Sunday, 27 March 2022

"விசா"வுக்காகக் காத்திருக்கிறேன் #டாக்டர் பி. ஆர்.அம்பேத்கர்

 




"விசா"வுக்காகக் காத்திருக்கிறேன்


டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்


திராவிடர் கழக வெளியீடு


விலை ரூ.20 பக்கங்கள் 32


வாழ்க்கை முழுதும் போராட்டம் என வாழ்ந்த ஒரு புரட்சியாளரின் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள் நினைவலைகளாக. ஓர் இந்து, தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மனிதர்களுக்குச் செய்த அயோக்கியத்தனத்திற்கு கொஞ்சமும் குறையாது பார்சி, முகமதியர், கிறித்துவர் மதத்தவர் செய்த செயல்களும் என்பதை தன் வாழ்வில் நிகழ்ந்த செயல்கள் மூலம் கூறுகிறார் அம்பேத்கர். மருத்துவம் பார்க்க தாழ்த்தப்பட்டோர் வாழும் தெருவுக்குள் வராமல், தெருவை விட்டு வெளியே நோயாளியை அழைத்து வரச் சொல்லும் மருத்துவரின் குரூரம், படித்து வேலைக்கு வந்தபின்னும் அவன் மேல் தீண்டாமை முறையைப் பின்பற்றும் சமூகம் என தான் கண்ட நிகழ்வுகளையும் நூலில் குறிப்பிட்டுள்ளார் அம்பேத்கர்.


வாசிக்க வேண்டிய நூல். மேலும்இந்த சமூகத்தில் நிலவிய சாதியக் கொடுமைகளை அறியவும் அதன் நீட்சியாக இன்னும் நடைபெறும் சாதியக் கொடுமைகளைக் களையவும், சமூகம் நல்வழிப் பாதையில் செல்ல விரும்பும் உள்ளங்கள் எல்லோரிடமும் கொண்டு செல்ல வேண்டிய நூலும் கூட.


யாழ் தண்விகா 


❣️









Thursday, 24 March 2022

தேவதை புராணம் #சி.சரவண கார்த்திகேயன்


தேவதை புராணம்

சி.சரவண கார்த்திகேயன்

Saravanakarthikeyan Chinnadurai 

எழுத்து பிரசுரம்

78 பக்கங்கள் 90 ரூபாய்


      காதல் என்பது வரம். யோசித்துப் பார்த்தால் காதல் கிடைப்பதற்காக, கிடைத்த காதலை தக்க வைப்பதற்காக, விலகிப்போன காதலை நினைப்பதற்காக நாம் செய்யும் எல்லாம் அபத்தம்தான். ஆனபோதிலும் காதல் என்பது சுனையில் ஊறும் ஊற்று. காதல் வழக்கமாகப் பொழியும் மழையின் ஊடே வந்து விழும் ஆலங்கட்டி. காதல் உயிரைப் பூக்கவைக்கும் அற்புதச் செடி என்று சொல்லிக்கொண்டே இருக்கிறோம். அது கணநேரத்தில் பிரசவிக்கப்படும் மாய தேவதையும் தான். உடனிருக்கும். கிச்சுக்கிச்சு மூட்டும். மயக்கம் உண்டாக்கும். அழவைக்கும். அச மந்தமாகத் திரியவைக்கும். எப்படி நாம் அதனோடு இதயம் கோர்த்துத் திரியவேண்டும் என்றுணர்தல் பெரும் கலை. அதைச் செய்யத் தெரிந்தால் எப்போதும் காதலோடு திரியலாம். 

 


       தேவதை புராணம் கவிதைத் தொகுப்பு என்பதை விட காதலால், காதல் சொற்களால், காதல் செயல்களால் நிரம்பிய தொகுப்பு. காதலித்துக் கைத்தலம் பற்றிய தன் மனைவிக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறார் கவிஞர். காலம் முழுக்க செய்த, செய்யும், செய்யப்போகும் காதலுக்குச் செய்திருக்கும் ஆகப்பெரும் மரியாதையாகக் கொள்ளலாம் தொகுப்பை. முன்னுரையில் இத்தொகுப்பு பற்றிக் கூறும்போது சங்ககாலத் தலைவி கூற்று போல இது சம காலத் தலைவி கூற்று என்கிறார் கவிஞர். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, மற்றும் பேரிளம் பெண் ஆகிய ஏழு பருவங்களிலும் ஒரு பெண்ணில் உண்டாகும் மனத்தின் பேராசையைக் கவிதை என்ற கட்டுக்குள் நிறுத்தி வார்த்திருக்கிறார். பெண்ணின் இடத்தில் நின்று பெண்ணின் வலியைப் பேசுதல் தான் சிறப்பாக இருக்கும் என்பார்கள். இங்கு கவிஞர் ஆணாக இருப்பினும் பெண்ணின் ஆசைகளை, விருப்பை, ஏக்கத்தினைப் பதிவு செய்திருக்கிறார் அற்புதமாக. 


          பெண்ணின் பார்வை அனைத்தும் மிக நாசூக்காக இருக்கும். அவர்கள் பார்க்காத கோணங்களைக் கூட கவிஞர் என் பேதையின் விருப்பம் இப்படிப்பட்டதாக இருக்கும், இப்படியும் இருக்கும் என்கிறார்.

“தெருவோரம் நின்ற வாக்கில்

சுவற்றோவியம் வரைந்தபடி

வெளிர் மஞ்சள் நிறச் சிறுநீர்

கழிக்குமுந்தன் சௌகரியம்

பொறாமை தருகிறதெனக்கு”

இந்த வரிகள் வெறுமனே காதலை மட்டுமா சொல்கிறது? பெண்ணின் விருப்பம் என்பதற்குள் தொனிக்கும் சுதந்திரம் என்பதையும் தான் சொல்கிறது. 


“நீயும் நானும் 

சேர்ந்து நடக்கையில்

சில சமயம் விரலுரச,

பரஸ்பரம் புன்னகைப்போம்-

அதற்கு என்ன அர்த்தம்?”

வாழ்வின் பல சூழலில் இது போன்று பலருக்கு நிகழ்ந்திருக்கலாம். பருவங்களைப் பிரித்து இதனை பெதும்பை பருவத்தில் வரும் கவிதையாக கவிஞர் வைத்திருக்கிறார். 8 முதல் 11 வயதின் நினைவை மீட்டுக் கொடுக்கிறது வரிகள். புன்னகையை விட அங்கு வேறொன்றும் அடையாளம் காணப்பட்டிருக்காது எனினும் அந்த மகிழ்வு அட்டகாசமாக இருக்கிறதில்லையா...


        12 முதல் 13 வயதுப் பருவம். பருவத்திற்கான பருவம். முதல் கவிதை இப்படித் தொடங்குகிறது.

