Friday, 1 May 2020

வாக்காளனாகிய நான்... #மானசீகன்

#வாக்காளனாகிய_நான்...
கட்டுரைத் தொகுப்பு

Maanaseegan தோழர்

தமிழினி பதிப்பகம்
சென்னை

ஏன் அரசியல் என்பதற்கும் சமகால இந்தியா மற்றும் தமிழகம் இரண்டிற்கும் தேவையான அவசியமான அர்த்த பூர்வமான அரசியலை கண்டு கொள்வதற்கும் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் யாரை நாம் ஏற்க வேண்டும் யாரை புறந்தள்ள வேண்டும் என்ற புரிந்துணர்வை உண்டு பண்ணக்கூடிய வண்ணம் தலைவர்கள் குறித்த கட்டுரைகளும் நிரம்பிய ஒரு கட்டுரைத் தொகுப்பு.

நீண்ட நாட்களாக தோழர் மானசீகன் அவர்களுக்கு தன்னுடைய வாக்காளர் ஆகிய நான் என்ற நூலினை குறித்த விமர்சனம் பெரும்பாலும் யாரும் செய்யாமல் இருப்பதை அவரே சுட்டிக்காட்டியிருக்கிறார். அது அவருடைய நூல் குறித்த விமர்சனத்தை அறிந்து கொள்ளக்கூடிய எண்ணமா அல்லது இந்த அரசியலை இந்த மண்ணும் மக்களும் எப்பொழுது கண்டுணர போகிறார்கள் என்ற ஏக்கமா என்ற வெளிப்பாட்டினை எந்த வகையில் எடுத்துக் கொள்வது என தெரியாமல் இருந்தேன். ஆனால் நூலை வாசிக்க வாசிக்க இந்த மண் பயனுற வேண்டும் என்றால் இந்த நூலினை ஒவ்வொரு தமிழனும் வாசித்த வேண்டும் என்பதால் ஏற்பட்ட ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் அந்த எதிர்பார்ப்பு என்பதனை புரிந்து கொண்டேன்.

நூலினைப் பொருத்தவரையில் அது பிரதமராக இருந்தாலும் சரி முதலமைச்சராக இருந்தாலும் சரி மனதில் உள்ளதை தோழர் மானசீகன் அவர்களின் சொற்களில் கூறுவது என்றால் அக உணர்வின் அடிப்படையில் உள்ளது உள்ளபடி தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக அதேசமயம் ஆதாரப்பூர்வமாக சுட்டிக் காட்டியிருக்கிறார். 49 கட்டுரைகள். 192 பக்கங்கள்.

ஆ ஊ என்றால் இந்த அவலம் நேரு உண்டாக்கி வைத்தது என்று வாய் கூசாமல் பொய்யை அவிழ்த்து விடும் சவடால் பேர்வழிகளுக்கு நேருவை ஜனநாயகத்தின் காவலன் என்ற கட்டுரை பதில் சொல்கிறது. "இந்தியா என்றென்றும் காந்தியின் தேசமாக மட்டுமே அடையாளம் காணப்படும். அந்த மதிப்பீடுகளின் நாயகனாக நேருவே கொண்டாடப்படுவார்" "காந்தி கொல்லப்பட்டபோது படேல் உள்துறை அமைச்சராக இருந்து ஆர் எஸ் எஸ் அமைப்பை தடைசெய்தவர். படேல், நேதாஜியை மட்டுமல்ல; விவேகானந்தரை கூட இவர்களிடம் விட்டுக் கொடுத்துவிட முடியாது. விட்டுக் கொடுத்துவிட கூடாது என்பதுதான் என் நிலை" என்கிறார்  தோழர். செம்மறியாட்டு கூட்டம் போல சாயும் மனிதக் கூட்டத்திற்கு எப்போது இது புரியப் போகிறதோ...

சாதித் தலைவர் என்ற வட்டத்திற்குள் அடைக்கப்பட்டுள்ள வ வு சி குறித்த கட்டுரை அவரின் பன்முக ஆளுமையைக் கூறுகிறது. மேலும் அவருக்கும் இசுலாம் மக்களுக்கும் உள்ள தொடர்பைக் கூறுகிறது. சிதம்பரம் அவர்களின் மகனான வாலேஸ்வரன் பெயருக்குப் பின்னால் உள்ள சிறு கதை உருக்கம்.

அரசியல் குறித்த எந்த அறிவும் இல்லாமல் இட ஒதுக்கீடு குறித்த புரிதல் இல்லாமல் பேசும் அனைத்து (அனைத்து வயது, அனைத்து சாதி) மனிதர்களும் வாசிக்க வேண்டிய கட்டுரை. "வி பி சிங் அவர்கள் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றும் போது உச்சரித்த வார்த்தைகள் ' பெரியார், அம்பேத்கருக்கு நன்றி '. தமிழ்நாட்டில் பெரியார் என்ன கிழித்தார் என்பதற்கு அந்த வார்த்தைகள் போதும் பதிலாக. வரலாற்றின் பதிவாக. அம்பானிக்கு எதிராக அந்தக் காலத்திலேயே வாள் சுழற்றியவர் என்பது போதாதா இவரை வரலாற்றிலிருந்து ஒதுக்கும் போக்கிற்கு. இந்தக் கட்டுரையில் வரும் இரண்டு வாக்கியங்கள் "பன்னீரும் எடப்பாடி மட்டும் திடீர் யோக்கியர்களாக்கப்பட்டு தினகரன் மட்டும்தானே குறி வைக்கப்பட்டார்" "தான் மைய வெளியில் வருவதற்குக் காரணமான வி பி சிங்கிற்கு அத்வானி செய்த துரோகம் தான் மோடியின் வடிவில் நின்று கொல்கிறது" எதனையும் வலிய ஆதரிக்கும் பலர் இந்த  அரசியலை அதன் பின்னணியை அறியவேண்டும்.

