Wednesday, 2 July 2025

No சொல்லுங்க



 நோ சொல்லுங்க

(மறுத்துப் பேசும் திறன் பற்றிய சிறார் நூல்)

சக.முத்துக்கண்ணன் 

ச.முத்துக்குமாரி

மேஜிக் லாம்ப் வெளியீடு ஓவியங்கள்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

72 பக்கங்கள் 

199 ரூபாய்


நோ சொல்வது ஒரு திறன் 

நோ சொல்வது ஒரு கலை 

நோ சொல்வது ன்னம்பிக்கை 

நோ என்பது சிறந்த பதில் 

நோ சொல்பவர் கெட்டவர் இல்லை

நோ சொல்லக் கற்றுக் கொள்வது அவசியம்

இதுதான் இந்த நூலின் சாராம்சம். இன்று குழந்தைகளிடம் மறுத்து பேசும் திறன் என்பதே இல்லாமல் போய்விட்டது. ஆசிரியர் சொன்னால் அப்படியே கேட்பது. பெற்றோர்கள் சொன்னால் அப்படியே கேட்பது. அவர்களை ஒரு பொம்மையைப் போல வளர்த்துக் கொண்டு வரும் சூழல் உள்ளது. அல்லது விட்டேத்தியாக வளரும் சூழல் உள்ளது.


அம்மா எடுத்து வந்த சுடிதார் வேண்டாம் என்றால் கூட திட்டி விடுவாரோ என்ற எண்ணத்தில் மகள் இருப்பார். ஆனால் அந்த நோ சொல்ல வேண்டியதை மாற்று மொழியில் கூறலாம். அம்மா, இந்த கலர் சுடிதார் என்னிடம் இருக்கிறது / அடுத்த முறை என்னையும் துணிக்கடைக்கு கூட்டிட்டு போங்க / என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம் அம்மா என்பது போன்று எல்லாம் சொன்னால் அம்மா தடுக்க முடியாது. அதை அணுகும் முறை வேறுபடும் என்று ஆலோசனை வழங்குகின்றனர் நூல் ஆசிரியர்கள். 


நோ சொல்லி பழகுவது எப்படி என்பதற்கு கதைகள் மூலம் விளக்குகிறார்கள்.


ஒருவன் ஒரு பெண்ணிற்கு தொடர்ந்து சாட் செய்கிறான். நல்லபடியாக போய்க்கொண்டிருந்த சாட் ஒரு குறிப்பிட்ட சூழலுக்குப் பின் திசை மாறிப் போகிறது. இதனை அந்தப் பெண் விரும்பவில்லை. பின் அவள் சாட் செய்வதை தொடர்கிறாள்.  இது சரியா தவறா? புதியதாக நம் வீட்டுக்கு அருகில் ஒரு குடி வருகிறார். கணவன் மனைவி இருக்கிறார்கள். ஒரு நாள் மனைவி ஊருக்கு செல்ல அவர் மட்டும் இருக்கிறார். அங்கு பக்கத்து வீட்டுப் பெண் செல்வது சரியா தவறா? இப்படிப்பட்ட விவாதங்கள் இந்த புத்தகத்தில் இருக்கின்றன. புதியவர் வந்தால் அந்த வீட்டிற்கு நாம் பெண் பிள்ளைகளை கவனத்துடன் அனுப்ப வேண்டும். புதியவர் வந்தால் என்று இல்லை பழையவர்களாக இருந்தாலும் நாம் கவனத்துடன் இருக்க வேண்டும்.


சரியான தொடுதல், தவறான தொடுதல் குறித்து பள்ளிகளில் பாடம் எடுக்கும் சூழல் உள்ளது. அந்த பாடம் குறித்த தகவலும் நூலில் உண்டு.


வீட்டில் அம்மாவோ அப்பாவோ மொபைல் போன் பயன்படுத்தும் பொழுது கண்டித்து வாங்கி விடுகிறார். திரும்பவும் மல்லுக்கட்டி அந்த மொபைல் போனை வாங்கி விடுவோம். அம்மா சொல்லும் நோ நியாயமானதா இல்லையா என்பதை விவாதிக்கச் சொல்லி ஒரு பக்கம் ஒதுக்குகிறார்கள். இன்று செல்போன் வாங்கித் தரவில்லை என்றால் மாணவர்கள் தவறான முடிவை எடுக்கிறார்கள். பைக் வாங்கி தரவில்லை என்றால் தவறான முடிவு எடுக்கிறார்கள். எது சரி எது தவறு இது இந்த வயதிற்கு தேவையா என்பதை புரிந்து கொள்ளும் மனப்பான்மை மாணவர்களுக்கு வருவதில்லை. இந்த வயதிற்கு ஏற்றதுதானா என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். வீட்டின் பொருளாதாரம் இதற்கெல்லாம் கட்டுபடியாகுமா? என்று மாணவர்கள் யோசிப்பதில்லை. நோ சொல்லிவிட்டால் தலைகீழாக குதிக்கிறார்கள். இதையெல்லாம் விவாதம் தொடர்பான பக்கங்கள் ஒதுக்கி மாணவர்களை பேச வைக்கிறார்கள்.


