Sunday, 9 November 2025

சரக்கொன்றை நிழற்சாலை - ஷாஜிலா பர்வீன் யாகூப்



 சரக்கொன்றை நிழற்சாலை

ஹைக்கூ கவிதைத் தொகுப்பு


ஷாஜிலா பர்வீன் யாகூப்

Mohamad Sarjila Yakoop 


படைப்பு பதிப்பகம்


விலை ரூ: 100


பக்கங்கள் : 112


ஹைக்கூ ஒளியில் வாழ்வின் நிழல்...


மூன்று வரிகளில் எடுத்துக்கொண்ட கருவை கவிதையாக்கும் வித்தகம் ஹைக்கூ... மிஷ்கின் மொழிபெயர்த்த ஹைக்கூ ஒன்று. "நத்தை போன

பாதையில்

வெயிலடித்தது".

மிக இயல்பாக வாசித்துக் கடக்கும் ஒரு கவிதை. ஆனால் உள்ளே பொதிந்திருக்கும் வரலாற்றைத் தோண்டிப் பார்க்க மெனக்கெட வைக்கும் சூட்சுமம் கவிதையில் இருக்கிறது. அவ்வாறு வாசிக்க வைப்பதுதான் ஹைக்கூவின் சாமர்த்தியம் மற்றும் சாகசம். தோழர் ஷர்ஜிலா அவர்களின் ஹைக்கூக்கள் பல அவ்வாறான தேடலை உண்டுபண்ணும் கவிதைகள். வாசிக்க வாசிக்க இயற்கையின் உள்ளார்ந்த அதிசயங்களில் நம்மை மூழ்கடிக்கிறார் தோழர்.


இயற்கையை அழித்தல் என்பது வெறும் அழித்தல் என்பதோடு முடிந்து விடுகிறதா... அது சூழலை அழித்தல், உயிர்களை அழித்தல், உயிர்களுக்கிடையேயான சங்கிலியை உடைத்தல். அதனை மனிதனுக்குக் கடத்தும் வரிகள் இவை.

தன்கூட்டைப் பின்தொடரும் பறவை

ஜேசிபியில் செல்கிறது

வேருடன் மரம்.

ஏனோ நம் குழந்தையை யாரோ பறித்துப் போக நாம் பின்னால் ஓடுவது போலான வலி.


இயற்கைப் பேரழிவுகள் பெரும்பாலானவை மனிதன் தனக்குத்தானே உண்டாக்கிக் கொண்டவையோ என்றெண்ணும் வண்ணம் அவ்வப்போது வெள்ளம், புயல் உள்ளிட்ட பாதிப்புகளைக் காணும்போது ஏற்படும். சென்னையில் முழுதும் நிடம்பியபின் நள்ளிரவில் திறக்கப்பட்ட நீர்த்தேக்கம் உண்டாக்கிய பாதிப்புகள் சொல்லி மாளாது. அலையாத்திக்காடுகளை கடற்கரை ஓரங்களில் அமைக்காததால் ஊருக்குள் சுனாமி பாய்ந்து கொத்துக்கொத்தாக கடலுக்குள் இழுத்துச் சென்ற உயிர்கள் பல லட்சங்கள். இது போன்ற சம்பவங்கள் நடந்து முடிந்தபின் காணும் காட்சிகள் போர் முடிவுற்றபிறகு காணும் ஓலங்கள் போலவிருக்கும். அது போன்ற ஒரு காட்சி.

வெள்ளம் வடிந்த வீதி

வீட்டுக் கூரையின் மேல்

தரைதட்டி நிற்கும் படகு.


இனி எப்போது பெங்குவின்களைப் பார்த்தாலும் இக்கவிதையே கண்முன் விரியும். ஆச்சர்யப்பட வைத்த ஒப்பீடு.

கருப்பு மேலங்கி

கழட்டாத வழக்கறிஞர்களா

கடற்கரை பெங்குவின்கள்...!


பால்யங்களைக் கண்முன் நிறுத்தும் பல ஹைக்கூக்கள் தொகுப்பெங்கும். அதற்குள் நம்மைப் புகுத்தி விளையாட வைத்த ஒரு ஹைக்கூ...

மணல்வீடு கட்டும் அண்ணனுக்கு

காத்திருக்கும்

பாப்பாவின் சிரட்டைமண் இட்டிலி... 

சிறுவயது அன்பின் நேர்த்தி எவ்வளவு சுவாரஸ்யமானது... அருமை.


குழந்தைகள் பள்ளிக்குச் சென்றபின் வீடு அனுபவிக்கும் கொடுமை என்பது பேரவலம் தான். அப்படி வீடு என்ன கொடுமை அனுபவித்து விடப் போகிறது... தோழர் சொல்கிறார்.

பள்ளி சென்ற குழந்தைகள்

தனித்துக் கேட்கும்

நகரும் கடிகார முட்கள்.

வீடு யாருக்கு? கடிகார ஒலிகள் யாருக்கு? என்ற கேள்விகள் உதிக்கும் அதே நேரத்தில் பள்ளியிலிருந்து குழந்தைகள் திரும்பும் நேரத்தைக் கணக்கிட்டு காத்திருக்கிறதோ கடிகாரம் என ஆறுதல் கொள்கிறது மனம்.


நத்தையாகிறேன்

நிழலெல்லாம் பூக்களுடன்

சரக்கொன்றை நிழற்சாலை...

பூ வீதி எதுவென்றாலும் அது உண்டாக்கும் சலனம் மனித மனத்தை ஒரு பாடுபடுத்த் வேண்டும். உதிர்ந்த பூ என்று அவ்வளவு வேகமாக மிதித்து விடுகிறதா நமது காலடிகள்? அவற்றை மிதிப்பதால் என்ன பாதகம் இந்த மண்ணுக்கு நேர்ந்துவிடப் போகிறது... ஆயினும் நாம் யோசிப்பதால் தான் மனிதம் ஒவ்வொரு உயிருக்குள்ளும் தன் வேர்களை ஆழப் பாய்ச்சுகிறது. அதுவே இந்த பூமி இன்னும் வாழ காரணமாக இருக்கிறது. உதிர்ந்துகிடக்கும் சரக்கொன்றைப் பூக்கள்... கடக்க நத்தையாகும் மனிதம்... நிழலெல்லாம் பூக்கள்... நத்தை சுரக்கும் திரவம்... இதுபோன்ற காரணிகளுக்குள் ஒளிந்து கிடக்கும் ஏதோவொன்று உண்டாக்கும் கிளர்ச்சி கவிதையின் சிறப்பை மிளிரச் செய்கிறது. 


பதிப்பாளர் Mohamed Ali Jinna தோழரின் பதிப்புரை, Surulipatti Si Vaji அண்ணன் அவர்களின் அணிந்துரை, இந்து தமிழ் திசை மு.முருகேஷ் தோழரின் தொகுப்பு குறித்த  ஹைக்கூப் பார்வை ஆரணி இரா. தயாளன் தோழர் கூறும் தறி வீட்டுப் பூனைகள், ஷர்ஜிலா தோழரின் என்னுரை இவையே ஒரு ஹைக்கூ வகுப்பைப் பார்த்த பெரும் திருப்தி அளிக்கிறது.


நிறைய கவிதைகள். நிறைவான பார்வை. 


வாசிப்போம், ஹைக்கூ மிளிர.


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️

பெறுநர், தேவதை, வானவில் வீதி - 143 #துளசி வேந்தன்


பெறுநர், தேவதை, வானவில் வீதி – 143

துளசி வேந்தன் 

படைப்பு பதிப்பகம்

விலை : 100

பக்கங்கள் : 116


காதலாகிப் போன கவிஞனின் கவிதைகள்...