“நான் பூப்படைந்த கணத்தில்

என்ன செய்து கொண்டிருந்தாய்

நீ”

ஒரு விசாரணை போல் இருக்கும் வரிக்குள் அப்பெண் தனக்குப் பிடித்தவனிடம் கேட்பது அதற்காக அல்ல. அந்தக் கணத்தில் அவன் என்ன செய்தான் என்பதைத் தெரிந்து அடையும் சிறு பூரிப்புக்காக, சிறு மகிழ்வுக்காக. சிறு குறுகுறுப்பிற்காக. எனக்கு இப்படி ஆச்சு தெரியுமா... அப்ப நீ என்ன பண்ணிட்டிருந்த என பூப்படைந்த ஒரு பெண் தனக்குப் பிடித்தவனிடம் கேட்பதுபோல் கேட்டுப் பாருங்கள். அந்த வரிக்குள் இருக்கும் பருவத் தேடலின் ஆதி அந்தம் உணரலாம்.


“நீ அழுந்தப் பார்த்தாலே

தள்ளிப் போகிறதென்

மாத விலக்கு நாட்கள்”


“தீட்டுக் கழியும் நாட்களில்

தனியாயுன்னிடம் மாட்டி

அவஸ்தைப்படுவேன் – சுகம்” 

இப்படியான கவிதைகள் மத்தியில், நின்று நிதானித்து அந்தச் சூழலுக்குள் சென்று ஒரு பொழுதைப் பார்க்கும் வண்ணம் ஒரு கவிதை. அதனை கொண்டாடுதல் என்பதா? வலியைத் தாங்கும் இளம் குருத்துகள் மனம் அறிந்து கலங்குவதா? அல்லது பிடித்தவன் முன்னால் இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது என்பதை அறிந்து உள்மகிழ்வதா...? எனப் பல எண்ணங்கள். 

“உன்னிடம் சொல்லியதில்லை இதுவரை-

உன்னைப் பார்த்துக்கொண்டிருந்த போதே

வகுப்பிலொரு சமயத்தில் விலக்கானதை”

இப்படி மாத விலக்கு குறித்த கவிதைகள் தொடர்ந்து அந்தப் பருவத்தின் பார்வைகள் எப்படியிருக்கும் என்பதாக நீள்கிறது கவிதைகள். காதல் பெருக்கெடுத்து ஓடுவது தெரியாமலே ஓடும் தருணம். 

‘என்னிடம் எதை ரசிப்பதென

விவஸ்தையே கிடையாது-

போடா, காதல் பொறுக்கி!


           மடந்தைப் பருவத்தின் சேட்டைகள் வெட்கம், கள்ளத்தனம், முத்தம், காதல் அறிதல், பகிர்தல் எனப் புதுப் பாதையில் பயணிக்கிறது. 

“யாரோ தூரக்குரலழைக்க

நமைத் தனியே விடுத்து

உனதன்னை விலகிய 

சிறு இடைவெளியில்

எனைக் கதவடைத்துக்

கலைத்தவன்தானே நீ”

செய்வான் அவன் எனினும் எதிர்பார்த்துக் காத்திருப்பவள் அல்லது எதிர்ப்பைக் காட்டாது ஏற்றுக்கொள்பவள் என மடந்தை இருப்பாள் என்பதை வரிகள் சொல்கிறது. இல்லறத்திற்குள் கண்டாடும் சுகங்கள் கவிதைகள் என்றும் சொல்லலாம் காட்சிப் படுத்துதல் என்றும் சொல்லலாம் எனுமளவு சிறப்பு.

“உச்சம் ஒரே கணம்

உனக்கு – எனக்கோ

ஒவ்வொரு கணமும்”


“காதோரம் 

கழுத்தோரம்

உதட்டோரம்

உயிரோரம்

பரவும் தீ – நீ”


“உன் காமம் பிடிக்கும்;

அதைவிடப் பிடிக்கும்

அதற்கும் முந்தைய...”


           காதல் வாழ்வின் உச்ச காலத்தில் (வயது 31-40) இல்லறத்தின் மேல் பூக்கத் தொடங்கும் ஆசுவாசம், நம்பிக்கை, வாழ்ந்த காலத்தினால் உயிரில் உண்டாகிக் கிடக்கும் கிளர்ச்சியால் மந்தகாசம் உண்டுபண்ணும் சுகம் இத்தருணங்கள் கண்ணீரையும் வரவழைக்கும் போல. ஏற்கனவே சொல்லியிருந்தாலும் “பெண்ணின் மொழியில்” இக்கவிதைகளை வாசித்துப் பாருங்கள். எத்தனை சுகம்...

“உனக்கெந்தன் தாய்மையின்

கருவறைக் கதகதப்புத் தராத

துக்கமுண்டு என்றுமெனக்கு” 

இருக்கும் பேரன்பு எல்லாவற்றையும் உனக்குத் தந்துவிட்டேன். தராத மிச்சம் இதுதான் எனமளவு காதல் சொல்லும் வரிகள். 

“உனக்கு முன்னர் நானெனில்

எனக்கு நீ நீராட்ட வேண்டும்

எனக்கு முன்னால் நீயெனில்

உனக்கு நான் தீமூட்ட வேண்டும்”

இறப்பு நேருமிடத்திலும் காதலின் ஆசை எப்படிப்பட்டதாக இருக்கிறது...? கண்ணீரோடும் வாசிக்க கவிதைக் காதல் வழி சொல்லுகிறது.


       இன்னும் மின்னும் பல கவிதைகள் தொகுப்பெங்கும். காதலைக் காதலிக்கும் ஒவ்வொரு ஜீவனும் வாசிக்கவேண்டிய தொகுப்பு. கூடு விட்டுக் கூடு பாய்ந்து ஒரு ஆண் பெண்ணின் இடத்தில் நின்று எழுதியதன் மூலம் காதலனின் விருப்பம் இதுவெனவும் அறியலாம். ஒரு பெண் ஆணுக்கு அளிக்க வேண்டிய காதலையும் அறியலாம். சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை. சில பல இடங்களில் சொல்லித் தெரிந்துகொண்டால் / கேட்டு/ வாசித்துத் தெரிந்துகொண்டால் இன்னும் சிறக்கும் மன்மதக் காதல் கலை. முக்கியமாக கவிஞரை வாசித்தால் இன்னும் சிறக்கச் செய்யலாம்.


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா

 

Wednesday, 23 March 2022

காதல் - ஒரு சொல் கவிதை #யாழ் தண்விகா


❤️
காதல்
ஒரு சொல் கவிதை...