தனக்குப் பின்னால் பத்து பேர் இருந்தால் போதும் பலருக்கு முதல்வர் கனவு வந்துவிடுகிறது. முக்கியமாக திரைத்துறை சார்ந்தவர்களுக்கு. அவர்களின் கொள்கை குறித்த கேள்விகளை தேர்தல் கமிஷன் முன்வைக்கலாம். அப்போதுதான் புற்றீசலாகப் புறப்படும் கட்சிகளுக்கு தடை போட முடியும் என்கிறது எந்தக் கட்சி நம்ம கட்சி என்ற கட்டுரை. மே தினம் கட்டுரை உழைக்கும் மக்கள் பயணிக்க வேண்டிய அடுத்த கட்டப் பார்வையை எடுத்துக் கூறுகிறது. ஆதி அரசியல், ஈழ அரசியல், சாதி அரசியல் என்று பயணிக்கும் பாதை திருமாவின் அரசியலில் வந்து நின்றபோது அரசியலில் அவர் அடைந்து நிற்கும் புதிய பரிணாமத்தை கண்கொண்டு பார்க்கும் உணர்வு. மண்ணுக்கேற்ற அம்பேத்கரியம் என்ற கட்டுரையும்.

காடுவெட்டி குரு மறைந்த போது, இளவரசன் இறந்தபோது முறையே திருமாவளவன் அவர்கள் காட்டிய கண்ணிய இரங்கல் மற்றும் பொறுமையான முன்னெடுப்பு குறித்துக் கூறும் கட்டுரையாளர், 2000க்குப் பின்னர் ஒரு தலைவராக பரிணாமம் பெற்று சக தலைவர்களுடன் பழகும் விதம், நிதானம், தொலைநோக்கு, பிடி கொடுக்காத இலாவகம், யாரையும் பகைத்துக் கொள்ளாத தெளிவு என கலைஞரின் பாதையில் பயணிப்பதாக கூறுகிறார். திருமாவின் முரட்டு பிள்ளைகளுக்கு அரசியல் கற்றுத்தர வந்திருக்கும் வாத்தியார், சிறுபான்மையினரின் பாதுகாவலன், பிற சாதியினர் வியந்து நோக்கும் அரசியல்வாதி எனத் திகழ்கிறார். மேலும் அம்பேத்கரியத்தை பெரியாரியத்தோடு இணைத்து மண்ணுக்கேற்ற அம்பேத்கரியத்தை உருவாக்கியுள்ளார் என்ற புகழாரங்கள் எதுவும் பொய்யில்லை. நிதர்சன உண்மை என்பதை திருமாவின் களச் செயல்பாடுகள் மூலம் நாம் அறியலாம்.

வை கோ அவர்களின் பலம், பலவீனம் என்ன என்பதனை ஒரு கட்டுரை தெளிவாகக் கூறுகிறது. வை கோ அவர்கள் ஸ்டாலினை மனதளவில் அங்கீகரிக்க வேண்டும். அப்போதுதான் ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க முடியும் என்று கட்டுரையாளர் விரும்பியது இன்றைய அரசியலில் சாத்தியமாகி உள்ளது மகிழ்ச்சி.

அரை நூற்றாண்டு அடையாளம், வெற்றிடத்தை நிரப்பும் திராவிடம், காமராசரை கொண்டாடும் அரசியல் ஆகிய கட்டுரைகள் தி மு க வை மையப்படுத்தியவை. இதில் கலைஞர் இந்திய அளவில், தமிழகத்தில் ஆளுமை செலுத்திய விதம், அவரின் அரசியல், பன்முகத் திறன், கட்சியினரை எதிர் கட்சியாக இருந்த காலத்திலும் கட்டுக்கோப்பாக கொண்டுவந்த விதம், அவரைச் சுற்றியே 50ஆண்டுகால அரசியல் நடந்த விதத்தைக் கூறுகிறது. வெற்றிடம் என்பது எதுவுமல்ல, அதனை ஸ்டாலின் நிரப்புவார் என்ற எதிர்பார்ப்பு, அதற்கான காரணம் எப்படி சாத்தியமாக இருக்கும், பிறரை விட ஸ்டாலின் எவ்விதத்தில் முந்துகிறார் என்பதைப் பட்டிலிடுகிறது ஒரு கட்டுரை. காமராஜர் ஆட்சி என்பதை எவர் தூக்கிப் பிடிப்பார், அதற்கான போலிக் காரணங்கள் என்ன என்பதைக் கூறி இந்த 50ஆண்டுகளில் திராவிடம் செய்த சாதனைகள் காமராசர் ஆட்சிக் காலத்தை விட சிறந்தவையாக, வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்பவையாக இருந்திருக்கும் விதத்தையும் கூறுகிறார். உடன்பிறப்பே என்ற கட்டுரை கலைஞரின் இடத்தில் ஸ்டாலின் எவ்வாறு பணி செய்தல் வேண்டும், அதன் சம காலத் தேவை என்ன என்பதை உணர்த்துகிறது.

ஜெயலலிதா அவர்கள் சர்வாதிகாரப் போக்குடையவர், அரசியல் பழி வாங்கல், அதிகார ஆணவம், கிரிமினல் குற்றவாளி, இப்படியெல்லாம் அவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்படுகிறது என்று சொல்லிக்கொண்டே சொல்லும்போது அது தடம் மாறி நல்லவர் என்ற பிம்பம் அளிக்குமோ எனப் பயந்தேன். நல்லபடியாக அது நடக்கவில்லை. எனக்கு அரசியல் பிடிக்காது என்று சொன்னவர் நடத்திய அரசியல் எவ்வித பாதிப்புகளை தமிழகத்திற்கு கொடுத்தன என விவரிக்கிறது ஒரு கட்டுரை. அவர் வாழ்ந்த வாழ்க்கை இளவரசிகள் கூட வாழாத வாழ்க்கை. ஆனால் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் அதனை தவ வாழ்க்கை என அழைத்துக்கொண்டார் என்கிறார் கட்டுரையாளர். உண்மைதானே... சசிகலா குறித்த கட்டுரை, திடீர் சின்னம்மா சட்டமன்றத் தலைவர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறை பேசுகிறது. அந்தக் கட்டுரையின் இறுதியில் வரும் வரி, ஜெ சசி இருவரின் வாழ்வில் நடந்த சதுரங்கத்தில் யார் ராணி என்ற கேள்விக்கு இப்போதும் விடையில்லை என முடியும். அதே கேள்வி எனக்கு இன்று வரை நீடிக்கிறது. யார் அதற்கு ஆதாரத்தோடு விடையளிக்க முடியும்...?