நோ சொன்னதால் என்னென்ன நன்மை விளைந்திருக்கிறது என்று விளக்குகிறார்கள் நூல் ஆசிரியர்கள். சித்தார்த்தன் நோ சொன்னதால் ஒரு போர் நிறுத்தப்பட்டது. ரோசா பார்க்ஸ் என்பவர் பேருந்தில் எழுந்து நிற்க மறுத்துவிட்டார். வெள்ளைக்காரர் வந்து நின்றால் எழுந்து நிற்க வேண்டும் என்ற ஒரு நடைமுறை. அதை மீற வேண்டும். தனக்கு சுதந்திரம் இருக்கிறது. நான் நடத்துனரிடம் பயணம் செய்வதற்கு காசு கொடுத்து இருக்கிறேன். நான் ஏன் எழுந்து நிற்க வேண்டும் என்ற ஒரு மறுப்பின் வெளிப்பாடு தான் நோ சொல்லுதல். 381 நாட்கள் நடந்த போராட்டத்தின் முடிவில் ரோசா பார்க்ஸ் சொன்ன ஒரு நோ"வால் நிறத்தை வைத்து பாகுபாடு பார்க்கும் சட்டத்தையே மாற்ற வைத்தது. காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கம் நடத்திய பொழுது வெள்ளைக்காரர்களுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு வரமாட்டோம் என வழக்கறிஞர்கள் நோ சொன்னார்கள். ஆங்கிலேயர்களின் துணியை உடுத்த மாட்டோம் என மக்கள் நோ சொன்னார்கள். கதர் ஆடையை மட்டுமே உடுத்த ஆரம்பித்தார்கள். ஆங்கில ஆட்சிக்கு எதிராக இந்தியா முழுக்க நோ சொன்னார்கள். ஒத்துழையாமை இயக்கத்திற்கு வெற்றி கிடைக்க முக்கிய காரணம் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக காந்தியடிகள் நோ சொல்லியதுதான். "பொம்பள புள்ளன்னா கல்யாணம் பண்ணனும், சமைக்கணும், குழந்தை பெத்துக்கணும், எதுக்கு படிப்பு?" என சுற்றி இருந்த எல்லாரும் சொன்ன போது சாவித்திரிபாய் பூலே அதை மறுத்து நோ சொன்னார். அவர் இந்தியாவில் பெண்களுக்கான பள்ளியை ஆரம்பித்தார். முதன்முதலாக தொடங்கிய அந்த பள்ளி 3 பள்ளிக்கூடங்களாக விரிவடைந்தது. இதற்கு காரணம் நோ சொன்னது தான்.


ஆனால் நாம் எத்தனை விஷயங்களில் நோ சொல்லி இருப்போம். அதுவும் துணிச்சலாக சொல்லி இருப்போம் என்பது கேள்விக்குறிதான். ஒரு திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது என்றால் அது குறித்த மேற்பார்வை செய்ய அதிகாரிகள் வருவார்கள். அந்த திட்டம் சரியில்லை என்ற மனப்பான்மையுடன் நாம் இருப்போம். ஆனால் அந்த பதிலை அவர்கள் விரும்ப மாட்டார்கள். இது தொடர்பாக பாசிட்டிவான பதிலை எதிர்பார்ப்பார்கள். ஆதலால் நெகட்டிவ் ஆக எதுவும் கூறிவிட வேண்டாம் என்று நாம் அறிவுறுத்தப்படுவோம். அதற்காக ஆமாம் சாமி போடும் கூட்டம் பல இடங்களில் உண்டு. ஆக இந்த நூல் மறுத்துப் பேசும் திறன் பற்றிய சிறார் நூல் மட்டுமல்ல. கொஞ்சம் நமக்கும் சேர்த்துத்தான்.


நோ சொல்லுங்க என்று மனம் சொல்லுகிறது காரணம் 199 ரூபாய். வெறும் 72 பக்கங்கள். ஆனாலும் வாங்கியாச்சு. படிச்சாச்சு. 


பள்ளியில் உயர் கல்வி படிக்கக்கூடிய குழந்தைகள் அனைவரும் இந்த நூலை படிக்கலாம். சிறுவர்களும் இந்த நூலை படிக்கலாம். விழிப்புணர்வைத் தரக்கூடிய நூல்.


வாசிக்க வேண்டிய நூல். 


பெ. விஜயராஜ் காந்தி

Tuesday, 1 July 2025

அடுக்கு மல்லிகை


 

அடுக்கு மல்லிகை... பாடல்

திரைப்படம் : தங்கமகன்

இசை: இளையராஜா


காமத்தை கொண்டாட்ட மன நிலையில் ஆராதிக்க கற்றுக் கொடுத்தவர் இளையராஜா என்பதை மெய்ப்பிக்க உள்ள பல பாடல்களில் அடுக்கு மல்லிகை பாடலும் ஒன்று. 


வில்லனின் இடத்தை நோட்டமிட வந்திருக்கும் ரஜினி மற்றும் சில்க் ஸ்மிதா இருவரும் பாடும் பாடல் காட்சி. இந்தப் பாடலின் தொடக்கத்தில் ரஜினி அறையில் படுத்து இருக்கிறார். அந்த அறைக்கு வரும் சில்க் கதவின் அருகில் நின்று ரஜினியைப் பார்த்து, இரு கவனித்துக் கொள்கிறேன் என்பதுபோல் தலையசைத்து கதவைப் பூட்டுகிறார். அந்த நேரம் சில்க்கை திரும்பிப்பார்க்கும் ரஜினி ஒரு கொண்டாட்ட மனநிலையில் கால்களை குதிப்பது போல பாவனை செய்கிறார். சில்க் கதவை அடைத்துக்கொண்டு வரும் அழகு அவ்வளவு அற்புதமாக இருக்கும். இந்த இடைவெளியை பாடல் துவக்கத்திற்கு அளித்திருக்கும் இளையராஜாவின் இசை அவ்வளவு லாவகமாக நிரப்பியிருக்கும். சில்க் வந்தவுடன் ரஜினியை கால்களில் இருந்து தொட்டு முகத்தில் முத்தமிட்டு ரஜினியை திகைக்க வைத்து அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது என்று பாடத் தொடங்குகிறார். அந்த குரல் மயக்குவதற்காக படைக்கப்பட்டதா என்ற சந்தேகம் நிச்சயம் எழும். உன்னைத் தொட்டால் போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும் என்ற அந்த குரல் உண்மையிலேயே சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் சுகம்தரும். சில்க்கிற்குள் புகுந்த ஜானகியின் குரல் இப்படித்தான் இருக்கும் என்றும் சொல்லலாம். தொடர்ந்து ரஜினிக்கு எஸ்பிபி பாடுகிறார். உச்சஸ்தாயியில் பாடத் தொடங்கி சில்க்கின் பார்வைக்கு மெல்ல இறங்குகிறது எஸ்பிபி குரல்.