❤️
வைரம் பாய்ந்த மரம்
உறுதியாய் இருக்கும்

காதல் பாய்ந்த மனம்
மென்மையாய் இருக்கும்.

எனக்குள் பாய்ந்த
காதல் நீ.

❤️
அவ்வப்போது கேட்பாய்
ப்பா
என்னைப் பிடிக்கும்ல எப்போதும்...

அன்பின் அழகும்
காதல் அழகும் 
உன்னில் கூடும்போது
திகட்டி விடுவாயா என்ன...

❤️
அங்கங்களை
இதழ்களால் வர்ணிக்கும்போது
போங்கப்பா எனச் சொல்லும் 
நீதான்
எழுத்தால் வர்ணிக்கும்போது
வெட்கத்தால்
சொற்களை 
மேலும் வசீகரிக்கிறாய்...

❤️
ஒரு நாளில்
ஒரு பொழுதேனும்
உன் குரல் கேட்டுவிட வேண்டும்

காதல் மயக்கம்
பொல்லாதது...

❤️
தோளில் கை போட்டு
நடந்து வருகிறேன்
உன்னோடு...

என் கையை எடுத்து
உன் இடையில் வைத்து
நடக்கிறாய்
பேச்சு பேச்சாக
இருந்தபோதும்...

இது எப்படா நடந்துச்சு...

இனி நடக்கும்ல...

இன்னும் நிறைய நாளாகுமா...

வா இப்பொழுதே நடப்போம்...

❤️
உன் சட்டையில்
நம் வாசனை
நீ மட்டும் உள்ள சட்டை
தாயேன்

புதுச் சட்டையின் காலர்ல
மஞ்சள் படுதோ இல்லையோ
உன் மஞ்சத்தின் மஞ்சள் 
பட்டு விடுகிறது.
பிறகெப்படி
நான் மட்டுமிருப்பேன்...

❤️
கைகளுக்குள் ஊர்கிறது
சிலை தடவிய நுட்பம்
உன்னோடு வாழ்ந்த பின்...

❤️
உங்களோட வாழ்ந்த சந்தோசம் 
போதும்ப்பா
இனி நான் செத்தாலும்
கவலையில்ல

உன்னோட வாழ்ந்த சந்தோசம்
பத்தாதுப்பா
இன்னமும் நான் வாழவேண்டும்
உன்னோட

❤️
கூந்தல் கலைந்து
முகம் காம நிறம் போர்த்தி
கண்கள் செருகும் மயக்கத்தில்
எதுவும் பேசாமல்
வெட்கத்தில்
தோள் இழுத்து நெருங்கிப் படுத்து
உடலை சரணாகதியாக்கித் தந்து
மெல்லக் கண்கள் மூடுகிறாய்

காதல் மகுடம் மின்னத் தொடங்குகிறது.

❤️
அந்த நேரத்துக் கவிதைகளை
இதழ்ச் சொற்களால்
மீளாய்வு செய்யத் தலைப்படுவேன்

வேண்டாம் என்று
இரு கரங்களாலும்
என்னிதழ் மூடுவாய்

மீண்டும் இதழ் திறப்பேன்

உன்னிதழால் என்னிதழ் மூடுவாய்

அந்த நேரத்துக் கவிதைகள்
மீண்டும் புதிதாய் பூக்கும்...

யாழ் தண்விகா


 

Tuesday, 22 March 2022

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே... சி.சரவண கார்த்திகேயன்


கற்பதுவே கேட்பதுவே கருதுவதே...

சி.சரவண கார்த்திகேயன்

Saravanakarthikeyan Chinnadurai 

பக்கங்கள் 120 விலை 150

எழுத்து பிரசுரம்


நல்லதா நாலு விஷயம் தெரிஞ்சுக்கிட கட்டுரைகள் எப்போதும் உதவும் என்ற நம்பிக்கை உள்ளவன் நான். ஆனால் பல கட்டுரைத் தொகுப்புகள் படிக்கத் தொடங்கியவுடன் நம்மை கடித்து வைக்கத் தொடங்கிவிடும். அந்த வகைப்பட்ட எழுத்துகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு வாசிப்பவனைத் தன்வயப்படுத்தும் எழுத்து மட்டுமின்றி தான் சொல்ல வந்த கருத்தை ஆழமாகவும் எடுத்து வைப்பவர் சிஎஸ்கே என்றால் அது அதிகப்படி இல்லை. உள்ளபடிதான்.


மொத்தம் 16 கட்டுரைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளம். பாலு மகேந்திரா,  ஏ ஆர் ரஹ்மான், மிஷ்கின், இளையராஜா, 3, எந்திரன் என சினிமா தொடர்புடைய கட்டுரைகள் தவிர்த்து மேலும் 10 கட்டுரைகள். மையம் இல்லாமல் பார்த்துக்கொண்டு நிறை குறைகளை எப்போதும் கூறுவதுபோல் மேற்சொன்ன கட்டுரைகளிலும் கூறியுள்ளார். ரஹ்மான், சைக்கோ-மிஷ்கின் குறித்த கட்டுரைகளில் இதை வலுவாகவே காணலாம். இளையராஜாவை கவிராஜன் கதையை வைரமுத்து எழுதியது போல எழுத்தில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார். நன்றாக வந்திருக்கிறது. தொடர வாய்ப்பிருந்தால் தொடரலாம். 


பா.ராகவன் எழுதிய நூலுக்கு தொகுப்பாளர் தந்த முன்னுரையும் ஒரு கட்டுரையாக இருக்கிறது. அது இலக்கிய ஆர்வலர்களுக்கு புரியும் போலிருக்கிறது. ஜெகனின் ட்விட்டர் மொழி நூலுக்கு எழுதிய முன்னுரையும் இட்லி வடை வலைப்பூ பக்கம் குறித்தும் களிபத்துப்பரணி கட்டுரையில் சௌம்யா குறித்தும் இணைய தொடர்பான கட்டுரைகள் இருக்கின்றன. வலைத்தளம் இன்று வியாபித்திருக்கின்ற சூழலில் அவை தொடர்பான கட்டுரைகளை சுவாரசியத்தைத் தூண்டுவதாக எழுதியிருக்கிறார். நானே என்னுடைய ட்விட்டர் பக்கத்தை தூசி தட்டி சில ட்வீட்ஸ் போட வைத்துவிட்டது. அரட்டை கேள் சௌம்யா குறித்த கட்டுரை மிகச் சிறப்பாக இருந்தது. கூடுதலாக அவரின் 100 ட்வீட்ஸ் போனஸ் போல இருந்தது. காட்சிப்படுத்தியதற்கும் இக்கட்டுரைக்கும் தனியாக வாழ்த்துகள். 