பிம்ப அரசியல் கட்டுரையில் ஜெயலலிதாவின் வருகையும், அவரது வளர்ச்சியும் தமிழக அரசியல் வரலாற்றில் மாபெரும் கறை, என்பதும் தேசியம், திராவிடம் குறித்த குறைந்த பட்ச அறிவில்லாத விசிலடிச்சான் குஞ்சுகளால் தான் ஜெயலலிதா போன்ற ஒருவர் மிக எளிதாக கலைஞருக்குச் சமமான தலைவராகிறார் என்பது ஆய்ந்து உணர்ந்த கருத்தே.

வச்சு செஞ்சிருக்காங்க என்ற வார்த்தைப் பிரயோகம் கேட்டிருப்போம். சேக்கிழார் உலா, பாவம் விடலைப் பசங்க (தமிழக பா ஜ க தலைவர்கள், இரத்தத்தின் ரத்தங்கள் அளிக்கும் பேட்டிகள்), அந்தச் செம்பு ரொம்பப் பழசு கட்டுரை(எம் ஜி ஆர், ரஜினி, கமல்,  அர்ஜூன், ஆர் வி உதயக்குமார், கே எஸ் ரவிக்குமார் படங்களை கிழித்துத் தொங்க விட்டிருக்கிறது), இது கோடம்பாக்க ஏரியா கட்டுரை (ரஜினி கமல் உரையாடல் - தூத்துக்குடி சென்று திரும்பிய ரஜினி அளித்த பேட்டியை கமல் எப்படி டீல் செய்வார் என்பதை பேசுகிறது), மய்யத்தின் அரசியல், தேவர் மகனும் தமிழ் தேசியமும் கட்டுரை (நாம் தமிழர் தம்பிகளின் அரசியல்), அண்ணன் காட்டிய வழியம்மா (சீமான் அரசியல்), த்ரீ இடியட்ஸ் (மோடி அமித்ஷா சீமான்), இம்சை அரசர்கள் (தமிழக பா ஜ க தலைவர்கள் பேட்டி), மோடி எடப்பாடி பின்னே போப்பாண்டவர், பக்தாள் நேர்காணல் (பா ஜ க பக்தாள் எல்லாவற்றிற்கும் முட்டுக்கொடுத்தல்), அதான்டா இதான்டா (ரஜினி), தேனிக்காரன்டா (ஊர் கெத்து) இன்னும் சில கட்டுரைகள் சம கால அரசியல் கோமாளிகளை வச்சுச் செய்யும் பகடி என்றால் மிகையில்லை.

காங்கிரஸ் குறித்த கட்டுரை, பெண்களைப் புனிதப்படுத்தி நடத்தும் கொடுமைகள் குறித்த கட்டுரை, ஆளுநர் பதவி குறித்த கட்டுரை, ஒட்டக அரசியல், பண மதிப்பிழப்பு  நாளை முட்டாளாக்கிய தினம் என்று கூறும் கட்டுரை, பிடல் குறித்த கட்டுரை, சகலமுமாகி விட்ட பூதம் பேசும் கார்ப்பொரேட்டு அரசியல் என நூலெங்கும் அரசியல்.

இந்த நூல் ஆமைக் கறிக்கு கை தட்டும் கூட்டத்திற்கு, ஊடக வெளிச்சத்தில் மின்னும் நடிகர்களுக்கு கொடி பிடிக்கும் கூட்டத்திற்கு, அடிமை அரசியலையும், மத்திய ஆதிக்க அரசியலையும் புரியாத திருட்டு திராவிடம் என்று பேசித் திரியும் கூட்டத்திற்கு உண்மை அரசியலை உணரும் வாய்ப்பு அளிக்கிறது. திராவிடத்தை வளர்த்தெடுக்கும் கடமை உள்ளதாக நினைப்பவர்களுக்கு பல்வேறு வரலாற்றுத் தகவுகளையும், பொது அரங்கில் பேசுவதற்கான காரண காரியங்களையும் உள்ளடக்கியுள்ளது இந்நூல்; மற்றும் கல்லூரி மாணவர்கள் முதற்கொண்டு வாக்களிக்கும் உரிமையை உடைய அனைத்து நபர்களும் வாசிக்கவேண்டிய நூல்.

வாழ்த்துகள் தோழர்.

Monday, 20 April 2020

ஆரண்யம் #கயல்

#ஆரண்யம்
கவிதைத் தொகுப்பு

Kayal S

கயல் தோழரின் ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் கவிதைத் தொகுப்பிற்குப் பின் நான் வாசிக்கும் அவரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு. கயல் தோழருக்கு  மூன்றாம் கவிதை தொகுப்பு.   கவிதைத் தொகுப்பின் தலைப்பிற்கு ஏற்ப காடும் காடு சார்ந்த சொற்களும் விரவிக் கிடக்கின்றன. மரங்கள், மலர்கள், பறவைகள், விலங்குகள், காடுகள், மழை, வானம், நிலம் என நாட்டைவிட்டு நாம் பார்க்க மறந்த அல்லது அழித்துத் தொலைத்த பகுதிகளுக்குள் அழைத்துச் செல்கிறது கவிதை.

