Friday, 21 October 2022

ஒரு வீடு ஒரு தொழில் ஒரு கிழவன்

 

ஒரு வீடு ஒரு தொழில் ஒரு கிழவன்


சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதான தோரணை

வாயில் எப்போதும் சிகரெட் புகைந்துகொண்டிருக்கும்

இரவு பகல் 

மழை வெயில் பனி

எல்லாக் காலமும் வேலைக் காலம்

நோகாமல் நொங்கு தின்பது போலில்லை

நுட்பம் தெரிந்திருக்க வேண்டும்

முக்கியமாக வீட்டார் ஒத்துக்கொள்ளவேண்டும்

சொந்த வீட்டை ஒதுக்கித் தள்ளுங்கள்

பக்கத்துவீட்டுக்காரன் ஒத்துக்கொள்ளவேண்டும்

பகையாளியாக என்றும் மாறிவிடக்கூடாது

இதயத்திற்கு தான் பிணமில்லை என்றுணர்த்த

மெயின் வீதிக்குச் செல்லாமல் 

கொஞ்சநேர நடை வீடுகளுக்கு இடையேயே நடப்பார்

முத்துச் சந்தின் பக்கத்திலேயே வீடு

போலீஸ் அது இது என்றால் தப்பித்து ஓடவேண்டும்

பெரும்பாலும் அதற்கு வாய்ப்பு வந்ததே இல்லை

ஒருநாளும் சத்தம் அதிகம் வந்ததேயில்லை அவ்வீட்டில்

கஸ்டமர்கள் கேட்கும் சரக்கு இருக்கும்

இல்லையென்றாலும் வேறொன்றை வாங்கிக்கொள்ளும்

கஸ்டமர்கள் வரம்தானே.

போதை தான் அங்கு கதாநாயகன்.

எதிலிருந்து வந்தால் என்ன?

எப்படிச் சரக்கு வருகிறது என்பது

தெரியவே தெரியாது

தீர்வது பற்றிச் சொல்லிவிடலாம்

பெரும்பாலும் நாற்பது கடந்தவர்கள்தான் 

நிரந்தர கஸ்டமர்கள்

அதிலும் பலர் நடந்தும் சைக்கிளிலும் வருவார்கள்

சரக்கை வாங்கி இடுப்பில் சொருகிக் கொள்வார்கள்

கிளம்பி விடுவார்கள்

விற்பவரின் சொந்தமென யாரையும் வீட்டிற்குள் பார்த்ததில்லை

எம்ஜியார் பாடல்கள் மிகப்பிடித்தம் விற்பவருக்கு.

சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே...

ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை...

அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்... போன்ற பாடல்கள்

சுற்று வீட்டின் காதுகளை அடைக்குமாறு மாலை ஏழு மணிக்கு மேல் ஒலிக்கத் தொடங்கும். 

விக்கிறது சாராயம். இதுல தத்துவப் பாட்டு வேற 

என்ற முணுமுணுப்பு எழுந்து அடங்கும்.

ஆனாலும் நேரடியாக யாரும் கேட்டு சண்டை பிடிப்பதில்லை.

அதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை.

விடிந்தும் திறக்காத கதவைத் தட்டி 

எட்டிப்பார்த்த முதல் குடிகாரன்தான்

கிழவன் இறந்துகிடந்ததை முதலில் பார்த்தவன்.

பக்கத்து வீட்டுக்காரர்களைக் கூப்பிட்டும்

யாரும் வீட்டிற்குள் வரவில்லை

குடிகாரன்தான் கிழவன் பக்கத்தில் சென்று

மேலும் கீழுமாக ஏறி இறங்கிக் கிடந்த கிழவனின் 

கைலியைச் சரி செய்தான்

பாயில் நேராகப் படுக்க வைத்தான்

தலையணையைத் தலைக்கு அண்டக் கொடுத்தான்

கிழவன் எப்போதும் சரக்கெடுத்துத் தரும் இடத்தில்

தனக்கான சரக்கை முதன்முதலாக 

அவனே எடுத்துக்கொண்டான்

கிழவனின் தலைமாட்டில் சரக்குக்கான பணத்தை

எண்ணி வைத்தான்

காலைத் தொட்டுக் கும்பிட்டுக்கொண்டான்

வீட்டின் வெளியில் வேடிக்கை பார்ப்பவர்களிடம்

ஏழு மணிக்கெல்லாம் சரக்கு அடிக்கலைன்னா 

எனக்கு உடம்பெல்லாம் நடுக்கம் கொடுத்திடும்

செத்துடலாம்போல இருக்கும்

போனவுடனே வந்துடுறேன் 

ஏதும் உதவின்னா பண்ணுறேன் என்று சொல்லிக்கொண்டே சென்றுகொண்டிருந்தான்

கிழவனின் ரெகுலர் கஸ்டமர் 

எவனோ ஒருவனிடமிருந்து ரோஜாப்பூ மாலையொன்று 

பாடையில் போகும்போது

நிச்சயமாகக் கிழவனின் கழுத்தில் கிடக்குமென்று 

நம்பிக்கை பிறந்துவிட்டது இப்போது.

யாருக்கு?

கிழவனுக்கு.

எப்படி இறந்தவனுக்கு நம்பிக்கை பிறக்கும்?

