Saturday, 23 August 2025

ஒற்றைச் சிறகு ஓவியா


 ஒற்றைச் சிறகு ஓவியா 

விஷ்ணுபுரம் சரவணன் 

பாரதி புத்தகாலயம் 

பக்கங்கள் 120

விலை ரூ. 120


சாவித்திய அகாடமி பால புரஸ்கார் விருது பெற்ற நாவல்


பள்ளி ஆண்டு விழாவுக்காக தயாராகிறார்கள் மாணவர்கள். முகிலன், பவித்ரா, பிரின்சி, சாதிக் மற்றும் ஓவியா இவர்கள் ஐந்து பேரும் நண்பர்கள். இதில் ஓவியா தவிர நால்வரும் கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகிறார்கள். பள்ளி பியூன் கதிரேசன் தாத்தா இவர்களுக்கு உதவுகிறார். கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள பொருட்கள் வாங்குவதற்கு ஓவியாவிடம் பணம் இல்லை. அதுவும் இல்லாமல் இனி கலந்து கொள்ளவும் முடியாது. பெயர் கொடுக்கும் நாள் முடிந்து விட்டது. அதனால் நால்வர் வைத்திருக்கும் பொருட்களை வைத்து ஒப்பனை செய்கிறார்கள். இதனால் ஓவியாவின் மனக்கவலை மாறும் என்ற நப்பாசைதான். பிரின்சி தன்னுடைய தேவதை கவுன் மற்றும் இரண்டு சிறகுகளில் ஒரு சிறகை ஓவியாவிற்கு அளிக்கிறாள். பவித்ரா தன்னுடைய கிரீடம் ஒன்றை தலையில் சுற்றி விடுகிறாள். சாதிக் தன்னிடம் இருந்த மேஜிக் கம்பினை அளிக்கிறான். முகிலன் தன் கழுத்தில் இருந்த இலை மாலையை ஓவியாவின் கழுத்தில் அணிவிக்கிறான். கையில் போட்டிருந்த இலை மோதிரத்தையும் மாட்டி விடுகிறான். இத்தனையும் அணிந்திருந்த ஓவியாவிற்கு பறக்கும் சக்தி கிடைக்கிறது. பள்ளியில் உள்ள மணியின் நாக்கை அடித்தவுடன் மஞ்சள் நிற வெளிச்சம் பூக்கிறது. அந்த மஞ்சள் நிற வெளிச்சம் நந்தியாவட்டை மரத்தின் மேல் விழுகிறது. அப்பொழுது மரத்திலிருந்து பூக்கள் உதிர்கின்றன. பூக்களை அவள் புறா வடிவில் அடுக்கியவுடன் புறாவாக உருமாறி திரும்பி வருகிறது. 10 புறாக்கள் வந்தவுடன் அந்த இடமே பறவைகள் சரணாலயம் போல் தெரிகிறது. இந்த மாயாஜாலத்தை கைப்பற்றுபவனாக விகேஷ் இருக்கிறான். மாயாஜாலம் மீண்டும் ஓவியா மற்றும் அவளது நண்பர்களிடம் கிடைக்க கீழ்க்கண்ட படிநிலைகளில் பயணிக்க வேண்டி இருக்கிறது.

O

மண்புழு அழிந்து வருவதன் காரணம்.

மண்புழுவின் அவசியம்.  

O

நிலத்தடி நீர் முழுவதும் மாசுபாடு அடைந்து விட்டது. அதற்கான காரணம். 

O

விளைநிலங்களுக்கு அடியில் எரிபொருள் எடுப்பதற்காக குழாய் பதித்தல்

எரிபொருள் எடுப்பதற்காக விளை நிலங்களுள் குழாய் பதிக்கக் கூடாது என்று போராட்டம்.

ஓவியா மற்றும் அவளது நண்பர்களிடம் மாயாஜாலம் கிடைக்கப்பெற்று ஆண்டு விழாவில் இந்த மாயாஜாலம் அரங்கேற்றம் செய்யப்படுகிறது. இதுதான் நாவலின் சுருக்கம்.


