Tuesday, 1 July 2025

அடுக்கு மல்லிகை


 

அடுக்கு மல்லிகை... பாடல்

திரைப்படம் : தங்கமகன்

இசை: இளையராஜா


காமத்தை கொண்டாட்ட மன நிலையில் ஆராதிக்க கற்றுக் கொடுத்தவர் இளையராஜா என்பதை மெய்ப்பிக்க உள்ள பல பாடல்களில் அடுக்கு மல்லிகை பாடலும் ஒன்று. 


வில்லனின் இடத்தை நோட்டமிட வந்திருக்கும் ரஜினி மற்றும் சில்க் ஸ்மிதா இருவரும் பாடும் பாடல் காட்சி. இந்தப் பாடலின் தொடக்கத்தில் ரஜினி அறையில் படுத்து இருக்கிறார். அந்த அறைக்கு வரும் சில்க் கதவின் அருகில் நின்று ரஜினியைப் பார்த்து, இரு கவனித்துக் கொள்கிறேன் என்பதுபோல் தலையசைத்து கதவைப் பூட்டுகிறார். அந்த நேரம் சில்க்கை திரும்பிப்பார்க்கும் ரஜினி ஒரு கொண்டாட்ட மனநிலையில் கால்களை குதிப்பது போல பாவனை செய்கிறார். சில்க் கதவை அடைத்துக்கொண்டு வரும் அழகு அவ்வளவு அற்புதமாக இருக்கும். இந்த இடைவெளியை பாடல் துவக்கத்திற்கு அளித்திருக்கும் இளையராஜாவின் இசை அவ்வளவு லாவகமாக நிரப்பியிருக்கும். சில்க் வந்தவுடன் ரஜினியை கால்களில் இருந்து தொட்டு முகத்தில் முத்தமிட்டு ரஜினியை திகைக்க வைத்து அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது என்று பாடத் தொடங்குகிறார். அந்த குரல் மயக்குவதற்காக படைக்கப்பட்டதா என்ற சந்தேகம் நிச்சயம் எழும். உன்னைத் தொட்டால் போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும் என்ற அந்த குரல் உண்மையிலேயே சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் சுகம்தரும். சில்க்கிற்குள் புகுந்த ஜானகியின் குரல் இப்படித்தான் இருக்கும் என்றும் சொல்லலாம். தொடர்ந்து ரஜினிக்கு எஸ்பிபி பாடுகிறார். உச்சஸ்தாயியில் பாடத் தொடங்கி சில்க்கின் பார்வைக்கு மெல்ல இறங்குகிறது எஸ்பிபி குரல்.


இது காமத்தை தூண்டும் பாட்டா அல்லது ஒரு காதல் பாடலா அல்லது ரஜினியின் பாடலா அல்லது சில்க்கின் பாடலா அல்லது இளையராஜாவின் பாடலா என ஒரு பட்டிமன்றமே வைக்கலாம் அத்தனைக்கும் பொருந்தும் இசையும் குரலும்.


முதல் சரணத்தில் 

நீ வாடி செல்லக்குட்டி நான் தூக்கும் வெல்லக்கட்டி


கைகள் அள்ள... கண்கள் உன்னை... தேடுது


என்ற வரிகளும்


இரண்டாவது சரணத்தில்

ராசாத்தி முல்லைமொட்டு நான் தேடும் காதல்சிட்டு


கைகள் அள்ள... கண்கள் உன்னை... தேடுது

என்ற வரிகளும் எஸ்பிபி பஞ்ச்.


முதல் சரணத்தின் இறுதியில் ஜானகி அடுக்குமல்லிகை என தொடங்க எஸ்பிபி ஹா என ஹம் செய்ய இது ஆள் புடிக்குது என ஜானகி தொடங்க ஹாஹ்ஹா என எஸ்பிபி பாட ரெண்டு தோள் துடிக்குது என ஜானகி பாட எஸ்பிபி ம்ம்ம் எனத் தொடர பின் இருவரும் இணைந்து லாலால்லா என நீட்டித்து காமத்தின் வெள்ளோட்டத்திற்கான ஒரு சூழ்நிலையை இளையராஜா வைத்திருப்பார்.

இதே போன்று இரண்டாவது சரணத்தின் இறுதியில் எஸ்பிபி பாட ஜானகி கிறங்கும் (கிறக்கும்) குரலில் சிரிக்க என நீளும். எந்த இடத்திலும் காமத்தின் உச்சத்தைச் சிதைக்காத இசையும் வரிகளும் பாடலுக்கும் கதையின் சூழலுக்கும் ஆகப் பொருத்தம். விரசம் என்பதை மனதிற்குள் கொண்டு செல்லாமல் ராஜா, எஸ்பிபி, ஜானகி, ரஜினி, சில்க் என்ற ஆளுமைகளின் திறன்களை இப்பாடல் வழியாகவும் கண்டுணரலாம். கேட்டும் உணரலாம்.


பாடல்:


அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது


ரெண்டு தோள் துடிக்குது மனம் துடிதுடிக்குது


ஒன்ன தொட்டா போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும்


ஒன்ன தொட்டா போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும்


அட ஆளாகி நாளாச்சு... வந்தால் என்ன


நா வாரேன் புது பாய்போடு நாள்தோறும் இளநீரோடு


நா வாரேன் புது பாய்போடு நாள்தோறும் இளநீரோடு


கையோடு சேர்த்தணைச்சு கட்டில்வரை கண்ணடிச்சு


ஆத்தோடு போவதுபோல் ஆசையில நீச்சடிச்சு


நீ வாடி செல்லக்குட்டி நான் தூக்கும் வெல்லக்கட்டி


கைகள் அள்ள... கண்கள் உன்னை... தேடுது


மாம்பூவே இளம் பூங்காத்தே மார்போடு எனை தாலாட்டு


மாம்பூவே இளம் பூங்காத்தே மார்போடு எனை தாலாட்டு


தீராத ஆச வச்சே அங்கே இரு கண்ணிருக்கு


தில்லானா பாடிக்கிட்டு இங்கே ஒரு பெண்ணிருக்கு


ராசாத்தி முல்லமொட்டு நான் தேடும் காதல்சிட்டு


கைகள் அள்ள... கண்கள் உன்னை... தேடுது


அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது


ரெண்டு தோள் துடிக்குது மனம் துடிதுடிக்குது


ஒன்ன தொட்டா போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும்


ஒன்ன தொட்டா போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும்


அட ஆளாகி நாளாச்சு... வந்தால் என்ன


அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது


ரெண்டு தோள் துடிக்குது மனம் துடிதுடிக்குது


யாழ் தண்விகா

No comments:

Post a Comment