இது காமத்தை தூண்டும் பாட்டா அல்லது ஒரு காதல் பாடலா அல்லது ரஜினியின் பாடலா அல்லது சில்க்கின் பாடலா அல்லது இளையராஜாவின் பாடலா என ஒரு பட்டிமன்றமே வைக்கலாம் அத்தனைக்கும் பொருந்தும் இசையும் குரலும்.


முதல் சரணத்தில் 

நீ வாடி செல்லக்குட்டி நான் தூக்கும் வெல்லக்கட்டி


கைகள் அள்ள... கண்கள் உன்னை... தேடுது


என்ற வரிகளும்


இரண்டாவது சரணத்தில்

ராசாத்தி முல்லைமொட்டு நான் தேடும் காதல்சிட்டு


கைகள் அள்ள... கண்கள் உன்னை... தேடுது

என்ற வரிகளும் எஸ்பிபி பஞ்ச்.


முதல் சரணத்தின் இறுதியில் ஜானகி அடுக்குமல்லிகை என தொடங்க எஸ்பிபி ஹா என ஹம் செய்ய இது ஆள் புடிக்குது என ஜானகி தொடங்க ஹாஹ்ஹா என எஸ்பிபி பாட ரெண்டு தோள் துடிக்குது என ஜானகி பாட எஸ்பிபி ம்ம்ம் எனத் தொடர பின் இருவரும் இணைந்து லாலால்லா என நீட்டித்து காமத்தின் வெள்ளோட்டத்திற்கான ஒரு சூழ்நிலையை இளையராஜா வைத்திருப்பார்.

இதே போன்று இரண்டாவது சரணத்தின் இறுதியில் எஸ்பிபி பாட ஜானகி கிறங்கும் (கிறக்கும்) குரலில் சிரிக்க என நீளும். எந்த இடத்திலும் காமத்தின் உச்சத்தைச் சிதைக்காத இசையும் வரிகளும் பாடலுக்கும் கதையின் சூழலுக்கும் ஆகப் பொருத்தம். விரசம் என்பதை மனதிற்குள் கொண்டு செல்லாமல் ராஜா, எஸ்பிபி, ஜானகி, ரஜினி, சில்க் என்ற ஆளுமைகளின் திறன்களை இப்பாடல் வழியாகவும் கண்டுணரலாம். கேட்டும் உணரலாம்.


பாடல்:


அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது


ரெண்டு தோள் துடிக்குது மனம் துடிதுடிக்குது


ஒன்ன தொட்டா போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும்


ஒன்ன தொட்டா போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும்


அட ஆளாகி நாளாச்சு... வந்தால் என்ன


நா வாரேன் புது பாய்போடு நாள்தோறும் இளநீரோடு


நா வாரேன் புது பாய்போடு நாள்தோறும் இளநீரோடு


கையோடு சேர்த்தணைச்சு கட்டில்வரை கண்ணடிச்சு


ஆத்தோடு போவதுபோல் ஆசையில நீச்சடிச்சு


நீ வாடி செல்லக்குட்டி நான் தூக்கும் வெல்லக்கட்டி


கைகள் அள்ள... கண்கள் உன்னை... தேடுது


மாம்பூவே இளம் பூங்காத்தே மார்போடு எனை தாலாட்டு


மாம்பூவே இளம் பூங்காத்தே மார்போடு எனை தாலாட்டு


தீராத ஆச வச்சே அங்கே இரு கண்ணிருக்கு


தில்லானா பாடிக்கிட்டு இங்கே ஒரு பெண்ணிருக்கு


ராசாத்தி முல்லமொட்டு நான் தேடும் காதல்சிட்டு


கைகள் அள்ள... கண்கள் உன்னை... தேடுது


அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது


ரெண்டு தோள் துடிக்குது மனம் துடிதுடிக்குது


ஒன்ன தொட்டா போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும்


ஒன்ன தொட்டா போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும்


அட ஆளாகி நாளாச்சு... வந்தால் என்ன


அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது


ரெண்டு தோள் துடிக்குது மனம் துடிதுடிக்குது


யாழ் தண்விகா

மீண்டும் ஒரு காதல் கதை



 ஒரு காதல் கதை

#நெடுங்கதை


மீரான் மைதீன்


புலம் பதிப்பகம்


பக்கங்கள் 56. விலை 80/=


 எழுத்தாளர் மீரான் மைதீன் அவர்கள் எழுதிய நூலை இப்போதுதான் முதன்முறையாக வாசிக்கிறேன். ஒரு கதை சொல்லி, இந்நெடுங்கதையில் சக பயணியின் கதையைக் கேட்கிறார். அதுவே ஒரு காதல் கதை.

