Saturday, 18 October 2025

நான் மீண்டும் திரும்புகிறேன் - ஷக்தி

 


"இருண்ட காலக் கதைகள்" தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதை. கொரானோ காலக் கொடூரம் பற்றியது. முதலாளி கொள்ளை லாபம் அடிக்கப் பார்க்கிறான், தொழிலாளி நேரம் காலம் தெரியாமல் உழைக்க நிர்பந்திக்கப் படுகிறான். இதற்கு மத்தியில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட பெண், அவள் கணவன், மாமனார் என்று ஓடும் கதை. கொரோனா வந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபின் தனது மனைவியைக் காணத் துடிக்கும் கணவனின் வலி, மனைவிக்கும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் கொரோனா இருக்குமோ என்ற பதட்டம் கதைக்கு வலு சேர்க்கிறது. கொரோனோ கால அரசியல், போலீஸ் இவற்றையெல்லாம் மீண்டும் படிக்கும்போது எவ்வளவு துயர் மிகுந்த காலங்களைக் கடந்து வந்திருக்கிறோம் என்று உணர முடிகிறது. கதையில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. வாழ்த்துகள் தோழர்.


❣️

இருள் எனப்படுவது யாதெனில்... ஏகாதசி

 


இருள் எனப்படுவது யாதெனில்...

ஏகாதசி Kavi Ekadasi Ekadasi 

படைப்பு பதிப்பகம்

பக்கங்கள் : 128

விலை : 120


இருட்டில் ஒளிரும் தரிசனம்


தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார்...? இந்தப் பாடல் வரிகள் உருவாக்கிய நிஜத்தின் முன்னால் மற்றுமொரு நிஜத்தைப் பார்க்கிறேன். அது தண்ணீரின் வலி என்ற ஒன்றாக ஏன் இருக்கக்கூடாது என்பதே. இருளில் அழும் மனிதர்கள், இரவின் மர்மம், இருளின் குணாம்சம் என பல தகவல்களை அறிந்திருப்போம். இருளைக் கிழித்து, இருளில் கவிதையெழுதி, இருள் தாள்களைக் கசக்கித் தூக்கியெறிந்து, இருளுக்குள் அவற்றைக் கண்டடையுங்கள் என்றால் இதென்ன அபத்த இருள் என்ற எண்ணம் தோன்ற வாய்ப்பாகுதல் இயல்பு. எனினும் அது போன்றதொரு சிலிர்ப்புண்டாக்கும் இருளை தான் கண்ட ஐந்து நாள் இருளின் வாயிலாக கண்டடைந்திருக்கிறார் அதைக் கவிதையில் கொண்டு வந்திருக்கிறார் கவிஞர் ஏகாதசி. 


100 இருள். ஒவ்வொன்றுக்கும் எத்தனை கண்கள் இருக்கும் என்பது முடிவிலி. எப்போதோ எழுதிய வரிகள் “இரவுக்கு ஆயிரம் கண்கள்” என்பது. அது நட்சத்திரம் மட்டுமா? கண்கள் என்பது ஏன் கண்களாகவே இருக்கக்கூடாது? தொகுப்பில் என்னை உலுக்கிய கவிதை இந்தக் கேள்வியை இப்போதுவரை எனக்குள் எழுப்பிக்கொண்டே இருக்கிறது. 

“எங்காவது செல்லும்போது

விளக்கை அணைத்து 

வீடு பூட்டுகிறீர்கள்

யாரும் அறிந்திருக்கவில்லை

உள்ளே இருட்டிருப்பதை...” 

பூட்டிய வீடுதான் என்றபோதும் வெளியில் நாம் வந்தபின், கதவு திறக்காமல் நம்மை நாம் உள்ளே அனுப்பி எல்லாம் சரியாக பூட்டியாகிவிட்டதா? மூடி வைத்துவிட்டோமா? என வேவு பார்க்கும் வேலையையும் நாம்தானே செய்கிறோம்! கவிஞரின் கேள்வியில் நங்கூரமிட்டு அமர்ந்திருப்பது இருள் என்னும் மாயப் பிசாசு.


இருட்டை வைத்து ஒருசில விளையாட்டுகளையும் நகைப்பாக நம்முன் எடுத்துவைக்கிறார் கவிஞர். வாசிக்கும்போதே நமது கால்களும் இருட்டை மிதிக்காமல் செல்லும் லாவகத்தைக் கற்றுவிடுகிறது. 

“காலடியில் கிடக்கும்

இருட்டையெல்லாம் மிதித்து விடாமல்

தாண்டித் தாண்டிச் செல்கிறான்

ஒரு குடிகாரன்”  

வெறும் குடிகாரன் மட்டும் என்று எடுத்துக்கொள்வதா? மனித மனங்களில் எப்போதும் தனக்கே தனக்கேயான ஒரு பாதுகாப்பு உணர்வு தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும். அது வாழ்தலின் நிமித்தம் நமக்குள் நாம் தோற்றுவித்துக்கொள்வது. அதனை நாமிங்கு குடிகாரனில் புகுந்துகொள்வதன் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.


என்னுரையில் கவிஞர் சொல்கிறார், “இருட்டை நம் அன்பிற்குரிய ஒன்றென பழகியிருந்திருந்தால் மரணம் என்கிற ஒன்றுகூட நம் அஞ்சறைப் பெட்டிக்குள் இருந்திருக்கும் என்று என்னுரையில் கவிஞர் குறிப்பிடுவதை ஒவ்வொரு கவிதையையும் வாசிக்கும்போது உணரமுடியும். 

“நெடுஞ்சாலையில் போற வார

லாரிகளுக்கு கைபோட்டபடி

நின்றிருப்பவளின் இருட்டு நேரத்திற்கு

சோறு என்று பொருள்” 

என்ற கவிதையில் உள்ள மூன்றாம் வரி அவளின் முக்காலத்தையும் உணர்த்துவது. அதை இருள் என்றுமட்டும் கடந்துவிட முடியுமா? அது அவளின் வாழ்வு. அதனை நீட்டி முழக்கிச் சொல்லாமல் சோறு என்று பொருள் என்று முடித்துவைப்பதிலிருக்கிறது கவிஞரின் சொல்லாட்சி. வெளிச்சத்தை மட்டும் நேசிப்பவர்களுக்கும், கோடிட்டுக் காட்டுபவர்களுக்கும் பிறிதொரு கவிதையில் இருட்டின் தேவை குறித்து நான்கு வரிகளில் நச்சென்று கூறுகிறார் கவிஞர்,

“பிளாட்பாரவாசிகள்

உண்பதற்கும் மலம் கழிப்பதற்கும்

மற்றும் புணர்வதற்கும்

ஒரே சுவர் இருட்டு”

இருட்டு என்பது இங்கு அரசியல், பொருளாதாரம், சமூகம் எல்லாமுமாகத்தான் இந்தக் கவிதையிலிருக்கிறது.


