Tuesday, 28 June 2022

I ❣️ U டா எரும...!


என்னவோ போலிருக்கு

ஒரு பாட்டு பாடுடா

கேட்டா கொஞ்சம் மனசு சரியாகும்னு தோணுது


உண்மை சொல்லு பெண்ணே என்ன

என்ன செய்ய உத்தேசம்...


நிஜமாத்தான். பாடுடா.


தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோசம்...!

உண்மை சொல்லு பெண்ணே என்ன

என்ன செய்ய உத்தேசம்...!

வார்த்தை ஒன்று வாய் வரைக்கும்

வந்து வந்து போவதென்ன..!

கட்டுமரம் பூப்பூக்க

ஆசைப்பட்டு ஆவதென்ன..!

கட்டுத்தறி காள நானே

கன்னுக்குட்டி ஆனேனே..!

தொட்டுத் தொட்டு தென்றல் பேச

தூக்கம் கெட்டுப் போனேனே..!

சொல் பொன்மானே...!

போதுமா...


இல்ல பத்தாது

இன்னும் நீ பாடி முடிக்கல.

கம்ப்ளீட் பண்ணு...


அடி ஆத்தாடி இளமனசொன்னு றெக்க கட்டிப்பறக்குது 

சரிதானா..! 

அடி அம்மாடி...

ஒரு அலை வந்து மனசுல அடிக்குது 

அது தானா..!

உயிரோடு உறவாடும்

ஒருகோடி ஆனந்தம்..!

இவன் மேகம் ஆக யாரோ காரணம்...

இப்போ மனசு சரியாச்சா...


இப்படி நீ பாடிட்டே இருந்தா

மனசு சந்தோசமா இருக்கும்.

எப்பவும் மனசுக்கு ஒன்னும் ஆகாது.

இப்போ நான் நார்மல்.

சிரமப்படுத்திட்டேனா...

இல்லல்ல...


என் குரல மதிச்சு

நீயே கேட்கும்போது

நான் பாட மாட்டேனா...

உனக்காகப் பாடாம...

நல்லாப் பாடுனேனோ இல்லையோ

இப்போ நீ நார்மல்.

அது போதும்.


எனக்கு இந்த குரல் போதும்

என்று சொல்லி உன்னோட குரலை தாழ்வாக்க நினைக்கல.

இந்தக் குரல் தான்

உன்னை நோக்கி என்னைத் தேட வச்சது.

எனக்கு ஆறுதலா இருந்தது.

மடியில் கண்ணயரும் சுகம் தந்தது.

எனக்கான பேரின்பங்களை அடையாளம் காட்டியது.

வாழ்வைத் தந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக எனக்காகப் பேசிக்கொண்டே இருந்தது.

நான் பேசும் எல்லாவற்றிற்கும் ம் சொன்னது.

இந்தக் குரலில் என்னைக் காண வைத்தது.

சாகும் வரை என்னோடு வேண்டும் உன் குரல்.


என்னடி ஆச்சு என்னென்னமோ பேசுற...


கொஞ்ச நாளா உன்ன நிறைய மிஸ் பண்றேனோ எனத் தோணுச்சு. மனசு பாரமாச்சு. அதான்.


I ❣️ U பொம்பள.


I ❣️ U டா எரும.


யாழ் தண்விகா 


❣️

 

Thursday, 9 June 2022

சொல்லாமல் கொள்ளாமல் கொல்லுதல்


தாய் தன் இடையில் 

அமர்த்தி

வைக்கப்பட்டிருந்த குழந்தையை காரணங்களேதுமற்று 

கீழே இறக்கி விட்டுச் செல்லும் 

நண்பகல் போல்

வாய்த்திருக்கிறது

எனக்கான வாழ்க்கை.


நீயில்லாமல்

எது நிம்மதி

நீதான் என்றும்

என் சன்னதி

என்ற வரிகளை

முந்திக்கொண்டு

வந்து விழுகிறது

உனக்கே உயிரானேன்

எந்நாளும் எனை நீ மறவாதே 

என்ற வரிகள்-

என் மேல் இரக்கம் காட்டாத

உன் காதல்

காணும்போதெல்லாம்...


என்னை அவ்வப்போது

வெறுக்கும் முன்

கொஞ்சம் நீயும் பரிசீலனை

செய்யலாம்தான்

எனக்குள் நம் காதல்

வாழ்ந்து வருகிறது என்பதையும்...


யாழ் தண்விகா 


❣️


 

Friday, 3 June 2022

கண்ணும் கருத்தும்...


