Wednesday, 2 July 2025

பெரியோன் - ராஜிலா ரிஜ்வான்



பெரியோன் 

ராஜிலா ரிஜ்வான் 

நாற்கரம் வெளியீடு 

நூற்று எழுபது ரூபாய்

136 பக்கங்கள்

 

புதினா போட்டி 2024 குறும்பட்டியலில் இடம் பெற்ற நாவல்.


சாரா, ஆமினா, தேவி, மேனகா, சுமையா, தேவ், சதீஷ் மற்றும் அபூபக்கர் மதுரையில் சேர்ந்து பி.எட். காலேஜ் படித்து வருகிறார்கள். பி.எட். பயிற்சி காலம் முடிந்தவுடன் ஒவ்வொருவர் வீடாக இரண்டு இரண்டு நாள் தங்கி மகிழ்வை வெளிப்படுத்துகிரார்கள். கடைசியாக சாராவின் வீட்டில் பயணம் முடிகிறது. இவ்வாறு பயணம் முடிந்த பின் இனி அடுத்து அவரவர் திருமணத்தில் நாம் சந்திப்போம் என்று கூறி விடைபெறுகிறார்கள். இந்த காலகட்டத்தில் சாராவுக்கு திருமணம் நிச்சயமாகிறது. நிச்சயதார்த்தத்தை வைத்துத்தான் வில்லங்கம் தொடங்குகிறது. 


சாரா முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண். சதீஷ் இந்து மதத்தைச் சார்ந்தவன். இருவருக்கும் காதல் உள்ளது தெரியவருகிறது சாராவிற்கு திருமணம் நிச்சயம் என்னும் பொழுது தான் சதீஷிற்கு அவள் மேல் காதல் வருகிறது. சாராவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யும்பொழுது தான் சதீஷ் மேல் காதல் வருகிறது. இந்த காதல் கைகூடியதா என்பதுதான் மீதிக்கதை. சமகாலத்தில் இந்து முஸ்லிம் பிரச்சனையை வைத்து எவ்வளவோ பிரச்சனைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த காலகட்டத்தில் காதல் திருமணம், அதுவும் இந்து முஸ்லிம் திருமணம் என்பதை நாவலில் கொண்டு வந்தமைக்காக தோழர் ராஜிலா ரிவ்வான் அவரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். அபூபக்கர் சதீஷ் நம்பர்களில் வரக்கூடிய ஒரு முஸ்லிம் இளைஞன். ஆமினா, சுமையா சாராவின் நண்பர்களாக வரக்கூடியவர்கள். இவர்கள் இந்த காதலை வேண்டாம் என்று கூறினாலும் சாராவின் பெற்றோரிடம் கூறுவதைப் போல ஒரு காட்சிகூட இல்லை. இது முரணாக உள்ளது. அப்துல்லா, சாஜிதா இருவரும் சாராவின் பெற்றோர். இவர்கள் இருவரும் மகளின் மேல் பிரியமாக இருக்கிறார்கள். இந்த பிரியத்தை இன்னும் கொஞ்சம் பலப்படுத்துமாறு ஏதாவது காட்சி அமைப்புகள் வைத்திருக்கலாம். முத்துகிருஷ்ணன் லட்சுமி இவர்கள் சதீஷின் பெற்றோர்கள். இவர்கள் வீட்டில் ஒரு கலப்பு திருமணம் நடக்கிறது. சதீஷ் அக்காள் கலப்பு திருமணம் செய்வதால் வீட்டை விட்டு விரட்டப்படுகிறாள். இச்சூழலில் சதீஷும் காதல் திருமணம் செய்ய முயற்சி செய்கிறான். இரண்டு குடும்பங்களும் கடைசியாக காவல் நிலையத்தில் சந்திக்கிறது. அங்கு காதல் கைகூடியதா என்பதை ஒரு நீள் வசனம் போல் கொண்டு செல்கிறார்கள். ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுமா என்ற பதட்டத்தை கொண்டு வரும் காட்சிகள் இல்லை. பெரியோன் நாவலில் வரும் சமூகம் இங்கு உருவாக வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஒரு மதத்திற்கு உள்ளே ஜாதியை வைத்து மோதல், வேறு மதம் என்றால் மதங்களுக்கு இடையே மோதல் என்பன போன்ற சிக்கல்கள் இன்றும் நடந்து கொண்டுதான் வருகிறது. சதீஷின் சித்தப்பா, பயாஸ் கேரக்டர்கள் இன்னும் பூமியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்கள் அமைதியான சமூகம் உருவாக என்றைக்கும் எதிராக இருப்பார்கள். இவர்களை எல்லாம் மீறி நல்லபடியாக வாழ வேண்டி இருக்கிறது. 


முதல் நாவல். நல்ல துவக்கம். வாழ்த்துக்கள் தோழர். 