  ரயில் சினேகத்தில் கதாசிரியருக்கு ஷீலா என்ற பெண் அறிமுகம் ஆகிறாள். கதைகள் எழுதும் நபர் என்பதாலும், உரையாடலின்போது பிடித்துப்போன மனிதர் என்பதாலும் 1980களில் தன்னுடைய வாழ்வில் நிகழ்ந்தவற்றைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார் ஷீலா. தன்னுடைய திருமணம் ஒரு காதல் திருமணம். அதுவும் சீர்திருத்தத் திருமணம். தன்னுடைய பெயர் வஷீலா என்றும் தன்னுடைய காதல் கணவரின் பெயர் மணிகண்டன் என்றும் கூறுகிறார் அப்பெண்மணி. காதல் இரு குடும்பத்திற்கிடையே என்னென்ன மனச் சிக்கல்களை உண்டாக்கியுள்ளது என்பதைத் தன்னுடைய உரையாடல் வாயிலான கேள்விகள் மூலம் ஷீலாவிடமிருந்து தெரிந்துகொள்கிறார். ஷீலாவின் அம்மா, அப்பா, தம்பி ஆகியோர் தற்போது என்ன ஆனார்கள்? அவர்களிடையே அப்பெண்ணிற்கு உறவு நீடிக்கிறதா? என்பன போன்ற கேள்விகள். ஷீலா தற்போது 60 வயதாகும் பெண்மணி. அவளுக்குக் கணவன் மணிகண்டன். ஒரு மகன். ஒரு மகள். இந்த ரயில் பயணத்தில் கூட அப்பெண்மணி தன்னுடைய பேரனைப் பார்க்கச் செல்கிறாள். கல்லூரி ஒன்றில் முதல்வராகப் பணி செய்தபின்னர் பணி ஓய்வு பெற்று இன்னும் ஈராண்டு கூட முடிவடையவில்லை. இசுலாம், இந்து இவர்களின் திருமண வாழ்வு இணக்கமாகச் செல்கிறதா இல்லையா என்பது உள்ளிட்ட அனைத்தும் கதாசிரியர் மீரான் மைதீன் மற்றும் ஷீலா ஆகிய இருவரின் உரையாடல் வழியாகவே அறிந்து கொள்ளலாம். தொய்வின்றிச் செல்கிறது கதை ஒரு தெளிந்த நீரோட்டம் போல. ஸ்பரிசத்தைத் தொட்டும் தொடாமல் செல்லும் தென்றல் போல. மனதை மயக்கும் பாடல் போல. 


அருமை. வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா

Sunday, 22 September 2024

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்

 


எந்த திட்டமானாலும் 

எனக்கான உரிமையானாலும் 

நீள்சதுர டப்பாவில் 

அடர் ஊதா மையில் பெருவிரல் அழுத்தி 

சொல்லும் இடத்தில் அச்சுப்பதிக்கவேண்டும் 

சில நேரங்களில் அதற்கும் வாய்ப்பற்று 

என் விரலைப் பிடித்து 

எதிரில் நிற்பவர் 

அவர் விரும்பும் இடத்தில் 

முன்னும் பின்னுமாக உருட்டி 

விரலை அச்செடுப்பார்கள் 

அது விரல் அச்சல்ல 

என் அறியாமையின் மேல் 

விழுந்து கிடந்த 

அவல அடையாளம் கல்லாமையினால் பூத்திருந்த கண்ணீர்ப் படிமங்கள் 


என் வாழ்க்கைக்கு,

நீங்கள் சொல்லும் அறிவுரை.

என் வயலுக்கும், 

நீங்கள் சொல்லும் உரம். 

என் வயிற்றுக்குக் கூட, 

நீங்கள் கைகாட்டும் அரிசி.

எல்லாம் கிடைத்தது,

என் விருப்பம் தான் 

எங்கும் இல்லாமல் போனது.


கீறல் என்று எழுதி 

என் பெயரை 

என் கைநாட்டுக்குப் பின் 

யாரோ ஒருவர் எழுதிக் கொள்ள எப்படிச் சம்மதித்தது மனது?

யாரோ ஒருவரின் குரலில் 

தன்மானம் கூசச் செய்யாமல் 

எப்படி என் காதுகள் கேட்டன செய்தித்தாளின் வரிகளை புத்தகத்தின் வரிகளை அழைப்பிதழ்களின் வரிகளை...?


புதிய பாரத எழுத்தறிவு திட்ட அழைப்பு

வெட்கம் பூக்கப் பூக்கத்தான் 

களம் செல்ல எத்தனித்தேன் 

தயக்கம் அழுத்த அழுத்தத்தான் வேண்டாம் எனத் தயங்கியும் நின்றேன் 

காலம் போன கடைசியில் என்ற பரிகாசம் கேட்க கேட்கத்தான் கொஞ்சம் பம்மிக் கொள்ளவும் செய்தேன் 


வாழ்வின் அந்திமக்காலத்திற்குள் முடிந்தளவு 

என்னை நான் எழுத படிக்க 

உங்களை நான் எழுத படிக்க 

இதை விட்டால் வேறு கதி என்ன...?


மெல்ல மெல்ல அறியாமைப் படிகளைக் கடந்தேன் தன்னார்வலர்களும் 

கல்வித்துறைப் பெருமக்களும் கத்தியின்றி இரத்தம் இன்றி புத்தியில் செய்த பெரும் புரட்சி 

சீரியதோர் சிகிச்சை

கல்விக்கண்ணைத் திறந்து வைத்தது


புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கரங்களை 

இன்னும் ஆதுரமாகப் பற்றிக் கொண்டேன் 


வாசிக்க வாசிக்க 

உணர உணர 

கல்வி சுகம் 

கடல் சுகம் 

வானம் சுகம் 

பூமி சுகம் 

இயற்கை சுகம் 

ஆறறிவு சுகம் 

மனிதம் சுகம் 


இரு கண்ணின் ஒளியுடன் 

இன்று மூன்றாவது கண்ணும் 

பிறந்து விட்டது 

எதிர்ப்படும் 

எல்லோரிடமும் சொல்கிறேன் உலகைப் படிக்க 

உன்னைப் படிக்க 

முதலில் படி 

படிக்கும் வயதில் படி


பாதைகள் திறக்கும் 

வாழ்வு சிறக்கும் 


வாய்ப்பிற்கு நன்றி 


இப்படிக்கு 

நேற்று வரை ஏய் பெருசு 

என்று அழைக்கப்பட்ட 

அமரர் கதிர்வேல் மகன் 

திரு. கா. பெரியசாமி.

