Friday, 25 July 2025

பாக்கெட்டில் உறங்கும் நதி

 




பாக்கெட்டில் உறங்கும் நதி

சிறுவை அமலன்


Amalan Bernatsha


ஹைக்கூ கவிதைகள்


அகநி வெளியீடு


ரூ 25/= பக்கங்கள் 48


சொற்களில் கூர்மை, நறுக்குத் தெரித்தாற்போல சொல்வது ஹைக்கூவிற்கு பெரும் அவசியம். இயற்கையோ, சமூகமோ, தத்துவமோ எதைக் கூறுவது என்பதில் சிறுவை அமலன் தனக்கு சமூகத்திற்கான பார்வை போதும் என்று நினைத்து அதனை தன்னுடைய கவிதைகளுக்கான பாடுபொருளாக எடுத்தாண்டு வென்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். அனல் தெரிக்கிறது பல கவிதைகளில்.


முதல் கவிதை...

வேப்பங்குச்சி

மின்னியது

அக்காவின் மூக்குத்தி...

ஒரு பொட்டுத் தங்கம் கூட இல்லாத வறுமை என்ன செய்யும்

வேப்பங்குச்சியை மூக்குத்தியாக கம்மலாக அணிந்துகொள்ளும். அதுவும் மூக்குத் துளை. காதுகளின் துளை மூடிவிடக்கூடாது, மீண்டும் அதற்காக செலவு செய்யும் சூழல் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் குச்சியைச் செருகிக் கொள்ளுதல் இங்கு கவிதையாகி உள்ளது.


வெந்தது 

மனிதத்தோல்

தோல் பதனிடும் தொழிற்சாலை

வயிறு என்ற ஒன்றில்லாவிட்டால் எதற்காக இந்த பாடு? தன்னை வருத்தி தனது உடலை உயிரை வருத்தி சம்பளம் ஒன்றைப் பெற்று தனக்காக தன் குடும்பத்திற்காக ஓய்வின்றி உழைப்பவன் இந்த வேலையும் இல்லாவிட்டால் என்ன செய்வான்... பசியால் மாண்டுபோவான். இங்கு வாழ்வதற்காக இறந்தபடியே வாழ்கிறான். அந்தச் சூழல் கவிதையாகியுள்ளது.


வேரோடு அழி

சாமின்னு குனிய வைத்தது 

சாமியானாலும்...

சாதியால், மதத்தால், வர்க்கத்தால் பிளவுபட்டுக்கிடக்கும் இந்த சமூகத்தில் இன்னும் ஆண்டான் அடிமை என்ற வறட்டுப் பித்தலாட்டத்தனம் புரையோடிப்போய்க் கிடக்கிறது. அதை நேரடியாகச் சாடுகிறது இக்கவிதை. மனிதர்களுக்கு மட்டுமல்ல அந்தக் கடவுளேயானாலும் வேரோடு அழி என்று முகத்தில் அறைந்தாற்போல சொல்கிறது கவிதை.


பறையடித்த தாத்தா

பறையடித்த அப்பா

திருப்பி அடிக்க நான்...

குலத்தொழிலில் திணிக்கும் காலம் மலையேறிப் போய்விட்டது. என் கல்வி, என் உணவு, என் வேலை எதைத் தேர்ந்தெடுப்பது என்பதெல்லாம் என் உரிமை. மீண்டும் பறை அடிக்க அல்ல, திருப்பி அடிக்க நான் என்பது சமூகத்திற்கு விடுக்கும் எச்சரிக்கை. 


கல்லானாலும் கணவன்

புல்லானாலும் புருஷன்

விந்து படிந்த நாப்கின்...

இந்த வரிகளைப் படித்தபோது பெரும் வலி சூழ்ந்தது. ஒரு பெண்ணின் வாழ்வில் வலிகளாகக் கடந்துபோகும் நாட்கள் மாதவிடாய்க்காலம். இயல்பாகவோ, சட்டென வந்ததும் செல்வதும் தெரியாமல் கடக்க அந்த நாட்கள் பெரும்பாலும் பெண்களுக்கு வாய்ப்பதில்லை. அந்த நாட்களிலும் வழமையான வேலைகள் பெண்களுக்கு இருக்கவே செய்யும். அப்போதும் அங்கு ஆண் என்பவன் ஆணாகவேதான் இருக்கிறான். அவனுக்கு மனைவி என்பவள் தனக்கு நேர்ந்துவிட்ட ஒரு அடிமையாகவே தெரிகிறாள். அதுபோன்ற திமிர்த்தனம் மனிதத்தன்மைக்கு எதிர்நிலையில் வைத்துப் பார்க்கப்படும் என்ற சராசரி அறிவற்றவனின் செயலேயாகும் என்பதை இக்கவிதையில் உணரலாம்.


இது போல தொகுப்பெங்கும் பல கவிதைகள். வாசியுங்கள். 

எல்லாம் புரட்சித்தீப்பந்தம் ஏந்திய கவிதைகள்


வாழ்த்துகள் தோழர்...

Tuesday, 22 July 2025

நசீபு


 

#நூல்_விமர்சனம்


தன்னைச் சுத்திகரிக்கும் சமூகக் கதைகள்


 சிறுகதைகள் என்பவை சிற்சில சம்பவங்களின் தொகுப்பு. அது வாசிப்பவனை கதைக்குள் ஒன்றச் செய்யவேண்டும். கதைக்குள் நிகழும் சம்பவங்கள் வாயிலாக ஏதேனும் ஒரு பாடத்தை உணர்த்தவேண்டும். அப்படிச் செய்யும் எந்தவொரு தொகுப்பும் வெற்றிக்கான முத்திரையைப் பதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. நசீபு சிறுகதைத் தொகுப்பு அப்படிபட்ட தொகுப்பு. தொகுப்பில் மொத்தம் ஏழு சிறுகதைகள். அனைத்தையும் தான் சார்ந்திருக்கும் இஸ்லாமியப் பின்புலத்திலிருந்து எழுதியிருக்கிறார். பழைமைவாதத்தின் முகத்திரையைக் கிழிக்கவும், பெண்களின் இருப்பு இஸ்லாமிய சமூகத்தில் எப்படி இருக்கிறது என்பதைக் காட்சிப்படுத்தவும், அங்கிருக்கும் ஆணாதிக்க சூழலை வெளிக்கொணரவும், அங்கும் வறுமையில் இருக்கும் குடும்பம் பசி போக்கத் திண்டாடும் சூழலையையும் தன்னுடைய தொகுப்பின் மூலமாக காட்சிப்படுத்தியுள்ளார் கதாசிரியர் மு.அராபத் உமர். 


ஷஜ்தா

பானுவின் அப்பா ஒப்புக்கொண்டபடி வரதட்சணைப் பணத்தைக் கொடுக்காததால் அவள் அனுபவிக்கும் இன்னல் எங்குவரைக்கும் போகிறது என்பதை கதை சொல்கிறது. இப்படிக் கதைகள் அனைத்துச் சமூகத்திலும் இருக்கிறது. நஜீம் கணவனாக இருந்தாலும் வீட்டில் தன்னுடைய அம்மா, மற்றும் அக்காவின் சொல் கேட்டு நடப்பவனாக இருக்கிறான். தனக்கு நல்லது நடந்தால் அக்காவால் நடப்பதாகவும் கெட்டது நடந்தால் மாமனார் வீட்டால் நடப்பதாகவும் எண்ணுகிறான். அதனாலேயே மனைவி என்றும் பாராமல் மிகவும் கீழாக நடத்துகிறான். வீட்டில் பானுவின் கொழுந்தன் பானுவிற்காகப் பேசினாலும் அவனுடைய பேச்சு எடுபடவில்லை. தன்னுடைய இரு பெண் குழந்தைகளை வளர்க்க நஜீமின் துணை அவசியம் என்பதால் மாமனார் வீட்டை எதிர்த்து தன்னுடைய தந்தையின் இறப்பிற்குக் கூடச் செல்லாமல் மனதால் புழுங்கும் பாத்திரம் பானுவிற்கு. வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பானுவின் வலிகள் கடத்தப்படுவது அவளின் பாத்திரப் படைப்பை சிறப்பாக்குகிறது. பானுவின் அம்மா, பானு திருமணம் முடித்த ஆரம்ப காலத்தில் உனக்கு எதுவும் மனக்குறைகள் இருந்தால் அதனை அல்லாவிடம் தொழு செய்துகொள். அவர் தீர்த்து வைப்பார் என்கிறார். அதையே கடைசி வரை தொடர்கிறார் பானு. இதன் மூலம் ஒரு பெண் என்பவள் தனக்குத் தீங்கு செய்பவர்களை எதிர்த்து நிற்க, கேள்விக்கு உள்ளாக்க வைக்கப்படாமல் இருப்பதற்கு கடவுள் என்பதையும், அவள் ஒரு பெண் என்பதையும் நினைவுபடுத்தும் பல விஷயங்கள் தொடர்ந்து பெண்களுக்கு மட்டும் கற்பித்துக்கொண்டே வரப்படுவதைச் சுட்டுகிறது. வரதட்சணை என்பதை தன்னுடைய அண்ணனின் மகள் என்றாலும் கேட்கும் காலம் என்பதை மாமியார் கதாபாத்திரத்தின் மூலமாகக் காட்டுகிறார். இக்கொடுமை இஸ்லாமிய சமூகத்தில் மட்டுமல்ல பல சமூகத்திலும் இருக்கிறது. இதனை உணரச் செய்யும் வேலையைக் கதை செய்கிறது. 