பெ.விஜயராஜ் காந்தி 

நாத்திகனின் பிரார்த்தனைகள்



நாத்திகனின் பிரார்த்தனைகள்

அகரன் 

திராவிடியன் ஸ்டாக் வெளியீடு

88 பக்கங்கள் 

99 ரூபாய் 


நூலின் பெயரை கேட்டவுடன் பலருக்கு கைத்தடி ஞாபகம் வந்து போகும். அந்த அளவிற்கு தந்தை பெரியார் பெயர் மூலை முடுக்கெல்லாம் பதிந்து போய் உள்ளது. தோழர் அகரனுக்கு இரண்டாவது நூல். முதல் நூல் பொன்னி, சிறுகதை தொகுப்பு. இரண்டாவது நூல் நாத்திகனின் பிரார்த்தனைகள், கவிதைத் தொகுப்பு. பெயருக்கு ஏற்றவாறு பல கவிதைகள் புத்தகத்தில் உள்ளன.


கடவுள் வாழ்த்தைப்போல பெரியார் வாழ்த்தோடு நூல் தொடங்குகிறது. போதி மரத்தடி, பிணாக் கூற்று, சாலை மனிதனின் பிரதிநிதி ஆகிய மூன்று பிரிவுகளாக கவிதைகளை பிரித்துத் தந்திருக்கிறார் தோழர்.


கடலைப் பற்றி எப்போது பேசுவதோ எழுதுவதோ இருந்தாலும் ஒரு அச்சம் சூழ்ந்து கொள்ளும். சுனாமி வந்த முதலாம் ஆண்டுக்கு ஒரு போஸ்டர் அடித்தோம். "ஏ... கடலே

அலையால் உயிரை வாரிச் சுருட்டினாய்

கண்ணீரால் உப்பின் அளவினை கூட்டினாய்

எச்சரிக்கை 

உனக்கு இதுதான் கடைசி வரை முறை" என்று போஸ்டர் அடித்தது இன்றும் நினைவில் இருக்கிறது. அந்தக் கவிதை நினைவில் வந்து போனது தோழர் எழுதிய வாழ்க்கை என்ற கவிதையை வாசிக்கும் பொழுது. 

"கால் நனைக்க மட்டுமே 

கடற்கரை செல்பவனுக்கும்

சுனாமியில் குடும்பத்தைத்

தொலைத்தவனுக்கும் 

ஒரே மாதிரியான

தாக்கத்தைக் கொடுப்பதில்லை கடல். 

கடல் அழகானது கடல் கொடூரமானது" 

கவிதை கடலின் கொடூரம் பற்றி கூறும் அதே சமயம் வந்து போன சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பையும் கவலையையும் கண் முன் மீண்டும் நிறுத்தும் என்பது உண்மை.


குடை என்னும் நீள் கவிதை ஒன்று. வயது முதுமையில் வாழும் தாத்தா ஒருவரின் வாழ்க்கையை சொல்லும் கவிதை. தாத்தாவிடம் உதவி செய்துவிட்டு காசு வாங்குவதாக இருக்கட்டும். தாத்தா, உண்ணும் உணவை பிறருக்குக் கொடுத்து உண்ண வேண்டும் என்று கூறும் பண்பை வளர்ப்பதாக இருக்கட்டும் என்று வாழ்ந்த அந்த தாத்தா இறந்த பின்பு

"சொத்து பத்து சேர்க்காத

மனுஷனுக்கு

சுத்துப் பத்து சொந்தமெல்லாம்

ஒப்பு வச்சு 

சொல்லிச் சொல்லி

அழுகையில... வருத்தத்திலயும் 

கர்வம் எனக்கு...

ஆமா 

தாத்தன் சொத்பேரன் அனுபவிக்கிறேன்"

என்று கூறும் பொழுது தாத்தாவின் குணநலன்கள் கண் முன் வந்து போகிறது. தாத்தாவை பிரிந்து செல்கிறோம் என்ற வருத்தத்தின் மத்தியில் இப்படிப்பட்ட தாத்தாவிற்கு நாம் பேரனாக பிறந்திருக்கிறோம் என்ற கெத்து என்று சொல்வோமே அப்படி இருக்கிறது.


கவிதை நூல் என்றால் ஒரு கவிதையாவது குழந்தை சம்பந்தப்பட்ட கவிதையாக அமைவது சிறப்பை உண்டு பண்ணும். இந்த நூலிலும் அப்படி கவிதைகள் உண்டு. "குழந்தையுடனான சண்டையில்

கோபித்துக் கொண்ட

பொம்மையை 

என்ன சொல்லி சமாதானப்படுத்துவது?"

