Saturday, 23 August 2025

ஒற்றைச் சிறகு ஓவியா


 ஒற்றைச் சிறகு ஓவியா 

விஷ்ணுபுரம் சரவணன் 

பாரதி புத்தகாலயம் 

பக்கங்கள் 120

விலை ரூ. 120


சாவித்திய அகாடமி பால புரஸ்கார் விருது பெற்ற நாவல்


பள்ளி ஆண்டு விழாவுக்காக தயாராகிறார்கள் மாணவர்கள். முகிலன், பவித்ரா, பிரின்சி, சாதிக் மற்றும் ஓவியா இவர்கள் ஐந்து பேரும் நண்பர்கள். இதில் ஓவியா தவிர நால்வரும் கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகிறார்கள். பள்ளி பியூன் கதிரேசன் தாத்தா இவர்களுக்கு உதவுகிறார். கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள பொருட்கள் வாங்குவதற்கு ஓவியாவிடம் பணம் இல்லை. அதுவும் இல்லாமல் இனி கலந்து கொள்ளவும் முடியாது. பெயர் கொடுக்கும் நாள் முடிந்து விட்டது. அதனால் நால்வர் வைத்திருக்கும் பொருட்களை வைத்து ஒப்பனை செய்கிறார்கள். இதனால் ஓவியாவின் மனக்கவலை மாறும் என்ற நப்பாசைதான். பிரின்சி தன்னுடைய தேவதை கவுன் மற்றும் இரண்டு சிறகுகளில் ஒரு சிறகை ஓவியாவிற்கு அளிக்கிறாள். பவித்ரா தன்னுடைய கிரீடம் ஒன்றை தலையில் சுற்றி விடுகிறாள். சாதிக் தன்னிடம் இருந்த மேஜிக் கம்பினை அளிக்கிறான். முகிலன் தன் கழுத்தில் இருந்த இலை மாலையை ஓவியாவின் கழுத்தில் அணிவிக்கிறான். கையில் போட்டிருந்த இலை மோதிரத்தையும் மாட்டி விடுகிறான். இத்தனையும் அணிந்திருந்த ஓவியாவிற்கு பறக்கும் சக்தி கிடைக்கிறது. பள்ளியில் உள்ள மணியின் நாக்கை அடித்தவுடன் மஞ்சள் நிற வெளிச்சம் பூக்கிறது. அந்த மஞ்சள் நிற வெளிச்சம் நந்தியாவட்டை மரத்தின் மேல் விழுகிறது. அப்பொழுது மரத்திலிருந்து பூக்கள் உதிர்கின்றன. பூக்களை அவள் புறா வடிவில் அடுக்கியவுடன் புறாவாக உருமாறி திரும்பி வருகிறது. 10 புறாக்கள் வந்தவுடன் அந்த இடமே பறவைகள் சரணாலயம் போல் தெரிகிறது. இந்த மாயாஜாலத்தை கைப்பற்றுபவனாக விகேஷ் இருக்கிறான். மாயாஜாலம் மீண்டும் ஓவியா மற்றும் அவளது நண்பர்களிடம் கிடைக்க கீழ்க்கண்ட படிநிலைகளில் பயணிக்க வேண்டி இருக்கிறது.

O

மண்புழு அழிந்து வருவதன் காரணம்.

மண்புழுவின் அவசியம்.  

O

நிலத்தடி நீர் முழுவதும் மாசுபாடு அடைந்து விட்டது. அதற்கான காரணம். 

O

விளைநிலங்களுக்கு அடியில் எரிபொருள் எடுப்பதற்காக குழாய் பதித்தல்

எரிபொருள் எடுப்பதற்காக விளை நிலங்களுள் குழாய் பதிக்கக் கூடாது என்று போராட்டம்.

ஓவியா மற்றும் அவளது நண்பர்களிடம் மாயாஜாலம் கிடைக்கப்பெற்று ஆண்டு விழாவில் இந்த மாயாஜாலம் அரங்கேற்றம் செய்யப்படுகிறது. இதுதான் நாவலின் சுருக்கம்.


நாவலில் மண்புழுவின் தேவை பற்றி அழகாக கூறப்படுகிறது. விவசாயி /உழவர்களின் நண்பன் என்பதை படிக்கிறோம். ஆனால் எத்தனை மாணவர்கள் அதனை உணர்ந்திருப்பார்கள்? அதுவும் இன்றைய காலகட்டத்தில் மண்புழுவின் தேவை பற்றி அறிய வேண்டியிருக்கிறது. நிலத்தடி நீர் பூமியில் கீழே போய்க் கொண்டே இருக்கிறது. அதுவும் அசுத்தமாக தான் கிடைக்கிறது. நிலத்தடி நீர் மேலாக இருந்த நிலை மாறி அதுவும் அசுத்தமான வேதிப்பொருள் கலந்த நிலத்தடி நீர் தான் கிடைக்கிறது. இதற்கு முடிவு என்ன என்பதையும் நாவலாசிரியர் கூறுகிறார். விளை நிலங்களில் எரிபொருள் எடுப்பதற்காக குழாய்கள் பதிப்பதற்கு அரசு முயற்சிக்கிறது. அதை எதிர்த்து மக்கள் போராடுகிறார்கள். அந்த போராட்டம், அதன் வீச்சு என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கி இருக்கிறார். இந்த செயல்கள் அனைத்தும் கதையோட்டத்தில் வருவதால் நாவல் மிகவும் அழகாக, அருமையாக இருக்கிறது.


ஒற்றைச் சிறகு ஓவியா 

விளைநிலங்களில் பதிக்கப்படும் எண்ணெய்க் குழாய்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நாவல்.


வாழ்த்துக்கள் தோழர்.

Sunday, 17 August 2025

அத்தினி - Chitra Sivan

 


அத்தினி

நாவல் 

சித்ரா சிவன்

Chitra Sivan 

பிறகு பிரசுரம் 

230 பக்கங்கள் 

280 ரூபாய்


பெண்களின் பிரச்சனைகளை பேசும் ஒரு நாவல். பெண்களின் அக உணர்வுகளை பேசும் இந்த நாவலில் பெரும்பாலும் பெண் கதாபாத்திரங்கள் தான். அதில் சில ஆண் கதாபாத்திரங்கள் வருகிறது என்றாலும் அது அனைத்தும் துணை கதாபாத்திரங்களாகவே இருக்கிறது. 