இறந்தவனுக்கு உள்ளே போய்ப் பார். தெரியும்…


யாழ் தண்விகா

Friday, 16 September 2022

சமூக நீதி நாள் விழா 17.09.2022


அன்பிற்கினிய தோழமைகளுக்கு, 
வணக்கம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், பெரியகுளம் கிளை முன்னெடுத்த சமூக நீதி நாள் கவிதைப் போட்டி, மற்றும் ஓவியப் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் பேரன்பு. சனாதனம் துளிர்க்கும்போதெல்லாம் அதனை தீவிரமாக எதிர்த்து எப்போதும் களமாடும் மண் தமிழகம். அதற்காக பல தலைவர்கள் நம் மண்ணிலிருந்து போராடி வந்திருக்கிறார்கள். அத்தலைவர்களில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்கு சிறப்பிடம் உண்டு. அத்தலைவரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அறிவிக்கப்பட்ட போட்டிக்கு கவிதைப் பிரிவுக்கு நாற்பதுக்கும் மேற்பட்ட கவிதைகளும், ஓவியப் பிரிவுக்கு எண்பதுக்கும் மேற்பட்ட ஓவியங்களும் வந்திருந்தன. எதிர்பார்ப்பைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கை சற்றுக் குறைவுதான் என்றாலும் இவ்விழா மிகக் குறுகிய காலத் திட்டமிடல் என்பதையும் கருத்தில் கொள்வோமாயின் இந்த எண்ணிக்கை என்பது மிகப் பெரியது. மிகச் சிறப்பாக தங்களது படைப்புகளை ஒவ்வொருவரும் அனுப்பியிருந்தாலும், போட்டி என்பதன் காரணமாக ஒவ்வொரு கவிதையையும், ஒவ்வொரு ஓவியத்தையும் மிகக் கவனமாகப் பரிசீலித்து பெரியகுளம் கிளை தேர்வுக் குழுவினரால் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. வெற்றி பெற்ற அனைவருக்கும் பெரியகுளம் கிளையின் சார்பாக வாழ்த்துகள். வெற்றி பெற்றவர்களுக்கு 17.09.2022, சனிக்கிழமை காலை 10 மணிக்கு பெரியகுளம் வடகரை, அரண்மனைத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராமானுஜர் கூடத்தில் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும் பெரியாரின் வழி செல்லும் முற்போக்குச் சான்றோர்களை பெருமைப்படுத்தும் விதமாக நிகழ்வில் இந்த வருடத்திற்கான பகுத்தறிவுச் சுடர் விருது தோழர் மு.அன்புக்கரசன், திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் அவர்களுக்கு வழங்கப் படுகிறது. தந்தை பெரியாரை கொண்டாடும் விதமாக, பகுத்தறிவுச் சுடர் விருது பெறும் தோழரைப் பெருமைப்படுத்தும் விதமாக, போட்டிகளில் வெற்றிபெற்ற, பங்கேற்ற அனைவரையும் பாராட்டும் விதமாகவும் அனைவரும் நிகழ்வில் குறிப்பிட்ட நேரத்திற்குக் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்புறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து இன்னும் பல நிகழ்வுகளில் இணைந்து செயல்படுவோம். வெற்றி பெற்றோர் விபரம் கீழ்வருமாறு.

#கவிதைப் போட்டி 
#18 வயதிற்கு உட்பட்டோர் பிரிவு

முதல் பரிசு 
லக்சனா
இரண்டாம் பரிசு 
உமேஷ்
மூன்றாம் பரிசு
பாவனா ஸ்ரீ

சிறப்புப் பரிசுகள்
அனுஸ்ரீ
கனிஷ்கா
தீபதர்ஷினி
கோ.அருணா
க.அக்சயா
N.தர்ஷினி
ரா.கோகிலா ஸ்ரீ
நவ குமாரன்
 
#கவிதைப் போட்டி
#18 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவு

முதல் பரிசு 
ராஜிலா ரிஜ்வான்
இரண்டாம் பரிசு
கம்பம் பிரபஞ்சன்
மூன்றாம் பரிசு
ஹேமலதா, நாக நந்தினி

#சிறப்புப் பரிசுகள்
துர்கா தேவி
அமிர்தா தமிழரசன்
பூர்ணிமா கணநாதன்
வைகை சுரேஷ்
கோ. பாலகிருஷ்ணன்
வசந்ததீபன்
முத்துச் செல்வம்
பாலமுரளி
உதயா
நாக பிரபு
லட்சுமி குமரேசன்
செல்ல முருகேசன்
அஞ்சு மகி
வைகை மகன்
க.போ. சுருளியாண்டவர்

#ஓவியப் போட்டி 
#18 வயதிற்கு உட்பட்டோர் பிரிவு
முதல் பரிசு
கௌசல்யா 
இரண்டாம் பரிசு
வசந்த வேல்
மூன்றாம் பரிசு
யுவராஜா

சிறப்புப் பரிசுகள்
நதியா
கிஷோர்
அமிழ்தினி
பாண்டீஸ்வரபிரசாத்
ஹரீஷ்
அர்ச்சனா
சிவக்கார்த்திகா
வர்ஷா
தர்ஷினி
ச.சூர்யா

#ஓவியப் போட்டி
#18 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவு

முதல் பரிசு
மு.தமிழ்மணி
இரண்டாம் பரிசு
பிரவீன்குமார்
ஜா.மேக்டலீன்
மூன்றாம் பரிசு
முத்துப்பாண்டி

சிறப்புப் பரிசுகள்
த.புனிதா 
தேனி கண்ஸ்
தாழை அரசன்
போஜனா
ஜெகதீஸ்வரன்
கீர்த்தனா

விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் பெறும் அனைத்துத் தோழர்களுக்கும் வாழ்த்துகள். போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். முற்போக்கு உணர்வாளர்களே, கலைஞர்களே, கவிஞர்களே, வாருங்கள். நிகழ்வில் சந்திப்போம்.

தோழமையுடன்
கு.தினேஷ் பாபு
கிளைச் செயலாளர்
யாழ் தண்விகா
கிளைத் தலைவர்
இரா.சுந்தர்ராஜன்
கிளைப் பொருளாளர்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
பெரியகுளம் கிளை

Sunday, 31 July 2022

கககபோ வட்டார வள மைய பயிற்றுநர்கள்


 

கககபோ வட்டார வள மைய பயிற்றுநர்கள்...


