Thursday, 12 March 2026

நாயகன் அம்பேத்கர் #அஜயன் பாலா


 நாயகன் அம்பேத்கர்

அஜயன் பாலா

56 பக்கங்கள்

20 ரூபாய்

நன்செய் பிரசுரம்


புரட்சியாளர் என்ற பட்டத்திற்குப் பொருத்தமான தலைவர் அம்பேத்கர் என்பதற்கு ஆயிரம் காரணங்களைக் கூறலாம். இந்நூல் மிகக் குறைந்த பக்கங்களில் அம்பேத்கரின் வரலாற்றை அடைக்க முற்பட்டிருக்கிறது என்றாலும் தொடக்கநிலை வாசிப்பாளர்களுக்கு மிகச் சிறப்பான ஒரு நூலாகவே அடையாளம் காணும் வகையில் உள்ளது. படிக்கும்போதும் பணிபுரியும் போதும் தான் அனுபவித்த தீண்டாமைக் கொடுமைகளை தன் மக்களும் அனுபவிக்கக் கூடாது என்று கடும் உழைப்பால் போராடி அவர்களை மீட்ட மாமனிதர் அம்பேத்கர். வாசிப்பில் சுணக்கம் ஏற்படாதவாறு எழுத்தின் லாவகம் முழுக்க வாசிக்க வைத்து விடுகிறது. மெல்ல மெல்ல ஒரு திரைப்படம் உச்சம் செல்வதுபோல் அம்பேத்கருக்கு நேர் எதிரில் கொள்கையால் செயல்பாட்டால் நிறுத்தப்பட்டிருக்கும் ஒருவராக காந்தியை முன்வைத்து கடைசி அத்தியாயங்கள் நகர்வது சுவாரஸ்யம். எழுத்தாளர் சொல்வது போல அம்பேத்கர், காந்தியால் பரிதாபகரமாக ஆக்கப்பட்டாலும், காந்தியின் மறுபக்கத்தை பூசி மெழுகாமல் நேரடியாக எழுதியுள்ளது சிறப்பு. நாயகன் அம்பேத்கர் என்பதற்கான அனைத்து கதாநாயக தன்மை நிறைந்தவராக அம்பேத்கரை சுருக்கமாகக் கூற முற்பட்டிருந்தாலும் அவர் பொதுத் தலைவராக அறியப்படுவதற்கான எந்தக் கருத்தும் காட்சியும் நூலில் இல்லை என்பது திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா அல்லது அம்பேத்கரை வாசிக்கும் நபர்களுக்கு இது போதும் என்ற மனநிலையை வைத்துக்கொண்டு எழுத்தாளர் எழுதினாரா என்ற கேள்வி எழாமல் இல்லை. அம்பேத்கர் பெயர்க்காரணம், அம்பேத்கர் தன்னுடைய சகோதரன், அக்காள் மகனுடன் தந்தையைப் பார்க்க வண்டியில் செல்லும்போது அவர்கள் மகர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்று அறிந்தவுடன் வண்டிக்காரர் வண்டியைக் கவிழ்த்து விட்டார் என்ற செய்திகள் இதற்கு முன்னர் வாசித்த நூல்களுக்கு (கழுவப்படும் பெயரழுக்கு / விசாவுக்காகக் காத்திருக்கிறேன்) முரணாக உள்ளதையும் மறுக்க முடியாது. வாசிக்க வேண்டிய நூல்.


யாழ் தண்விகா 


❣️

பொன்னி #அகரன்


 பொன்னி

(நீள் கதைகள் இரண்டு)

அகரன் 

பன்முக மேடை பதிப்பகம்

92 பக்கங்கள்

120 ரூபாய்


கிராமத்துச் செம்மண் வீட்டு வாசமும் சில குழந்தைகளும்...


