Saturday, 28 May 2022

அழகென்ற சொல்லுக்கு...


 #அழகென்ற_சொல்லுக்கு...


❣️

ஒரு பூவைப்போல

நீ நடந்து செல்கிறாய்

ஒரு வண்டைப்போல

நான் தொடர்ந்து வருகிறேன்


❣️

நீ பேசுவதையெல்லாம்

கவிதை என்கிறேன்


அப்படியானால்

நீ யார்?


❣️

சிலை கல்லாலானது என

யார் சொன்னது?


❣️

பருவம் தொடங்கியது என்பது ஊருக்கு.

பருவம் பூத்தது என்பது உனக்கு.


❣️

நீ சிரிக்கும் சிரிப்பனைத்திற்கும்

வெல்லச் சிரிப்பென்று பெயர்


❣️

எக்குளத்தின் மீன்கள்

உன் கண்கள் எனக் கண்டு

பாதுகாக்கவேண்டும்

அக்குளத்தை!


❣️

உன் அழகுதான்

உனக்கே தெரியாமல்

தெனாவெட்டாகப் பார்க்கிறது என்னை.

பவ்யம் காட்டுதலை விட

வேறென்ன செய்ய இயலும் நான்...


❣️

எதிரெதிரே அமர்ந்து

பழச்சாறு பருகுகிறோம்.

இதழ்கள் வழியாக

நீதான் உயிருக்குள்

சென்று கொண்டிருக்கிறாய்...


❣️

ஒரு கல்யாணம்

இரு குழந்தைகள் என

வாழ்ந்துவிடத்தான் ஆசை.

பேராசை

நாம் காதலர்களாகவே

வாழ்ந்து மடிவதில்தானிருக்கிறது.


எது வேண்டுமானாலும்

வெல்லட்டும்.


❣️

என் கவிதைகள் அனைத்தையும்

வாசித்து விடுகிறாய்.

அதென்னமோ

நாம் வாழ்ந்த நாட்களைச் சொல்லும்

கவிதை வாசிப்பின் போதுதான்

வரிகளுக்கு முத்தம் கிடைத்துவிடுகிறது...


❣️

அருகருகேயமர்ந்து

புகைப்படம் எடுக்க ஆசை நிறைய.

பயம் காரணமாக

ஒத்திப் போடுகிறாய் ஆசையை.

ஆனாலும்

உயிரால் நாம் வாழாமல் இருக்கிறோமா என்ன...?


❣️

ஒவ்வொரு கவிதையைப் படித்தபின்பும்

யாருக்கு இந்தக் கவிதை என்ற கேள்வியோடு நிமிர்வாய்.

உன்னைப் பார்த்தபடியே நிற்பேன் நான்.


புரியாதா பேரன்பே...!


❣️

எப்போப்பாரு

காதல் காதல்...

வேறொன்னும் தெரியாதா?


காமம் தெரியும்...


காதலிச்சே தொலை எருமை...


❣️

கவிழ்த்து வைக்கப்பட்டுள்ள

கோப்பையிரண்டிலும்

போதை வஸ்து.


நீ கற்சிலையல்ல

கள் சிலை...


❣️

இமைகளுக்கு மையிடும் லாவகத்தில்

தெரிவதெல்லாம்

வாளினைக் கூர் தீட்டும் உத்தி...


❣️

ஒருமுறை முத்தமிட்டு

அமைதிப்படுத்தேன்

என் இதழ்களை...


நீ பேசும்போது

அசையும் உன் இதழ் கண்டு கண்டு

துடித்துக் கொண்டேயிருக்கின்றன

அவை...


❣️

இடுப்பில் என்னவோ

ஊர்வது போலருக்கு

பார்த்துவிட்டு வருகிறேன் எனப் பேசும்போது சொல்லிவிட்டு எழுந்து சென்றாய்...


ம்மென்றேன்


பார்த்துவிட்டு வந்து 

ஒன்றுமில்லை

அப்புறம் ஏன் அப்படித் தோணுச்சு என

ஒன்றும் புரியாமல் கேட்டாய்


நீ கொஞ்ச நேரத்திற்கு முன்னால்

தரை பார்த்துப் பேசும்போது

என் கண்கள் உன் இடையை

மேய்ந்து கொண்டிருந்தது.