 

❣️

நெடுந்தூர பயணம்

உடலெங்கும் வலி

களைப்பாயிருக்கு


ஒரு காஃபி குடிங்க

சரியாகிடும்


அதிலெல்லாம் சரியாகும்

எனத் தோணல


அப்போ ஒரு டேப்லெட் வாங்கிப் போடுங்க


அதிலும் சரியாகாத அளவுக்கு உடம்பிருக்கு


ரெண்டு நாள் லீவு போட்டு

அங்கிட்டும் இங்கிட்டும் சுத்தாம

வீட்டுல இருங்க

சரியாகும்


ஒரு முத்தம் தந்தா எல்லாம் சரியாகும்

ஏன்டி இப்படி கெஞ்ச வைக்குற


ஒரு முத்தம் கொடுடின்னு கேட்காம

ஏன்டா இப்படி சுத்தி வளைக்குற...


❣️

கண் மலர்களின் அழைப்பிதழ்


எப்படியிருக்கும் எனக்கூட தெரியவில்லை


பார்த்து வருடங்களாச்சு


ராஜா சார்...

இதே பாடலை

அவள் காதோரமாகவும்

கொண்டு சேர்க்கவும்...


❣️

போத்தலில் நிரம்பியிருக்கும்

மதுவின் அசைவலையில்

பூக்கும் போதை

உன் இதழசைவில்...


பேசு அன்பே பேசு...


❣️

எப்போப்பாரு

கல்யாணம் குழந்தைங்க

எதிர்காலம்ன்னுக்கிட்டு...

வேற நெனப்பே வராதா...


அதிகமாகக் காதலிக்கக் காதலிக்க

கல்யாணம் குழந்தைங்க எல்லாம்

தன்னாலே அமைஞ்சிடுமாம்


யார் சொன்னா அப்படி...


காதலே சொல்லுச்சு


குழந்தைகளைப் பெத்துக்கிட்டு

அதுக்கப்புறமா கல்யாணம் பண்ணிக்கிட்டா ஆகாதாமா?


ம்ம்ம் அதானே...


என்ன அதானே...

வாடா கட்டிக்க...


❣️

விலங்குகள் பறவைகள்

பூக்கள் பூச்சிகள்

காடு மலை எல்லாம் வரைந்து

சின்னச் சின்ன மாதிரி உருவங்களைப் பணி நிமித்தம் செய்து

நம்மையும் ஓவியமாகச் செதுக்கி...


கண்ணும் கருத்தும் காதலெனத் தகும்...


இல்லடி இல்லடி

எண்ணும் எழுத்தும்

கண்ணெனத் தகும்...


❣️

உன்னைப் பற்றி எழுதுபவை

துதிப்பாடல்கள்


உன்னைப் பற்றி பேசுபவை

பிரசங்கம்


உன்னைப் பற்றிய கற்பனைகள்

நிஜமாக வேண்டிய கதைகள்


கடவுளைச் சரியாகத்தான்

நான் ஆராதிக்கிறேன்...


யாழ் தண்விகா

Thursday, 2 June 2022

நினைக்கும்போது பேச வருவாய்...



 ❣️

மீண்டும்

அழைத்திருக்கலாம்


காத்திருந்தது

என் காதல்


❣️

கடவுள் எல்லாவற்றிற்கும்

ஒரு காரணம் வைத்திருப்பான்

என்றாய்


கடவுளை நம்புபவனில்லை நான்.

ஆனாலும்

நம்மைச் சந்திக்கச் செய்வதற்கு

காதல் என்னும் காரணம்

வைத்திருந்திருக்கிறாய் நீ

என நம்புகிறேன்.


❣️

பொய் சொன்னாலோ

யாரும் ஏமாற்றினாலோ

கண்ணீர் வந்துவிடுகிறது

என்றாய்.


நானோ

என் கவிதையோ

எப்போதும் ஏமாற்றுவதில்லை.

அப்புறம் ஏன் கண்ணீர்...


❣️

ஊரெல்லாம் திருவிழா

நம் ஊர்களில் திருவிழா இல்லை

என்று வருத்தப்படுகிறாய்


நாம் சந்திக்க வேண்டிய நேரம்

வந்துவிட்டது...


❣️

ஆயுசு நூறு என்றெல்லாம்

வரையறை எதற்கு?

அதற்கும் மேல் தான்.

எப்போதெல்லாம் என்னை நீ நினைப்பாயோ

எப்போதெல்லாம் உன்னை நான் நினைப்பேனோ

அப்போதெல்லாம்

உனக்கு நான் அழைப்பு விடுத்திருப்பேன்

எனக்கு நீ அழைப்பு விடுத்திருப்பாய்...


யாழ் தண்விகா 


❣️

Monday, 30 May 2022

லூசாடா நீ...