தொலைக்காட்சியில் இன்று பொதுமக்களை வசியம் பண்ணும் பல நிகழ்ச்சிகள் வரத் தொடங்கிவிட்டன. அவ்வகையில் bigboss, மற்றும் நீயா நானா போன்ற நிகழ்ச்சிகள் குறித்த கட்டுரைகள். ஒன்று ஓவியாவைத் தொட்டு நீள்கிறது. முகம் என்ற கட்டுரை நீயா நானாவில் கலந்து கொண்டு பேசியதில் பேசாமல் விடுபட்ட விசயங்களைப் பேசுகிறது. முகம் தனித்துவமாக இருக்கிறது. புதிய ஆத்திசூடி நன் முயற்சி. இந்துக்களின் இப்தார் கட்டுரை மாநகர வாழ்க்கையும் நெரிசலும் அவசரமும் நம் கலாச்சாரங்களின் கழுத்தை நெரிப்பதை துயருடன் காட்சிப் படுத்தி உள்ளார். தொகுப்பின் முதல் கட்டுரை பெருமாள் முருகன் எழுதிய கெட்ட வார்த்தை பேசுவோம் என்ற நூலை நினைவுபடுத்தியது. கற்பதுவே கேட்பதுவே கருதுவதே கட்டுரை பத்தி வடிவிலான எழுத்தை, அவசர கதியில் இயங்கும் சமகாலப் போக்கில் அதன் அவசியத்தைக் கூறுவதாக அமைந்துள்ளது.


கட்டுரை ஒவ்வொன்றும் வாசித்தலை ரசித்துச் செய்ய வைக்கிறது. வாசித்தலில் வசிக்கவும் வைக்கிறது. 


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா

 

Sunday, 20 March 2022

மீயழகி சி. சரவணகார்த்திகேயன்

 மீயழகி

சி. சரவண கார்த்திகேயன்

Saravanakarthikeyan Chinnadurai 

98 பக்கங்கள் 120 ரூபாய்

எழுத்து பிரசுரம்



 காதலைப்  பற்றி, காமத்தைப் பற்றி கவிதைகள், கதைகள், கட்டுரைகள், துணுக்குகள் பல வந்திருக்கலாம். மீயழகி பெண்கள் மேல் அதீத அன்பை, காதலை, ரசித்தலைத் தூண்டும் ஒரு தொகுப்பு. கட்டுரைத் தொகுப்பு என்றாலும் ஒவ்வொரு தலைப்பும் அலுக்கவில்லை. பொதுவாகவே பெண்களைப் பற்றி எழுதுவதென்றால் போதை மை ஊற்றி எழுதுவார் சிஎஸ்கே.  இதில் கூறப்பட்டுள்ள பெண்கள் பற்றிக் கூறவே  வேண்டாம்.  இதில் அழகில் உச்சம் பெற்றுள்ள கேரளப் பெண்கள், ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே, கொஞ்ச காலத்துக்கு முன்னர் விடாது கொஞ்சல் மழையில் திளைக்க வைக்கப்பட்டிருந்த அனு ஸிதாரா, தற்போது கொஞ்சப்படும் பிரியங்கா மோகன் இப்படி பல அழகு ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள். வெளுத்து வாங்கியிருக்கிறார் கட்டுரை ஆசிரியர்.


 எழுத்தாளனுக்கு என்று நிறைய வேலைகள், பொறுப்பு இருக்கிறது.  சரி அதையெல்லாம் செய்வதோடு நின்றுவிட்டாரா? இல்லை.  பெண்களைப் பற்றி எழுதி அதையும் ஒரு புத்தகமாகப் போட்டு வச்சு எழுத்தாளருக்கு உள்ள பெருமையை இன்னும் அதிகப்படுத்தவே செஞ்சிருக்கார். பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா என்ற பாட்டைக் கேட்கும்போது கொண்டாடுவோம். நாமும் பாடுவோம். ஆனால் எழுதினால் மட்டும் தப்பாப் போகுமாம். போகட்டுமே. இதை எழுத்தாளன் எழுதாமல் யார் எழுதுவது.... எழுதுங்க எழுத்தாளரே இன்னும் பல்லாயிரம் பக்கம்...


 பெண்ணின் வசீகரம் என்பதை உணரத் தலைப்படா சமூகம் சீரழிந்து போகும்.  அழகு என்பது எது ? புறம் அகம் என்று எதைக் கூறுகிறோம்... எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது.  ஸ்ருதி ஹாசன் குறித்த கட்டுரை அவர் செல்லவேண்டிய தூரத்தைக் கூறிக் கவலைப் படுகிறது.  நிசப்தத்தின் பேரோசை தற்கொலை செய்துகொண்ட நடிகைகளின் பட்டியலைப் பதட்டத்துடன் எடுத்துவைக்கிறது. ஆண் சமூகம் பெண்ணை அணுகும் விதம்,  பெண்ணின் உச்ச பட்ச எதிர்பார்ப்பு என்பதையும் தாண்டி அரங்கேறும் தற்கொலைகள் பெண்ணின் உச்ச பட்ச கோழைத் தனத்தைக் காட்டுவதாகவே அமைந்திருப்பதைக் கட்டுரையை வாசிக்கும்போது உணரலாம்.  இப்படி நீளும் கட்டுரைகள் மத்தியில் மின்மினிகள் என்ற தலைப்பில் உள்ள கட்டுரையும் ஒன்று. அதில் கடைசி மின்மினியாக ஜீவஜோதி. பல ஆண்டுகள் பார்த்த முகம். அண்ணாச்சியை எத்தனை பேர் நினைத்தோம்... ஆனால் ஜீவஜோதி நினைவில் நிற்கிறார்... என்ன காரணம்...? போகும் போக்கில் அல்ல. காரணத்துடன் கட்டுரைகளில் வாழ்கிறார்கள் பலர். 


 பல காலங்களில் பலர் நமக்குள் உண்டாக்கிய அழகுக் கிளர்ச்சியை நாம் வெளிக்காட்டாமல் கடந்ததைப் போல் ஒரு பாவச் செயலைச் செய்யாமல் அதை எழுத்துப் படையலாக்கி நமக்கு முன் வைத்து புண்ணியம் தேடிக்கொண்டார் தோழர் சிஎஸ்கே. தங்களால் அழகிகளை, மீயழகிகளை மீண்டும் எழுத்துகள் மூலம் பார்க்கும் வாய்ப்பு நல்கியமைக்குப் பேரழகு நன்றியும் பேரன்பும். தொடரட்டும் தங்கள் வனப்பு காட்டும் எழுத்து...!


வாழ்த்துகள் தோழர்...


யாழ் தண்விகா



Monday, 13 December 2021

இரவாக நீ... நிலவாக நான்....

 #இது_என்ன_மாயம்!



