ஒரு காதல் கதை
#நெடுங்கதை
மீரான் மைதீன்
புலம் பதிப்பகம்
பக்கங்கள் 56. விலை 80/=
எழுத்தாளர் மீரான் மைதீன் அவர்கள் எழுதிய நூலை இப்போதுதான் முதன்முறையாக வாசிக்கிறேன். ஒரு கதை சொல்லி, இந்நெடுங்கதையில் சக பயணியின் கதையைக் கேட்கிறார். அதுவே ஒரு காதல் கதை.
ரயில் சினேகத்தில் கதாசிரியருக்கு ஷீலா என்ற பெண் அறிமுகம் ஆகிறாள். கதைகள் எழுதும் நபர் என்பதாலும், உரையாடலின்போது பிடித்துப்போன மனிதர் என்பதாலும் 1980களில் தன்னுடைய வாழ்வில் நிகழ்ந்தவற்றைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார் ஷீலா. தன்னுடைய திருமணம் ஒரு காதல் திருமணம். அதுவும் சீர்திருத்தத் திருமணம். தன்னுடைய பெயர் வஷீலா என்றும் தன்னுடைய காதல் கணவரின் பெயர் மணிகண்டன் என்றும் கூறுகிறார் அப்பெண்மணி. காதல் இரு குடும்பத்திற்கிடையே என்னென்ன மனச் சிக்கல்களை உண்டாக்கியுள்ளது என்பதைத் தன்னுடைய உரையாடல் வாயிலான கேள்விகள் மூலம் ஷீலாவிடமிருந்து தெரிந்துகொள்கிறார். ஷீலாவின் அம்மா, அப்பா, தம்பி ஆகியோர் தற்போது என்ன ஆனார்கள்? அவர்களிடையே அப்பெண்ணிற்கு உறவு நீடிக்கிறதா? என்பன போன்ற கேள்விகள். ஷீலா தற்போது 60 வயதாகும் பெண்மணி. அவளுக்குக் கணவன் மணிகண்டன். ஒரு மகன். ஒரு மகள். இந்த ரயில் பயணத்தில் கூட அப்பெண்மணி தன்னுடைய பேரனைப் பார்க்கச் செல்கிறாள். கல்லூரி ஒன்றில் முதல்வராகப் பணி செய்தபின்னர் பணி ஓய்வு பெற்று இன்னும் ஈராண்டு கூட முடிவடையவில்லை. இசுலாம், இந்து இவர்களின் திருமண வாழ்வு இணக்கமாகச் செல்கிறதா இல்லையா என்பது உள்ளிட்ட அனைத்தும் கதாசிரியர் மீரான் மைதீன் மற்றும் ஷீலா ஆகிய இருவரின் உரையாடல் வழியாகவே அறிந்து கொள்ளலாம். தொய்வின்றிச் செல்கிறது கதை ஒரு தெளிந்த நீரோட்டம் போல. ஸ்பரிசத்தைத் தொட்டும் தொடாமல் செல்லும் தென்றல் போல. மனதை மயக்கும் பாடல் போல.
அருமை. வாழ்த்துகள் தோழர்.
யாழ் தண்விகா
No comments:
Post a Comment