இப்போது வரை என் கண்கள்

என்னிடம் வந்து சேரவில்லை

அது தான் இடையுள்புறம் சென்று

ஊருகிறதோ என்னவோ என்றேன்


என்னவோ ஊர்வதாகச் சொன்ன

இடையில் ஒரு கை

கண்களில் ஒரு கை வைத்து மறைத்து

ப்ளீஸ் கூச்சமாயிருக்கு

பார்வையால் மேயாதே என்னை

என்றாய்


எப்போது கூச்சம் போகும்

என்றேன்


உயிரால் என்னுயிர் மேல்

ஊர்ந்து கொள்.

இப்போது வேண்டாம் என்றாய்.


என் கண்களைப் பிடித்து

என்னிடம் தந்தபின்னர்தான்

உன் கண்கள் திறந்தாய்.

வெட்கத்தின் ரேகைகள் ஒவ்வொன்றாய் உதிரத் தொடங்குகிறது உன்னிலிருந்து.

கைகளில் பிடித்து

தன்னை நிரப்பிக்கொள்ளும் காதலுக்கு இப்போது

வெட்கத்தின் சாயல்...


❣️

கவிதை கவிதைன்னுக்கிட்டே

வாழ்க்கையில உருப்படாமப் போயிடப் போறடா


உன்னைப் பற்றி எழுதிட்டுத் திரிவதைத் தவிர

உருப்பட வேறு வழியில்லை அன்பே...


❣️

நீயழுதால் அழுது

சிரித்தால் சிரித்து

மௌனமாயிருந்தால் மௌனமாயிருந்து...


நீ ட்ராமா தான் பண்ற என்பது

உனக்குத்தான்.

எனக்கில்லை.


❣️

கர்த்தரின் பரிசுத்த நாமத்திற்கு

ஸ்தோத்திரம்...

போலவே

உன்னோட பரிசுத்த நாமத்திற்கு

என்னோட ஸ்தோத்திரம்...


❣️

நினைவால்

நீ உறங்குதலை என்முன் வரவழைத்து

வழக்கம்போல் 

உன் அழகின்மேல்

என் கண்களால் முத்தமிட்டபின்

உறங்கத் தொடங்குகிறேன்


தூரமே... தொலைந்து போ...


29.05.2022

02.19 அதிகாலை


யாழ் தண்விகா

Thursday, 26 May 2022

ஆதலினால்...




 ஒரு பைத்தியத்திற்கான

அத்தனை தகுதியும் 

எனக்கிருப்பதாகச் சொல்கிறாய்

ஆம் என்பதைத் தவிர

வேறு வழியில்லை 

என்றில்லை

குற்றம் சாட்டுவது என்றபின்

சமாதானங்கள் என்ன 

செய்துவிடப் போகிறது

பைத்தியம் காதலிக்கும்

பைத்தியத்தின் காதல் 

பைத்தியக்காரத்தனம் தான்

பைத்தியத்தின் ஏகாந்தம்

யாருக்கும் எந்த சலனத்தையும்

உண்டாக்காது

பைத்தியத்தின் சொற்கள்

யாருக்கும் புரிய அவசியமில்லை

பைத்தியத்தின் சுவாசம் குறித்து

யாரும் கவலைப்பட அவசியமில்லை

பைத்தியத்தின் உணவு குறித்தும்

அவசியமில்லை

பசித்தால் கையேந்தப் போகிறான்

பைத்தியத்தின் இருப்பை

யாரும் பார்த்துக் கொண்டேயிருக்க

என்னவிருக்கிறது

காணாமல் போனால் 

பைத்தியம் எங்காவது போயிருக்கும்

என்று சொல்லிக் கடக்கலாம்

பைத்தியத்தின் பார்வைக்கு இரங்கி 

யாரும் கண்ணீர் துடைத்து

வீட்டில் சேர்த்துக் கொள்ளப் போகிறார்களா

பைத்தியத்தின் பாடலுக்கு

யாரும் தலையாட்ட வேண்டியதில்லை

பைத்தியத்தின் வேண்டுகோள்

ஒன்றே ஒன்றுதான்

அதன் காதுபட

பைத்தியம் என்றழைக்க வேண்டாம்

என்பது மட்டுமே.