ஒவ்வொரு இருளும் பார்க்கும் கோணத்தில் பரவசப்படுத்திவிடுகிறது. மூடியிருக்கும் அறைக்குள் வரும் வெளிச்சத்தை உணராதோர் யார்? அது கவிஞரின் பார்வைக்கு அகதியாகத் தெரிவது ஆச்சர்யம். அகதியும் இங்கு வெளிச்ச அகதியாகத் தெரிவது பேராச்சர்யம். அவர்களை அகதியாக, நிர்க்கதியாக இப்படி நிற்கவைத்து, இந்த நிலைக்குக் காரணமாக கையாலாகாத நிலையில் இருந்து இப்போது குடியுரிமை வழங்கினால் எல்லாம் சரியாகிவிடுமா? ஆகவேதான் இந்த வார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிடுகிறது... “குடியுரிமை வழங்குகின்றது இருள்...”

“வெளியிலிருந்து வரும்

வெளிச்ச அகதிகளுக்கெல்லாம்

குடியுரிமை வழங்குகின்றது

இருள்”


சிறுவனின் சிறுநீர் இரவு, உச்சி வெயில் நிழல், நாய்களின் இரவு, கரும்பலகை இருட்டு, சேவல் உண்ணும் வெளிச்சம் என நீளும் இரவும், இருளும் பல வெளிச்சக் கீற்றுக்களை நமக்குள் உண்டுபண்ணுகின்றன. பார்க்கத் தவறிய அவற்றை இருள் எனப்படுவது யாதெனில் என்ற தலைப்பில் 100 கவிதைப் பார்வையை அளித்திருக்கிறார் கவிஞர் ஏகாதசி. கவிதை வழியாக ஓர் ஆய்வுரையை வழங்கியிருக்கிறார் மா.காளிதாஸ் தோழர். கவிதையை இப்படியெல்லாம் ஆராயமுடியுமா என்றெண்ணும் வண்ணம் அணிந்துரை. அருமை. “புற அழகைப் புகழ்வதைவிட அக அழகை ஆராதிப்பதே ஆன்ம தரிசனம். அப்படியெனில் அகம் என்பது அழகிய இருளின் ஞான வெளிச்சம்” என பதிப்புரையில் வழக்க முத்திரை பதிக்கிறார் பதிப்பாளரும் கவிஞருமான Mohamed Ali Jinna தோழர். அட்டைப்படம் அடடா...!

நிறைவாக,

“ஓர் அழகிய கண்ணையோ

ஓர் அழகியின் கண்ணையோ

வரைந்துவிட முடியாது

இருட்டு வண்ணம் கொஞ்சம்

எடுத்துக்கொள்ளாமல்”

காதலுக்கான, காதலிக்கான இருட்டு எப்போதும் வெளிச்சம்தான். மேற்சொன்ன கவிதையைப் போல.

எழுத்துப்பணி தொடரட்டும்.


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️

Tuesday, 14 October 2025

அட்டு

 


அட்டு பிகருக்கு வந்த வாழ்க்கை


#சிறுகதை


யாழ் தண்விகா


 பெரு மழை பொழிந்து கொண்டிருந்தது. தட்டுப்படும் எல்லா வீடுகளின் கதவுகளும் அடைக்கப்பட்டிருந்தன. காற்றின்றிப் பெய்யும் மழையாதலால் ஜன்னல்கள் திறந்திருந்தன. யாரும் எட்டிப் பார்க்கவில்லை எனினும் ஜன்னல் வழியாக வீட்டில் உள்ள அனைவரையும் மழை பார்த்துக்கொண்டிருந்தது. யார் நனைந்தாலும் மழைக்குக் குளிர் அடிக்கப் போவதில்லை. குளிர் வேண்டாம் என்ற மனநிலை ஒருபுறம் இருந்தாலும் காய்ச்சல் வரும் என்ற பயமே மனிதர்களை வீட்டுக்குள் முடக்கிப் போட்டிருந்தது. நின்று ஆடிக்கொண்டிருந்த மழைக்குள் குடையோடு ஒருத்தி வந்துகொண்டிருந்தாள். மழைக்கு முன்னால் நெய்த ஒப்பனை மழையால் இன்னும் மிளிரத் தொடங்கியிருந்தது அவளில்.


 வலது கையில் அவள் பிடித்திருந்த வண்ண நிற குடையையும் அவளையும் பார்க்கும்போது பட்டாம்பூச்சி ஒன்று  பூவை வாயால் கவ்விச் செல்வது போலிருந்தது.. இடது கை விரல்களால் மடிப்பு வைத்துக் கட்டியிருந்த அப்புடவையை கரை நனைந்து விடாமல் மையமாகப் பிடித்து தூக்கிப் பிடித்தபடி வந்தாள். பூனை தன்னுடைய குட்டியைக் கவ்விக்கொண்டு செல்வது போல என்று இதைச் சொல்லிக் சொல்லலாம் இதுவரைதான் நினைவில் இருக்கும்படியான காட்சிகள்.  இதனைத் தொடர்ந்து வருவதை அவனின் கண்கள் பார்க்கப் பார்க்க மழைக்காமத்தில் பூத்த மனசு மீண்டும் மீண்டும் பிரதிகளாக எடுத்து உயிரின் சுவர்கள் அனைத்திலும் ஆணியடித்து மாட்டிக்கொண்டே இருந்தது.  


 மழைக்கு எவ்வளவு இரக்கம் இருக்கும் என்பது அவளை அவள் விருப்பம் இல்லாமல் தொடக்கூடாது என்றெண்ணும் மழையின் விருப்பத்தின் பக்கமிருந்தே அறியலாம். ஒரு தேவதைக்கான பாதை என்று அந்தத் தெருவில் இருந்திருந்தால் இதோ இவன் இப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்திருக்க முடியாது. வெறுமனே அதனை வேடிக்கை என்று எப்படிச் சொல்வது? தரிசனம் தான் அது.