கியாமத்

பதினைந்து வயதே ஆன ஆயிஷா என்ற பெண்ணிற்கும் முப்பத்து இரண்டு வயது ஆணுக்கும் திருமணம் முடிகிறது. இவர்களுக்கு ரேஷ்மா என்ற பன்னிரண்டு வயது பெண் குழந்தை. திருமணம் முடிந்த காலத்திலிருந்தே ஆயிஷா மேல் சந்தேகம் கணவனுக்கு. குடும்பம் அவளை எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே அனுப்புவதில்லை. அவளின் அழகும், தன்னை விட மிக இளையவள் என்பதும் கணவனுக்கு அவள் மீது சந்தேகத்தை வரவழைக்கிறது. அது தன் மேல் உள்ள நம்பிக்கையின்மை. தன் அன்பின் மேல் வரவேண்டிய நம்பிக்கையின்மை. பழமையில் ஊறிப்போன குடும்பம் என்பதால் வயல் வேலைக்கு வரும் நபர்களுக்கு உணவளித்தல் கூட சந்தேகத்தைக் கிளறுகிறது. இந்த சமயத்தில் வீட்டின் பக்கமாக வரும் பாத்திமா என்ற பெண்ணோடு நட்பு. அந்த நட்பில் அவ்வளவு ஆத்மார்த்தம். கொஞ்சம் கொஞ்சமாக தன்னைப் பற்றி, தன்னுடைய வலியைப் பற்றி ஆயிஷா பாத்திமாவிடம் பகிர்கிறாள். வீட்டில் படுத்தும்பாட்டினால் தான் இறந்துகூட போய்விடுவேன் என்று ஆயிஷா கூறுகிறாள். ஆனால் பாத்திமாவின் பேச்சைக் கேட்டபின் அப்படியெல்லாம் பண்ணமாட்டேன். என் பிள்ளையை காலேஜ் வரைக்குமாவது படிக்க வச்சுட்டு ஒருத்தன் கையில் பிடிச்சுக் கொடுக்கும் வரை சாகமாட்டேங்க்கா என்று நம்பிக்கையுடன் செல்பவள் இறந்துவிட்டாள் என்பது எவ்வளவு துயரம். இறப்பின் பின்னர் மாமியார், கணவன், நாத்தனார், உறவுகள் என ஒவ்வொருவர் நடவடிக்கையும் சந்தேகம் அளிப்பதாக இருக்கிறது. ஆனால் இது ஆணாதிக்க சமூகம். இங்கு பெண்களின் பேச்சு எடுபடாது. ஆனால் உண்மையாக இரக்கம், அன்பு, கருணையால் நிரம்பிய ஒரு பெண் எப்படி இறக்கலாம்? அவளிடம் வலி இருந்தது. ஆனால் கோழைத்தனம் இல்லை. அவளை இப்படி யார் செய்திருப்பார்கள்? யார் யார் கொலையாளிகள்? அவள் என்ன தவறிழைத்தாள்? அவளைக் கொலை செய்துவிட்டு எப்படி நீங்கள் நல்லவர்களாகலாம்? என்ற கேள்வியை பாத்திமா, சையதலி மூலமாக எடுத்தாண்டுள்ள விதம் அருமையாக இருக்கிறது. தன்னைப்போல தன்னுடைய மகளும் இருந்துவிடக்கூடாது என்ற அக்கறையில் மகளை கல்லூரிப் படிப்பை முடித்து வைத்த பின்தான் திருமணம் செய்துவைப்பேன் என்ற ஆயிசாவின் எண்ணம் கல்வியின் முக்கியத்துவத்தைக் காட்டுவதாகவும் இள வயது திருமணத்திற்குள் அவளைத் தள்ளிவிட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் காட்சிப்படுத்துவதாகப் பார்க்கலாம். கதையின் இறுதிப் பத்தியில் சொன்னவாறு யாராச்சும் காப்பாத்துங்க என்ற துயர் நிறைந்த வார்த்தைகளுக்கு முன்னால், முன்கூட்டியே அவளின் வலி அறிந்தும் தூர நின்று கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் குற்றவாளிகளாக கைகட்டியே நிற்கிறோம்.


வெம்மை

ஃபஹீமாவின் மாமனார் இறந்துவிடுகிறார். வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற கணவன் திரும்பும் வரை ஃபஹீமாதான் பார்த்துக்கொள்ளவேண்டும். அவள் சித்த மருத்துவம் படித்தவள். அவளுக்கு மாமனார் இறக்கும் வேளை வந்துவிட்டது. நடக்கும் ஒருசில சம்பவங்களும் அதை உணர்த்தியது. எனவே, கூட இருங்க என்று கணவனிடம் கூறியும் கட்டாயம் போகவேண்டிய சூழல் என்பதால் சென்றுவிடுகிறான். இறப்பு செய்து கூறியபோதும் வருவதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லுகிறான். ஃபஹீமாவின் வற்புறுத்தல் காரணமாக வருகிறான். வந்தவன் அத்தாவைப் பார்த்தபோதும், அம்மாவைப் பார்த்தபோதும் அழவில்லை. ஃபஹீமாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அடக்கம் செய்துவிட்டு வந்த இரவில் அப்பா இறந்ததற்கு உங்களுக்கு கண்ணீர் வரவில்லையா, ஏன்? என்ற கேள்விக்கு பணம் பணம் என்று ஓடி ஓடி அப்பாவைக்கூட கவனிக்கவில்லை. அவர் கூட நான் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கடைசியாக அவர் உயிரோடு இருக்கும்போது கூட பார்க்கவில்லை என்று கூறி கண்ணீர் விடுகிறான். வாழ்க்கைக்காக பணம் என்று ஓடி உறவுகளை மறந்துவிடுகிறோம் என்பதை கதையை வாசிக்கும்போது உணரமுடிகிறது. கணவன் இறந்தாலும் அருகே சென்று அமர்ந்து பார்த்து அழுவதற்குக் கூட அருகே ஆண்கள் யாரும் இல்லை, அவர்கள் இனி காலையில்தான் வருவார்கள். இப்போது சென்று பார்க்கலாம் அழலாம் என்ற நிலையில் மாமியார் பாத்திரம் மூலமாக குறிப்பால் உணர்த்துகிறார் கதாசிரியர். எல்லா உணர்வுகளையும் இப்படிக் கட்டுப்படுத்தி வைத்திருப்பது எவ்வளவு வலி? இந்த நேரம் சிரிப்பதற்கு, இந்த நேரம் அழுவதற்கு? என்று பிரித்து வைப்பது எவ்வளவு பெரிய வன்மம் என்பதை மாமியாரின் கதாபாத்திரம் மூலமாக உணர முடிகிறது. ஃபஹீமாவால் குடும்பத்தை, அப்பாவை, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள இயலும் என்ற கணவனின் எண்ணப்படி அவள் சிறப்புற வழிநடத்துகிறாள். கணவனும் அவளின் வார்த்தைகளை காதுகொடுத்துக் கேட்கிறான். அதற்கு முறையான பதில் சொல்கிறான். ஃபஹீமாவின் பாத்திரப் படைப்பு சிறப்பாக உள்ளது. இயல்பான ஒரு குடும்ப வாழ்வைக் கண்முன்னே நிறுத்தியதும் பணம் மட்டும் குறிக்கோளாகக் கொண்டு இயங்கியதால் தன்னுடைய தந்தையைக்கூட இறுதியில் பார்க்க இயலவில்லை என்று தவறை உணரும் மகனின் இயல்புத் தன்மையும் கதையில் சிறப்பாக அமைந்துள்ளது.