நாடி, நரம்பு, எலும்பு, தசை அத்தனையிலும் காதலால் ஆன மனிதரால் தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியும் என்றெண்ணும் வகைக் கவிதைகள். தபூ சங்கரை வாசிக்கும்போது உண்டான வியப்பையும் கடந்து நிற்க வைத்துவிட்டன கவிதைகள். பதிப்பாளரும் கவிஞருமான Mohamed Ali Jinna தோழர் அவர்கள் தன்னுடைய பதிப்புரையில் ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராகப் பணி புரிவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனக்கென்னமோ காதல் தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறாரோ என்று தோன்றுகிறது. கவிஞர், தன்னுடைய நூலை மனைவிகளையும் காதலிகளையும் தேவதைகளாய் கொண்டாடித் தீர்க்கும் மொத்த ஆடவர் உலகத்திற்கும் சமர்ப்பணம் செய்துள்ளார். அது, மனைவிகளையும் காதலிகளையும் “தேவைதைகளாய்” கொண்டாடித் தீர்க்கும் மொத்த ஆடவர் உலகத்திற்கும் சமர்ப்பணம் என்று உள்ளது. பிழையாக இதைக் கருத முடியவில்லை. மனைவியோ காதலியோ இல்லாமல் அது ஒரு வாழ்வா... காதலுக்கும் காதலிக்கவும் அவர்கள் இல்லாமல் எப்படி... இவை போன்ற கவிதைகளை உடனிருந்து ரசிக்கக் கிடைத்த மனைவிகள், காதலிகள் கொடுத்து வைத்தவர்கள். மனித வாழ்வு சுபிட்சம் பெறத் “தேவை” தேவதைகள்...!


தபூவின் கவிதை ஒன்று...

“பல நூற்றாண்டுகள் ஆகுமாமே

ஒரு வைரம் உருவாக

நீ மட்டும் எப்படி

பத்தே மாதத்தில் உருவானாய்” தேவதைகளின் தேவதை விகடனில் வெளிவந்த காலத்தில் படித்தவுடன் சிலிர்த்த காலம் அது. கவிஞர் துளசி வேந்தன் தொகுப்பின் முதல் கவிதையாக கீழ்க்கண்ட கவிதையை வைத்துள்ளார்.

“நீ சிசேரியன்

செய்துதான் பிறந்தாயாமே?

என்ன செய்வது,


வெட்டித்தானே 

எடுக்கவேண்டும் வைரத்தை!” மிரண்டுட்டேன் கவிஞரே. சிசேரியனை இப்படியெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா... காதலி கொடுத்து வைத்தவர். (காதலியின் அம்மா ஓரமாக நின்று தனக்கு செய்யப்பட்ட சிசேரியனையும் சிசேரியனுக்கான காரணத்தையும் மருமகன் எழுதிய கவிதையை வைத்து (மகளுக்காக) ரசித்துக்கொள்ளவும்!)


“உன் அரை மணி நேர அலங்காரம்

நான் அரை நொடியில் 

கலைக்கத்தானே...” 

என்கிறது ஒரு கவிதை.

கொஞ்சம் பொறுமையும் கொஞ்சும் கால அவகாச நீட்டிப்பும் காதல் கேட்கிறது கவிஞரே. செவி மடுக்கவும்.


காவல் நிலையமா? காதல் நிலையமா? குழப்பம் தந்துவிட்டது ஒரு கவிதை. ஆனால் விழும் அடி ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று உயிரைக் கேட்க வைக்கிறது. 

“விசாரணை என்று

காதல் நிலையம் அழைத்துவந்து


வெட்கத்தால் அடிக்கிறாய் நீ!”

வலிக்குமா என்ன வெட்க அடிகள்...!


மச்சம் என்றால் என்ன? என்பதற்கு விளக்கம் தருகிறது ஒரு கவிதை. மச்சமே விழித்துப் பார்க்கும் கணம் அது.

“உன் அழகில்

பிரம்மன் மெய்மறந்த 

இடமெல்லாம்,


“மச்சங்கள்”.


தொகுப்பெங்கும் துணுக்குகள் போலிருக்கும் ஒவ்வொன்றும் கூட மின்மினிகளாய் கவிதை வாசம் பரப்புகிறது.

“ஆயுள் சந்தா கட்டி

படிக்கவேண்டிய இதழ்

உன்னுடையது”

“அடிக்கும் பறை நானுனக்கு

அதிர்வுகள் நீயெனக்கு”

“குழந்தை போல

பேசுமுனக்கு

முப்பத்தி இரண்டும் 

பால் பற்கள்”

“உன் நிழலுக்கு

நெத்திச் சுட்டியாய்,

உதிர்ந்த பூவொன்று...” (22 & 28 இரு பக்கங்களில் உள்ளது)


மதங்கள் நிறைய இருந்தாலும் மும்மதம் மட்டுமே பிரதானமாக சொல்லக் கேட்டிருக்கிறோம். தொகுப்பில் மூன்று மதம் சார்ந்த கவிதைகள் சொல்லி, காதலின் மதச் சார்பின்மையைக் காட்டுகிறார் கவிஞர். காணும் காட்சி யாவும் காதல் என்றால் மதமும் காதலாதல் சரிதான்.

“அய்யர் உன் தலையில்

சடாரி வைக்கும்போது

அனிச்சையாய் குனிகிறார்

பெருமாள்”

(சடாரி என்றால் பெருமாளின் திருப்பாதமாகப் பாவித்து தலையில் வைக்கப்படும் கிரீடமாம். கூகுள் சொன்ன தகவல். இன்னைக்குத்தான் தெரியும்)

“நீ சொல்லும்

ஸ்தோத்திரங்கள்


சிலுவையில் அறையுண்ட

இயேசுவுக்கு ஒத்தடங்கள்”


உசைன் பாய்

சாம்பிராணி தூவி

தூபமிட்டுப் போவது போலவே

நீயுன் வெட்கத்தைத் தூவி

காதலிட்டுப் போகிறாய்...”

சநாதனத்திற்கு எதிராக, எல்லா மதத்தையும் சமமாகப் பாவித்து காதலிட்ட கவிதைகள் படைத்திட்ட கவிஞருக்கு வாழ்த்துகள்...


ஒன்றிரண்டு கவிதைகள் ஒரே சாயலில் இருக்கிறது கவிஞரே.

“புயலுக்குப் பெயர் சூட்டும்

வழக்கத்தைக் கண்டுபிடித்தது

உன் அப்பன் தான்...”

“நான் மட்டும் 

வானிலை ஆய்வுத்துறையில்

இருந்திருந்தால்

உன் செல்லப் பெயர்களைத்தான்

புயல்களுக்குச் சூட்டிக் கொண்டிருப்பேன்...”

(போலவே 28 ம் பக்க பிள்ளையார் கவிதையும் 110 ம் பக்க கண்ணாடிக் கவிதையும்...) கூறியது கூறல் ஒரு குற்றம் என்பார்கள். காதலில், காதல் கவிதைகளில் குற்றம் காண்பது தவறு என்றாலும் சொல்லி வைக்கிறேன்.


அறிவியலைக் காட்சிப்படுத்துவது போல பல கவிதைகள். கற்பனை எண்ணத்தை ஓடவிட்டு காதலை ரசிக்க வைக்கிறது வரிகள்.

“இரவும் 

மழையும்

சன்னலும்

மின்னலும்

உன் முகமும்

ஒரே நேர்கோட்டில்

சந்திக்கிற நிகழ்வுதான்

எனக்குக் காதல் கிரகணம்”

எப்படியெல்லாம் மனுஷன் யோசிக்கிறார் என யோசிக்க வைக்கிறார் கவிஞர். இப்படித்தான் போகிற போக்கில் பெரும் ஏக்கமொன்றையும் கவிதையாக்கி வைத்திருக்கிறார் கவிஞர்.

கனவில் கூட 

கதவடைத்துக்கொண்டுதான்,

ஆடை மாற்றுகிறாய்

நீ...”


காதலில் நனைந்து, மூழ்கி, திளைத்து, அதற்குள்ளேயே மூர்ச்சையாக்குவதுபோல கவிதைகள். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பது போல காண்பவை யாவும் காதலாகவே தெரிவது கவிஞருக்கு கிடைத்த வரம்தான். அட, ஆமால்ல… அடடா... ப்ச் என்னா மனுஷன்யா... கவிஞன்யா... என்று வாசிக்கும்போது நம்மை உச்சரிக்க வைத்த சொற்கள் அனைத்தும் கவிஞருக்கான மகுடங்கள். அவை எப்போதும் கவிஞருக்குக் கிடைக்கும். கவிஞரின் பார்வைக்கு பேரன்பு.