 முழங்காலுக்குச் சற்றுக் கீழ்வரை மட்டுமே புடவை மறைத்திருந்தது. மீதப் பக்கங்களில் அவள் ஒளிர்ந்தாள். மென் மஞ்சள் பூசிய அக்கால்களில் மழைத்துளி ஒவ்வொன்றும் நட்சத்திரப்பூக்களாக மாறி தன்னுடைய அர்ச்சனையை தூவலாகப் பதிவுசெய்துகொண்டிருந்தது. வழுவழுவென்ற அக்கால்களில் வழிந்தோடிய நீரில் குளிக்கும் மீன்கள் பாக்கியம் பெற்றவை. மெல்லக் கூடும் நீரில் அடிக்கும் அவளின் அலை எப்படியும் இந்நீரை கடலில் சேர்த்துவிடும்.


 கால்களின் கூச்சம் சட்டெனக் கூடு பாய்ந்து மூளைக்குள் மின்னலைப் பாய்ச்சுகிறது. யாரோ தன்னைப் பார்க்கிறார்கள் என்பதை உணர்த்தும் சமிக்ஞை அது. தலை சாய்ந்து தலையில் ஈரம் பட்டுவிடாமலிருக்க வந்த குடை மெல்லத் தலை நிமிர்கிறது. கண்களை மழைக்கண்களின் ஊடே நனைந்துவிடாமல் அவளின் கால்களில் ஊடுருவவிட்ட அவனுக்கு அவளின் முகம் மெல்ல மெல்லத் தெரிகிறது. விதையிலிருந்து முட்டி மோதி வெளிவந்து தனக்கான காற்றைச் சுவாசிக்கும் தளிரின் மென்னிலைகள் இமைகளாகி காற்றைக் கண்ணடிக்கிறது. மழை தாண்டி ஓடும் கண்கள் இதோ இங்கிருந்து பார்க்கிறானே இவனின் கண்களை கண்விலங்கிட்டுக் கைப்பற்றுகிறது. குற்றம் தாளாமல் கண்களைத் தரை நோக்கித் தாழ்த்திக்கொள்வதா? இவளைக் காண எனக்காக  நேர்ந்துவிடப்பட்டிருக்கும் இந்த மழை நாளை இவள் என்ன செய்தால் என்ன என நேரடியாகப் பார்த்துக் கொள்வதா? என்றெல்லாம் குழப்பம் இல்லை. நேர் பார்வைதான். மின்னல் மோதிக் கொள்வது மழைக்குள் சாத்தியம் தானே. 


  “இப்படி மழைக்குள்ள நடக்குற பொம்பளைய உத்துப் பார்க்குறயே, அசிங்கமாத் தெரியலையா?” தேவதை உதிர்த்த முதல் வார்த்தை அதுதான். 

 “ம்ஹூம் அழகாத்தான் தெரிஞ்சது” என்ற பதில் மனசுக்குள்ளிருந்து ஓடி வந்து நாக்கின் நுனியில் சிரிப்பாய் மாறிவிட்டது.

 “ஏய், உன்னைத்தாண்டா என்னடா சிரிப்பு? பிஞ்சிடும்” என்றபோது இன்னும் கொஞ்சம் இவனை நெருங்கிவிட்டிருந்தாள். 


 யார்டா இவள்? இவ்வளவு துணிச்சல் இவளுக்கு எப்படி? எந்த வெண்ணையாக இருந்தால் என்ன? என்றபடி கொஞ்சம் நன்றாகவே அவளைப் பார்த்தான். வாயில் கைகளை வைத்துக்கொண்டான். கண்களில் ஒரு ஆச்சர்யத் தேர் ஓடத் தொடங்கியது. இவளா? சின்ன வயதில் தலை முடியை ஒழுங்காக் கட்டத் தெரியாமல் தெருவே ஓடித் திரிவாளே. மூக்கு வழியுறத சரியாத் தொடைக்காம அதுக்காகப் பார்க்கும் பலரிடமும் முகச்சுழிப்பைச் சம்பாதிப்பாளே இவளா. சரியாகக் குளிக்காமல் கரேரென கை காலில் தொன்னி தொன்னியா வந்திருக்கும். அதுக்காகவே இவளைச் சொறிச்சி என்று பட்டப்பெயர் வைத்தோமே இவளா இவ்வளவு பேசுகிறாள்?


 “அடியே நதியா! நல்லாருக்கியா?” நினைவிலிருந்து அவனாகவே வெளியில் வந்து கேள்வியையும் கேட்டுவிட்டான் அவளிடம்.

 “டேய், என்னடா பண்ற? இப்போ வரைக்கும் இந்த மாதிரி பழக்கத்தை நீ விடலையா? எப்படிப் பார்க்குற? எருமை மாடே. அதும் கல்யாணம் முடிஞ்சவளை” என்றாள் நதியா.

 “கல்யாணம் முடிஞ்சதா? எப்ப முடிஞ்சுச்சு? நான் கொஞ்சநாள் ஊரில் இல்ல. இப்போதான் கொஞ்ச நாளுக்கு முன்னால ஊருக்கு வந்தேன். உன்னை விசாரிக்குற அளவுக்கு நீ இல்ல. அட்டு பிகரு. கோவிச்சுக்காத. எதுக்கு விசாரிச்சுட்டு? அதனால விசாரிக்கல. நானும் கார் எடுத்துட்டு எவன்டா வாடகைக்குக் கூப்பிடுவான்னு பாத்துட்டே திரியுறேன். உன்னை இன்னைக்கு பார்ப்பேன்னு நெனைக்கவே இல்ல. எப்படிடி இவ்வளவு அழகா மாறுன? கொஞ்ச நேரத்துல என்னென்னமோ உள்ளுக்குள்ள ஆகிடுச்சு” பேசிக்கொண்டே போனான்.


 நதியா, வாயைப் பொத்து என்பதுபோல கையை வைத்துக் காண்பித்துவிட்டு, “இப்போ நல்லாருக்கேன்ல. போதும். அந்தாளு வந்துதான் வீட்டில் விட்டுட்டுப் போச்சு. பிசினஸ் பண்றார் சென்னைல. இன்னும் மூணு நாள் இங்கதான் இருப்பேன். நாளை பேசுறேன். சரி என்னோட நம்பரைக் குறிச்சுக்க. என் செல் வீட்டுல கிடக்கு. வாரேன்” என்றபடி கிளம்பினாள்.


