. நான் நடத்துனரிடம் பயணம் செய்வதற்கு காசு கொடுத்து இருக்கிறேன். நான் ஏன் எழுந்து நிற்க வேண்டும் என்ற ஒரு மறுப்பின் வெளிப்பாடு தான் நோ சொல்லுதல். 381 நாட்கள் நடந்த போராட்டத்தின் முடிவில் ரோசா பார்க்ஸ் சொன்ன ஒரு நோ"வால் நிறத்தை வைத்து பாகுபாடு பார்க்கும் சட்டத்தையே மாற்ற வைத்தது. காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கம் நடத்திய பொழுது வெள்ளைக்காரர்களுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு வரமாட்டோம் என வழக்கறிஞர்கள் நோ சொன்னார்கள். ஆங்கிலேயர்களின் துணியை உடுத்த மாட்டோம் என மக்கள் நோ சொன்னார்கள். கதர் ஆடையை மட்டுமே உடுத்த ஆரம்பித்தார்கள். ஆங்கில ஆட்சிக்கு எதிராக இந்தியா முழுக்க நோ சொன்னார்கள். ஒத்துழையாமை இயக்கத்திற்கு வெற்றி கிடைக்க முக்கிய காரணம் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக காந்தியடிகள் நோ சொல்லியதுதான். "பொம்பள புள்ளன்னா கல்யாணம் பண்ணனும், சமைக்கணும், குழந்தை பெத்துக்கணும், எதுக்கு படிப்பு?" என சுற்றி இருந்த எல்லாரும் சொன்ன போது சாவித்திரிபாய் பூலே அதை மறுத்து நோ சொன்னார். அவர் இந்தியாவில் பெண்களுக்கான பள்ளியை ஆரம்பித்தார். முதன்முதலாக தொடங்கிய அந்த பள்ளி 3 பள்ளிக்கூடங்களாக விரிவடைந்தது. இதற்கு காரணம் நோ சொன்னது தான்.


ஆனால் நாம் எத்தனை விஷயங்களில் நோ சொல்லி இருப்போம். அதுவும் துணிச்சலாக சொல்லி இருப்போம் என்பது கேள்விக்குறிதான். ஒரு திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது என்றால் அது குறித்த மேற்பார்வை செய்ய அதிகாரிகள் வருவார்கள். அந்த திட்டம் சரியில்லை என்ற மனப்பான்மையுடன் நாம் இருப்போம். ஆனால் அந்த பதிலை அவர்கள் விரும்ப மாட்டார்கள். இது தொடர்பாக பாசிட்டிவான பதிலை எதிர்பார்ப்பார்கள். ஆதலால் நெகட்டிவ் ஆக எதுவும் கூறிவிட வேண்டாம் என்று நாம் அறிவுறுத்தப்படுவோம். அதற்காக ஆமாம் சாமி போடும் கூட்டம் பல இடங்களில் உண்டு. ஆக இந்த நூல் மறுத்துப் பேசும் திறன் பற்றிய சிறார் நூல் மட்டுமல்ல. கொஞ்சம் நமக்கும் சேர்த்துத்தான்.


நோ சொல்லுங்க என்று மனம் சொல்லுகிறது காரணம் 199 ரூபாய். வெறும் 72 பக்கங்கள். ஆனாலும் வாங்கியாச்சு. படிச்சாச்சு. 


பள்ளியில் உயர் கல்வி படிக்கக்கூடிய குழந்தைகள் அனைவரும் இந்த நூலை படிக்கலாம். சிறுவர்களும் இந்த நூலை படிக்கலாம். விழிப்புணர்வைத் தரக்கூடிய நூல்.


வாசிக்க வேண்டிய நூல். 


பெ. விஜயராஜ் காந்தி

Tuesday, 1 July 2025

அடுக்கு மல்லிகை


 

அடுக்கு மல்லிகை... பாடல்

திரைப்படம் : தங்கமகன்

இசை: இளையராஜா


காமத்தை கொண்டாட்ட மன நிலையில் ஆராதிக்க கற்றுக் கொடுத்தவர் இளையராஜா என்பதை மெய்ப்பிக்க உள்ள பல பாடல்களில் அடுக்கு மல்லிகை பாடலும் ஒன்று. 


