Thursday, 1 July 2021

மழைக்கு இதமாய் ஒரு மழை

 மழைக்கு இதமாய் ஒரு மழை


கவிதைத் தொகுப்பு


துஷ்யந்த் சரவணராஜ்

Dushyanthsaravanaraj


வெற்றிமொழி வெளியீட்டகம்

Vetrimozhi Veliyeetagam


பக்கங்கள் 64, விலை ரூ.60


கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை.

“புத்தகங்களே புத்தகங்களே

தயவுசெய்து குழந்தைகளைக்

கிழித்துவிடாதீர்கள்”


மழையை குடை வைத்து ரசிப்பவர்கள் தானே நாம். அப்படியானால் நாம் குழந்தைகளை குழந்தையாக வளர விடுவதற்கு தயாராக இல்லாதவர்கள்தானே. 


மழைக்கு இதமாய் ஒரு மழை. மழை நேரம் எதை விரும்பும் உடலும் உயிரும்? ஒரு தேநீர்? ஒரு கவிதை? ஒரு முத்தம்? கொஞ்சம் நெருப்பு வாசம்? கொஞ்சம் கட்டியணைப்பு? காதல் ஜீவனின் ஸ்பரிசம்? கைகள் இரண்டையும் உரசி கன்னங்களில் தனக்குத் தானே வைத்து மென் சூடினை ரசிக்கும் தருணம்? எது வேண்டும் மழைக்கு இதமாக...? எதுவும் வேண்டாம் மழைக்கு இதமாய் இன்னுமொரு மழை. கவிதைத் தொகுப்பின் தலைப்பே ஒரு கவிதையாக. மழைக்கு இதமாக அந்த இன்னொரு மழை இத்தொகுப்பெங்கும் விரவிக் கிடக்கிறது குழந்தைமை கொண்டாடும் கவிதைகளாக.


ஒரு குடும்பத்தின் பேரன்பு மிளிரக் காண்கிறேன் இத்தொகுப்பில். மகன் துஷ்யந்த், மகள் சம்யுக்தா, மனைவி ராஜலட்சுமி மற்றும் கவிஞர், இன்னும் சில குழந்தைகள் உலாவும் அன்புத் தோட்டம் இத்தொகுப்பு. 

“நின்னைப் பிரிந்திருக்கும் 

நீளமான இரவை 

என்ன செய்வது மகளே?

உருட்டித் தருகிறேன் 

உதைத்து விளையாடு”


“வார விடுமுறையில் 

வந்து போகிற

அப்பனுக்கு மட்டுமே தெரியும்

ஒரு முத்தத்தின் எடை”

தந்தையோ தாயோ குழந்தைகளை விட்டு பணி நிமித்தம் வெளியூரில் தங்கி, வார விடுமுறைக்கு வீடு வரும் சூழலில் பூத்த கவிதைகள் இவை. ஒரு குழந்தையாக என் தந்தை இந்த வலிகளை, பூரிப்பை அனுபவித்திருக்கிறார். ஒரு தந்தையாக நானும் இதே உணர்வுகளை அனுபவித்திருக்கிறேன். நீளமான இரவு என்னும் சொல்லும் முத்தத்தின் எடை என்னும் சொல்லும் காதலுக்கு மட்டுமா சொந்தம்... குழந்தைகள் இருக்கிறார்கள் கவிதையில். ஆனால் உணர்வைச் சுமந்து கவிதையைத் தூக்கி நிறுத்துகிறது பெற்ற பாசம். அருமை கவிஞரே.


“பணத்தைக் கட்டிப் 

பள்ளியில் சேர்த்துவிட்டு

அடைக்கப்பட்ட

கதவுகளுக்குப் பின்னே

காத்துக்கிடக்கிறோம்

பிணை எடுக்க வந்தவர் போல...” 


“கம்பி ஜன்னலிட்ட

பேருந்தின் உள்ளிருந்து

கைகாட்டும் 

குழந்தையின் முகத்தில்

சிறைவாசியின் சோகம்”

முழு நேரமும் எந்தத் தகப்பனும் தன்னுடைய குழந்தையை அருகிலிருந்தே பராமரித்திருக்கப் போவதில்லை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னால். ஆனால் தன்னுடைய குழந்தையைப் பள்ளியில் சேர்த்துவிட்டு முதன்முதலாக வீடு திரும்பும் / பணிக்குச் செல்லும் தந்தை முகங்களைப் பார்த்தால் தெரியும் தாய்மையின் முழுச் சாயலை. எதையோ பறிகொடுத்ததைப் போல முகம், கண்ணோரமாகச் சிறிது கண்ணீருடன். இங்கு இந்தக் கவிதை வேறொரு ஏக்கத்தைச் சொல்லி மனம் கனக்க வைக்கிறது.


குழந்தைகள் உள்ள வீடு கிறுக்கல்கள் நிறைந்திருக்க வேண்டும். வைத்தது வைத்த இடத்தில், கிறுக்கல்கள் இல்லாமல், சத்தம் இல்லாமல் இருப்பது குழந்தைமையைத் தொலைத்ததன் அடையாளம் அன்றி வேறில்லை. இப்படிப்பட்ட அடையாள அழிப்பை வகுப்பறைகள் கச்சிதமாக நிறைவேற்றி வைக்கின்றன. அதனைக் கவிஞர் பின்வருமாறு சாடுகிறார்.

பார்க்காதே 

என்கிறீர்!

பேசாதே

என்கிறீர்! 

திரும்பாதே 

என்கிறீர்!

தூங்காதே 

என்கிறீர்! 

நிற்காதே

என்கிறீர்! 

நிமிராதே

என்கிறீர்!


அய்யோ அய்யோ


வைத்தது 

வைத்தபடி இருக்கக்

கொலுமண்டபமா

வகுப்பறை?

கவிதையின் இடையில் வரும் அய்யோ அய்யோ என்ற சொல்லானது குழந்தையின் மேலுள்ள நேசம் என்றும் கொள்ளலாம். குழந்தைகளை எதற்காக இப்படி வதைக்கிறீர் என்றும் கொள்ளலாம். குழந்தைகளே நடப்பதைப் பார்த்துக் கொந்தளித்துச் சொல்லும் சொல் எனவும் கொள்ளலாம். 


விடுமுறை என்பது பெரும்பாலும் குழந்தைகளுக்கு சனி, ஞாயிறு தான். அவை அவர்களுக்குத் திருவிழா நாட்கள் தான். இதை சம்பளம் பெரும் மனிதனோடு ஒப்பிட்டுக் கூறுகிறார் கவிஞர் இப்படி.

