Friday, 26 July 2024
குழந்தைமையைக் காவு கேட்கும் பள்ளிக்கூடம்
பூபாளம் இசைக்கும்...
பூபாளம் இசைக்கும்...
காலையில் பேங்க்கு போயிட்டு மட்ட மத்தியானத்துல பைக்ல ஸ்கூலுக்குப் போறப்ப திடீர்னு மேக மழை நானாக... தோகை மயில் நீயாக... தித்திக்கும் இதழ் முத்தங்கள் என்ற வரிகள் என்னையறியாமல் இதழ்களில் ஒட்டிக்கொண்டு விடுபட மறுத்துவிட்டது. எவ்வளவு அருமையான கற்பனை. மென்மையான ராகம்... இசை... ராஜாவே... வாழ்க நீங்க.
இதோ இப்போ மீண்டும் கேட்கிறேன் அவ்வரிகளை. ஆனால் நான் பாடியது தப்பு. நமக்கு வரியா முக்கியம்... ராகம். ராகத்தை மென்னு துப்பாத வரிகள். அப்படித்தான் பாடிருப்பேன் போல.
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே...
அதிகமில்லை இரண்டே வரிகள் தான் பல்லவி. சோனியா அகர்வால் காதல் கொண்டேன் படத்துல தனுஷ் தலையை ஆட்டி பாட்டு கேட்க வைப்பாங்க, தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன் பாட்டுல. ஆனா இந்தப் பாட்டு கேட்கும்போதே நம்மளையும் சேந்து பாட வைக்கும். அப்படிப்பட்ட பாடலுக்கெல்லாம் என்ன ராகம்னு கேட்டா இளையராஜா இராகம்னு சொல்லிடலாம்.
பாட்டோட ரெண்டு சரணத்தின் நிறைவிலும் (கடேசிலன்னு சொல்லப்படாது. ஏன்னா அது நிறைவான வரிகள்).
"மேக மழை நீராட தோகை மயில் வாராதோ
தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது
னன னன னன னன னா னன னன னன னன னா...
நாளும் இனி சங்கீதம் ஆடும் இவள் பூந்தேகம்
அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்
னன னன னன னன னா னன னன னன னன னா..."
பாடிப் பார்த்தாச்சா? சரி. இப்போ வாசிச்சுப் பாருங்க. யார் பாட்டை எழுதிருப்பாங்கன்னு பாத்தா வாலி, வைரமுத்து, சிதம்பரநாதன், கங்கை அமரன், முத்துலிங்கம் அப்படின்னு பலப்பல பெருந்தலைகள். யாரா இருந்தாலும் மனுசன் காதலிலும் காமத்திலும் ஊறித் தெளைச்சிருப்பாப்டின்னு உறுதியாச் சொல்லிடலாம். ஜேசுதாசும் உமா ரமணனும் பாடும்போது இசையிலும் வரியிலும் கரைஞ்சிருப்பாங்க.
"மேகமழை நீராட தோகை மயில் வாராதோ..."
வருமா வராதா என்ற எதிர்பார்ப்பு. மழை என்பது காதலின் உச்ச எதிர்பார்ப்பில் பூப்பது. கருமேகம் கூடிப் பெய்யும் மழை. மனம் ரெண்டும் சேர்ந்து கூத்தாடும் திருவிழா. அதற்கான எதிர்பார்ப்பு நிறைவேறும்போது தித்திக்கும் இதழ் முத்தங்கள்... ம்ம். அடுத்து படிப்படியாச் சொல்லணும்னா
சென்சார் கத்தியைப் போடும். கேக்குறவங்க முகம் சுழிப்பாங்க. அங்கதான் இசைத் தலைவர் தன்னோட வேலையக் காட்டுகிறார். எப்படி? அத நாம மனசுக்குள்ள நெனச்சுக்கிடணும் ( வெளக்கு வச்ச நேரத்துல தந்தானன்னா... மறஞ்சு நின்னு பாக்கயில தனனா னன்னா...) பல்லாயிரம் பல்லாயிரம் இசை சம்மந்தமான இடத்துல என்னா மனுசன்யா இவர் என்று நினைக்க வைக்க இவரால்தான் முடியும்.