எண்ணும் எழுத்தும் என்ற அரசின் திட்டத்தை இதற்கு முன்னர் நடந்த பயிற்சியின்போது கலந்துகொள்ளாத ஆசிரியர்களுக்கு மற்றும் மேற்பார்வை செய்யச் செல்லும் வட்டார வள மைய பயிற்றுனர்களுக்கு பயிற்சியளிக்கும் வாய்ப்பு 27, 28, 29.07.2022 ஆகிய மூன்று நாட்கள் கிடைத்தது. இடம் உத்தமபாளையம், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், தேனி மாவட்டம். இதில் முதல் நாள் மற்றும் மூன்றாம் நாள் வட்டார வள மைய பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளிக்கும் வாய்ப்பு. பேருவகையாக அமைந்த அந்த வாய்ப்பின்போது அவர்கள் முன்னிலையில் வாசித்த என்னுள்ளக் கருத்துகளை முன்வைக்கிறேன். அவர்களிடம் சொல்லிவிட்டேன் கொஞ்சம் மொக்கையாக இருக்கும். ஆனாலும் பொறுத்துக்கொள்ளுங்கள் என்று. போலவே வாசிக்கும் தங்களிடமும்.


எண்ணும் எழுத்தும்...


@

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

ஔவையார் சொன்னது...

எஸ்எஸ்ஏ ஆபீசும் பிஇஓ ஆபீசும் உயிரெனத் தகும்

பி.வி.யார் சொல்வது... (P.VijayaRaj)


@

எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து 

அறிமுகம் செய்வது

எனக்கிடப்பட்ட பணி.

அதற்கு அதற்கு முன்னால்

என் பேச்சைக் கேட்கவிருக்கும் 

உங்களுக்கு thank பண்ணிவிட்டு

வழங்கப்போகிறேன்

சொற்கோர்வைகளால் ஆன

வாழ்த்துக்கனி...!


@

எங்கள் பணி என்ன?

மேற்பார்வை செய்பவர்களுக்கு

எண்ணும் எழுத்தும் திட்டத்தை

பள்ளிகளில் எப்படி மேற்பார்வை செய்வது

என்று பயிற்சி தரவேண்டும்...


இது கொடுப்பினையா...

கொடும் வினையா... தெரியவில்லை...


@

ஒரு கவிதையில்

“ம் என்றால் உள்ளதடி சொர்க்கம்

நீ இல்லையென்றால் இடுகாடு பக்கம்” 

என்பார் கவிப்பேரரசு வைரமுத்து.


அரசின் திட்டங்கள் எதைத்தான்

நீங்கள் முடியாதென்று சொன்னீர்கள்...

எண்ணும் எழுத்தும் மட்டுமல்ல

எப்போதும் எதற்கும் முடியும்

முடியும் முடியும் என்றே

சொல்லச் சொல்லி ஆசிரியர்களைச் 

செயலுக்குப் பழக்கப்படுத்தியவர்கள்

நீங்கள்.


ஆக மேலிடத்தின் 

கட்டளையை கச்சிதமாகக் கல்வித்துறைக்குள்புகுத்தும்

போர்க்களப் பணியாளர்கள் நீங்கள்.

ஆம்.

கககபோ வேறு யாருமில்லை 

நீங்கள் தான்.


@

கண் சிமிட்டுவதற்குக் கூட நேரமில்லை

பார்த்திருக்கிறேன் உங்கள் பணியை.

இந்தக் கல்வியாண்டின் குறுகிய காலத்திலேயே

ஒருபுறம் எஸ் எம் சி

ஒருபுறம் ஐ டி கே

ஒருபுறம் எண்ணும் எழுத்தும்

ஒருபுறம் கிட்பாக்ஸ் வழங்கல்

ஒருபுறம் ஆசிரியர் கையேடு வழங்கல்

மாணவர் பயிற்சி நூல் வழங்கல்

இப்படி எத்தனை எத்தனை…


திடீரென்று அழைப்பு வரும்

உடனே ஆன்லைன் மீட்டிங்

நிகழ்வு முடிந்த அடுத்த சில  நொடிகளில்

கையோடு அவரவர் சீட்டை எடுத்துவந்து

முன்னாடி அமருங்கள் என்று சொல்லி

சூப்பர்வைசர் நடத்தும்

அலர்ட் பண்ணுவதற்கான

ஆஃப்லைன் மீட்டிங்...


ஓடிக்கொண்டிருந்தால்தான் நதி

நின்றுவிட்டால் அது குட்டை...


பல பணிகளில்

பல பள்ளிகளில்

ஆசிரியர்களை இழுத்துச் செல்லும் நதி நீங்கள்.

பணிகளை பள்ளிகளை

தேங்கிவிடாமல் 

இழுத்துச் செல்லும் நதி நீங்கள்...


@

தேன், தேனீ, தேன்கூட்டைப் பற்றித் 

தெரியாதவர்களுக்கு

தேடித் தேடி விளக்கம் தரத் தேவையில்லை.

நீங்கள்தான் தேனீக்கள்

ஒவ்வொரு பள்ளியிலும், அதன் வளர்ச்சியிலும்

நீங்கள் காட்டும் அக்கறை, டேட்டா தான் 

தேன்.

கொண்டு வந்து ஒப்படைக்கும் 

வட்டார வள மையம் தான்

தேன்கூடு.


அவ்வளவு எளிதாகத் தேன் கிடைத்துவிடுகிறதா?

எத்தனை எத்தனை வலிகளுடன்தான் 

உங்கள் ஓட்டம்?


