அன்பளிப்பு
கு. அழகிரிசாமி
சீர்வாசகர் வட்டம்
விலை ரூபாய் 10
பக்கம் 32
சாகித்திய அகாடமி பால புஷ்கார் விருது பெற்ற விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் இனிய எளிய சுருக்கமான அணிந்துரையுடன் நூல் ஆரம்பமாகிறது. குழந்தைகளை யார் என்ன என்ற பேதம் பார்த்தாலே அது இக்கதையில் வருவதைப் போல நாசுக்காக சொல்வதே நச்சென்று அறைவதுபோல் இருக்கும்.
அழகிரிசாமி, சாரங்கன், பிருந்தா, சித்ரா, சுந்தரராஜன், கீதா, தேவகி எல்லோரும் நண்பர்கள் என்று தான் கூற வேண்டி இருக்கிறது. இதில் அழகிரிசாமி ஒரு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர். மற்ற அனைவரும் குழந்தைகள். பள்ளியில் படிப்பவர்கள். சுந்தரராஜனும் சித்ராவும் வயதில் சற்று மூத்தவர்கள். சனிக்கிழமை இரவில் கொஞ்சம் கூடுதல் நேரம் தூங்க கூடியவர் அழகிரிசாமி. ஏனென்றால் ஞாயிற்றுக்கிழமையன்று சற்று கூடுதலாக ஓய்வு எடுத்துக் கொள்ளும் மனநிலை அவருக்கு. அப்படித்தான் சனிக்கிழமை இரண்டு மணியைப் போல தூங்குவதற்குச் செல்கிறார். எப்பொழுது படுத்தாலும் ஒரு அரை மணி நேரம் கூடுதலாக தூக்கம் வருவதற்கு ஆகிவிடுகிறது. அப்படிப்பட்டவர் காலையில் ஏழ தாமதமாய் விடுகிறது. அவரை மேலே சொன்ன வாண்டுகள் எழுப்பத் தொடங்கி விடுகிறார்கள் என்பதில் தான் கதை ஆரம்பமாகிறது. மேலே சொன்னவர்களில் சாரங்கன் கொஞ்சம் அமைதியான சுபாவம். எங்களுக்கு புத்தகம் வாங்கி வரவில்லையா என்று குழந்தைகள் அவரை தொந்தரவு செய்து எழுப்பி கேட்கின்றனர். இவர் வாங்கவில்லை என்று கூற வீட்டிலிருந்து அவரது புத்தகங்களை எல்லாம் கீழே தள்ளி தேடுகின்றார்கள். பின்னர் இவரே புத்தகங்களை எடுத்து கொடுக்கிறார். சித்ராவுக்கும் சுந்தரராஜனுக்கும் என் பிரியமுள்ள சித்ராவுக்கு அன்பளிப்பு, என் பிரியம் உள்ள சுந்தரராஜனுக்கு அன்பளிப்பு என்று எழுதி என்று கையெழுத்துட்டு கொடுக்கிறார். பிருந்தாவும் தேவகியும் எனக்கு என்று கேட்க சித்ராவிடமும் சுந்தரிடமும் வாங்கி படித்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். அவர்களும் மறுப்பேதும் சொல்லாமல் ஏற்றுக் கொள்கின்றனர்.
அவ்வப்போது வந்து வீட்டில் விளையாடி பேசி மகிழ்ந்து ஆடிப்பாடி இருந்த இந்த குழந்தைகளில் பிருந்தா மட்டும் வரவில்லை. பிருந்தாவிற்கு என்ன ஆயிற்று என்று கேட்க அவளுக்கு காய்ச்சல் என்று மட்டும் பதில் வருகிறது. ஒரு நாள் இரவு எட்டு மணி போல வெளியில் அமர்ந்திருக்கிறார் அழகிரிசாமி. பிருந்தா வீட்டு வேலைக்காரனிடம் பிருந்தாவிற்கு என்ன ஆயிற்று என்று கேட்க, அவளுக்கு காய்ச்சல். ஒன்றும் முடியவில்லை. ஒவ்வொரு நாளாக அவள் இளைத்துக் கொண்டே செல்கிறாள் என்று கூற அழகிரிசாமி அச்சிறுமியைப் பார்த்து வர மறுநாள் ஒத்திப் போட்டாலும், மனசு கேட்காமல் உடனே கிளம்புகிறார். போய் பார்க்க அவள் மாமா மாமா என்று அன்பை கொட்டுகிறாள். அவள் அவரை விடாமல் எங்கே இருங்கள் மாமா என்று கூறும்போது மறுநாள் காலை வருகிறேன் என்று கூறிவிட்டு திரும்புகிறார். மறுநாள் காலையும் பிருந்தாவை வந்து பார்க்கிறார். சற்று நேரம் அளவளாவி விட்டுத் திரும்புகிறார். இதை பார்த்துக் கொண்டிருந்த சாரங்கன் வாங்க மாமா வாங்க மாமா என்று வீட்டுக்கு அழைக்கிறான். இவர் வரும் ஞாயிற்றுக்கிழமை வருகிறேன் என்று கூறிவிட்டு சென்று விடுகிறார். பிறகு பிருந்தாவிற்கு ஒரு கட்டத்தில் குணமாகி விடுகிறது. இவர் வந்து சென்றதால் தான் அந்த காய்ச்சல் குணமானது என்று