அஜீத் AV
கட்டுரைகள்
இரா எட்வின்
வெற்றிமொழி வெளியீட்டகம்
பக்கங்கள் 72, விலை ரூ 70/=
முகநூல் பதிவுகள் நூலாக மாறியிருக்கிறது. சமூகத்தின் ஜன்னல் போல இந்த நூலினைக் காணலாம். பெரும்பாலான பள்ளிக்குழந்தைகள் குறித்த பதிவுகள். தோழர் பள்ளியில் பணிபுரிவதால் இருக்கலாம். சிறு சலனத்தையாவது மனதில் ஏற்படுத்திவிடுகிறது பதிவுகள் ஒவ்வொன்றும். மொத்தம் 42 பதிவுகள். அத்தனையும் அருமை.
“விதைகளை மென்று தின்னும் பழக்கமில்லாதவை என்பது கூட ஒரு காரணமாயிருக்கலாம்.
மரங்கள் பறவைகளை நேசிப்பதற்கு”. வாசித்தவுடன் கடந்துவிட்டேன். ஏதோ ஒன்றினை சரியாக வாசிக்காமல் கடந்துவிட்டோமோ என மீண்டும் வாசிக்கிறேன். ஆம். இரு வார்த்தைகளையும். முக்கியமாக இரண்டாம் வரியை மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்.
இங்கு பறவை என்பதோ, மனிதர்கள் என்பதோ, விலங்குகள் என்பதோ உயிருள்ளவை என்று கருதிக் கொள்கிறோம். ஆனால் மரம் இங்கு நிர்ணயிக்கிறது யாரை நேசிப்பது என்று. மரங்கள், பறவைகளை நேசிப்பதற்குக் காரணம் விதைகளை மென்று நொறுக்காமல் விழுங்குவதால் என்கிறார் தோழர். இவ்வுலகம் நீள்வதற்கான கண்ணி என்பது இது போன்ற பதிவுகளில் இருக்கிறது. இதன் மீதான அல்லது இது போன்ற பார்வைகள் பரவலாக்கப்படுதல் காலத்தேவை.
வேலூரில் இறந்து போன தலித் ஒருவரின் சடலம் கொண்டுசெல்லப்படும் பாதை மறிக்கப்பட, சடலம் பாலத்தில் இருந்து கயிறு மூலம் கீழே இறக்கப்பட்டு அங்கிருந்து மீண்டும் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. இப்போதெல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா... என்பவர்களின் கண்களுக்கு இப்படி சம்பவம் ஒரு அசிங்கமாகவே தெரியாது. தெரிந்தாலும் தெரியாதது போல் காட்டிக்கொள்வார்கள். இன்னொரு பதிவில் மாட்டுக்கறி பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் தலித்துகளும், இஸ்லாமிய மக்களும் என்ற தகவலைக் காண முடிகிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது என்ற சொலவடை மாறவேண்டும் என்பது ஆசையாக இருக்கிறது. பார்ப்போம்.
ஜேட்லீக்கு எழுதிய இரங்கல் பதிவு. இறந்துவிட்டால் அவரைப் பற்றி அவதூறு பேசக்கூடாது. விமர்சனம் செய்யக்கூடாது என்றெல்லாம் சொல்லிக்கொள்வது இப்போது வாடிக்கையாகிவிட்டது. எது சரி, எது தவறு என்பதை காலத்தோடு பொருத்திப் பார்க்க வேண்டிய அவசியம் வந்தால் பேசித்தானே ஆகவேண்டும்? ஆனால் இங்கு என்ன நடக்கிறது? தனக்குச் சாதகமான பேச்சென்றால் ஆமாம் சாமி என்பதும், சாதகமற்ற பேச்சு என்னும்போது இறந்தவரைப் பற்றி பேசுவது அநாகரிகம், அது தவறு என்று பேசத் தொடங்குவது வாடிக்கையாகிவிட்டது. இடி அமீனைப் பற்றிக்கூட, ஹிட்லரைப் பற்றிக்கூட எதுவும் பேசக்கூடாது என்று சொன்னாலும் சொல்வார்கள். ஆனால் இங்கு தோழர் சகோதரி ஆசிபா இறந்தபோது ஜேட்லீ என்ன சொன்னார் என்பதைக் கூறுகிறார். இன்னொரு கேள்வி கேட்கிறார், 56 வயதான தனக்கு அச்சிறுமி பேத்தியாகத் தெரியும்போது 67 வயதாகும் அவருக்கு அச்சிறுமி பேத்தியாகப் படவில்லையா... என்பதை மேற்கோளிட்டுக் காட்டுகிறார். முக்கியமாக பதிவின் இறுதியில் “உங்கள் சித்தாந்தம் அழிவதைப் பார்க்காமல் போய்விட்டீர்கள். போய்வாருங்கள் அன்பிற்குரிய ஜேட்லீ” என்கிறார் தோழர். இறந்த பின்னாலும் கேள்விகள் தொடரும் என்ற பயமிருந்தால் வாழும் வாழ்க்கையை அர்த்தப்படியாக வாழவேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அதற்காகவாவது இறந்தவரின் சரி/ தவறுகளைப் பேசலாம், தவறில்லை என்று தோழர் உணர்த்தியிருக்கிறார் நேரடியாக.
துப்புரவுத் தொழிலாளியை சிறப்பு அழைப்பாளராக வைத்து நிகழ்வுகள் நடத்துவது மகிழ்வை அளிக்கிறது என்றாலும் அது இயல்பான ஒன்றில்லாமல் பதிவதற்கான தேவை இருக்கிறது என்ற சூழலில் அதை நினைத்து வருந்துகிறேன் என்கிறார் தோழர். முதல் அலை கொரோனோவின்போது துப்புரவுத் தொழிலாளிகளுக்கான உணவுப் பொட்டலங்கள் குப்பை வண்டியில் வரவழைத்துத் தரப்பட்டன என்ற செய்தியும் இக்காலத்தில் தான். துப்புரவுப் பணியின்போது அவர்களுக்கென வழங்கப்படவேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாமலேயே அவர்கள் பணி செய்ய தூண்டப்படுவதும் இக்காலத்தில் தான். சொல்லவேண்டியதைச் சொல்லிக்கொண்டே இருப்போம். சமூகம் திருந்தும்வரை தனது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்கிறார். மனிதர்கள் எல்லோரும் மனிதர்களாக மாறவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. எப்போது மாறுவோம்...
பள்ளி குறித்த அனைத்துப் பதிவுகளும் சுவாரசியம் மட்டுமின்றி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பாடமும் நடத்துகிறது. அரசியல், பள்ளி, சமூகம் என தான் பயணிக்கும் பாதைகளில் கண்டு மகிழ்ந்த, வலி உணர்ந்த, வரப்போகும் ஆபத்து கண்டு பதைத்த பக்கங்களை முகநூலில் கொண்டுவந்திருக்கிறார். இப்போது புத்தகமாக.
அனுபவங்கள் இன்னும் இன்னும் புத்தகங்களாகப் பெருகட்டும்.
சமூகம் பயன்பெறட்டும்.
வாழ்த்துகள் தோழர்.
யாழ் தண்விகா
No comments:
Post a Comment