இத்தா

அரசுக் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்க்கும் காஜா திடீரென்று இறந்து விடுகிறார். அவருடைய மனைவி ரோஜாவுக்கு அணிவிக்கும் வெள்ளை நிறப் புடவையைக் கண்டு பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகள் ஜெனி கதறுகிறாள். ஆனால் அங்கு நிலவும் சூழல் அதனை மாற்றுவதாக இல்லை. பெரிய மாமியார் பழைமையைச் சுமந்து நிற்கும் நபர். அவர் பிள்ளைகளுக்கு இதையெல்லாம் சொல்லி வளர்க்கமாட்டாயா என்று திட்டுகிறார். அடக்கம் எல்லாம் முடிந்த பின்னர் தன்னுடைய அம்மா ரோஜா இருக்கும் அறைக்குச் சென்று அவள் கேட்கும் கேள்வி, கணவன் இறந்தால் மனைவி வெள்ளை உடை உடுத்தினால்தான் கணவனுக்கு சொர்க்கத்தில் வெளிச்சம் கிடைக்கும் என்னும்போது மனைவி இறந்துவிட்டால் கணவன் வாழ்நாள் முழுக்க வெள்ளை உடை அணிந்தால் தானே மனைவிக்கு சொர்க்கத்தில் வெளிச்சம் கிடைக்கும். அதை ஏன் கணவன்மார்கள் பின்பற்றுவதில்லை என்ற கேள்வியை ஜெனி கேட்கிறாள். பழைமைவாதம் பதில் தெரியாமல் விழிக்கும் இடம் இது. ஹெச்.ஜி.ரசூல் ஊர்விலக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தோடு ஒப்புமைப்படுத்திப் பார்க்கவேண்டிய வினா இது. கதை வாயிலாக இளைய தலைமுறையின் இதுபோன்ற கேள்விகள் வெளிப்படல் கதாசிரியர் கையாண்டுள்ள நல்ல உத்தியும் கூட.  


நசீபு

பெண்களின்மீது காலம்காலமாக திணிக்கப்படும் வன்முறை என்பது அவர்கள் கேள்வி எதையும் கேட்டுவிடக்கூடாது. அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதுதான். சுபைதா என்பவள் காரணமே இல்லாமல் கணவன் இறப்பிற்கு முன்னர் மன்னிப்பு கேட்க நிர்பந்திக்கப்படுகிறாள். அவளும் சம்மதித்து தான் எதுவும் தவறு செய்திருந்தால் மன்னித்துவிடுங்கள் என்று மன்னிப்பு கோருகிறாள். இறக்கும் தருவாயில் கூட அன்பாக எதையும் பேசாமல் உதாசீனப் படுத்தப்படுகிறாள். இது பேரன் வரை நீள்கிறது. அவளுக்குள் ஆயிரம் வருத்தங்கள். ஆனால் அதைக் கேட்க யாரும் இல்லை. பெண்கள் தமக்குள் கூடி தமக்குள் வருத்தங்கள் பகிர்ந்து, தமக்குள் ஆறுதல் வார்த்தைகள் பெற்று வாழ்க்கையை ஓட்டிக்கொள்ளும்படியான கடமைக்கான வாழ்க்கையை மட்டுமே வாழ்ந்து தீர்க்கிறார்கள். அவர்கள் ஆண்கள் சொல்வதைக் கேட்டுச் செய்யும் பணியாளர்களாகவே உள்ளனர். அவர்களின் ஆசாபாசங்கள் கேட்க யாருமில்லை. சொன்னால் அதற்கும் ஆயிரம் தடைக்கற்கள். வேளாவேளைக்குச் சோறு, வருசத்துக்கு இரண்டு உடை என்பதுதான் அவர்களின் வாழ்க்கை என்று ஆண்கள் நிர்ணயம் செய்துவிடுகிறார்கள். அந்த உடையும் ஆண்களின் விருப்பப்படிதான். ஒரு நோன்பிற்கு பாவாடை, தாவணி கேட்கும் விருப்பத்தைக்கூட நிறைவேற்றித்தராமல் வேறு உடையை எடுத்துத் தருவதோடு அதனை உடுத்தாதற்காக அம்மாவைக் கோபத்தில் அறைந்து பயமுறுத்தும் அப்பா என்பது மகளுக்கு சாபம்தான். சுபைதாவின் காலம் முதல் பேரனின் கேள்வி வரை பல தலைமுறைகளாக பெண்களின் எதிர்பார்ப்பையும் அதற்கு கிடைத்த எதிர்வினையையும் கடந்து வாழும் பெண்கள் பரிதாபத்திற்கு உரியவர்களாக இருக்கிறார்கள். அது மீறப்படும் நாள் பயங்கரகரமானதாக இருக்கும் என்பதை கதையின் இறுதியில் வரும் சுபைதா வெத்தலை இடிக்கும் சத்தம் வழக்கத்தி விட வலிமையானதாக இருந்தது என்ற வார்த்தையால் கதாசிரியர் உணர்த்தியுள்ள விதம் மிகச் சிறப்பு.


பரக்கத்

கணவன் இல்லாத நிலையில் தன்னுடைய மகன் நிஜாமை வளர்க்கிறாள் ஜன்னத். லாரி ஓட்டுனரான அவன் வரும்பொழுதே பரக்கத் பெண்ணை அழைத்து வருகிறான். வேறு மதமாக இருப்பாளோ என்று எண்ணிக் கோபப்பட்ட ஜன்னத் தன்னுடைய மதம் என்பதால் சமாதானமாகி திருமணம் செய்து வைக்கிறாள். அவர்களின் திருமண வாழ்க்கையின் பயனாக ஒரு மகன் பிறக்கிறான். மகனின் பிறந்தநாளுக்கு வருவதாகக் கூறிச் சென்ற நிஜாம் இறந்துவிடுகிறான். ஒரு மாதத்தில் கையில் வைத்திருந்த பணம் யாவும் தீர்ந்துவிட்டது. துக்ககாலம் முடியும் முன்னர் இட்லிக்கடை எப்படிப் போடமுடியும் என்ற பரக்கத்தின் கேள்விக்கு ஜன்னத் அளிக்கும் பதில் அல்லாவிற்கு எல்லாம் தெரியும். நாம் நம் வாழ்க்கைக்காக இந்த வேலையைத் தொடங்குகிறோம். அதனால் அல்லா நம்மைத் தண்டிக்கமாட்டார் என்று பதில் கூறுகிறார். தெருவும் பரக்கத் கடை இட்லி ருசியில் துக்ககாலம் குறித்து எதுவும் பேசவில்லை என்பதாகக் கதை முடிகிறது. கதையில் முடிவெடுக்கும் நிலையில் பெண்கள் இருக்கின்றனர். அவர்களின் வாழ்வை அவர்களே தீர்மானிக்கின்றனர். அவர்களுக்குள் பிணக்கு இல்லை. ஆதலால் வெற்றி அவர்கள் கைவசம் வருகிறது. பெண்களால் சுயமாக உழைத்து ஆண் துணையில்லாமல் வாழ இயலும் என்னும் உத்வேகத்தைக் கொடுக்கும் கதை இது. 


ஈமான்

வறிய நிலையில் உள்ள இஸ்லாமியக் குடும்பம் கொரோனோ காலத்தில் வேலைக்கு எப்படி அல்லாடுகிறது என்பதையும் பசியையும், நோன்பையும் ஒரே காலத்தில் எப்படிச் சமாளித்தார்கள் என்று கதை பேசுகிறது. தொகுப்பை முன்வைத்துப் பேசுவது என்றால் பசி உள்ள இடத்தில் குடும்பத்தில் இணக்கம் என்பது இருக்கிறது. அங்கு பழமைவாதம் என்பது இல்லாமல் இருக்கிறது. கதையில் வரும் பக்கத்துவீட்டு அக்கா, கடைக்கார ராணி அக்கா போன்றோர் மதத்திற்கு அப்பாற்பட்டு உதவும் கதாபாத்திரங்கள். சிங்கிள் சோர்ஸ் என்ற பதத்தின்மூலம் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தின்மீது குற்றம் வாசித்த அரசியல், அவர்களின் வறுமை குறித்து எந்த இடத்திலாவது பேசியிருக்கிறதா என்றால் இல்லை. அதனை இந்தக்கதை உணர்த்துகிறது. 