“சனிக்கிழமையைச்

சம்பள நாளாகவும்

ஞாயிற்றுக் கிழமையை

மாதக் கடைசியாகவும்

செலவழிக்கிறார்கள் 

குழந்தைகள்”


“வெள்ளிக்கிழமை

பள்ளி சென்று திரும்பும்

பிள்ளைகளின் முகத்தில்

பளபளக்கிறது

சனி ஞாயிறு வாங்கி வரும் 

சந்தோசம்”

முதல் நாள் கொண்டாட்டம். இரண்டாம் நாள் வேதனை. காரணம் மறுநாள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இப்படியெல்லாம் குழந்தைகளைப் பாடுபடுத்துகிறது. அந்த நாட்களில் தான் ஓய்வில்லாத அளவிற்கு பள்ளிக்கூடம் வீட்டுப்பாடங்களை மிகக் கூடுதலாக வழங்கி குழந்தைகளின் மகிழ்ச்சியைக் காவு வாங்குகிறது. 


குழந்தைப் பேறு இல்லாததன் வலியைச் சில கவிதைகள் சுட்டுகின்றன. சில கவிதைகள். குழந்தைகளைக் கொஞ்சும் கணவனின் அன்புக்கு ஏங்கும் மனைவியின் காதலைச் சில கவிதைகள் சொல்கின்றன. சில குழந்தைகளின் பேரன்பில் மகிழும் தந்தையின் பெருமிதத்தைக் காட்டுகின்றன. சில கவிதைகள் இள வயது வறுமையைப் பேசுகின்றன. சில அவர்களின் செல்லச் சேட்டைகளைக் கண்டு ரசிக்கின்றன. 


“மாற்றி யோசிப்போம்...


திருவிளையாடல் என்பது

தெய்வங்களின் குறும்பு!


குறும்பென்பது

குழந்தைகளின் திருவிளையாடல்!”


மழைக்கு இதமாய் ஒரு மழை

ஒரு தந்தை கவிஞனாகி வடித்த

கவிதை விளையாடல்.


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா


Tuesday, 29 June 2021

மெல்ல எரியும் இரவு

 மெல்ல எரியும் இரவு

--------------------------------


மெல்ல எரியும் இரவினில் யாரோ ஒருவர் உங்கள் கைபிடித்து அழைத்து செல்கிறார். நீங்களும் அவரின் பின்னால் எவ்வித பிரக்ஞையற்று உடன் செல்கிறீர். நேரம் ஆக ஆக அவரோடு உரையாடத் தொடங்குகிறீர். கட்டிப்பிடிக்கிறீர். ஒரே மேசையின் எதிரெதிரே அமர்ந்து நிதானித்து தேநீர் அருந்தத் தொடங்குகிறீர். ஒவ்வொரு மிடறு உள் செல்லும்போதும் இன்னும் நெருக்கமாகிறீர். முடிவில் முதலில் அறியவேண்டிய கேள்வியை கேட்கிறீர்... உங்கள் பெயரை அறிந்து கொள்ளலாமா...?


'''இளையபாரதி''' என்கிறார் அவர்.


இரவின் கண்களுக்குள் சிக்கியுள்ள வாதைகளை

வார்த்தைகளில் நெய்திருக்கிறார் கவிதைகளாக. இரவின் வண்ணங்களாக புது கோலமிடுகின்றன அவை. 

ஆங்காங்கே தேவதை எட்டிபார்க்கிறாள் காதல் வடிவில். அவளும் இரவின் ஏதோ ஒரு மூலையில் சிக்கிக்கொள்பவளாகவே இருக்கிறாள். இருப்பினும் இளையபாரதியின் இரவுக்குள் சூரியனின்றிப் பூத்திருக்கும் மலர்கள் ஏராளம். சூரியனாக பிரகாசிக்கின்றன மலர்கள்.


மழையை இன்னும் எத்தனை காலம் எழுதுவது என்ற எண்ணத்தை இப்படியெல்லாம் எழுதலாம் என உடைத்தெறிகிறார் இளையபாரதி...,  

""ஒவ்வொன்றாய் 

  கழன்று விழுந்தன

  துளி பூமிகள்""...

என்று மரங்களில் தூளியாடும் மழைத்துளிகளை கூறும்போது மழைக்கப்பாலான மரங்களை இனி உலுக்குதல் பாவம் என்பதுபோல் அதிரவைக்கிறார்.


ஒரு குடும்பத்தின் வாசனையை உணர்வீர்கள் 

பூனையின் பாதம் கொண்டு பக்கங்களின் வழியே  மெல்ல பயணித்து செல்லும்போது...

அந்த குழந்தை 

அந்த காதல்

அந்த ஊடல்

அந்த தந்தை 

அந்த இரவு 

அந்த தனிமை

அந்த தெருவின் அழகி 

இப்படி அனைத்தையும் உணரலாம் நம் இரவின் வழியாக உணர்பவற்றை இந்த கவிதைகள் வாயிலாகவும்...


""சிலர் தலைக்குமேல் 

  சிலர் பாதங்கள்

  நடமாடும் அடுக்குகளில்


  ஒருவீட்டின்மேல் 

  இன்னொரு வீடு


  எப்படிச் சொல்ல 

  இது எங்கள் வீடு""அபார்ட்மெண்ட் வீட்டின் அவலத்தினை உள்ளூரத் தொனிக்கும் கவிதை... அத்தோடு நடுத்தர மக்களின் வாழ்க்கையின்மீது வீசப்படும் பகடியெனவும் கொள்ளலாம் இதனை...


''எழுத்தல்ல ஆயுதம்''

தன் எழுத்தின் கூர்மை

தன் பயணம் எதை நோக்கியது 

என்றும் குறிபிட்டதொரு கவிதை...

கூர்மையை எரியும் இரவினில் மட்டுமல்லாது

இன்னும் கூடுதலான பொழுதுகள் அனைத்திலும் 

செலுத்தும் வீரியம் இருக்கிறது கவிஞரிடம்...

செலுத்துவார் என்ற நம்பிக்கையிருக்கிறது...


""தம்பி சாப்பிடலாம்..."" 

கவிஞரின் தந்தை கூறுவதுபோல 

ஒரு கவிதையில்...

கவிதை ஆர்வலர்களே...

இரவினை உணர 

""மெல்ல எரியும் இரவு""

சாப்பிட்டாகவேண்டிய உணவு...


வாழ்த்துகள் 

கவிஞர் இளையபாரதி Elayabharathi Elancheran அவர்களே...!


யாழ் தண்விகா






Friday, 5 March 2021

சந்தித்த வேளை

 ❤️

நினைப்பாகவே இருக்கிறது

பார்த்த நாட்கள்.