பவித்ரா தேவி மற்றும் உமையாள் என்ற இரு கதாபாத்திரங்கள் முதன்மையாக இருக்கிறது. இவர்கள் சேதுராமன், அன்னக்கொடி இருவரின் மகள்கள். அன்னக்கொடி கதாபாத்திரம் கிராமங்களில் நிறைய பார்க்கலாம். திருமணத்திற்கு முன் சீட்டு பிடித்தல் தொழிலை எவ்வளவு சாமர்த்தியமாக நடத்துகிறாள் என்பது கூறப்பட்டுள்ளது. ஆண்கள் நடத்தும் சீட்டுகள் பாதையில் நின்று விடுகிறது அல்லது ஓடிவிடுகிறார்கள். இந்த சூழ்நிலையில் அன்னக்கொடி நடத்தும் சீட்டு சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அடுத்து 50 ஆயிரம் ரூபாய் சீட்டை முன்னெடுக்கிறாள். முதல் சீட்டை பாலன் என்பவனுடன் சேதுராமன் ஏலம் கேட்டு, பின் பாலனையே எடுக்க வைக்கிறான். அதில் பாலன் செய்யும் செயலால் அதுல பாதாளத்தில் விழுகிறாள் அன்னக்கொடி. சேதுராமனுக்கும் அன்னக்கொடிக்கும் திருமணம் நடக்கிறது. அன்னக்கொடிக்கு மாமன் முறை வேண்டும் கணேசனுக்கு கொஞ்சம் பணக்கஷ்டம்.  கணேசனுக்கு உதவுகிறாள். சீட்டில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பணம் திரும்ப தேவைப்படுகிறது அன்னக்கொடிக்கு. வீட்டில் சேதுராமனுக்கும் அன்னக்கொடிக்கும் பணத்தை வைத்து பிரச்சனை வருகிறது. கணேசனிடம் கொடுத்த பணத்தை கேட்டு நடையாய் நடக்கிறாள். அன்னக்கொடி வீட்டில் பெரிய அளவில் பிரச்சனை வரும் பொழுது கணேசன் வீட்டின் முன் சென்று மண்ணெண்ணெயால் உடம்பில் தீ வைத்து எரித்துக் கொள்கிறாள் அன்னக்கொடி. அதன்பின் கணேசன் தன்னுடைய குடும்பத்தாருடன் தற்கொலை செய்து கொள்கிறான். சேதுராமன் தன்னுடைய குழந்தைகளான பவித்ரா தேவி மற்றும் உமையாளுடன் சென்று வாழ்க்கையை தொடர்கிறார். சேதுராமன் இறந்த பின்பு பவித்ரா தேவி மற்றும் உமையாள் இவர்களின் வாழ்க்கை எவ்வாறு செல்கிறது என்பதே கதை.


இந்த நாவலில் வரும் பெயர்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சாராரை சொல்ல வருகிறது. எந்த இடத்திலும் ஜாதி காட்டும் குறியீடு இல்லை. ஜாதிப் பெயர்கள் இல்லை என்ற வகையில் மகிழ்ச்சியே. 


ஏ ஜே பி மருத்துவமனை கேண்டீன் இதுதான் கதையின் மையம்.


அன்னக்கொடி இறந்ததற்குப் பின் பவித்ரா தேவிக்கு 34 வயது உமையாளுக்கு 29 வயது சமயத்தில் கூத்தும் கும்மாளமுமாக வாழும் சேதுராமன் இறந்து விடுகிறார். அந்த இறப்பிற்கு வரும் மாறன், உமையாளை பெண் பார்க்க வருகிறார். உமையாள் மாறனை விட ஒரு வயது மூத்தவள். இந்த கதாபாத்திரம் ஆரம்பத்திலேயே வந்தாலும் கடைசியில் தான் திருமணம் முடித்து துபாய் செல்லும் காட்சி வருகிறது. மாறன் யார் என்று டிவிஸ்ட் வைத்திருக்கிறார் நாவல் ஆசிரியர். 


நாவலில் வசந்தமுல்லை, பூங்கொடி, கமலா, பாண்டியம்மாள், மல்லிகா, சரிதா இப்படி ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். எந்த ஒரு கதாபாத்திரமும் துருத்திக் கொண்டு தெரியவில்லை. சரிதாவுக்கு, கமலாவுக்கு, வாசவதத்தைக்கு, மல்லிகாவுக்கு ஒரு பிளாஷ்பேக்...  மல்லிகாவின் ஃபிளாஷ்பேக் என்பது காதல் திருமணத்தில் முடிந்த கதையைச் சொல்கிறாள். வாசவதத்தை திருமணம் முடித்த பின்பு எவ்வாறு ஏமாற்றப்படுகிறாள் என்பதை சொல்லுகிறது. கமலா கணவனால் எவ்வாறு அடிபட்டு மிதிபட்டு வந்து அந்த நரக வாழ்க்கையில் எப்படி ஜெயிலுக்கு போய் வந்தாள் என்பதை கூறுகிறது. சரிதா தன்னுடைய காதலனுடன் கொடைக்கானலுக்கு வருகிறாள். பணி நிமித்தமாக ஆப்பிரிக்கா சென்ற தன்னுடைய கணவனுக்கு தெரிந்து விட்டது. இந்நிலையில் சரிதாவின் காதலன் இருவரும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுக்கிறான். அவள் வேண்டாம் என்று கூறியும் அதில் அவன் இறந்து விட உயிருக்கு போராடும் நிலையில் சரிதா மட்டும் தப்பிக்கிறாள். இதற்கு இடையே அன்னக்கொடியின் பிளாஷ்பேக். அன்னக்கொடிக்கு இரண்டு குழந்தைகளும் பெண் குழந்தையாக பிறந்ததால் சேதுராமனின் அம்மா கள்ளிப்பால் கொடுக்க முடிவெடுக்கிறாள். இந்த செயலைச் செய்வதற்கு முன் படுத்த படுக்கையாக கிடந்து உயிரிழக்கிறாள். இது ஆச்சரியமான ஒன்றாக தோன்றினாலும் கள்ளிப்பால் கொடுக்க முயற்சி செய்யும் பெண்களுக்கு இப்படி நடந்தால் என்ன என்று மனதிற்குள் வந்து போகிறது எண்ணம். இந்த பிரச்சனைகள் யாவும் சுவாரசியமாக இருக்கிறது. சிலஅதிர்ச்சிகரமாக இருக்கிறது. இந்த பிரச்சனைகளுக்குள் பெண் என்பவள் மாட்டிக்கொண்டு என்ன பாடுபடுகிறாள் என்பதை நாவலின் ஓட்டத்தோடு நாம் காண முடிகிறது.


உமையாள் மாறன் இவர்களுடைய திருமணத்தை நடத்திப் பார்க்க  ஆசைப்படும் பவித்ரா தேவி அந்த விஷயத்தில் வெற்றியும் விட்டு விடுகிறாள். பவித்ரா தேவி தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஆசைப்படுபவள் அல்ல. வாழ்க்கை என்பது போகும் போக்கில் நாமும் போவோம் என்ற எண்ணம் கொண்டவள். அந்த வாழ்க்கையில் இளங்கோ வருகிறான் டாக்டர் வேலை பார்ப்பவனாக. மதுரை கொடைக்கானல் குமுளி என்றெல்லாம் இவளுடன் பிரயாணப்படுகிறான். ஆனால் பவித்ராதேவியுடன் அவனுக்கு என்ன முரண் என்பது புரியவில்லை. தனக்கு உள்ள வேலைகளை கூறுகிறாள் கேண்டீனில் கமலா, அவள் மகன் சேதுராமன், பாண்டியம்மாள், அந்தோணி முத்து, சென்னையில் சரிதாவின் இறந்த காதலனோட அம்மா, ஹோம்ல மூணு பசங்க, ரெபேக்கா இவர்களை எல்லாம் தனக்கு பார்த்துக் கொள்ளும் கடமை இருப்பதாக பவித்ரா கூறுகிறாள். இவ்வளவுக்கு அப்புறமும் "நீங்க என் கூடவே இருங்க. என்னை விட்டு எங்கேயும் போயிராதீங்க" என்று கூறும் ஒரு எளிய மனம் பவித்ராவுக்கு. இளங்கோ என்ன முடிவு எடுக்கிறான் என்பதுதான் கதை. இந்த இடத்திலும் ஒரு பெண்ணின் முடிவு என்பது இரண்டாம் பட்சத்திற்கு தள்ளப்படுவது போல் அமைந்து விடுவது துரதிஷ்டம்.