 ஆம் என்பதை ஆம் என்பதற்கும் இல்லை என்பதை இல்லை என்று சொல்வதற்கும் கூட இங்கு எத்தனையோ தடைகள். மேல்பூச்சுடன் சொல்லி புதியதொன்றைக் கட்டமைக்க விரும்பி சொல்ல வந்ததன் சாயல் எதுவுமற்றுக் கடந்துபோய்விடும் அபத்தம் நிறைந்த உலகம் இது. ஆனால் நசீபு சிறுகதைத் தொகுப்பு இதையெல்லாம் உடைத்து எறிந்து நம்மை தனக்குள் இழுத்துக் கொள்கிறது. இக்கதைகள் சொல்லும் மனிதர்கள் மேல் நாம் கொள்ளும் வாஞ்சையையும் வெறுப்பையும் வைத்து எவ்வளவு தூரம் அவர்களுள் நாமும் ஒருவராக மாறிப்போகிறோம் என்பதை ஒவ்வொரு கதையையும் வாசிக்கும்போது உணர முடிகிறது. மொத்தம் ஏழு கதைகள். இஸ்லாம் மக்கள் உபயோகிக்கும் சொற்கள் தான் தலைப்பு. வெம்மை ஒன்றைத் தவிர்த்து. இன்னொன்று, கடைசிக் கதை ஒன்றைத் தவிர்த்து பிற கதைகளில் இறப்பும் அதனைச் சுற்றிய களமும் தான் கதையின் மையமாக இருக்கின்றன. பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். முதல் சிறுகதைத் தொகுப்பு என்று தோன்றாதவாறு எழுத்து அமைந்திருப்பது சிறப்பு.


நூல் பற்றி:

நசீபு

மு.அராபத் உமர்

டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்

பக்கம் எண்: 104

விலை: ரூ 120/=


யாழ் தண்விகா 


❣️

Monday, 21 July 2025

அன்பளிப்பு

 


அன்பளிப்பு

கு. அழகிரிசாமி

சீர்வாசகர் வட்டம்

விலை ரூபாய் 10

பக்கம் 32


சாகித்திய அகாடமி பால புஷ்கார் விருது பெற்ற விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் இனிய எளிய சுருக்கமான அணிந்துரையுடன் நூல் ஆரம்பமாகிறது. குழந்தைகளை யார் என்ன என்ற பேதம் பார்த்தாலே அது இக்கதையில் வருவதைப் போல நாசுக்காக சொல்வதே நச்சென்று அறைவதுபோல் இருக்கும்.


அழகிரிசாமி, சாரங்கன், பிருந்தா, சித்ரா, சுந்தரராஜன், கீதா, தேவகி எல்லோரும் நண்பர்கள் என்று தான் கூற வேண்டி இருக்கிறது. இதில் அழகிரிசாமி ஒரு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர். மற்ற அனைவரும் குழந்தைகள். பள்ளியில் படிப்பவர்கள். சுந்தரராஜனும் சித்ராவும் வயதில் சற்று மூத்தவர்கள். சனிக்கிழமை இரவில் கொஞ்சம் கூடுதல் நேரம் தூங்க கூடியவர் அழகிரிசாமி. ஏனென்றால் ஞாயிற்றுக்கிழமையன்று சற்று கூடுதலாக ஓய்வு எடுத்துக் கொள்ளும் மனநிலை அவருக்கு. அப்படித்தான் சனிக்கிழமை இரண்டு மணியைப் போல தூங்குவதற்குச் செல்கிறார். எப்பொழுது படுத்தாலும் ஒரு அரை மணி நேரம் கூடுதலாக தூக்கம் வருவதற்கு ஆகிவிடுகிறது. அப்படிப்பட்டவர் காலையில் ஏழ தாமதமாய் விடுகிறது. அவரை மேலே சொன்ன வாண்டுகள் எழுப்பத் தொடங்கி விடுகிறார்கள் என்பதில் தான் கதை ஆரம்பமாகிறது. மேலே சொன்னவர்களில் சாரங்கன் கொஞ்சம் அமைதியான சுபாவம். எங்களுக்கு புத்தகம் வாங்கி வரவில்லையா என்று குழந்தைகள் அவரை தொந்தரவு செய்து எழுப்பி கேட்கின்றனர். இவர் வாங்கவில்லை என்று கூற வீட்டிலிருந்து அவரது புத்தகங்களை எல்லாம் கீழே தள்ளி தேடுகின்றார்கள். பின்னர் இவரே புத்தகங்களை எடுத்து கொடுக்கிறார். சித்ராவுக்கும் சுந்தரராஜனுக்கும் என் பிரியமுள்ள சித்ராவுக்கு அன்பளிப்பு, என் பிரியம் உள்ள சுந்தரராஜனுக்கு அன்பளிப்பு என்று எழுதி என்று கையெழுத்துட்டு கொடுக்கிறார். பிருந்தாவும் தேவகியும் எனக்கு என்று கேட்க சித்ராவிடமும் சுந்தரிடமும் வாங்கி படித்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். அவர்களும் மறுப்பேதும் சொல்லாமல் ஏற்றுக் கொள்கின்றனர். 


அவ்வப்போது வந்து வீட்டில் விளையாடி பேசி மகிழ்ந்து ஆடிப்பாடி இருந்த இந்த குழந்தைகளில் பிருந்தா மட்டும் வரவில்லை. பிருந்தாவிற்கு என்ன ஆயிற்று என்று கேட்க அவளுக்கு காய்ச்சல் என்று மட்டும் பதில் வருகிறது. ஒரு நாள் இரவு எட்டு மணி போல வெளியில் அமர்ந்திருக்கிறார் அழகிரிசாமி. பிருந்தா வீட்டு வேலைக்காரனிடம் பிருந்தாவிற்கு என்ன ஆயிற்று என்று கேட்க, அவளுக்கு காய்ச்சல். ஒன்றும் முடியவில்லை. ஒவ்வொரு நாளாக அவள் இளைத்துக் கொண்டே செல்கிறாள் என்று கூற அழகிரிசாமி அச்சிறுமியைப் பார்த்து வர மறுநாள் ஒத்திப் போட்டாலும், மனசு கேட்காமல் உடனே கிளம்புகிறார். போய் பார்க்க அவள் மாமா மாமா என்று அன்பை கொட்டுகிறாள். அவள் அவரை விடாமல் எங்கே இருங்கள் மாமா என்று கூறும்போது மறுநாள் காலை வருகிறேன் என்று கூறிவிட்டு திரும்புகிறார். மறுநாள் காலையும் பிருந்தாவை வந்து பார்க்கிறார். சற்று நேரம் அளவளாவி விட்டுத் திரும்புகிறார். இதை பார்த்துக் கொண்டிருந்த சாரங்கன் வாங்க மாமா வாங்க மாமா என்று வீட்டுக்கு அழைக்கிறான். இவர் வரும் ஞாயிற்றுக்கிழமை வருகிறேன் என்று கூறிவிட்டு சென்று விடுகிறார். பிறகு பிருந்தாவிற்கு ஒரு கட்டத்தில் குணமாகி விடுகிறது. இவர் வந்து சென்றதால் தான் அந்த காய்ச்சல் குணமானது என்று கூறக் கேட்கிறார். அதன் பின் சாரங்கன், பிருந்தா உட்பட அனைத்து வாண்டுகளும் அழகிரிசாமி வீட்டிற்கு வந்து செல்கின்றனர். சாரங்கன், வால்ட் விட்மன் எழுதிய ஒரு நூலை அழகிரிசாமியிடம் கேட்கிறான். நான் உனக்குச் சொல்லி இருக்கிறேன் அல்லவா இது பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது நீ எடுத்து படித்துக் கொள். அப்பொழுது தான் உனக்கு புரியும் என்று கூற இவன் அழுது கொண்டே தன்னுடைய வீட்டிற்குச் சென்று விடுகிறான். மறுநாள் சாரங்கன், அழகிரிசாமியை தன்னுடைய வீட்டிற்கு அழைக்கிறான். நீங்கள் ஞாயிற்றுக்கிழமை வருகிறேன் என்று சொன்னீர்களே வாருங்கள் என்று கூறுகிறான். இவருக்கு பிருந்தா அவர்கள் வீட்டிலும், தெரியாத அப்பா தெரியாத அம்மா என்ற சூழ்நிலையிலும் வழியில்லாமல் அந்த குழந்தைக்கு காய்ச்சல் என்பதால் வீட்டிற்கு சென்று பார்த்தார். இப்பொழுது இவன் வீட்டிற்கு என்ன காரணம் சொல்லி செல்வது என்று எண்ணி மறுக்கிறார். சாரங்கன் வீட்டிலும் அவனுடைய அம்மா அப்பா தெரியாதவர்கள் என்ற நிலையில் எப்படி வீட்டிற்கு செல்வது என்று எண்ணி மறுக்கிறார். அவன் அழுது கொண்டே இருக்கிறான். சரி நான் வருகிறேன் என்று கூறி சாரங்கனின் வீட்டிற்கு செல்கிறார். சாரங்கன் அங்கு இவருக்கு உப்புமாவும் காபியும் கொண்டு வந்து தருகிறான். இவருக்கு இதை என்ன சொல்வது என்று தெரியாமல் மருந்து போல நினைத்து சாப்பிட்டு விடுகிறார். வீட்டில் அவ்வளவாக வசதி இல்லை என்பது புரிகிறது. அவனுடைய அப்பா இவரை வீட்டில் பார்க்கிறார். வாருங்கள் என்று கூறிவிட்டு அவரும் சென்று விடுகிறார். ஒரு பவுண்டன் பேனா ஒன்றை எடுத்து அழகிரிசாமியிடம் கொடுத்து சாரங்கன் என்ன செய்கிறான் என்பதுதான் கதை.