நேரில் எப்போது காண்போம்...


❤️

கைகள் கோர்த்து

அவ்வப்போது முகம் பார்த்து

புன்னகை சிந்தி

இயற்கையின் சாட்சியாக

நடந்து திரும்பிவிட்டோம்


இப்போது போய் பார்த்தாலும்

அங்கு நாம் நடந்து கொண்டிருப்போம்


❤️

உனது விருப்பத்தை நீயும்

எனது விருப்பத்தை நானும்

நிறைவேற்றித் தருதல் தான்

முதல் காதல்


❤️

கைகள் விரித்து

காற்றில் சுழன்று

சுற்றி நின்றாய்


காதல் சுழி பூத்தது

அவ்விடம்.


❤️

நீயென்

தேகம் சாய்ந்த இடமெங்கும்

பொன்னிறத் தேமல்...


❤️

முத்தம் தவறென்பாய்

முத்தம் சுகமென்பாய்

முத்தம் காதலென்பாய்

முத்தம் காமமென்பாய்

முத்தம் ஏழாம் சுவையென்பாய்


எல்லாவற்றிற்கும்

தகுதிப் படுத்தித் தன்னை வெளிக்காட்டச் செய்யும்

அவ்விதழ்கள் பார்த்தறிதல்

வரமன்றி வேறென்ன...


❤️

இப்படியே வாழ்ந்திட முடியாது

அவ்வப்போது வந்து

அருகே இருப்பதே தொலைவிலிருப்பது போலிருக்கிறது


நீ தொலைவில்தானிருக்கிறாய்

எப்படி வாழ முடியும்...


❤️

உன் இதயத்தில் நான்

இருக்கிறேனோ இல்லையோ

உனக்காக என் இதயம் துடிக்கும்

என்றாய்


நீ வரும் முன்

இதயம் எனக்கெதற்கு

இருந்திருக்கப் போகிறது


வந்த பின்

அது தனியே துடித்து

என்ன செய்யப் போகிறது


நான் உனக்குள்

நீந்திக் கொண்டிருக்கிறேன்


காதல் நீர் வற்றாது

எனக்குப் புகட்டு.

போதும்.


❤️

கவிதையாகப் பேசுவாய்

கவிதையாகப் பேசும் வாய்

கவிதை பேசும் வாய்

கவிதை வாய்


இப்போ உனக்கு என்ன வேணும்


வாயைப் பாராட்டிய கவிதை என்பதால்

வாய்தா வாங்கிக் கொள்ளாமல்

முத்தம் தரவேண்டும்

நான் வேண்டும் மட்டும்

உன் வாயில்

வாய் தா...


ம்ஹும் நீயிருக்கும் வெறிக்கு

லாக்கப் டெத் ஆக்கிடுவ வாயை.

கன்னத்தில் முத்தமிட்டுக்கோ


ஒன்னும் வேணாம் 

நல்லாருடி

என்னிக்காவது ஒருநாள்

சிக்காமலா போயிடுவ...


❤️

உன்/என் மடி உறக்கம்

உன்/என் கன்னத்தில் முத்தம்

உன்/என் பார்வை என்/உன் மேல் படிதல்

உன்/என் புன்னகை

உன்/என் பேச்சு

உன்/என் விரல் கோர்ப்பு

உன்னுடன்/என்னுடன் நடை

உன்னுடன்/என்னுடன் பயணம்

உன்னுடன்/என்னுடன் பசியாறல்

உன்னுடன்/என்னுடன் கவியாடல்

இப்படிப் பல நிகழ்வுகள்

சந்திப்பில்.

நிகழ்வுகளை சுவாரசியம் செய்ய

காதலை அடுத்த கட்டம் நோக்கி

இழுத்துச் செல்ல

வா

காத்திருக்க நேரமில்லை

அடுத்த சந்திப்பிற்குடனே...


யாழ் தண்விகா



Thursday, 18 February 2021

இறுதி இரவு #சி சரவண கார்த்திகேயன்

இறுதி இரவு

Saravanakarthikeyan Chinnadurai

உயிர்மை பதிப்பகம்

நல்லிரவு 12 மணியைப் போல தற்செயலாக வாசிக்கத் தொடங்குகிறேன் இறுதி இரவு என்னும் சிறுகதைத் தொகுப்பு நூலினை. தலைப்புச் சிறுகதையை வாசிக்கிறேன். முதல் வரியே சுவாரசியம் பற்றிக்கொண்டது ஒவ்வொரு பத்தியும் எதிர்பார்ப்பை கூட்டிக்கொண்டே செல்லுகிறது கன்னிப்பெண் பிணம் என்பது குறித்தும் அதனைப் புணர்வது குறித்தும் இலக்கியக் கூட்டமொன்றில் கேட்டிருக்கிறேன் தோழர் முத்து நாகு எழுதிய சுளுந்தீ நாவல் குறித்து நடைபெற்ற கூட்டம் என்று நினைக்கிறேன்
அந்த தரவுகளை கேள்விப்படும் பொழுது அவ்வளவு ஆச்சரியம் இருந்தது. கூட்டம் முடிந்து வெளியில் வரும் பொழுது ஏனோ, நானே ஒரு வெங்கம் பய என்று சொல்லி புஹா ஹா ஹா ஹா என்று சிரிக்கும் சீமான் குரல் மனதில் வந்து போனது. வெங்கம்பய என்பது ஒன்றும் அற்றவன் என்ற அர்த்தம் மட்டும்தானா? அந்த அர்த்தத்தின் பின்னுள்ள வலி எப்படியிருக்கும்?
என்பது சீமான் போன்றோருக்கு ஏன் தோன்றவில்லை. அன்று தோன்றியது. ஒரு பிணம் குளிப்பாட்டுதலும் சடங்கு சம்பிரதாயம் செய்தலும் கன்னிப்பெண் பிணம் குளிப்பாட்டி சடங்கு சம்பிரதாயம் செய்தலும் ஒன்றாக இல்லை இக்கதையில். தான் கேள்விப்பட்ட ஒன்றிலிருந்து எழுதத் தொடங்கியதாக ஆசிரியர் கூறுகிறார். அப்படித் தோன்றாத வண்ணம் சிறப்பாகப் பயணிக்கிறது கதை. கதையைப் படித்து முடிக்கும்போது அதிகாலை 1 இருக்கும். கடைசி வரி உலுக்கிப் போட்டது. கண்ணீர் விடுவதா... பயம் கொள்வதா... கன்னிப் பிணத்தின் முதல் இரவா அது... இறுதி இரவா... புணர்ந்தவன் மனநிலை, என்னவாக இருந்திருக்கும்... அவன் எடுத்த முடிவு... இடையில் வந்து செல்லும் வீடியோ கேமரா என ஒன்றொன்றின் கோர்வையில் மிளிர்கிறது கதை.