கல்யாண்ஜி, என் லிங்குசாமி, இளையபாரதி ஆகிய ஆளுமைகள் நூல் குறித்து எழுதியிருக்கிறார்கள்.

கைகளில் ஏந்தி ரசிப்பதற்கு மலர் எவ்வளவு சுகந்தமாக இருக்குமோ அதேபோன்ற மலராக ஒவ்வொரு கவிதையும் நீளமாக இல்லாமல் கைகளில் எடுத்தது கண்களில் ஒற்றிக்கொண்டு இதயத்தில் பரவவிடும் சுகம் ஒவ்வொன்றிலும்...

முயலுக்கு உவமை சொல்லும் கவிதை ஒன்று. ஒரு வரி போதும் ஆனால் ஒவ்வொரு வரியையும் விடுகதையை கூறுவதுபோல கவித்துவம் படர அமைத்திருக்கிறார். மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். ஒவ்வொரு வரியை வாசிக்கும் பொழுதும் முயலினை கைவிரல்களால் தடவிக் கொடுக்கும் சுகம்
"மல்லிகைப் பூப் பந்து
தரை நடக்கும் மேகக்கூட்டம்
கரைக்கு வந்த கடல் நுரை
குறுகுறுவென பார்க்கும் பஞ்சுப்பொதி
துள்ளும் பனிக்கட்டி
சீனத்து வெண்பட்டு
பெயர் சொன்னாலே மனம் பூரிக்கும்
செல்ல முயல்..."

புத்தன் மட்டும்தான் புத்தனாக முடியுமா... போதிமரம் மட்டும்தான் புத்தனுக்கான மரமா... இல்லை இல்லை...
"கொப்பும் குலையுமாகப்
பூக்கள் காய்கனிகளோடு
தாய்மை தழும்ப நிற்கும்
ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து
அண்ணாந்து பார்த்தால்
எம் மனிதனும்
புத்தன்
எந்த மரமும்
போதி"
என்கிறார் கவிஞர்.

யானை ஒரு பெரிய விலங்கு. ஆனால் அதனை மனிதன் படுத்தும்பாடு என்பது சொல்லில் அடங்காதது. பெரிய விலங்கு எனினும் அதன் குழந்தைத் தன்மை போன்ற செயல்கள் காண்போரை பரவசப்படுத்தும். காடுகளின் வழியாக மனிதன் வசதியாக வாழ்தலின் பொருட்டு சாலைகள் அமைத்து காட்டு விலங்குகளின் வாழ்வை சுக்கு நூறாக்கிப் போட்டிருக்கிறான். சமீபத்தில் தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டதனால் ஏற்பட்ட காயத்தால் மெல்லமெல்ல அவ்விடத்தை காயங்களுடன் கடந்துசென்ற யானையின் முகம் ஒவ்வொரு யானை கவிதையை படிக்கும் பொழுது மனதிற்குள் வந்து செல்கிறது. இதோ யானை பற்றிய வலிமிகுந்த கவிதை ஒன்று...
"தன்னை
அண்ணாந்து பார்க்கும் சிறுமி
தவறவிட்ட தன் குட்டியை நினைவூட்ட, சுரக்கும் பால்மடி கனக்கத்
தள்ளாடியபடி ஆசீர்வதிக்கும்
கோயில் யானை"
குட்டியைப் பிரித்து அழைத்து வரப்பட்ட யானையின் கனவு வேறு என்னவாக இருக்கும்...?

இன்னொரு யானை(வலி)க் கவிதையில்...
கோடி சுடர் என நீர் தெறிக்க
புனலாடி குளித்திருந்த யானை
புரியாமல் பார்க்கிறது,
நகர் வந்த நாளாய்ப்
பாகன் தன்னை நீராட்டும்
ஓரங்கள் நசுங்கிய வாளியை..."
கோயில் கடவுள் யானை பாகன் வாளி அத்தனையையும் பொருத்திப் பார்க்கையில் கவிதையில் ஒளிந்திருக்கும் வலியைக் கண்டடையலாம்...

காடுகள்  ஒரு தனி உலகம். அதனை விடுத்து வெகு தூரமாக வீடுகள் இருக்கும். ஆனால் இன்று காடுகளை அழித்து விட்டு வீட்டின் ஓரமாக ஓரிரு மரங்களை மட்டும் வைத்துக்கொண்டு அதனைக் காடுகள் என்று கூறிக்கொண்டு வாழ்கிறோம். அப்பேர்ப்பட்ட மனிதர்களைச் சாடும் கவிதை...
"அத்தியூர்
அரசம்பட்டி
ஆலங்குளம்
இலுப்பையூர்
விளாத்திகுளம்
வேப்பங்குளம்
தாண்டிக்குடி
தாழையூத்து
என மரத்தின் பெயரால்
ஊர்களை அழைத்தவர்கள் நாம்
இன்றும் ஊர்ப் பெயர்களில்
மரங்கள் இருக்கிறதுதானே"
ஊரின் பெயரில் மட்டும் வைத்திருக்கிறோம் என்று சொன்னாலும், அல்லது ஊரின் பெயரிலிருந்தும் அப்பெயரையும் நீக்கிவிட்டோமா என்ற கோபத்தின் வெளிப்பாடு இது...

என்னதான் சரணாலயங்கள் அமைத்து அழிந்து வரும் விலங்கினங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும் அது தான் வாழ்ந்த ஆதிக் காடாக ஒருபோதும் விலங்குகளுக்கு அமைந்துவிடாது என்பதனை "ஆரத்தழுவி
முகமெங்கும் முத்தமிட்டு
குறுகுறுத்த கண்களில் லயித்து
மென்மையாய் காதுகள் வருடி
எவ்வளவு கொஞ்சியும்
வாழ்ந்திருந்த காட்டையே
வழிநெடுகத் தேடும்
என் முயல்குட்டி..." என்ற கவிதையின் வாயிலாக உணர்த்துகிறார் கவிஞர்.