இளமையிலேயே கற்று இருந்தால் இன்னும் கெத்தாகச் சொல்லி இருக்கலாம் 

இப்படிக்கு 

உயர்திரு கா. பெரியசாமி 

மாவட்ட ஆட்சியர் என்று கூட...


///புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட மண்டல அளவிலான போட்டியில் "வாசிக்க" எழுதிச் செல்லப்பட்ட கவிதை வரிகள். கற்போரும் கற்பிப்போரும் ஆர்வ மிகுதியால் மேடையை ஆக்கிரமிக்க, அவர்களுக்கு வழிவிட்டு... இந்த வரிகள் இந்தப் பக்கத்தில்...///


பெ.விஜயராஜ் காந்தி

@ யாழ் தண்விகா

பெரியகுளம்.


❣️

Saturday, 17 August 2024

அறிவே கடவுள் - வைரமுத்து

 


அறிவே கடவுள்


வைரமுத்து


NCBH வெளியீடு


35 ரூ 40 பக்கங்கள்


08.08.2017ஆம் தேதி ஈரோடு புத்தகத் திருவிழாவில் வைரமுத்து அவர்கள் ஆற்றிய உரை. மிகச் சமீபமாக பெரியகுளத்தில் தென்கரை நூற்றாண்டு நூலக விழாவில் கலந்துகொண்டு நூலக மலரை வெளியிட்டுப் பேசினார். இதற்கும் சில மாதங்களுக்கு முன்னர் தேனி புத்தகத் திருவிழாவில் கலந்துகொண்டு பேசினார். தெளிந்த நீரோட்டம் போல அங்கும் இங்கும் திசை மாறும் போக்கில்லாமல் அமைந்த பேச்சு. அதே போன்றதொரு உரை தான் 2017லிலும். அவரின் ஒவ்வொரு பேச்சும் இது போலத்தான் இருக்கும் என்பதை ஒப்பிட்டு உணரக் கிடைத்த வாய்ப்பு.


மிக எளிமையான சொற்கள். புரிந்து கொள்ளக்கூடிய வகையிலமைந்த மிக எளிய கதைகள். மிக அழகான தமிழ். ஒரு பேச்சு, கேட்பவரையும் படிப்பவரையும் சென்று சேர இதைவிட வேறு வகையில் பேசிவிட முடியாது. பெரும் குரலெடுத்து கத்துவது, உணர்வுகளைத் தூண்டுவது, பிறரைக் காயப்படுத்துவது என எந்தத் தொனியும் இல்லை. தலைப்பிற்கு, சமூகத்திற்கு நியாயம் செய்யும் பேச்சு. அறிவே கடவுள் என்ற நூலிலும் பேச்சை எழுத்தாக்கியதை வாசிக்கும்போது அதைக் காணலாம்.


கடவுள் உள்ள இடத்தில் அறிவுக்கு வேலை இருக்காது. அறிவினுள்ள இடத்தில் கடவுளுக்கு வேலை இருக்காது. அறிவு வினாக்களை உண்டு பண்ணும். அறிவு வினாக்களுக்கு பதிலைக் கொணரக் கொணர அங்கிருக்கும் கடவுள் பின்னால் நகர்ந்து செல்வார். அறிவுதான் கடவுள் என்பதைச் சொல்கிறது நூல். 


கலைஞரிடம் ஒருமுறை யார் பெரிய தயாரிப்பாளர் என்ற கேள்வி சில தயாரிப்பாளர்களின் பெயர்களைச் சொல்லி முன்வைக்கப்பட்டது. அவர் சொல்கிறார் மனிதன்தான் உலகில் மிகப்பெரிய தயாரிப்பாளர். ஏன் என்றதற்கு பதில் " அவன்தானே கடவுளையே தயாரித்தான்". வியக்க வைக்கும் பதில். புத்தக வாசிப்பையும், கேட்கும் தன்மையையும் அதிகரிக்க இது போன்ற பேச்சும் உதாரணங்கள் எவ்வளவு அவசியம். இதை பலரிடம் காணவும் முடியாது. சில நிமிடங்களிலேயே அங்கும் இங்கும் திரும்பி கூட்டத்தினரை வேடிக்கை பார்க்க வைத்து விடும் பல பெரிய பேச்சாளர்கள் பேச்சு. எம் தேனி மண் தந்த கவிஞரின் பேச்சு அவ்வகைப்பட்டதல்ல என்பதில் எங்களுக்கு பெரும் மகிழ்வு.


அக்பர் - பீர்பால் இருவரிடம் வரும் புலவன் முன்வைக்கும் கேள்விக்கு பீர்பால் அளிக்கும் பதில்கள் கண நேர அறிவுச் செயல்பாட்டிற்கு அவ்வளவு பொருத்தம். அறிவையும் பயன்படுத்த வேண்டும். அதே சமயம் எதிராளியை அவர் தம் தவறு உணரச் செய்ய வேண்டும். இரண்டையும் செய்கிறது சில உதாரணங்கள். பாரதியார் 11 வயதில் புலவர் பட்டம் பெற்றதைத் தாங்கவியலாத காந்திமதி நாதன் என்பவர் பாரதி சின்னப்பயல் என்னும் ஈற்றடி வருமாறு ஒரு பாடல் பாடச் சொல்கிறார். பாரதியை அவர் வாயாலேயே சின்னப்பயல் என ஒத்துக்கொள்ள, சொல்ல வைக்க செய்யும் செயல். பாரதி கேள்வி கேட்டவரையே பாடலின் உள்ளிழுத்து அவரை மூக்குடை பட வைப்பது மட்டுமில்லாமல் தன்னுடைய புலமைத் தன்மையையும் வெளிக்காட்டிய பாடல் நினைவில் வந்து போனது.