இனியொரு போதும்

பைத்தியம் என்றழைக்காதே

என் காதல் 

இன்னும் பைத்தியமாகிவிடும்...


யாழ் தண்விகா

Wednesday, 25 May 2022

உயிர் மீளாத நாட்கள்



 ❣️

கடைசியாய் நீ எதிர்பார்த்தது நடந்தேறிவிட்டது 

எப்பொழுதும்போல் காத்திருக்க 

மனது சொல்கிறது காத்துக்கொண்டிருக்கிறேன் 

அதே வலிகளுடன் 

அதே காதலுடன் 

அதே காமத்துடன் 


❣️

நீ இல்லாத நாட்கள் 

உயிர் மீளாத நாட்கள்


❣️

என்னை நான் எப்படி 

மீட்டெடுக்கப் போகிறேன் 

தெரியவில்லை 

ஆனால் நான் உன்னில் 

உரையாடிக் கொண்டிருக்கிறேன் உனக்குத் தெரியாமல் 

உன் காதலுக்குத் தெரியாமல் 

உன் உயிருக்குத் தெரியாமல் 

உன் உணர்வுகளுக்குத் தெரியாமல் 

என் காதல் எப்பொழுதும்போல் உன்னோடு இருக்கிறது 

என்னை நான் எப்படி 

மீட்டெடுக்கப் போகிறேன் 

தெரியவில்லை


❣️

உன் உறவற்ற நேரங்களில் 

உயிர் தொலைந்து போனால் என்ன


❣️

என் ரேகைகள் எல்லாம் 

உன் ஸ்பரிசம் என மாறிக் கிடக்கிறது

நான் நானாகப் புறத்திலும் இல்லை

அகத்திலும் இல்லை


❣️

கோட்டை சிதிலமடைந்து போகும் முன்பு உயிர் பிரிந்துவிட வேண்டும்

கோட்டையில் வாழ்வதும் 

கோட்டை சிதிலமடைந்து போனபோது வாழ்வதும் 

இனி கோட்டையில் வாழ்ந்த வாழ்வு

கிடைக்குமா என வாழ்வதும் 

எப்படி ஒரு வாழ்வாக இருக்கும்...

உன்னோடு நான் மீண்டும் கூடுவேனா...


❣️

எனக்கென்று எந்தத் தனிமையும்

வாய்க்கவில்லை நேற்று 

தனிமைக்கென்று வாய்த்திருக்கிறேன் இன்று...


❣️

எரியாத அடுப்புக்குள் பூனை படுத்திருப்பது போல 

நீயிருந்த இடத்தில் உன் நினைவை வைத்து அதன்மேல் என் கைகளைப் படரவிட்டுள்ளேன்...


❣️

நீயும் நானும் வாழ்ந்த ஏகாந்த உலகத்தில்

காதலும் காமமும் பிரதானமாகக் கிடந்தது 

இன்று நீயும் நானும் உடலாக மட்டும் கிடக்கிறோம் 

காதலும் காமமும்

பரிதவித்துக் கிடக்கிறது...


❣️

இந்தக் காலத்திற்காகவா 

நாம் காதலித்துக் கிடந்தோம்...


யாழ் தண்விகா

உன் குரலில் என் வாழ்க்கை...


 கொஞ்சம் மழை தான்

வெயில்தான்

பனிதான்

மந்தமான வானிலைதான்

வெக்கைதான்

எல்லாம் அதீதமாகுப் பூக்கும்

குறைவாக மாறும்

நீ அருகில் இருப்பதைப் பொறுத்தோ

தூரத்தில் இருப்பதைப் பொறுத்தோ...


பெரு மயக்கத்திற்காகவே

கழுத்தின் வழியாக

காது மடல் தீண்டி

பின்

முன் முகம் பார்த்தல்...


எந்தச் சாயலும் இல்லாத

அழகு உன்னிடம்.

அது எதில் தான் இல்லை

பேசுவதில்

நடையில்

நடனத்தில்

உடையில்

முத்தத்தில்

கட்டியணைப்பில்

கவிதையில்

வெட்கத்தில்

கனவில்

...

ஆதலினால்

உன்னைப் பேரார்வத்துடன் எப்போதும் காதலிப்பேன்...