காடு என்பது என்ன என்பதற்கு கவிஞர் கூறும் விளக்கத்தைப் பாருங்கள் "அழகின் உச்சம் மலர்கள்
அன்பின் உச்சம் காதல்
மொழியின் உச்சம் கவிதை
ஞானத்தின் உச்சம் மௌனம் இறைவனின் மிச்சம் காடு"
ஒவ்வொன்றிலும் சலித்தெடுத்துத் தேடிய பின் கிடைக்கும் ஒரு உச்சம் கூறிய பின் இறைவனில் சலித்தெடுத்த உச்சம் காடு என்கிறார் கவிஞர். எவ்வளவு ஆழ்ந்து யோசிக்க வேண்டிய வரி இது...

தொகுப்பிலிருந்து...

வைரப் புனலின் துகள்
விளக்கில்லா பலவண்ணக் கனல்
நிலாத்துண்டின் நகரும் அகல்
மின்னல் கொடியின் மலர்
வனமகள் மூக்குத்திச் சுடர்
இருள் எதிர்க்கும் கலகக்குரல்
கதிரிடம் களவாடிய சிறு பகல்...
மின்மினி!

மலர்
சருகு
ஒன்றே போல்
மடியேந்தும்
பூமி

எதிர்ப்பட்ட பின்
கடப்பது கடினம்
காதல்,
கடவுள்,
காடு

விற்று விட்ட மாந்தோப்புக்கு
அப்பா நள்ளிரவில் தடுமாறியபடி செல்ல
தயங்கித் தொடர்ந்த அம்மா மட்டுமே
அறிவாள்
ஒவ்வொரு மரத்தின் முன்னும்
அவர் விழுந்து மன்னிப்பு கேட்டதும்
பின் சாகும்வரை
மாம்பழத்தை உண்ணாமல்
வாழ்ந்ததும்...

இன்னும் இன்னும் பறவைகளாக, பூக்களாக, இயற்கையாக மின்னும் கவிதைகள் நிறைய நிறைய தொகுப்பில்...

வாசியுங்கள்
நாம் தொலைத்த காட்டிற்குள் பயணம் செய்யலாம்.
நாம் மீட்டெடுக்க வேண்டிய காடுகளை அடையாளம் கண்டுகொள்ளலாம்...

கவிதைப் பயணம் தொடரட்டும் சிறப்பாக...
வாழ்த்துகள் தோழர்.

யாழ் தண்விகா

Saturday, 18 April 2020

எனக்கு எதுவோ உனக்கும் அதுவே #இசைஞானி இளையராஜா

எனக்கு எதுவோ உனக்கும் அதுவே...

இசைஞானி இளையராஜா

குமுதம் பதிப்பகம்

இளையராஜா தனது ஆன்மீகக் கருத்துகளை கவிதை வடிவில் தந்திருக்கிறார். ஆன்மீகம் என்பது ஒரு சரணாகதி நிலை. மோன நிலை. பைத்திய நிலை. அந்நிலை உள்ளவர்கள் அசாதாரண நிலையை விரும்பும் சாதாரணன் போன்றிருப்பர். இளையராஜா அவ்வகைப்பட்டவர்.

ஆன்மீகத்திற்கும் எனக்கும் எப்போதும் ஆகாது என்பதற்கு ஆயிரம் காரணங்கள்.   ஆனால் நிம்மதியை, துன்பங்களை உண்டாக்குவது, நீக்குவது, இன்பம் அளிப்பது, மனம் ஒரு நிலைப்படுத்தும் சூழலை ஆன்மீகம் மட்டுமே உருவாக்குவதாக, அதை கடவுள் மட்டுமே உண்டாக்குவதாக கூறுவது ஆன்மீகத்தின் பெயரால் காலம் காலமாக கூறிவரப் படுகிறது. கடவுள் உனக்குள் தான் இருக்கிறார். அவரைத் தேடி நீ எங்கே செல்கிறாய், கடவுளை அடைய இன்பத்தை விட கண்ணீர் எளிய வழி என்று கூறுகிறார் இளையராஜா. இன்றைய உலகில் மட்டுமல்ல, ஆதி காலம் தொட்டு பசியால் அழுபவனின் கண்ணீர் கடவுளுக்கு சென்று சேர்கிறதா... தவறுகள் செய்பவன் தண்டனைக்கு எப்போதும் உள்ளாக்கப் பட்டிருக்கிறானா... கர்மம், பாவம், புண்ணியம் என்று பல கேள்விகள் ஆன்மீகம் தோற்றுவிக்கும். நம்பவியலாத பதில்களை கூறி மடை மாற்றும். இசையை உணர்ந்தவரின் வாக்கு, அவரின் இசை போல் சாந்தம் வடிய அமைந்திருக்கிறது. வாசிக்க வாசிக்க மனதினை நோக்கிய பல கேள்விகளைப் பூக்கச் செய்கிறது சொற்கள். அவரின் இயல்புத்துவம், அன்னை மூகாம்பிகை, ரமண மகரிஷி மேலான நம்பிக்கை அனைத்தும் சொற்களில் காணலாம். இசை குறித்துக் கூறும்போது
"இசை என்பது
புத்தி அல்ல
மனம் அல்ல
எண்ணம் அல்ல!
நாதம்-
நாதம் மட்டுமே!
என்கிறார்.

இளையராஜா குறித்தும் அவரின் ஆன்மீக எண்ணங்களும் பற்றி அறிந்துகொள்ள வாசிக்கலாம்.

"கர்மம் செய்கிறேன் என எண்ணாதே
உன் தேகமே அதைச் செய்கிறது
நீ அப்படியே இருக்கிறாய்!
செயலுக்கு அப்பால் நீ இருக்கிறாய்
என்ற தொடர்பினால் தான்
செயலே நடக்கிறது..."