எவ்வளவு அடிச்சாலும் தாங்குறோம்

என ஒவ்வொரு பள்ளியும் புலம்பும்போது

பல பள்ளிகளைத் தாங்கி நிற்கும்

உங்களை எப்படிப் பாராட்டுவது?


@

பூ ஒன்று புயலாவதைக் காணத்தான்

அவ்வப்போது பயிற்சி நாட்கள்.

ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம்

என்பது போல

பெரியகுளம் ஒன்றியமே அதற்குச் சாட்சி...

ஒருவர் புத்தகத்தோடு இருப்பார்

ஒருவர் புத்தகமாகவே இருப்பார்

ஒருவர் அலட்டிக்கொள்ளவே மாட்டார்

ஆனால் மணிக்கணக்கில் அசரடிப்பார்

ஒருவர் சிரித்தபடி உரையாற்றுவார்

ஒருவர் சிந்தித்தபடி செயலாற்றுவார்

இப்படி ஆண் பயிற்றுநர்கள்


பெண் பயிற்றுநர்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம்

களம் எதுவென்றாலும்

சிகர இலக்கு நோக்கிப் பயணிக்க 

சிரத்தையுடன் சிரித்த முகத்துடன்

ஆசிரியர்களை அழைத்துச் செல்லும் 

சிங்கப்பெண்கள் அவர்கள்.


@

எங்கள் பள்ளிக்குக் கிடைத்த பயிற்றுநர்களின் 

கோபம் அறிவேன்.

வலிக்காமல் அடிப்பது போன்ற 

தாய்மை நிரம்பியவர்கள்.


அடுத்த முறை நான் வரும்போது

இதைச் சரிசெய்து வைத்திருக்கவேண்டும்

இதை எழுதி வைத்திருக்கவேண்டும்

இக்குழந்தைகள் இன்னும் முன்னேற்றம் கண்டிருக்கவேண்டும்

எனச் சற்றே குரல் உயர்த்திச் சொல்லுதல்தான்

அவர்களின் அதிகபட்சக் கோபம்.

அது மட்டுமா

பார்வையாளர் பதிவேட்டில்

நிறைகள் எழுதி குறைகளை லாவகமாக 

மறைத்தெழுதும் பண்பு.

எத்தனை எத்தனை உணர்வுகள் அதில்...

வருத்தம், எதிர்பார்ப்பு, ஆதங்கம், 

தனக்கு ஒதுக்கப்பட பள்ளியின் மீதான அக்கறை...

இன்னும் இன்னும்.


@

5 நாட்கள் பயிற்சி

எண்ணும் எழுத்தும்

இதற்கு முன்னும் நடந்தது.

உங்களால்தான் சாத்தியமானது 

சத்தியமானது அன்று.


வேளாவேளைக்குச் சிற்றுண்டி

தேநீர்

நேரக் கண்காணிப்பு

வகுப்பறைக் கண்காணிப்பு

ஒழுங்குக் கண்காணிப்பு

வருகைக் கண்காணிப்பு...

ஆயிரம் செய்தும்

இன்று காடு, மலை தாண்டி

ஒன்றியம் விட்டு ஒன்றியம்

அதே பயிற்சிக்கு

பாளையத்தில் பாவமாக அமர்ந்திருக்கும்

“உங்களைப் பார்த்தா பாவமாக இருக்கு”

இருக்கட்டும் இருக்கட்டும்

முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...


@

பாலுமகேந்திராவுக்குப் 

பாலா பயிற்சியளிப்பதா...

பாரதிராஜாவுக்கு

பாக்யராஜ் சொல்லிக்கொடுப்பதா…

அமீருக்கு

சசிக்குமார் வகுப்பெடுப்பதா...

மனம் ஒத்துக்கொள்ள மறுக்கிறது.

சூரியன் திரும்பும் திசையெல்லாம்

சூரியகாந்தி திரும்புதல் தானே 

உலக வழக்கம்...

ஆதலினால் சூரியன்களுக்கு

நான் பயிற்சியளிக்கப்போவதில்லை...

சொல்லிக்கொடுக்கப்போவதில்லை...

வகுப்பெடுக்கப்போவதில்லை...

தெரிந்தவை பகிர்கிறேன்.


வாய்ப்பிற்கு நன்றி...


யாழ் தண்விகா

Sunday, 24 July 2022

பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு

 



பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு

புலியூர் முருகேசன்
தோழர் புலியூர்

சிறுகதைத் தொகுப்பு

ஆம்பிரம் பதிப்பகம்

விலை ரூ 150/= பக்கங்கள் 206

மொத்தம் 13 சிறுகதைகள். வாழ்க்கையிலிருந்தே இந்தக் கதைகள். கதைகள் என்பதை விட வலிகளை உண்டுபண்ணும் காட்சிகள் ஒவ்வொரு கதையிலும். பல கதைகளில் என்னைப் பொருத்திக்கொண்டு வாசித்தேன். கண்ணீர் மல்கச் செய்தன, துரோகங்களைக் காட்சிப்படுத்தின, அரசியல் கதை சொல்லியது, திருநங்கை குறித்த கதை என ஒவ்வொன்றும் சிறப்பு.