மியாவ், குஜராத் 2002 கலவரம், 96க்குப் பின்னால் வாசிக்கும் ஆசிரியரின் நூல். சுஜாதா நினைவினில் வாசித்துக்கொள்ள E=mc2, மதுமிதா - சில குறிப்புகள். மதுமிதாவில் அவளின் Facebook, twitter, mail, ஐபோன் மெசேஜ், Skype இப்படிப்பட்ட தகவல்கள் வழியே கதை சென்று post mortem ரிப்போர்ட்டில் முடிகிறது. வழக்கம்போல செமயாக கதை முடிந்திருக்கிறது.

மயிரு கதை மயிரில்லாத தலை உடையவன் வலி பற்றிப் பேசுகிறது. மயிர் வளர அவன் மெனக்கெடுதல், மயிர் இல்லாமல் தள்ளிப்போகும் திருமணம் என வளர்கிறது.  ஆசிரியருக்கு நகைச்சுவையும் அழகாகக் கைகூடி வருகிறது என்பதை இக்கதையில் உணரலாம்.

அகல்யா கதை ஹிந்தி குறும்படம் ஒன்றின் நீட்சி. அற்புதமாக நீள்கிறது. மாய உலகத்தில் பயணிக்கும் கதை. வயது முதிர்ந்த சிற்பி, இளமையான மனைவி, பிற வந்து செல்லும் பாத்திரங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றது. கதை இறுதி ஆசிரியரின் கதைகளில் வருவது போல் கடைசியில் நாம் எதிர்பாராத ஒன்றை கதையின் முடிச்சாக வைத்திருந்தாலும் ஏதோ ஒன்று குறைவது போலவே இருக்கிறது. இரண்டாம் முறை வாசித்து முடித்தபோதும் அதே உணர்வுதான். ஏன் என்று தெரியவில்லை. கதையில் இன்னும் சுவாரசியம் கூட்டியிருக்க வேண்டுமா அல்லது எனக்கு வாசிப்புத் தன்மை பத்தாதா எனத் தெரியவில்லை. 

ஒரே இரத்தம் கதை தம்பதியினர் இருவரின் வாழ்வில் பூக்கும் திடுக் சூழல். குழந்தைக்கு உண்மையான அம்மா இவள். ஆனால் அப்பா நீ இல்லை என்பதை one line ஆக வைத்துக்கொண்டு கதகளி ஆடியிருக்கிறார் கதாசிரியர். என்னாகும் ஏதாகும் என்ற எதிர்பார்ப்போடு இன்னொரு குடும்பத்தை வேடிக்கை பார்க்க வைத்துவிடுகிறார் கதாசிரியர். செம ரொமான்டிக் scenes மற்றும் வசனங்கள். பிரச்சனைகள் எல்லாம் சுபம் பெற்ற பின் நடக்கும் கூடல் வரிகள் காதலர்கள் வாழ வேண்டிய பக்கத்தை எடுத்துக் காட்டுகிறது. மாய உலகத்தில் தான் நாம் ஒவ்வொருவரும் பயணிக்கிறோம். விழித்திருக்கும் நேரத்தில் மட்டும் காண்பதை உண்மை என்று நம்புகிறோம். நாம் உறங்கும் நேரத்தில் நம் வாழ்க்கையை நாம் வாழ இயலுமா. அவரவர் வாழ்க்கை, அவரவர் பக்கங்கள். சொன்னால் தான் உண்டு. தெரிந்தால் தான் உண்டு. அதுவரை எல்லோரையும் நம்புகிறோம். நம்பவைக்கப் படுகிறோம். 

வெள்ளைப் பளிங்கால் தன் காதல் மனைவிக்கு தாஜ்மஹால் கட்டிய ஷாஜஹான் தனக்கு ஒரு கருப்பு மாளிகை கட்ட ஆசைப்படுகிறான். மகள் ஜஹனாரா உதவ நினைக்கிறாள். ஒளரங்கசீப் அதற்கு முட்டுக்கட்டையாக நிற்கிறான். தாஜ்மஹாலை அருகில் நின்று தரிசித்தபடி ஷாஜஹானுக்கு கட்டிடம் எழுப்ப எதிர்க்கரை பார்த்தபடியே ஏங்க மட்டுமே முடிகிறது நம்மால். அப்படியொரு மொழி நடை. வரலாறு குரூரங்களால் கொடூரங்களால் கட்டமைக்கப்பட்டதாக பல இடங்கள் இருக்கிறது. கருப்பு மாளிகைக் கனவும் அப்படியே ஷாஜஹானுக்கு.

வெண்குடை... அமெரிக்க மனிதன், ஜப்பானிய மனிதன் இருவருக்குமிடையே நடக்கும் உரையாடல். எது சரி எது தவறு என்பதை உணராமல் தலைமை கட்டளையிடுகிறது செய்கிறோம் என்ற மனப்பான்மை அமெரிக்கக்காரனுக்கு. ஆனால் தன்னால் போர் தொடங்கியது எனினும் ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் அழிந்தது, அங்கு எறியப்பட்ட குண்டுகளின் கதிர்வீச்சால் இன்றும் பாதிக்கப்பட்டு அதன் வேதனைகளை அனுபவிக்கும் ஜப்பானியக்காரன், அமெரிக்கக்காரனிடம் எதிர்பார்க்கும் சிறிதளவு வருத்தம். இரண்டுக்கும் இடையே நடக்கும் போராட்டம். போரில்லாத வாழ்வைப் பேச போரைப் பற்றி பேசும் கதை. 

இன்னும் சில கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு களத்தில். ஒவ்வொன்றிலும் அவ்வளவு அழுத்தம். ஏனோ தானோ கதைகளாக இல்லாமல் எல்லாவற்றோடும் நாமும் பயணிப்பது மாதிரியான கதைகள். வழக்கம்போல முடிவில் வெளிப்படும் டிவிஸ்ட்டுகள் எனக் கலக்கியிருக்கிறார் கதாசிரியர்.

வாழ்த்துகள் தோழர்.

யாழ் தண்விகா

Wednesday, 20 January 2021

108 காதல் கவிதைகள் #ஆத்மார்த்தி

 108 காதல் கவிதைகள்

#ஆத்மார்த்தி


வதனம் வெளியீடு


குட்டிக் குட்டி கவிதைகளாக 108.