தாய்ப் பாசம் பற்றிக் கூறும் நாவல் என்றோ, தங்கைப் பாசம் பற்றிக் கூறும் நாவல் என்றோ பொத்தாம் பொதுவாகக் கூறி கடக்கும் நாவல் இல்லை. ஜனரஞ்சகமான ஒரு நாவல் என்றே கூறலாம். ஆண்களைப் போல பெண்களுக்கும் ஆசைகள் இருக்கும். மாதத்திற்கு ஒரு முறை தோட்டத்தில் சிக்கன், மட்டன், பிரியாணி சமைத்து அவற்றை ஓட்கா உடன் இணைந்து கொண்டாடுவது என்பது கதையில் வரக்கூடிய பெண்களின் கொண்டாட்டத்தில் ஒன்று. பெண்கள் தங்களைத் தாங்களே ரசித்துக்கொள்ளும் இடங்களாக இருக்கட்டும் (ஆங்காங்கே இது போன்ற பகுதிகள் இடம்பெறுவது ஒரு கவிஞராக அடையாளம் கண்டு கொள்ளும் இடமாக இருக்கிறது), தத்துவார்த்தமான வசனங்களை எளிய முறையில் கூறி கடப்பதாக இருக்கட்டும், இயல்பான நகைச்சுவையாக இருக்கட்டும் கொஞ்சமும் அலுப்புத் தட்டாதவாறு சுவாரசியமாக நாவலை நகர்த்திச் செல்வதில் வெற்றி பெறுகிறார் நாவல் ஆசிரியர். கூறுவதற்கு நிறைய இருக்கிறது நீங்கள் வாங்கிப் பார்த்து வாசித்து மகிழுங்கள். நன்றி.


வாழ்த்துகள் தோழர் சித்ரா சிவன்.

Wednesday, 13 August 2025

ஊசிகள் - மீரா


ஊசிகள்வி

கவிஞர் மீரா

சீதை பதிப்பகம்

விலை ரூபாய் 50

1974ல் வெளிவந்த கவிதைத் தொகுப்பு. முழுவதும் சமூகச் சீர்கேடு, அரசியல் அவலங்களைத் தோலுரிக்கும் கவிதைகள். பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் இப்போதைய அரசியலுக்கும் பல கவிதைகள் பொருந்துகின்றன. அரசியல்வாதி, ஊழல், போலித் தமிழன் எனப் பல விசயங்களைப் பேசுகிறது தொகுப்பு. ஊரே கொண்டாடும்,


உனக்கும் எனக்கும் 

ஒரே ஊர் 

வாசுதேவநல்லூர் 


நீயும் நானும் 

ஒரே மதம்... 

திருநெல்வேலிச் 

சைவப் பிள்ளைமார் 

வகுப்புங் கூட 


உன்றன் தந்தையும் 

என்றன் தந்தையும் 

சொந்தக்காரர்கள்- 

மைத்துனன் மார்கள் 


எனவே 

செம்புலப்பெயல் நீர் போல 

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே


என்ற கவிதை இத்தொகுப்பில் தான் உள்ளது. 


சிக்கனமாக இருக்கச் சொல்லிவிட்டு ஆடம்பர செலவு செய்யும் பிரதமர் குறித்த கவிதையும் உண்டு. சினிமாவில் அரசியல் தேடும் தமிழ் மக்கள் அன்றும் இருந்துள்ளார்கள். கல்விக்கு லஞ்சப் பட்டியல் அப்போதும் இருந்துள்ளது... இப்படி இவை யாவும் கவிதைகளில்.


வாய்ப்பிருந்தால் வாசியுங்கள்

மீராவின் அரசியல் கவிதைகளை.


வாழ்த்துகள்... 

Wednesday, 30 July 2025

கமலி

 


கமலி
நாவல்
சி.மோகன்
புலம் பதிப்பகம்
பக்கம் 144
விலை ரூ.150/=

ரகு கமலி இருவரும் கணவன் மனைவி. கமலியின் அப்பா, கமலியின் ஜாதகத்தை ஆய்ந்து அறிந்து கண்டறிந்த மாப்பிள்ளை ரகு. இவர்களுக்கு நந்திதா என்ற பெண். இவர்களின் வாழ்வில் புதிதாக நுழைகிறார் கண்ணன். கொஞ்சம் கொஞ்சமாக கமலியின் மனதில் பதியத் தொடங்குகிறார் நல்ல மனிதராக, ரசனைக்குரியவராக, படிப்பாளியாக, வார்த்தைகளில் வசியம் செய்பவராக, கமலியின் மனம் கவர்ந்தவராக... கமலியின் எண்ணத்தில் உண்டான மாற்றத்தை கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்குகிறான் ரகு. ஒரு சில கட்டத்திற்குப் பின்னர் கண்ணனுடன் உள்ள தொடர்பு முற்றிலுமாக தடைபடுகிறது ரகுவின் கட்டளையின் பேரில். ஆனாலும் கமலி கண்ணன் இடையே உள்ள காதலுக்கும் காமத்திற்கும் முற்றுப்புள்ளி இல்லாமல் தங்கு தடையின்றி அது தொடர்கிறது அது எப்படி என்று வாசித்தறிக. இடையில் கமலியின் அப்பா இறந்துபோகிறார். அம்மாவிற்கு உடல் நலமில்லாமல் போய்விடுகிறது. அம்மாவைக் கவனிக்க சென்னைக்கு கமலி புறப்படுகிறாள். செல்லும் வழியில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. கண்ணனும் கமலியும் ஒரே பேருந்தில், படுக்கும் வசதியுள்ள இருக்கையில். கமலி எப்படி கண்ணனுடன் இந்த வாழ்வை வாழ்கிறாள்? ரகு கண்ணனுடன் பேசினானா, நந்திதாவுக்கு ஒரு தம்பிப் பாப்பாவோ தங்கச்சிப் பாப்பாவோ கிடைத்ததா என்பதை அறிய வாசிக்கவேண்டும் இந்த நாவலை. சரியோ தவறோ என்ற ஊசலாட்டம் கமலியின் எண்ணத்தில் புகவில்லை. அவள் மெல்ல கண்ணனின் வசியத்திற்குள் சிக்குகிறாள். கண்ணனும் நல்ல மனிதர். ஒரு இடத்திலும் கமலியின் பாத்திரமோ கண்ணனின் பாத்திரமோ குற்ற உணர்ச்சி என்று காலம் காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கும் விடயத்தில் சிக்குவதாகக் கதையில் சொல்லாமல், ரகுவிடம் தோன்றும் மனக் கிலேசத்தை எப்படி கச்சிதமாக கமலி தீர்க்கிறாள், கமலியும் கண்ணனும் இந்த வாழ்க்கையை எவ்வளவு கவனமாகக் கடத்துகிறார்கள் என்பதை கிளர்ச்சியைத் தூண்டும் மொழிநடையில் படைத்துள்ளார் நூலாசிரியர். முக்கியமாக கதையின் இறுதி.

கதையிலிருந்து...
கண்ணன், காதலை மிகச் சாதாராமாக எவ்விதத் தயக்கமுமின்றிச் சொன்னபோது, கமலி விதிர்விதிர்த்துத்தான் போனால். அவள் உடலும் மனமும் படபடத்து நடுங்கியது. ஆனால் அந்தப் படபடப்பில் பயமில்லை. மாறாக, பரவசமிருந்தது. அன்று இரவு வெகுநேரம் தூக்கம் பிடிக்காமல் மனம் ஏதோ ஒரு கிறக்கத்தில் கிறுகிறுத்துக் கொண்டிருந்தது.