சங்கர் சங்கர் சங்கர் சங்கர் சங்கர் மற்றும் இன்னுமொரு சங்கர் முதல் கதை. கடன் கேட்டுச் செல்லும் ஒருவனை இந்தச் சமூகம் எப்படி எல்லாம் வதைக்கிறது, அவனை தனக்கு எவ்வாறெல்லாம் பயன்படுத்துகிறது என்பதைக் கூறுகிறது. நானும் பல சங்கர் பார்த்திருக்கிறேன். சங்கர் என்ற பெயரைப் பொருத்தித் திரியும் பலர் எனக்கும் நண்பர்களாக இருக்கிறார்கள். சொல்லி வைத்தாற்போல் தற்போது என்னிடம் பணம் இல்லை என்று கூறுவார்கள். தன்மானத்தை, மானம், ரோஷத்தை அடகு வைத்து அவர்களிடம் கூனிக் குறுகி நிற்கும்போது அவர்களின் பதில் எவ்வளவுக்கெவ்வளவு விட்டேத்தியாக இருக்கும் என்பதை இவ்வளவு தெளிவாக இதற்கு முன்னர் நான் வாசித்த கதைகளில் கண்டதில்லை. கடன் கேட்பவர்களை விட கடன் கொடுப்பவர்கள், கடன் கொடுக்க இழுத்த்டிப்பவர்கள் தங்கள் முகத்தைக் காண இந்தக் கதையை அவசியம் வாசிக்கலாம். 

செவப்புக்காய் வாயூறும் கதை தனித்துவம். ஊரே பெரும் களவாணித்தனம் செய்யும் சூழலில்,  அன்றாடங்காய்ச்சிக்கு மட்டும் பசி பூக்க அவர்கள் செய்யும் சிறு தவறுக்கும் பெறும் தண்டனை அளிக்கும் இந்த சமூகத்தின் மேல் காறித் துப்புகிறது கதை. கேரளா மது அடித்துக் கொல்லப்பட்டது நினைவுக்கு வந்துபோனது.

வட்டாரத்துக் கோடி கதை கண்ணீர் வரவழைத்தது. அன்பிற்காக இந்த உலகம் இயங்குதலை அழகாக, வலியோடு காட்சிப்படுத்தியுள்ளது. நாடார், பள்ளர் இரு சமூகத்தைச் சார்ந்த நண்பர்கள், அவர்கள் நட்பாக மாறிய கதை. அய்யாவுக்கும் ஆண்டிக்கும் பூத்த நட்பு இறப்பு வரை நீடிக்கிறது. அய்யாவு வீட்டில் அய்யாவு சாப்பிட்ட கும்பாவில் ஆண்டி உண்ணுவதும் ஆண்டி வீட்டில் பன்றிக்கறியை அய்யாவு உண்ணுவதும், தனது சமூகத்தால் ஆண்டி தூண்டிவிடப்பட்டு சிலம்பாட்டத்தில் அய்யாவுவை வெறி கொண்டு தாக்கும்போது அதை நட்பிற்காக நாசூக்காகக் கையாண்டு இறுதியில் இருவரும் கட்டி அணைத்துக்கொள்வது என்று கதை நட்பு பேசுகிறது. வறுமை அவர்களின் குடும்பத்தைச் சினம் கொண்டு தாக்கியபோதும் நீளும் நட்புக் காட்சிப்படுத்தல் அருமை.

வெயிற்கால மழைப்பூச்சி, பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு ஆகிய கதைகள் சங்கர மட கொலை, புலி பிரபாகரனின் இளவல் பாலச்சந்திரன் கொலை  குறித்துப் புனைவாகப் பேசுவது போல அதன் பின்னால் உள்ள அரசியல் பேசுகிறது.

சிங்கம் புராஜெக்ட் கதை பணம் வாங்கி கல்வியை விற்கும் நிறுவனங்களைச் சாடுகிறது. பகடியாகவும் அதே சமயம் மக்களை ஏமாற்றும் மாய வித்தைக்காரன் போலவும் இந்த நிறுவனங்கள் செயல்படுகிறது என்பதை தோலுரித்துக் காட்டுகிறது.

பாதி எரியூட்டப்பட்ட பாடலை மதுக்கோப்பையில் பருகுபவன் ஸ்வர்ணலதா பாடல்களை வியக்கும் தருணங்களைக் கூறிச் செல்கிறது ஒருபக்கம். மறுபக்கம் ஒரு எல் ஐ சி பாலிசி எடுக்க ஏஜெண்ட் படும் அவஸ்தையைப் பற்றிப் பேசுகிறது. கதையில் சொல்வது போல நிறுவனத்தில் உள்ளவர்கள் தனக்குப் பிடித்தவர்களிடம் சொல்லி தெரிந்தவர்களை தொடர்புகொள்ளச் செய்வது, தனக்குப் பிடித்த உறவுக்காரர்கள், சாதிக்காரர்களுக்கு கமிஷன் கிடைக்க வழி செய்வது, அரசுப்பணி செய்யும் ஒருவர் தன்னுடைய இணையரை ஏஜெண்ட் ஆக்கி அவர்களுக்கு உழைப்பது, முழுநேரப் பணியாக குடும்பத்தில் ஒருவர் ஏஜெண்ட் ஆகப் பணி செய்யும்போது அவர்களின் வாழ்வில் மண்ணள்ளிக் கொட்ட மேற்சொன்னவர்கள் போதாதா... 

ஐ சி ஐ சி ஐ வங்கிக்கு தினமும் வந்து திரும்புபவள் கதை ஊரில் மறக்கப்பட்ட நீலவேணி அக்காக்கள் பற்றிய கதை. பைத்தியம் என்று ஏறக்கட்டும் சமூகம் அவர்களின் பின்னால் உள்ள வலியை என்றாவது தேடியிருக்கிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லவேண்டும். இக்கதை அதைத் தேடியிருக்கிறது. கட்டிக்கொடுத்த இடத்தில் நிகழும் பாலியல் வன்முறை, அதனால் தீக்குளிக்கும் பெண், மாமனாரின் பாலியல் வக்கிரம் எனப் பேசுகிறது. கடைசியாக, கால மாற்றத்தில் பேருந்து நிலையம் இருந்த இடம் வங்கியாக மாற்றப்படும்போது இந்தச் சமூகத்தால் பைத்தியம் என்று கூறப்படுபவள் மேலும் எப்படி வஞ்சிக்கப் படுகிறாள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. 