யாழ் தண்விகா

❣️

Sunday, 27 March 2022

"விசா"வுக்காகக் காத்திருக்கிறேன் #டாக்டர் பி. ஆர்.அம்பேத்கர்

 




"விசா"வுக்காகக் காத்திருக்கிறேன்


டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்


திராவிடர் கழக வெளியீடு


விலை ரூ.20 பக்கங்கள் 32


வாழ்க்கை முழுதும் போராட்டம் என வாழ்ந்த ஒரு புரட்சியாளரின் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள் நினைவலைகளாக. ஓர் இந்து, தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மனிதர்களுக்குச் செய்த அயோக்கியத்தனத்திற்கு கொஞ்சமும் குறையாது பார்சி, முகமதியர், கிறித்துவர் மதத்தவர் செய்த செயல்களும் என்பதை தன் வாழ்வில் நிகழ்ந்த செயல்கள் மூலம் கூறுகிறார் அம்பேத்கர். மருத்துவம் பார்க்க தாழ்த்தப்பட்டோர் வாழும் தெருவுக்குள் வராமல், தெருவை விட்டு வெளியே நோயாளியை அழைத்து வரச் சொல்லும் மருத்துவரின் குரூரம், படித்து வேலைக்கு வந்தபின்னும் அவன் மேல் தீண்டாமை முறையைப் பின்பற்றும் சமூகம் என தான் கண்ட நிகழ்வுகளையும் நூலில் குறிப்பிட்டுள்ளார் அம்பேத்கர்.


வாசிக்க வேண்டிய நூல். மேலும்இந்த சமூகத்தில் நிலவிய சாதியக் கொடுமைகளை அறியவும் அதன் நீட்சியாக இன்னும் நடைபெறும் சாதியக் கொடுமைகளைக் களையவும், சமூகம் நல்வழிப் பாதையில் செல்ல விரும்பும் உள்ளங்கள் எல்லோரிடமும் கொண்டு செல்ல வேண்டிய நூலும் கூட.


யாழ் தண்விகா 


❣️









Thursday, 24 March 2022

தேவதை புராணம் #சி.சரவண கார்த்திகேயன்


தேவதை புராணம்

சி.சரவண கார்த்திகேயன்

Saravanakarthikeyan Chinnadurai 

எழுத்து பிரசுரம்

78 பக்கங்கள் 90 ரூபாய்


      காதல் என்பது வரம். யோசித்துப் பார்த்தால் காதல் கிடைப்பதற்காக, கிடைத்த காதலை தக்க வைப்பதற்காக, விலகிப்போன காதலை நினைப்பதற்காக நாம் செய்யும் எல்லாம் அபத்தம்தான். ஆனபோதிலும் காதல் என்பது சுனையில் ஊறும் ஊற்று. காதல் வழக்கமாகப் பொழியும் மழையின் ஊடே வந்து விழும் ஆலங்கட்டி. காதல் உயிரைப் பூக்கவைக்கும் அற்புதச் செடி என்று சொல்லிக்கொண்டே இருக்கிறோம். அது கணநேரத்தில் பிரசவிக்கப்படும் மாய தேவதையும் தான். உடனிருக்கும். கிச்சுக்கிச்சு மூட்டும். மயக்கம் உண்டாக்கும். அழவைக்கும். அச மந்தமாகத் திரியவைக்கும். எப்படி நாம் அதனோடு இதயம் கோர்த்துத் திரியவேண்டும் என்றுணர்தல் பெரும் கலை. அதைச் செய்யத் தெரிந்தால் எப்போதும் காதலோடு திரியலாம். 