கதையின் ஆரம்பத்தில் "இரவில் வெகு நேரம் கண்விழித்தால் உடம்புக்கு கெடுதல் என்று எங்கள் பாடப் புத்தகத்தில் போட்டிருக்கிறது மாமா" என்று சாரங்கன் கூறுவதை இந்த இடத்தில் யோசிக்க வேண்டியிருக்கிறது. அதிகம் பேசாத சிறுவன் படிப்பில் சிறப்பாகவும் இருப்பான் என்பதை இவ்விடத்தில் கவனிக்க வேண்டியிருக்கிறது. தனக்கு அன்பளிப்பு கிடைக்காத இடத்தில் வேண்டாம் என்று ஒதுங்கி கொள்வார்கள் என்று நாம் நினைப்போம். ஆனால் அவர்கள் என்ன விதமாக யோசிப்பார்கள் என்பதையும் நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது. பிருந்தா தன்னுடைய உடல் நலன் தேறியதற்கு காரணம் அழகிரிசாமியின் அன்பு என்பதையும் இந்த இடத்தில் நாம் குறிப்பிட்டாக வேண்டும்.


நூலில் இருந்து,

"உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்வதும், அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டு உணர்ச்சியும், ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போல பேசி, குழந்தையைப் போல ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டு பொம்மையாகக் கருதி அதற்குத் தக்கவாறு நடந்து கொள்ளுகிறார்கள். ஆனால் அந்த சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை. அவர்களுடைய அன்பில் அந்த விளையாட்டு உணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள். இந்த உண்மை எனக்கு என்றோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனதில் தைத்தது. அன்று முதல் நான் அவர்களைக் குழந்தைகளாக நடத்தவில்லை. நண்பர்களாக நேசித்தேன். உற்ற துணைவர்களாக மதித்தேன். உள்ளன்பு என்ற அந்தஸ்தில் அவர்களும் நானும் சம உயிர்களாக மாறினோம்".


வாசிக்க வேண்டிய கதை.

ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக்

 


ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக்...

ப.நடராஜன் பாரதிதாஸ்

ஆதி பதிப்பகம்

பக்கங்கள் 96

விலை: ரூ 100


பேரக் கேட்டவுடனே சும்மா அதிருதில்ல என்பது போல் தொகுப்பின் தலைப்பே ஒரு கதாநாயகத் தன்மை அளித்துவிடுகிறது. கவிஞருக்கு வாழ்த்துகள்.

கவிஞர் EMS கலைவாணன் எழுதிய ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் தொகுப்பிற்குப் பின்னர் நாவிதர்களின் வாழ்க்கைப்பாட்டைக் கூறும் மற்றுமொரு கவிதைத் தொகுப்பு. சிறப்பாக அமைந்திருக்கிறது. இப்போதெல்லாம் ஒவ்வொரு கவிஞரும், ஒவ்வொரு கவிதையிலும் பூடகமாக சில விஷயங்களை உள்ளே வைத்து இருப்பார்கள் என நினைத்து அதை வாசித்து பொருளைப் புரிந்துகொள்ளும் முன்னர் தாவு தீர்ந்துவிடும் நவீன காலச் சூழலில் இதுதான் கவிதை. இதுதான் அது வெளிப்படுத்தும் கருத்து என்பதை வெட்டு ஒன்னு துண்டு இரண்டாக தொகுப்பில் வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர்.


பொதுவாக தொகுப்பை விமர்சனம் செய்யவோ மதிப்புரை செய்யவோ தொகுப்பிலிருந்து ஓரிரு கவிதைகளை மேற்கோள் காட்டுவது வழக்கம். இத்தொகுப்பைப் பொறுத்தவரை பெரும்பான்மைக் கவிதைகள் மேற்கோளாக எடுத்துக் கூறப்பட வேண்டியதாக அமைந்திருப்பது சிறப்பு. ஊரின் வரலாற்றைக் கூறி வளர்த்த பாட்டியிடம் நாவிதர்களுக்கான வரலாறை அறிய நினைக்கும்போது செத்துப் போனதால் அந்தப் பணியை தான் மேற்கொண்டிருப்பதாகக் கூறி தன்னுடைய முதல் கவிதையைத் தொடங்குகிறார். மனிதனை மனிதன் எப்போது மதிக்கவில்லையோ அப்போதே இங்கு பிளவுகளும் உண்டாகிவிட்டது. அதற்கு இனக்குழு, சாதி, மதம், பொருளாதாரம் எனப் பல காரணங்கள் இருக்கிறது. இருக்கிற எல்லாச் சாதியிலும் ஒவ்வொரு பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நாடகத்தில் துரியோதனன் பாத்திரத்தை ஏற்று நடிப்பவர் 

“அண்டம் நடுநடுங்க ஆகாசம் கிடுகிடுங்க

கஜபலம் புஜபலம் பொருந்திய 

என்னைப் பார்க்கின்ற தருணத்திலே

என் நாமதேயம் என்னவென்று தெரியுமாடா

அடேய்! காவலா” என்கிறார். 

அதற்கு கட்டியக்காரன் வேடம் தரித்த உள்ளூர் கோபால்,

“ஏன் தெரியாது

ஊடு ஊதா போயி செரச்சி

ஊருசோறு எடுத்துத் திங்கற

எங்க ஊரு அம்பட்டன்னு 

நல்லாவே தெரியுமுங்க” என்றவுடன் 

கூட்டமே கொள்ளென்று சிரித்தது.

“அன்றிலிருந்து வேசம் கட்டுவதே இல்லை அய்யா” என்று கவிதையை முடிக்கிறார் கவிஞர். சாதியின் எகத்தாளத்தை இவ்வளவு நேர்மையாகப் பதிவு செய்வது அரிது. ஆனால் அதனைச் செய்திருக்கிறார் கவிஞர்.


சுயசாதிப் பகடி பல கவிதைகளில் நர்த்தனம் ஆடுகிறது. ஊரில் யார் வீட்டில் இழவு விழுந்தாலும் ஊர் பண்டிதர் பழனி சாங்கியம் செய்தால் செத்தவன் சொர்க்கத்துக்குப் போவான் என நினைக்கும் ஊரில் 

“அவர் செத்த அன்னிக்கு

நாலு ஊரு நாவிதனும்

கோமணம் போறது தெரியாம குடிச்சிட்டு

நாலு ஊரு சாங்கியம் சடங்குகளையும் செய்து

நாசகோசம் செய்தார்கள்.

அய்யா கடைசில

சொர்க்கம் போனாரா

நரகம் போனாரான்னு தெரியல’’ என முடிகிறது கவிதை. நாங்க ஆண்ட சாதி, அப்படி இப்படி என்று பறைசாற்றும் வேளையில் (மருத்துவர் என்றும் நாவிதர் என்றும் அழைக்கப்படும் சமூகம் அப்படிச் சொல்லுவதற்கும் உண்மைக் காரணங்களை அடுக்கும் கவிதைகளும் உண்டு) ஒரு இறப்பின் வாயிலாக இன்றைய தலைமுறை குடிக்குள் சிக்கிக் கிடப்பதைக் காட்சிப்படுத்தியுள்ளார் கவிஞர்.


