Wednesday, 2 July 2025

நாத்திகனின் பிரார்த்தனைகள்



நாத்திகனின் பிரார்த்தனைகள்

அகரன் 

திராவிடியன் ஸ்டாக் வெளியீடு

88 பக்கங்கள் 

99 ரூபாய் 


நூலின் பெயரை கேட்டவுடன் பலருக்கு கைத்தடி ஞாபகம் வந்து போகும். அந்த அளவிற்கு தந்தை பெரியார் பெயர் மூலை முடுக்கெல்லாம் பதிந்து போய் உள்ளது. தோழர் அகரனுக்கு இரண்டாவது நூல். முதல் நூல் பொன்னி, சிறுகதை தொகுப்பு. இரண்டாவது நூல் நாத்திகனின் பிரார்த்தனைகள், கவிதைத் தொகுப்பு. பெயருக்கு ஏற்றவாறு பல கவிதைகள் புத்தகத்தில் உள்ளன.


கடவுள் வாழ்த்தைப்போல பெரியார் வாழ்த்தோடு நூல் தொடங்குகிறது. போதி மரத்தடி, பிணாக் கூற்று, சாலை மனிதனின் பிரதிநிதி ஆகிய மூன்று பிரிவுகளாக கவிதைகளை பிரித்துத் தந்திருக்கிறார் தோழர்.


கடலைப் பற்றி எப்போது பேசுவதோ எழுதுவதோ இருந்தாலும் ஒரு அச்சம் சூழ்ந்து கொள்ளும். சுனாமி வந்த முதலாம் ஆண்டுக்கு ஒரு போஸ்டர் அடித்தோம். "ஏ... கடலே

அலையால் உயிரை வாரிச் சுருட்டினாய்

கண்ணீரால் உப்பின் அளவினை கூட்டினாய்

எச்சரிக்கை 

உனக்கு இதுதான் கடைசி வரை முறை" என்று போஸ்டர் அடித்தது இன்றும் நினைவில் இருக்கிறது. அந்தக் கவிதை நினைவில் வந்து போனது தோழர் எழுதிய வாழ்க்கை என்ற கவிதையை வாசிக்கும் பொழுது. 

"கால் நனைக்க மட்டுமே 

கடற்கரை செல்பவனுக்கும்

சுனாமியில் குடும்பத்தைத்

தொலைத்தவனுக்கும் 

ஒரே மாதிரியான

தாக்கத்தைக் கொடுப்பதில்லை கடல். 

கடல் அழகானது கடல் கொடூரமானது" 

கவிதை கடலின் கொடூரம் பற்றி கூறும் அதே சமயம் வந்து போன சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பையும் கவலையையும் கண் முன் மீண்டும் நிறுத்தும் என்பது உண்மை.


குடை என்னும் நீள் கவிதை ஒன்று. வயது முதுமையில் வாழும் தாத்தா ஒருவரின் வாழ்க்கையை சொல்லும் கவிதை. தாத்தாவிடம் உதவி செய்துவிட்டு காசு வாங்குவதாக இருக்கட்டும். தாத்தா, உண்ணும் உணவை பிறருக்குக் கொடுத்து உண்ண வேண்டும் என்று கூறும் பண்பை வளர்ப்பதாக இருக்கட்டும் என்று வாழ்ந்த அந்த தாத்தா இறந்த பின்பு

"சொத்து பத்து சேர்க்காத

மனுஷனுக்கு

சுத்துப் பத்து சொந்தமெல்லாம்

ஒப்பு வச்சு 

சொல்லிச் சொல்லி

அழுகையில... வருத்தத்திலயும் 

கர்வம் எனக்கு...

ஆமா 

தாத்தன் சொத்பேரன் அனுபவிக்கிறேன்"

என்று கூறும் பொழுது தாத்தாவின் குணநலன்கள் கண் முன் வந்து போகிறது. தாத்தாவை பிரிந்து செல்கிறோம் என்ற வருத்தத்தின் மத்தியில் இப்படிப்பட்ட தாத்தாவிற்கு நாம் பேரனாக பிறந்திருக்கிறோம் என்ற கெத்து என்று சொல்வோமே அப்படி இருக்கிறது.


கவிதை நூல் என்றால் ஒரு கவிதையாவது குழந்தை சம்பந்தப்பட்ட கவிதையாக அமைவது சிறப்பை உண்டு பண்ணும். இந்த நூலிலும் அப்படி கவிதைகள் உண்டு. "குழந்தையுடனான சண்டையில்

கோபித்துக் கொண்ட

பொம்மையை 

என்ன சொல்லி சமாதானப்படுத்துவது?"

