கல்வியினாலாய பயனென்கொல்...?
சிவா கலகலவகுப்பறை
பாரதி புத்தகாலயம்
ரூபாய் 50
48 பக்கங்கள்.
தலைப்புக்கேற்ற கட்டுரைகள் அனைத்தும்.
ஒவ்வொரு கட்டுரையிலும் தன்னுடைய ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். போட்டி தரும் வெற்றியும் வருத்தமும் பற்றிய முதல் கட்டுரை மாணவர்களுக்கு மட்டுமல்ல. அவர்களை எப்போதும் வெற்றி நோக்கி மட்டுமே பயணிக்க வைக்கத் துடிக்கும் பள்ளிக்கும், பெற்றோருக்கும் தான்.
ஆசிரியர்கள் வாசிக்க வேண்டிய மூன்று நூல்கள் என நூலாசிரியர் பதிவு செய்துள்ளவை
பகல் கனவு
டோட்டோசான்
மற்றும்
எனக்குரிய இடம் எங்கே...?
மூன்று நூல்களையும் நான் வாசித்துள்ளேன் என்பது மகிழ்வே.
குழந்தைகள் என்ன கற்கிறார்கள்?
குழந்தைகளை மெல்ல மலரும் குழந்தைகள் மற்றும் நன்கு கற்பவர்கள் எனப் பாகுபடுத்தும் கல்விமுறையைக் கேள்வி கேட்கிறது.
குழந்தைகளின் நூறு மொழிகள் ரெஜ்ஜியோ எமிலியா கல்விமுறையில் நிகழும் ஆக்கப்பூர்வ மாற்றங்களை குறு வரலாறாக கண்முன் நிறுத்துகிறது.
சாப்பிடும் குழந்தைக்குத் தருவதில்தானே சந்தோசமிருக்கு? குழந்தையைக் கொண்டாட என்ன செய்யவேண்டும் என வழிகாட்டுகிறது.
தீவிரமான கல்வி குறித்த கட்டுரைக்குள் எங்க தாத்தாவிடம் ஒரு யானை இருந்தது மற்றும் மறக்கவே மறக்காத கதை இரண்டும் முறையே தாய்மொழி கற்பிப்பதில் உள்ள அபத்தத்தையும் குழந்தைகளின் இயல்பில் சுதந்திரத்தில் மகிழ்வில் நாம் எவ்வளவு தடையாக (நல்லது செய்கிறோம் என நினைத்துக்கொண்டு) இருக்கிறோம் என்பதை கதை வழியாகச் சொல்கிறது. மறக்கவே மறக்காத கதை... அற்புதம்.
தனியார் பள்ளி என்ற பிம்பம் அரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் எப்படி வந்தது? அது சரியா? அது எப்படி களையப்பட வேண்டும் என்பதை தனியார் பள்ளிக்கு நிகராக என்ற கட்டுரை பேசுகிறது. பிச்சை புகினும் கற்கை நன்றே... என்ற வார்த்தைக்கேற்ப தன்னுடைய குழந்தைகளுக்காக பாடுபடும் பெற்றோர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களை நெஞ்சில் நிறுத்தினால் போதும் வளரிளம் பருவத்தினர் படிப்பில் கவனம் செலுத்துவர். ஆனால் அது எங்கே நடக்கிறது? வாசிப்புப் பழக்கம் குறித்த கட்டுரையின் நிறைவில் சொன்ன "வாசிக்கும் ஆசிரியராலேயே வாசிப்பை வளர்த்தெடுக்க முடியும்" என்ற கூற்று நிச்சய நிதர்சனம்.
குதிரைப் பந்தயம் கூட ஓடும் குதிரையின்மேல் தான் பந்தயம் கட்டி விளையாடுவார்கள். குழந்தைகள் / மாணவர்கள் அப்படிப்பட்ட குதிரைகளா? நீட், ஐடி உள்ளிட்ட துறைகளுக்கு தன்னுடைய குழந்தைகள் மேல் தங்கள் ஆசை மூட்டைகளை வைத்து ஓடு ஓடு என்று விரட்டத் தொடங்கிவிட்டது சமூகம். அவர்களின் ஆசைகளை அறிய முயல்வதில்லை. ஒரு சில துறைகளே முன்னிலைப்படுத்தப்படுவதால் நிகழும் மோசமான சூழல் இது.
பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் பணியிடைப் பயிற்சி, கருத்தாளர்கள், கியூ ஆர் கோட் உள்ளிட்ட பதட்டங்கள் யாவும் அந்தத் துறையில் உள்ளவர்களுக்குத்தான் தெரியும். மேலிடம் சொல்லிவிட்டது. நிறைவேற்ற வேண்டும் என்ற சவாலை முன்வைத்து ஆசிரியர் சமூகமும் செல்கிறது. எங்கே செல்லும் இந்தப் பாதை? என்று கேட்கத் தொடங்கிவிட்டது மனது. ஆனால் எப்போது இதற்கு விடிவுகாலம் என்பது தெரியவில்லை.
வாசிப்பும் கலந்துரையாடலும் தான் ஆசிரியப்பணி சிறக்க முக்கியக் காரணிகள். அதைநோக்கிய பயணம் என்பதுதான் இப்போதைய கட்டாயம்.
வாசிக்க வேண்டிய நூல்.
வாழ்த்துகள் கலகல வகுப்பறை சிவா தோழர்.
பெ.விஜயராஜ் காந்தி
❣️
No comments:
Post a Comment