Friday, 26 July 2024

குழந்தைமையைக் காவு கேட்கும் பள்ளிக்கூடம்




குழந்தைமையைக் காவு கேட்கும் பள்ளிக்கூடம்

எதை நோக்கிக் கல்வித்துறை செல்கிறது என்றே தெரியவில்லை. பள்ளியையும், பயிலும் குழந்தைச் செல்வங்களையும் விரட்டி விரட்டி அடிக்கத் தொடங்கிவிட்டது அரசின் கொடுங்கரங்கள். புதிய கல்விக் கொள்கை / தேசிய கல்விக் கொள்கை இதெல்லாம் இல்லை என்று சொல்லிக்கொண்டே என்னென்ன வகையில் குழந்தைகளை கொடுமை செய்யலாம் என்றெல்லாம் பயிற்சி எடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட வினா போல இருக்கிறது மூன்றாம் வகுப்பிற்கு இணைய வழித் தேர்வில் கொடுக்கப்பட்ட வளரறி மதிப்பீடு வினாத்தாள். ஒரு பானை சோற்றுக்கான ஒரு உதாரணம் மட்டும். என்னது மூன்றாம் வகுப்பிற்கா? வாயைப் பிளக்காதீர்கள். ஒன்றாம் வகுப்பிலிருந்து தொடங்கிவிடுகிறது அந்தத் தேர்வுகள். 

என்ன கவலை பெற்றோருக்கு? அவர்கள் உயர்தர கல்வியைப் பெற பள்ளியில் சேர்ந்து இருக்கிறார்கள். அதைக் கற்றுக் கொடுப்பது தானே ஆசிரியர் கடமை? ஆமாம். கற்றுக் கொடுப்பது தான் கடமை. அதையும் வழிகாட்டும் வகையில். திணிப்பதை கல்வி என்று சொல்வது அநியாயம் அல்லவா? அதையல்லவா இந்த சமூகம் எதிர்பார்க்கிறது...! சரி. சொல்லிக் கொடுத்துவிடலாம் என்றால் கற்பிக்கும் பணி மட்டும்தான் ஆசிரியருக்கு இன்றைய காலகட்டத்தில் அரசு வழங்குகிறதா? காலை முதல் மாலை வரை மட்டுமல்ல. விடுமுறையிலும் எப்படியெல்லாம் ஆசிரியர்களுக்கு வேலை தரலாம் என்பதைச் சொல்ல ஒரு குழுவே இருக்கும்போல. எண்ணும் எழுத்தும் திட்டம் வந்தபிறகு இன்னும் கொடூரம். ஒருபுறம் ஆசிரியர் கையேடு. மாணவனிடம் பயிற்சி நூல். மேலும் பொதுவாக பாடநூல். மூன்றின் நடுவில் நின்று தலையைச் சுழல விடுவது எவ்வளவு பெரிய பராக்கிரமம் தெரிந்த ஆசிரியராலும் இயலாத காரியம். கடந்த வாரம் பள்ளியில் வைத்த மூன்றாம் வகுப்பு தேர்வு வினாக்கள். 

Class 3 Mathematics Chitra M
(985987629790) 

SKIP TO NEXT STUDENT 

Q 1
Q1(0)
மூலை விட்டங்கள் கொண்ட இரு பரிமாண வடிவங்களைத் தேர்ந்தெடு
O சதுரம் & செவ்வகம்
O செவ்வகம் & வட்டம்
O முக்கோணம் & வட்டம்
O சதுரம் O வட்டம்

Q1(1)
மூலை விட்டங்கள் இல்லாத இரு பரிமாண வடிவங்களைத் தேர்ந்தெடு
சதுரம் & செவ்வகம்
செவ்வகம் & வட்டம்
முக்கோணம் & வட்டம்
சதுரம் & வட்டம்

Q2
Q2(0)
கொடுக்கப்பட்டுள்ள முப்பரிமாண உருவத்தில் உள்ள முகங்கள், விளிம்புகள் மற்றும் முனைகளின் எண்ணிக்கையைக் கூறுக
(கனச்செவ்வக வடிவம்)
8 முகங்கள் 12 விளிம்புகள் மற்றும் 6 முனைகள்
6 முகங்கள் 12 விளிம்புகள் மற்றும் 8 முனைகள்
12 முகங்கள் 8 விளிம்புகள் மற்றும் 6 முனைகள்
1 முகம் 0 விளிம்புகள் மற்றும் 0 முனைகள்