வாழ்த்துகள் தோழர்




Friday, 25 July 2025

பாக்கெட்டில் உறங்கும் நதி

 




பாக்கெட்டில் உறங்கும் நதி

சிறுவை அமலன்


Amalan Bernatsha


ஹைக்கூ கவிதைகள்


அகநி வெளியீடு


ரூ 25/= பக்கங்கள் 48


சொற்களில் கூர்மை, நறுக்குத் தெரித்தாற்போல சொல்வது ஹைக்கூவிற்கு பெரும் அவசியம். இயற்கையோ, சமூகமோ, தத்துவமோ எதைக் கூறுவது என்பதில் சிறுவை அமலன் தனக்கு சமூகத்திற்கான பார்வை போதும் என்று நினைத்து அதனை தன்னுடைய கவிதைகளுக்கான பாடுபொருளாக எடுத்தாண்டு வென்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். அனல் தெரிக்கிறது பல கவிதைகளில்.


முதல் கவிதை...

வேப்பங்குச்சி

மின்னியது

அக்காவின் மூக்குத்தி...

ஒரு பொட்டுத் தங்கம் கூட இல்லாத வறுமை என்ன செய்யும்

வேப்பங்குச்சியை மூக்குத்தியாக கம்மலாக அணிந்துகொள்ளும். அதுவும் மூக்குத் துளை. காதுகளின் துளை மூடிவிடக்கூடாது, மீண்டும் அதற்காக செலவு செய்யும் சூழல் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் குச்சியைச் செருகிக் கொள்ளுதல் இங்கு கவிதையாகி உள்ளது.


வெந்தது 

மனிதத்தோல்

தோல் பதனிடும் தொழிற்சாலை

வயிறு என்ற ஒன்றில்லாவிட்டால் எதற்காக இந்த பாடு? தன்னை வருத்தி தனது உடலை உயிரை வருத்தி சம்பளம் ஒன்றைப் பெற்று தனக்காக தன் குடும்பத்திற்காக ஓய்வின்றி உழைப்பவன் இந்த வேலையும் இல்லாவிட்டால் என்ன செய்வான்... பசியால் மாண்டுபோவான். இங்கு வாழ்வதற்காக இறந்தபடியே வாழ்கிறான். அந்தச் சூழல் கவிதையாகியுள்ளது.


வேரோடு அழி

சாமின்னு குனிய வைத்தது 

சாமியானாலும்...

சாதியால், மதத்தால், வர்க்கத்தால் பிளவுபட்டுக்கிடக்கும் இந்த சமூகத்தில் இன்னும் ஆண்டான் அடிமை என்ற வறட்டுப் பித்தலாட்டத்தனம் புரையோடிப்போய்க் கிடக்கிறது. அதை நேரடியாகச் சாடுகிறது இக்கவிதை. மனிதர்களுக்கு மட்டுமல்ல அந்தக் கடவுளேயானாலும் வேரோடு அழி என்று முகத்தில் அறைந்தாற்போல சொல்கிறது கவிதை.


பறையடித்த தாத்தா

பறையடித்த அப்பா

திருப்பி அடிக்க நான்...

குலத்தொழிலில் திணிக்கும் காலம் மலையேறிப் போய்விட்டது. என் கல்வி, என் உணவு, என் வேலை எதைத் தேர்ந்தெடுப்பது என்பதெல்லாம் என் உரிமை. மீண்டும் பறை அடிக்க அல்ல, திருப்பி அடிக்க நான் என்பது சமூகத்திற்கு விடுக்கும் எச்சரிக்கை. 


கல்லானாலும் கணவன்

புல்லானாலும் புருஷன்

விந்து படிந்த நாப்கின்...

இந்த வரிகளைப் படித்தபோது பெரும் வலி சூழ்ந்தது. ஒரு பெண்ணின் வாழ்வில் வலிகளாகக் கடந்துபோகும் நாட்கள் மாதவிடாய்க்காலம். இயல்பாகவோ, சட்டென வந்ததும் செல்வதும் தெரியாமல் கடக்க அந்த நாட்கள் பெரும்பாலும் பெண்களுக்கு வாய்ப்பதில்லை. அந்த நாட்களிலும் வழமையான வேலைகள் பெண்களுக்கு இருக்கவே செய்யும். அப்போதும் அங்கு ஆண் என்பவன் ஆணாகவேதான் இருக்கிறான். அவனுக்கு மனைவி என்பவள் தனக்கு நேர்ந்துவிட்ட ஒரு அடிமையாகவே தெரிகிறாள். அதுபோன்ற திமிர்த்தனம் மனிதத்தன்மைக்கு எதிர்நிலையில் வைத்துப் பார்க்கப்படும் என்ற சராசரி அறிவற்றவனின் செயலேயாகும் என்பதை இக்கவிதையில் உணரலாம்.


இது போல தொகுப்பெங்கும் பல கவிதைகள். வாசியுங்கள். 

எல்லாம் புரட்சித்தீப்பந்தம் ஏந்திய கவிதைகள்


வாழ்த்துகள் தோழர்...

Tuesday, 22 July 2025

நசீபு


 

#நூல்_விமர்சனம்


தன்னைச் சுத்திகரிக்கும் சமூகக் கதைகள்


 சிறுகதைகள் என்பவை சிற்சில சம்பவங்களின் தொகுப்பு. அது வாசிப்பவனை கதைக்குள் ஒன்றச் செய்யவேண்டும். கதைக்குள் நிகழும் சம்பவங்கள் வாயிலாக ஏதேனும் ஒரு பாடத்தை உணர்த்தவேண்டும். அப்படிச் செய்யும் எந்தவொரு தொகுப்பும் வெற்றிக்கான முத்திரையைப் பதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. நசீபு சிறுகதைத் தொகுப்பு அப்படிபட்ட தொகுப்பு. தொகுப்பில் மொத்தம் ஏழு சிறுகதைகள். அனைத்தையும் தான் சார்ந்திருக்கும் இஸ்லாமியப் பின்புலத்திலிருந்து எழுதியிருக்கிறார். பழைமைவாதத்தின் முகத்திரையைக் கிழிக்கவும், பெண்களின் இருப்பு இஸ்லாமிய சமூகத்தில் எப்படி இருக்கிறது என்பதைக் காட்சிப்படுத்தவும், அங்கிருக்கும் ஆணாதிக்க சூழலை வெளிக்கொணரவும், அங்கும் வறுமையில் இருக்கும் குடும்பம் பசி போக்கத் திண்டாடும் சூழலையையும் தன்னுடைய தொகுப்பின் மூலமாக காட்சிப்படுத்தியுள்ளார் கதாசிரியர் மு.அராபத் உமர். 