வில்லனின் இடத்தை நோட்டமிட வந்திருக்கும் ரஜினி மற்றும் சில்க் ஸ்மிதா இருவரும் பாடும் பாடல் காட்சி. இந்தப் பாடலின் தொடக்கத்தில் ரஜினி அறையில் படுத்து இருக்கிறார். அந்த அறைக்கு வரும் சில்க் கதவின் அருகில் நின்று ரஜினியைப் பார்த்து, இரு கவனித்துக் கொள்கிறேன் என்பதுபோல் தலையசைத்து கதவைப் பூட்டுகிறார். அந்த நேரம் சில்க்கை திரும்பிப்பார்க்கும் ரஜினி ஒரு கொண்டாட்ட மனநிலையில் கால்களை குதிப்பது போல பாவனை செய்கிறார். சில்க் கதவை அடைத்துக்கொண்டு வரும் அழகு அவ்வளவு அற்புதமாக இருக்கும். இந்த இடைவெளியை பாடல் துவக்கத்திற்கு அளித்திருக்கும் இளையராஜாவின் இசை அவ்வளவு லாவகமாக நிரப்பியிருக்கும். சில்க் வந்தவுடன் ரஜினியை கால்களில் இருந்து தொட்டு முகத்தில் முத்தமிட்டு ரஜினியை திகைக்க வைத்து அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது என்று பாடத் தொடங்குகிறார். அந்த குரல் மயக்குவதற்காக படைக்கப்பட்டதா என்ற சந்தேகம் நிச்சயம் எழும். உன்னைத் தொட்டால் போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும் என்ற அந்த குரல் உண்மையிலேயே சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் சுகம்தரும். சில்க்கிற்குள் புகுந்த ஜானகியின் குரல் இப்படித்தான் இருக்கும் என்றும் சொல்லலாம். தொடர்ந்து ரஜினிக்கு எஸ்பிபி பாடுகிறார். உச்சஸ்தாயியில் பாடத் தொடங்கி சில்க்கின் பார்வைக்கு மெல்ல இறங்குகிறது எஸ்பிபி குரல்.


இது காமத்தை தூண்டும் பாட்டா அல்லது ஒரு காதல் பாடலா அல்லது ரஜினியின் பாடலா அல்லது சில்க்கின் பாடலா அல்லது இளையராஜாவின் பாடலா என ஒரு பட்டிமன்றமே வைக்கலாம் அத்தனைக்கும் பொருந்தும் இசையும் குரலும்.


முதல் சரணத்தில் 

நீ வாடி செல்லக்குட்டி நான் தூக்கும் வெல்லக்கட்டி


கைகள் அள்ள... கண்கள் உன்னை... தேடுது


என்ற வரிகளும்


இரண்டாவது சரணத்தில்

ராசாத்தி முல்லைமொட்டு நான் தேடும் காதல்சிட்டு


கைகள் அள்ள... கண்கள் உன்னை... தேடுது

என்ற வரிகளும் எஸ்பிபி பஞ்ச்.


முதல் சரணத்தின் இறுதியில் ஜானகி அடுக்குமல்லிகை என தொடங்க எஸ்பிபி ஹா என ஹம் செய்ய இது ஆள் புடிக்குது என ஜானகி தொடங்க ஹாஹ்ஹா என எஸ்பிபி பாட ரெண்டு தோள் துடிக்குது என ஜானகி பாட எஸ்பிபி ம்ம்ம் எனத் தொடர பின் இருவரும் இணைந்து லாலால்லா என நீட்டித்து காமத்தின் வெள்ளோட்டத்திற்கான ஒரு சூழ்நிலையை இளையராஜா வைத்திருப்பார்.

இதே போன்று இரண்டாவது சரணத்தின் இறுதியில் எஸ்பிபி பாட ஜானகி கிறங்கும் (கிறக்கும்) குரலில் சிரிக்க என நீளும். எந்த இடத்திலும் காமத்தின் உச்சத்தைச் சிதைக்காத இசையும் வரிகளும் பாடலுக்கும் கதையின் சூழலுக்கும் ஆகப் பொருத்தம். விரசம் என்பதை மனதிற்குள் கொண்டு செல்லாமல் ராஜா, எஸ்பிபி, ஜானகி, ரஜினி, சில்க் என்ற ஆளுமைகளின் திறன்களை இப்பாடல் வழியாகவும் கண்டுணரலாம். கேட்டும் உணரலாம்.