Q2(1)
விளிம்புகள் மற்றும் முனைகள் அற்ற, ஒரு வளைதள முகம் மட்டும் கொண்ட முப்பரிமாண உருவம் எது?
கன சதுரம்
கன செவ்வகம்
கோளம்
கூம்பு

வாசித்து யோசித்து சரியான பதில் சொல்லும் அனைவரும் இது குழந்தைகளுக்கு ஏற்றதா என்பதைச் சொல்லுங்கள். பதில் அளிக்கத் தவறும் நபர்கள் நாமே இவ்வளவு திணறும்போது குழந்தைகள் என்ன செய்வார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். எளிமையான வினாக்கள் கேட்கலாம்.  அதை விடுத்து ஒரே கேள்விக்குள் மூன்று, நான்கு கேள்விகள் வைப்பது எதற்காக? இது அனைத்து வகைக் குழந்தைகளுக்கும் சரியானதாக எப்படி இருக்கும்? குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் தேர்வு அனைவரும் முடிக்காவிட்டால் எந்தப் பள்ளி முடிக்கவில்லை என்றும் ஒரு சில வகுப்புகள் தேர்வுகள் முடித்து சில வகுப்புகள் தேர்வு முடிக்காவிட்டால் அந்தந்த வகுப்பைக் குறிப்பிட்டு தலைமை ஆசிரியர் குழுவில் தகவல் வரும். அலைபேசியில் அழைப்பு வரும் விரைவாக முடிக்கச் சொல்லி. எங்கே செல்லும் இந்த பாதை என்று தெரியாத நிலையில் கற்பித்தலைத் திறம்படச் செய்ய இயலாத நிலையில்  கற்பித்தலோடு தொடர்பு இல்லாத ஆயிரமாயிரம் வேலைகளுக்கு மத்தியில் செல்கிறது பள்ளியில் கடக்கும் காலங்கள்.

பள்ளியில் குழந்தைகளிடம் நடந்த உரையாடலில் ஒருநாள் ஒவ்வொருவரிடமும் வருங்காலத்தில் என்ன வேலைக்குச் செல்ல ஆசை? என்ற வினாவை முன்வைத்தபோது வழக்கம்போல டாக்டர், என்ஜினீயர், டீச்சர், டிரைவர், கலெக்டர் என்றெல்லாம் போய்க் கொண்டிருக்கிறது பதில்கள். ஒருத்தி எழுந்து சொன்னாள். "நான் நெத்துப் பெறக்க போவேன் சார்" நெத்துப் பெறக்கவா? அப்படின்னா என்ற கேள்வியை மீண்டும் கேட்கிறேன் அவளிடம். அதே பதில் தான் வந்தது. ஒலக நெத்து என்பது காய்ந்த இலவங்காய். அதுதான் பார்க்கப்போகும் வேலை என்று அவள் சொல்கிறாள் என்றால் பள்ளியில் கற்கும் கல்வியைக் கடந்து அவள் வீட்டில் உள்ள சூழல்தான் அவளை அப்படிச் சொல்ல வைத்திருக்கும். கற்றலின் இலக்கு என்ன என்று தெரியாத வயதாக இருக்கும்.  அடுத்து அப்பா என்ன வேலை பார்க்கிறார் என்ற கேள்விக்கு சீட்டு வெள்ளாட (அதை ஒரு வேலையென்றும், முழுநாளும் அந்த வேலையை மட்டுமே செய்து வருகிறார் என்று அவள் மனதில் நினைத்திருக்கிறாள்)சார் என்றாள். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு என்ன வழி சொல்லும் இந்த வினாத்திட்டம்? விரட்டி அடிக்கும். மன உளைச்சலை அளிக்கும். மாணவர்களுக்காக ஆசிரியரே எல்லாம் செய்து விடும் நேர விரயத்தை மேற்கொள்ளும். கற்பித்தல் நேரத்தை கபளிகரம் செய்யும். நட்பு வட்டாரத்தில் விசாரித்த வரையில் தொடக்கப்பள்ளியில் வரும் இந்த மாதிரியான ஆன்லைன் வினாக்கள் அறவே நீக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. குழந்தைகளை வருங்கால வேலைக்கான எந்திரமாக மாற்றும் முன்னர் அவர்களின் குழந்தைத் தன்மையைக் குலைக்காத கல்வியே தற்கால அவசியத் தேவை.