இந்த கவிதையில் குழந்தைக்கும் பொம்மைக்கும் சண்டை. பொம்மையிடம் குழந்தை கோபித்துக் கொள்ளும் என்று நாம் அறிவோம். ஆனால் இந்த கவிதையில் கோபித்துக் கொண்டது பொம்மை. இதில் பொம்மையை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று கேட்கிறார். என்ன சொல்லி சமாதானப்படுத்துவது, எப்படி சமாதானப்படுத்துவது, யார் சமாதானப்படுத்துவது? அந்த குழந்தைதான் அறியும், சமாதானப்படுத்துவதற்கான மொழியை. அருமையாக உள்ளது கவிதை.


பொட்ட பிள்ளைய வளக்கறதுக்கு இடுப்புல நெருப்பக் கட்டி திரிய வேண்டி இருக்கு என்ற வார்த்தையை கூறாத பெற்றோர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஒவ்வொரு நேரமும் பெண்களை வளர்ப்பதற்குள் உயிர் போய் உயிர் வருகிறது என்று அஞ்சி அஞ்சி வளர்க்க வேண்டி இருக்கிறது. இந்த வார்த்தைகளை சொல்லிக்கொண்டே காலகாலத்துல ஒருத்தன பிடிச்சு அவன் கிட்ட உன்ன ஒப்படைச்சுட்டேன்னா நான் நிம்மதியா போய் சேருவேன் என்ற சொல்லையும் வார்த்தையையும் கூறிவிடுகிறார்கள். திருமணம் என்னும் கூட்டுக்குள் தெரியாத இரு நபர்களை ஒன்று சேர்த்து வாழ வைக்கும் ஒரு கண் கட்டி வித்தை காலகாலமாக இங்கு நடந்து வருகிறது. என்ன செய்வது? தோழருக்கு கிராமிய நடை எளிதாக வருகிறது. இப்படி ஒரு நடையானது பொம்ம கல்யாணம் என்ற கவிதையில் சிறப்பாக வெளிப்படுகிறது. "என்னோட விருப்பம் இல்லாம 

இடம் பார்த்து 

நேரம் பார்த்து 

நாள் பார்த்து 

ஆள் பார்த்து... 

படுக்க நிர்பந்திப்பது மட்டும் 

கற்பழிப்புல சேராதா... 

நாளைய அபலைக்குத்தான்

இப்ப பட்டுப் புடவை

சுத்துறாங்க

பொம்மக் கல்யாணம் ஒன்னு 

செஞ்சு வச்ச பொம்மலாட்டம் ஆடுறாங்க"

இந்த கவிதையின் ஆரம்பம் முதல் வாசித்துப் பாருங்கள். ஒரு தாய் படும் பாடு தெரியும். பூட்டிப் பூட்டி வைத்து இன்னும் எத்தனை காலம்தான் பெண்களை வாழ வைக்க போகிறோமோ தெரியவில்லை...


இப்படி ஒரு கவிதையை ஆத்திகர்கள் வாசிக்க நேர்ந்தால் எந்த கோவிலிலும் புறா வளர்க்க தடை செய்யப்படும் என்று தான் நினைக்கிறேன். "கோபுரத்தில் ஜீவிக்கும் 

கோவில் புறா

ருதுவானால்

தீட்டாகிடுமா சாமி...?

நல்லாஅருக்குல்ல என்று சொல்ல தோன்றுகிறது.


நாத்திகனின் பிரார்த்தனைகளில் ஒன்று. 

"தூணிலும் துரும்பிலும்

இருந்திடும் கடவுளே!

என் தட்டு

மாமிசத்திலிருந்து மாத்திரம்

வெளிநடப்பு செய்திடேன்.

இப்பிரபஞ்சம் முழுமையும் விடுத்து என் எச்சில் தட்டினில் அல்லவா 

உன்னைத் தேடி வருகிறது? அரிவாளுடன் ஒரு கும்பல்.."

என் உணவு என்ற சொல்லில் கூட இன்று அரசியல் ஊடுருவி விட்டது. மாட்டுக் கறி வைத்திருந்தால் பிரச்சனை, மாட்டுக்கறி இல்லை என்றாலும் அதனை மாட்டுக்கறி என்று சொல்லி பிரச்சனை என்று பிரச்சனை செய்வதற்கு என்று உள்ள ஒரு கூட்டம் இங்கே இருக்கிறது. அந்த கூட்டத்தினால் அதிக அளவில் ஏற்றுமதி செய்ய முடியும். ஆனால் இங்கு உண்ண மட்டும் தடை எப்படி என்பதுதான் அரசியல். "என் தட்டு மாமிசத்தில் இருந்து மட்டும் வெளிநடப்பு செய்திடேன்" என்று கூறுவது மாட்டிற்காக அல்ல. மனிதர்களுக்காக என்பது எப்பொழுது புரியப்போகிறது?