 


       தேவதை புராணம் கவிதைத் தொகுப்பு என்பதை விட காதலால், காதல் சொற்களால், காதல் செயல்களால் நிரம்பிய தொகுப்பு. காதலித்துக் கைத்தலம் பற்றிய தன் மனைவிக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறார் கவிஞர். காலம் முழுக்க செய்த, செய்யும், செய்யப்போகும் காதலுக்குச் செய்திருக்கும் ஆகப்பெரும் மரியாதையாகக் கொள்ளலாம் தொகுப்பை. முன்னுரையில் இத்தொகுப்பு பற்றிக் கூறும்போது சங்ககாலத் தலைவி கூற்று போல இது சம காலத் தலைவி கூற்று என்கிறார் கவிஞர். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, மற்றும் பேரிளம் பெண் ஆகிய ஏழு பருவங்களிலும் ஒரு பெண்ணில் உண்டாகும் மனத்தின் பேராசையைக் கவிதை என்ற கட்டுக்குள் நிறுத்தி வார்த்திருக்கிறார். பெண்ணின் இடத்தில் நின்று பெண்ணின் வலியைப் பேசுதல் தான் சிறப்பாக இருக்கும் என்பார்கள். இங்கு கவிஞர் ஆணாக இருப்பினும் பெண்ணின் ஆசைகளை, விருப்பை, ஏக்கத்தினைப் பதிவு செய்திருக்கிறார் அற்புதமாக. 


          பெண்ணின் பார்வை அனைத்தும் மிக நாசூக்காக இருக்கும். அவர்கள் பார்க்காத கோணங்களைக் கூட கவிஞர் என் பேதையின் விருப்பம் இப்படிப்பட்டதாக இருக்கும், இப்படியும் இருக்கும் என்கிறார்.

“தெருவோரம் நின்ற வாக்கில்

சுவற்றோவியம் வரைந்தபடி

வெளிர் மஞ்சள் நிறச் சிறுநீர்

கழிக்குமுந்தன் சௌகரியம்

பொறாமை தருகிறதெனக்கு”

இந்த வரிகள் வெறுமனே காதலை மட்டுமா சொல்கிறது? பெண்ணின் விருப்பம் என்பதற்குள் தொனிக்கும் சுதந்திரம் என்பதையும் தான் சொல்கிறது. 


“நீயும் நானும் 

சேர்ந்து நடக்கையில்

சில சமயம் விரலுரச,

பரஸ்பரம் புன்னகைப்போம்-

அதற்கு என்ன அர்த்தம்?”

வாழ்வின் பல சூழலில் இது போன்று பலருக்கு நிகழ்ந்திருக்கலாம். பருவங்களைப் பிரித்து இதனை பெதும்பை பருவத்தில் வரும் கவிதையாக கவிஞர் வைத்திருக்கிறார். 8 முதல் 11 வயதின் நினைவை மீட்டுக் கொடுக்கிறது வரிகள். புன்னகையை விட அங்கு வேறொன்றும் அடையாளம் காணப்பட்டிருக்காது எனினும் அந்த மகிழ்வு அட்டகாசமாக இருக்கிறதில்லையா...


        12 முதல் 13 வயதுப் பருவம். பருவத்திற்கான பருவம். முதல் கவிதை இப்படித் தொடங்குகிறது.

“நான் பூப்படைந்த கணத்தில்

என்ன செய்து கொண்டிருந்தாய்

நீ”

ஒரு விசாரணை போல் இருக்கும் வரிக்குள் அப்பெண் தனக்குப் பிடித்தவனிடம் கேட்பது அதற்காக அல்ல. அந்தக் கணத்தில் அவன் என்ன செய்தான் என்பதைத் தெரிந்து அடையும் சிறு பூரிப்புக்காக, சிறு மகிழ்வுக்காக. சிறு குறுகுறுப்பிற்காக. எனக்கு இப்படி ஆச்சு தெரியுமா... அப்ப நீ என்ன பண்ணிட்டிருந்த என பூப்படைந்த ஒரு பெண் தனக்குப் பிடித்தவனிடம் கேட்பதுபோல் கேட்டுப் பாருங்கள். அந்த வரிக்குள் இருக்கும் பருவத் தேடலின் ஆதி அந்தம் உணரலாம்.


“நீ அழுந்தப் பார்த்தாலே

தள்ளிப் போகிறதென்

மாத விலக்கு நாட்கள்”


“தீட்டுக் கழியும் நாட்களில்

தனியாயுன்னிடம் மாட்டி

அவஸ்தைப்படுவேன் – சுகம்” 

இப்படியான கவிதைகள் மத்தியில், நின்று நிதானித்து அந்தச் சூழலுக்குள் சென்று ஒரு பொழுதைப் பார்க்கும் வண்ணம் ஒரு கவிதை. அதனை கொண்டாடுதல் என்பதா? வலியைத் தாங்கும் இளம் குருத்துகள் மனம் அறிந்து கலங்குவதா? அல்லது பிடித்தவன் முன்னால் இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது என்பதை அறிந்து உள்மகிழ்வதா...? எனப் பல எண்ணங்கள். 