பெ.விஜயராஜ் காந்தி

❣️

பூபாளம் இசைக்கும்...

 

பூபாளம் இசைக்கும்...


காலையில் பேங்க்கு போயிட்டு மட்ட மத்தியானத்துல பைக்ல ஸ்கூலுக்குப் போறப்ப திடீர்னு மேக மழை நானாக... தோகை மயில் நீயாக... தித்திக்கும் இதழ் முத்தங்கள் என்ற வரிகள் என்னையறியாமல் இதழ்களில் ஒட்டிக்கொண்டு விடுபட மறுத்துவிட்டது. எவ்வளவு அருமையான கற்பனை. மென்மையான ராகம்... இசை... ராஜாவே... வாழ்க நீங்க.


இதோ இப்போ மீண்டும் கேட்கிறேன் அவ்வரிகளை. ஆனால் நான் பாடியது தப்பு. நமக்கு வரியா முக்கியம்... ராகம். ராகத்தை மென்னு துப்பாத வரிகள். அப்படித்தான் பாடிருப்பேன் போல.


பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே...

அதிகமில்லை இரண்டே வரிகள் தான் பல்லவி. சோனியா அகர்வால் காதல் கொண்டேன் படத்துல தனுஷ் தலையை ஆட்டி பாட்டு கேட்க வைப்பாங்க, தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன் பாட்டுல. ஆனா இந்தப் பாட்டு கேட்கும்போதே நம்மளையும் சேந்து பாட வைக்கும். அப்படிப்பட்ட பாடலுக்கெல்லாம் என்ன ராகம்னு கேட்டா இளையராஜா இராகம்னு சொல்லிடலாம்.


பாட்டோட ரெண்டு சரணத்தின் நிறைவிலும் (கடேசிலன்னு சொல்லப்படாது. ஏன்னா அது நிறைவான வரிகள்).

"மேக மழை நீராட தோகை மயில் வாராதோ

தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது

னன னன னன னன னா னன னன னன னன னா...


நாளும் இனி சங்கீதம் ஆடும் இவள் பூந்தேகம்

அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்

னன னன னன னன னா னன னன னன னன னா..."


பாடிப் பார்த்தாச்சா? சரி. இப்போ வாசிச்சுப் பாருங்க. யார் பாட்டை எழுதிருப்பாங்கன்னு பாத்தா வாலி, வைரமுத்து, சிதம்பரநாதன், கங்கை அமரன், முத்துலிங்கம் அப்படின்னு பலப்பல பெருந்தலைகள். யாரா இருந்தாலும் மனுசன் காதலிலும் காமத்திலும் ஊறித் தெளைச்சிருப்பாப்டின்னு உறுதியாச் சொல்லிடலாம். ஜேசுதாசும் உமா ரமணனும் பாடும்போது இசையிலும் வரியிலும் கரைஞ்சிருப்பாங்க. 


"மேகமழை நீராட தோகை மயில் வாராதோ..."

வருமா வராதா என்ற எதிர்பார்ப்பு. மழை என்பது காதலின் உச்ச எதிர்பார்ப்பில் பூப்பது. கருமேகம் கூடிப் பெய்யும் மழை. மனம் ரெண்டும் சேர்ந்து கூத்தாடும் திருவிழா. அதற்கான எதிர்பார்ப்பு நிறைவேறும்போது தித்திக்கும் இதழ் முத்தங்கள்... ம்ம். அடுத்து படிப்படியாச் சொல்லணும்னா 

சென்சார் கத்தியைப் போடும். கேக்குறவங்க முகம் சுழிப்பாங்க. அங்கதான் இசைத் தலைவர் தன்னோட வேலையக் காட்டுகிறார். எப்படி? அத நாம மனசுக்குள்ள நெனச்சுக்கிடணும் ( வெளக்கு வச்ச நேரத்துல தந்தானன்னா... மறஞ்சு நின்னு பாக்கயில தனனா னன்னா...) பல்லாயிரம் பல்லாயிரம் இசை சம்மந்தமான இடத்துல என்னா மனுசன்யா இவர் என்று நினைக்க வைக்க இவரால்தான் முடியும்.