பெர்முடா முக்கோணம், கடலில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள், விக்கிரமாதித்தன் கதை என பல உதாரணங்கள் வாயிலாக சொல்லும் கருத்துகள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை. முக்கியமாக கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள். மூன்றாம் உலகப்போர் என்பது கவிஞர் எழுதிய நூல். அதில் ஒரு பறவையின் வெற்றி எதில் இருக்கிறது என்ற கேள்வி எழுப்பி இருப்பேன். அடையும் இலக்கா? பறக்கும் வேகத்திலா? எந்தக் கூட்டத்தோடு பறக்கிறது என்பதிலா? எதிலும் இல்லை. மொத்த வானத்தையும் மறக்கடித்து தன்னை மட்டும் கவனிக்கச் செய்யும் வித்தையில் தந்திரத்தில் இருக்கிறது என்று பதில் சொல்லியிருக்கிறேன். அது போல கோடி கோடி மக்கள் வாழும் உலகில் நீங்கள் கவனிக்கப்பட இந்த யுகம் அறிவை முன் வைக்கிறது. ஆக, நீங்கள் அறிவை நோக்கி பயணம் செய்யுங்கள் என்ற வார்த்தை எவ்வளவு நேர்த்தி...


இன்னும் நிறைய தகவல்களுடன் கூடிய அருமையான புத்தகம்.

வாசியுங்கள். 

வாழ்த்துகள் கவிஞருக்கு.


யாழ் தண்விகா 


❣️


Friday, 26 July 2024

குழந்தைமையைக் காவு கேட்கும் பள்ளிக்கூடம்




குழந்தைமையைக் காவு கேட்கும் பள்ளிக்கூடம்

எதை நோக்கிக் கல்வித்துறை செல்கிறது என்றே தெரியவில்லை. பள்ளியையும், பயிலும் குழந்தைச் செல்வங்களையும் விரட்டி விரட்டி அடிக்கத் தொடங்கிவிட்டது அரசின் கொடுங்கரங்கள். புதிய கல்விக் கொள்கை / தேசிய கல்விக் கொள்கை இதெல்லாம் இல்லை என்று சொல்லிக்கொண்டே என்னென்ன வகையில் குழந்தைகளை கொடுமை செய்யலாம் என்றெல்லாம் பயிற்சி எடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட வினா போல இருக்கிறது மூன்றாம் வகுப்பிற்கு இணைய வழித் தேர்வில் கொடுக்கப்பட்ட வளரறி மதிப்பீடு வினாத்தாள். ஒரு பானை சோற்றுக்கான ஒரு உதாரணம் மட்டும். என்னது மூன்றாம் வகுப்பிற்கா? வாயைப் பிளக்காதீர்கள். ஒன்றாம் வகுப்பிலிருந்து தொடங்கிவிடுகிறது அந்தத் தேர்வுகள். 

என்ன கவலை பெற்றோருக்கு? அவர்கள் உயர்தர கல்வியைப் பெற பள்ளியில் சேர்ந்து இருக்கிறார்கள். அதைக் கற்றுக் கொடுப்பது தானே ஆசிரியர் கடமை? ஆமாம். கற்றுக் கொடுப்பது தான் கடமை. அதையும் வழிகாட்டும் வகையில். திணிப்பதை கல்வி என்று சொல்வது அநியாயம் அல்லவா? அதையல்லவா இந்த சமூகம் எதிர்பார்க்கிறது...! சரி. சொல்லிக் கொடுத்துவிடலாம் என்றால் கற்பிக்கும் பணி மட்டும்தான் ஆசிரியருக்கு இன்றைய காலகட்டத்தில் அரசு வழங்குகிறதா? காலை முதல் மாலை வரை மட்டுமல்ல. விடுமுறையிலும் எப்படியெல்லாம் ஆசிரியர்களுக்கு வேலை தரலாம் என்பதைச் சொல்ல ஒரு குழுவே இருக்கும்போல. எண்ணும் எழுத்தும் திட்டம் வந்தபிறகு இன்னும் கொடூரம். ஒருபுறம் ஆசிரியர் கையேடு. மாணவனிடம் பயிற்சி நூல். மேலும் பொதுவாக பாடநூல். மூன்றின் நடுவில் நின்று தலையைச் சுழல விடுவது எவ்வளவு பெரிய பராக்கிரமம் தெரிந்த ஆசிரியராலும் இயலாத காரியம். கடந்த வாரம் பள்ளியில் வைத்த மூன்றாம் வகுப்பு தேர்வு வினாக்கள். 