 வெற்றசைவாகத் தெரியவில்லை அவளின் புறப்பாடு. ஒவ்வொன்றும் அழகு என்பதை பார்க்கும் ஒவ்வொரு கணமும் ஒவ்வொன்றாக வெளிப்படுத்தும் பணியைச் செய்தால் என்னதான் பண்ணுவது? பின்னழகும் ஆட்டிவைத்தது புத்தியை. நீர் தெளிக்கப்படும் ஆடாகத் தலையை ஆட்டி கண்ணை மூடிப் பெருமூச்சும் விட்டுக்கொண்டு காருக்குள் ஏறி அமர்ந்தான் ராஜா.


 மூன்று நாள் ஓடியதே தெரியவில்லை. தினமும் நதியா அழைப்பாள். பேசுவான். வாட்சப்பில் மெசேஜ் பரிமாற்றம் ஓடியது. காலை வணக்கம் தொடங்கி குட் நைட் என்பது வரை நாளெல்லாம் தமதாக்கிக் கொண்டார்கள். நினைவுகளைப் பரிமாறும் புகைப்படங்கள் பகிர்ந்துகொண்டார்கள். மெருகேறிப் போய் இதற்குமேலும் கூடுவதற்கு அழகு இல்லை என்ற பூரணத்துவத்தில் இருந்தாள் நதியா. கழுத்தில் கைகளில் விரல்களில் தங்கம் ஜொலித்தது. யாரிடமும் பகை வளர்க்காமல் புன்னகைத்து அன்பை மட்டுமே தனக்கான சொத்தாகச் சேர்த்து வைத்திருந்தான் ராஜா. அதனால் என்ன பிரயோஜனம்? ஒன்றுமில்லை என்று தெரிந்தாலும் கார் ஓட்டி தன் பிழைப்பைப் பார்த்துவந்தான் அவன்.


 நான்காம் நாள் காலை நதியா அழைத்தாள். வழக்கம் போல பேச்சில்லை ராஜாவிடம். கொஞ்சம் மந்தமாக “ம்ம் சொல்லுடி” என்றான். “கார் எடுத்திட்டு வா. திண்டுக்கல் வரை. அந்தாளு என்னை ட்ரைன்ல வரச்சொல்றான். ரயில்வே ஸ்டேஷன் போகணும்” என்றாள் நதியா. எதையும் ராஜாவால் நம்ப முடியவில்லை. உடனே கார் எடுத்துச் சென்றான் நதியாவை அழைக்க. அவள் கிளம்பி தயாராகாவே இருந்தாள். “நம்ம ராஜா தம்பியா? சரியா. வண்டிய வெரட்டாம மெதுவாப் போய் ட்ரைன் ஏத்தி விட்டுட்டு வாயா” என்றாள் நதியாவின் அம்மா. “அதெல்லாம் பொறுமையாத்தான் போவேன் அத்த. கவலைப் படாதீங்க” என்று புன்னகைத்தபடி பொருட்களை எடுத்து வைத்தான். நதியா பின் சீட்டில் அமர்ந்துகொண்டாள். கார் கிளம்பியது.


 ஓரிடத்தில் காரை நிறுத்தி தேநீர் அருந்தினார்கள். “அப்பப்போ பேசுடி. மறந்துடாத. உன்னை தொந்தரவு தார மாதிரி ஒண்ணும் பண்ணமாட்டேன். உன்னை ஏன்டா பார்த்தேன்னு இருக்கு. தப்பு தான். ஆனாலும் மனசெல்லாம் என்னமோ பண்ணுது. என்ன பண்ண. ஒண்ணும் புரியல” என்றான் ராஜா. 

 மீண்டும் பின்னால் சீட்டில் அமரப் போனவள் “வெறும் டயலாக் மட்டும்தான் போல. முன்னால வந்து உக்காருடி சொல்லணும் எரும” என்று சொல்லிக் கொண்டே முன்னால் வந்து அமர்ந்துகொண்டாள் நதியா. அவன் பேசப் பேச அவன் முகத்தையே பார்த்துக்கொண்டே வந்தாள். ட்ரைன் எப்போ எனக் கேட்க அவள் “நைட் எட்டரைக்கு” என்றாள். “அப்போ அதுவரை என்ன பண்ண?” என்றான் ராஜா. 

 “வா சொல்லித்தாரேன். ஆளைப் பாரு ஒன்னொன்னாக் கேட்டுக்கிட்டே இருக்குறத” என்றவளைப் பார்த்து “எதுக்கு இவ்வளவு சீக்கிரம் கிளம்புறன்னு வீட்டில் கேட்கலையாடி” என்றான் ராஜா. “திண்டுக்கல்லில் ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போயிட்டுப் போகணும் சொல்லிட்டேன்’ என்றாள் சிரித்தபடியும் கொஞ்சம் அர்த்தம் பொதிந்தபடியும்.


 ட்ரைனில் அனுப்பிவிட்டுத் திரும்பும்பொழுது சிலமணி நேரங்கள் அவளோடு மகிழ்ந்திருந்த விடுதி கண்ணை விட்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னே சென்று கொண்டிருந்தது. எவ்வளவு சாமர்த்தியமாகப் பேசுகிறாள். நடந்துகொள்கிறாள். சிரிக்கிறாள். ஆளே முழுவதுமாக மாறிவிட்டாள்.  அவளோடு ஒப்பிடும்போது இப்போது தான்தான் அட்டு பிகராக இருப்பதாக அவனுக்குத் தோன்றியது.  அவ்வளவும் அவனுக்கு இப்போதும் நம்பமுடியவில்லை. ‘”வாடகையா நெனைக்காத” எனச் சொல்லி சில பல ஆயிரங்களை அவனின் பாக்கெட்டில் வைத்து அவன் நெற்றியில், இதழில் முத்தமிட்டபின் திறந்த அறை மீண்டு அவன் கண்ணெதிரே வந்து போனது. அட்டு பிகருக்கு வந்த வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டான் தனக்கு முன்னால் இருந்த கண்ணாடியில். வருத்தமில்லை. அத்தனையும் அவள் தந்தது. அதை இப்படியும் சொல்லலாம். திருவிழா முடிந்தது. இனி மீண்டும் திருவிழா எப்போது வரும்?