காலமெல்லாம் அடிமைப்படுத்தி வைத்திருந்த ஒருவனின் தலைமுறை அவனைப்போலவே இருக்கவேண்டும் என்று சட்டமா என்ன? அப்படி அடிமைப்படுத்தி வைக்க அவன்மேல் வைக்கப்பட்ட புனித பிம்பங்கள்தான் எத்தனை எத்தனை? தொடர்ச்சியாக பல பாராட்டுகளைச் சொல்லிக்கொண்டு வரும் கவிஞர் இறுதியாக 

“அடிச்சாலும் வாங்கிக்குவான்

புடிச்சாலும் தாங்கிக்குவான்

ஆந்தாந்து பேசிக்கொண்டார்கள்


அய்யாவின் சாவிற்குப் பிறகு

இப்படிப்பட்ட நாவிதனைத்தான்

தேடிக்கொண்டிருக்கிறது

எங்க ஊர்”

எப்படிய்யா கிடப்பான் இக்காலத்தில். கிடைக்கமாட்டான். கிடைக்கவேண்டிய கட்டாயமும் இல்லை என்றுணர்த்துகிறது வரிகள்.


எல்லா ஊரிலும் சுடுகாட்டில் குழி தோண்டுவது, கொள்ளிச் சட்டி உடைச்சு விடுவது, இறந்தவனின் வாரிசுக்கு மொட்டை எடுப்பது போன்ற பலரை நடத்தும் விதமும் அவர்களுக்கு கேட்கும் பணத்தைக் கொடுக்காமல் மிகச் சொற்பமான தொகையைக் கொடுப்பதும் சுடுகாடு வரை போய்வரும் நபர்களுக்கு நன்றாகவே தெரியும். அதை 

“கட்டளைக்காசு ஏத்திக் கொடுங்கன்னா

கட்டளைக்காசுக்கு கள்ளநோட்டுதான்டா அடிக்கணும்

என்றார்கள் ஊர்க்காரர்கள்.


பதினோராம்நாள் 

கல்தொரையில்

அய்யர் கேட்கும்போதெல்லாம்

கேட்டா கேட்ட காசு

அம்பது நூறுயென அவுத்து அவுத்து கொடுத்தார்கள்.

ஊர்ல கள்ளநோட்டு

அடிக்க ஆரம்பிச்சிட்டாங்கபோல” என்கிறார். ஆள் பார்த்து பட்டுவாடா செய்யப்படும் பணத்தைப் பற்றியும் அங்கு நாவிதர்களைப் படுத்தும்பாட்டையும் உள்ளது உள்ளபடியே கூறியுள்ளார் கவிஞர்.


ஊர்க்காரங்களுக்கு முடிவெட்ட ஆள் வேணும் என்பதற்காக சொல்லும் பசப்பு வார்த்தைகளை நம்பக்கூடாது என்பதை மகனுக்குக் கூறுகிறார் ஒரு தந்தை  இப்படியாக.

“நீதான் வெட்டணும்

நீயேதான் மீசை வைக்கணும்

உங்கப்பனைவிட நீயே சூப்பர் டக்கருன்னு

பிஞ்சு மனசுல நஞ்ச விதைப்பார்கள்

நம்பிடாதே மகனே


பதினைந்து வயதில்

என்னை படிப்பை இழக்கச் செய்தது

இதே உசுப்புதான்

இதே பசப்புதான்...”


32வது கவிதையில் முதல் பத்தியில் சனாதன நபர்களைப் பற்றிக் கூறுவது போலவும் இரண்டாம் பத்தியில் கம்யூனிஸ்ட் நபர்களைப் பற்றிக் கூறுவது முரணாக இருப்பதாகப் படுகிறது. ஒரு ஆறையே ஆட்டையப் போட்ட அரசியல்வாதியைப் பற்றிய கவிதை அபாரம். இப்படிப் பல கவிதைகள். சமகால அரசியலையும் உள்வாங்கிப் பேசும் கவிதைகள். 


வாழ்த்துகள் தோழர் ப.நடராஜன் பாரதிதாஸ்.

மீண்டும் ஒரு கவிதை...

“நாங்கள் பேசாத 

அரசியல் இல்லை

எங்களைப் பேசும்

அரசியல் தானில்லை


டீக்கடை வச்சா

முதல்வராக முடியுது

பிரதமராக முடியுது

சவரக்கட வச்சவனுக்கு

சாகரவரைக்கும்

ஒரு வார்டு மெம்பருக்குக் கூட

வக்கில்லையோ”

ஜனநாயகத்தின்மேல் கல்லெறியத் தேவையற்ற ஒரு சூழலை எந்தச் சமூகமும் பெறவேண்டும். அதற்கு, எல்லாம் எல்லா மக்களுக்கும் கிடைக்கவேண்டும். அதுவரை தோன்றட்டும் இது போன்ற புரட்சிக் கவிதைகள்.


யாழ் தண்விகா

Wednesday, 16 July 2025

அடைமழையில் வெப்பம்



அடைமழையில் வெப்பம்

கவிதைத் தொகுப்பு

மகி தமிழ்


பன்முகம் வெளியீடு


      தமிழ்ச் சமூகம் பல காலங்களில் பல காரணங்களுக்காக பல தடைகளைத் தனக்குத்தானே வகுத்துக்கொண்டு அதைக் கடைபிடிக்க ரொம்பவே தடுமாறித்தான் போகிறது.  


     முத்தம் அப்படியான ஒன்றுதான்

ஒரு தாய் தனது குழந்தைக்கு

ஒரு சகோதரி சகோதரனுக்கு

காதலர்கள் தங்களுக்கு இடையே

கணவன் மனைவிக்கு

போருக்குச் செல்லும்போது வாளுக்கு முத்தமிட்டு 

நெற்றியில் முத்தமிட்டு

என கால காலமாகத் தொடர்கிறது முத்தம்.


      தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியம் போல நாம் முத்தப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் 


      ஆனால் இங்கு என்ன நடக்கிறது. ஒரு காதலன் காதலிக்கு முத்தமிடும்போது ஒரு பூ இன்னொரு பூவை உரசுவது போல, இரு பறவைகளின் அலகுகள் உரசிக்கொள்வதைப் போல காண்பித்து முத்தத்தின் மகிமையை அறியாமல் செய்துவிட்டனர். அந்த மகிமைக்கு எந்தப் பங்கமும் வராத அளவுக்கு மகிதமிழ் முத்தத்தைக் கொண்டாடி இருக்கிறார் தன்னுடைய கவிதைகளில்...


       முத்தம் என்பது தொடக்கம். முத்தம் என்பது வாழ்தல். முத்தம் என்பது நிறைவு. அது ஒரு மகோன்னத நிலை. அதற்கு வஞ்சகம் செய்யக்கூடாது. அதைப் பற்றிய தவறான எண்ணம் இருந்தால் அதை தப்பித் தவறியும் கவிஞரிடம் சொல்லிவிட்டால் சண்டைக்கு வந்துவிடுவார்போல.

 

பாரதி கூறுகிறார் 

காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்

கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்

காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்

கானம் உண்டாம் சிற்ப முதல் கலைகளுண்டாம்

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே

அஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம்

காதலினால் சாகாமலிருத்தல்கூடும்

கவலைபோம் அதனாலே மரணம் பொய்யாம்


       சாகாமலிருக்கக் காதலிக்க வேண்டும் என்கிறார் பாரதி.

அதைத்தான் கவிஞரும் சொல்கிறார்

சகலமும் நான் செய்கிறேன்

காதலை மட்டும் நீ செய் என்று. 


        அணு அணுவாகச் சாவதற்கு முடிவெடுத்த பின் காதல் என்பது சரியான வழி தான் என்பார் கவிஞர் அறிவுமதி. ஆனால் கவிஞர் அணு அணுவாக வாழவும் காதல் என்பது சரியான முடிவு என்பதை தன்னுடைய வரிகளால் நிரூபித்திருக்கிறார்.


"நான் மட்டும் பேசிக்கொண்டிருக்கிறேன்

நீ எதுவும் சொல்லாமல் 

என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறாய்


நீ பேசும் அத்தனை வார்த்தைகளும்

என் வார்த்தைதான் அன்பே"


      வாழ வேண்டிய வாழ்க்கை இது. வீட்டுக்குள் அமர்ந்து என்னதான் காரண காரியம் இல்லாமல் பேசிப் பொழுதைக் கழித்தாலும் எப்படியாவது சண்டை வந்துவிடுகிறது. காதலைப் பேசிப் பொழுதைக் கழித்தால் மனமும் நிம்மதியாகும். வாழ்வும் மகிழ்வாகும்.


"இரவு பற்றியும் சொல்கிறேன்

கொஞ்சம் இதழ் பற்றியும் 

இரவு கொஞ்சம் இறுக்கமானது..."