#இரவாக_நீ 

#நிலவாக_நான்...என்ற பாடல்


மழை மனதிற்குள் மெல்ல மெல்ல இறங்கி உயிரின் வேர்கள் பரவும் திசை அனைத்தையும் தொட்டு தொட்டு தொட்டு மெல்ல நிலமெங்கும் படர... பரவ... உயிர்ப்பிக்கிறதா அல்லது மயக்கமடையச் செய்கிறதா என எண்ணக் கூடிய அளவிற்கு ஒரு சுகந்தம் அளிப்பதுபோல்...


எப்பொழுதெல்லாம் மழையில் நனைய வேண்டுமோ அப்பொழுதெல்லாம் நான் இரவாக நீ நிலவாக நான் என்று பாடலுக்குள் குடிபுகுந்து கொள்கிறேன். வேறு மாதிரியாக கூறுவது என்றால் இப்பொழுது எல்லாம் பெரும்பாலும் இந்தப் பாடல் தரும் மழையில் நனைந்து கொண்டு தான் இருக்கிறேன் ஒரு நூறு முறைக்கு மேல் இந்தப் பாடலை கேட்டிருப்பேன்... நனைந்திருப்பேன்...


சாரலுக்கு அடுத்த நிலை. மழைக்கு முந்தைய நிலை... அப்படிப்பட்ட ஒரு பதத்தில்தான் பாடல் தொடங்குகிறது...

உள்ளிருந்து வரும் பெண் குரலில்


"இரவாக நீ 

நிலவாக நான்..."

என ஒலிக்கத் தொடங்கும் பாடல் வரிகளை அடுத்து அப்பெண் குரலை கொஞ்சமும் இம்சை செய்யாமல் ஆண்குரல் அடுத்து தொடங்குகிறது 


"தொலையும் நொடி கிடைத்தேனடி இதுதானோ காதல் அறிந்தேனடி... 

கரை நீ பெண்ணே 

உன்னைத் தீண்டும் அலையாய் நானே ஓ... நுரையாகி நெஞ்சம் துடிக்க..."

விளிம்பில் நின்று வாழ்வைப் பார்க்கும் ஒருவனுக்கு காதல் பரிசு கிடைத்தால் எப்படியிருக்கும் என்பதை பாடல் வரிகளைப் பாடி பார்த்தால் மட்டுமே உணர முடியும்...


கொஞ்சம் இசை கசிகிறது வரிகள் ஏதுமில்லாமல். மீண்டும் பல்லவி வரிகள்.

தொடரும் இசை முதல் சரணத்தின் பாடல் வரிகளைக் கொண்டு வருகிறது....


காதலன் பாடுகிறான்...

"விழி தொட்டதா 

விரல் தொட்டதா 

எனது ஆண்மை தீண்டி 

பெண்மை பூ பூத்ததா..."

ஒரு பார்வை 

பார்த்தவுடன் காதல் 

அந்த காதலைத் தாண்டி கூடல் என்பதை மிகவும் நளினமாக இந்த மூன்று வரிகளுக்குள் அடக்கி இருக்கிற வித்தையை என்னவென்று சொல்வது...

அடடா...


காதலி பாடுகிறாள்...

"அனல் சுட்டதா 

குளிர் விட்டதா 

அடடா என் நாணம் 

இன்று விடை பெற்றதா..."

இந்த மூன்று வரிகளையும் மேற்சொன்ன மூன்று வரிகளையும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வைத்துப் பார்த்தால் இன்னும் ஒரு கவித்துவத்தை உணர முடியும்.


விழி தொட்டதா அனல் சுட்டதா 

விழி தொட்டதால் அந்தப்பார்வை அனல் போல் சுட்டதா 


விரல் தொட்டதா

குளிர் விட்டதா

விரல் தொட்டதால் உடம்பில் படர்ந்திருந்த குளிர் விட்டு விட்டதா

என்று பொருள் கொள்ளலாம்..


எனது ஆண்மை தீண்டி பெண்மை பூ பூத்ததா 

அடடா என் நாணம் இன்று விடை பெற்றதா 

ஒரு பெண்மையை பெண்மை நிலையிலிருந்து வெளிக்கொணரக்கூடிய ஒரு தருணமாக ஒரு ஆகச்சிறந்த காமம் அமையும். அந்தச் சூழலை இந்த வரிகளில் பார்க்கமுடியும் எனது ஆண்மை தீண்டி பெண்மை பூ பூத்ததா என்ற அவனின் கேள்விக்கு அடடா என் நாணம் இன்று விடை பெற்றது என்று இவள் கூறுவதாக பொருத்திப் பார்க்கலாம்...


காதலன் பாடுகிறான் 

"நீ நான் மட்டும் 

வாழ்கின்ற உலகம் போதும் 

உன் தோள் சாயும் இடம் போதுமே..."

பல பாடல்களில் நாம் கேட்டிருப்போம் ஒரு தனி உலகம் அதில் நாம் மட்டும் சுதந்திரமாக காதலை வாழ்வை அனுபவிப்போம் என்று பொருள்படக்கூடிய வரிகள் இருக்கும். ஆனால் இந்த வரிகளில் காதலன் என்ன கூறுகிறான் என்று உற்று நோக்கினால் உனக்கும் எனக்குமான ஒரு தனி உலகம் என்பது முதல்வரி 

ஆனால் அடுத்த வரியில் உன் தோள் சாயும் இடம் போதுமே...

ஒரு உலகம் முழுவதையும் வாங்கிக் கொண்டாலும் உன் தோள் சாயும் இடம் போதுமே என்று கூறும்பொழுது அந்தத் தோள் தரக்கூடிய ஒரு சுகந்தம் வேறு எங்கும் கிடையாது. அந்த உலகத்தில் எங்கும் இல்லாத ஒரு சுகம் அவளின் தோளில் இருக்கிறது. ஆக அது காமத்திற்கு அப்பாற்பட்ட ஒரு காதல். அந்தக் காதல் மட்டுமே இந்த வரிகளை தரமுடியும்.


காதலி பாடுகிறாள் 

"உன் பேர் சொல்லி 

சிலிர்க்கின்ற இன்பம் போதும்

இறந்தாலும் மீண்டும் பிழைப்பேன்... ஒன்றோடு ஒன்றாய் கலக்க 

என்னுயிரே காதோரம் காதல் உரைக்க..."