“உன்னிடம் சொல்லியதில்லை இதுவரை-

உன்னைப் பார்த்துக்கொண்டிருந்த போதே

வகுப்பிலொரு சமயத்தில் விலக்கானதை”

இப்படி மாத விலக்கு குறித்த கவிதைகள் தொடர்ந்து அந்தப் பருவத்தின் பார்வைகள் எப்படியிருக்கும் என்பதாக நீள்கிறது கவிதைகள். காதல் பெருக்கெடுத்து ஓடுவது தெரியாமலே ஓடும் தருணம். 

‘என்னிடம் எதை ரசிப்பதென

விவஸ்தையே கிடையாது-

போடா, காதல் பொறுக்கி!


           மடந்தைப் பருவத்தின் சேட்டைகள் வெட்கம், கள்ளத்தனம், முத்தம், காதல் அறிதல், பகிர்தல் எனப் புதுப் பாதையில் பயணிக்கிறது. 

“யாரோ தூரக்குரலழைக்க

நமைத் தனியே விடுத்து

உனதன்னை விலகிய 

சிறு இடைவெளியில்

எனைக் கதவடைத்துக்

கலைத்தவன்தானே நீ”

செய்வான் அவன் எனினும் எதிர்பார்த்துக் காத்திருப்பவள் அல்லது எதிர்ப்பைக் காட்டாது ஏற்றுக்கொள்பவள் என மடந்தை இருப்பாள் என்பதை வரிகள் சொல்கிறது. இல்லறத்திற்குள் கண்டாடும் சுகங்கள் கவிதைகள் என்றும் சொல்லலாம் காட்சிப் படுத்துதல் என்றும் சொல்லலாம் எனுமளவு சிறப்பு.

“உச்சம் ஒரே கணம்

உனக்கு – எனக்கோ

ஒவ்வொரு கணமும்”


“காதோரம் 

கழுத்தோரம்

உதட்டோரம்

உயிரோரம்

பரவும் தீ – நீ”


“உன் காமம் பிடிக்கும்;

அதைவிடப் பிடிக்கும்

அதற்கும் முந்தைய...”


           காதல் வாழ்வின் உச்ச காலத்தில் (வயது 31-40) இல்லறத்தின் மேல் பூக்கத் தொடங்கும் ஆசுவாசம், நம்பிக்கை, வாழ்ந்த காலத்தினால் உயிரில் உண்டாகிக் கிடக்கும் கிளர்ச்சியால் மந்தகாசம் உண்டுபண்ணும் சுகம் இத்தருணங்கள் கண்ணீரையும் வரவழைக்கும் போல. ஏற்கனவே சொல்லியிருந்தாலும் “பெண்ணின் மொழியில்” இக்கவிதைகளை வாசித்துப் பாருங்கள். எத்தனை சுகம்...

“உனக்கெந்தன் தாய்மையின்

கருவறைக் கதகதப்புத் தராத

துக்கமுண்டு என்றுமெனக்கு” 

இருக்கும் பேரன்பு எல்லாவற்றையும் உனக்குத் தந்துவிட்டேன். தராத மிச்சம் இதுதான் எனமளவு காதல் சொல்லும் வரிகள். 

“உனக்கு முன்னர் நானெனில்

எனக்கு நீ நீராட்ட வேண்டும்

எனக்கு முன்னால் நீயெனில்

உனக்கு நான் தீமூட்ட வேண்டும்”

இறப்பு நேருமிடத்திலும் காதலின் ஆசை எப்படிப்பட்டதாக இருக்கிறது...? கண்ணீரோடும் வாசிக்க கவிதைக் காதல் வழி சொல்லுகிறது.