“சிவாஜிகணேசன் நடிக்குமளவு

இல்லையென்றாலும்

ஓரளவு காதலிக்கத் தெரியும் உன்னை” என்கிறார் கவிஞர். ஓரளவில்லை. மிகச் சிறப்பாகவே காதலிக்கிறீர்கள். இலக்கிய உலகிலும், சமூகத்திலும் காதல் பரவ, காதலைக் கொண்டாட கவிதைகள் படைத்துக் கொண்டேயிருங்கள். அட்டைப்படம் சிறப்பு. வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️

Thursday, 23 October 2025

நீ துளையிட்ட எனது புல்லாங்குழல் - ஜின்னா அஸ்மி

 

நீ துளையிட்ட எனது புல்லாங்குழல்

ஜின்னா அஸ்மி

Mohamed Ali Jinna 

படைப்பு பதிப்பகம்

பக்கங்கள் : 114

விலை : 120


கண்ணீரிலும் காதலிலும் கரைந்த கவிதைகள்


 காதலாகக் கசிந்துருகுபவரின் கஸல் கவிதைகள், நீ துளையிட்ட எனது புல்லாங்குழல். இசையாக ராகமாக கவிதையாக கண்ணீராக கடவுளாக வலியாக காதலாக ஒவ்வொரு கவிதையும் தன் முகம் காட்டுகிறது. தொடர்ந்து காதலை தான் படைப்பாக்குவதோடு, காதலை கவிதையாக்கும் பல கவிஞர்களையும் ஊக்குவிக்கும் ஜின்னா அஸ்மி தோழரின் கவிதைகளை கடவுள் மறந்த கடவுச் சொல் தொகுப்பிலேயே ருசித்திருக்கிறேன். இத்தொகுப்பு அதன் தொடர்ச்சி நிலை.


 என்னுரையில், காதலில் வெற்றி என்பது தோல்வி. தோல்வி என்பது வெற்றி என்றும் நான் கஸலை நினைக்கிறேன் கஸலாகிறேன் என்கிறார் கவிஞர். கவிதைகளில் அடிநாதமாக இவ்வரிகளே அமைந்திருக்கிறது. கவிக்கோ எழுதிய மொழிபெயர்ப்புக் கவிதை ஒன்று. எப்போதும் மனதிற்குள் இருந்து உருத்திக்கொண்டே இருக்கும் வரிகள் அவை. 

“நீயும் நானும் சேரக்கூடாது என்றுதான்

ஒவ்வொரு முறையும் வேண்டுகிறேன்.

ஏனென்றால் என் பிரார்த்தனைகள்

ஒருபோதும் நிறைவேறுவதில்லை”

எதுவும் நடக்காத விரக்தியிலும் இணை உயிர் தேடும் ஒரு காதல் மனம் இப்படியெல்லாம் பாடுமா என்று வியக்க வைத்த வரிகள் இவை. போலவே பல கவிதைகள் இன்மையைப் போற்றி ஞானம் தேடும் தன்மையுடையதாக தொகுப்பில் காணக் கிடைக்கின்றன. மெல்லப் பயணித்து வேகம் கூடிச் செல்லும் திரைப்படம் போல கவிதைகளும் தன்னுடைய வலியை கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி வேகம் கூட்டுகின்றன தொகுப்பின் இறுதி செல்லச் செல்ல.


“வாசலுக்கும் 

வருகைக்கும்

எந்தச் சம்மந்தமுமில்லை

காதலென்பது காற்றைப் போல”

எங்கும் காதல் வியாபித்திருக்கும். அது இதயத்தின் உள்ளே வர கதவு திறந்திருக்க வேண்டிய அவசியமில்லை. காதல் இது போன்ற சூழல் இல்லாமலே காற்றைப்போல எங்கும் நிறைந்திருக்கும். காதல் என்பது அன்பைச் சூடிக்கொண்டிருக்கும் அனைவருக்குள்ளும் நிறைந்திருக்கும் இறை. அதை வணங்கினால் போதாதா இறை வரம் பெற என்றுணர்த்தும் வரிகள் இவை.


“இந்தக் கணம் 

ஒரு நிச்சயமற்ற பொழுதாகிவிட

காதல் ஒன்று போதும்”

காதல், ஒரு மாயம் நிகழ்த்தும் கடவுள். அது எப்பொழுதும் ஒரே போன்றதொரு சுகம் தராதெனினும் அது தரும் சுகமனைத்தும் வலியாக இருந்தாலும் துயராகயிருந்தாலும் சுகமே. மயக்கம் தரும். விழிப்பு தரும். விஷம் தரும். உலகை மறக்க வைக்கும். இதோ இப்போது வாழும் வாழ்வை நிச்ச்சயமற்ற ஒன்றாக்க காதல் போதும் என்கிறார் கவிஞர். நிச்சயமற்ற ஒன்று என்பதில் எதை நிரப்பிக்கொள்வது என்பது அவரவர் காதல் சூழல் பொறுத்தது.


 காதலை பல நேரங்களில் ஒரு மிகப்பெரும் வக்கிரமமாக பார்த்திருக்கிறேன். அது மன்றாடுதலை ஏளனம் செய்வதை உணர்ந்திருக்கிறேன். தன்னிலை தொலைத்து சரணாகதி அடைதலை தூக்கி எறிவதை அனுபவித்திருக்கிறேன். ஆனாலும் காதலைத் தொடர்ந்திருக்கிறேன் என்பது எதனை நோக்கிய பயணம்? அது மனதை வாழவைத்தல். கண்ணீரை வாழ வைத்தல். காதலை வாழவைத்தல். இந்தக் கவிதையில் கவிஞர், கண்ணீருக்கு என்ன பெயர் சூட்டுகிறார் பாருங்கள்...

“நான் 

கண்ணீரைப் பிரசவிக்கிறேன்

நீ 

“காதல்” எனப் பெயர் சூட்டுகிறாய்”


 அனுபவங்களே கவிதைகளாகின்றன பலருக்கு. அது பார்ப்பதாக, கேட்பதாக, அனுபவித்தலாக என எப்படியும் அமையலாம். உலகின் ஏதோ ஒரு மூலையில் உருவாக்கப்படும் மீம்ஸ் பார்த்து நாம் சிரிப்பது போல, அட ஆமாப்பா என்பது போல. உணர்வு என்பது உலகப் பொது. அதிலும் காதல் தரும் உணர்வுகள் அவ்வளவு இயல்பாக காதலர்களுக்குப் பொருந்திப் போகும். காதலில் ஓர் ஆணின் சொல்லோ, பெண்ணின் சொல்லோ உண்டாக்கும் வலி இரு தரப்பிற்கும் பொதுவானதாக இருக்கும். அன்பின் கண்களுக்கு அதன் வலி புரியும். வெறுமனே வேடிக்கை பார்க்கும் கண்களுக்கு ஒன்றும் புரியாது. சிறுபிள்ளைத்தனமாக இருக்கும். கத்தியால் குத்தினால் மட்டும்தான் காயமா? தழும்பு இருந்தால்தான் காயமா? இதோ கவிஞர் கூறுகிறார்.

“உன் காதல் வார்த்தைகள்

எப்போதும் காயங்களாக இருந்ததில்லை

ஆனால் வலி நிறைந்தவை”


 “பெண்மனசு ஆழமென்று ஆம்பளைக்குத் தெரியும் அது பொம்பளைக்கும் தெரியும் அந்த ஆழத்திலே என்ன உண்டு யாருக்குத்தான் தெரியும்...” என்றொரு பாடல் உண்டு. பெண் ஒரு ஆணை என்ன செய்கிறாள் எப்படி வழி நடத்துகிறாள் எவ்வாறான அன்பை வழங்குகிறாள் வழங்கத் தலைப்படுகிறாள் என்பதை எப்போதும் உணர முடியாது. சரணாகதி என்ற ஒன்றை செய்தபிறகும் அவளின் விருப்பம் சார்ந்த விசயங்களைத் தான் அரங்கேற்றுவாள். அது நாம் விரும்பியதாக இருக்கலாம். துயரானதாக இருக்கலாம். நாம் நிர்ணயித்து வைத்திருந்த எல்லைக்கும் மேலாக பறந்து விரிந்திருக்கலாம். எல்லாம் உணரும்போது பெண் என்பவளை, காதல் என்பதை வைத்த கண் மாறாது அதிசயிக்கும் சூழல் வாய்க்கும். அந்தச் சூழல் மகிழ்வின் உச்சமாக கிடைக்கப்பெறும் காதலிணை கொடுத்து வைத்தவர்கள் தான்.

