நாயகன் அம்பேத்கர்
அஜயன் பாலா
56 பக்கங்கள்
20 ரூபாய்
நன்செய் பிரசுரம்
புரட்சியாளர் என்ற பட்டத்திற்குப் பொருத்தமான தலைவர் அம்பேத்கர் என்பதற்கு ஆயிரம் காரணங்களைக் கூறலாம். இந்நூல் மிகக் குறைந்த பக்கங்களில் அம்பேத்கரின் வரலாற்றை அடைக்க முற்பட்டிருக்கிறது என்றாலும் தொடக்கநிலை வாசிப்பாளர்களுக்கு மிகச் சிறப்பான ஒரு நூலாகவே அடையாளம் காணும் வகையில் உள்ளது. படிக்கும்போதும் பணிபுரியும் போதும் தான் அனுபவித்த தீண்டாமைக் கொடுமைகளை தன் மக்களும் அனுபவிக்கக் கூடாது என்று கடும் உழைப்பால் போராடி அவர்களை மீட்ட மாமனிதர் அம்பேத்கர். வாசிப்பில் சுணக்கம் ஏற்படாதவாறு எழுத்தின் லாவகம் முழுக்க வாசிக்க வைத்து விடுகிறது. மெல்ல மெல்ல ஒரு திரைப்படம் உச்சம் செல்வதுபோல் அம்பேத்கருக்கு நேர் எதிரில் கொள்கையால் செயல்பாட்டால் நிறுத்தப்பட்டிருக்கும் ஒருவராக காந்தியை முன்வைத்து கடைசி அத்தியாயங்கள் நகர்வது சுவாரஸ்யம். எழுத்தாளர் சொல்வது போல அம்பேத்கர், காந்தியால் பரிதாபகரமாக ஆக்கப்பட்டாலும், காந்தியின் மறுபக்கத்தை பூசி மெழுகாமல் நேரடியாக எழுதியுள்ளது சிறப்பு. நாயகன் அம்பேத்கர் என்பதற்கான அனைத்து கதாநாயக தன்மை நிறைந்தவராக அம்பேத்கரை சுருக்கமாகக் கூற முற்பட்டிருந்தாலும் அவர் பொதுத் தலைவராக அறியப்படுவதற்கான எந்தக் கருத்தும் காட்சியும் நூலில் இல்லை என்பது திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா அல்லது அம்பேத்கரை வாசிக்கும் நபர்களுக்கு இது போதும் என்ற மனநிலையை வைத்துக்கொண்டு எழுத்தாளர் எழுதினாரா என்ற கேள்வி எழாமல் இல்லை. அம்பேத்கர் பெயர்க்காரணம், அம்பேத்கர் தன்னுடைய சகோதரன், அக்காள் மகனுடன் தந்தையைப் பார்க்க வண்டியில் செல்லும்போது அவர்கள் மகர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்று அறிந்தவுடன் வண்டிக்காரர் வண்டியைக் கவிழ்த்து விட்டார் என்ற செய்திகள் இதற்கு முன்னர் வாசித்த நூல்களுக்கு (கழுவப்படும் பெயரழுக்கு / விசாவுக்காகக் காத்திருக்கிறேன்) முரணாக உள்ளதையும் மறுக்க முடியாது. வாசிக்க வேண்டிய நூல்.
யாழ் தண்விகா
❣️