காதல் ஒரு போதும் திகட்டாது. அதற்கு தொடக்கம் மட்டுமே. முடிவு இல்லை. நீள் பயணத்துடன் அதனை ஒப்பிடலாம். இலக்கில்லாத வானம் அதற்கு. அங்கு நதி, மழை, கடல், வனம், கவிதை, நட்சத்திரம் எல்லாம் உண்டு. உங்களுக்கு என்ன தேவையோ அதை அடையலாம். கண்கள் மூடி கண்ட தேவதையை கண் திறந்து காணலாம். காதல் ஒரு தவம். வரம். தேடல். ஊற்று. நிசப்தம். எல்லாம் தான். இந்த நூல் இளையராஜாவின் how to name it இசைத் தொகுப்பிற்கு சமர்ப்பணம் செய்துள்ளார் தோழர். எப்படி பெயரிடுவது காதலுக்கும் இசைக்கும்... 


ஊடல், கூடல் எல்லாம் உண்டு இதனில். எதுவாக இருந்தாலும் கொண்டாடுகிறது கவிதை.

எனக்குப் பிடித்தவை எதுவும்

உனக்குப் பிடித்தவற்றுடன்

ஒத்துப்போகவே இல்லை

என்கிற ஒன்று

ஒத்துப்போகிறது

நமக்குள்...

என்பது ஊடலா கூடலா...!


ஆச்சர்யம் நிறைந்தது காதல். எதிர்பாராத ஒன்று. எப்போது எப்படி யாரால் எங்கிருந்து... இதோ பாருங்களேன்...

உன் மீது

எனக்கு

எந்த ஆச்சர்யமுமில்லை

என் 

ஆச்சர்யமெல்லாம்

உன்னைப் 

பின்தொடரும்

என் மீது தான்...


ஆலயம் புனிதம். அங்கு கடவுள் , பிரார்த்தனை மட்டும் தான். இது காதலர்களுக்குமா... காதல் எங்கும் தொடரும். கோவிலிலும்.

கோயில் பிரகாரத்தில்

வரிசையாய்

சிற்பங்களை

ரசித்துக்கொண்டே

நகர்ந்தாய்.

உன்னை

ரசிப்பதற்காக

வரிசையாய்

வந்துகொண்டிருந்தன

சிற்பங்கள்.

காதலிக்கும் அனைவருக்கும் காதலியின் அழகு பிரமாண்டம் தான். யார் தேவதையாக இருந்தாலென்ன சிற்பமாக இருந்தாலென்ன... காதலிக்குப் பின்னால் தான். 


கிராஃபிக்ஸ் என்ற கவிதை சிறுவயது குரூப் போட்டோவை அளித்து தன்னை கண்டுபிடிக்கச் சொல்லும் காதலி, அவளிடம் கண்டுபிடித்ததை கூறாமல் அவள் அருகில் அமர்ந்திருந்த ஒருவனைத் தூக்கிவிட்டு சின்ன வயதில் உள்ள தன்னை உட்கார வைக்கிறார் கவிஞர். சுயநலம் தான். அது காதலுக்கானது. காதலிக்கானது. வாழ்வுக்கானது.


காதலை தன் கோணத்தில் மட்டும் காணாமல் காதலியையும் பேசவிட்டு ரசித்திருக்கிறார் கவிஞர். பேரம் என்றொரு கவிதை. கடையில் பேரம் பேசும்போது கேட்பதைக் கொடுக்கச் சொல்கிறாள் காதலி. மறுக்கிறான் காதலன். அப்படியே கொடுக்கவா முடியும் என்கிறான். அவள் அமைதியாக சொல்கிறாள்

"நீ கேட்டதை

அப்படியே தானே 

கொடுத்தேன்" இந்த வரிகள் வாசிக்கும்போது

 அவரவர் காதலியின் முகம் கண்முன் வந்து போகும். நாம் கேட்டதும் அவள் அளித்ததும் நினைவுக்கு வந்து உயிரை சில்மிசம் செய்து சிரிக்க வைக்கும். ரசிக்க வைக்கும்.


இன்னும் பலப்பல கவிதைகள்.

முத்தக் கவிதை ஒன்று.

"முத்தமிடவா என்றேன்

கைகளை நீட்டினாய்

கையா நான் கேட்டது

என்றேன்

கண்மூடி

இதழ்கள் காட்டினாய்"


பிரிவுக் கவிதை ஒன்று.

"நீ இல்லாமல்

எப்படி வாழவேண்டும்

என்று அறிவுரைகள்

அள்ளி வழங்கிச் சென்றாய்

அதெல்லாம் இருக்கட்டுமடி

முதலில் 

தூங்குவதற்கு மட்டும்

ஒரு வழி சொல்"


இப்படி இப்படியாக 108 கவிதைகள். பாரதி கிருஷ்ணகுமார் தோழர் வழங்கிய அற்புத அணிந்துரையுடன். அதில் அவர் கூறியுள்ள "பாரதி எழுதினான், "கல்லாய்ப் பிறந்தால் காந்தக் கல்லாய்ப் பிற; செடியாய்ப் பிறந்தால் தொட்டால் சிணுங்கிச் செடியாய்ப் பிற. மனிதனானால் காதல் செய்..." என்பதோடு நிறைவு செய்யலாம் இவ்வாசிப்பு அனுபவத்தை.


காதலில் வாழ

வாசிக்கலாம்.


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா



Wednesday, 12 August 2020

#சிலேட்டுக்குச்சி_சக. முத்துக்ண்ணன்

 #சிலேட்டுக்குச்சி 

கட்டுரைத்தொகுப்பு 

#சக_முத்துக்கண்ணன் 


பாரதி புத்தகாலயம் வெளியீடு

விலை ரூ 110/-


Muthukannan Muthukannan


பள்ளியில் பயின்ற காலத்திலிருந்து பள்ளியில் பணியாற்றும் காலம் வரை தான் வாழ்ந்த வாழ்க்கையில் பல பக்கங்களை நம் கண்முன் படர்த்தி வைத்திருக்கிறார் ஆசிரியர். அரசுப் பள்ளி ஆசிரியர் என்றாலே இளக்காரம் தான். ஆனால் அரசுப் பள்ளிக்கு வரும் குழந்தைகள் என்ன மனநிலையில் வருவார்கள்? அவர்களின் வாழ்க்கைச் சூழல் எப்படி இருக்கும்? அவர்களுக்கான கல்வி எத்தகையதாக நாம் அளிக்க வேண்டும்? அக்குழந்தைகளின் பெற்றோர்கள் இடத்தில் நாம் என்ன வகையான உறவு நிலையைப் பேண வேண்டும்? அக்குழந்தைகளை நாம் எவ்வாறு கையாள வேண்டும்? அக்குழந்தைகளுக்கு என்ன விதமான கல்வி பிடிக்கும்? என்பதையெல்லாம் தன்னுடைய கட்டுரையில் கதைகளை கூறுவதைப் போல அழகாக எடுத்து வைத்திருக்கிறார் ஆசிரியர். கட்டுரைகளைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு கட்டுரையும் ஒரு அனுபவத்தைச் சொல்லுகிறது. ஒவ்வொரு கட்டுரையும் ஏதோ ஒரு இடத்தில் மனதைக் காயம் செய்கிறது. அரசுப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளைக் கூறுவதுபோல பல அனுபவங்கள் எழுத்துக்களில் கொட்டிக்கிடக்கிறது. எழுத்தாளரும் சமூகச் செயல்பாட்டாளருமான தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் அணிந்துரை அழகு.