நான் ஏன் மிகை அலங்காரம் செய்துகொள்கிறேன் கதை திருநங்கையாக உருமாறிய ஒருத்தியின் குடும்பத்தில் தந்தையானவன் சுப்பிரமணி என்ற பெயருடைய அவளுக்குச் செய்யும் பாலியல் கொடுமை பற்றியும், மூக்குத்தி காசி கதை திருநங்கை சந்திக்கும் பாலியல் வன்கொடுமை, அவற்றிற்கான எட்டப்படாத தீர்வு, எள்ளி நகையாடும் சமூகம் பற்றிப் பேசுகிறது.

குறிச் சிலம்பாட்டம் கதை நவீன உலகின் இயந்திரத் தனமான அலுவலக வேலைகள் அதற்காக தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் குறித்துப் பேசுகிறது. யாகக் குண்டத்தில் பால் ஊற்றி எரிக்கப்பட்ட நைலான் கொசுவலை கதையும், நிலத்தின் அடியிலும் வனங்கள் பரவக்கூடும் என்ற இரு கதைகளும் நட்புத் துரோகம் குறித்துப் பேசுகிறது. அதிலும் நிலத்தின் அடியிலும் வனங்கள் பரவக்கூடும் என்ற கதை துரோகத்தின் உச்சம். எப்படிப்பட்ட சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை அறிய இக்கதை உதவும்.

ஒவ்வொரு கதை குறித்த சிறு குறிப்பாக வேண்டுமானால் இவை இருக்கலாம். ஆனால் கதை வாசிக்கும்போது அந்த வலியை நாம் அனுபவிப்பதுபோல மொழி நடை அமைந்திருக்கிறது. வாழ்க்கையைப் பதிவு செய்யும் கலையை நூலாசிரியர் அறிந்திருக்கிறார் என்று கூறுவதைவிட வறுமையை, மனிதம் விரும்பாத இந்த உலகின் முகத்தை, திருநங்கைகள் சந்திக்கும் பாடுகளை, ஒவ்வொரு மனிதனின் மறுமுகத்தை அதன் அதன் வலியை அவரவர் சொற்களில் பதிவுசெய்திருக்கிறார் தோழர். 

வாசிக்கவேண்டிய தொகுப்பு.
வாழ்த்துகள் தோழர்.

யாழ் தண்விகா


Thursday, 21 July 2022

ஒரு சகலகலா சவரக்காரன் பராக்... பராக்...


ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக்...

ப.நடராஜன் பாரதிதாஸ்

ஆதி பதிப்பகம்

பக்கங்கள் 96

விலை: ரூ 100


பேரக் கேட்டவுடனே சும்மா அதிருதில்ல என்பது போல் தொகுப்பின் தலைப்பே ஒரு கதாநாயகத் தன்மை அளித்துவிடுகிறது. கவிஞருக்கு வாழ்த்துகள்.

கவிஞர் EMS கலைவாணன் எழுதிய ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் தொகுப்பிற்குப் பின்னர் நாவிதர்களின் வாழ்க்கைப்பாட்டைக் கூறும் மற்றுமொரு கவிதைத் தொகுப்பு. சிறப்பாக அமைந்திருக்கிறது. இப்போதெல்லாம் ஒவ்வொரு கவிஞரும், ஒவ்வொரு கவிதையிலும் பூடகமாக சில விஷயங்களை உள்ளே வைத்து இருப்பார்கள் என நினைத்து அதை வாசித்து பொருளைப் புரிந்துகொள்ளும் முன்னர் தாவு தீர்ந்துவிடும் நவீன காலச் சூழலில் இதுதான் கவிதை. இதுதான் அது வெளிப்படுத்தும் கருத்து என்பதை வெட்டு ஒன்னு துண்டு இரண்டாக தொகுப்பில் வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர்.


பொதுவாக தொகுப்பை விமர்சனம் செய்யவோ மதிப்புரை செய்யவோ தொகுப்பிலிருந்து ஓரிரு கவிதைகளை மேற்கோள் காட்டுவது வழக்கம். இத்தொகுப்பைப் பொறுத்தவரை பெரும்பான்மைக் கவிதைகள் மேற்கோளாக எடுத்துக் கூறப்பட வேண்டியதாக அமைந்திருப்பது சிறப்பு. ஊரின் வரலாற்றைக் கூறி வளர்த்த பாட்டியிடம் நாவிதர்களுக்கான வரலாறை அறிய நினைக்கும்போது செத்துப் போனதால் அந்தப் பணியை தான் மேற்கொண்டிருப்பதாகக் கூறி தன்னுடைய முதல் கவிதையைத் தொடங்குகிறார். மனிதனை மனிதன் எப்போது மதிக்கவில்லையோ அப்போதே இங்கு பிளவுகளும் உண்டாகிவிட்டது. அதற்கு இனக்குழு, சாதி, மதம், பொருளாதாரம் எனப் பல காரணங்கள் இருக்கிறது. இருக்கிற எல்லாச் சாதியிலும் ஒவ்வொரு பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நாடகத்தில் துரியோதனன் பாத்திரத்தை ஏற்று நடிப்பவர் 

“அண்டம் நடுநடுங்க ஆகாசம் கிடுகிடுங்க

கஜபலம் புஜபலம் பொருந்திய 

என்னைப் பார்க்கின்ற தருணத்திலே

என் நாமதேயம் என்னவென்று தெரியுமாடா

அடேய்! காவலா” என்கிறார். 