நாவலில் மண்புழுவின் தேவை பற்றி அழகாக கூறப்படுகிறது. விவசாயி /உழவர்களின் நண்பன் என்பதை படிக்கிறோம். ஆனால் எத்தனை மாணவர்கள் அதனை உணர்ந்திருப்பார்கள்? அதுவும் இன்றைய காலகட்டத்தில் மண்புழுவின் தேவை பற்றி அறிய வேண்டியிருக்கிறது. நிலத்தடி நீர் பூமியில் கீழே போய்க் கொண்டே இருக்கிறது. அதுவும் அசுத்தமாக தான் கிடைக்கிறது. நிலத்தடி நீர் மேலாக இருந்த நிலை மாறி அதுவும் அசுத்தமான வேதிப்பொருள் கலந்த நிலத்தடி நீர் தான் கிடைக்கிறது. இதற்கு முடிவு என்ன என்பதையும் நாவலாசிரியர் கூறுகிறார். விளை நிலங்களில் எரிபொருள் எடுப்பதற்காக குழாய்கள் பதிப்பதற்கு அரசு முயற்சிக்கிறது. அதை எதிர்த்து மக்கள் போராடுகிறார்கள். அந்த போராட்டம், அதன் வீச்சு என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கி இருக்கிறார். இந்த செயல்கள் அனைத்தும் கதையோட்டத்தில் வருவதால் நாவல் மிகவும் அழகாக, அருமையாக இருக்கிறது.


ஒற்றைச் சிறகு ஓவியா 

விளைநிலங்களில் பதிக்கப்படும் எண்ணெய்க் குழாய்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நாவல்.


வாழ்த்துக்கள் தோழர்.

Sunday, 17 August 2025

அத்தினி - Chitra Sivan

 


அத்தினி

நாவல் 

சித்ரா சிவன்

Chitra Sivan 

பிறகு பிரசுரம் 

230 பக்கங்கள் 

280 ரூபாய்


பெண்களின் பிரச்சனைகளை பேசும் ஒரு நாவல். பெண்களின் அக உணர்வுகளை பேசும் இந்த நாவலில் பெரும்பாலும் பெண் கதாபாத்திரங்கள் தான். அதில் சில ஆண் கதாபாத்திரங்கள் வருகிறது என்றாலும் அது அனைத்தும் துணை கதாபாத்திரங்களாகவே இருக்கிறது. 


பவித்ரா தேவி மற்றும் உமையாள் என்ற இரு கதாபாத்திரங்கள் முதன்மையாக இருக்கிறது. இவர்கள் சேதுராமன், அன்னக்கொடி இருவரின் மகள்கள். அன்னக்கொடி கதாபாத்திரம் கிராமங்களில் நிறைய பார்க்கலாம். திருமணத்திற்கு முன் சீட்டு பிடித்தல் தொழிலை எவ்வளவு சாமர்த்தியமாக நடத்துகிறாள் என்பது கூறப்பட்டுள்ளது. ஆண்கள் நடத்தும் சீட்டுகள் பாதையில் நின்று விடுகிறது அல்லது ஓடிவிடுகிறார்கள். இந்த சூழ்நிலையில் அன்னக்கொடி நடத்தும் சீட்டு சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அடுத்து 50 ஆயிரம் ரூபாய் சீட்டை முன்னெடுக்கிறாள். முதல் சீட்டை பாலன் என்பவனுடன் சேதுராமன் ஏலம் கேட்டு, பின் பாலனையே எடுக்க வைக்கிறான். அதில் பாலன் செய்யும் செயலால் அதுல பாதாளத்தில் விழுகிறாள் அன்னக்கொடி. சேதுராமனுக்கும் அன்னக்கொடிக்கும் திருமணம் நடக்கிறது. அன்னக்கொடிக்கு மாமன் முறை வேண்டும் கணேசனுக்கு கொஞ்சம் பணக்கஷ்டம்.  கணேசனுக்கு உதவுகிறாள். சீட்டில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பணம் திரும்ப தேவைப்படுகிறது அன்னக்கொடிக்கு. வீட்டில் சேதுராமனுக்கும் அன்னக்கொடிக்கும் பணத்தை வைத்து பிரச்சனை வருகிறது. கணேசனிடம் கொடுத்த பணத்தை கேட்டு நடையாய் நடக்கிறாள். அன்னக்கொடி வீட்டில் பெரிய அளவில் பிரச்சனை வரும் பொழுது கணேசன் வீட்டின் முன் சென்று மண்ணெண்ணெயால் உடம்பில் தீ வைத்து எரித்துக் கொள்கிறாள் அன்னக்கொடி. அதன்பின் கணேசன் தன்னுடைய குடும்பத்தாருடன் தற்கொலை செய்து கொள்கிறான். சேதுராமன் தன்னுடைய குழந்தைகளான பவித்ரா தேவி மற்றும் உமையாளுடன் சென்று வாழ்க்கையை தொடர்கிறார். சேதுராமன் இறந்த பின்பு பவித்ரா தேவி மற்றும் உமையாள் இவர்களின் வாழ்க்கை எவ்வாறு செல்கிறது என்பதே கதை.


இந்த நாவலில் வரும் பெயர்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சாராரை சொல்ல வருகிறது. எந்த இடத்திலும் ஜாதி காட்டும் குறியீடு இல்லை. ஜாதிப் பெயர்கள் இல்லை என்ற வகையில் மகிழ்ச்சியே. 