Friday, 3 October 2025

நீ காதல் நான் கஸல்


நீ காதல் நான் கஸல்


தி.கலையரசி

Kalaiarasi Thirunavukkarasu 


கவிதைகள்


படைப்பு குழுமம் வெளியீடு

விலை : 120

பக்கங்கள் : 130


காதல் மீது உள்ள காதலால் நான் தொடர்ந்து எழுத முயற்சி செய்ததன் வெளிப்பாடாக வந்திருக்கிறது இக்கவிதைத் தொகுப்பு என என்னுரையில் கூறுகிறார் கவிஞர். போதாதா தொகுப்பில் என்ன இருக்கும் என்று அறிய. காதல் என்பது பரிசுத்தம். ஞானம். மகிழ்ச்சி. துயரம். தேடல். மயக்கம். இன்னும் என்னென்னமோ பொருளுக்குப் பொருந்தும் உன்னதம்.


வாசிக்கும் ஒவ்வொருவரும் தன் காதலோடு, மனதோடு பொருத்திப் பார்க்கத் தூண்டும் கவிதைகள். சொல்லாடலின் சிறப்பாக கவிதைகள் அத்தனையும் மிளிர்கின்றன. எளிய மொழியில் வலிய காதல். அழுத்தமான கவிதை நயம்.

"நீரை விலகாது ஈரம்

நெருப்பை விலகாது வெப்பம்

நான் உன் நீர்

நீ என் வெப்பம்".

யாதுமாகி நின்றாய் என்று சொல்லிக் கடத்தலை சொல்லில் கடக்கும் வித்தை கவிதை. அதனை இக்கவிதை நன்றாகவே செய்கிறது.


எனக்கு நீதான் வேண்டும். நீதான் எல்லாம். நீயில்லாத வாழ்க்கையை என்னால் கற்பனை கூட செய்ய முடியாது இப்படியெல்லாம் சொல்லிக்கொள்ளும் காதலின் அவஸ்தையை காதல் எப்படிச் சொல்லும்? அது எப்படி கவிதையாக அமையும்?

"நீ கடல்

நான் அலை

என்னை நீ கரையேற்றினாலும்

நான் உன்னிடம் தான் 

திரும்புவேன்".

கடல், அலையை தன்னிலிருந்து வெளியேற்ற நினைக்கிறது என்பதைச் சுட்டும் கரையேற்றினாலும் என்ற சொல்லுக்குள்தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்... என்ன இருந்தாலும் நான் உன்னிடம் தான் திரும்புவேன் என்பது அர்த்தத்திற்கும் மேலான அன்பு.


காதல் சுழிக்குள் மாட்டுவது சூழலா? திணித்தலா? எதுவானாலும் அங்கு எதுவும் திட்டமிடப் படுவதுபோல் நடப்பதில்லை. அது ஒரு மகிழ்ச்சிப் பிரவாகம். அங்கு இன்பமும் துன்பமும் பேராழியின் ஆழமென நீளும். குறையும். அது தரும் மயக்கம் என்பதை உயிர் வேண்டிப் பெறும். இந்தக் கவிதை அவ்வாறான மகிழ்ச்சியாகவும் இருக்கலாம். துயராகவும் இருக்கலாம். எது என்பது இங்கு அவசியமில்லை. அதைத் துய்ப்பது மட்டுமே இக்கவிதை.

"எப்போதும் காதலில்

நீந்திக்கொண்டே இருக்கிறேன்

கரையே

தென்படாமல் இரு".

கடலில் மிதந்தபடி

கண்கள் ஒருமுறை இல்லாத கரை தேடும் சூழலை உண்டுபண்ணச் செய்திடும் வல்லமை சொற்களில்.


மென் சோகம், ஓரளவு சோகமா? இல்லை. சோகத்தில் ஏது கொஞ்சம், நிறைய? வலி என்பது வலி தான். அப்படிக் கவிதைகள் தொகுப்பில் நிறைய. 

"காதலும் பிரிவும்

தராசுத் தட்டுகளில் அமரும்போது

உயிரின் முள் தள்ளாடுகிறது".

ஒரு பக்கம் காதல், மறு பக்கம் பிரிவு. இரண்டும் தராசுத் தட்டுகளில் இருக்கும்போது காதல் கீழ்நோக்கி இழுக்க வேண்டும். அல்லது பிரிவு கீழ் நோக்கி இழுக்க வேண்டும். எது மகிழ்வானது? எது துயரானது? இரண்டும் எப்படி சமமாக, முன்னே பின்னே ஆடி தன்னைச் சமப்படுத்திக்கொள்ள முடியும்? வாசிக்கும் நாம் அந்த உணர்வைப் பெறுவது, கவிதை நமக்குள் செய்யும் மாயம். 


கண்ணீர், காதல், பிரிவு, கடல், மழை இவைகள் போன்று நாம் தரிசித்த பொருண்மைகளை  வைத்துக்கொண்டு காதலைச் சொல்லிக்கொண்டேயிருக்கிறார். நாம் காதலிலும் கவிதைகளிலும் மூழ்கிக்கொண்டே இருக்கிறோம்.

"உன் கடலில் கலந்துவிட்ட

நீர்த்துளி நான்.

ஆவியாய் கரையும் விதியை

நீதான் எழுதவேண்டும்".

கவிதை, கவிஞரால் தன்னை எழுதிக்கொண்டுவிட்டது.  வாசிப்பவர்களுக்கு, ஆவியாய் கரையும் விதியை ஆகிருதியாய் உள்ளவர் எழுதுவார். அந்த ஆகிருதி என்பவர் நமக்குள் காதலாக மூழ்கிக் கிடப்பவர் தான். ஆவியாக மாறுவதா? கரைந்தே கிடப்பதா? கடலே ஆவியாவதா? காதலை சாட்சியாக வைத்து யோசித்துக் கிடப்போம்.


கடலுக்குள் சில முத்துகள், கண்ணீர்த்துளியின் சிறு அணுக்கள், மகிழ்வின் ஒற்றைச் சிறு சீனிக் கட்டி போலத்தான் நான் சொன்னவை. வாசியுங்கள். காதலின் உயரம் அடையலாம்.