"நாளும் இனி சங்கீதம் ஆடும் இவள் பூந்தேகம்"
சங்கீதம் என்பது துள்ளல். வாழ்வின் துவக்கம். நீளும் மகிழ்ச்சி. அது நடக்கும்போது ஆடும் இவள் "பூந்தேகம்..." இந்த இடத்துல பூந்தேகம் என்ற சொல்லை ஒவ்வொரு ஆணின் சார்பாக கவிஞர் சொல்வதாக நெனச்சுக்கங்க பெண்களே. (சரி. ஆணின் "வீரத்"தேகம் சங்கீதத்தால் ஆடாதா என்ற கேள்வியை ஓரமாகத் தூக்கிப் போடவும்) சங்கீதத்தில் ஆடும் தேகம் செல்லும் பயணம் எப்படிப்பட்டது என்பதைச் சொல்லணும்ல. அதை அடுத்த வரியில் சொல்லிருப்பார்...
"அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்" அதையும் சொல்லாம நம்மை நினைக்க வைக்கும் வித்தை...
"னன னன னன னன னா னன னன னன னன னா..." எனப் பயணிக்க வைக்கும். சும்மா ஒண்ணுமில்ல காதல்ங்றது... கட்டிப்பிடிக்குறதுங்றது... உடல் ஒத்து ஒரு விசயம் நடந்துச்சுன்னா அங்க நிச்சயம் பூபாளம் இசைக்கும். கொஞ்சம் நல்லா அந்த இசைய அனுபவிக்க பாட்டைக் கேட்டபடி... அல்லது கேட்டுவிட்டு காதலையும் காமத்தையும் நல்லபடியா நடத்துங்க. ராஜாவின் இசையும் கவிஞரின் வரியும் கேஜேஜே உமா ரமணன் குரலும் உங்களை மீட்டும்...
(படத்தில் சுலோச்சனா வைக்குற மாதிரி இன்னைக்கெல்லாம் ஏன் பூ வைக்குறதில்லன்னு நேராப் பாக்கும்போது கேக்கணும். யாரு கிட்ட... யாரு கிட்டயோ...)
யாழ் தண்விகா
❣️
Wednesday, 24 July 2024
கல்வியினாலாய பயனென்கொல்...? கலகல வகுப்பறை சிவா
கல்வியினாலாய பயனென்கொல்...?
சிவா கலகலவகுப்பறை
பாரதி புத்தகாலயம்
ரூபாய் 50
48 பக்கங்கள்.
தலைப்புக்கேற்ற கட்டுரைகள் அனைத்தும்.
ஒவ்வொரு கட்டுரையிலும் தன்னுடைய ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். போட்டி தரும் வெற்றியும் வருத்தமும் பற்றிய முதல் கட்டுரை மாணவர்களுக்கு மட்டுமல்ல. அவர்களை எப்போதும் வெற்றி நோக்கி மட்டுமே பயணிக்க வைக்கத் துடிக்கும் பள்ளிக்கும், பெற்றோருக்கும் தான்.
ஆசிரியர்கள் வாசிக்க வேண்டிய மூன்று நூல்கள் என நூலாசிரியர் பதிவு செய்துள்ளவை
பகல் கனவு
டோட்டோசான்
மற்றும்
எனக்குரிய இடம் எங்கே...?
மூன்று நூல்களையும் நான் வாசித்துள்ளேன் என்பது மகிழ்வே.
குழந்தைகள் என்ன கற்கிறார்கள்?
குழந்தைகளை மெல்ல மலரும் குழந்தைகள் மற்றும் நன்கு கற்பவர்கள் எனப் பாகுபடுத்தும் கல்விமுறையைக் கேள்வி கேட்கிறது.
