Wednesday, 2 July 2025

காற்றால் நடந்தேன் - சீனு ராமசாமி


 

காற்றால் நடந்தேன்

சீனு ராமசாமி 

என் சி பி எச் வெளியீடு 

100 ரூபாய் 

96 பக்கங்கள்


தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் கவிஞர். தோழர் சீனு ராமசாமியை கவிஞராக நான் வாசிக்கும் முதல் நூல் காற்றாய் நடந்தேன். கவிஞராக தன்னுடைய பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார் எனலாம். வாடகை வீடு குறித்து பேசுவது என்றால் மேலாக சந்தோசம் தென்பட்டாலும் உள்ளூர வருத்தம் இழையோடும். வீட்டில் உரிமையாளர் அருகில் இல்லாவிட்டால் அந்த சுகமே சொர்க்கம். இந்த கவிதையை பாருங்கள் இரண்டு பேருக்கு மேல் தங்க அனுமதி மறுக்கப்பட்ட ஒரு வாடகை வீடு என்ன செய்ய இயலும்?

"நகர வீட்டு உரிமையாளரின் 

நீர் செலவீடு பற்றிய நிபந்தனையாலும் 

இரண்டு பேருக்கு மேல் 

தங்க அனுமதி மறுக்கப்பட்ட 

இரவில் 

பையுடன் வந்து நிற்கிறான் 

என்ன சொல்லி 

திருப்பி அனுப்புவது 


கனவுகளும் 

கற்பனைகளும் 

நம்பிக்கைகளும் 

கண்களில் ஒளிரும்

வளரிளம் பருவத்து 

என் சிற்றூர் தம்பியை..."


கட்டிடங்கள் கட்டி முடித்தபின் அழகாக இருக்கும். அதுவரை இப்படித்தான் என்று கூறுவார்கள் என்று பொதுவாக கூறுவது உண்டு. ஆனால் எதற்காக அப்படி சொல்லுவார்கள் என்று அறுதியிட்டு கூற முடியாது. தோழரின் கவிதை ஒன்று. பால் சுண்ணாம்பு என்னும் தலைப்பில்... "சுவர் பூசாத கட்டிடத்தில் 

கிடந்த உள்ளாடையின் 

பின்புறத்தை இணைக்கும் கொக்கிகளுக்குப் பதிலாக ஊக்குகள்

கொக்கிகளுக்குப் பதில் எப்படி

ஊக்குகள் வந்தன 


அது தனிக்கதை 

தனிக்கவிதை" 

சொல்ல வந்ததை பூடகமாக கவிதையில் வைக்கும் லாவகம் தோழருக்கு இயல்பாக கைகூடி வந்துள்ளதை காணலாம்.


குழந்தைகள் பெற்ற இல்லத்தில், குழந்தை முழித்திருக்கும் சமயம் சந்தோஷத்திலும் தூக்க நேரத்தில் சந்தோஷ அமைதியாகவும் இருப்பதை காணலாம். அந்தச் சமயத்தில் நடக்கும் செயல்களை உருவ ஒற்றுமை என்ற தலைப்பில் தோழர் காட்சிப்படுத்தியுள்ளதை காண்போம்.

"குருவி நடப்பது 

குருவி பறப்பது 

குருவி சிறிய அலகுகளால்

தானியத்தை உண்பது 

குளிரில் நடுங்குவது 

பதற்றமாக இங்குமங்கும் 

பார்ப்பது 

அறைக்குள் நுழைவது 

இவை யாவும் 

மகள் பிறந்த வீட்டில் நடக்கிறது...

உயர்திணை மட்டுமல்ல அஃறிணையாக வீட்டுக்குள் இருந்தாலும் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லி "அடடா" என்று வியக்க வைக்கிறார்.


இன்னொரு கவிதையில் நிழல் கொலை பற்றி கூறும்பொழுது 

"தெருவில் தன் நிழல் அழிக்க தரையைத் தடவுகிறான் 


நிழல் 

தன் அழிவைக் காண முடியாது கெஞ்சுகிறது 


விளக்கனைத்த நொடியில்

அழியா நிழலோ 

இருளில் பதுங்கி 

உயிர் பிழைத்தது" 

என்று நிழலுக்கு ஆதரவாக நிற்கிறார்.


எனது ஆட்டம் என்பது கவிதையில்

"உனது துரோகத்தை ரகசியமாக

நான் அறிந்த பிறகு 

பழிவாங்கும் நடவடிக்கையாக மனதால் விலகியும் 

உடலால் இரக்கமின்றி இணைவதுமாகத் தொடங்கியது

எனது துரோகத்தின் ஆட்டம்" என்கிறார். இதில் துரோகம் எதுவென்பதைப் பொறுத்து உடலால் இரக்கமின்றி இணையும் படலம் தொடரும். 


"பூவும் 

காயும் 

கனியும் 

காடென 

பூத்துக் குலுங்கும் 

சிறு தெய்வக் கோவிலின் 

வெண்கல மணி நாவுகளை இசைக்கிறாள் 


பிள்ளை வரம் வேண்டிப் பெண் தெய்வங்கள்

அலைந்திருக்குமாயென அறிந்ததில்லை... 

இது தெய்வ அலைச்சல்"

பிள்ளை வரம் வேண்டி பெண் தெய்வங்களை வேண்டும் பெண்கள், பிள்ளை வரம் வேண்டி பெண் தெய்வங்கள் அலைந்திருக்குமா என்று என்றாவது யோசித்து இருப்பார்களா என்பது யோசிக்க வேண்டிய விஷயம். 


இன்னும் இது போன்ற கவிதைகள் தொகுப்பு எங்கும் நிரம்பிக் கிடக்கின்றன. தாராளமாக வாசிக்கலாம் தோழரின் கவிதை எழுத்துக்களை. 


பெ.விஜயராஜ் காந்தி

No comments:

Post a Comment