ஷஜ்தா

பானுவின் அப்பா ஒப்புக்கொண்டபடி வரதட்சணைப் பணத்தைக் கொடுக்காததால் அவள் அனுபவிக்கும் இன்னல் எங்குவரைக்கும் போகிறது என்பதை கதை சொல்கிறது. இப்படிக் கதைகள் அனைத்துச் சமூகத்திலும் இருக்கிறது. நஜீம் கணவனாக இருந்தாலும் வீட்டில் தன்னுடைய அம்மா, மற்றும் அக்காவின் சொல் கேட்டு நடப்பவனாக இருக்கிறான். தனக்கு நல்லது நடந்தால் அக்காவால் நடப்பதாகவும் கெட்டது நடந்தால் மாமனார் வீட்டால் நடப்பதாகவும் எண்ணுகிறான். அதனாலேயே மனைவி என்றும் பாராமல் மிகவும் கீழாக நடத்துகிறான். வீட்டில் பானுவின் கொழுந்தன் பானுவிற்காகப் பேசினாலும் அவனுடைய பேச்சு எடுபடவில்லை. தன்னுடைய இரு பெண் குழந்தைகளை வளர்க்க நஜீமின் துணை அவசியம் என்பதால் மாமனார் வீட்டை எதிர்த்து தன்னுடைய தந்தையின் இறப்பிற்குக் கூடச் செல்லாமல் மனதால் புழுங்கும் பாத்திரம் பானுவிற்கு. வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பானுவின் வலிகள் கடத்தப்படுவது அவளின் பாத்திரப் படைப்பை சிறப்பாக்குகிறது. பானுவின் அம்மா, பானு திருமணம் முடித்த ஆரம்ப காலத்தில் உனக்கு எதுவும் மனக்குறைகள் இருந்தால் அதனை அல்லாவிடம் தொழு செய்துகொள். அவர் தீர்த்து வைப்பார் என்கிறார். அதையே கடைசி வரை தொடர்கிறார் பானு. இதன் மூலம் ஒரு பெண் என்பவள் தனக்குத் தீங்கு செய்பவர்களை எதிர்த்து நிற்க, கேள்விக்கு உள்ளாக்க வைக்கப்படாமல் இருப்பதற்கு கடவுள் என்பதையும், அவள் ஒரு பெண் என்பதையும் நினைவுபடுத்தும் பல விஷயங்கள் தொடர்ந்து பெண்களுக்கு மட்டும் கற்பித்துக்கொண்டே வரப்படுவதைச் சுட்டுகிறது. வரதட்சணை என்பதை தன்னுடைய அண்ணனின் மகள் என்றாலும் கேட்கும் காலம் என்பதை மாமியார் கதாபாத்திரத்தின் மூலமாகக் காட்டுகிறார். இக்கொடுமை இஸ்லாமிய சமூகத்தில் மட்டுமல்ல பல சமூகத்திலும் இருக்கிறது. இதனை உணரச் செய்யும் வேலையைக் கதை செய்கிறது. 


கியாமத்

பதினைந்து வயதே ஆன ஆயிஷா என்ற பெண்ணிற்கும் முப்பத்து இரண்டு வயது ஆணுக்கும் திருமணம் முடிகிறது. இவர்களுக்கு ரேஷ்மா என்ற பன்னிரண்டு வயது பெண் குழந்தை. திருமணம் முடிந்த காலத்திலிருந்தே ஆயிஷா மேல் சந்தேகம் கணவனுக்கு. குடும்பம் அவளை எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே அனுப்புவதில்லை. அவளின் அழகும், தன்னை விட மிக இளையவள் என்பதும் கணவனுக்கு அவள் மீது சந்தேகத்தை வரவழைக்கிறது. அது தன் மேல் உள்ள நம்பிக்கையின்மை. தன் அன்பின் மேல் வரவேண்டிய நம்பிக்கையின்மை. பழமையில் ஊறிப்போன குடும்பம் என்பதால் வயல் வேலைக்கு வரும் நபர்களுக்கு உணவளித்தல் கூட சந்தேகத்தைக் கிளறுகிறது. இந்த சமயத்தில் வீட்டின் பக்கமாக வரும் பாத்திமா என்ற பெண்ணோடு நட்பு. அந்த நட்பில் அவ்வளவு ஆத்மார்த்தம். கொஞ்சம் கொஞ்சமாக தன்னைப் பற்றி, தன்னுடைய வலியைப் பற்றி ஆயிஷா பாத்திமாவிடம் பகிர்கிறாள். வீட்டில் படுத்தும்பாட்டினால் தான் இறந்துகூட போய்விடுவேன் என்று ஆயிஷா கூறுகிறாள். ஆனால் பாத்திமாவின் பேச்சைக் கேட்டபின் அப்படியெல்லாம் பண்ணமாட்டேன். என் பிள்ளையை காலேஜ் வரைக்குமாவது படிக்க வச்சுட்டு ஒருத்தன் கையில் பிடிச்சுக் கொடுக்கும் வரை சாகமாட்டேங்க்கா என்று நம்பிக்கையுடன் செல்பவள் இறந்துவிட்டாள் என்பது எவ்வளவு துயரம். இறப்பின் பின்னர் மாமியார், கணவன், நாத்தனார், உறவுகள் என ஒவ்வொருவர் நடவடிக்கையும் சந்தேகம் அளிப்பதாக இருக்கிறது. ஆனால் இது ஆணாதிக்க சமூகம். இங்கு பெண்களின் பேச்சு எடுபடாது. ஆனால் உண்மையாக இரக்கம், அன்பு, கருணையால் நிரம்பிய ஒரு பெண் எப்படி இறக்கலாம்? அவளிடம் வலி இருந்தது. ஆனால் கோழைத்தனம் இல்லை. அவளை இப்படி யார் செய்திருப்பார்கள்? யார் யார் கொலையாளிகள்? அவள் என்ன தவறிழைத்தாள்? அவளைக் கொலை செய்துவிட்டு எப்படி நீங்கள் நல்லவர்களாகலாம்? என்ற கேள்வியை பாத்திமா, சையதலி மூலமாக எடுத்தாண்டுள்ள விதம் அருமையாக இருக்கிறது. தன்னைப்போல தன்னுடைய மகளும் இருந்துவிடக்கூடாது என்ற அக்கறையில் மகளை கல்லூரிப் படிப்பை முடித்து வைத்த பின்தான் திருமணம் செய்துவைப்பேன் என்ற ஆயிசாவின் எண்ணம் கல்வியின் முக்கியத்துவத்தைக் காட்டுவதாகவும் இள வயது திருமணத்திற்குள் அவளைத் தள்ளிவிட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் காட்சிப்படுத்துவதாகப் பார்க்கலாம். கதையின் இறுதிப் பத்தியில் சொன்னவாறு யாராச்சும் காப்பாத்துங்க என்ற துயர் நிறைந்த வார்த்தைகளுக்கு முன்னால், முன்கூட்டியே அவளின் வலி அறிந்தும் தூர நின்று கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் குற்றவாளிகளாக கைகட்டியே நிற்கிறோம்.