கஸல் கவி Mohamed Ali Jinna தோழரின் பதிப்புரை, ந.சிவநேசன் தோழரின் அணிந்துரை, கோ. பாரதிமோகன் தோழரின் வாழ்த்துரை நூலாய்வைச் செய்திருக்கிறது தொடக்கத்திலேயே. அருமை.


வாழ்த்துகள் தோழர் தி.கலையரசி


யாழ் தண்விகா 


❣️

Saturday, 23 August 2025

ஒற்றைச் சிறகு ஓவியா


 ஒற்றைச் சிறகு ஓவியா 

விஷ்ணுபுரம் சரவணன் 

பாரதி புத்தகாலயம் 

பக்கங்கள் 120

விலை ரூ. 120


சாவித்திய அகாடமி பால புரஸ்கார் விருது பெற்ற நாவல்


பள்ளி ஆண்டு விழாவுக்காக தயாராகிறார்கள் மாணவர்கள். முகிலன், பவித்ரா, பிரின்சி, சாதிக் மற்றும் ஓவியா இவர்கள் ஐந்து பேரும் நண்பர்கள். இதில் ஓவியா தவிர நால்வரும் கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகிறார்கள். பள்ளி பியூன் கதிரேசன் தாத்தா இவர்களுக்கு உதவுகிறார். கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள பொருட்கள் வாங்குவதற்கு ஓவியாவிடம் பணம் இல்லை. அதுவும் இல்லாமல் இனி கலந்து கொள்ளவும் முடியாது. பெயர் கொடுக்கும் நாள் முடிந்து விட்டது. அதனால் நால்வர் வைத்திருக்கும் பொருட்களை வைத்து ஒப்பனை செய்கிறார்கள். இதனால் ஓவியாவின் மனக்கவலை மாறும் என்ற நப்பாசைதான். பிரின்சி தன்னுடைய தேவதை கவுன் மற்றும் இரண்டு சிறகுகளில் ஒரு சிறகை ஓவியாவிற்கு அளிக்கிறாள். பவித்ரா தன்னுடைய கிரீடம் ஒன்றை தலையில் சுற்றி விடுகிறாள். சாதிக் தன்னிடம் இருந்த மேஜிக் கம்பினை அளிக்கிறான். முகிலன் தன் கழுத்தில் இருந்த இலை மாலையை ஓவியாவின் கழுத்தில் அணிவிக்கிறான். கையில் போட்டிருந்த இலை மோதிரத்தையும் மாட்டி விடுகிறான். இத்தனையும் அணிந்திருந்த ஓவியாவிற்கு பறக்கும் சக்தி கிடைக்கிறது. பள்ளியில் உள்ள மணியின் நாக்கை அடித்தவுடன் மஞ்சள் நிற வெளிச்சம் பூக்கிறது. அந்த மஞ்சள் நிற வெளிச்சம் நந்தியாவட்டை மரத்தின் மேல் விழுகிறது. அப்பொழுது மரத்திலிருந்து பூக்கள் உதிர்கின்றன. பூக்களை அவள் புறா வடிவில் அடுக்கியவுடன் புறாவாக உருமாறி திரும்பி வருகிறது. 10 புறாக்கள் வந்தவுடன் அந்த இடமே பறவைகள் சரணாலயம் போல் தெரிகிறது. இந்த மாயாஜாலத்தை கைப்பற்றுபவனாக விகேஷ் இருக்கிறான். மாயாஜாலம் மீண்டும் ஓவியா மற்றும் அவளது நண்பர்களிடம் கிடைக்க கீழ்க்கண்ட படிநிலைகளில் பயணிக்க வேண்டி இருக்கிறது.

O

மண்புழு அழிந்து வருவதன் காரணம்.

மண்புழுவின் அவசியம்.  

O

நிலத்தடி நீர் முழுவதும் மாசுபாடு அடைந்து விட்டது. அதற்கான காரணம். 

O

விளைநிலங்களுக்கு அடியில் எரிபொருள் எடுப்பதற்காக குழாய் பதித்தல்

எரிபொருள் எடுப்பதற்காக விளை நிலங்களுள் குழாய் பதிக்கக் கூடாது என்று போராட்டம்.

ஓவியா மற்றும் அவளது நண்பர்களிடம் மாயாஜாலம் கிடைக்கப்பெற்று ஆண்டு விழாவில் இந்த மாயாஜாலம் அரங்கேற்றம் செய்யப்படுகிறது. இதுதான் நாவலின் சுருக்கம்.


நாவலில் மண்புழுவின் தேவை பற்றி அழகாக கூறப்படுகிறது. விவசாயி /உழவர்களின் நண்பன் என்பதை படிக்கிறோம். ஆனால் எத்தனை மாணவர்கள் அதனை உணர்ந்திருப்பார்கள்? அதுவும் இன்றைய காலகட்டத்தில் மண்புழுவின் தேவை பற்றி அறிய வேண்டியிருக்கிறது. நிலத்தடி நீர் பூமியில் கீழே போய்க் கொண்டே இருக்கிறது. அதுவும் அசுத்தமாக தான் கிடைக்கிறது. நிலத்தடி நீர் மேலாக இருந்த நிலை மாறி அதுவும் அசுத்தமான வேதிப்பொருள் கலந்த நிலத்தடி நீர் தான் கிடைக்கிறது. இதற்கு முடிவு என்ன என்பதையும் நாவலாசிரியர் கூறுகிறார். விளை நிலங்களில் எரிபொருள் எடுப்பதற்காக குழாய்கள் பதிப்பதற்கு அரசு முயற்சிக்கிறது. அதை எதிர்த்து மக்கள் போராடுகிறார்கள். அந்த போராட்டம், அதன் வீச்சு என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கி இருக்கிறார். இந்த செயல்கள் அனைத்தும் கதையோட்டத்தில் வருவதால் நாவல் மிகவும் அழகாக, அருமையாக இருக்கிறது.


ஒற்றைச் சிறகு ஓவியா 

விளைநிலங்களில் பதிக்கப்படும் எண்ணெய்க் குழாய்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நாவல்.


வாழ்த்துக்கள் தோழர்.