       இன்னும் மின்னும் பல கவிதைகள் தொகுப்பெங்கும். காதலைக் காதலிக்கும் ஒவ்வொரு ஜீவனும் வாசிக்கவேண்டிய தொகுப்பு. கூடு விட்டுக் கூடு பாய்ந்து ஒரு ஆண் பெண்ணின் இடத்தில் நின்று எழுதியதன் மூலம் காதலனின் விருப்பம் இதுவெனவும் அறியலாம். ஒரு பெண் ஆணுக்கு அளிக்க வேண்டிய காதலையும் அறியலாம். சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை. சில பல இடங்களில் சொல்லித் தெரிந்துகொண்டால் / கேட்டு/ வாசித்துத் தெரிந்துகொண்டால் இன்னும் சிறக்கும் மன்மதக் காதல் கலை. முக்கியமாக கவிஞரை வாசித்தால் இன்னும் சிறக்கச் செய்யலாம்.


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா

 

Wednesday, 23 March 2022

காதல் - ஒரு சொல் கவிதை #யாழ் தண்விகா


❤️
காதல்
ஒரு சொல் கவிதை...

❤️
வைரம் பாய்ந்த மரம்
உறுதியாய் இருக்கும்

காதல் பாய்ந்த மனம்
மென்மையாய் இருக்கும்.

எனக்குள் பாய்ந்த
காதல் நீ.

❤️
அவ்வப்போது கேட்பாய்
ப்பா
என்னைப் பிடிக்கும்ல எப்போதும்...

அன்பின் அழகும்
காதல் அழகும் 
உன்னில் கூடும்போது
திகட்டி விடுவாயா என்ன...

❤️
அங்கங்களை
இதழ்களால் வர்ணிக்கும்போது
போங்கப்பா எனச் சொல்லும் 
நீதான்
எழுத்தால் வர்ணிக்கும்போது
வெட்கத்தால்
சொற்களை 
மேலும் வசீகரிக்கிறாய்...

❤️
ஒரு நாளில்
ஒரு பொழுதேனும்
உன் குரல் கேட்டுவிட வேண்டும்

காதல் மயக்கம்
பொல்லாதது...

❤️
தோளில் கை போட்டு
நடந்து வருகிறேன்
உன்னோடு...

என் கையை எடுத்து
உன் இடையில் வைத்து
நடக்கிறாய்
பேச்சு பேச்சாக
இருந்தபோதும்...

இது எப்படா நடந்துச்சு...

இனி நடக்கும்ல...

இன்னும் நிறைய நாளாகுமா...

வா இப்பொழுதே நடப்போம்...

❤️
உன் சட்டையில்
நம் வாசனை
நீ மட்டும் உள்ள சட்டை
தாயேன்

புதுச் சட்டையின் காலர்ல
மஞ்சள் படுதோ இல்லையோ
உன் மஞ்சத்தின் மஞ்சள் 
பட்டு விடுகிறது.
பிறகெப்படி
நான் மட்டுமிருப்பேன்...

❤️
கைகளுக்குள் ஊர்கிறது
சிலை தடவிய நுட்பம்
உன்னோடு வாழ்ந்த பின்...

❤️
உங்களோட வாழ்ந்த சந்தோசம் 
போதும்ப்பா
இனி நான் செத்தாலும்
கவலையில்ல

உன்னோட வாழ்ந்த சந்தோசம்
பத்தாதுப்பா
இன்னமும் நான் வாழவேண்டும்
உன்னோட

❤️
கூந்தல் கலைந்து
முகம் காம நிறம் போர்த்தி
கண்கள் செருகும் மயக்கத்தில்
எதுவும் பேசாமல்
வெட்கத்தில்
தோள் இழுத்து நெருங்கிப் படுத்து
உடலை சரணாகதியாக்கித் தந்து
மெல்லக் கண்கள் மூடுகிறாய்

காதல் மகுடம் மின்னத் தொடங்குகிறது.

❤️
அந்த நேரத்துக் கவிதைகளை
இதழ்ச் சொற்களால்
மீளாய்வு செய்யத் தலைப்படுவேன்

வேண்டாம் என்று
இரு கரங்களாலும்
என்னிதழ் மூடுவாய்

மீண்டும் இதழ் திறப்பேன்

உன்னிதழால் என்னிதழ் மூடுவாய்

அந்த நேரத்துக் கவிதைகள்
மீண்டும் புதிதாய் பூக்கும்...

யாழ் தண்விகா