“உனக்குள்ளே நான் மிதந்துகொண்டிருந்தாலும்

உன் ஆழம் பற்றி அறியமுடியாத

ஒரு தக்கையைப் போலவே வைத்திருக்கிறாய்

என்னை...”


 கண்ணீர் வெளிச்சம் என்பது எவ்வளவு ஆற்றாமைகள் நிறைந்தது. அதுதான் நான் உனக்கு அளிக்கும் பரிசு. அதில் நீ என்னைக் காண்பாய். அது உன்னை மேலும் ஒளியாய் மாற்றும். அதற்கு உனதருகில் வாழும் வரம் கிட்டிவிடும். கண்ணீர் தனது பாவத்தை, நீ பெற்றுக்கொண்டதால் கழுவிக்கொள்ளும். கண்ணீர் வெறும் நீர்மப் பொருள் அல்ல. அது காதல். விருப்பம் இல்லை என்றால் சொல்லிவிடு என்று முடியவேண்டிய கவிதையை “வெளிச்சம் வேண்டாமெனில் ஊதி அணைத்துவிடு” என்கிறார் கவிஞர். “அவள் பெறாமல் போவது வெளிச்சம். எனக்கு வாழ்வு” என்பதான பொருளில் காதல் வெளிச்சம்!

“என் அழுகையை ஏற்றுக்கொள்

அது உனது சன்னதியில் என் கண்கள் ஏற்றும் தீபம்

வெளிச்சம் வேண்டாமெனில் 

ஊதி அணைத்துவிடு


 காதலிடும் கட்டளைகள் பல சமயம் அபத்தமாக இருக்கும். ஆனாலும் அபத்தத்தையும் ஏற்கும் வேண்டுதலைக் கைக்கொண்டிருக்கும் மனம் என்ன செய்யும்? ஏற்று தன்னை வருத்தியபடி மீண்டும் துளிர்க்கும் காதலுக்காக காத்திருக்கும். இது காதலிடும் சாபம். காதல் தந்த சாபம் என்பதால் கைகளில் பெருமையோடு ஏந்திக்கொள்ளும் நம்முயிர். 

“இது என்ன சாபம்

வாசம் வேண்டாம் என்றால்தான்

பூவுக்கான வரம் கொடுப்பேன் என்பது”


“உன் கூண்டுக்காகவே 

உருவாக்கப்பட்ட பறவை நான்

ஏன் வானம் வரைந்து வேடிக்கை காட்டுகிறாய்” (55)

“என் இறகுகளைக் கொய்து

கூடு கட்டுகிறேன்

இப்பொழுது 

வானத்தைக் காட்டி விளையாடுகிறாய்” (22)


“நான் விசமாக இருந்தாலென்ன...

நீ மகுடி ஊதியதும்

நான் ஆடத்தானே செய்கிறேன்

ஒரு பாம்பைப் போல” (31)

“நான் இசையைக் கேட்டேன்

நீ மகுடி ஊதுகிறாய்

நான் இப்போது 

எதற்காக ஆடுகிறேன் எனத் தெரியவில்லை” (71)

மேற்சொன்ன ஈரிரு கவிதைகளும் பொருண்மையில் வேறுபட்டிருப்பினும் சொல்லாடல் ஒன்றாகவே தெரிவதால் படித்த கவிதையைப் படிப்பது போலொரு தோற்றத்தைத் தருகிறது. இணையில் ஒன்றை தொகுப்பில் இல்லாமல் செய்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அவற்றில் என்மனதிற்குப் பிடித்தவையாக கீழ்க்கண்டவற்றைச் சொல்லலாம்.

“என் இறகுகளைக் கொய்து

கூடு கட்டுகிறேன்

இப்பொழுது 

வானத்தைக் காட்டி விளையாடுகிறாய்” 

“நான் விசமாக இருந்தாலென்ன...

நீ மகுடி ஊதியதும்

நான் ஆடத்தானே செய்கிறேன்

ஒரு பாம்பைப் போல”

தொகுப்பெங்கும் மைய இழையாகப் பரவிக்கிடக்கும் காதலின் வலி சொல்லும் அடர்த்தி இக்கவிதைகளிலிருக்கிறது.


தொகுப்பின் தலைப்பையொட்டிய இக்கவிதை,

“வெட்டு 

துளையிடு

மூங்கிலாகப் பிறந்த என்னை

உன் உதட்டருகில் வைத்து

ஒருமுறையாவது இசைத்துவிடு”

இன்முறைக்குத் தூபமிடும் வன்முறைக் கவிதை. ஆமாம், ஒருமுறையாவது உன் உதட்டருகில் வைத்து இசைத்துவிடு என்று கெஞ்சுகிறது. மூங்கில் மரம் இசையாகவேண்டும். உன் உதடுகள் வழியாக காற்று மூங்கிலில் ஊடுருவி இசையை காதல் உருவாக்கவேண்டும். நீ துளையிட்ட எனது புல்லாங்குழல் என்பது அலாதி சுகமல்லவா!


நிறைவாக...

“உன் சாயலில்தான்

காதலும் மரணமும் இருக்கிறது

உன்னைத் தேடி வரத்தானே செய்வேன்”

கவிஞரின் கவிதைகளை மீண்டும் மீண்டும் வாசிக்கத் தேடி வருவேன். அந்தக் காதல் மனம் தரும் கவிதையில் நான் காதலைக் காண்கிறேன். கடவுளைக் காண்கிறேன். என்னைக் காண்கிறேன்.


கஸல் வழியில் காதல் வேள்வி...

வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️

Wednesday, 22 October 2025

கடவுளைத் தோற்றுவித்தவன் - யாழ் தண்விகா


 

சிறார் கதை 2


கடவுளைத் தோற்றுவித்தவன்


யாழ் தண்விகா 


 பள்ளிக்கூடத்திலிருந்து வந்தும் வராததுமாக பையைத் தூக்கி எறிந்துவிட்டு “அம்மா உனக்கு எதுக்கும்மா நாகம்மான்னு பேரு வச்சாங்க” என்றான் நவீன். “ஏன்டாப்பா இந்தப் பேருக்கு என்ன குறைச்சல்? நாகம்மா மகனுக்கெல்லாம் பள்ளிக்கூடத்தில் இடமில்லைன்னு உங்க பள்ளிக்கூடத்துல சொல்லிட்டாங்களா” என்றாள் நாகம்மா. 


 “கிண்டல் பண்ணாதம்மா. என்னோட வகுப்புல படிக்குற கண்ணன், உங்கம்மா பேரு நாகம்மா தான. நாகப்பாம்பு மாதிரி படமெடுத்து ஆடுமான்னு கேக்குறான். எனக்குக் கோவம் கோவமா வருது. ஒரு நா இல்லைன்னாலும் ஒருநா என்கிட்ட செமக்க அடி வாங்கப் போறையான்” நவீன் கோவமாகப் பேசினான். 


 “நாகம்மாங்குறது சாமிப் பேருன்னு அவங்கிட்ட சொல்லவேண்டியது தானடா. இல்லன்னா சாருகிட்ட சொல்லவேண்டியது தானடா. சாரு கண்டிச்சு வப்பாருல்ல. இவ்வளவு கோவம் ஆகாதுடா நவீன்” அவனைச் சாந்தப்படுத்தும் விதமாக நாகம்மா பேசினாள்.