இந்த வரிகளை ஒரு பெண் பாடுவது போல் பாடலில் வருகிறது. ஆனால் இந்த வரியைக் கேட்கும் பொழுது ஒரு ஆணாக நானும் அந்த வரிகளை உச்சரித்து பார்க்கிறேன். உன் பேர் சொல்லி சிலிர்க்கின்ற இன்பம் போதும் என்னும் பொழுது அவரவர் மனதில் நிறைந்து இருக்கக்கூடிய அந்தக் காதலியின் பெயரை உச்சரிக்கக் கூடிய ஒரு கட்டளையை இந்த வரிகள் பிறப்பிக்கிறது என்று நான் உணர்ந்தேன். நானும் அவள் பெயரை உச்சரித்து பார்த்தேன் அவ்வளவு அற்புதமாக அந்த வரிகள் இருபாலினருக்கும் பொருந்துவதாக அமைந்திருக்கிறது. 

பெயர் உச்சரிக்கும் அந்த சுகந்தம் என்பது இறந்தாலும் மீண்டும் பிழைப்பதற்கான ஒரு அசாத்தியத்தை சாத்தியப்படுத்துவதாக ஒரு மெட்டு இந்த வரிகளில் காணக்கிடைக்கும். முக்கியமாக இந்தப் பாடலில் வரக்கூடிய என்னுயிரே என்ற ஒரு  சொல் மீண்டும் மீண்டும் மீண்டும் உயிரை ஒரு பாடு படுத்தவே செய்யும். அத்தனை அற்புதமாக அத்தனை இலாவகமாக உயிரை தாலாட்டக்கூடிய ஒரு உணர்வை தரக்கூடிய சொல்லாக அது அமைந்திருக்கிறது.


சரணம் இரண்டில் அவன் பாடுகிறான் "மழை என்பதா 

வெயில் என்பதா 

பெண்ணே உன் பேரன்பை 

நான் புயல் என்பதா..."

 ஒரு பெண்ணின் காதலை எதனுடன் ஒப்பிடுவது 

அதனை கொட்டும் மழை என்று சொல்வதா 

நனைக்கும் மழை என்று சொல்வதா

நனையத் தூண்டும் மழை என்று சொல்வதா 


சுடும் வெயில் என்று சொல்வதா 

இதமாக இருக்கும்  வெயில் என்று சொல்வதா 

ஒரு பயிருக்கு தேவையான அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான வெயில் என்று சொல்வதா 


இத்தனையையும் கேட்டு விட்டு கடைசியாக மீண்டும் ஒரு கேள்வியை முன் வைக்கிறான் 

பெண்ணே உன் பேரன்பை 

நான் புயல் என்பதா 

இந்த மழைக்கும் வெயிலுக்கும் அப்பாற்பட்ட ஒரு பார்வையாக பேரன்பை புயல் என்று நான் கூறி கொள்ளட்டுமா அப்படி புயல் என்றால் அது சாத்தியப்படுமா... 

சில புயல்கள் மண்ணிற்கு மழையைத் தருவிக்கும் 

அந்த மழை மண்ணை வாழவைக்கும்

மண்ணிற்கு தேவையான ஒரு புயலாக இருக்கும் ஆதலால் அந்தப் பேரன்பை புயலோடு ஒப்பிட்டு கேட்கிறான் என்று நாம் நினைத்துக் கொள்வோம்


அடுத்து காதலி பாடுகிறாள் 

"மெய் என்பதா 

பொய் என்பதா 

மெய்யான பொய் தான் இங்கே 

மெய் ஆனதா..."

இந்தக்காதல் என்பது சாத்தியப்படும் பொழுது எல்லாம் வசந்தம் பெறும். எல்லாம் இனிதே நிறைவேறிவிட்டது என்ற எண்ணத்தில் அந்த கனவு வாழ்க்கையை வாழ தொடங்கியதால் இதனை மெய் என்று கூறுவதா 

அல்லது ஒரு கனவு கண்ட வாழ்க்கையை நனவில் அடையத் தொடங்கி விட்டால் அந்த நனவு வாழ்க்கையின் கனவு போலத் தோன்றும் என்பதால் பொய் என்பதா என்று கேள்வியை முன்வைக்கிறான் காதலன்.  இது மெய்யும் இல்லை பொய்யும் இல்லை இரண்டுக்கும் நடுவில் ஆனது என்பதை மனதில் கொண்டு இவள் மெய்யான பொய் தான் இங்கே மெய் ஆனதா என்கிறாள். நன்றாக யோசித்து பார்த்தோமென்றால் ஒரு காதலை அனுபவிக்க மட்டுமே முடியும்.  அது நினைவெனினும் வாழ்ந்து கொண்டிருக்க முடியும்.  ஆக மெய்யான பொய் ஆம் நினைவு என்பதைப்போல இந்த காதலும் மெய்யான பொய் போல நனவு போன்ற கனவு போல கனவு போன்ற நனவு போல அத்தனை அழகானது.


காதலன் பாடுகிறான் 

"அடியே பெண்ணே 

அறியாத பிள்ளை நானே 

தாய் போல் என்னை 

நீ தாங்க வா..."  என்று.

சரணம் ஒன்றில் 

நீ நான் மட்டும் 

வாழ்கின்ற உலகம் போதும் 

உன் தோள் சாயும் இடம் போதுமே

என்றவன் தான் இங்கு 

அடியே பெண்ணே 

அறியாத பிள்ளை நானே 

தாய் போல் என்னை 

நீ தாங்க வா... 

என்கிறான்.


ஒரு தாய் தன்னுடைய தோளில் தன்னுடைய இடுப்பில் தன்னுடைய மடியில் போட்டு தன் குழந்தையைத் தாங்கிக் கொள்வதைப் போல காதலன் தன்னுடைய காதலியை, தாய் போல் என்னை நீ தாங்க வா என்று அழைக்கிறான். வரிகளோடு நாம் பயணிக்க இந்த மெட்டு இன்பத்துடன் கூடிய எளிமையைக் கொண்டுள்ளது. 


காதலன் கேட்டுவிட்டால் காதலி செய்து தராமல் போய் விடுவாளா... ஆகையால் அவனுடைய ஆசையை அவளும் நிறைவேற்றுவதற்கு தயாராகிறாள்... பின்வரும் வரிகள் வாயிலாக...

"மடி மேல் அன்பே 

பொன் ஊஞ்சல் நானும் செய்தே

தாலாட்ட உன்னை அழைப்பேன்..."

இந்த வரிகள் ஒவ்வொன்றும் கற்பனைக்கு எட்டாத ஒரு உலகத்தை கண் முன்னே நிறுத்தும். கற்பனையான வரிகள். ஆனால் அந்த கற்பனையில் வாழ்ந்து பார்க்க தூண்டும் வரிகள்.


தொடர்ந்து 

"ஒன்றோடு ஒன்றாய் கலக்க 

என் உயிரே 

காதோரம் காதல் உரைக்க...

இரவாக நீ  இரவாக நீ

நிலவாக நான் நிலவாக நான்...