அதற்கு கட்டியக்காரன் வேடம் தரித்த உள்ளூர் கோபால்,

“ஏன் தெரியாது

ஊடு ஊதா போயி செரச்சி

ஊருசோறு எடுத்துத் திங்கற

எங்க ஊரு அம்பட்டன்னு 

நல்லாவே தெரியுமுங்க” என்றவுடன் 

கூட்டமே கொள்ளென்று சிரித்தது.

“அன்றிலிருந்து வேசம் கட்டுவதே இல்லை அய்யா” என்று கவிதையை முடிக்கிறார் கவிஞர். சாதியின் எகத்தாளத்தை இவ்வளவு நேர்மையாகப் பதிவு செய்வது அரிது. ஆனால் அதனைச் செய்திருக்கிறார் கவிஞர்.


சுயசாதிப் பகடி பல கவிதைகளில் நர்த்தனம் ஆடுகிறது. ஊரில் யார் வீட்டில் இழவு விழுந்தாலும் ஊர் பண்டிதர் பழனி சாங்கியம் செய்தால் செத்தவன் சொர்க்கத்துக்குப் போவான் என நினைக்கும் ஊரில் 

“அவர் செத்த அன்னிக்கு

நாலு ஊரு நாவிதனும்

கோமணம் போறது தெரியாம குடிச்சிட்டு

நாலு ஊரு சாங்கியம் சடங்குகளையும் செய்து

நாசகோசம் செய்தார்கள்.

அய்யா கடைசில

சொர்க்கம் போனாரா

நரகம் போனாரான்னு தெரியல’’ என முடிகிறது கவிதை. நாங்க ஆண்ட சாதி, அப்படி இப்படி என்று பறைசாற்றும் வேளையில் (மருத்துவர் என்றும் நாவிதர் என்றும் அழைக்கப்படும் சமூகம் அப்படிச் சொல்லுவதற்கும் உண்மைக் காரணங்களை அடுக்கும் கவிதைகளும் உண்டு) ஒரு இறப்பின் வாயிலாக இன்றைய தலைமுறை குடிக்குள் சிக்கிக் கிடப்பதைக் காட்சிப்படுத்தியுள்ளார் கவிஞர்.


காலமெல்லாம் அடிமைப்படுத்தி வைத்திருந்த ஒருவனின் தலைமுறை அவனைப்போலவே இருக்கவேண்டும் என்று சட்டமா என்ன? அப்படி அடிமைப்படுத்தி வைக்க அவன்மேல் வைக்கப்பட்ட புனித பிம்பங்கள்தான் எத்தனை எத்தனை? தொடர்ச்சியாக பல பாராட்டுகளைச் சொல்லிக்கொண்டு வரும் கவிஞர் இறுதியாக 

“அடிச்சாலும் வாங்கிக்குவான்

புடிச்சாலும் தாங்கிக்குவான்

ஆந்தாந்து பேசிக்கொண்டார்கள்


அய்யாவின் சாவிற்குப் பிறகு

இப்படிப்பட்ட நாவிதனைத்தான்

தேடிக்கொண்டிருக்கிறது

எங்க ஊர்”

எப்படிய்யா கிடப்பான் இக்காலத்தில். கிடைக்கமாட்டான். கிடைக்கவேண்டிய கட்டாயமும் இல்லை என்றுணர்த்துகிறது வரிகள்.


எல்லா ஊரிலும் சுடுகாட்டில் குழி தோண்டுவது, கொள்ளிச் சட்டி உடைச்சு விடுவது, இறந்தவனின் வாரிசுக்கு மொட்டை எடுப்பது போன்ற பலரை நடத்தும் விதமும் அவர்களுக்கு கேட்கும் பணத்தைக் கொடுக்காமல் மிகச் சொற்பமான தொகையைக் கொடுப்பதும் சுடுகாடு வரை போய்வரும் நபர்களுக்கு நன்றாகவே தெரியும். அதை 

“கட்டளைக்காசு ஏத்திக் கொடுங்கன்னா

கட்டளைக்காசுக்கு கள்ளநோட்டுதான்டா அடிக்கணும்

என்றார்கள் ஊர்க்காரர்கள்.


பதினோராம்நாள் 

கல்தொரையில்

அய்யர் கேட்கும்போதெல்லாம்

கேட்டா கேட்ட காசு

அம்பது நூறுயென அவுத்து அவுத்து கொடுத்தார்கள்.

ஊர்ல கள்ளநோட்டு

அடிக்க ஆரம்பிச்சிட்டாங்கபோல” என்கிறார். ஆள் பார்த்து பட்டுவாடா செய்யப்படும் பணத்தைப் பற்றியும் அங்கு நாவிதர்களைப் படுத்தும்பாட்டையும் உள்ளது உள்ளபடியே கூறியுள்ளார் கவிஞர்.


ஊர்க்காரங்களுக்கு முடிவெட்ட ஆள் வேணும் என்பதற்காக சொல்லும் பசப்பு வார்த்தைகளை நம்பக்கூடாது என்பதை மகனுக்குக் கூறுகிறார் ஒரு தந்தை  இப்படியாக.

“நீதான் வெட்டணும்

நீயேதான் மீசை வைக்கணும்

உங்கப்பனைவிட நீயே சூப்பர் டக்கருன்னு

பிஞ்சு மனசுல நஞ்ச விதைப்பார்கள்

நம்பிடாதே மகனே


பதினைந்து வயதில்

என்னை படிப்பை இழக்கச் செய்தது

இதே உசுப்புதான்

இதே பசப்புதான்...”


32வது கவிதையில் முதல் பத்தியில் சனாதன நபர்களைப் பற்றிக் கூறுவது போலவும் இரண்டாம் பத்தியில் கம்யூனிஸ்ட் நபர்களைப் பற்றிக் கூறுவது முரணாக இருப்பதாகப் படுகிறது. ஒரு ஆறையே ஆட்டையப் போட்ட அரசியல்வாதியைப் பற்றிய கவிதை அபாரம். இப்படிப் பல கவிதைகள். சமகால அரசியலையும் உள்வாங்கிப் பேசும் கவிதைகள். 