பாடல்:


அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது


ரெண்டு தோள் துடிக்குது மனம் துடிதுடிக்குது


ஒன்ன தொட்டா போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும்


ஒன்ன தொட்டா போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும்


அட ஆளாகி நாளாச்சு... வந்தால் என்ன


நா வாரேன் புது பாய்போடு நாள்தோறும் இளநீரோடு


நா வாரேன் புது பாய்போடு நாள்தோறும் இளநீரோடு


கையோடு சேர்த்தணைச்சு கட்டில்வரை கண்ணடிச்சு


ஆத்தோடு போவதுபோல் ஆசையில நீச்சடிச்சு


நீ வாடி செல்லக்குட்டி நான் தூக்கும் வெல்லக்கட்டி


கைகள் அள்ள... கண்கள் உன்னை... தேடுது


மாம்பூவே இளம் பூங்காத்தே மார்போடு எனை தாலாட்டு


மாம்பூவே இளம் பூங்காத்தே மார்போடு எனை தாலாட்டு


தீராத ஆச வச்சே அங்கே இரு கண்ணிருக்கு


தில்லானா பாடிக்கிட்டு இங்கே ஒரு பெண்ணிருக்கு


ராசாத்தி முல்லமொட்டு நான் தேடும் காதல்சிட்டு


கைகள் அள்ள... கண்கள் உன்னை... தேடுது


அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது


ரெண்டு தோள் துடிக்குது மனம் துடிதுடிக்குது


ஒன்ன தொட்டா போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும்


ஒன்ன தொட்டா போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும்


அட ஆளாகி நாளாச்சு... வந்தால் என்ன


அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது


ரெண்டு தோள் துடிக்குது மனம் துடிதுடிக்குது


யாழ் தண்விகா

மீண்டும் ஒரு காதல் கதை



 ஒரு காதல் கதை

#நெடுங்கதை


மீரான் மைதீன்


புலம் பதிப்பகம்


பக்கங்கள் 56. விலை 80/=


 எழுத்தாளர் மீரான் மைதீன் அவர்கள் எழுதிய நூலை இப்போதுதான் முதன்முறையாக வாசிக்கிறேன். ஒரு கதை சொல்லி, இந்நெடுங்கதையில் சக பயணியின் கதையைக் கேட்கிறார். அதுவே ஒரு காதல் கதை.

  ரயில் சினேகத்தில் கதாசிரியருக்கு ஷீலா என்ற பெண் அறிமுகம் ஆகிறாள். கதைகள் எழுதும் நபர் என்பதாலும், உரையாடலின்போது பிடித்துப்போன மனிதர் என்பதாலும் 1980களில் தன்னுடைய வாழ்வில் நிகழ்ந்தவற்றைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார் ஷீலா. தன்னுடைய திருமணம் ஒரு காதல் திருமணம். அதுவும் சீர்திருத்தத் திருமணம். தன்னுடைய பெயர் வஷீலா என்றும் தன்னுடைய காதல் கணவரின் பெயர் மணிகண்டன் என்றும் கூறுகிறார் அப்பெண்மணி. காதல் இரு குடும்பத்திற்கிடையே என்னென்ன மனச் சிக்கல்களை உண்டாக்கியுள்ளது என்பதைத் தன்னுடைய உரையாடல் வாயிலான கேள்விகள் மூலம் ஷீலாவிடமிருந்து தெரிந்துகொள்கிறார். ஷீலாவின் அம்மா, அப்பா, தம்பி ஆகியோர் தற்போது என்ன ஆனார்கள்? அவர்களிடையே அப்பெண்ணிற்கு உறவு நீடிக்கிறதா? என்பன போன்ற கேள்விகள். ஷீலா தற்போது 60 வயதாகும் பெண்மணி. அவளுக்குக் கணவன் மணிகண்டன். ஒரு மகன். ஒரு மகள். இந்த ரயில் பயணத்தில் கூட அப்பெண்மணி தன்னுடைய பேரனைப் பார்க்கச் செல்கிறாள். கல்லூரி ஒன்றில் முதல்வராகப் பணி செய்தபின்னர் பணி ஓய்வு பெற்று இன்னும் ஈராண்டு கூட முடிவடையவில்லை. இசுலாம், இந்து இவர்களின் திருமண வாழ்வு இணக்கமாகச் செல்கிறதா இல்லையா என்பது உள்ளிட்ட அனைத்தும் கதாசிரியர் மீரான் மைதீன் மற்றும் ஷீலா ஆகிய இருவரின் உரையாடல் வழியாகவே அறிந்து கொள்ளலாம். தொய்வின்றிச் செல்கிறது கதை ஒரு தெளிந்த நீரோட்டம் போல. ஸ்பரிசத்தைத் தொட்டும் தொடாமல் செல்லும் தென்றல் போல. மனதை மயக்கும் பாடல் போல. 


அருமை. வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா