Thursday, 23 October 2025

நீ துளையிட்ட எனது புல்லாங்குழல் - ஜின்னா அஸ்மி

 

நீ துளையிட்ட எனது புல்லாங்குழல்

ஜின்னா அஸ்மி

Mohamed Ali Jinna 

படைப்பு பதிப்பகம்

பக்கங்கள் : 114

விலை : 120


கண்ணீரிலும் காதலிலும் கரைந்த கவிதைகள்


 காதலாகக் கசிந்துருகுபவரின் கஸல் கவிதைகள், நீ துளையிட்ட எனது புல்லாங்குழல். இசையாக ராகமாக கவிதையாக கண்ணீராக கடவுளாக வலியாக காதலாக ஒவ்வொரு கவிதையும் தன் முகம் காட்டுகிறது. தொடர்ந்து காதலை தான் படைப்பாக்குவதோடு, காதலை கவிதையாக்கும் பல கவிஞர்களையும் ஊக்குவிக்கும் ஜின்னா அஸ்மி தோழரின் கவிதைகளை கடவுள் மறந்த கடவுச் சொல் தொகுப்பிலேயே ருசித்திருக்கிறேன். இத்தொகுப்பு அதன் தொடர்ச்சி நிலை.


 என்னுரையில், காதலில் வெற்றி என்பது தோல்வி. தோல்வி என்பது வெற்றி என்றும் நான் கஸலை நினைக்கிறேன் கஸலாகிறேன் என்கிறார் கவிஞர். கவிதைகளில் அடிநாதமாக இவ்வரிகளே அமைந்திருக்கிறது. கவிக்கோ எழுதிய மொழிபெயர்ப்புக் கவிதை ஒன்று. எப்போதும் மனதிற்குள் இருந்து உருத்திக்கொண்டே இருக்கும் வரிகள் அவை. 

“நீயும் நானும் சேரக்கூடாது என்றுதான்

ஒவ்வொரு முறையும் வேண்டுகிறேன்.

ஏனென்றால் என் பிரார்த்தனைகள்

ஒருபோதும் நிறைவேறுவதில்லை”

எதுவும் நடக்காத விரக்தியிலும் இணை உயிர் தேடும் ஒரு காதல் மனம் இப்படியெல்லாம் பாடுமா என்று வியக்க வைத்த வரிகள் இவை. போலவே பல கவிதைகள் இன்மையைப் போற்றி ஞானம் தேடும் தன்மையுடையதாக தொகுப்பில் காணக் கிடைக்கின்றன. மெல்லப் பயணித்து வேகம் கூடிச் செல்லும் திரைப்படம் போல கவிதைகளும் தன்னுடைய வலியை கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி வேகம் கூட்டுகின்றன தொகுப்பின் இறுதி செல்லச் செல்ல.


“வாசலுக்கும் 

வருகைக்கும்

எந்தச் சம்மந்தமுமில்லை

காதலென்பது காற்றைப் போல”

எங்கும் காதல் வியாபித்திருக்கும். அது இதயத்தின் உள்ளே வர கதவு திறந்திருக்க வேண்டிய அவசியமில்லை. காதல் இது போன்ற சூழல் இல்லாமலே காற்றைப்போல எங்கும் நிறைந்திருக்கும். காதல் என்பது அன்பைச் சூடிக்கொண்டிருக்கும் அனைவருக்குள்ளும் நிறைந்திருக்கும் இறை. அதை வணங்கினால் போதாதா இறை வரம் பெற என்றுணர்த்தும் வரிகள் இவை.


“இந்தக் கணம் 

ஒரு நிச்சயமற்ற பொழுதாகிவிட

காதல் ஒன்று போதும்”

காதல், ஒரு மாயம் நிகழ்த்தும் கடவுள். அது எப்பொழுதும் ஒரே போன்றதொரு சுகம் தராதெனினும் அது தரும் சுகமனைத்தும் வலியாக இருந்தாலும் துயராகயிருந்தாலும் சுகமே. மயக்கம் தரும். விழிப்பு தரும். விஷம் தரும். உலகை மறக்க வைக்கும். இதோ இப்போது வாழும் வாழ்வை நிச்ச்சயமற்ற ஒன்றாக்க காதல் போதும் என்கிறார் கவிஞர். நிச்சயமற்ற ஒன்று என்பதில் எதை நிரப்பிக்கொள்வது என்பது அவரவர் காதல் சூழல் பொறுத்தது.


 காதலை பல நேரங்களில் ஒரு மிகப்பெரும் வக்கிரமமாக பார்த்திருக்கிறேன். அது மன்றாடுதலை ஏளனம் செய்வதை உணர்ந்திருக்கிறேன். தன்னிலை தொலைத்து சரணாகதி அடைதலை தூக்கி எறிவதை அனுபவித்திருக்கிறேன். ஆனாலும் காதலைத் தொடர்ந்திருக்கிறேன் என்பது எதனை நோக்கிய பயணம்? அது மனதை வாழவைத்தல். கண்ணீரை வாழ வைத்தல். காதலை வாழவைத்தல். இந்தக் கவிதையில் கவிஞர், கண்ணீருக்கு என்ன பெயர் சூட்டுகிறார் பாருங்கள்...

“நான் 

கண்ணீரைப் பிரசவிக்கிறேன்

நீ 

“காதல்” எனப் பெயர் சூட்டுகிறாய்”


 அனுபவங்களே கவிதைகளாகின்றன பலருக்கு. அது பார்ப்பதாக, கேட்பதாக, அனுபவித்தலாக என எப்படியும் அமையலாம். உலகின் ஏதோ ஒரு மூலையில் உருவாக்கப்படும் மீம்ஸ் பார்த்து நாம் சிரிப்பது போல, அட ஆமாப்பா என்பது போல. உணர்வு என்பது உலகப் பொது. அதிலும் காதல் தரும் உணர்வுகள் அவ்வளவு இயல்பாக காதலர்களுக்குப் பொருந்திப் போகும். காதலில் ஓர் ஆணின் சொல்லோ, பெண்ணின் சொல்லோ உண்டாக்கும் வலி இரு தரப்பிற்கும் பொதுவானதாக இருக்கும். அன்பின் கண்களுக்கு அதன் வலி புரியும். வெறுமனே வேடிக்கை பார்க்கும் கண்களுக்கு ஒன்றும் புரியாது. சிறுபிள்ளைத்தனமாக இருக்கும். கத்தியால் குத்தினால் மட்டும்தான் காயமா? தழும்பு இருந்தால்தான் காயமா? இதோ கவிஞர் கூறுகிறார்.

“உன் காதல் வார்த்தைகள்

எப்போதும் காயங்களாக இருந்ததில்லை

ஆனால் வலி நிறைந்தவை”


 “பெண்மனசு ஆழமென்று ஆம்பளைக்குத் தெரியும் அது பொம்பளைக்கும் தெரியும் அந்த ஆழத்திலே என்ன உண்டு யாருக்குத்தான் தெரியும்...” என்றொரு பாடல் உண்டு. பெண் ஒரு ஆணை என்ன செய்கிறாள் எப்படி வழி நடத்துகிறாள் எவ்வாறான அன்பை வழங்குகிறாள் வழங்கத் தலைப்படுகிறாள் என்பதை எப்போதும் உணர முடியாது. சரணாகதி என்ற ஒன்றை செய்தபிறகும் அவளின் விருப்பம் சார்ந்த விசயங்களைத் தான் அரங்கேற்றுவாள். அது நாம் விரும்பியதாக இருக்கலாம். துயரானதாக இருக்கலாம். நாம் நிர்ணயித்து வைத்திருந்த எல்லைக்கும் மேலாக பறந்து விரிந்திருக்கலாம். எல்லாம் உணரும்போது பெண் என்பவளை, காதல் என்பதை வைத்த கண் மாறாது அதிசயிக்கும் சூழல் வாய்க்கும். அந்தச் சூழல் மகிழ்வின் உச்சமாக கிடைக்கப்பெறும் காதலிணை கொடுத்து வைத்தவர்கள் தான்.

“உனக்குள்ளே நான் மிதந்துகொண்டிருந்தாலும்

உன் ஆழம் பற்றி அறியமுடியாத

ஒரு தக்கையைப் போலவே வைத்திருக்கிறாய்

என்னை...”


 கண்ணீர் வெளிச்சம் என்பது எவ்வளவு ஆற்றாமைகள் நிறைந்தது. அதுதான் நான் உனக்கு அளிக்கும் பரிசு. அதில் நீ என்னைக் காண்பாய். அது உன்னை மேலும் ஒளியாய் மாற்றும். அதற்கு உனதருகில் வாழும் வரம் கிட்டிவிடும். கண்ணீர் தனது பாவத்தை, நீ பெற்றுக்கொண்டதால் கழுவிக்கொள்ளும். கண்ணீர் வெறும் நீர்மப் பொருள் அல்ல. அது காதல். விருப்பம் இல்லை என்றால் சொல்லிவிடு என்று முடியவேண்டிய கவிதையை “வெளிச்சம் வேண்டாமெனில் ஊதி அணைத்துவிடு” என்கிறார் கவிஞர். “அவள் பெறாமல் போவது வெளிச்சம். எனக்கு வாழ்வு” என்பதான பொருளில் காதல் வெளிச்சம்!