ஏ ஜே பி மருத்துவமனை கேண்டீன் இதுதான் கதையின் மையம்.


அன்னக்கொடி இறந்ததற்குப் பின் பவித்ரா தேவிக்கு 34 வயது உமையாளுக்கு 29 வயது சமயத்தில் கூத்தும் கும்மாளமுமாக வாழும் சேதுராமன் இறந்து விடுகிறார். அந்த இறப்பிற்கு வரும் மாறன், உமையாளை பெண் பார்க்க வருகிறார். உமையாள் மாறனை விட ஒரு வயது மூத்தவள். இந்த கதாபாத்திரம் ஆரம்பத்திலேயே வந்தாலும் கடைசியில் தான் திருமணம் முடித்து துபாய் செல்லும் காட்சி வருகிறது. மாறன் யார் என்று டிவிஸ்ட் வைத்திருக்கிறார் நாவல் ஆசிரியர். 


நாவலில் வசந்தமுல்லை, பூங்கொடி, கமலா, பாண்டியம்மாள், மல்லிகா, சரிதா இப்படி ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். எந்த ஒரு கதாபாத்திரமும் துருத்திக் கொண்டு தெரியவில்லை. சரிதாவுக்கு, கமலாவுக்கு, வாசவதத்தைக்கு, மல்லிகாவுக்கு ஒரு பிளாஷ்பேக்...  மல்லிகாவின் ஃபிளாஷ்பேக் என்பது காதல் திருமணத்தில் முடிந்த கதையைச் சொல்கிறாள். வாசவதத்தை திருமணம் முடித்த பின்பு எவ்வாறு ஏமாற்றப்படுகிறாள் என்பதை சொல்லுகிறது. கமலா கணவனால் எவ்வாறு அடிபட்டு மிதிபட்டு வந்து அந்த நரக வாழ்க்கையில் எப்படி ஜெயிலுக்கு போய் வந்தாள் என்பதை கூறுகிறது. சரிதா தன்னுடைய காதலனுடன் கொடைக்கானலுக்கு வருகிறாள். பணி நிமித்தமாக ஆப்பிரிக்கா சென்ற தன்னுடைய கணவனுக்கு தெரிந்து விட்டது. இந்நிலையில் சரிதாவின் காதலன் இருவரும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுக்கிறான். அவள் வேண்டாம் என்று கூறியும் அதில் அவன் இறந்து விட உயிருக்கு போராடும் நிலையில் சரிதா மட்டும் தப்பிக்கிறாள். இதற்கு இடையே அன்னக்கொடியின் பிளாஷ்பேக். அன்னக்கொடிக்கு இரண்டு குழந்தைகளும் பெண் குழந்தையாக பிறந்ததால் சேதுராமனின் அம்மா கள்ளிப்பால் கொடுக்க முடிவெடுக்கிறாள். இந்த செயலைச் செய்வதற்கு முன் படுத்த படுக்கையாக கிடந்து உயிரிழக்கிறாள். இது ஆச்சரியமான ஒன்றாக தோன்றினாலும் கள்ளிப்பால் கொடுக்க முயற்சி செய்யும் பெண்களுக்கு இப்படி நடந்தால் என்ன என்று மனதிற்குள் வந்து போகிறது எண்ணம். இந்த பிரச்சனைகள் யாவும் சுவாரசியமாக இருக்கிறது. சிலஅதிர்ச்சிகரமாக இருக்கிறது. இந்த பிரச்சனைகளுக்குள் பெண் என்பவள் மாட்டிக்கொண்டு என்ன பாடுபடுகிறாள் என்பதை நாவலின் ஓட்டத்தோடு நாம் காண முடிகிறது.


