பாக்கெட்டில் உறங்கும் நதி
சிறுவை அமலன்
Amalan Bernatsha
ஹைக்கூ கவிதைகள்
அகநி வெளியீடு
ரூ 25/= பக்கங்கள் 48
சொற்களில் கூர்மை, நறுக்குத் தெரித்தாற்போல சொல்வது ஹைக்கூவிற்கு பெரும் அவசியம். இயற்கையோ, சமூகமோ, தத்துவமோ எதைக் கூறுவது என்பதில் சிறுவை அமலன் தனக்கு சமூகத்திற்கான பார்வை போதும் என்று நினைத்து அதனை தன்னுடைய கவிதைகளுக்கான பாடுபொருளாக எடுத்தாண்டு வென்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். அனல் தெரிக்கிறது பல கவிதைகளில்.
முதல் கவிதை...
வேப்பங்குச்சி
மின்னியது
அக்காவின் மூக்குத்தி...
ஒரு பொட்டுத் தங்கம் கூட இல்லாத வறுமை என்ன செய்யும்
வேப்பங்குச்சியை மூக்குத்தியாக கம்மலாக அணிந்துகொள்ளும். அதுவும் மூக்குத் துளை. காதுகளின் துளை மூடிவிடக்கூடாது, மீண்டும் அதற்காக செலவு செய்யும் சூழல் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் குச்சியைச் செருகிக் கொள்ளுதல் இங்கு கவிதையாகி உள்ளது.
வெந்தது
மனிதத்தோல்
தோல் பதனிடும் தொழிற்சாலை
வயிறு என்ற ஒன்றில்லாவிட்டால் எதற்காக இந்த பாடு? தன்னை வருத்தி தனது உடலை உயிரை வருத்தி சம்பளம் ஒன்றைப் பெற்று தனக்காக தன் குடும்பத்திற்காக ஓய்வின்றி உழைப்பவன் இந்த வேலையும் இல்லாவிட்டால் என்ன செய்வான்... பசியால் மாண்டுபோவான். இங்கு வாழ்வதற்காக இறந்தபடியே வாழ்கிறான். அந்தச் சூழல் கவிதையாகியுள்ளது.
வேரோடு அழி
சாமின்னு குனிய வைத்தது
சாமியானாலும்...
சாதியால், மதத்தால், வர்க்கத்தால் பிளவுபட்டுக்கிடக்கும் இந்த சமூகத்தில் இன்னும் ஆண்டான் அடிமை என்ற வறட்டுப் பித்தலாட்டத்தனம் புரையோடிப்போய்க் கிடக்கிறது. அதை நேரடியாகச் சாடுகிறது இக்கவிதை. மனிதர்களுக்கு மட்டுமல்ல அந்தக் கடவுளேயானாலும் வேரோடு அழி என்று முகத்தில் அறைந்தாற்போல சொல்கிறது கவிதை.
பறையடித்த தாத்தா
பறையடித்த அப்பா
திருப்பி அடிக்க நான்...
குலத்தொழிலில் திணிக்கும் காலம் மலையேறிப் போய்விட்டது. என் கல்வி, என் உணவு, என் வேலை எதைத் தேர்ந்தெடுப்பது என்பதெல்லாம் என் உரிமை. மீண்டும் பறை அடிக்க அல்ல, திருப்பி அடிக்க நான் என்பது சமூகத்திற்கு விடுக்கும் எச்சரிக்கை.
கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்
விந்து படிந்த நாப்கின்...
இந்த வரிகளைப் படித்தபோது பெரும் வலி சூழ்ந்தது. ஒரு பெண்ணின் வாழ்வில் வலிகளாகக் கடந்துபோகும் நாட்கள் மாதவிடாய்க்காலம். இயல்பாகவோ, சட்டென வந்ததும் செல்வதும் தெரியாமல் கடக்க அந்த நாட்கள் பெரும்பாலும் பெண்களுக்கு வாய்ப்பதில்லை. அந்த நாட்களிலும் வழமையான வேலைகள் பெண்களுக்கு இருக்கவே செய்யும். அப்போதும் அங்கு ஆண் என்பவன் ஆணாகவேதான் இருக்கிறான். அவனுக்கு மனைவி என்பவள் தனக்கு நேர்ந்துவிட்ட ஒரு அடிமையாகவே தெரிகிறாள். அதுபோன்ற திமிர்த்தனம் மனிதத்தன்மைக்கு எதிர்நிலையில் வைத்துப் பார்க்கப்படும் என்ற சராசரி அறிவற்றவனின் செயலேயாகும் என்பதை இக்கவிதையில் உணரலாம்.
இது போல தொகுப்பெங்கும் பல கவிதைகள். வாசியுங்கள்.
எல்லாம் புரட்சித்தீப்பந்தம் ஏந்திய கவிதைகள்
வாழ்த்துகள் தோழர்...
No comments:
Post a Comment