குட்டிப்பிள்ளையார் முதல் கதை. வளவன், சரவணன் இருவரும் நண்பர்கள். கிராமத்திற்கான அத்தனை விளையாட்டுகளை, சேட்டைகளைச் செய்யும் சிறுவர்கள். அம்மா வைக்கும் புளிச்சோறு தின்ன செய்யும் களவாணித்தனம், மீன் சுட்டுத் தின்னுதல் என எல்லாம் அடடா. இவர்கள் ஊருக்கு வருகை தரும் பார்வதி அத்தை மகள் பரிமளா, வளவனுக்குப் பிடித்தவள். அவளோடு கூட்டணி போட்டுக்கொண்டு திருவிழா நாட்களைக் கடக்கிறார்கள். நம்மூரில் சிறு வயதில் இளம் பிராயத்தில் வாழ்ந்த நினைவுகளை மீட்கொணர்வது போல திருவிழாக் காட்சிகளைக் கூறுவதில் அகரன் சிறக்கிறார். வளவன், சரவணன் இருவரும் குட்டிப் பிள்ளையாருக்கு ஒரு கோயில் கட்டியிருக்கிறார்கள். அங்கு பரிமளாவை அழைத்துச் செல்கிறார்கள். அங்கு அவள் வேண்டியது என்ன? அதை வளவன் பெற்றுத் தந்தானா? என்பதை பரிமளா பெரிய மனுஷி ஆகும் காலத்தின் வழி கவிதை போலச் சொல்லி நிறைவாகிறது கதை. அறியாத வயசு, புரியாத மனசு பாடலின் சிறிசுகள் போல பச்சக் என மனதில் பதிகிறார்கள் வளவனும் பரிமளாவும். காரணம் கதை சொல்லும் பாங்கும் கிராமச் சொல்லாடலும். 


பொன்னி, இரண்டாவது கதை. பவித்ரா வளர்க்கும் கோழியின் பெயர் தான் பொன்னி. பொன்னி அரிசி தின்று வளர்பவள். பவித்ராவின் செல்லம். தாத்தா வீட்டில் வளரும் பவித்ரா வீட்டிற்கு அவளின் பெரியப்பா குடும்பம் வருகிறது. அப்போது கோழி அடித்து குழம்பு வைக்கலாம் என்ற யோசனை முன்வரும்போது பவித்ராவுக்காக அந்த யோசனையைப் புறந்தள்ளி கடன் வாங்கி ஆட்டுக்கறி வாங்கிச் சமைக்க ஏற்பாடு செய்கிறார் முத்தையன் தாத்தா. பவித்ராவின் தாத்தா வீட்டுக்கு வந்த பெரியப்பா வீட்டுக்கு அவள் செல்லும் சமயம் எதிர்பாராத விதமாக முத்தையன் தாத்தா இறந்து விடுகிறார். அதன்பின்னர் அந்த பொன்னி என்னானது என்பது கதை. நம்மால் யூகிக்க முடியும் என்றாலும் பவித்ராவின் கேள்விக்கென்ன பதில் நம்மிடம் இருக்கிறது? முதல் கதை போலவே இதுவும் கிராமத்தை கண்முன் கொண்டுவரும் கதை. குழந்தைகள், சக உயிர்களிடம் எவ்வளவு அன்பு செலுத்துகிறார்கள் என்பதெல்லாம் காண இன்று நம்முன் என்ன இருக்கிறது? கோழி என்றால் பிராய்லர் கோழிகள் கண்ணுக்குத் தெரிய நாட்டுக்கோழிகள் கண்கள் பார்க்கும் தூரம் வரை தெரியாத காலமாக மாறிவிட்டது நவீன காலம். வாசிக்க வாசிக்க கதையும் காட்சியும் ஒருசேர கண்முன் நாம் காண்பது போல அமைவது தோழர் அகரனின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி. கிராமத்து மண்ணின் மொழியையும், மக்களையும் காண்பது தொலைத்த காலங்களை மீட்டுணர்வது போல இருக்கிறது.


தேனி மாவட்டம் தனது படைப்பாளர்கள் பட்டியலில் புதிதாக ஒரு பெயரைச் சேர்த்துக்கொள்ளும் என்பதோடு அவர் நட்சத்திரப் படைப்பாளராக வரும் வல்லமை உடையவராக அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. தொடர்ந்து எழுதுங்கள். இன்னும் பல தளங்கள், உயரம் தொட இப்புத்தகம் தொடக்கப்புள்ளியாக இருக்கட்டும். 


