Thursday, 29 January 2026

தனித்திருக்கும்_அரளிகளின்_மதியம் #கவிஞர்_ப_காளிமுத்து

 


#தனித்திருக்கும்_அரளிகளின்_மதியம்

#கவிஞர்_ப_காளிமுத்து

#கவிதைத்தொகுப்பு


கவிதை எப்போதும் ஒரு வழிப்பாதையாக அமைந்துவிட்டால் அது எத்தகைய அனுபவத்தையும் கடத்தும் வேலையைச் செய்யாது. அதே கவிதை இருவழிப் பாதையாக அமையும் பொழுது ஒரு வாசகன் கவிதையை கண்டடைகிறான். ஒரு கவிதை ஒரு நல்ல அனுபவத்தை கடத்தும் பணியை செய்து விடுகிறது. புத்தகம் வாசகன் இரண்டுக்குமான செயல் இங்கு ஒரு ஆத்மார்த்தமான எண்ண ஓட்டத்தை இருதரப்பிலும் கடத்தும் பணியை செய்ய வேண்டும். அத்தகைய அதிசயத்தக்க ஒரு பணியை தனித்திருக்கும் அரளிகளின் மதியம் என்ற இக்கவிதைத்தொகுப்பு அனாயசமாக செய்து முடித்திருக்கிறது.


ஒரு கவிதை நம்மைப் பேச வைக்க வேண்டும். ஒரு கவிதையோடு நாம் பேசவேண்டும். இந்தக் கவிதை நூல் நம்மைப்பேச வைக்கிறது. நாமும் கவிதையோடு பேசுகிறோம். இதற்கும் மேலாக கவிதை நம் குரலை காது கொடுத்துக் கேட்கிறது. இதனை எப்படி நாம் உணர்வது.

ஒரு கவிதை...


சிறு நிலம் 

கொஞ்சம் தீனி 

பரிவு நிழல் 

பசி தீர்க்க அவகாசம் 

ஒரு வேடனும் 


மற்றும் ஒரு கவிதை...


அது வேடன் வீடு தான் 

எனக்கும் தெரியும் 

அந்தப் பறவைக்கும் தெரியும் 

பிறகு கீச்சிடுவதெதற்கென்றுதான் தெரியவில்லை...


கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முடிப்பினைக் கைவசம் வைத்திருக்கின்றன. அந்த முடிப்பு என்பது நாம் அறியாத ஒன்றாக இருப்பதுதான் கவிதையின் சிறப்பு எனக் கருத வேண்டியிருக்கிறது

"மாதக் காலண்டரில் இத்தேதி அடிக்கோடிடப்படவில்லை 

மகிழ் தினங்களின் வரிசையிலும் இல்லை 

ஒரு மழை 

காதல் செடிக்குத் தூறாத 

ஒரு நாளை 

எவரின் சபித்தலுக்கும் 

ஆட்படாத ஒரு நாளை 

வேண்டுமானால் 

பிறந்த தேதியே அறியாத ஒருத்தியின்

பிறந்தநாளை 

இன்றைக்குக் 

கொண்டாடினால் என்ன?"

சொற்களில் காணப்படும் வித்தகத் தன்மை ஒரு புறம் இருந்தாலும் அதனுள் பொதிந்து கிடக்கும் அன்பிற்கு சொற்கள் தன்னை ஒப்புக்கொடுக்கும் வித்தை மிகவும் இலகுவாக கைகூடியிருக்கிறது கவிஞருக்கு. எவரின் சபித்தலுக்கும் ஆட்படாத ஒரு நாளை என்ற வார்த்தையும் பிறந்த தேதியே அறியாத ஒருத்தியின் பிறந்தநாளை இன்றைக்குக் கொண்டாடினால் என்ன என்ற வார்த்தையும் கவிதையின் தளத்தை மிகச் சிறப்பாக வேறொரு இடத்தில் நிறுத்துகிறது...


காதல் கவிதைகளும் தொகுப்பில் காணக் கிடைக்கின்றன 

"ஒரு மரத்தின் 

எப்போதும் 

உதிர்க்காத இலையை 

உன் பெயர் எழுதித் தந்து செல்கிறாய்

அவ்விலை 

என்னுள் ஒரு பெரும் மரமானது 

எக்கிளை காணினும்

உதிரவே உதிரா இலைகள்..."


"காத்திருத்தலைச் சுவையூட்ட 

ஒரு மழையை அனுப்பினாய் 

அது வேடிக்கை பார்த்தபடி இருந்த

நிலத்தை துள்ளல் இசைக்கு ஆடச் செய்தது 

ஓர் உடலின் ஒட்டுமொத்த சூட்டையும் 

ஒரு கோப்பையில் இறக்கித் தந்தது 

காலிக் கோப்பையை நிரப்பத் தொடங்கினேன் 

வழியும் முன்னமே வருகிறாய் 

பிறகு 

அந்த மழையை 

சுமந்தபடி பயணமானோம்..."


பெயர் எழுதி தந்து செல்லக்கூடிய இலை மனதில் பெரும் மரமாகி நிற்கிறது. கிளைகள் எங்கும் உதிரவே உதிரா இலைகள்! காதலின் தனித்துவம் சொல்லும் அற்புத வரிகள்.