 “சரிம்மா. நாளைக்கு நான் சார்கிட்ட சொல்றேன் அவனை. அதுக்கப்புறமும் ஏதாவது சொன்னான்னா அவனுக்கு இருக்கு” என்ற நவீனை முறைத்துப் பார்த்த நாகம்மா சட்டென யோசனை வந்தவளாக சிரித்துக்கொண்டே “ சரிடா. எம்பேருக்கே அவன் கிண்டல் பண்ணுனதுக்கு இவ்வளவு கோவப்படுறயே. ஒன் தாத்தா பாட்டி பேரு உனக்குத் தெரியும்ல. காத்தவராயன். இருளாயி. இதெல்லாம் அவனுக்குத் தெரிஞ்சா இன்னும் கிண்டல் பண்ணுவான்ல. அப்ப என்னடா பண்ணுவ” என எதிர்க் கேள்வியைக் கேட்டாள். “அது தெரிஞ்சாத்தான. அப்படியே தெரிஞ்சாலும் அதையும் சாமிப்பேருன்னு சொல்லி சமாளிச்சுடுவேன்” என்ற அவனை “என்னது சமாளிச்சிடுவியா? உண்மையிலேயே அது சாமிப் பேர் தான்டா” என்ற நாகம்மாளை நிமிர்ந்து பார்த்து “என்னம்மா சொல்ற? நெசமாவா?” என்றான் நவீன் ஆச்சரியத்துடன்.


 “ஆமா. இதெல்லாம் சாமிப் பேர் தான். உன் பாட்டி பேர் இருளாயி. அந்தக் காலத்துல ஆதி மனுசன் இருட்டைப் பார்த்து மிகவும் பயப்படுவான். நெருப்பைக் கண்டுபிடிக்குறதுக்கு முன்னரும் பின்னரும் இருட்டின் மேலிருந்த பயம் அவனுக்குப் போகவே இல்லை. இரவு நேரங்களில் எதையாவது பார்த்து பயந்து அதிர்ச்சியில் இறந்து போவது அடிக்கடி நடந்தது. அவங்களைப் பேய் அடிச்சு செத்ததாக நெனச்சாங்க. அதனால இதையெல்லாம் கோரக் கடவுள்களாக நெனச்சு அதைத் திருப்திப்படுத்த தம்மோட குழந்தைகளுக்கு கருப்பன், கருப்பாயி, இருளன், இருளாயின்னு பேர் வச்சாங்க. அப்படி வந்த பேர் தான் இருளாயி. புரியுதாடா?” என்றாள் நாகம்மா.


 “புரியுதும்மா. அப்ப தாத்தாவுக்கு எதுக்கு காத்தவராயன்னு பேரு?” என்று கேட்டான் நவீன். “ஆதி காலத்தில் இந்த மண்ணு உழுதுபோடாம அப்படியே கிடந்துச்சு. பெரும் சூறாவளிக் காத்து அப்பப்போ அடிக்கும். அந்தச் சூறாவளி மேல் மண்ணை அள்ளிப் பறக்கும்போது அதிலிருக்க பாஸ்பரஸ் காத்தோட சேர்ந்து தீப்பிடிக்கும். அதைப் பார்த்த ஆதிமனுசன் அதை கொள்ளிவாய்ப் பேய் என நெனச்சான். அந்தப் பயத்திலிருந்து விடுபட காற்றை வழிபட ஆரம்பிச்சான். அப்படி காற்றைத் திருப்திப் படுத்த உண்டான பேர் தான் உன் தாத்தா பேரு, காத்தாயி, காத்தப்பன், காத்தவீரி, காத்துக்கருப்பு இப்படிப் பேரெல்லாம்” என்ற நாகம்மாவை வச்ச கண் மாறாமப் பார்த்துக்கொண்டிருந்தான் நவீன். 


 “எவ்ளோ விசயம் தெரிஞ்சு வச்சிருக்கம்மா. சூப்பர்ம்மா. அப்படியே உன் பேருக்கும் ஒரு விளக்கத்தைச் சொல்லிடும்மா. யார் கேட்டாலும் இனி நல்லா பதில் சொல்லிக்கிறேன்” என்றான் நவீன். “பாம்பைக் கண்டால் படையே நடுங்கும்” என்ற பழமொழியைக் கேட்டருக்கிறயா?” என்றாள் நாகம்மா. “ம்‌ம்‌ம் கேட்ருக்கேன்” என்றான் நவீன். “ஆதி மனுசன் நல்லா பலசாலியா இருந்தான். வேட்டைக்குப் போற வழில ஏதாவது பாம்பு கடிச்சாக்கூட அதுக்குப் பசிக்கும்போல. அதான் கடிக்குதுன்னு நெனச்சிட்டே நடந்து போவான். கொஞ்ச தூரம் போன பின்னாடி விஷம் தலைக்கேறி உயிர் போயிரும் கடிச்சவனுக்கு. கூடப் போற மத்த ஆளுங்க எல்லாம் அவன் தூங்குறான்னு நெனச்சு விட்டுட்டுப் போயிடுவாங்க. கொஞ்சநா கழிச்சு அந்த உடம்பு கழுகு கொத்தி புழு ஏறி கெட்ட வாடை அடிக்கும். அந்தச் சமயத்திலதான் பொதைக்குற வழக்கமே வந்திருக்கும்னு சொல்றாங்க. சரி. விசயத்துக்கு வாரேன். பாம்புக்குப் பிடிச்ச உணவு கறையான் தான். கறையான் புத்துக்குள்ள போயி கறையானை நல்லாத் தின்னுட்டு, புத்தை விட்டு வெளில வர நினைக்குறப்ப பாம்புக்கு வயிறு முழுக்க இரை இருக்குற தன்னோட உடம்பைத் தூக்கிட்டு வர முடியாம தத்தளிக்கும். அப்போ படமெடுத்து ஆடும். அதைப் பார்த்து பயந்த ஆதி மனுசன் புத்துக்கு முன்னால இறைச்சி, பால் இதெல்லாம் வச்சு “ஏய் பாம்பு, இதெல்லாம் உனக்குத்தான். நல்லாச் சாப்பிடு. எங்க பக்கத்துக்கு வராத”ன்னு சொல்லி வேண்டிக்குவாங்க. அப்படிப் பாம்புக்குப் பயந்த மக்கள், பாம்பால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களோட குழந்தைகளுக்கு வச்ச பேரு தான் நாகம்மா, நாகப்பன், பாம்புலம்மா, பாம்புலய்யா இதெல்லாம். இனிமே கண்ணன் கிண்டலா சொன்னா என்னோட அம்மா பேருக்கு இதுதான்டா விளக்கம்னு சொல்லுடா. கேட்டுக்குவான். கிண்டலடிக்கமாட்டான்” என விளக்கம் சொன்னாள் நாகம்மா. “இனிமேல் அவன் நக்கலடிக்கட்டும். அப்புறம் பார்த்துக்கிறேன்ம்மா” எனச் சொல்லிக்கொண்டே கிளம்பினான் நவீன். கிளம்பியவனிடம் “லேய், உங்கப்பா பேருக்கு என்ன விளக்கம் தெரிஞ்சுக்க. இங்க வா” என்றாள். “எனக்குத் தெரியும்மா. எங்க சார் சொன்னார்” என்றவுடன் அவள் “என்ன சொன்னார் உங்க சார்? எங்க சொல்லு பார்ப்போம். அவர் சொன்னது சரியா இல்லையான்னு சொல்றேன்” என்றாள் நாகம்மா.

 “ஆதி காலத்தில் வாழ்ந்த மனுசங்க எல்லாம் குழுவாக வாழத் தொடங்கியபின்னர் அவர்களுக்குள் எழும் சச்சரவுகளைத் தீர்க்க, பிற குழுவுடன் உண்டாகும் சச்சரவுகளைத் தீர்க்க தங்கள் குழுவில் தலைவன் ஒருவனைத் தேர்ந்தெடுத்தனர். குழுவினர் அனைவரும் அவனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டனர். சில சமயங்களில் தனது குழுவைக் காக்க, பிற குழுவோடு சண்டையிட்டு இறந்தும் போயிருக்கிறான். தம்மை வழிநடத்தியவன் என்பதாலும் தம்மை ஆண்ட, காத்த தலைவன் என்பதாலும் தான் தம்மில் வாழ்ந்த அவனுக்கு ஆண்டவன் என்று பெயர் வந்ததாம். சார் சொன்னார். நம்ம குடும்பத்தைக் காப்பவராக அப்பா இருப்பதால் அப்பாவுக்கும் ஆண்டவன் என்ற பேர் பொருத்தம் தானம்மா?” என்றான் நவீன். 