வாழ்த்துகள் இசைஞானி இளையராஜா...

யாழ் தண்விகா

யா ஒ #சிவசங்கர் எஸ் ஜே

யா - ஒ
மறைக்கப்பட்ட மார்க்கம்

#சிவசங்கர்_எஸ்_ஜே

வெற்றிமொழி வெளியீட்டகம்
திண்டுக்கல்

 128பக்கங்கள்

திருச்சாணரத்து மலையின் சமணப்பள்ளி பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை தாக்குப் பிடித்து இருக்கிறது. அதில் பயின்று பின் அதனின்றும் வெளியேறிய யா ஒ ஆசான் உண்டாக்கிய மார்க்கம் பேசிய 108 உரையாடல்களை இந்நூலில் கூறியுள்ளார் ஆசிரியர். குரு சீடர் இவர்களுக்கிடையே நிகழும் உரையாடல் வாசிக்க எளிமையாக, புரிந்துகொள்ளும் விதமாக, கொஞ்சம் வாழ்வின் உள் அர்த்தங்களை உணரவும் வாய்ப்பளிக்கிறது. ஆசீவகம், பௌத்த கருத்துகள் இந்த உரையாடலில் தொக்கி நிற்பதாக ஆய்வுக் குழுவினர் கூறியதாக நூலாசிரியர் கூறுகிறார். நூலில் கடைபிடிக்க இயலாத விசயங்கள் என்று எதைக் கூறியும் வாசிப்போரை சிரமத்திற்கு மார்க்கமும், நூலாசிரியரின் உரையும் ஆளாக்கவில்லை என்பது பெரு மகிழ்வான ஒன்று.

ஒவ்வொரு உரையாடலையும் ஒவ்வொரு ஓவியத்தின் மூலமாக சிறப்பாக்கித் தந்திருக்கிறார் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் தோழர்.

மார்க்க கடலில் ஒரு துளி:

#சுயம்

இது தனியே உங்களுக்கெனக் கொண்டு வந்திருக்கிறேன் என்றபடி மரத்தின் முதல் கள்ளை முன்னே வைத்தான் யாவா(சீடன்)

ஆஹா என்றவாறே ரசித்து ருசித்த ஆசான் (யா ஒ) யாவாவை ஏதேனும் கேட்கும்படி சைகை செய்தார்

உண்மையில் தனித்துவம் என்பதுதான் என்ன ஆசானே

அது மழையில் கரையாத சாயம் யாவா

வாழ்த்துகள் தோழர் சிவசங்கர்
தோழர் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்...

யாழ் தண்விகா

மஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும் #பா.ஜெய்கணேஷ்

மஞ்சள் வெயிலும்
மாயச் சிறுமியும்
#கவிதைத்தொகுப்பு

 Jai Ganesh தோழர்

96பக்கங்கள்

பரிசல் வெளியீடு
சென்னை

கவிதை என்பது எழுத்து வடிவிலான குறும்படம். கவிதையை இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வரையறையை இப்போதெல்லாம் நேரடியாகக் கூறிவிட முடிவதில்லை. புதுப்புது முயற்சிகள், புதுப்புது வடிவங்கள், புதுப்புது கோணங்கள், புதுப்புது சொல்லாடல்கள் என தனது பயணத்தை விரிவுபடுத்திக்கொண்டே செல்கிறது கவிதை இத்தொகுப்பு SRM அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் புலத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றிவரும் ஜெய்கணேஷ் தோழரின் முதல் கவிதைத் தொகுப்பு.

தான் காணும் ஒவ்வொரு உலகம் குறித்தும் பல பக்கத்தில் தன் பார்வைக் கோணத்தைச் செலுத்தும் வல்லமை இவர் தன் கவிதைகளில் காணக் கிடைக்கிறது. வெயில் என்றால் வெயிலால் காய்ந்துவிடும் கடைசி மண் துகள் வரை இவரின் சொற்களில் வந்து விடுகிறது. மழை என்றால் நனைந்து தன்னைக் குழைத்துக்கொள்ளும் ஈரம் இறங்கும் ஆழம் வரை இவரின் எழுத்து இறங்குகிறது. தொல் விளையாட்டுகள், பாரம்பரியம் குறித்துப் பேசினால் அது புழக்கத்தில் விட்டு மறைந்து போனதன் உள்ளார்ந்த வலியை இவரின் எழுத்துகள் பதியம் போடுகிறது. அதுபோல் தான் ஒவ்வொரு கூறையும் காட்சிக் கவிதையாக்கியுள்ளார். 

தனிமையின் நினைவுகள் கவிதையில்
தனிமையைக் கூறும் வித வலி இப்படியாக...
"நெடுந்தூரப் பயணத்தில்
நிராதரவற்று நிற்கும்
பயணியைப் போல

சுற்றிலும் அடர்ந்த மரங்கள் இருந்தும்
பார்வையற்ற ஒரு பறவையைப் போல

இருண்ட வானத்தின் எல்லையற்ற ஓசையில்
கரைந்துபோன
ஒரு குருவியின் குரலைப் போலத்தான்
என் தனிமையும்..."
தனிமையையும் கவியால் வாழ வைத்துள்ளார்.

நீரற்ற நதித் தடங்கள் கவிதையில் இல்லாமல் போய்விட்ட நதிகளைக் குறித்து கூறுகையில்
"நீரற்ற நதிக்கு மேலாக
கட்டப்பட்ட பாலத்திலிருந்து
சிறுவர்கள் எச்சில் துப்பு
விளையாட்டின் வழி
நதியொன்றை ஓட விடுகின்றனர்

மழையற்ற வானம்
தன் இயலாமையினால்
வெயிலை உமிழ்ந்து தள்ளுகிறது

ஈரமற்ற நதி
மௌனத்தில் உறைந்து கிடக்கிறது"
என்பதாக முடிக்கிறார். காணாமல் போன வாழ்வை கண்ணீரோடு வாசிக்க வைக்கும் வரிகள்.