இந்த கவிதையில் குழந்தைக்கும் பொம்மைக்கும் சண்டை. பொம்மையிடம் குழந்தை கோபித்துக் கொள்ளும் என்று நாம் அறிவோம். ஆனால் இந்த கவிதையில் கோபித்துக் கொண்டது பொம்மை. இதில் பொம்மையை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று கேட்கிறார். என்ன சொல்லி சமாதானப்படுத்துவது, எப்படி சமாதானப்படுத்துவது, யார் சமாதானப்படுத்துவது? அந்த குழந்தைதான் அறியும், சமாதானப்படுத்துவதற்கான மொழியை. அருமையாக உள்ளது கவிதை.


பொட்ட பிள்ளைய வளக்கறதுக்கு இடுப்புல நெருப்பக் கட்டி திரிய வேண்டி இருக்கு என்ற வார்த்தையை கூறாத பெற்றோர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஒவ்வொரு நேரமும் பெண்களை வளர்ப்பதற்குள் உயிர் போய் உயிர் வருகிறது என்று அஞ்சி அஞ்சி வளர்க்க வேண்டி இருக்கிறது. இந்த வார்த்தைகளை சொல்லிக்கொண்டே காலகாலத்துல ஒருத்தன பிடிச்சு அவன் கிட்ட உன்ன ஒப்படைச்சுட்டேன்னா நான் நிம்மதியா போய் சேருவேன் என்ற சொல்லையும் வார்த்தையையும் கூறிவிடுகிறார்கள். திருமணம் என்னும் கூட்டுக்குள் தெரியாத இரு நபர்களை ஒன்று சேர்த்து வாழ வைக்கும் ஒரு கண் கட்டி வித்தை காலகாலமாக இங்கு நடந்து வருகிறது. என்ன செய்வது? தோழருக்கு கிராமிய நடை எளிதாக வருகிறது. இப்படி ஒரு நடையானது பொம்ம கல்யாணம் என்ற கவிதையில் சிறப்பாக வெளிப்படுகிறது. "என்னோட விருப்பம் இல்லாம 

இடம் பார்த்து 

நேரம் பார்த்து 

நாள் பார்த்து 

ஆள் பார்த்து... 

படுக்க நிர்பந்திப்பது மட்டும் 

கற்பழிப்புல சேராதா... 

நாளைய அபலைக்குத்தான்

இப்ப பட்டுப் புடவை

சுத்துறாங்க

பொம்மக் கல்யாணம் ஒன்னு 

செஞ்சு வச்ச பொம்மலாட்டம் ஆடுறாங்க"

இந்த கவிதையின் ஆரம்பம் முதல் வாசித்துப் பாருங்கள். ஒரு தாய் படும் பாடு தெரியும். பூட்டிப் பூட்டி வைத்து இன்னும் எத்தனை காலம்தான் பெண்களை வாழ வைக்க போகிறோமோ தெரியவில்லை...


இப்படி ஒரு கவிதையை ஆத்திகர்கள் வாசிக்க நேர்ந்தால் எந்த கோவிலிலும் புறா வளர்க்க தடை செய்யப்படும் என்று தான் நினைக்கிறேன். "கோபுரத்தில் ஜீவிக்கும் 

கோவில் புறா

ருதுவானால்

தீட்டாகிடுமா சாமி...?

நல்லாஅருக்குல்ல என்று சொல்ல தோன்றுகிறது.


நாத்திகனின் பிரார்த்தனைகளில் ஒன்று. 

"தூணிலும் துரும்பிலும்

இருந்திடும் கடவுளே!

என் தட்டு

மாமிசத்திலிருந்து மாத்திரம்

வெளிநடப்பு செய்திடேன்.

இப்பிரபஞ்சம் முழுமையும் விடுத்து என் எச்சில் தட்டினில் அல்லவா 

உன்னைத் தேடி வருகிறது? அரிவாளுடன் ஒரு கும்பல்.."

என் உணவு என்ற சொல்லில் கூட இன்று அரசியல் ஊடுருவி விட்டது. மாட்டுக் கறி வைத்திருந்தால் பிரச்சனை, மாட்டுக்கறி இல்லை என்றாலும் அதனை மாட்டுக்கறி என்று சொல்லி பிரச்சனை என்று பிரச்சனை செய்வதற்கு என்று உள்ள ஒரு கூட்டம் இங்கே இருக்கிறது. அந்த கூட்டத்தினால் அதிக அளவில் ஏற்றுமதி செய்ய முடியும். ஆனால் இங்கு உண்ண மட்டும் தடை எப்படி என்பதுதான் அரசியல். "என் தட்டு மாமிசத்தில் இருந்து மட்டும் வெளிநடப்பு செய்திடேன்" என்று கூறுவது மாட்டிற்காக அல்ல. மனிதர்களுக்காக என்பது எப்பொழுது புரியப்போகிறது?


தொகுப்பெங்கும் முற்போக்காக பல கவிதைகள். ஒவ்வொன்றும் பெரும் வீச்சாக தெறி"க்கிறது. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்.


வாழ்த்துக்கள் தோழர் அகரன். 

No comments:

Post a Comment