"நாளும் இனி சங்கீதம் ஆடும் இவள் பூந்தேகம்"

சங்கீதம் என்பது துள்ளல். வாழ்வின் துவக்கம். நீளும் மகிழ்ச்சி. அது நடக்கும்போது ஆடும் இவள் "பூந்தேகம்..." இந்த இடத்துல பூந்தேகம் என்ற சொல்லை ஒவ்வொரு ஆணின் சார்பாக கவிஞர் சொல்வதாக நெனச்சுக்கங்க பெண்களே. (சரி. ஆணின் "வீரத்"தேகம் சங்கீதத்தால் ஆடாதா என்ற கேள்வியை ஓரமாகத் தூக்கிப் போடவும்) சங்கீதத்தில் ஆடும் தேகம் செல்லும் பயணம் எப்படிப்பட்டது என்பதைச் சொல்லணும்ல. அதை அடுத்த வரியில் சொல்லிருப்பார்...

"அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்" அதையும் சொல்லாம நம்மை நினைக்க வைக்கும் வித்தை...

"னன னன னன னன னா னன னன னன னன னா..." எனப் பயணிக்க வைக்கும். சும்மா ஒண்ணுமில்ல காதல்ங்றது... கட்டிப்பிடிக்குறதுங்றது... உடல் ஒத்து ஒரு விசயம் நடந்துச்சுன்னா அங்க நிச்சயம் பூபாளம் இசைக்கும். கொஞ்சம் நல்லா அந்த இசைய அனுபவிக்க பாட்டைக் கேட்டபடி... அல்லது கேட்டுவிட்டு காதலையும் காமத்தையும் நல்லபடியா நடத்துங்க.  ராஜாவின் இசையும் கவிஞரின் வரியும் கேஜேஜே உமா ரமணன் குரலும் உங்களை மீட்டும்...


(படத்தில் சுலோச்சனா வைக்குற மாதிரி இன்னைக்கெல்லாம் ஏன் பூ வைக்குறதில்லன்னு நேராப் பாக்கும்போது கேக்கணும். யாரு கிட்ட... யாரு கிட்டயோ...)


யாழ் தண்விகா 


❣️

Wednesday, 24 July 2024

கல்வியினாலாய பயனென்கொல்...? கலகல வகுப்பறை சிவா

 


கல்வியினாலாய பயனென்கொல்...?

சிவா கலகலவகுப்பறை 


பாரதி புத்தகாலயம் 


ரூபாய் 50


48 பக்கங்கள்.


தலைப்புக்கேற்ற கட்டுரைகள் அனைத்தும்.

ஒவ்வொரு கட்டுரையிலும் தன்னுடைய ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். போட்டி தரும் வெற்றியும் வருத்தமும் பற்றிய முதல் கட்டுரை மாணவர்களுக்கு மட்டுமல்ல. அவர்களை எப்போதும் வெற்றி நோக்கி மட்டுமே பயணிக்க வைக்கத் துடிக்கும் பள்ளிக்கும், பெற்றோருக்கும் தான். 


ஆசிரியர்கள் வாசிக்க வேண்டிய மூன்று நூல்கள் என நூலாசிரியர் பதிவு செய்துள்ளவை

பகல் கனவு

டோட்டோசான் 

மற்றும் 

எனக்குரிய இடம் எங்கே...?

மூன்று நூல்களையும் நான் வாசித்துள்ளேன் என்பது மகிழ்வே.


குழந்தைகள் என்ன கற்கிறார்கள்?

குழந்தைகளை மெல்ல மலரும் குழந்தைகள் மற்றும் நன்கு கற்பவர்கள் எனப் பாகுபடுத்தும் கல்விமுறையைக் கேள்வி கேட்கிறது.