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️

வித்தியாசம் தான் அழகு #ச.மாடசாமி


 நூல் விமர்சனம் 


வித்தியாசம்தான் அழகு

(குழந்தைகளுக்கான கதைகளும் பெரியவர்களுக்கான நீதிகளும்) 

ச.மாடசாமி 

பாரதி புத்தகாலயம் 

112 பக்கங்கள்

120 ரூபாய்


குழந்தைகள் உலகம் வித்தியாசமானது. அங்கு அவர்கள் தான் எல்லாம். வருத்தம் கோபம் சந்தோஷம் என்று அனைத்து விதமான கலவையான உணர்வுகள் பெருகிக் கிடக்கும். குழந்தைகளிடம் காணப்படும் உணர்வுகள் அவர்களாக நாம் மாறினால் ஒழிய அறிய முடியாது. இந்த புத்தகம் குழந்தைகள் படிப்பதற்கும் பயன்படும். பெரியவர்களுக்கு நீதியை போதிக்கவும் பயன்படும். 20 தலைப்புகளின் கீழ் தோழர் ச.மாடசாமி அவர்கள் கதைகளை படைத்துள்ளார். இந்த கதைகளை படிக்கும் பொழுது குழந்தைகள் உலகம் எவ்வளவு பரந்துபட்டு இருக்கிறது என்பதை அறிய முடியும். இந்த உலகம் எங்கும் வியாபித்து கிடக்கிறது என்ற எண்ணம் நாம் அறிய முடியும். எல்லா உலகத்திலும் குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். பெரியவர்கள் தான் வளர்ந்து விட்ட காரணத்திற்காக தன்நிலை மாறி தனக்கான அறிவோடு வளரத் தொடங்கி விடுகிறார்கள். அந்த அறிவுக்கு ஏற்ற சந்தோசம், வெறுப்பு, குரோதம் முதலானவை தன்னுடைய அறிவு நிலையில் இருந்து வளரத் தொடங்கி விடுகிறது. அறநெறி ஒன்று, அது தொடர்பான கதை ஒன்று என்று இந்த நூலின் முழுவதும் நம் கைபிடித்து அழைத்துச் செல்கிறார் தோழர் அவர்கள். 


மிகச் சமீபமாக இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் நடந்தது. அந்த போரின்போது மழலைகளின் கருத்துக்கள் எங்கும் பகிரப்பட்டு வந்தது. அதுபோன்ற பேரழிவு சம்பந்தமான கதையும் உண்டு. ஆனால் அந்தக் கதையானது மழலைகள் புரிந்து கொள்ளும் அளவில் உள்ளது சிறப்பம்சமாகும். காலில் மிதிபடும் பட்டாம்பூச்சிகள், நஸ்ரின் படித்த ரகசியப் பள்ளி போன்ற கதைகள் போருக்கு எதிரான கதைகளாக இருக்கிறது. மேலும் அதன் மூலம் பெரியவர்களும் உணர வேண்டிய அறநெறி ஒன்றும் உள்ளது. 


ஒரு கால் ஒரு கதாநாயகன் கதையின் மூலம் முயற்சி என்பது எவ்வளவு முக்கியம் என்பது கதையில் கூறப்பட்டுள்ளது. பரிவு கோரல் என்பதை மறுத்து அதிலிருந்து விடுபட்டு முயற்சி என்பதன் மூலம் இந்த உலகில் தானும் வாழ்வதற்கு பிறந்தவன் என்பதை அழகாக கூறுகிறார்.


 

கொரோனா காலகட்டத்தில் உலகமே ஸ்தம்பித்துப் போன நிலையில் பள்ளியின் நிலை பற்றி சொல்லவா வேண்டும்? இதுபோல் வேறு ஒரு சூழல். கல்வி என்பது இல்லாத சூழலில் கழுதைகளை ஓட்டிக்கொண்டு கையில் கிடைக்கக்கூடிய ஒரு 50 நூல்களைக் கொண்டு அந்தப் பகுதிகளில் பயணம் செய்கிறார். ஒரு ஆசிரியர் மிகவும் குறைவான சம்பளம் இருந்த போதும் அங்கு செல்கிறார். அந்தப் பகுதிகளில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு கதைகளை சொல்லித் தருகிறார். மாணவர்களை படிக்கச் சொல்கிறார். அதன் பின் கல்வி கற்றுத் தருகிறார். ஒருநாள் யானை மறுநாள் சிங்கம் நரி போன்ற கதைகளை எல்லாம் சொல்கிறார். ஒரு சிறுமி கேட்கிறாள், கழுதையைப் பற்றி ஒரு கதை சொல்லுங்கள் என்று. யானை குதிரை நரி போன்ற கதையை நான் கூறினேன் நீ எழுத வேண்டியது தானே கழுதைகளைப் பற்றி. உனக்கும் கதை எழுதத் தெரியும் தானே என்று கூற அவளும் கதை எழுதுகிறாள். இப்பொழுது அந்த கதை பலரும் படிக்க கூடிய அளவிற்கு ஆசிரியரிடம் சென்று சேருகிறது. அந்தக் கதை தான்

கழுதைகள் கொண்ட வந்த கதைகள்.