“என் அழுகையை ஏற்றுக்கொள்

அது உனது சன்னதியில் என் கண்கள் ஏற்றும் தீபம்

வெளிச்சம் வேண்டாமெனில் 

ஊதி அணைத்துவிடு


 காதலிடும் கட்டளைகள் பல சமயம் அபத்தமாக இருக்கும். ஆனாலும் அபத்தத்தையும் ஏற்கும் வேண்டுதலைக் கைக்கொண்டிருக்கும் மனம் என்ன செய்யும்? ஏற்று தன்னை வருத்தியபடி மீண்டும் துளிர்க்கும் காதலுக்காக காத்திருக்கும். இது காதலிடும் சாபம். காதல் தந்த சாபம் என்பதால் கைகளில் பெருமையோடு ஏந்திக்கொள்ளும் நம்முயிர். 

“இது என்ன சாபம்

வாசம் வேண்டாம் என்றால்தான்

பூவுக்கான வரம் கொடுப்பேன் என்பது”


“உன் கூண்டுக்காகவே 

உருவாக்கப்பட்ட பறவை நான்

ஏன் வானம் வரைந்து வேடிக்கை காட்டுகிறாய்” (55)

“என் இறகுகளைக் கொய்து

கூடு கட்டுகிறேன்

இப்பொழுது 

வானத்தைக் காட்டி விளையாடுகிறாய்” (22)


“நான் விசமாக இருந்தாலென்ன...

நீ மகுடி ஊதியதும்

நான் ஆடத்தானே செய்கிறேன்

ஒரு பாம்பைப் போல” (31)

“நான் இசையைக் கேட்டேன்

நீ மகுடி ஊதுகிறாய்

நான் இப்போது 

எதற்காக ஆடுகிறேன் எனத் தெரியவில்லை” (71)

மேற்சொன்ன ஈரிரு கவிதைகளும் பொருண்மையில் வேறுபட்டிருப்பினும் சொல்லாடல் ஒன்றாகவே தெரிவதால் படித்த கவிதையைப் படிப்பது போலொரு தோற்றத்தைத் தருகிறது. இணையில் ஒன்றை தொகுப்பில் இல்லாமல் செய்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அவற்றில் என்மனதிற்குப் பிடித்தவையாக கீழ்க்கண்டவற்றைச் சொல்லலாம்.

“என் இறகுகளைக் கொய்து

கூடு கட்டுகிறேன்

இப்பொழுது 

வானத்தைக் காட்டி விளையாடுகிறாய்” 

“நான் விசமாக இருந்தாலென்ன...

நீ மகுடி ஊதியதும்

நான் ஆடத்தானே செய்கிறேன்

ஒரு பாம்பைப் போல”

தொகுப்பெங்கும் மைய இழையாகப் பரவிக்கிடக்கும் காதலின் வலி சொல்லும் அடர்த்தி இக்கவிதைகளிலிருக்கிறது.


தொகுப்பின் தலைப்பையொட்டிய இக்கவிதை,

“வெட்டு 

துளையிடு

மூங்கிலாகப் பிறந்த என்னை

உன் உதட்டருகில் வைத்து

ஒருமுறையாவது இசைத்துவிடு”

இன்முறைக்குத் தூபமிடும் வன்முறைக் கவிதை. ஆமாம், ஒருமுறையாவது உன் உதட்டருகில் வைத்து இசைத்துவிடு என்று கெஞ்சுகிறது. மூங்கில் மரம் இசையாகவேண்டும். உன் உதடுகள் வழியாக காற்று மூங்கிலில் ஊடுருவி இசையை காதல் உருவாக்கவேண்டும். நீ துளையிட்ட எனது புல்லாங்குழல் என்பது அலாதி சுகமல்லவா!


நிறைவாக...

“உன் சாயலில்தான்

காதலும் மரணமும் இருக்கிறது

உன்னைத் தேடி வரத்தானே செய்வேன்”

கவிஞரின் கவிதைகளை மீண்டும் மீண்டும் வாசிக்கத் தேடி வருவேன். அந்தக் காதல் மனம் தரும் கவிதையில் நான் காதலைக் காண்கிறேன். கடவுளைக் காண்கிறேன். என்னைக் காண்கிறேன்.


கஸல் வழியில் காதல் வேள்வி...

வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️

No comments:

Post a Comment