ஆசிரியர் அடித்ததால் மனோஜ் என்ற மாணவனுக்கு சொல்லக் கூடாத இடத்தில் வலி அதிகரித்ததாக கூறுகிறான். படிக்கவில்லை என்பதற்காக அடித்தது இப்படி ஆகும் என்று ஆசிரியர் நினைத்திருக்க மாட்டார். பள்ளியில் நடந்த சம்பவம் வீட்டில், மறுநாள் பயிற்சிக்கு செல்லும் இடத்தில் மனதின் நிம்மதியைக் கலைத்த படியே இருக்க,  சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவன் எப்படி இருக்கிறான் எனக் கேட்கும் ஆசிரியரின் மனநிலையில் அவர் அடித்தது தவறா என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் அந்தக் காயம் அந்த மாணவனை விட்டுச்செல்லும் வரை ஒரு தாயாக தந்தையாக ஆசிரியர் காட்டும் கரிசனம் ஒவ்வொரு ஆசிரியருக்கும் இருக்க வேண்டும். பள்ளியில் ஓடி விளையாடும் ஒரு சிறுவன் தவறி விழுந்தான் என்றாலும் அதனை வீட்டிற்குத் தெரியப்படுத்தும் பொழுது அதைக் கேள்விப்பட்டு ஓடிவரும் பெற்றோர் தன்னுடைய கோபத்தை முதலில் காட்டுமிடம் ஆசிரியர்தான். ஆனால் காயம் பட்ட குழந்தையிடம் அந்த நேரத்தில் ரத்தம் வழியும் இடம் எதுவானாலும் அவ்விடத்தைக் கழுவி மேலும் ரத்தம் வடிந்துகொண்டிருப்பின் உடனே மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று காயத்தின் மேல் கட்டுப் போட வைத்து ஊசியினை போடச்செய்து மாத்திரையை வாங்கிக் கொடுத்து தேநீரின் உதவியுடன் அதை குடிக்கச் செய்து பெற்றோர்கள் வந்தவுடன் அவர்களிடம் நிலவரத்தைச் சொல்லி அந்தக் குழந்தையை ஒப்படைக்கும் வரை  ஓர் ஆசிரியர் அனுபவிக்கும் அவஸ்தை ஒரு தந்தைக்கும் மேலானது தாய்க்கும் மேலானது. ஆனால் இங்கு மனோஜ் வேறுபட்டு வேறு மாதிரி பயமுறுத்துகிறான். பாவம்டா வாத்தியார்...


ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு பள்ளியிலும் பட்டப்பெயர்கள் மாணவர்கள் சூட்டி இருப்பார்கள். அரசனுக்கு பட்டங்களை சூடுவதைப் போல இது இல்லை. ஒவ்வொரு ஆசிரியரின் உருவத்தைப் பொறுத்து, அவருடைய பாடம் நடத்தும் தன்மையைப் பொறுத்து, அவரின் குணத்தைப் பொறுத்து, அவர் அளிக்கும் தண்டனையைப் பொறுத்து இந்த பட்டப்பெயர்கள் ஆசிரியர்களுக்கு மாறுபடும். அதனைக் குறித்தும் ஒரு கட்டுரை இருக்கிறது அதற்குள் தேடிப் பாருங்கள். உங்களுக்கான பட்டப் பெயரும் கூட ஒளிந்திருக்கலாம்.


பன்னீர் சார் கொஞ்சம் நாசூக்கானவர். ராமரய்யா குழந்தையாக மனநிலையில் வகுப்பு எடுப்பவர். அவரிடம் அன்பு காட்டும் குழந்தைகளாக நாம் மாறுவதா அல்லது ராமரய்யாவாக மாறுவதா... ராமரய்யாவின் நண்பராக, சக ஆசிரியராக முருகன் சார். இருவருக்கும் இடையில் உள்ள நட்பு - அந்த நட்பு வகுப்பறைக்குள் எப்படி இருக்கிறது, அந்த நட்பால் அந்த வகுப்பு எப்படி கலகலப்பாக மாறுகிறது, அவர்கள் குழந்தைகளிடம் எப்படிப் பழகுகிறார்கள் அந்த அன்னியோன்யம் எத்தனை குழந்தைகளுக்குக் கிடைத்துவிடும்... 


டீச்சர் ஒண்ணுக்கு என்ற கட்டுரையில் வரும் "அந்த வகுப்பில் இருந்து டீச்சர்ஸ் பாத்ரூம் வரையிலான தூரம் என்பது தேச அவமானத்தின் நீளம்" என்ற வார்த்தை வெறும் வார்த்தை மட்டுமல்ல, அது அரசுப்பள்ளியில், தனியார் பள்ளிகளில் இந்தக் காலமும் பல இடங்களில் நடந்து வரும் கழிப்பறை இல்லாத அவலம் சுட்டப்படும் இடம்.


டியூசன் எடுக்கும் சாந்தி அக்கா ஒவ்வொரு ஊரிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடம் மாணவர்கள் காட்டும் அன்பு இன்னும் கொஞ்சம் நெருக்கமானது. ஆசிரியரின் வாசிப்பு அனுபவம் எந்த அளவிற்கு அதிகம் இருந்தால் ஒரு வகுப்பறையை அழகாகக் கொண்டு செல்லலாம் என்பதற்கு நூலாசிரியர் அவர்களின் பிரபஞ்சன், வண்ணதாசன் உள்ளிட்ட ஆளுமைகளின் கதைகளை வாசித்து அவற்றை மாணவர்களிடமும் கொண்டு செல்லுதலும் சிறப்பான ஒரு வழிகாட்டலாகக் கொள்ளலாம். 


ஒவ்வொரு குழந்தைகளுக்கும் குழந்தைப் பருவத்தில், உள்ள ஆசை என்பது பெற்றோர்களால் திணிக்கப்படாத பொழுது உள்ள ஆசை நிச்சயமாக எதிர்காலத்தில் அவர்கள் கூறுவதைக் காட்டிலும் வேறு மாதிரியாகத்தான் இருக்கும். அதை ஒரு கட்டுரை அலசுகிறது. 