மாயச் சிறுமியும் மஞ்சள் மலர்களும்,
மஞ்சள் நிற யானை உள்ளிட்ட கவிதைகள் புனைவின் உலகத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன. யாழின் இசையில் கவிதைக்குள் இலக்கணத்தின் கருப்பொருட்கள் யாவும் தஞ்சம் அடைந்துள்ளன.

நகர்தலில் உடைகிறது பொழுது கவிதை அறிவியலை பகடி செய்கிறது புதிய கோணத்தில்...
"நடு சாலையில்
அடிபட்டுக் கிடக்கிறது
நாயொன்று.

இரயில் பாதையில்
மரித்துக் கிடக்கிறது
யானையொன்று.

மின்சாரக் கம்பியில்
தொங்கிக் கிடக்கிறது
காகம் ஒன்று.

செல்போன் கோபுரங்களில்
தொலைந்து போகிறது
குருவிக் கூட்டமொன்று.

உங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளில்
ஒவ்வொரு நொடியும்
உருக்குலைந்து போகிறது
ஏதோ ஒரு உயிரினமொன்று..."
இயல்பான வரிகளில் செயற்கை உண்டாக்கிய அதிர்ச்சியை இப்படியெல்லாம் கூறலாமோ என வியக்க வைக்கிறார்.

பெரும்பாலான கவிதைகள் இயற்கையைக் கருப்பொருளாகக் கொண்டிருக்கிறது. பல கவிதைகள் சுயத்தைக் குறி வைக்கின்றன. நீட்டி முழக்கும் வித்தையைத் தவிர்த்து கருவின் திசையெங்கும் தான் அறிந்த சொற்களின் நளினத்தைப் படரவிட்டிருக்கிறார் என்று தான் கூறவேண்டும். இன்னும் பல உயரங்களை கவிதை உலகம் தங்களுக்கு அளிக்கும் என்ற நம்பிக்கை பெருக்கெடுக்கிறது. தொடருங்கள் தோழர். வாழ்த்துகள்.

யாழ் தண்விகா

செங்கிஸ்கான் #முகில்

செங்கிஸ்கான்

முகில்

கிழக்கு பதிப்பகம்

184 பக்கங்கள்

#மெர்கிட் என்ற மங்கோலிய இனத்தை சேர்ந்த சிலுடுவின் மனைவியான ஹோலுன் என்பவரை #போர்ஜிகின் இனக்குழுவைச் சேர்ந்த யெசுகெய் என்பவர் கவர்ந்து சென்று மணம் முடிக்கிறார். அவர்களுக்குப் பிறந்த குழந்தையே டெமுஜின். செங்கிஸ்கானின் நிஜப்பெயர் டெமுஜின். #டட்டார் இனக் குழுவின் தலைவன் பெயர் டெமுஜின் முந்தைய நாளில் போரிட்டு வென்ற எதிரி குழுவின் தலைவன் பெயர் அது. இப்படி மங்கோலிய இனத்திற்குள் ஏகப்பட்ட இனக்குழுக்கள் பிரிந்து பிரிந்து வாழ்ந்த காலகட்டம். அவர்களில் ஒவ்வொருவரும் தங்கள் இனக்குழுக்களை வலுப்படுத்த பிற இனக் குழுக்களுடன் போரிட்டு அவர்கள் வைத்திருக்கக்கூடிய குதிரைகளை கால்நடைகளை பெண்களை அபகரித்துக் கொண்டு வந்து தங்கள் இனக்குழுக்களை வலுப்படுத்திக் கொள்ளும் வழக்கம் அல்லது அவர்களை அடிமைப் படுத்திக் கொள்ளும் வழக்கம் அவ்வப்போது தொடர்ந்து கொண்டே வந்திருக்கிறது.

மங்கோலிய நாடோடிகளைத் தடுக்கவே சீனர்கள் தடுப்புச் சுவரைக் கட்டினார்கள். கோடை, குளிர், வசந்த காலம் என்று ஒவ்வொரு காலத்திற்கும் குடியிருக்கும் நிலத்தை மாற்றிக்கொண்டே இருப்பார்கள் மங்கோலியர். ஒன்பது வயதில் டெமுஜினுக்கு பொருத்தமான பெண்ணை நிச்சயம் செய்வதற்காக தந்தையுடன் பாதுகாவலர்கள் சிலருடன் கிளம்புகிறார். போர்ட்டெ என்ற பெண்ணை நிச்சயம் செய்கிறார்கள். டெமுஜின் மணப்பெண் சேவைக்காக அங்கேயே தங்கி தந்தை தனது இருப்பிடம் நோக்கி வரும் வழியில் பிற இனக்குழு ஒன்றில் வாங்கி உண்ட விச பாலால் கொல்லப்படுகிறார்.

குடும்பத்தின் சுமை டெமுஜின் மேல் விழுகிறது. சில காலங்களுக்கு பின்னால் அவனுக்கு அறிமுகமாகும் நட்பு ஜமுக்கா. இவன் மூலம் நட்பு வளரும் அதே சூழலில் மங்கோலிய இனம் அனைத்தையும் ஒன்று சேர்க்கவேண்டும் என்ற லட்சியமும் பூக்கிறது இருவருக்கும். ஜமுக்கா #ஜடாரன் இனக்குழுவினர்.