குழந்தைகளின் நூறு மொழிகள் ரெஜ்ஜியோ எமிலியா கல்விமுறையில் நிகழும் ஆக்கப்பூர்வ மாற்றங்களை குறு வரலாறாக கண்முன் நிறுத்துகிறது.
சாப்பிடும் குழந்தைக்குத் தருவதில்தானே சந்தோசமிருக்கு? குழந்தையைக் கொண்டாட என்ன செய்யவேண்டும் என வழிகாட்டுகிறது.
தீவிரமான கல்வி குறித்த கட்டுரைக்குள் எங்க தாத்தாவிடம் ஒரு யானை இருந்தது மற்றும் மறக்கவே மறக்காத கதை இரண்டும் முறையே தாய்மொழி கற்பிப்பதில் உள்ள அபத்தத்தையும் குழந்தைகளின் இயல்பில் சுதந்திரத்தில் மகிழ்வில் நாம் எவ்வளவு தடையாக (நல்லது செய்கிறோம் என நினைத்துக்கொண்டு) இருக்கிறோம் என்பதை கதை வழியாகச் சொல்கிறது. மறக்கவே மறக்காத கதை... அற்புதம்.
தனியார் பள்ளி என்ற பிம்பம் அரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் எப்படி வந்தது? அது சரியா? அது எப்படி களையப்பட வேண்டும் என்பதை தனியார் பள்ளிக்கு நிகராக என்ற கட்டுரை பேசுகிறது. பிச்சை புகினும் கற்கை நன்றே... என்ற வார்த்தைக்கேற்ப தன்னுடைய குழந்தைகளுக்காக பாடுபடும் பெற்றோர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களை நெஞ்சில் நிறுத்தினால் போதும் வளரிளம் பருவத்தினர் படிப்பில் கவனம் செலுத்துவர். ஆனால் அது எங்கே நடக்கிறது? வாசிப்புப் பழக்கம் குறித்த கட்டுரையின் நிறைவில் சொன்ன "வாசிக்கும் ஆசிரியராலேயே வாசிப்பை வளர்த்தெடுக்க முடியும்" என்ற கூற்று நிச்சய நிதர்சனம்.
குதிரைப் பந்தயம் கூட ஓடும் குதிரையின்மேல் தான் பந்தயம் கட்டி விளையாடுவார்கள். குழந்தைகள் / மாணவர்கள் அப்படிப்பட்ட குதிரைகளா? நீட், ஐடி உள்ளிட்ட துறைகளுக்கு தன்னுடைய குழந்தைகள் மேல் தங்கள் ஆசை மூட்டைகளை வைத்து ஓடு ஓடு என்று விரட்டத் தொடங்கிவிட்டது சமூகம். அவர்களின் ஆசைகளை அறிய முயல்வதில்லை. ஒரு சில துறைகளே முன்னிலைப்படுத்தப்படுவதால் நிகழும் மோசமான சூழல் இது.
பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் பணியிடைப் பயிற்சி, கருத்தாளர்கள், கியூ ஆர் கோட் உள்ளிட்ட பதட்டங்கள் யாவும் அந்தத் துறையில் உள்ளவர்களுக்குத்தான் தெரியும். மேலிடம் சொல்லிவிட்டது. நிறைவேற்ற வேண்டும் என்ற சவாலை முன்வைத்து ஆசிரியர் சமூகமும் செல்கிறது. எங்கே செல்லும் இந்தப் பாதை? என்று கேட்கத் தொடங்கிவிட்டது மனது. ஆனால் எப்போது இதற்கு விடிவுகாலம் என்பது தெரியவில்லை.
வாசிப்பும் கலந்துரையாடலும் தான் ஆசிரியப்பணி சிறக்க முக்கியக் காரணிகள். அதைநோக்கிய பயணம் என்பதுதான் இப்போதைய கட்டாயம்.
வாசிக்க வேண்டிய நூல்.
வாழ்த்துகள் கலகல வகுப்பறை சிவா தோழர்.
பெ.விஜயராஜ் காந்தி
❣️