 பேசும்போது சந்தோசப்படுறோம்

பேசாதபோது வருத்தப்படுறோம்

பேசாதபோதும் வருத்தப்படகூடாது என்பதற்காகத்தான் இப்போது பேசிக்கொண்டிருக்கிறோம்.

இந்தப் பேச்சு தான் நினைவாக மாறி

நம்மைக் காக்கும்...


ப்பா... எவ்ளோ அறிவா பேசுறீங்க...

தேங்க்ஸ்ப்பா. இனிமே வருத்தப்பட மாட்டேன்ப்பா...


ஏன்டி வென்ன... அப்போ பிரிஞ்சிருக்கும்போது உனக்கு வருத்தம் வராதா...


லூசாடா நீ... 


#ஆத்தீ_கோவமாயிட்டாபோல...


🤔

Saturday, 28 May 2022

அழகென்ற சொல்லுக்கு...


 #அழகென்ற_சொல்லுக்கு...


❣️

ஒரு பூவைப்போல

நீ நடந்து செல்கிறாய்

ஒரு வண்டைப்போல

நான் தொடர்ந்து வருகிறேன்


❣️

நீ பேசுவதையெல்லாம்

கவிதை என்கிறேன்


அப்படியானால்

நீ யார்?


❣️

சிலை கல்லாலானது என

யார் சொன்னது?


❣️

பருவம் தொடங்கியது என்பது ஊருக்கு.

பருவம் பூத்தது என்பது உனக்கு.


❣️

நீ சிரிக்கும் சிரிப்பனைத்திற்கும்

வெல்லச் சிரிப்பென்று பெயர்


❣️

எக்குளத்தின் மீன்கள்

உன் கண்கள் எனக் கண்டு

பாதுகாக்கவேண்டும்

அக்குளத்தை!


❣️

உன் அழகுதான்

உனக்கே தெரியாமல்

தெனாவெட்டாகப் பார்க்கிறது என்னை.

பவ்யம் காட்டுதலை விட

வேறென்ன செய்ய இயலும் நான்...


❣️

எதிரெதிரே அமர்ந்து

பழச்சாறு பருகுகிறோம்.

இதழ்கள் வழியாக

நீதான் உயிருக்குள்

சென்று கொண்டிருக்கிறாய்...


❣️

ஒரு கல்யாணம்

இரு குழந்தைகள் என

வாழ்ந்துவிடத்தான் ஆசை.

பேராசை

நாம் காதலர்களாகவே

வாழ்ந்து மடிவதில்தானிருக்கிறது.


எது வேண்டுமானாலும்

வெல்லட்டும்.


❣️

என் கவிதைகள் அனைத்தையும்

வாசித்து விடுகிறாய்.

அதென்னமோ

நாம் வாழ்ந்த நாட்களைச் சொல்லும்

கவிதை வாசிப்பின் போதுதான்

வரிகளுக்கு முத்தம் கிடைத்துவிடுகிறது...


❣️

அருகருகேயமர்ந்து

புகைப்படம் எடுக்க ஆசை நிறைய.

பயம் காரணமாக

ஒத்திப் போடுகிறாய் ஆசையை.

ஆனாலும்

உயிரால் நாம் வாழாமல் இருக்கிறோமா என்ன...?


❣️

ஒவ்வொரு கவிதையைப் படித்தபின்பும்

யாருக்கு இந்தக் கவிதை என்ற கேள்வியோடு நிமிர்வாய்.

உன்னைப் பார்த்தபடியே நிற்பேன் நான்.


புரியாதா பேரன்பே...!


❣️

எப்போப்பாரு

காதல் காதல்...

வேறொன்னும் தெரியாதா?


காமம் தெரியும்...


காதலிச்சே தொலை எருமை...


❣️

கவிழ்த்து வைக்கப்பட்டுள்ள

கோப்பையிரண்டிலும்

போதை வஸ்து.


நீ கற்சிலையல்ல

கள் சிலை...


❣️

இமைகளுக்கு மையிடும் லாவகத்தில்

தெரிவதெல்லாம்

வாளினைக் கூர் தீட்டும் உத்தி...


❣️

ஒருமுறை முத்தமிட்டு

அமைதிப்படுத்தேன்

என் இதழ்களை...


நீ பேசும்போது

அசையும் உன் இதழ் கண்டு கண்டு

துடித்துக் கொண்டேயிருக்கின்றன

அவை...


❣️

இடுப்பில் என்னவோ

ஊர்வது போலருக்கு

பார்த்துவிட்டு வருகிறேன் எனப் பேசும்போது சொல்லிவிட்டு எழுந்து சென்றாய்...