உறவாடும் நேரம் சுகம் தானடா..."

என பாடல் நிறைவு பெறுகிறது.


மறைந்த நா.முத்துக்குமார் பாடல் வரிகள். இசை ஜி வி பிரகாஷ் குமார்.

இறப்பிற்கு முன்னான உன்னுடைய கடைசி ஆசை என்னவென்று கேட்டு நிறைவேற்றக்கூடிய சந்தர்ப்பம் ஒன்று அமைந்தால் 

என் முதல் ஆசையாக என்னுடைய காதலியின் மடியில் அவளைப் பார்த்துக் கொண்டே என் உயிர் பிரிய வேண்டும். அல்லது இப்படி பாடலொன்றில் அவளோடு வாழ்ந்து கொண்டு இந்த உயிர் மறைய வேண்டும் என்றுதான் வேண்டுவேன். 


நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு பாடலை நூறு முறை அளவிற்கு கேட்டு இருக்கிறேன் என்றால் அது இந்தப்பாடல் தான். வாய்ப்பு இருந்தால் கண்களை மூடிக்கொண்டு இந்தப் பாடலை ஒலிக்கவிட்டு நீங்களும் கேளுங்கள். மன்னிக்க நீங்களும் வாழுங்கள் உங்களுக்கு பிடித்தமான காதலியோடு அந்த கற்பனை உலகத்தில் நீங்கள் வாழலாம். அதி அற்புதம் காணலாம்.




யாழ் தண்விகா

Saturday, 23 October 2021

கடவுளைத் தோற்றுவித்தவன்

 சிறார் கதை 2


கடவுளைத் தோற்றுவித்தவன்

பெ.விஜயராஜ் காந்தி

 பள்ளிக்கூடத்திலிருந்து வந்தும் வராததுமாக பையைத் தூக்கி எறிந்துவிட்டு “அம்மா உனக்கு எதுக்கும்மா நாகம்மான்னு பேரு வச்சாங்க” என்றான் நவீன். “ஏன்டாப்பா இந்தப் பேருக்கு என்ன குறைச்சல்? நாகம்மா மகனுக்கெல்லாம் பள்ளிக்கூடத்தில் இடமில்லைன்னு உங்க பள்ளிக்கூடத்துல சொல்லிட்டாங்களா” என்றாள் நாகம்மா. 


 “கிண்டல் பண்ணாதம்மா. என்னோட வகுப்புல படிக்குற கண்ணன், உங்கம்மா பேரு நாகம்மா தான. நாகப்பாம்பு மாதிரி படமெடுத்து ஆடுமான்னு கேக்குறான். எனக்குக் கோவம் கோவமா வருது. ஒரு நா இல்லைன்னாலும் ஒருநா என்கிட்ட செமக்க அடி வாங்கப் போறையான்” நவீன் கோவமாகப் பேசினான். 


 “நாகம்மாங்குறது சாமிப் பேருன்னு அவங்கிட்ட சொல்லவேண்டியது தானடா. இல்லன்னா சாருகிட்ட சொல்லவேண்டியது தானடா. சாரு கண்டிச்சு வப்பாருல்ல. இவ்வளவு கோவம் ஆகாதுடா நவீன்” அவனைச் சாந்தப்படுத்தும் விதமாக நாகம்மா பேசினாள்.


 “சரிம்மா. நாளைக்கு நான் சார்கிட்ட சொல்றேன் அவனை. அதுக்கப்புறமும் ஏதாவது சொன்னான்னா அவனுக்கு இருக்கு” என்ற நவீனை முறைத்துப் பார்த்த நாகம்மா சட்டென யோசனை வந்தவளாக சிரித்துக்கொண்டே “ சரிடா. எம்பேருக்கே அவன் கிண்டல் பண்ணுனதுக்கு இவ்வளவு கோவப்படுறயே. ஒன் தாத்தா பாட்டி பேரு உனக்குத் தெரியும்ல. காத்தவராயன். இருளாயி. இதெல்லாம் அவனுக்குத் தெரிஞ்சா இன்னும் கிண்டல் பண்ணுவான்ல. அப்ப என்னடா பண்ணுவ” என எதிர்க் கேள்வியைக் கேட்டாள். “அது தெரிஞ்சாத்தான. அப்படியே தெரிஞ்சாலும் அதையும் சாமிப்பேருன்னு சொல்லி சமாளிச்சுடுவேன்” என்ற அவனை “என்னது சமாளிச்சிடுவியா? உண்மையிலேயே அது சாமிப் பேர் தான்டா” என்ற நாகம்மாளை நிமிர்ந்து பார்த்து “என்னம்மா சொல்ற? நெசமாவா?” என்றான் நவீன் ஆச்சரியத்துடன்.


 “ஆமா. இதெல்லாம் சாமிப் பேர் தான். உன் பாட்டி பேர் இருளாயி. அந்தக் காலத்துல ஆதி மனுசன் இருட்டைப் பார்த்து மிகவும் பயப்படுவான். நெருப்பைக் கண்டுபிடிக்குறதுக்கு முன்னரும் பின்னரும் இருட்டின் மேலிருந்த பயம் அவனுக்குப் போகவே இல்லை. இரவு நேரங்களில் எதையாவது பார்த்து பயந்து அதிர்ச்சியில் இறந்து போவது அடிக்கடி நடந்தது. அவங்களைப் பேய் அடிச்சு செத்ததாக நெனச்சாங்க. அதனால இதையெல்லாம் கோரக் கடவுள்களாக நெனச்சு அதைத் திருப்திப்படுத்த தம்மோட குழந்தைகளுக்கு கருப்பன், கருப்பாயி, இருளன், இருளாயின்னு பேர் வச்சாங்க. அப்படி வந்த பேர் தான் இருளாயி. புரியுதாடா?” என்றாள் நாகம்மா.


 “புரியுதும்மா. அப்ப தாத்தாவுக்கு எதுக்கு காத்தவராயன்னு பேரு?” என்று கேட்டான் நவீன். “ஆதி காலத்தில் இந்த மண்ணு உழுதுபோடாம அப்படியே கிடந்துச்சு. பெரும் சூறாவளிக் காத்து அப்பப்போ அடிக்கும். அந்தச் சூறாவளி மேல் மண்ணை அள்ளிப் பறக்கும்போது அதிலிருக்க பாஸ்பரஸ் காத்தோட சேர்ந்து தீப்பிடிக்கும். அதைப் பார்த்த ஆதிமனுசன் அதை கொள்ளிவாய்ப் பேய் என நெனச்சான். அந்தப் பயத்திலிருந்து விடுபட காற்றை வழிபட ஆரம்பிச்சான். அப்படி காற்றைத் திருப்திப் படுத்த உண்டான பேர் தான் உன் தாத்தா பேரு, காத்தாயி, காத்தப்பன், காத்தவீரி, காத்துக்கருப்பு இப்படிப் பேரெல்லாம்” என்ற நாகம்மாவை வச்ச கண் மாறாமப் பார்த்துக்கொண்டிருந்தான் நவீன். 