வார்த்தைகளில் விளையாடி இருக்கிறார் கவிஞர். சிரித்து வாழ வேண்டும் என்ற திரைப்படத்தில் எம்ஜிஆர் லதா பாடும் பாடல். கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் என எம்ஜிஆர் பாட லதா கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன் என அந்த வரிகள் வரும். டி ராஜேந்தர் ஒரு பாடலில் முதலில் கதாநாயகன் லைட்ட அணைக்கட்டுமா லைட்டா அணைக்கட்டுமா எனக் கேட்க லைட்ட அணைக்காதீங்க லைட்டா அணைக்காதீங்க என கதாநாயகி பாடுவது போல பாடலை எழுதியிருப்பார். இரவைப் பற்றிக்கொண்டும் இதழைப் பற்றிக்கொண்டும் இருந்தால் தனிமை இறுக்கமாகாதா... 


      ஒரு ஆணின் மூர்க்கம் காதலிலும் காமத்திலும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பெண் என்பவள் இப்படித்தான் இருக்கவேண்டும் இருப்பாள் என்ற கற்பிதத்தை உடைக்கும் கவிதை.

இரவுகளில் 

கருணை விரும்பாத

ஆகச்சிறந்த கடவுள் அவள்.

மூர்க்கம் எதிர்பார்க்கும் சாத்தான் அல்ல. கடவுள் என்கிறார். காதல் உள்ள இடத்தில் கடவுள் இருப்பார். கடவுள், அவளாகவும் இருப்பாள் என்ற பொருளில். 


"உந்தன் வார்த்தைகளை

மொழிகொண்டு சொல்ல முடியவில்லையென்றால்

முத்தத்தில் சொல்லலாம்

அந்த பாஷை 

எனக்கு நன்றாகவே தெரியும்"


"நல்வார்த்தையில் காதல் செய்யச் சொல்கிறாய்

முத்தங்களைத் தவிர வேறென்ன செய்ய"


"இன்னும் புரியவில்லையென்றால் உறங்கிவிடு

நாளை முத்தங்களுடன் தொடங்கிக்கொள்ளலாம்"

சூரி போட்டிக்குப் பரோட்டா சாப்பிடும் நகைச்சுவை நினைவுக்கு வந்தது. விளையாடுவதை எல்லாம் விளையாடுவராம். புரியவில்லை என்றால் இங்கு விட்டுவிடுவதில்லை

வா நாளை

முத்தங்களுடன் தொடங்கிக்கொள்ளலாம்... அருமையான யோசனை...


வாத்ஸாயனர் தன்னுடைய காமசூத்ராவில் முத்தமிடுதல் பற்றி சும்பண விகல்பம் பகுதியில் ஆறாவது சூத்திரத்தில் குறிப்பிடுகிறார். நெற்றி, நெற்றியின் சுருள்முடி, கண்கள், கன்னங்கள் இப்படிமுத்தமிட ஏற்ற இடங்களாக எட்டு இடங்களைக் கூறுகிறார். ஏழாவது சூத்திரத்தில் நான்கு இடங்களைக் குறிப்பிடுகிறார்.


சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை என்று சொல்லியே பல கலைகளை அறியாமல் போய்விட்டது இந்த சமூகம். சொல்லித் தெரிந்துகொள்வதுதான் மன்மதக்கலை என்பதை உணர வைக்க ஒரு உதாரணமாக மகி தமிழின் அடைமழையில் வெப்பம் என்ற இந்த கவிதை நூலைக் கூறலாம்.


தமிழறிஞர் வசுப மாணிக்கம் எழுதிய வள்ளுவம் என்ற நூலில் ஆறாம் பொருள் ஆகிய இரண்டு பால்களைக் காட்டிலும் இன்பத்துப்பால்தான் அழுத்தமான நடையாட்சியைக் கொண்டுள்ளதாகக் கூறுகிறார். ஆனால் அவர் இதற்காக இந்நூலில் பத்துப் பக்கங்கள் கூட ஒதுக்கவில்லை

. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ராஜாஜி காமத்துப்பாலைத் தொடவே இல்லை

வீரமாமுனிவர் உரை எழுத காமத்துப்பாலைத் தொடவே இல்லை

குன்றக்குடி அடிகளாரும் அப்படியே.

கலைஞர் காமத்துப்பாலுக்கான உரையில் விளையாடி இருப்பார்.


இங்கு மகிதமிழ் முத்தத்துக்கான இடங்களை, முக்திக்கான நிலைகளை கவிதையாக்கிக் காண்பித்திருக்கிறார்


"கடக்கவியலா நீள்துயரம் நீ"

அவ்வளவுதான் கவிதை. இந்தக் கவிதையை வாசிக்கும்போது

கவிஞர் கருவாச்சி கனகம் எழுதிய கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது.

"அதிர்வேதுமற்று

உன் பெயரைக் கடக்க முடிகிற நாளில் 

கைவிடக்கூடும் இந்த வாழ்வையும்".

காதல் என்பது வெறும் உடல் சார்ந்ததா... நிச்சயமாக இல்லை என்னும் வரி இது. கடக்கவியலா நீள் துயரம் நீ.

காதலுக்காக எதையும் இழக்கத் துணியும் மனம். 


"நீயும் நானும் சேரக்கூடாது என்றுதான் ஒவ்வொரு முறையும் கடவுளிடம் வேண்டுகிறேன். ஏனென்றால்

என் பிரார்த்தனைகள் ஒருபோதும் நிறைவேறுவதில்லை" என்பது ஒரு மொழிபெயர்ப்புக் கவிதை. கடவுளும் கைவிட்ட நிலையில் கடவுளிடம் என்ன வேண்டுவது... சேர்த்துவை என்றால் சேர்த்துவைக்க மறுக்கிறாய்... சேரக்கூடாது என்று வேண்டினாலாவது கடவுள் சேர்த்து வைப்பார் என்ற எண்ணம். அதுதான் காதல். 


அதைத்தான் கவிஞர் இப்படி வெளிப்படுத்துகிறார்

"எதனைக்கொண்டு பிரித்தெடுக்க

உந்தன் நினைவுகளையும்

அதில் இரண்டறக் கலந்த எந்தன் காதலையும்..."


மேலும்


"கொலை பசியில் இருக்கிறேன்’’

முத்தங்களைச் சமைத்துக்கொடு"


"இரவல் தந்ததாகவே நினைத்துக்கொள்கிறேன்

இம்முத்தங்களை"


"எந்தன் தேகம் கிழித்த அவள் விரல் நகத்தில் எத்தனை காயங்களோ"


இதுபோல் இன்னும் பல கவிதைகள். இது தீவிரமா மிதவாதமா எனத் தெரியாத அளவுக்கு ரசனையாக தன்னை வெளிக்கொணர்ந்துள்ளார் கவிஞர். 


விடை தந்து விலகியபின்

கைகளையசைத்து முத்தமிடுகிறாய்

உள்ளம் குளிர்கிறது

உதடுகள் மட்டும் நெருப்பைச் சுமந்தபடி... என்று வலி சுமந்திருக்கும் கவிதையும் இருக்கிறது.


நீ காதலிக்காவிட்டால் என்ன

ஒரு பக்கம் பற்றினாலும் அது நெருப்பு தான் என்பார்

அப்துல் ரகுமான். இங்கு இருபக்கக் காதல். வலி சுடாதா என்ன...


அடைமழையில் வெப்பம்

முத்தங்களை நிறுத்தாதே...

தொகுப்பின் தலைப்பில் உள்ள கவிதை...

காதல் காலத்து வெப்பம்

இன்னும் கனன்றுகொண்டிருக்கிறது

பேரன்பாக காமமாக

கவிதைகளை நிறுத்தாதே...

மகிதமிழ்... கவிதைகளை நிறுத்தாதே...


வாழ்த்துகள்.


யாழ் தண்விகா

ஓசை புதையும் வெளி


ஓசை புதையும் வெளி

#கவிதைத்தொகுப்பு

#தி_பரமேசுவரி


கால நதி சில பெரும் வெள்ளோட்டத்தையும் சில பாலையையும் சிலபல இயல்பான பயணத்தையும் எப்போதும் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒரு சிறு சருகு காற்றிலோ நீரிலோ நிலத்திலோ அலைவுறும் தருணத்தில் சருகின் உள்ளோடும் வாழ்வின் நிலையற்ற தன்மையானது எத்தகைய துயர்களைக் கொண்டிருக்கும்... அதன் வலிகளை இயல்பின் மொழிகளில் எடுத்தாளும் தீட்சண்யம் கவிஞனின் மொழிகளில் படர்ந்து கிளைத்திருக்கிறது. அத்தகைய கிளைத்தலுக்குரிய மொழி லாவகம் உடைய கவிஞராக #ஓசைபுதையும்வெளி கவிதைத்தொகுப்பின் ஆசிரியர் #தி_பரமேசுவரி அவர்களை கூறலாம்...