யானை என்ற கட்டுரையில் முற்போக்கு இருக்கிறது, பக்தி இருக்கிறது, எல்லாவற்றிற்கும் மேலாக மத நல்லிணக்கம் இருக்கிறது. முடிப்பு அருமை பல கட்டுரைகள் போல இதிலும்.

வீட்டுப்பாடம் என்ற தண்டனை யதார்த்த கட்டுரை. குடிகாரத் தந்தைகளால் சீரழியும் குழந்தைகள் பாடு பரிதாபம்.


முழு ஆண்டுத் தேர்வு முடிந்தவுடன் ஒவ்வொரு மாணவனும் ஒரு காலத்தில் அதனை ஒரு கொண்டாட்ட காலமாக வாழ்ந்திருப்பான். நேரத்திற்கு உணவு இல்லை என்ற போதிலும், வீட்டில் அம்மா அப்பா இருவரும் வேலைக்குச் சென்ற பொழுதிலும், வெயில் வாட்டி எடுக்கும் பொழுதிலும், பக்கத்து வீட்டு நண்பர்கள் ஊருக்குச் சென்ற பொழுதிலும், திருவிழாக்கள் வரும் அந்த காலகட்டத்தில் கடன் வாங்கித் துணிகளை உடுத்தும் பொழுதிலும் இருந்த சந்தோசம் இன்று கோடை விடுமுறைகளில் தனித் திறனை வளர்ப்பதற்காக வகுப்புகளை உருவாக்கி வைத்திருப்பவர்களிடம் குழந்தைகளை தள்ளிவிடும் மனப்போக்கு வளர்ந்து வருகிறது. கொரோனா காலத்தில் உயிர் குறித்த பயம் ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருந்தாலும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பணம் பறிக்கும் வேலையும், குழந்தைகளை அலைபேசியின் முன்னால் அமர வைக்கும் போக்கும் அதிகரித்து வருவது கண்கூடு. கடைசிக் கட்டுரையான அவன விட்ருங்க பாஸ் என்ற கட்டுரையில் கடைசிப்பத்தி "கோடை அழகாகத் தெரியும். ஏனெனில் அவர்களைப் பொறுத்த மட்டிலும் இதுதான் நிழல் மாதம்" இதுதான் மாணவன். ஆயிரம் பொருள் பொதிந்த வார்த்தைகள்.


உளவியல் ரீதியாக மாணவனை அணுகும் வித்தையைக் கட்டுரைத் தொகுப்பு என்ற பெயரில் சிறு சிறு சம்பவங்களைச் சிறுகதை போல அழகாக, உயிரில் பதியும் வண்ணம் எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர் சக.முத்துக்கண்ணன். வாசியுங்கள் நான் சொன்னதை விட பலப்பல வாசிப்பனுபவம் கிட்டும் உங்களுக்கும்.


நானும் ஓர் ஆசிரியர் என்ற முறையில், தேனி மாவட்டம் என்ற முறையிலும் தோள்களில் கை போட்டு மகிழ்வைத் தெரியப்படுத்திக்கொள்கிறேன் நிறைய நிறைய...


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா

Thursday, 23 July 2020

வருச நாட்டு ஜமீன் கதை #வட_வீர_பொன்னையா

புத்தகம்:     வருச நாட்டு ஜமீன் கதை
ஆசிரியர்:   வடவீர பொன்னையா
பதிப்பகம்:  விகடன் பிரசுரம்