 “அப்பா மட்டும் தான் வீட்டைக் காப்பாத்துறார். நானெல்லாம் காப்பாத்தலயாடா?” என்றாள் நாகம்மா. “எனக்கு எப்பவும் அப்பா, ஆண் ஆண்டவர். அம்மா, பெண் ஆண்டவர்” என்றவனின் நெற்றியில் முத்தமிட்டு மகிழ்ந்தாள் நாகம்மா.

 விரைந்து கிளம்பியவன் சட்டென நின்று “எல்லாருக்கும் சாமிப் பேர் இருக்கு. எனக்கு ஏன்ம்மா நவீன் என்ற பெயர்?” என்றவுடன் நாகம்மா சொல்லத் தொடங்கினாள் “என்னோட அப்பா, அம்மா, அவங்களோட அப்பா, அம்மா எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை இருந்துச்சு. வச்சாங்க. நான் உனக்கு கொஞ்சம் நவீனமா பேர் வைக்கணும்னு தோணுச்சு. அதான் நவீன் என்று பேர் வச்சிட்டேன்” என்று சொல்லியதைக் கேட்டபடி விளையாடச் சென்றான். சுவற்றில் தொங்கவிடப்பட்டிருந்த நாகம்மா ஆண்டவர் திருமணத்தின்போது வழங்கப்பட்ட பெரியார் புகைப்படத்தில் ஒரு கம்பீரம் தோன்றி மறைந்தது அப்போது.




வீட்டின் வேர்கள் - யாழ் தண்விகா


 கதை சொல்லல் பயிற்சிக்குச் சென்று எழுதிய சிறார் கதை...


வீட்டின் வேர்கள்


யாழ் தண்விகா 

 

   வீட்டிற்குச் செல்வதற்கான மணிச் சத்தம் “டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்ங்” என்று அடிக்கத் தொடங்கியதும் பிள்ளைகள் அனைவரும் தங்கள் பைகளைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு சந்தோசமாகக் கிளம்பத் தொடங்கினர்.  கவின் ஐந்தாம் வகுப்பும், தனு இரண்டாம் வகுப்பும் அதே பள்ளியில் தான் படிக்கின்றனர். இருவரும் வகுப்பறையிலிருந்து வெளியேறி ஒன்றாகச் சேர்ந்த பின்னர் வீடு நோக்கிக் கிளம்பினர். தெருவின் ஒரு ஓரமாக, இருவரும் பேசிக்கொண்டே வீடு வந்து  சேர்ந்தனர்.


 வீட்டிற்குச் சென்று புத்தகப் பைகளை வைக்கவேண்டிய இடத்தில் வைத்துவிட்டு கைகளைக், கால்களைக் கழுவிவிட்டு வந்தனர் கவினும் தனுவும். சற்று நேரத்தில் அவர்களுக்கு மாலை நேரச் சிற்றுண்டியாக பால் கொழுக்கட்டையைச் செய்து பாட்டி எடுத்து வந்து தந்தார். வாரத்தில் இப்படி இரண்டு மூன்று நாட்கள் அதிரசம், முறுக்கு, புட்டு, கொழுக்கட்டை இப்படி ஏதாவது ஒன்றை பாட்டி செய்து தருவார். அதை மகிழ்வோடு உண்டபின்னால் வீட்டின் முன்புறம் சென்று விளையாடத் தொடங்கினர். அப்போது தான் எதிர்வீட்டில் வசிக்கும் கண்ணன், அமுதாவின் பிள்ளைகளான வாசனும் ஜோதியும் பள்ளியிலிருந்து வந்தனர். இருவரும் கவினும் தனுவும் படிக்கும் அதே வகுப்பு தான் படிக்கின்றனர். அதே பள்ளியில் தான் படிக்கின்றனர். ஆனாலும் இவ்வளவு தாமதமாக வருவதற்குக் காரணம் என்ன?


 கண்ணனும் அமுதாவும் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்ப மாலை 7 மணி ஆகிவிடும். அது வரை வீட்டில் வாசனும் ஜோதியும் தான். அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். சில சமயம் காயம் ஆகும் அளவுக்குக் கூட சண்டை போடுவார்கள். பெரிய காயம் என்றால்  வேலை முடித்து வந்தவுடன் அம்மாவோ அப்பாவோ அவர்களை மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு ஓடுவார்கள். சண்டை போட்டுக்கொண்டாலும் அம்மா அப்பா வந்தவுடன் அவர்கள் முன்னால் எதுவுமே தெரியாதது போல இருப்பார்கள். அம்மா காலையில் சமைத்த பாத்திரங்களையும், பயன்படுத்திய பொருட்களையும் கழுவி எடுத்துவைப்பாள். இரவுச் சமையலை செய்யத் தொடங்குவாள். அப்பா கடைக்குச் சென்று வருவார். அம்மாவிற்கு சமைக்கும்போது உதவிடுவார். இருவரும்  கொஞ்ச நேரம் பிள்ளைகளிடம் பள்ளியில் என்ன நடத்தினார்கள் என்பதைக் கேட்டுவிட்டு உறங்கிவிட்டு மீண்டும் அதிகாலையில் எழுந்து சமையலை முடித்து, பிள்ளைகளைச் சாப்பிட வைத்துவிட்டுக் கிளம்புவார்கள். சில நேரங்களில் கொஞ்சம் தாமதமானால் வாசனையும் ஜோதியையும் சாப்பிட்டுப் பள்ளிக்குச் செல்லச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிடுவார்கள். பரபரப்பான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.  இது ஒரு தொடர்வேலை போல தினந்தோறும் நடந்துகொண்டே இருக்கும்.  இந்த வேலைகளில் எதுவாவது ஒன்று தடைபட்டாலும் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் இடையே சண்டை வந்துவிடும். 


 ஆனால் கவின், தனு வீட்டில் இது போன்ற பிரச்சனையில்லை. மாலை நேரங்களில் தன்னால் இயன்றவரை பாட்டி, வீடு வாசலைச் சுத்தம் செய்து வைப்பார். தாத்தா, தன்னுடைய பேரக் குழந்தைகளுக்கு சிலம்பாட்டம் கற்றுத் தருவார். ஒயில், தேவராட்டம் போன்ற ஆட்டங்களைக் கற்றுத் தருவார். காலாற இருவரையும் அழைத்துக்கொண்டு வயல்பக்கம் அழைத்துச் சென்று வருவார். அவர்களை வீட்டுப்பாடம் செய்யச் சொல்லி அருகில் இருந்து கவனித்துக்கொள்வார். மில்லில் இருந்து பணி முடித்து பெரும்பாலும் எட்டு மணிக்கு மேல் தான் கவின், தனுவின் பெற்றோர் வீட்டுக்கு வருவார்கள். வந்தவுடன் விரைவாக சமையலை முடிப்பாள் அம்மா. பிள்ளைகளின் படிப்பைக் கவனிப்பார் அப்பா. ஒருவேளை அவர்கள் வரத் தாமதமானாலும் பாட்டி சமையலை முடித்து வைத்துவிடுவாள். ஆனால் ஒரு சில நாட்களில் வாசன், ஜோதியின் அம்மாவும் அப்பாவும் தாமதமாக வீட்டுக்கு வரும்போது சாப்பிடாமல் கூட அவர்கள் உறங்கியிருப்பார்கள். கவினுக்கும் தனுவுக்கும் அதுபோல பட்டினியால் உறங்கும் சூழல் இதுவரை வாய்த்ததில்லை.


 கவினும் தனுவும் இரவில் சாப்பிட்டு முடித்தவுடன் பாட்டி அருகில்தான் பெரும்பாலும் படுப்பது வழக்கம். இருவரின் படிக்கும் ஆர்வத்தை மேலும் வளர்க்குமாறு தூங்கும்வரை பாட்டி அவர்களுக்குக் கதைகள் கூறுவாள். பழமொழிகள் கூறுவாள். திருவிழாக்கள், கோவில், குளம் போன்ற தகவல்களைக் கூறுவாள். மூலிகைச் செடிகள் பற்றிக் கூறுவாள்.  இதையெல்லாம் கேட்டுக்கொண்டுதான் கவினும் தனுவும் தினந்தோறும் உறங்குவார்கள்.  