வெம்மை

ஃபஹீமாவின் மாமனார் இறந்துவிடுகிறார். வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற கணவன் திரும்பும் வரை ஃபஹீமாதான் பார்த்துக்கொள்ளவேண்டும். அவள் சித்த மருத்துவம் படித்தவள். அவளுக்கு மாமனார் இறக்கும் வேளை வந்துவிட்டது. நடக்கும் ஒருசில சம்பவங்களும் அதை உணர்த்தியது. எனவே, கூட இருங்க என்று கணவனிடம் கூறியும் கட்டாயம் போகவேண்டிய சூழல் என்பதால் சென்றுவிடுகிறான். இறப்பு செய்து கூறியபோதும் வருவதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லுகிறான். ஃபஹீமாவின் வற்புறுத்தல் காரணமாக வருகிறான். வந்தவன் அத்தாவைப் பார்த்தபோதும், அம்மாவைப் பார்த்தபோதும் அழவில்லை. ஃபஹீமாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அடக்கம் செய்துவிட்டு வந்த இரவில் அப்பா இறந்ததற்கு உங்களுக்கு கண்ணீர் வரவில்லையா, ஏன்? என்ற கேள்விக்கு பணம் பணம் என்று ஓடி ஓடி அப்பாவைக்கூட கவனிக்கவில்லை. அவர் கூட நான் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கடைசியாக அவர் உயிரோடு இருக்கும்போது கூட பார்க்கவில்லை என்று கூறி கண்ணீர் விடுகிறான். வாழ்க்கைக்காக பணம் என்று ஓடி உறவுகளை மறந்துவிடுகிறோம் என்பதை கதையை வாசிக்கும்போது உணரமுடிகிறது. கணவன் இறந்தாலும் அருகே சென்று அமர்ந்து பார்த்து அழுவதற்குக் கூட அருகே ஆண்கள் யாரும் இல்லை, அவர்கள் இனி காலையில்தான் வருவார்கள். இப்போது சென்று பார்க்கலாம் அழலாம் என்ற நிலையில் மாமியார் பாத்திரம் மூலமாக குறிப்பால் உணர்த்துகிறார் கதாசிரியர். எல்லா உணர்வுகளையும் இப்படிக் கட்டுப்படுத்தி வைத்திருப்பது எவ்வளவு வலி? இந்த நேரம் சிரிப்பதற்கு, இந்த நேரம் அழுவதற்கு? என்று பிரித்து வைப்பது எவ்வளவு பெரிய வன்மம் என்பதை மாமியாரின் கதாபாத்திரம் மூலமாக உணர முடிகிறது. ஃபஹீமாவால் குடும்பத்தை, அப்பாவை, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள இயலும் என்ற கணவனின் எண்ணப்படி அவள் சிறப்புற வழிநடத்துகிறாள். கணவனும் அவளின் வார்த்தைகளை காதுகொடுத்துக் கேட்கிறான். அதற்கு முறையான பதில் சொல்கிறான். ஃபஹீமாவின் பாத்திரப் படைப்பு சிறப்பாக உள்ளது. இயல்பான ஒரு குடும்ப வாழ்வைக் கண்முன்னே நிறுத்தியதும் பணம் மட்டும் குறிக்கோளாகக் கொண்டு இயங்கியதால் தன்னுடைய தந்தையைக்கூட இறுதியில் பார்க்க இயலவில்லை என்று தவறை உணரும் மகனின் இயல்புத் தன்மையும் கதையில் சிறப்பாக அமைந்துள்ளது.


இத்தா

அரசுக் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்க்கும் காஜா திடீரென்று இறந்து விடுகிறார். அவருடைய மனைவி ரோஜாவுக்கு அணிவிக்கும் வெள்ளை நிறப் புடவையைக் கண்டு பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகள் ஜெனி கதறுகிறாள். ஆனால் அங்கு நிலவும் சூழல் அதனை மாற்றுவதாக இல்லை. பெரிய மாமியார் பழைமையைச் சுமந்து நிற்கும் நபர். அவர் பிள்ளைகளுக்கு இதையெல்லாம் சொல்லி வளர்க்கமாட்டாயா என்று திட்டுகிறார். அடக்கம் எல்லாம் முடிந்த பின்னர் தன்னுடைய அம்மா ரோஜா இருக்கும் அறைக்குச் சென்று அவள் கேட்கும் கேள்வி, கணவன் இறந்தால் மனைவி வெள்ளை உடை உடுத்தினால்தான் கணவனுக்கு சொர்க்கத்தில் வெளிச்சம் கிடைக்கும் என்னும்போது மனைவி இறந்துவிட்டால் கணவன் வாழ்நாள் முழுக்க வெள்ளை உடை அணிந்தால் தானே மனைவிக்கு சொர்க்கத்தில் வெளிச்சம் கிடைக்கும். அதை ஏன் கணவன்மார்கள் பின்பற்றுவதில்லை என்ற கேள்வியை ஜெனி கேட்கிறாள். பழைமைவாதம் பதில் தெரியாமல் விழிக்கும் இடம் இது. ஹெச்.ஜி.ரசூல் ஊர்விலக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தோடு ஒப்புமைப்படுத்திப் பார்க்கவேண்டிய வினா இது. கதை வாயிலாக இளைய தலைமுறையின் இதுபோன்ற கேள்விகள் வெளிப்படல் கதாசிரியர் கையாண்டுள்ள நல்ல உத்தியும் கூட.  


நசீபு

பெண்களின்மீது காலம்காலமாக திணிக்கப்படும் வன்முறை என்பது அவர்கள் கேள்வி எதையும் கேட்டுவிடக்கூடாது. அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதுதான். சுபைதா என்பவள் காரணமே இல்லாமல் கணவன் இறப்பிற்கு முன்னர் மன்னிப்பு கேட்க நிர்பந்திக்கப்படுகிறாள். அவளும் சம்மதித்து தான் எதுவும் தவறு செய்திருந்தால் மன்னித்துவிடுங்கள் என்று மன்னிப்பு கோருகிறாள். இறக்கும் தருவாயில் கூட அன்பாக எதையும் பேசாமல் உதாசீனப் படுத்தப்படுகிறாள். இது பேரன் வரை நீள்கிறது. அவளுக்குள் ஆயிரம் வருத்தங்கள். ஆனால் அதைக் கேட்க யாரும் இல்லை. பெண்கள் தமக்குள் கூடி தமக்குள் வருத்தங்கள் பகிர்ந்து, தமக்குள் ஆறுதல் வார்த்தைகள் பெற்று வாழ்க்கையை ஓட்டிக்கொள்ளும்படியான கடமைக்கான வாழ்க்கையை மட்டுமே வாழ்ந்து தீர்க்கிறார்கள். அவர்கள் ஆண்கள் சொல்வதைக் கேட்டுச் செய்யும் பணியாளர்களாகவே உள்ளனர். அவர்களின் ஆசாபாசங்கள் கேட்க யாருமில்லை. சொன்னால் அதற்கும் ஆயிரம் தடைக்கற்கள். வேளாவேளைக்குச் சோறு, வருசத்துக்கு இரண்டு உடை என்பதுதான் அவர்களின் வாழ்க்கை என்று ஆண்கள் நிர்ணயம் செய்துவிடுகிறார்கள். அந்த உடையும் ஆண்களின் விருப்பப்படிதான். ஒரு நோன்பிற்கு பாவாடை, தாவணி கேட்கும் விருப்பத்தைக்கூட நிறைவேற்றித்தராமல் வேறு உடையை எடுத்துத் தருவதோடு அதனை உடுத்தாதற்காக அம்மாவைக் கோபத்தில் அறைந்து பயமுறுத்தும் அப்பா என்பது மகளுக்கு சாபம்தான். சுபைதாவின் காலம் முதல் பேரனின் கேள்வி வரை பல தலைமுறைகளாக பெண்களின் எதிர்பார்ப்பையும் அதற்கு கிடைத்த எதிர்வினையையும் கடந்து வாழும் பெண்கள் பரிதாபத்திற்கு உரியவர்களாக இருக்கிறார்கள். அது மீறப்படும் நாள் பயங்கரகரமானதாக இருக்கும் என்பதை கதையின் இறுதியில் வரும் சுபைதா வெத்தலை இடிக்கும் சத்தம் வழக்கத்தி விட வலிமையானதாக இருந்தது என்ற வார்த்தையால் கதாசிரியர் உணர்த்தியுள்ள விதம் மிகச் சிறப்பு.