கூறக் கேட்கிறார். அதன் பின் சாரங்கன், பிருந்தா உட்பட அனைத்து வாண்டுகளும் அழகிரிசாமி வீட்டிற்கு வந்து செல்கின்றனர். சாரங்கன், வால்ட் விட்மன் எழுதிய ஒரு நூலை அழகிரிசாமியிடம் கேட்கிறான். நான் உனக்குச் சொல்லி இருக்கிறேன் அல்லவா இது பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது நீ எடுத்து படித்துக் கொள். அப்பொழுது தான் உனக்கு புரியும் என்று கூற இவன் அழுது கொண்டே தன்னுடைய வீட்டிற்குச் சென்று விடுகிறான். மறுநாள் சாரங்கன், அழகிரிசாமியை தன்னுடைய வீட்டிற்கு அழைக்கிறான். நீங்கள் ஞாயிற்றுக்கிழமை வருகிறேன் என்று சொன்னீர்களே வாருங்கள் என்று கூறுகிறான். இவருக்கு பிருந்தா அவர்கள் வீட்டிலும், தெரியாத அப்பா தெரியாத அம்மா என்ற சூழ்நிலையிலும் வழியில்லாமல் அந்த குழந்தைக்கு காய்ச்சல் என்பதால் வீட்டிற்கு சென்று பார்த்தார். இப்பொழுது இவன் வீட்டிற்கு என்ன காரணம் சொல்லி செல்வது என்று எண்ணி மறுக்கிறார். சாரங்கன் வீட்டிலும் அவனுடைய அம்மா அப்பா தெரியாதவர்கள் என்ற நிலையில் எப்படி வீட்டிற்கு செல்வது என்று எண்ணி மறுக்கிறார். அவன் அழுது கொண்டே இருக்கிறான். சரி நான் வருகிறேன் என்று கூறி சாரங்கனின் வீட்டிற்கு செல்கிறார். சாரங்கன் அங்கு இவருக்கு உப்புமாவும் காபியும் கொண்டு வந்து தருகிறான். இவருக்கு இதை என்ன சொல்வது என்று தெரியாமல் மருந்து போல நினைத்து சாப்பிட்டு விடுகிறார். வீட்டில் அவ்வளவாக வசதி இல்லை என்பது புரிகிறது. அவனுடைய அப்பா இவரை வீட்டில் பார்க்கிறார். வாருங்கள் என்று கூறிவிட்டு அவரும் சென்று விடுகிறார். ஒரு பவுண்டன் பேனா ஒன்றை எடுத்து அழகிரிசாமியிடம் கொடுத்து சாரங்கன் என்ன செய்கிறான் என்பதுதான் கதை.
கதையின் ஆரம்பத்தில் "இரவில் வெகு நேரம் கண்விழித்தால் உடம்புக்கு கெடுதல் என்று எங்கள் பாடப் புத்தகத்தில் போட்டிருக்கிறது மாமா" என்று சாரங்கன் கூறுவதை இந்த இடத்தில் யோசிக்க வேண்டியிருக்கிறது. அதிகம் பேசாத சிறுவன் படிப்பில் சிறப்பாகவும் இருப்பான் என்பதை இவ்விடத்தில் கவனிக்க வேண்டியிருக்கிறது. தனக்கு அன்பளிப்பு கிடைக்காத இடத்தில் வேண்டாம் என்று ஒதுங்கி கொள்வார்கள் என்று நாம் நினைப்போம். ஆனால் அவர்கள் என்ன விதமாக யோசிப்பார்கள் என்பதையும் நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது. பிருந்தா தன்னுடைய உடல் நலன் தேறியதற்கு காரணம் அழகிரிசாமியின் அன்பு என்பதையும் இந்த இடத்தில் நாம் குறிப்பிட்டாக வேண்டும்.
நூலில் இருந்து,
"உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்வதும், அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டு உணர்ச்சியும், ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போல பேசி, குழந்தையைப் போல ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டு பொம்மையாகக் கருதி அதற்குத் தக்கவாறு நடந்து கொள்ளுகிறார்கள். ஆனால் அந்த சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை. அவர்களுடைய அன்பில் அந்த விளையாட்டு உணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள். இந்த உண்மை எனக்கு என்றோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனதில் தைத்தது. அன்று முதல் நான் அவர்களைக் குழந்தைகளாக நடத்தவில்லை. நண்பர்களாக நேசித்தேன். உற்ற துணைவர்களாக மதித்தேன். உள்ளன்பு என்ற அந்தஸ்தில் அவர்களும் நானும் சம உயிர்களாக மாறினோம்".
வாசிக்க வேண்டிய கதை.
No comments:
Post a Comment