இயல்புக்கு அப்பாற்பட்ட எதையும் புனைவென்று கூறி பக்கங்களைக் கடத்தும் உத்திகளற்று நம் வாழ்வின் யதார்த்தங்களை கவிதைகளில் பதிவிட்டுள்ளார் கவிஞர்...


சிறகுகள் கோதும் சாளரம் என்று தலைப்பிட்ட கவிதை.

"மேலும் தீட்டிக் கூராக்குகிறது

சிறிய மூக்கை

தொட்டி நீரில் அமிழ்த்திக்

கோதுகிறது சிறகுகளை

தானியங்களைக் கொத்தியும்

நீர் குடித்தும் பறந்தும்

விழுந்தும் அணைத்தும்

செய்யும் சில்மிஷங்கள்

குஞ்சுப் பறவையின் சேட்டைகளைச்

செல்லமாய்க் கண்டிக்கும் தாய்ப்பறவை


சன்னலில் பதித்த முகத்தில்

பதியும் கோடுகள்


வலிக்க வலிக்க

ரசித்துக்கொண்டிருக்கிறாள்..."


ஒரு பறவையின் வாழ்வு, அதன் பறத்தலும் பறத்தல் நிமித்தமுமான வாழ்வின் கணங்களின் கூறொன்றை பார்க்கும் ஒரு பெண்ணின் ஏக்கங்கள் கவிதை வரிகளில் முகத்தில் பதியும் கோடுகளாக்கப்பட்டிருன்றன விடுதலைக்கான வலியின் வார்த்தைகள் இவை.


துரோகத்தின் பாஷை நேரடியாக நம்மை அணுகும்போது சிலிர்த்ததிரும் உடலின் வலிகளை உதிர ஓவியமாக்கியிருக்கிறார் கவிஞர்.

"ஆதரவு தேடித்

தோள் சாய்கிறேன்

அடி வயிற்றில்

கத்தி செருகுகிறாய்

சிதறும் துளிகள் கொண்டு

தீட்டுகிறேன் உன் ஓவியம்..."


எத்தனை வரையறைகள் கொடுத்தாலும் காதலுக்கான வரையறை அவரவர் பார்வையில் ஆகச் சிறந்த பொறுத்தமாகவே அமைந்து விடுகிறது. இது கவிஞரின் விளக்கம்...

"காயமுற்று விழுந்த புறாவின்

சிறகு தடவி

பயம் தணித்து

வலிக்காமல் தலை திருகும்

உன் மென்மைக்கும்

காதல் என்றுதான் பெயர்"


இயல்பாக கடந்து செல்ல வேண்டிய ஒன்றாக நாம் நினைப்பவற்றையும் கவிஞரின் பார்வையில் கண்ணாடி மதிலில் பதிவிடுகிறார் இப்படியாக...

"கண்ணாடிச் சில்லுகள்

பதிக்கப்பட்ட மதில்களில்

சிறிதும் சேதாரமின்றி

நகர்கிறது நத்தை

மௌனத்தின் இடைவெளிகளை

இட்டு நிரப்பியபடி"

இந்த மௌனத்தின் இடைவெளிகள் என்பதில் இட்டு நிரப்பவேண்டிவைகள் என என்னென்ன நாம் வைத்திருக்கிறோம் என்பதை நம் மனம் ஒன்றே அறியும்.


ஓசை புதையும் வெளி என்ற தலைப்பிலான கவிதை.

"உரக்கப் பேசுவதாய்க்

கோபப்பட்டாய்

மிகுந்த ஓசையுடன் காரியமாற்றுவதாய்க்

குற்றம் சாட்டினாய்

புணர்ச்சியில் கூட முனகல்கள்

தெருவெங்கும் இறைவதாய்

எரிச்சல்பட்டாய்

வெடிக்கும் என் ஆர்ப்பரிப்புகள்

உனக்குள்

வெந்நீர்க் கொப்புளங்களையே

உருவாக்கின எப்போதும்

மெல்ல அடங்கிய என் சப்தங்கள்

புதைக்கப்பட்டன உன் வெளியில்"

ஒரு காதலாலோ நட்பாலோ தன்னை தொலைக்கும் உறவின் வலியோ இன்பமோ என்பது சொல்லி மாளாதது. தன்னைத் தொலைத்தல் என்பதைத் தொடர்ந்து நிகழும் விருப்பத்திற்கு அப்பாற்பட்ட கொடுமைகள், அதனாலான வேதனைகள் ஆகியனவற்றை அனுபவித்தும் அதனை இயல்பாக்கிக்கொள்ளும்

ஜீவனின் வெளி இது.


நகர மயமாதல், சந்தேகம், வாழ்வு, சுயம், கலவி, இன்னும் பல தலைப்புகள் மற்றும் சில ஹைக்கூ கவிதைகள் என நிரம்பிக்கிடக்கிறது தொகுப்பு. வாசித்தறிவோம் கவிஞரின் ஓசை புதைந்திருக்கும் கவிதை வெளியை...


வாழ்த்துகள் #கவிஞர்தி_பரமேசுவரி


#யாழ்தண்விகா

Wednesday, 2 July 2025

Super Star பாரதிதாசன்

 


சூப்பர் ஸ்டார் பாரதிதாசன்


பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். அப்பொழுது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் என்பதில் புரட்சிக்கவிஞர் என்றால் என்ன என்ற கேள்வியை முன்வைத்தேன். அவரோட முழுப்பெயர் சார் அது என்றனர். எது முழுப் பேரா? அடேய் சூப்பர் ஸ்டார் என்று சொல்லுவாங்கல்ல. அது யாரு என்று கேட்டேன். சார் ரஜினிகாந்த் பெயர் சார் அது என்று கூறினர். அடுத்து தளபதி என்று யாரடா சொல்லுவீங்க என்று கேட்டவுடன் உடனே விஜய் என்று பதில் வந்தது. அடுத்து அவர்கள் சார், தல நம்ம அஜித் சார் என்றனர். என்னடா பாடத்துல வர்றவங்க பேரு தெரிய மாட்டேங்குது. நடிகர்கள் என்றவுடன் இப்படி சொல்கிறீர்களே என்று கேட்டேன். சார் இவங்க எல்லாம் பெரிய ஆளுங்க சார் என்று கூற திகைத்துப் போய், இது வில்லங்கமாவுல்ல இருக்கு. நடிகர்கள பத்தி சொன்னா இவ்வளவு தீவிரமா இருக்காங்க. பாடத்தில் உள்ள தலைவர்களைப் பற்றிக் கேட்டால் இப்படி சொல்றாங்களே.... சரி. நேருவுக்கு  மனிதருள் மாணிக்கம் என்ற பட்டம் இருக்கு. காமராஜருக்கு கர்மவீரர் என்ற பட்டம் இருக்கு. பாரதியாருக்கு மகாகவி என்ற பட்டம் இருக்கு. பாரதிதாசனுக்கு புரட்சி கவிஞர் என்ற பட்டம் உண்டு. இதுபோல தலைவர்களுக்கு என்று சில பட்டங்கள் இருக்கு. நாம் பட்டங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.  சார் இதை நீங்க முன்னாடியே சொல்லக் கூடாதா, போங்க சார் என்றனர் மாணவர்கள். 


அதுக்கடுத்து ஒரு இடி. பாரதிதாசன் அப்படின்னா யாருன்னு கேட்டேன். கேட்டவுடன், அவரு தான் பாரதியார்ன்னு சொன்னாங்க. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. டேய் பாரதிதாசன் அப்படின்றவர் வேற. பாரதியார் அப்படின்றவர் வேற. பாரதியார் மேல அளவுகடந்த பாசம் வச்சிருந்ததனால் கனகசுப்புரத்தினம் அப்படின்ற இவரு பேர பாரதிதாசன் என்று வச்சிக்கிட்டாரு. பாரதியார் மீசையை முறுக்கி வைத்திருப்பார் தலையில் தலைப்பாகை அணிந்திருப்பார். ஆனால் பாரதிதாசன் அப்படி அல்ல. இப்பொழுது பாரதிதாசனை பாருங்கள் என்று படத்தைக் காட்டினேன்.


மாணவர்கள் மத்தியில், ஒரு சூப்பர் ஸ்டாராக பாரதிதாசன் என்ற நிலை வரவேண்டும்.


பெ.விஜயராஜ் காந்தி