 வாசன், ஜோடியின் குடும்பத்தை விட ஏழ்மைக் குடும்பம்தான் கவின், தனுவின் குடும்பம். அவர்களின் பெற்றோரை விட கவின், தனுவின் பெற்றோர்களின் படிப்பும் கம்மி தான். ஆனால் முறையான வளர்த்தலால், கண்காணிப்பால், திட்டமிடலால் கவினும், தனுவும் படிப்பில் முதலாக வந்தனர். படிப்பு என்பது வாசனுக்கும் ஜோதிக்கும் பெரிய ஒரு விசயமாகத் தெரியவில்லை. இதை மாற்றக்கூட வாசன், ஜோதியின் அம்மா, அப்பாவிற்கு நேரமில்லை. ஒருநாள் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் கலந்துகொண்டு கவினும் தனுவும் முதல் இடத்தைப் பிடித்தபோது பள்ளியே அவர்களை வாழ்த்தியது. தலைமையாசிரியர், ஆசிரியர்கள் அவர்களைக் கொண்டாடினர். அதை தற்செயலாகத் தெரிந்துகொண்ட வாசனின் அப்பா, வாசனையும், ஜோதியையும் திட்டினார். “அவர்களைப் பாருங்கள். எப்படி படிக்கிறார்கள்? எவ்வளவு திறமையாக விளையாடுகிறார்கள்? அவர்களின் வகுப்பு தானே நீங்களும். உங்களால் ஏன் முடியவில்லை” எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் திட்டினார். பதில் சொல்லத் தெரியாமல் இருவரும் திருதிருவென்று அமர்ந்திருந்தனர். 


 மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. காலை உணவை முடித்துவிட்டு விளையாடிக்கொண்டு இருந்தார்கள் வாசன், ஜோதி, கவின் மற்றும் தனு. அப்போது எதிர்பாராமல் தனு கீழே விழுந்துவிட்டாள். அதனைப் பார்த்துக்கொண்டிருந்த பாட்டி சட்டென வீட்டிற்குள் சென்று மஞ்சளை எடுத்துவந்து காயம் பட்ட இடத்தைத் துடைத்துவிட்டு அவ்விடத்தில் வைத்துவிட்டாள். இரண்டு நாட்களில் காயம் ஆறிவிட்டது. வாசனுக்கும் ஜோதிக்கும் இது ஆச்சர்யமாக இருந்தது. எப்படி இதெல்லாம் பாட்டிக்குத் தெரிந்தது? பாட்டி மருத்துவரா? நமது வீட்டைப் போலவேதான்  இங்கும் இருக்கிறார்கள். ஆனால் எப்படி கவினும் தனுவும் சிறப்பாகப் படிக்கிறார்கள். புத்திக் கூர்மையுடன் இருக்கிறார்கள், எப்படி சிறப்பாக விளையாடுகிறார்கள் அவர்கள் தாத்தாவுக்கு மட்டும் எப்படி இவ்வளவு கலைகள் தெரிகிறது? என்றெல்லாம் சந்தேகம் வந்துவிட்டது. அந்தக் கேள்வியை நேரடியாக கவினிடமே கேட்டுவிட்டான் வாசன்.

 அதற்கு கவின், “என்னுடைய அம்மா, அப்பாவின் பல வேலைகளில் எங்கள் தாத்தாவும் பாட்டியும் அவர்கள் இருக்கும்போதும் இல்லாதபோதும் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு மட்டுமல்லாமல் எங்கள் பெற்றோருக்கும் வழிகாட்டுகிறார்கள். அம்மா அப்பா வேலைக்குச் செல்கிறார்கள். சம்பாதிக்கிறார்கள். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எப்போதாவது ஏதாவது சண்டை வந்தால் அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துத் தீர்த்துவைக்கிறார்கள்.  எங்களுக்கு நன்னெறிக் கதைகள் சொல்கிறார்கள். படிப்பதன் அவசியம் சொல்கிறார்கள். தாத்தாவும் பாட்டியும் வாழ்வில் தாங்கள் கற்ற அனுபவங்களை எங்களுக்குச் சொல்லித் தருகிறார்கள். எங்களுக்குப் பாதுகாவலாக இருக்கிறார்கள். மொத்தத்தில் அவர்கள் எங்களுக்கு வாழ்க்கையைக் கற்றுத் தருபவர்கள். ஒரு வார்த்தையில் சொல்வதானால் எங்களுடைய தாத்தாவும் பாட்டியும் எங்களுக்கு இன்னொரு அப்பா அம்மா. அவர்கள் இல்லாமல் எங்கள் படிப்போ விளையாட்டோ இவ்வளவு சிறக்க வாய்ப்பில்லை” என்று சொல்கிறான். எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்தான் வாசன்.


 அன்று இரவு வாசனும் ஜோதியும் அவர்களின் அம்மா, அப்பாவிடம் சரியாகப் பேசவில்லை. சாப்பிடவும் இல்லை. “ஏன் இப்படி இருக்கிறீர்கள்?” எனக் கேட்டதற்கு எங்களுக்கு இன்னொரு அப்பா அம்மா வேண்டும் எனச் சொல்கிறார்கள். “என்ன இது முட்டாள் தனமான விருப்பம்?” அது எப்படி முடியும்? என வாசனின் அப்பா கோபப்படுகிறார். அப்போது “அந்த இன்னொரு அப்பா அம்மா வேறு யாருமில்லை. ஏன் எங்க தாத்தா பாட்டியாக இருக்கக்கூடாது... கவின், தனுவின் தாத்தா பாட்டியைப் போல” என ஒரே குரலில் சொல்கிறார்கள். இதைக் கேட்டவுடன் இவ்வளவு நாள் தாத்தா பாட்டியை, பேரக் குழந்தைகளோடு இருக்கவிடாமல் ஊரில் தனியாக விட்டு வந்துவிட்டோமே என்ற உண்மையைப் புரிந்துகொண்டும், குற்ற உணர்வோடும் “சரி, கவலைப் படாதீர்கள், நாளை எல்லோரும் தாத்தா பாட்டியைக் கூப்பிட ஊருக்குப் போகலாம், இப்போ சாப்பிடுங்க” என்று கூறுகிறார் வாசனின் அப்பா மகிழ்வோடு.   


வகுப்பு : 3

பாடம் : சமூக அறிவியல்

பாடத் தலைப்பு : குடும்பம்

Saturday, 18 October 2025

நான் மீண்டும் திரும்புகிறேன் - ஷக்தி

 


"இருண்ட காலக் கதைகள்" தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதை. கொரானோ காலக் கொடூரம் பற்றியது. முதலாளி கொள்ளை லாபம் அடிக்கப் பார்க்கிறான், தொழிலாளி நேரம் காலம் தெரியாமல் உழைக்க நிர்பந்திக்கப் படுகிறான். இதற்கு மத்தியில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட பெண், அவள் கணவன், மாமனார் என்று ஓடும் கதை. கொரோனா வந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபின் தனது மனைவியைக் காணத் துடிக்கும் கணவனின் வலி, மனைவிக்கும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் கொரோனா இருக்குமோ என்ற பதட்டம் கதைக்கு வலு சேர்க்கிறது. கொரோனோ கால அரசியல், போலீஸ் இவற்றையெல்லாம் மீண்டும் படிக்கும்போது எவ்வளவு துயர் மிகுந்த காலங்களைக் கடந்து வந்திருக்கிறோம் என்று உணர முடிகிறது. கதையில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. வாழ்த்துகள் தோழர்.


❣️

இருள் எனப்படுவது யாதெனில்... ஏகாதசி

 


இருள் எனப்படுவது யாதெனில்...