 ஒரு மழையை காதலி அனுப்புகிறாள். மழையால் நிலமாடுகிறது. உடலின் ஒட்டுமொத்த சூட்டையும் கோப்பையில் நிரப்புகிறது. தொடர்ந்து காலி கோப்பையை மழையால் நிரப்ப தொடங்குகிறார் கவிஞர். ஆனால் காலி கோப்பை நிரம்புவதற்கு முன்னரே காதலி வருகிறாள். காலி கோப்பை அப்படியே இருக்கிறது. இன்னும் வழியவில்லை மழை காலிக் கோப்பையில். மழையை என்னசெய்ய... அந்த மழையை சுமந்தபடி பயணம் ஆகின்றனர் காதலர்கள். ஒரு அற்புத உணர்வை காதல் கொடுக்கிறது. அந்த உணர்வை கவிதையும் கொடுக்கும் என்று நிரூபித்துள்ளார் கவிஞர்.


தொகுப்பெங்கிலும் மென் ரசனைக் கவிதைகளே அதிகளவில் இருக்கின்றன. சில கவிதைகளில் ரசனையின் உச்சம் வெளிப்படுகிறது. கவிதையை கவிதையாக கண்டறியும் வாகு இவருடைய கவிதை எனலாம்.

அப்படி ஒரு கவிதை இது.

"பறத்தலில் சற்று குறைபாடுள்ள பறவை மேல் செல்கிறது 

சக பறவைகளின் விரைவைப் பொருட்படுத்துவதில்லை 

சின்னஞ்சிறு பறவைகள் முந்திச் செல்கையில் 

சுருக்கமாய் தேற்றிக்கொள்கிறது மழைக்காலங்களில் சிறகுதற்றும் பறவைகளை நேசிக்கிறது உடன்பிறப்பு பறவைகளின் கவனிப்புகளை விரும்புவதில்லை 

வழக்கமான இடங்களில் இருக்கும் தீனிகளே போதுமானதாகிறது  

யார் மீதும் புகார்கள்அற்ற அந்தப் பறவைக்கு 

உயரப் பறத்தல் இல்லை பறத்தலின் பொருட்டே திருப்தியுறுகிறது"


ஒரு கவிதையை ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாசித்தல் என்பது புரியாமல் வாசித்தல் ஒன்று. ரசனையின் பால் மீண்டும் மீண்டும் வாசித்தல் மற்றொன்று. காளிமுத்து அவர்களின் கவிதை ரசனையின் பால் வாசிக்கத் தூண்டும் கவிதை. மேலும் கவிதையின் பால் நம்மை இழுத்துச் செல்லக்கூடிய வகைமை.

"அம் மேசையிலிருந்து 

இடறி விழுந்த 

இரு குவளைகளில் 

ஒன்று என்னுடையது" 

அவ்வளவுதான் கவிதை. மேஜையில் பார்வை விழுதல், அந்த பார்வையின் திசை அடுத்து இடறி விழும் குவளையின் பக்கம் செல்லுதல், அடுத்து விழுந்த குவளை தன்னுடையது என்று அறிதல், அந்த மற்றொரு குவளை யாருடையது என்று வினவுதல், ஏன் விழுந்தது என்று கேள்வி எழும்புதல், எந்த மாதிரியான சூழலில் இந்த விழுதல் சாத்தியம் என்ற வினா தோன்றுதல், யார் யார் சந்தித்துக் கொண்டது என்று எண்ண வைத்தல், இப்படியான எண்ணத்தை உருவாக்கி விடுவது இவர் திட்டமிட்டு அமைத்ததா அல்லது கவிதை அமைக்கிறதா என்பதுதான் மீண்டும் மீண்டும் படிக்கச் செய்தலில் காணக்கிடைக்கும் லாவகம்...


கவிதைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையான கரு, கவிதைக்கான சொற்கள் பிரயோகம் என்பது ஒரு தேர்ந்த அனுபவசாலியான கவிஞன் கையாள்வது போல அவ்வளவு நேர்த்தி, என் கவிதைகள் இப்படித்தான் இருக்கும் என்பது போலான உத்தியை கையாளுதல், இயற்கையை பாடுதல் என தன்னுடைய முதல் தொகுப்பிலேயே கவிதையை கொண்டாடித் தீர்த்திருக்கிறார் கவிஞர். அவரோடு சேர்ந்து நாம் கொண்டாடும் அதே கணம் ஆச்சரியத்தையும் முன்வைத்து கொண்டாடித் தீர்க்கிறோம். 


இறுதியாக ஒரு கவிதை...


"இந்நேரமாகியும் 

ஒளிரும் அவ்வீட்டை 

கடப்பவளின் கைகளுக்குள் 

ஒரு மெல்லிய பகை 

சிணுங்கிக் கொண்டிருந்தது"

இந்நேரம் என்பது எவ்வளவு நேரம், ஒளிரும் வீடு யார் வீடு, கடப்பவள் என்பவள் யார், அவளுக்குள் எதற்கான பகை சிணுங்கிக் கொண்டிருந்தது, எப்பொழுது வீரியமாகும்... 


கவிஞர் அம்சப்ரியா கூறுவது போல

"கவிஞன் தனக்குள் இடைவிடாமல் கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற வேளையில் தனக்கான பாதிப்பை வெளிப்படுத்துகிற போது அது தனக்கான வடிவத்தை தேர்ந்தெடுக்கிறது. அது ஒரு சிறந்த கவிதையும் ஆகிறது..." அப்படித்தான் கவி காளிமுத்துவின் கவிதைகளும்.


வாழ்த்துகள் தோழர் ப. காளிமுத்து

9629446203

இருவாட்சி பதிப்பகம்...

No comments:

Post a Comment