Sunday, 17 August 2025

அத்தினி - Chitra Sivan

 


அத்தினி

நாவல் 

சித்ரா சிவன்

Chitra Sivan 

பிறகு பிரசுரம் 

230 பக்கங்கள் 

280 ரூபாய்


பெண்களின் பிரச்சனைகளை பேசும் ஒரு நாவல். பெண்களின் அக உணர்வுகளை பேசும் இந்த நாவலில் பெரும்பாலும் பெண் கதாபாத்திரங்கள் தான். அதில் சில ஆண் கதாபாத்திரங்கள் வருகிறது என்றாலும் அது அனைத்தும் துணை கதாபாத்திரங்களாகவே இருக்கிறது. 


பவித்ரா தேவி மற்றும் உமையாள் என்ற இரு கதாபாத்திரங்கள் முதன்மையாக இருக்கிறது. இவர்கள் சேதுராமன், அன்னக்கொடி இருவரின் மகள்கள். அன்னக்கொடி கதாபாத்திரம் கிராமங்களில் நிறைய பார்க்கலாம். திருமணத்திற்கு முன் சீட்டு பிடித்தல் தொழிலை எவ்வளவு சாமர்த்தியமாக நடத்துகிறாள் என்பது கூறப்பட்டுள்ளது. ஆண்கள் நடத்தும் சீட்டுகள் பாதையில் நின்று விடுகிறது அல்லது ஓடிவிடுகிறார்கள். இந்த சூழ்நிலையில் அன்னக்கொடி நடத்தும் சீட்டு சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அடுத்து 50 ஆயிரம் ரூபாய் சீட்டை முன்னெடுக்கிறாள். முதல் சீட்டை பாலன் என்பவனுடன் சேதுராமன் ஏலம் கேட்டு, பின் பாலனையே எடுக்க வைக்கிறான். அதில் பாலன் செய்யும் செயலால் அதுல பாதாளத்தில் விழுகிறாள் அன்னக்கொடி. சேதுராமனுக்கும் அன்னக்கொடிக்கும் திருமணம் நடக்கிறது. அன்னக்கொடிக்கு மாமன் முறை வேண்டும் கணேசனுக்கு கொஞ்சம் பணக்கஷ்டம்.  கணேசனுக்கு உதவுகிறாள். சீட்டில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பணம் திரும்ப தேவைப்படுகிறது அன்னக்கொடிக்கு. வீட்டில் சேதுராமனுக்கும் அன்னக்கொடிக்கும் பணத்தை வைத்து பிரச்சனை வருகிறது. கணேசனிடம் கொடுத்த பணத்தை கேட்டு நடையாய் நடக்கிறாள். அன்னக்கொடி வீட்டில் பெரிய அளவில் பிரச்சனை வரும் பொழுது கணேசன் வீட்டின் முன் சென்று மண்ணெண்ணெயால் உடம்பில் தீ வைத்து எரித்துக் கொள்கிறாள் அன்னக்கொடி. அதன்பின் கணேசன் தன்னுடைய குடும்பத்தாருடன் தற்கொலை செய்து கொள்கிறான். சேதுராமன் தன்னுடைய குழந்தைகளான பவித்ரா தேவி மற்றும் உமையாளுடன் சென்று வாழ்க்கையை தொடர்கிறார். சேதுராமன் இறந்த பின்பு பவித்ரா தேவி மற்றும் உமையாள் இவர்களின் வாழ்க்கை எவ்வாறு செல்கிறது என்பதே கதை.


இந்த நாவலில் வரும் பெயர்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சாராரை சொல்ல வருகிறது. எந்த இடத்திலும் ஜாதி காட்டும் குறியீடு இல்லை. ஜாதிப் பெயர்கள் இல்லை என்ற வகையில் மகிழ்ச்சியே. 


ஏ ஜே பி மருத்துவமனை கேண்டீன் இதுதான் கதையின் மையம்.


அன்னக்கொடி இறந்ததற்குப் பின் பவித்ரா தேவிக்கு 34 வயது உமையாளுக்கு 29 வயது சமயத்தில் கூத்தும் கும்மாளமுமாக வாழும் சேதுராமன் இறந்து விடுகிறார். அந்த இறப்பிற்கு வரும் மாறன், உமையாளை பெண் பார்க்க வருகிறார். உமையாள் மாறனை விட ஒரு வயது மூத்தவள். இந்த கதாபாத்திரம் ஆரம்பத்திலேயே வந்தாலும் கடைசியில் தான் திருமணம் முடித்து துபாய் செல்லும் காட்சி வருகிறது. மாறன் யார் என்று டிவிஸ்ட் வைத்திருக்கிறார் நாவல் ஆசிரியர். 


நாவலில் வசந்தமுல்லை, பூங்கொடி, கமலா, பாண்டியம்மாள், மல்லிகா, சரிதா இப்படி ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். எந்த ஒரு கதாபாத்திரமும் துருத்திக் கொண்டு தெரியவில்லை. சரிதாவுக்கு, கமலாவுக்கு, வாசவதத்தைக்கு, மல்லிகாவுக்கு ஒரு பிளாஷ்பேக்...  மல்லிகாவின் ஃபிளாஷ்பேக் என்பது காதல் திருமணத்தில் முடிந்த கதையைச் சொல்கிறாள். வாசவதத்தை திருமணம் முடித்த பின்பு எவ்வாறு ஏமாற்றப்படுகிறாள் என்பதை சொல்லுகிறது. கமலா கணவனால் எவ்வாறு அடிபட்டு மிதிபட்டு வந்து அந்த நரக வாழ்க்கையில் எப்படி ஜெயிலுக்கு போய் வந்தாள் என்பதை கூறுகிறது. சரிதா தன்னுடைய காதலனுடன் கொடைக்கானலுக்கு வருகிறாள். பணி நிமித்தமாக ஆப்பிரிக்கா சென்ற தன்னுடைய கணவனுக்கு தெரிந்து விட்டது. இந்நிலையில் சரிதாவின் காதலன் இருவரும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுக்கிறான். அவள் வேண்டாம் என்று கூறியும் அதில் அவன் இறந்து விட உயிருக்கு போராடும் நிலையில் சரிதா மட்டும் தப்பிக்கிறாள். இதற்கு இடையே அன்னக்கொடியின் பிளாஷ்பேக். அன்னக்கொடிக்கு இரண்டு குழந்தைகளும் பெண் குழந்தையாக பிறந்ததால் சேதுராமனின் அம்மா கள்ளிப்பால் கொடுக்க முடிவெடுக்கிறாள். இந்த செயலைச் செய்வதற்கு முன் படுத்த படுக்கையாக கிடந்து உயிரிழக்கிறாள். இது ஆச்சரியமான ஒன்றாக தோன்றினாலும் கள்ளிப்பால் கொடுக்க முயற்சி செய்யும் பெண்களுக்கு இப்படி நடந்தால் என்ன என்று மனதிற்குள் வந்து போகிறது எண்ணம். இந்த பிரச்சனைகள் யாவும் சுவாரசியமாக இருக்கிறது. சிலஅதிர்ச்சிகரமாக இருக்கிறது. இந்த பிரச்சனைகளுக்குள் பெண் என்பவள் மாட்டிக்கொண்டு என்ன பாடுபடுகிறாள் என்பதை நாவலின் ஓட்டத்தோடு நாம் காண முடிகிறது.