பரக்கத்

கணவன் இல்லாத நிலையில் தன்னுடைய மகன் நிஜாமை வளர்க்கிறாள் ஜன்னத். லாரி ஓட்டுனரான அவன் வரும்பொழுதே பரக்கத் பெண்ணை அழைத்து வருகிறான். வேறு மதமாக இருப்பாளோ என்று எண்ணிக் கோபப்பட்ட ஜன்னத் தன்னுடைய மதம் என்பதால் சமாதானமாகி திருமணம் செய்து வைக்கிறாள். அவர்களின் திருமண வாழ்க்கையின் பயனாக ஒரு மகன் பிறக்கிறான். மகனின் பிறந்தநாளுக்கு வருவதாகக் கூறிச் சென்ற நிஜாம் இறந்துவிடுகிறான். ஒரு மாதத்தில் கையில் வைத்திருந்த பணம் யாவும் தீர்ந்துவிட்டது. துக்ககாலம் முடியும் முன்னர் இட்லிக்கடை எப்படிப் போடமுடியும் என்ற பரக்கத்தின் கேள்விக்கு ஜன்னத் அளிக்கும் பதில் அல்லாவிற்கு எல்லாம் தெரியும். நாம் நம் வாழ்க்கைக்காக இந்த வேலையைத் தொடங்குகிறோம். அதனால் அல்லா நம்மைத் தண்டிக்கமாட்டார் என்று பதில் கூறுகிறார். தெருவும் பரக்கத் கடை இட்லி ருசியில் துக்ககாலம் குறித்து எதுவும் பேசவில்லை என்பதாகக் கதை முடிகிறது. கதையில் முடிவெடுக்கும் நிலையில் பெண்கள் இருக்கின்றனர். அவர்களின் வாழ்வை அவர்களே தீர்மானிக்கின்றனர். அவர்களுக்குள் பிணக்கு இல்லை. ஆதலால் வெற்றி அவர்கள் கைவசம் வருகிறது. பெண்களால் சுயமாக உழைத்து ஆண் துணையில்லாமல் வாழ இயலும் என்னும் உத்வேகத்தைக் கொடுக்கும் கதை இது. 


ஈமான்

வறிய நிலையில் உள்ள இஸ்லாமியக் குடும்பம் கொரோனோ காலத்தில் வேலைக்கு எப்படி அல்லாடுகிறது என்பதையும் பசியையும், நோன்பையும் ஒரே காலத்தில் எப்படிச் சமாளித்தார்கள் என்று கதை பேசுகிறது. தொகுப்பை முன்வைத்துப் பேசுவது என்றால் பசி உள்ள இடத்தில் குடும்பத்தில் இணக்கம் என்பது இருக்கிறது. அங்கு பழமைவாதம் என்பது இல்லாமல் இருக்கிறது. கதையில் வரும் பக்கத்துவீட்டு அக்கா, கடைக்கார ராணி அக்கா போன்றோர் மதத்திற்கு அப்பாற்பட்டு உதவும் கதாபாத்திரங்கள். சிங்கிள் சோர்ஸ் என்ற பதத்தின்மூலம் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தின்மீது குற்றம் வாசித்த அரசியல், அவர்களின் வறுமை குறித்து எந்த இடத்திலாவது பேசியிருக்கிறதா என்றால் இல்லை. அதனை இந்தக்கதை உணர்த்துகிறது. 


 ஆம் என்பதை ஆம் என்பதற்கும் இல்லை என்பதை இல்லை என்று சொல்வதற்கும் கூட இங்கு எத்தனையோ தடைகள். மேல்பூச்சுடன் சொல்லி புதியதொன்றைக் கட்டமைக்க விரும்பி சொல்ல வந்ததன் சாயல் எதுவுமற்றுக் கடந்துபோய்விடும் அபத்தம் நிறைந்த உலகம் இது. ஆனால் நசீபு சிறுகதைத் தொகுப்பு இதையெல்லாம் உடைத்து எறிந்து நம்மை தனக்குள் இழுத்துக் கொள்கிறது. இக்கதைகள் சொல்லும் மனிதர்கள் மேல் நாம் கொள்ளும் வாஞ்சையையும் வெறுப்பையும் வைத்து எவ்வளவு தூரம் அவர்களுள் நாமும் ஒருவராக மாறிப்போகிறோம் என்பதை ஒவ்வொரு கதையையும் வாசிக்கும்போது உணர முடிகிறது. மொத்தம் ஏழு கதைகள். இஸ்லாம் மக்கள் உபயோகிக்கும் சொற்கள் தான் தலைப்பு. வெம்மை ஒன்றைத் தவிர்த்து. இன்னொன்று, கடைசிக் கதை ஒன்றைத் தவிர்த்து பிற கதைகளில் இறப்பும் அதனைச் சுற்றிய களமும் தான் கதையின் மையமாக இருக்கின்றன. பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். முதல் சிறுகதைத் தொகுப்பு என்று தோன்றாதவாறு எழுத்து அமைந்திருப்பது சிறப்பு.


நூல் பற்றி:

நசீபு

மு.அராபத் உமர்

டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்

பக்கம் எண்: 104

விலை: ரூ 120/=


யாழ் தண்விகா 


❣️

Monday, 21 July 2025

அன்பளிப்பு

 


அன்பளிப்பு

கு. அழகிரிசாமி

சீர்வாசகர் வட்டம்

விலை ரூபாய் 10

பக்கம் 32


சாகித்திய அகாடமி பால புஷ்கார் விருது பெற்ற விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் இனிய எளிய சுருக்கமான அணிந்துரையுடன் நூல் ஆரம்பமாகிறது. குழந்தைகளை யார் என்ன என்ற பேதம் பார்த்தாலே அது இக்கதையில் வருவதைப் போல நாசுக்காக சொல்வதே நச்சென்று அறைவதுபோல் இருக்கும்.


அழகிரிசாமி, சாரங்கன், பிருந்தா, சித்ரா, சுந்தரராஜன், கீதா, தேவகி எல்லோரும் நண்பர்கள் என்று தான் கூற வேண்டி இருக்கிறது. இதில் அழகிரிசாமி ஒரு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர். மற்ற அனைவரும் குழந்தைகள். பள்ளியில் படிப்பவர்கள். சுந்தரராஜனும் சித்ராவும் வயதில் சற்று மூத்தவர்கள். சனிக்கிழமை இரவில் கொஞ்சம் கூடுதல் நேரம் தூங்க கூடியவர் அழகிரிசாமி. ஏனென்றால் ஞாயிற்றுக்கிழமையன்று சற்று கூடுதலாக ஓய்வு எடுத்துக் கொள்ளும் மனநிலை அவருக்கு. அப்படித்தான் சனிக்கிழமை இரண்டு மணியைப் போல தூங்குவதற்குச் செல்கிறார். எப்பொழுது படுத்தாலும் ஒரு அரை மணி நேரம் கூடுதலாக தூக்கம் வருவதற்கு ஆகிவிடுகிறது. அப்படிப்பட்டவர் காலையில் ஏழ தாமதமாய் விடுகிறது. அவரை மேலே சொன்ன வாண்டுகள் எழுப்பத் தொடங்கி விடுகிறார்கள் என்பதில் தான் கதை ஆரம்பமாகிறது. மேலே சொன்னவர்களில் சாரங்கன் கொஞ்சம் அமைதியான சுபாவம். எங்களுக்கு புத்தகம் வாங்கி வரவில்லையா என்று குழந்தைகள் அவரை தொந்தரவு செய்து எழுப்பி கேட்கின்றனர். இவர் வாங்கவில்லை என்று கூற வீட்டிலிருந்து அவரது புத்தகங்களை எல்லாம் கீழே தள்ளி தேடுகின்றார்கள். பின்னர் இவரே புத்தகங்களை எடுத்து கொடுக்கிறார். சித்ராவுக்கும் சுந்தரராஜனுக்கும் என் பிரியமுள்ள சித்ராவுக்கு அன்பளிப்பு, என் பிரியம் உள்ள சுந்தரராஜனுக்கு அன்பளிப்பு என்று எழுதி என்று கையெழுத்துட்டு கொடுக்கிறார். பிருந்தாவும் தேவகியும் எனக்கு என்று கேட்க சித்ராவிடமும் சுந்தரிடமும் வாங்கி படித்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். அவர்களும் மறுப்பேதும் சொல்லாமல் ஏற்றுக் கொள்கின்றனர். 