குழந்தைகளின் நூறு மொழிகள் ரெஜ்ஜியோ எமிலியா கல்விமுறையில் நிகழும் ஆக்கப்பூர்வ மாற்றங்களை குறு வரலாறாக கண்முன் நிறுத்துகிறது.


சாப்பிடும் குழந்தைக்குத் தருவதில்தானே சந்தோசமிருக்கு? குழந்தையைக் கொண்டாட என்ன செய்யவேண்டும் என வழிகாட்டுகிறது.


தீவிரமான கல்வி குறித்த கட்டுரைக்குள் எங்க தாத்தாவிடம் ஒரு யானை இருந்தது மற்றும் மறக்கவே மறக்காத கதை இரண்டும் முறையே தாய்மொழி கற்பிப்பதில் உள்ள அபத்தத்தையும் குழந்தைகளின் இயல்பில் சுதந்திரத்தில் மகிழ்வில் நாம் எவ்வளவு தடையாக (நல்லது செய்கிறோம் என நினைத்துக்கொண்டு) இருக்கிறோம் என்பதை கதை வழியாகச் சொல்கிறது. மறக்கவே மறக்காத கதை... அற்புதம்.


தனியார் பள்ளி என்ற பிம்பம் அரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் எப்படி வந்தது? அது சரியா? அது எப்படி களையப்பட வேண்டும் என்பதை தனியார் பள்ளிக்கு நிகராக என்ற கட்டுரை பேசுகிறது. பிச்சை புகினும் கற்கை நன்றே...  என்ற வார்த்தைக்கேற்ப தன்னுடைய குழந்தைகளுக்காக பாடுபடும் பெற்றோர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களை நெஞ்சில் நிறுத்தினால் போதும் வளரிளம் பருவத்தினர் படிப்பில் கவனம் செலுத்துவர். ஆனால் அது எங்கே நடக்கிறது? வாசிப்புப் பழக்கம் குறித்த கட்டுரையின் நிறைவில் சொன்ன "வாசிக்கும் ஆசிரியராலேயே வாசிப்பை வளர்த்தெடுக்க முடியும்" என்ற கூற்று நிச்சய நிதர்சனம்.


குதிரைப் பந்தயம் கூட ஓடும் குதிரையின்மேல் தான் பந்தயம் கட்டி விளையாடுவார்கள். குழந்தைகள் / மாணவர்கள் அப்படிப்பட்ட குதிரைகளா? நீட், ஐடி உள்ளிட்ட துறைகளுக்கு தன்னுடைய குழந்தைகள் மேல் தங்கள் ஆசை மூட்டைகளை வைத்து ஓடு ஓடு என்று விரட்டத் தொடங்கிவிட்டது சமூகம். அவர்களின் ஆசைகளை அறிய முயல்வதில்லை.  ஒரு சில துறைகளே முன்னிலைப்படுத்தப்படுவதால் நிகழும் மோசமான சூழல் இது. 


பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் பணியிடைப் பயிற்சி, கருத்தாளர்கள், கியூ ஆர் கோட் உள்ளிட்ட பதட்டங்கள் யாவும் அந்தத் துறையில் உள்ளவர்களுக்குத்தான் தெரியும். மேலிடம் சொல்லிவிட்டது. நிறைவேற்ற வேண்டும் என்ற சவாலை முன்வைத்து ஆசிரியர் சமூகமும் செல்கிறது. எங்கே செல்லும் இந்தப் பாதை? என்று கேட்கத் தொடங்கிவிட்டது மனது. ஆனால் எப்போது இதற்கு விடிவுகாலம் என்பது தெரியவில்லை.


வாசிப்பும் கலந்துரையாடலும் தான் ஆசிரியப்பணி சிறக்க முக்கியக் காரணிகள்.  அதைநோக்கிய பயணம் என்பதுதான் இப்போதைய கட்டாயம்.


வாசிக்க வேண்டிய நூல்.


வாழ்த்துகள் கலகல வகுப்பறை சிவா தோழர்.


பெ.விஜயராஜ் காந்தி

❣️