ஆட்டிசம் வந்த குழந்தை எவ்வாறு கற்றலில் மேம்பாடு அடைகிறது என்பதனை ஒரு கதையில் கூறுகிறார். ஹிரோஷிமா நாகசாகி குறித்த கதை ஒன்று உள்ளது. குழந்தைகளுக்கு பிடித்தமான விலங்குகள் பற்றிய கதைகள் உண்டு. இப்படி எங்கெங்கோ உள்ள கதைகளை நாம் படிக்கும் வண்ணம் நூலில் கொடுத்துள்ளார் தோழர் அவர்கள். வித்தியாசம்தான் அழகு. வித்தியாசம்தான் தோழர் அவர்கள் கதைகளும்.


வாசியுங்கள் அனைவரும்.


யாழ் தண்விகா

அய்! உருகாத மாம்பழ ஐஸ்கிரீம்


 நூல் விமர்சனம்


அய்! உருகாத மாம்பழ ஐஸ்கிரீம்!

ராஜிலா ரிஜ்வான்  

பாரதி புத்தகாலயம் வெளியீடு 

80 பக்கங்கள் 

80 ரூபாய்


குழந்தைகளின் உலகத்திற்குள் போய்விட்டோம் என்றால் நேரம் காலம் தெரியாது. அங்கு அவர்கள் ஆடலாம், பாடலாம், உட்கார்ந்து இருக்கலாம், விளையாடலாம், தூங்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். தோழர் ராஜிலா ரிஜ்வானின் படைப்புலகத்திற்குள் குழந்தைகள் எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருக்கின்றனர். இந்த புத்தகத்தில் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு. ஆம், ஒவ்வொரு கதைகளிலும் பாடல் வருகிறது. அந்த பாடலும் நடனமாடி, மகிழ்ந்து கொண்டாடும் பாடல்கள்.


சிறுசேமிப்பிற்கு என்று ஒரு கதை, காய்கறி தின்னாமல் ஓரமாக எடுத்து வைத்துவிட்டு சாப்பிடும் குழந்தைகளுக்கான ஒரு கதை. கடலுக்குள் உள்ள உயிரினங்கள் என்னென்ன என்று அறிய ஒரு கதை, பள்ளிக்கூடத்தில் பாடம் மட்டுமே படிக்கும் குழந்தைகள் பாடல் கதை என்று எதுவும் தெரியாமல் வேதனையான மனநிலையில் வாழும் குழந்தைகளின் கதை. ஒவ்வொரு கதைகளும் அட்டகாசமாக அமைந்திருக்கின்றன. கிரீடம் சூடிய அழகி, ட்டொயான் டொஸ்க் வனிதா, அய்!உருகாத மாம்பழ ஐஸ்கிரீம், நூலகம் சென்ற பட்டாம்பூச்சி, டம் டம் டம் பேய் வருது, மியாமியும் பவ்வியும் என்பன போன்ற கதைகளின் தலைப்பும் நம்மை உள்ளுக்குள் இழுத்து விடும் வண்ணம் அமைந்திருக்கின்றன. கரு கரு கரு கரு கட்டெறும்பு, டிங்கர டப்பா டிங்கர டப்பா டிங்கர டப்பா டோய், ஏலேலோ ஐலசா ஏலேலோ ஏலேலோ ஐலசா ஏலேலோ என்பவையெல்லாம் பாடலின் துவக்க வரிகள். இன்னும் பாடல்கள் இருக்கின்றன. புத்தகத்தை வாங்கிப் பாருங்கள். குழந்தையாக மாறி, குழந்தையாக கதை கேட்டு, குழந்தையாக பாடல் பாடி, குழந்தையாக நடனம் ஆட ஒரு புத்தகம். 


வாழ்த்துக்கள் தோழர் 

ராஜிலா ரிஜ்வான்.


யாழ் தண்விகா 


❤️