உமையாள் மாறன் இவர்களுடைய திருமணத்தை நடத்திப் பார்க்க  ஆசைப்படும் பவித்ரா தேவி அந்த விஷயத்தில் வெற்றியும் விட்டு விடுகிறாள். பவித்ரா தேவி தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஆசைப்படுபவள் அல்ல. வாழ்க்கை என்பது போகும் போக்கில் நாமும் போவோம் என்ற எண்ணம் கொண்டவள். அந்த வாழ்க்கையில் இளங்கோ வருகிறான் டாக்டர் வேலை பார்ப்பவனாக. மதுரை கொடைக்கானல் குமுளி என்றெல்லாம் இவளுடன் பிரயாணப்படுகிறான். ஆனால் பவித்ராதேவியுடன் அவனுக்கு என்ன முரண் என்பது புரியவில்லை. தனக்கு உள்ள வேலைகளை கூறுகிறாள் கேண்டீனில் கமலா, அவள் மகன் சேதுராமன், பாண்டியம்மாள், அந்தோணி முத்து, சென்னையில் சரிதாவின் இறந்த காதலனோட அம்மா, ஹோம்ல மூணு பசங்க, ரெபேக்கா இவர்களை எல்லாம் தனக்கு பார்த்துக் கொள்ளும் கடமை இருப்பதாக பவித்ரா கூறுகிறாள். இவ்வளவுக்கு அப்புறமும் "நீங்க என் கூடவே இருங்க. என்னை விட்டு எங்கேயும் போயிராதீங்க" என்று கூறும் ஒரு எளிய மனம் பவித்ராவுக்கு. இளங்கோ என்ன முடிவு எடுக்கிறான் என்பதுதான் கதை. இந்த இடத்திலும் ஒரு பெண்ணின் முடிவு என்பது இரண்டாம் பட்சத்திற்கு தள்ளப்படுவது போல் அமைந்து விடுவது துரதிஷ்டம்.


தாய்ப் பாசம் பற்றிக் கூறும் நாவல் என்றோ, தங்கைப் பாசம் பற்றிக் கூறும் நாவல் என்றோ பொத்தாம் பொதுவாகக் கூறி கடக்கும் நாவல் இல்லை. ஜனரஞ்சகமான ஒரு நாவல் என்றே கூறலாம். ஆண்களைப் போல பெண்களுக்கும் ஆசைகள் இருக்கும். மாதத்திற்கு ஒரு முறை தோட்டத்தில் சிக்கன், மட்டன், பிரியாணி சமைத்து அவற்றை ஓட்கா உடன் இணைந்து கொண்டாடுவது என்பது கதையில் வரக்கூடிய பெண்களின் கொண்டாட்டத்தில் ஒன்று. பெண்கள் தங்களைத் தாங்களே ரசித்துக்கொள்ளும் இடங்களாக இருக்கட்டும் (ஆங்காங்கே இது போன்ற பகுதிகள் இடம்பெறுவது ஒரு கவிஞராக அடையாளம் கண்டு கொள்ளும் இடமாக இருக்கிறது), தத்துவார்த்தமான வசனங்களை எளிய முறையில் கூறி கடப்பதாக இருக்கட்டும், இயல்பான நகைச்சுவையாக இருக்கட்டும் கொஞ்சமும் அலுப்புத் தட்டாதவாறு சுவாரசியமாக நாவலை நகர்த்திச் செல்வதில் வெற்றி பெறுகிறார் நாவல் ஆசிரியர். கூறுவதற்கு நிறைய இருக்கிறது நீங்கள் வாங்கிப் பார்த்து வாசித்து மகிழுங்கள். நன்றி.


வாழ்த்துகள் தோழர் சித்ரா சிவன்.

Wednesday, 13 August 2025

ஊசிகள் - மீரா


ஊசிகள்வி

கவிஞர் மீரா

சீதை பதிப்பகம்

விலை ரூபாய் 50

1974ல் வெளிவந்த கவிதைத் தொகுப்பு. முழுவதும் சமூகச் சீர்கேடு, அரசியல் அவலங்களைத் தோலுரிக்கும் கவிதைகள். பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் இப்போதைய அரசியலுக்கும் பல கவிதைகள் பொருந்துகின்றன. அரசியல்வாதி, ஊழல், போலித் தமிழன் எனப் பல விசயங்களைப் பேசுகிறது தொகுப்பு. ஊரே கொண்டாடும்,


உனக்கும் எனக்கும் 

ஒரே ஊர் 

வாசுதேவநல்லூர் 


நீயும் நானும் 

ஒரே மதம்... 

திருநெல்வேலிச் 

சைவப் பிள்ளைமார் 

வகுப்புங் கூட 


உன்றன் தந்தையும் 

என்றன் தந்தையும் 

சொந்தக்காரர்கள்- 

மைத்துனன் மார்கள் 


எனவே 

செம்புலப்பெயல் நீர் போல 

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே


என்ற கவிதை இத்தொகுப்பில் தான் உள்ளது. 


சிக்கனமாக இருக்கச் சொல்லிவிட்டு ஆடம்பர செலவு செய்யும் பிரதமர் குறித்த கவிதையும் உண்டு. சினிமாவில் அரசியல் தேடும் தமிழ் மக்கள் அன்றும் இருந்துள்ளார்கள். கல்விக்கு லஞ்சப் பட்டியல் அப்போதும் இருந்துள்ளது... இப்படி இவை யாவும் கவிதைகளில்.


வாய்ப்பிருந்தால் வாசியுங்கள்

மீராவின் அரசியல் கவிதைகளை.


வாழ்த்துகள்...