 “எவ்ளோ விசயம் தெரிஞ்சு வச்சிருக்கம்மா. சூப்பர்ம்மா. அப்படியே உன் பேருக்கும் ஒரு விளக்கத்தைச் சொல்லிடும்மா. யார் கேட்டாலும் இனி நல்லா பதில் சொல்லிக்கிறேன்” என்றான் நவீன். “பாம்பைக் கண்டால் படையே நடுங்கும்” என்ற பழமொழியைக் கேட்டருக்கிறயா?” என்றாள் நாகம்மா. “ம்‌ம்‌ம் கேட்ருக்கேன்” என்றான் நவீன். “ஆதி மனுசன் நல்லா பலசாலியா இருந்தான். வேட்டைக்குப் போற வழில ஏதாவது பாம்பு கடிச்சாக்கூட அதுக்குப் பசிக்கும்போல. அதான் கடிக்குதுன்னு நெனச்சிட்டே நடந்து போவான். கொஞ்ச தூரம் போன பின்னாடி விஷம் தலைக்கேறி உயிர் போயிரும் கடிச்சவனுக்கு. கூடப் போற மத்த ஆளுங்க எல்லாம் அவன் தூங்குறான்னு நெனச்சு விட்டுட்டுப் போயிடுவாங்க. கொஞ்சநா கழிச்சு அந்த உடம்பு கழுகு கொத்தி புழு ஏறி கெட்ட வாடை அடிக்கும். அந்தச் சமயத்திலதான் பொதைக்குற வழக்கமே வந்திருக்கும்னு சொல்றாங்க. சரி. விசயத்துக்கு வாரேன். பாம்புக்குப் பிடிச்ச உணவு கறையான் தான். கறையான் புத்துக்குள்ள போயி கறையானை நல்லாத் தின்னுட்டு, புத்தை விட்டு வெளில வர நினைக்குறப்ப பாம்புக்கு வயிறு முழுக்க இரை இருக்குற தன்னோட உடம்பைத் தூக்கிட்டு வர முடியாம தத்தளிக்கும். அப்போ படமெடுத்து ஆடும். அதைப் பார்த்து பயந்த ஆதி மனுசன் புத்துக்கு முன்னால இறைச்சி, பால் இதெல்லாம் வச்சு “ஏய் பாம்பு, இதெல்லாம் உனக்குத்தான். நல்லாச் சாப்பிடு. எங்க பக்கத்துக்கு வராத”ன்னு சொல்லி வேண்டிக்குவாங்க. அப்படிப் பாம்புக்குப் பயந்த மக்கள், பாம்பால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களோட குழந்தைகளுக்கு வச்ச பேரு தான் நாகம்மா, நாகப்பன், பாம்புலம்மா, பாம்புலய்யா இதெல்லாம். இனிமே கண்ணன் கிண்டலா சொன்னா என்னோட அம்மா பேருக்கு இதுதான்டா விளக்கம்னு சொல்லுடா. கேட்டுக்குவான். கிண்டலடிக்கமாட்டான்” என விளக்கம் சொன்னாள் நாகம்மா. “இனிமேல் அவன் நக்கலடிக்கட்டும். அப்புறம் பார்த்துக்கிறேன்ம்மா” எனச் சொல்லிக்கொண்டே கிளம்பினான் நவீன். கிளம்பியவனிடம் “லேய், உங்கப்பா பேருக்கு என்ன விளக்கம் தெரிஞ்சுக்க. இங்க வா” என்றாள். “எனக்குத் தெரியும்மா. எங்க சார் சொன்னார்” என்றவுடன் அவள் “என்ன சொன்னார் உங்க சார்? எங்க சொல்லு பார்ப்போம். அவர் சொன்னது சரியா இல்லையான்னு சொல்றேன்” என்றாள் நாகம்மா.

 “ஆதி காலத்தில் வாழ்ந்த மனுசங்க எல்லாம் குழுவாக வாழத் தொடங்கியபின்னர் அவர்களுக்குள் எழும் சச்சரவுகளைத் தீர்க்க, பிற குழுவுடன் உண்டாகும் சச்சரவுகளைத் தீர்க்க தங்கள் குழுவில் தலைவன் ஒருவனைத் தேர்ந்தெடுத்தனர். குழுவினர் அனைவரும் அவனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டனர். சில சமயங்களில் தனது குழுவைக் காக்க, பிற குழுவோடு சண்டையிட்டு இறந்தும் போயிருக்கிறான். தம்மை வழிநடத்தியவன் என்பதாலும் தம்மை ஆண்ட, காத்த தலைவன் என்பதாலும் தான் தம்மில் வாழ்ந்த அவனுக்கு ஆண்டவன் என்று பெயர் வந்ததாம். சார் சொன்னார். நம்ம குடும்பத்தைக் காப்பவராக அப்பா இருப்பதால் அப்பாவுக்கும் ஆண்டவன் என்ற பேர் பொருத்தம் தானம்மா?” என்றான் நவீன். 

 “அப்பா மட்டும் தான் வீட்டைக் காப்பாத்துறார். நானெல்லாம் காப்பாத்தலயாடா?” என்றாள் நாகம்மா. “எனக்கு எப்பவும் அப்பா, ஆண் ஆண்டவர். அம்மா, பெண் ஆண்டவர்” என்றவனின் நெற்றியில் முத்தமிட்டு மகிழ்ந்தாள் நாகம்மா.

 விரைந்து கிளம்பியவன் சட்டென நின்று “எல்லாருக்கும் சாமிப் பேர் இருக்கு. எனக்கு ஏன்ம்மா நவீன் என்ற பெயர்?” என்றவுடன் நாகம்மா சொல்லத் தொடங்கினாள் “என்னோட அப்பா, அம்மா, அவங்களோட அப்பா, அம்மா எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை இருந்துச்சு. வச்சாங்க. நான் உனக்கு கொஞ்சம் நவீனமா பேர் வைக்கணும்னு தோணுச்சு. அதான் நவீன் என்று பேர் வச்சிட்டேன்” என்று சொல்லியதைக் கேட்டபடி விளையாடச் சென்றான். சுவற்றில் தொங்கவிடப்பட்டிருந்த நாகம்மா ஆண்டவர் திருமணத்தின்போது வழங்கப்பட்ட பெரியார் புகைப்படத்தில் ஒரு கம்பீரம் தோன்றி மறைந்தது அப்போது.