#டாய்சூட் இனக்குழுவிடம் ஒருமுறை சிக்கிக்கொண்ட டெமுஜின் பல போராட்டத்திற்குப் பின் அங்கிருந்து தப்பித்து வருகிறான். திருடர்களால் தனது இடத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட குதிரைகளை மீட்கச் சென்று வெற்றியோடு டெமுஜின் திரும்புகிறான். 16வயதில் போர்ட்டே உடன் திருமணம். தேனிலவின் போது எதிர்பாரா தாக்குதலால் போர்ட்டே எதிரி குழுவால் கடத்தப்படுகிறாள். அவளை மீட்க #கெரியிட் குழு தலைவன் ஆங் கானிடத்தில் உதவி கேட்டு மனைவியை மீட்க செல்கிறான். சில மாதங்கள் ஆன சூழலில் அங்கு சிறு போருக்குப் பின் போர்ட்டேவைக் காண்கிறான். ஆனால் அவள் எதிரிக் குழு நபரால் கர்ப்பம் ஆன நிலையில். ஆனாலும் அழைத்து வருகிறான். ஆண் குழந்தை பிறக்கிறது.

தொடர்ந்து சிறு சிறு படையெடுப்புகள். அனைத்திலும் வெற்றி. இனக்குழுக்கள் சமரசத்தின் மூலம், போரின் மூலம் இணைக்கப்படுதல். இடையே ஜமுக்கா தான் தான் மங்கோலியப் பேரரசின் தலைவனாக இருக்கவேண்டும் என்ற ஆசை. ஆங் கான் ஒரு புறம். இவர்களை எவ்வாறு வென்றான், மங்கோலியப் பேரரசு செங்கிஸ்கான் அமைத்த பின்னர் உலகை வெல்லும் வாய்ப்பு எப்படி எவ்வளவு தூரம் வந்தது, இந்தியாவுக்குள் ஏன் ஊடுருவ முடியவில்லை என்பதை அருமையாக எழுத்தால் காட்சிப்படுத்தியுள்ளார் முகில்.  ஐரோப்பா மற்றும் ஆசியாவில் வாழும் இருநூறில் ஒருவர் செங்கிஸ்கானின் பரம்பரை என்று மரபணு சோதனை சொல்கிறது. சேர சோழ பாண்டிய பரம்பரை என்று சொல்லிக்கொள்வது போல செங்கிஸ் பரம்பரையாகவும் நம்மில் ஒருவர் இருக்கலாம். வாசிக்க வாசிக்க கண்முன் ஒரு திரைப்படம் பார்க்கும் பிரமிப்பு.

வாழ்த்துகள் தோழர் #முகில்.

Wednesday, 15 April 2020

முழு விடுதலைக்கான வழி # டாக்டர் அம்பேத்கர்

முழு விடுதலைக்கான வழி

டாக்டர் அம்பேத்கர்

தலித் முரசு  வெளியீடு
சென்னை.

மத மாற்றம் செய்வதற்கு முன்னால் ஒடுக்கப்பட்ட மக்களைத் திரட்டி அவர்களிடம் மத மாற்றத்தின் தேவை குறித்த கருத்தைக் கொண்டுசேர்க்கும் விதமாக அவர்களின் கருத்தை அறியும் முகமாக அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய மாபெரும் உரை.

தீண்டத்தகாதவன் என்பவன் மேல் பரிவு, சமத்துவம், சுதந்திரம் இப்படி எதையும் அளிக்காத இந்து மதம் அவசியமா... சாதி என்பது இல்லாத இந்து மதம் என்பது ஒரு காலமும் சாத்தியமில்லை. அப்படியிருக்க காலமெல்லாம் அடிமையாக, சாதி இந்துக்களின் ஏவலாளாக எதற்கு இருக்கவேண்டும்? இந்து மதம் பொருளாதார நன்மையை அளிக்கிறதா? சாதி இந்துக்களுக்கும் தீண்டத்தகாதவனுக்கும் இழைக்கப்படும் கொடுமைகள் ஒரே வகைப்பட்டதா? மானுட சிந்தனைக்கு இந்து மதம் மதிப்பளிக்கிறதா? ஹரிஜன் என்ற சொல்  இழிவைப் போக்கிவிட்டதா? இந்து மதத்தை எதிர்த்து மகாத்மா காந்தியால் சத்தியாக்கிரகம் இருக்க முடியுமா? முன்னோர்கள் பின்பற்றிய அதே இந்து மதத்தை அப்படியே காலம் காலமாக தொடரத்தான் வேண்டுமா... எந்த மதம் என்று தீர்மானிக்க மக்களுக்கே உரிமை. ஆனால் எப்பொழுது? எத்தனை பேர் மதமாற்ற மக்கள் திரளில் பங்கேற்பது...
என்பது போன்ற பல கேள்விகளுக்கான பதில்களை முன்வைத்து அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய உரை. இன்றைய காலகட்டம் வரை அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுக்கப்பட்ட கேள்விகள் அப்படியே தான் இருக்கின்றன. மத மாற்றம் என்றவுடன் அதைத் தடுக்கும் வண்ணம் முன் வந்து நின்று அதைத் தடுக்க நினைக்கும் இந்து மத சீர்த்திருத்தவாதிகளிடம் அம்பேத்கர் கேட்ட கேள்விகளும் அப்படியேதான் நிற்கின்றன. 85 ஆண்டுகள் கடந்துவிட்டன பதில்கள் இல்லை. மாறாக இன்னும் தீவிரத் தன்மையுடன் ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கிய இந்து மதத்தின் கொடுங்கரங்கள் நீண்டபடிதான் இருக்கின்றன.

தலித் முரசு, பதிப்புரையில் கூறிய கடைசி வார்த்தை அம்பேத்கரின் உரையை ஒற்றை வார்த்தையில் நிறைவு செய்து வைக்கிறது
"கீழ் வெண்மணிகளை விவாதிப்பதற்குப் பதில் அவற்றைத் தடுக்கும் மீனாட்சிபுரங்களை விவாதிக்கத் தொடங்குங்கள்"

முற்போக்கு சக்திகள் வாசிக்க வேண்டிய புத்தகம். பிற்போக்கு சக்திகளிடம்  கொண்டு சேர்க்கவேண்டிய புத்தகமும் கூட.

யாழ் தண்விகா