ம்மென்றேன்


பார்த்துவிட்டு வந்து 

ஒன்றுமில்லை

அப்புறம் ஏன் அப்படித் தோணுச்சு என

ஒன்றும் புரியாமல் கேட்டாய்


நீ கொஞ்ச நேரத்திற்கு முன்னால்

தரை பார்த்துப் பேசும்போது

என் கண்கள் உன் இடையை

மேய்ந்து கொண்டிருந்தது.

இப்போது வரை என் கண்கள்

என்னிடம் வந்து சேரவில்லை

அது தான் இடையுள்புறம் சென்று

ஊருகிறதோ என்னவோ என்றேன்


என்னவோ ஊர்வதாகச் சொன்ன

இடையில் ஒரு கை

கண்களில் ஒரு கை வைத்து மறைத்து

ப்ளீஸ் கூச்சமாயிருக்கு

பார்வையால் மேயாதே என்னை

என்றாய்


எப்போது கூச்சம் போகும்

என்றேன்


உயிரால் என்னுயிர் மேல்

ஊர்ந்து கொள்.

இப்போது வேண்டாம் என்றாய்.


என் கண்களைப் பிடித்து

என்னிடம் தந்தபின்னர்தான்

உன் கண்கள் திறந்தாய்.

வெட்கத்தின் ரேகைகள் ஒவ்வொன்றாய் உதிரத் தொடங்குகிறது உன்னிலிருந்து.

கைகளில் பிடித்து

தன்னை நிரப்பிக்கொள்ளும் காதலுக்கு இப்போது

வெட்கத்தின் சாயல்...


❣️

கவிதை கவிதைன்னுக்கிட்டே

வாழ்க்கையில உருப்படாமப் போயிடப் போறடா


உன்னைப் பற்றி எழுதிட்டுத் திரிவதைத் தவிர

உருப்பட வேறு வழியில்லை அன்பே...


❣️

நீயழுதால் அழுது

சிரித்தால் சிரித்து

மௌனமாயிருந்தால் மௌனமாயிருந்து...


நீ ட்ராமா தான் பண்ற என்பது

உனக்குத்தான்.

எனக்கில்லை.


❣️

கர்த்தரின் பரிசுத்த நாமத்திற்கு

ஸ்தோத்திரம்...

போலவே

உன்னோட பரிசுத்த நாமத்திற்கு

என்னோட ஸ்தோத்திரம்...


❣️

நினைவால்

நீ உறங்குதலை என்முன் வரவழைத்து

வழக்கம்போல் 

உன் அழகின்மேல்

என் கண்களால் முத்தமிட்டபின்

உறங்கத் தொடங்குகிறேன்


தூரமே... தொலைந்து போ...


29.05.2022

02.19 அதிகாலை


யாழ் தண்விகா

Thursday, 26 May 2022

ஆதலினால்...




 ஒரு பைத்தியத்திற்கான

அத்தனை தகுதியும் 

எனக்கிருப்பதாகச் சொல்கிறாய்

ஆம் என்பதைத் தவிர

வேறு வழியில்லை 

என்றில்லை

குற்றம் சாட்டுவது என்றபின்

சமாதானங்கள் என்ன 

செய்துவிடப் போகிறது

பைத்தியம் காதலிக்கும்

பைத்தியத்தின் காதல் 

பைத்தியக்காரத்தனம் தான்

பைத்தியத்தின் ஏகாந்தம்

யாருக்கும் எந்த சலனத்தையும்

உண்டாக்காது

பைத்தியத்தின் சொற்கள்

யாருக்கும் புரிய அவசியமில்லை

பைத்தியத்தின் சுவாசம் குறித்து

யாரும் கவலைப்பட அவசியமில்லை

பைத்தியத்தின் உணவு குறித்தும்

அவசியமில்லை

பசித்தால் கையேந்தப் போகிறான்

பைத்தியத்தின் இருப்பை

யாரும் பார்த்துக் கொண்டேயிருக்க

என்னவிருக்கிறது

காணாமல் போனால் 

பைத்தியம் எங்காவது போயிருக்கும்

என்று சொல்லிக் கடக்கலாம்

பைத்தியத்தின் பார்வைக்கு இரங்கி 

யாரும் கண்ணீர் துடைத்து

வீட்டில் சேர்த்துக் கொள்ளப் போகிறார்களா

பைத்தியத்தின் பாடலுக்கு

யாரும் தலையாட்ட வேண்டியதில்லை

பைத்தியத்தின் வேண்டுகோள்

ஒன்றே ஒன்றுதான்

அதன் காதுபட

பைத்தியம் என்றழைக்க வேண்டாம்

என்பது மட்டுமே.


இனியொரு போதும்

பைத்தியம் என்றழைக்காதே

என் காதல் 

இன்னும் பைத்தியமாகிவிடும்...


யாழ் தண்விகா