மூன்று தலைமுறைகளை இந்த நூல் பேசுகிறது. ஆண்டி வேலப்ப நாயக்கர், அவருடைய தம்பி இளைய ஆண்டி வேலப்ப நாயக்கர் இருவரின் காலகட்டத்தில் கதை தொடங்குகிறது. இளைய ஆண்டி வேலப்ப நாயக்கர் மூன்று திருமணம் முடித்த பின்பு நான்காவதாக ஆண் வாரிசுக்காக வெள்ளையம்மா என்பவரை திருமணம் முடிக்கிறார். அவருக்கு பிறந்த மகன்தான் திருமலை ராமகிருஷ்ண சாமியப்ப நாயக்கர். மக்களிடம் இருந்து வரக்கூடிய வரிப்பணம், தானியங்கள், விலங்குகள் இப்படி பல வரும்படிகளை வைத்துக்கொண்டு ஜமீனுக்கு உரிய பலான வேலைகளையெல்லாம் செய்துவருகிறார்.  இடையில் பளியன் சித்தன் என்பவனோடு நட்பு ஏற்படுகிறது. அந்த நட்பின் மூலமாக பல்வேறு சித்துவேலைகளை கற்றுக் கொள்கிறார்  ஆண்டி வேலப்ப நாயக்கர். ஒரு கட்டத்தில் பளியன் சித்தன் வேலப்ப  நாயக்கரிடம் பள்ளிகளுக்கும் ஜமீனில் பளியர் இனத்திற்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும். அவர்களையும் ஜமீனுக்கு இணையான பணிகளில் அமர்த்தவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறான். இதைக் கேட்ட வேலப்ப நாயக்கர் சித்தனை வேல் கொண்டு  எய்தி கொன்றுவிடுகிறார். இறப்பதற்கு முன் சித்தன், உன் ஜமீனுக்கான ஆண் வாரிசு பிறப்பதற்கு முன்பு நீ இறந்து விடுவாய். அதுபோலவே அது காலம் முழுவதும் தொடரும். ஆண் வாரிசுகள் பார்ப்பதற்கு முன்பே தகப்பன் உயிர் இருக்காது என்று சாபம் விடுகிறான். அதுபோலவே சாமியப்ப நாயக்கரைப் பார்க்காமலேயே வேலப்ப நாயக்கரின் உயிர் பிரிகிறது.  சிறு வயதில் அரியணை ஜமீனாக வரமுடியாது என்பதால் வெள்ளைத்தாயம்மா பொறுப்பில் ஜமீன் வருகிறது. சாமியப்ப நாயக்கர் சென்னையில் படிக்க செல்கிறார். சென்னையிலிருந்து திரும்பி வரும்பொழுது ஜனகம் என்ற நாட்டியக்காரி உடன் திரும்பி வருகிறார். அவள் வெள்ளைக்கார துரையுடன் செல்ல வேண்டியவள். அவளின் அழகில் மயங்கி இழுத்து வருகிறார் சாமியப்ப நாயக்கர்.  நீண்ட காலம் ஜனகத்துடன் காதல், காம வாசம் தொடர்கிறது. அவளுக்காக அனைத்து வசதிகளுடன் மாளிகை ஒன்றும் கட்டித் தருகிறார். பொன்னும் பொருளும் அள்ளி இறைக்கிறார். அத்தனையும் மக்கள் பணம். இச்சூழலில் சாதியிலிருந்து வேலுத்தாயம்மாள் என்ற பெண்ணை கட்டி வைக்கிறார்கள். வேலுத்தாயம்மாளை கட்டிய பின்னரும் சாமியப்ப நாயக்கரின் பெண் வாசம் நிற்கவில்லை. செல்லும் இடங்களில் எல்லாம் பெண் பித்து பிடித்துத் திரிகிறார். இது தெரிந்த  வேலுத்தாயம்மாள் ஜனகத்தை ஆள் வைத்து கொன்றுவிடுகிறார். எவ்வளவு சொல்லியும் சாமியப்ப நாயக்கர் கேட்காததால் தெப்பம்பட்டி சென்றுவிடுகிறார் வேலுத்தாயம்மாள். ராஜமாணிக்கம் முதல் பெண்ணாக பிறக்கிறார், பிரச்சினை இல்லை. மனம் திருந்தி வந்த சாமியப்ப நாயக்கருடன் கூடல் நடக்க, இரண்டாவதாக ஒரு ஆண் பிறக்கிறது. அந்த ஆண் குழந்தையைப் பார்க்கும் முன்னரே சாமியப்ப நாயக்கர் மறைந்துவிடுகிறார். சாமியப்ப நாயக்கர் மக்களிடமிருந்து வாங்கிய வரிப்பணம் முறையாக வெள்ளையர்களுக்கு கப்பமாக செல்லாததால் கண்டமனூர் ஜமீன் ஏலம் போகிறது, கொஞ்ச பகுதிகளைத் தவிர்த்து அனைத்தையும் எட்டயபுரம் ஜமீன் ஏலத்திற்கு எடுத்துக்கொள்கிறார். எல்லாம் பறிபோன நிலையிலும் ஆட்டம் மட்டும் அடங்கவில்லை சாமியப்ப நாயக்கருக்கு. ஜமீனை மீட்க உதவி செய்வதாக திருவாங்கூர் ராஜா சொல்ல அவரைப் பார்க்க குமுளி வழியாகச் செல்லும்போது நெஞ்சு வலி வந்து பாளையம் ராவுத்தர் வீடு வர அங்குதான் உயிர் பிரிகிறது சாமியப்ப நாயக்கருக்கு. அவர் இறந்த இந்தச் சூழலில் பிறந்த கதிர்வேல் சாமி பாண்டியன் என்ற மைனர் பாண்டியன் சென்னைக்கு சென்று படிக்கும் சூழல் வந்தபோதிலும் அங்கு வேண்டாமென்று வேலு தாயம்மாள் மறுத்துவிடுகிறார்.  மைனர் பாண்டியன் தன்னுடைய தந்தையைப் போலவே பெண் பித்து பிடித்து திரிகிறார். முறையான படிப்பும் இல்லை சேவகர்கள் பலரை வைத்துக்கொண்டு அடாவடியில் ஈடுபடுகிறார். பித்தனின் வாக்கு பலித்துக் கொண்டு வருவதை நம்ப மறுக்கிறார். எத்தனையோ பெண்களிடம் சல்லாபம் செய்த மைனர் பாண்டியன் ஒரு கட்டத்தில் 13 வயதான வேலம்மா என்பவரை தூக்கி சென்று திருமணம் முடிக்கிறார். முடித்த போதிலும் வழக்கம்போல் அடாவடி தொடர்கிறது. பெண் சகவாசம் தொடருகிறது. ஜமீன் ஒருபக்கம் வெள்ளையர்களுக்கு கப்பம் கட்டாமல் மூழ்கிக் கொண்டிருக்கிறது இன்னொரு பக்கம் சுதந்திரப்போராட்டம் நடந்து கொண்டிருக்க மக்கள் ஜமீனில் இருந்து விடுபடும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசி காலத்தில் உடல்நிலை சரியில்லாமல் சித்தன் வாழ்ந்த அதே குகையில் வாழத் தொடங்கிய மைனர் பாண்டியன் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் கூழைக் குடித்து நாட்களைக் கடத்துகிறார். அப்படியே அவருடைய வாழ்க்கையும் முடிந்துவிடுகிறது. அடக்கம் செய்வதற்கு கூட சொந்த நிலம் இல்லாத ஒரு ஜமீனாக மைனர் பாண்டியன் கடைசியில் இறக்கிறார்.
        ஜம்புலிபுத்தூர் கோவிலில் பெண்களை கோவிலுக்கு பொட்டுக்கட்டி விட, அந்தப் பெண்களை ஜமீன் ஏகபோகமாக அனுபவித்தல், வயசுக்கு வந்த பெண்களை காத்துக் கருப்பு அண்டக்கூடாது என்று அரண்மனைக்கு கொண்டு வந்து விட அவர்களை அனுபவித்தல், விரும்பும் பெண்களை சேவகக்காரர்கள் துணையோடு தூக்கி வந்து அனுபவித்தல், பிறரின் சொத்துக்களை அடித்துப் பிடுங்குதல், தாம் தூம் செலவு, சாதகம் செய்யும் பிறருக்கு ஊரைத் தானமாக வழங்குதல், வெள்ளைக்காரன் கண்களை மறைத்து பல திருட்டுத் தனங்களைச் செய்தல், பெண்களை போகப் பொருளாகப் பார்த்தல், சொத்துக்களை பாதுகாக்க பெண்களை ஜமீன் பொறுப்பில் அமர வைத்தல் வரலாறெங்கும் உள்ள அவலங்களை மண்ணின் மொழியோடு வட வீர பொன்னையா கூறியுள்ளார். வாசிக்க வாசிக்க அந்தக் காலத்திற்குள் பயணிக்கும் எண்ணம் பீறிடுகிறது. இன்னொன்றையும் சொல்லவேண்டும்.

         இப்படிப் பட்டவர்களின் செயல்களைத்தான் அப்படியே தொடர ஆண்ட பரம்பரை என்று சொல்லி கொண்டாடி வருகிறதோ பல கூட்டம், அக்காலம் போல இப்பவும் சொத்துக்களை களவாடுதல், பெண்களை வன்புணர்வு செய்தல் போன்ற செயல்களைச் செய்ய நினைக்கிறதோ என்ற எண்ணமும் மேலிடாமல் இல்லை.

வாழ்த்துகள் வட வீர பொன்னையா தோழர்.

யாழ் தண்விகா