Class 3 Mathematics Chitra M
(985987629790) 

SKIP TO NEXT STUDENT 

Q 1
Q1(0)
மூலை விட்டங்கள் கொண்ட இரு பரிமாண வடிவங்களைத் தேர்ந்தெடு
O சதுரம் & செவ்வகம்
O செவ்வகம் & வட்டம்
O முக்கோணம் & வட்டம்
O சதுரம் O வட்டம்

Q1(1)
மூலை விட்டங்கள் இல்லாத இரு பரிமாண வடிவங்களைத் தேர்ந்தெடு
சதுரம் & செவ்வகம்
செவ்வகம் & வட்டம்
முக்கோணம் & வட்டம்
சதுரம் & வட்டம்

Q2
Q2(0)
கொடுக்கப்பட்டுள்ள முப்பரிமாண உருவத்தில் உள்ள முகங்கள், விளிம்புகள் மற்றும் முனைகளின் எண்ணிக்கையைக் கூறுக
(கனச்செவ்வக வடிவம்)
8 முகங்கள் 12 விளிம்புகள் மற்றும் 6 முனைகள்
6 முகங்கள் 12 விளிம்புகள் மற்றும் 8 முனைகள்
12 முகங்கள் 8 விளிம்புகள் மற்றும் 6 முனைகள்
1 முகம் 0 விளிம்புகள் மற்றும் 0 முனைகள்

Q2(1)
விளிம்புகள் மற்றும் முனைகள் அற்ற, ஒரு வளைதள முகம் மட்டும் கொண்ட முப்பரிமாண உருவம் எது?
கன சதுரம்
கன செவ்வகம்
கோளம்
கூம்பு

வாசித்து யோசித்து சரியான பதில் சொல்லும் அனைவரும் இது குழந்தைகளுக்கு ஏற்றதா என்பதைச் சொல்லுங்கள். பதில் அளிக்கத் தவறும் நபர்கள் நாமே இவ்வளவு திணறும்போது குழந்தைகள் என்ன செய்வார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். எளிமையான வினாக்கள் கேட்கலாம்.  அதை விடுத்து ஒரே கேள்விக்குள் மூன்று, நான்கு கேள்விகள் வைப்பது எதற்காக? இது அனைத்து வகைக் குழந்தைகளுக்கும் சரியானதாக எப்படி இருக்கும்? குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் தேர்வு அனைவரும் முடிக்காவிட்டால் எந்தப் பள்ளி முடிக்கவில்லை என்றும் ஒரு சில வகுப்புகள் தேர்வுகள் முடித்து சில வகுப்புகள் தேர்வு முடிக்காவிட்டால் அந்தந்த வகுப்பைக் குறிப்பிட்டு தலைமை ஆசிரியர் குழுவில் தகவல் வரும். அலைபேசியில் அழைப்பு வரும் விரைவாக முடிக்கச் சொல்லி. எங்கே செல்லும் இந்த பாதை என்று தெரியாத நிலையில் கற்பித்தலைத் திறம்படச் செய்ய இயலாத நிலையில்  கற்பித்தலோடு தொடர்பு இல்லாத ஆயிரமாயிரம் வேலைகளுக்கு மத்தியில் செல்கிறது பள்ளியில் கடக்கும் காலங்கள்.

பள்ளியில் குழந்தைகளிடம் நடந்த உரையாடலில் ஒருநாள் ஒவ்வொருவரிடமும் வருங்காலத்தில் என்ன வேலைக்குச் செல்ல ஆசை? என்ற வினாவை முன்வைத்தபோது வழக்கம்போல டாக்டர், என்ஜினீயர், டீச்சர், டிரைவர், கலெக்டர் என்றெல்லாம் போய்க் கொண்டிருக்கிறது பதில்கள். ஒருத்தி எழுந்து சொன்னாள். "நான் நெத்துப் பெறக்க போவேன் சார்" நெத்துப் பெறக்கவா? அப்படின்னா என்ற கேள்வியை மீண்டும் கேட்கிறேன் அவளிடம். அதே பதில் தான் வந்தது. ஒலக நெத்து என்பது காய்ந்த இலவங்காய். அதுதான் பார்க்கப்போகும் வேலை என்று அவள் சொல்கிறாள் என்றால் பள்ளியில் கற்கும் கல்வியைக் கடந்து அவள் வீட்டில் உள்ள சூழல்தான் அவளை அப்படிச் சொல்ல வைத்திருக்கும். கற்றலின் இலக்கு என்ன என்று தெரியாத வயதாக இருக்கும்.  அடுத்து அப்பா என்ன வேலை பார்க்கிறார் என்ற கேள்விக்கு சீட்டு வெள்ளாட (அதை ஒரு வேலையென்றும், முழுநாளும் அந்த வேலையை மட்டுமே செய்து வருகிறார் என்று அவள் மனதில் நினைத்திருக்கிறாள்)சார் என்றாள். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு என்ன வழி சொல்லும் இந்த வினாத்திட்டம்? விரட்டி அடிக்கும். மன உளைச்சலை அளிக்கும். மாணவர்களுக்காக ஆசிரியரே எல்லாம் செய்து விடும் நேர விரயத்தை மேற்கொள்ளும். கற்பித்தல் நேரத்தை கபளிகரம் செய்யும். நட்பு வட்டாரத்தில் விசாரித்த வரையில் தொடக்கப்பள்ளியில் வரும் இந்த மாதிரியான ஆன்லைன் வினாக்கள் அறவே நீக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. குழந்தைகளை வருங்கால வேலைக்கான எந்திரமாக மாற்றும் முன்னர் அவர்களின் குழந்தைத் தன்மையைக் குலைக்காத கல்வியே தற்கால அவசியத் தேவை.

பெ.விஜயராஜ் காந்தி

❣️

பூபாளம் இசைக்கும்...

 

பூபாளம் இசைக்கும்...


காலையில் பேங்க்கு போயிட்டு மட்ட மத்தியானத்துல பைக்ல ஸ்கூலுக்குப் போறப்ப திடீர்னு மேக மழை நானாக... தோகை மயில் நீயாக... தித்திக்கும் இதழ் முத்தங்கள் என்ற வரிகள் என்னையறியாமல் இதழ்களில் ஒட்டிக்கொண்டு விடுபட மறுத்துவிட்டது. எவ்வளவு அருமையான கற்பனை. மென்மையான ராகம்... இசை... ராஜாவே... வாழ்க நீங்க.