அவ்வப்போது வந்து வீட்டில் விளையாடி பேசி மகிழ்ந்து ஆடிப்பாடி இருந்த இந்த குழந்தைகளில் பிருந்தா மட்டும் வரவில்லை. பிருந்தாவிற்கு என்ன ஆயிற்று என்று கேட்க அவளுக்கு காய்ச்சல் என்று மட்டும் பதில் வருகிறது. ஒரு நாள் இரவு எட்டு மணி போல வெளியில் அமர்ந்திருக்கிறார் அழகிரிசாமி. பிருந்தா வீட்டு வேலைக்காரனிடம் பிருந்தாவிற்கு என்ன ஆயிற்று என்று கேட்க, அவளுக்கு காய்ச்சல். ஒன்றும் முடியவில்லை. ஒவ்வொரு நாளாக அவள் இளைத்துக் கொண்டே செல்கிறாள் என்று கூற அழகிரிசாமி அச்சிறுமியைப் பார்த்து வர மறுநாள் ஒத்திப் போட்டாலும், மனசு கேட்காமல் உடனே கிளம்புகிறார். போய் பார்க்க அவள் மாமா மாமா என்று அன்பை கொட்டுகிறாள். அவள் அவரை விடாமல் எங்கே இருங்கள் மாமா என்று கூறும்போது மறுநாள் காலை வருகிறேன் என்று கூறிவிட்டு திரும்புகிறார். மறுநாள் காலையும் பிருந்தாவை வந்து பார்க்கிறார். சற்று நேரம் அளவளாவி விட்டுத் திரும்புகிறார். இதை பார்த்துக் கொண்டிருந்த சாரங்கன் வாங்க மாமா வாங்க மாமா என்று வீட்டுக்கு அழைக்கிறான். இவர் வரும் ஞாயிற்றுக்கிழமை வருகிறேன் என்று கூறிவிட்டு சென்று விடுகிறார். பிறகு பிருந்தாவிற்கு ஒரு கட்டத்தில் குணமாகி விடுகிறது. இவர் வந்து சென்றதால் தான் அந்த காய்ச்சல் குணமானது என்று கூறக் கேட்கிறார். அதன் பின் சாரங்கன், பிருந்தா உட்பட அனைத்து வாண்டுகளும் அழகிரிசாமி வீட்டிற்கு வந்து செல்கின்றனர். சாரங்கன், வால்ட் விட்மன் எழுதிய ஒரு நூலை அழகிரிசாமியிடம் கேட்கிறான். நான் உனக்குச் சொல்லி இருக்கிறேன் அல்லவா இது பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது நீ எடுத்து படித்துக் கொள். அப்பொழுது தான் உனக்கு புரியும் என்று கூற இவன் அழுது கொண்டே தன்னுடைய வீட்டிற்குச் சென்று விடுகிறான். மறுநாள் சாரங்கன், அழகிரிசாமியை தன்னுடைய வீட்டிற்கு அழைக்கிறான். நீங்கள் ஞாயிற்றுக்கிழமை வருகிறேன் என்று சொன்னீர்களே வாருங்கள் என்று கூறுகிறான். இவருக்கு பிருந்தா அவர்கள் வீட்டிலும், தெரியாத அப்பா தெரியாத அம்மா என்ற சூழ்நிலையிலும் வழியில்லாமல் அந்த குழந்தைக்கு காய்ச்சல் என்பதால் வீட்டிற்கு சென்று பார்த்தார். இப்பொழுது இவன் வீட்டிற்கு என்ன காரணம் சொல்லி செல்வது என்று எண்ணி மறுக்கிறார். சாரங்கன் வீட்டிலும் அவனுடைய அம்மா அப்பா தெரியாதவர்கள் என்ற நிலையில் எப்படி வீட்டிற்கு செல்வது என்று எண்ணி மறுக்கிறார். அவன் அழுது கொண்டே இருக்கிறான். சரி நான் வருகிறேன் என்று கூறி சாரங்கனின் வீட்டிற்கு செல்கிறார். சாரங்கன் அங்கு இவருக்கு உப்புமாவும் காபியும் கொண்டு வந்து தருகிறான். இவருக்கு இதை என்ன சொல்வது என்று தெரியாமல் மருந்து போல நினைத்து சாப்பிட்டு விடுகிறார். வீட்டில் அவ்வளவாக வசதி இல்லை என்பது புரிகிறது. அவனுடைய அப்பா இவரை வீட்டில் பார்க்கிறார். வாருங்கள் என்று கூறிவிட்டு அவரும் சென்று விடுகிறார். ஒரு பவுண்டன் பேனா ஒன்றை எடுத்து அழகிரிசாமியிடம் கொடுத்து சாரங்கன் என்ன செய்கிறான் என்பதுதான் கதை.


கதையின் ஆரம்பத்தில் "இரவில் வெகு நேரம் கண்விழித்தால் உடம்புக்கு கெடுதல் என்று எங்கள் பாடப் புத்தகத்தில் போட்டிருக்கிறது மாமா" என்று சாரங்கன் கூறுவதை இந்த இடத்தில் யோசிக்க வேண்டியிருக்கிறது. அதிகம் பேசாத சிறுவன் படிப்பில் சிறப்பாகவும் இருப்பான் என்பதை இவ்விடத்தில் கவனிக்க வேண்டியிருக்கிறது. தனக்கு அன்பளிப்பு கிடைக்காத இடத்தில் வேண்டாம் என்று ஒதுங்கி கொள்வார்கள் என்று நாம் நினைப்போம். ஆனால் அவர்கள் என்ன விதமாக யோசிப்பார்கள் என்பதையும் நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது. பிருந்தா தன்னுடைய உடல் நலன் தேறியதற்கு காரணம் அழகிரிசாமியின் அன்பு என்பதையும் இந்த இடத்தில் நாம் குறிப்பிட்டாக வேண்டும்.


நூலில் இருந்து,

"உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்வதும், அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டு உணர்ச்சியும், ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போல பேசி, குழந்தையைப் போல ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டு பொம்மையாகக் கருதி அதற்குத் தக்கவாறு நடந்து கொள்ளுகிறார்கள். ஆனால் அந்த சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை. அவர்களுடைய அன்பில் அந்த விளையாட்டு உணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள். இந்த உண்மை எனக்கு என்றோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனதில் தைத்தது. அன்று முதல் நான் அவர்களைக் குழந்தைகளாக நடத்தவில்லை. நண்பர்களாக நேசித்தேன். உற்ற துணைவர்களாக மதித்தேன். உள்ளன்பு என்ற அந்தஸ்தில் அவர்களும் நானும் சம உயிர்களாக மாறினோம்".


வாசிக்க வேண்டிய கதை.