உமையாள் மாறன் இவர்களுடைய திருமணத்தை நடத்திப் பார்க்க  ஆசைப்படும் பவித்ரா தேவி அந்த விஷயத்தில் வெற்றியும் விட்டு விடுகிறாள். பவித்ரா தேவி தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஆசைப்படுபவள் அல்ல. வாழ்க்கை என்பது போகும் போக்கில் நாமும் போவோம் என்ற எண்ணம் கொண்டவள். அந்த வாழ்க்கையில் இளங்கோ வருகிறான் டாக்டர் வேலை பார்ப்பவனாக. மதுரை கொடைக்கானல் குமுளி என்றெல்லாம் இவளுடன் பிரயாணப்படுகிறான். ஆனால் பவித்ராதேவியுடன் அவனுக்கு என்ன முரண் என்பது புரியவில்லை. தனக்கு உள்ள வேலைகளை கூறுகிறாள் கேண்டீனில் கமலா, அவள் மகன் சேதுராமன், பாண்டியம்மாள், அந்தோணி முத்து, சென்னையில் சரிதாவின் இறந்த காதலனோட அம்மா, ஹோம்ல மூணு பசங்க, ரெபேக்கா இவர்களை எல்லாம் தனக்கு பார்த்துக் கொள்ளும் கடமை இருப்பதாக பவித்ரா கூறுகிறாள். இவ்வளவுக்கு அப்புறமும் "நீங்க என் கூடவே இருங்க. என்னை விட்டு எங்கேயும் போயிராதீங்க" என்று கூறும் ஒரு எளிய மனம் பவித்ராவுக்கு. இளங்கோ என்ன முடிவு எடுக்கிறான் என்பதுதான் கதை. இந்த இடத்திலும் ஒரு பெண்ணின் முடிவு என்பது இரண்டாம் பட்சத்திற்கு தள்ளப்படுவது போல் அமைந்து விடுவது துரதிஷ்டம்.


தாய்ப் பாசம் பற்றிக் கூறும் நாவல் என்றோ, தங்கைப் பாசம் பற்றிக் கூறும் நாவல் என்றோ பொத்தாம் பொதுவாகக் கூறி கடக்கும் நாவல் இல்லை. ஜனரஞ்சகமான ஒரு நாவல் என்றே கூறலாம். ஆண்களைப் போல பெண்களுக்கும் ஆசைகள் இருக்கும். மாதத்திற்கு ஒரு முறை தோட்டத்தில் சிக்கன், மட்டன், பிரியாணி சமைத்து அவற்றை ஓட்கா உடன் இணைந்து கொண்டாடுவது என்பது கதையில் வரக்கூடிய பெண்களின் கொண்டாட்டத்தில் ஒன்று. பெண்கள் தங்களைத் தாங்களே ரசித்துக்கொள்ளும் இடங்களாக இருக்கட்டும் (ஆங்காங்கே இது போன்ற பகுதிகள் இடம்பெறுவது ஒரு கவிஞராக அடையாளம் கண்டு கொள்ளும் இடமாக இருக்கிறது), தத்துவார்த்தமான வசனங்களை எளிய முறையில் கூறி கடப்பதாக இருக்கட்டும், இயல்பான நகைச்சுவையாக இருக்கட்டும் கொஞ்சமும் அலுப்புத் தட்டாதவாறு சுவாரசியமாக நாவலை நகர்த்திச் செல்வதில் வெற்றி பெறுகிறார் நாவல் ஆசிரியர். கூறுவதற்கு நிறைய இருக்கிறது நீங்கள் வாங்கிப் பார்த்து வாசித்து மகிழுங்கள். நன்றி.


வாழ்த்துகள் தோழர் சித்ரா சிவன்.

Wednesday, 13 August 2025

ஊசிகள் - மீரா


ஊசிகள்வி

கவிஞர் மீரா

சீதை பதிப்பகம்

விலை ரூபாய் 50

1974ல் வெளிவந்த கவிதைத் தொகுப்பு. முழுவதும் சமூகச் சீர்கேடு, அரசியல் அவலங்களைத் தோலுரிக்கும் கவிதைகள். பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் இப்போதைய அரசியலுக்கும் பல கவிதைகள் பொருந்துகின்றன. அரசியல்வாதி, ஊழல், போலித் தமிழன் எனப் பல விசயங்களைப் பேசுகிறது தொகுப்பு. ஊரே கொண்டாடும்,


உனக்கும் எனக்கும் 

ஒரே ஊர் 

வாசுதேவநல்லூர் 


நீயும் நானும் 

ஒரே மதம்... 

திருநெல்வேலிச் 

சைவப் பிள்ளைமார் 

வகுப்புங் கூட 


உன்றன் தந்தையும் 

என்றன் தந்தையும் 

சொந்தக்காரர்கள்- 

மைத்துனன் மார்கள் 


எனவே 

செம்புலப்பெயல் நீர் போல 

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே


என்ற கவிதை இத்தொகுப்பில் தான் உள்ளது. 


சிக்கனமாக இருக்கச் சொல்லிவிட்டு ஆடம்பர செலவு செய்யும் பிரதமர் குறித்த கவிதையும் உண்டு. சினிமாவில் அரசியல் தேடும் தமிழ் மக்கள் அன்றும் இருந்துள்ளார்கள். கல்விக்கு லஞ்சப் பட்டியல் அப்போதும் இருந்துள்ளது... இப்படி இவை யாவும் கவிதைகளில்.


வாய்ப்பிருந்தால் வாசியுங்கள்

மீராவின் அரசியல் கவிதைகளை.


வாழ்த்துகள்...