இதோ இப்போ மீண்டும் கேட்கிறேன் அவ்வரிகளை. ஆனால் நான் பாடியது தப்பு. நமக்கு வரியா முக்கியம்... ராகம். ராகத்தை மென்னு துப்பாத வரிகள். அப்படித்தான் பாடிருப்பேன் போல.


பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே...

அதிகமில்லை இரண்டே வரிகள் தான் பல்லவி. சோனியா அகர்வால் காதல் கொண்டேன் படத்துல தனுஷ் தலையை ஆட்டி பாட்டு கேட்க வைப்பாங்க, தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன் பாட்டுல. ஆனா இந்தப் பாட்டு கேட்கும்போதே நம்மளையும் சேந்து பாட வைக்கும். அப்படிப்பட்ட பாடலுக்கெல்லாம் என்ன ராகம்னு கேட்டா இளையராஜா இராகம்னு சொல்லிடலாம்.


பாட்டோட ரெண்டு சரணத்தின் நிறைவிலும் (கடேசிலன்னு சொல்லப்படாது. ஏன்னா அது நிறைவான வரிகள்).

"மேக மழை நீராட தோகை மயில் வாராதோ

தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது

னன னன னன னன னா னன னன னன னன னா...


நாளும் இனி சங்கீதம் ஆடும் இவள் பூந்தேகம்

அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்

னன னன னன னன னா னன னன னன னன னா..."


பாடிப் பார்த்தாச்சா? சரி. இப்போ வாசிச்சுப் பாருங்க. யார் பாட்டை எழுதிருப்பாங்கன்னு பாத்தா வாலி, வைரமுத்து, சிதம்பரநாதன், கங்கை அமரன், முத்துலிங்கம் அப்படின்னு பலப்பல பெருந்தலைகள். யாரா இருந்தாலும் மனுசன் காதலிலும் காமத்திலும் ஊறித் தெளைச்சிருப்பாப்டின்னு உறுதியாச் சொல்லிடலாம். ஜேசுதாசும் உமா ரமணனும் பாடும்போது இசையிலும் வரியிலும் கரைஞ்சிருப்பாங்க. 


"மேகமழை நீராட தோகை மயில் வாராதோ..."

வருமா வராதா என்ற எதிர்பார்ப்பு. மழை என்பது காதலின் உச்ச எதிர்பார்ப்பில் பூப்பது. கருமேகம் கூடிப் பெய்யும் மழை. மனம் ரெண்டும் சேர்ந்து கூத்தாடும் திருவிழா. அதற்கான எதிர்பார்ப்பு நிறைவேறும்போது தித்திக்கும் இதழ் முத்தங்கள்... ம்ம். அடுத்து படிப்படியாச் சொல்லணும்னா 

சென்சார் கத்தியைப் போடும். கேக்குறவங்க முகம் சுழிப்பாங்க. அங்கதான் இசைத் தலைவர் தன்னோட வேலையக் காட்டுகிறார். எப்படி? அத நாம மனசுக்குள்ள நெனச்சுக்கிடணும் ( வெளக்கு வச்ச நேரத்துல தந்தானன்னா... மறஞ்சு நின்னு பாக்கயில தனனா னன்னா...) பல்லாயிரம் பல்லாயிரம் இசை சம்மந்தமான இடத்துல என்னா மனுசன்யா இவர் என்று நினைக்க வைக்க இவரால்தான் முடியும்.


"நாளும் இனி சங்கீதம் ஆடும் இவள் பூந்தேகம்"

சங்கீதம் என்பது துள்ளல். வாழ்வின் துவக்கம். நீளும் மகிழ்ச்சி. அது நடக்கும்போது ஆடும் இவள் "பூந்தேகம்..." இந்த இடத்துல பூந்தேகம் என்ற சொல்லை ஒவ்வொரு ஆணின் சார்பாக கவிஞர் சொல்வதாக நெனச்சுக்கங்க பெண்களே. (சரி. ஆணின் "வீரத்"தேகம் சங்கீதத்தால் ஆடாதா என்ற கேள்வியை ஓரமாகத் தூக்கிப் போடவும்) சங்கீதத்தில் ஆடும் தேகம் செல்லும் பயணம் எப்படிப்பட்டது என்பதைச் சொல்லணும்ல. அதை அடுத்த வரியில் சொல்லிருப்பார்...

"அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்" அதையும் சொல்லாம நம்மை நினைக்க வைக்கும் வித்தை...

"னன னன னன னன னா னன னன னன னன னா..." எனப் பயணிக்க வைக்கும். சும்மா ஒண்ணுமில்ல காதல்ங்றது... கட்டிப்பிடிக்குறதுங்றது... உடல் ஒத்து ஒரு விசயம் நடந்துச்சுன்னா அங்க நிச்சயம் பூபாளம் இசைக்கும். கொஞ்சம் நல்லா அந்த இசைய அனுபவிக்க பாட்டைக் கேட்டபடி... அல்லது கேட்டுவிட்டு காதலையும் காமத்தையும் நல்லபடியா நடத்துங்க.  ராஜாவின் இசையும் கவிஞரின் வரியும் கேஜேஜே உமா ரமணன் குரலும் உங்களை மீட்டும்...


(படத்தில் சுலோச்சனா வைக்குற மாதிரி இன்னைக்கெல்லாம் ஏன் பூ வைக்குறதில்லன்னு நேராப் பாக்கும்போது கேக்கணும். யாரு கிட்ட... யாரு கிட்டயோ...)


யாழ் தண்விகா 


❣️