வாழ்த்துகள் தோழர் ப.நடராஜன் பாரதிதாஸ்.

மீண்டும் ஒரு கவிதை...

“நாங்கள் பேசாத 

அரசியல் இல்லை

எங்களைப் பேசும்

அரசியல் தானில்லை


டீக்கடை வச்சா

முதல்வராக முடியுது

பிரதமராக முடியுது

சவரக்கட வச்சவனுக்கு

சாகரவரைக்கும்

ஒரு வார்டு மெம்பருக்குக் கூட

வக்கில்லையோ”

ஜனநாயகத்தின்மேல் கல்லெறியத் தேவையற்ற ஒரு சூழலை எந்தச் சமூகமும் பெறவேண்டும். அதற்கு, எல்லாம் எல்லா மக்களுக்கும் கிடைக்கவேண்டும். அதுவரை தோன்றட்டும் இது போன்ற புரட்சிக் கவிதைகள்.


யாழ் தண்விகா


 

Wednesday, 20 July 2022

மோர்க்காரம்மா...



4பேர். ஒவ்வொரு நபரும் மொத ரவுண்டு ஒரு டம்ளர் மோர் குடிச்சாச்சு. ரெண்டாவது ரவுண்டுக்கு ரெண்டு பேர் மட்டும் ஒவ்வொரு டம்ளர். ஊத்திக் கொடுத்த பொம்பள மொத்தம் 6 டம்ளர்னு சொல்றப்பதான் எதுக்குடா இந்தம்மா டம்ளர் கணக்கு சொல்லுதுன்னு பாத்தானுங்க. 60 ரூவா ஆச்சுய்யா. கொடுங்கனு மோர் ஊத்தித் தந்த பொம்பள சொல்லவும் குடிச்ச ஆளுக எதுக்கும்மா காசு தரணும்? நீதானம்மா போற ஆளுகளை நிப்பாட்டி ஊத்திக் கொடுத்தனு சொன்னானுங்க. மாரியாத்தா சன்னதில வம்பு வளக்காம காச கொடுப்பான்னு சொல்லுச்சு மோர்க்காரம்மா. காசுன்னு முன்னாடியே சொன்னா நாங்க எதுக்குமா வாங்கிக் குடிக்கப் போறோம் அதும் இந்த மழை நேரத்துலனு சொல்லிக்கிட்டே 50 ரூபா எடுத்துக் கொடுத்துட்டு பொலம்பிட்டே போனானுங்க. 


ஒரு சந்தேகம் வந்து ஓரமா நின்னு பார்த்தேன். ஏன்னா வீரபாண்டி மாரியம்மன் கோயில்ல இதே போல நானும் ஓசின்னு வாங்கி மடக் மடக்குன்னு குடிச்ச பின்னாடிதான் காசக் கேட்டானுங்க. அது நடு மத்தியானம். அதக் கூட ஏத்துக்கலாம். இது ராத்திரி ஒன்பதரை மணி. ஓசின்னாலும் ஒரு நேர காலம் வேணாமாடா...


இதேபோல போற வார ஆட்களை நிப்பாட்டி தின்னீர் போட்டுவிட்டு காசு கேட்க மஞ்சச் சேல கட்டி இன்னொரு அம்மா.


திருவிழாக் காலத்தில் பூக்கும் மோர்க்காரக் கும்பல்கிட்ட, தின்னீர் போடும் ஆளுங்க கிட்ட எச்சரிக்கையாக இருங்க பக்தர்களே.


#மாரியாத்தா_சார்பாக_உங்கள்_தோழர்...


யாழ் தண்விகா


🔥


 

Monday, 18 July 2022

இரவின் நிழல்


 

இரவின் நிழல்


திரைப்படத்திற்கான ஒளியை அறிமுகப் பேச்சுகள் மூலம் அதிகப்படுத்தி திரைக்கதைக்கான ஒளியை இல்லாமல் செய்துள்ளது பெரும் வருத்தம். பார்த்திபன் தன்னுடைய இயக்கத்தில் வெளிவந்த அத்தனை படங்களிலும் உள்ள சைக்கோத்தனமான கதாநாயகத் தன்மையை வடிகட்டி நந்து என்னும் கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் என்பதை விட மீண்டும் சொல்லியுள்ளார் எனலாம். ரகுமான் இசை என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது எனத் தெரியவில்லை. World's first non linear என்று சொல்லியதால்  படத்திற்கு ரகுமான் இசை கூடுதல் ஃபோகஸ் கிடைக்க வாய்ப்பிருக்கும் என்பதால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். Making பற்றி முதலிலேயே 30 நிமிடங்களில் சொல்லிவிட்டதால் படம்  அனைத்தும் செட்டிங்ஸ்ல் நடக்கிறது என தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. ஒட்டாத கதையில் இது கூடுதலாக ஒட்டாமல் இருக்கிறது. கலை இயக்குனர், ஒளிப்பதிவு நல்லாருக்கு. Lyrics... வேண்டாத முயற்சி இயக்குனருக்கு. Non linear திரைப்பட முயற்சிக்கு பெரு வாழ்த்துகள். கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் உலகம் கொண்டாடும் திரைப்படமாகவும் மாறியிருக்கலாம்.


வாங்கிய கட்டணத்திற்காக 3 பேர் ஆனாலும் இந்த பகலிலும் இரவின் நிழலை அனுபவிக்க வாய்ப்பளித்த திரையரங்க உரிமையாளருக்கு பேரன்பு.


யாழ் தண்விகா


💝