ஏகாதசி Kavi Ekadasi Ekadasi 

படைப்பு பதிப்பகம்

பக்கங்கள் : 128

விலை : 120


இருட்டில் ஒளிரும் தரிசனம்


தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார்...? இந்தப் பாடல் வரிகள் உருவாக்கிய நிஜத்தின் முன்னால் மற்றுமொரு நிஜத்தைப் பார்க்கிறேன். அது தண்ணீரின் வலி என்ற ஒன்றாக ஏன் இருக்கக்கூடாது என்பதே. இருளில் அழும் மனிதர்கள், இரவின் மர்மம், இருளின் குணாம்சம் என பல தகவல்களை அறிந்திருப்போம். இருளைக் கிழித்து, இருளில் கவிதையெழுதி, இருள் தாள்களைக் கசக்கித் தூக்கியெறிந்து, இருளுக்குள் அவற்றைக் கண்டடையுங்கள் என்றால் இதென்ன அபத்த இருள் என்ற எண்ணம் தோன்ற வாய்ப்பாகுதல் இயல்பு. எனினும் அது போன்றதொரு சிலிர்ப்புண்டாக்கும் இருளை தான் கண்ட ஐந்து நாள் இருளின் வாயிலாக கண்டடைந்திருக்கிறார் அதைக் கவிதையில் கொண்டு வந்திருக்கிறார் கவிஞர் ஏகாதசி. 


100 இருள். ஒவ்வொன்றுக்கும் எத்தனை கண்கள் இருக்கும் என்பது முடிவிலி. எப்போதோ எழுதிய வரிகள் “இரவுக்கு ஆயிரம் கண்கள்” என்பது. அது நட்சத்திரம் மட்டுமா? கண்கள் என்பது ஏன் கண்களாகவே இருக்கக்கூடாது? தொகுப்பில் என்னை உலுக்கிய கவிதை இந்தக் கேள்வியை இப்போதுவரை எனக்குள் எழுப்பிக்கொண்டே இருக்கிறது. 

“எங்காவது செல்லும்போது

விளக்கை அணைத்து 

வீடு பூட்டுகிறீர்கள்

யாரும் அறிந்திருக்கவில்லை

உள்ளே இருட்டிருப்பதை...” 

பூட்டிய வீடுதான் என்றபோதும் வெளியில் நாம் வந்தபின், கதவு திறக்காமல் நம்மை நாம் உள்ளே அனுப்பி எல்லாம் சரியாக பூட்டியாகிவிட்டதா? மூடி வைத்துவிட்டோமா? என வேவு பார்க்கும் வேலையையும் நாம்தானே செய்கிறோம்! கவிஞரின் கேள்வியில் நங்கூரமிட்டு அமர்ந்திருப்பது இருள் என்னும் மாயப் பிசாசு.


இருட்டை வைத்து ஒருசில விளையாட்டுகளையும் நகைப்பாக நம்முன் எடுத்துவைக்கிறார் கவிஞர். வாசிக்கும்போதே நமது கால்களும் இருட்டை மிதிக்காமல் செல்லும் லாவகத்தைக் கற்றுவிடுகிறது. 

“காலடியில் கிடக்கும்

இருட்டையெல்லாம் மிதித்து விடாமல்

தாண்டித் தாண்டிச் செல்கிறான்

ஒரு குடிகாரன்”  

வெறும் குடிகாரன் மட்டும் என்று எடுத்துக்கொள்வதா? மனித மனங்களில் எப்போதும் தனக்கே தனக்கேயான ஒரு பாதுகாப்பு உணர்வு தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும். அது வாழ்தலின் நிமித்தம் நமக்குள் நாம் தோற்றுவித்துக்கொள்வது. அதனை நாமிங்கு குடிகாரனில் புகுந்துகொள்வதன் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.


என்னுரையில் கவிஞர் சொல்கிறார், “இருட்டை நம் அன்பிற்குரிய ஒன்றென பழகியிருந்திருந்தால் மரணம் என்கிற ஒன்றுகூட நம் அஞ்சறைப் பெட்டிக்குள் இருந்திருக்கும் என்று என்னுரையில் கவிஞர் குறிப்பிடுவதை ஒவ்வொரு கவிதையையும் வாசிக்கும்போது உணரமுடியும். 

“நெடுஞ்சாலையில் போற வார

லாரிகளுக்கு கைபோட்டபடி

நின்றிருப்பவளின் இருட்டு நேரத்திற்கு

சோறு என்று பொருள்” 

என்ற கவிதையில் உள்ள மூன்றாம் வரி அவளின் முக்காலத்தையும் உணர்த்துவது. அதை இருள் என்றுமட்டும் கடந்துவிட முடியுமா? அது அவளின் வாழ்வு. அதனை நீட்டி முழக்கிச் சொல்லாமல் சோறு என்று பொருள் என்று முடித்துவைப்பதிலிருக்கிறது கவிஞரின் சொல்லாட்சி. வெளிச்சத்தை மட்டும் நேசிப்பவர்களுக்கும், கோடிட்டுக் காட்டுபவர்களுக்கும் பிறிதொரு கவிதையில் இருட்டின் தேவை குறித்து நான்கு வரிகளில் நச்சென்று கூறுகிறார் கவிஞர்,

“பிளாட்பாரவாசிகள்

உண்பதற்கும் மலம் கழிப்பதற்கும்

மற்றும் புணர்வதற்கும்

ஒரே சுவர் இருட்டு”

இருட்டு என்பது இங்கு அரசியல், பொருளாதாரம், சமூகம் எல்லாமுமாகத்தான் இந்தக் கவிதையிலிருக்கிறது.


ஒவ்வொரு இருளும் பார்க்கும் கோணத்தில் பரவசப்படுத்திவிடுகிறது. மூடியிருக்கும் அறைக்குள் வரும் வெளிச்சத்தை உணராதோர் யார்? அது கவிஞரின் பார்வைக்கு அகதியாகத் தெரிவது ஆச்சர்யம். அகதியும் இங்கு வெளிச்ச அகதியாகத் தெரிவது பேராச்சர்யம். அவர்களை அகதியாக, நிர்க்கதியாக இப்படி நிற்கவைத்து, இந்த நிலைக்குக் காரணமாக கையாலாகாத நிலையில் இருந்து இப்போது குடியுரிமை வழங்கினால் எல்லாம் சரியாகிவிடுமா? ஆகவேதான் இந்த வார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிடுகிறது... “குடியுரிமை வழங்குகின்றது இருள்...”

“வெளியிலிருந்து வரும்

வெளிச்ச அகதிகளுக்கெல்லாம்

குடியுரிமை வழங்குகின்றது

இருள்”


சிறுவனின் சிறுநீர் இரவு, உச்சி வெயில் நிழல், நாய்களின் இரவு, கரும்பலகை இருட்டு, சேவல் உண்ணும் வெளிச்சம் என நீளும் இரவும், இருளும் பல வெளிச்சக் கீற்றுக்களை நமக்குள் உண்டுபண்ணுகின்றன. பார்க்கத் தவறிய அவற்றை இருள் எனப்படுவது யாதெனில் என்ற தலைப்பில் 100 கவிதைப் பார்வையை அளித்திருக்கிறார் கவிஞர் ஏகாதசி. கவிதை வழியாக ஓர் ஆய்வுரையை வழங்கியிருக்கிறார் மா.காளிதாஸ் தோழர். கவிதையை இப்படியெல்லாம் ஆராயமுடியுமா என்றெண்ணும் வண்ணம் அணிந்துரை. அருமை. “புற அழகைப் புகழ்வதைவிட அக அழகை ஆராதிப்பதே ஆன்ம தரிசனம். அப்படியெனில் அகம் என்பது அழகிய இருளின் ஞான வெளிச்சம்” என பதிப்புரையில் வழக்க முத்திரை பதிக்கிறார் பதிப்பாளரும் கவிஞருமான Mohamed Ali Jinna தோழர். அட்டைப்படம் அடடா...!

நிறைவாக,

“ஓர் அழகிய கண்ணையோ

ஓர் அழகியின் கண்ணையோ

வரைந்துவிட முடியாது

இருட்டு வண்ணம் கொஞ்சம்

எடுத்துக்கொள்ளாமல்”

காதலுக்கான, காதலிக்கான இருட்டு எப்போதும் வெளிச்சம்தான். மேற்சொன்ன கவிதையைப் போல.

எழுத்துப்பணி தொடரட்டும்.


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️