தொகுப்பெங்கும் முற்போக்காக பல கவிதைகள். ஒவ்வொன்றும் பெரும் வீச்சாக தெறி"க்கிறது. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்.


வாழ்த்துக்கள் தோழர் அகரன். 

No சொல்லுங்க



 நோ சொல்லுங்க

(மறுத்துப் பேசும் திறன் பற்றிய சிறார் நூல்)

சக.முத்துக்கண்ணன் 

ச.முத்துக்குமாரி

மேஜிக் லாம்ப் வெளியீடு ஓவியங்கள்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

72 பக்கங்கள் 

199 ரூபாய்


நோ சொல்வது ஒரு திறன் 

நோ சொல்வது ஒரு கலை 

நோ சொல்வது ன்னம்பிக்கை 

நோ என்பது சிறந்த பதில் 

நோ சொல்பவர் கெட்டவர் இல்லை

நோ சொல்லக் கற்றுக் கொள்வது அவசியம்

இதுதான் இந்த நூலின் சாராம்சம். இன்று குழந்தைகளிடம் மறுத்து பேசும் திறன் என்பதே இல்லாமல் போய்விட்டது. ஆசிரியர் சொன்னால் அப்படியே கேட்பது. பெற்றோர்கள் சொன்னால் அப்படியே கேட்பது. அவர்களை ஒரு பொம்மையைப் போல வளர்த்துக் கொண்டு வரும் சூழல் உள்ளது. அல்லது விட்டேத்தியாக வளரும் சூழல் உள்ளது.


அம்மா எடுத்து வந்த சுடிதார் வேண்டாம் என்றால் கூட திட்டி விடுவாரோ என்ற எண்ணத்தில் மகள் இருப்பார். ஆனால் அந்த நோ சொல்ல வேண்டியதை மாற்று மொழியில் கூறலாம். அம்மா, இந்த கலர் சுடிதார் என்னிடம் இருக்கிறது / அடுத்த முறை என்னையும் துணிக்கடைக்கு கூட்டிட்டு போங்க / என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம் அம்மா என்பது போன்று எல்லாம் சொன்னால் அம்மா தடுக்க முடியாது. அதை அணுகும் முறை வேறுபடும் என்று ஆலோசனை வழங்குகின்றனர் நூல் ஆசிரியர்கள். 


நோ சொல்லி பழகுவது எப்படி என்பதற்கு கதைகள் மூலம் விளக்குகிறார்கள்.


ஒருவன் ஒரு பெண்ணிற்கு தொடர்ந்து சாட் செய்கிறான். நல்லபடியாக போய்க்கொண்டிருந்த சாட் ஒரு குறிப்பிட்ட சூழலுக்குப் பின் திசை மாறிப் போகிறது. இதனை அந்தப் பெண் விரும்பவில்லை. பின் அவள் சாட் செய்வதை தொடர்கிறாள்.  இது சரியா தவறா? புதியதாக நம் வீட்டுக்கு அருகில் ஒரு குடி வருகிறார். கணவன் மனைவி இருக்கிறார்கள். ஒரு நாள் மனைவி ஊருக்கு செல்ல அவர் மட்டும் இருக்கிறார். அங்கு பக்கத்து வீட்டுப் பெண் செல்வது சரியா தவறா? இப்படிப்பட்ட விவாதங்கள் இந்த புத்தகத்தில் இருக்கின்றன. புதியவர் வந்தால் அந்த வீட்டிற்கு நாம் பெண் பிள்ளைகளை கவனத்துடன் அனுப்ப வேண்டும். புதியவர் வந்தால் என்று இல்லை பழையவர்களாக இருந்தாலும் நாம் கவனத்துடன் இருக்க வேண்டும்.


சரியான தொடுதல், தவறான தொடுதல் குறித்து பள்ளிகளில் பாடம் எடுக்கும் சூழல் உள்ளது. அந்த பாடம் குறித்த தகவலும் நூலில் உண்டு.


வீட்டில் அம்மாவோ அப்பாவோ மொபைல் போன் பயன்படுத்தும் பொழுது கண்டித்து வாங்கி விடுகிறார். திரும்பவும் மல்லுக்கட்டி அந்த மொபைல் போனை வாங்கி விடுவோம். அம்மா சொல்லும் நோ நியாயமானதா இல்லையா என்பதை விவாதிக்கச் சொல்லி ஒரு பக்கம் ஒதுக்குகிறார்கள். இன்று செல்போன் வாங்கித் தரவில்லை என்றால் மாணவர்கள் தவறான முடிவை எடுக்கிறார்கள். பைக் வாங்கி தரவில்லை என்றால் தவறான முடிவு எடுக்கிறார்கள். எது சரி எது தவறு இது இந்த வயதிற்கு தேவையா என்பதை புரிந்து கொள்ளும் மனப்பான்மை மாணவர்களுக்கு வருவதில்லை. இந்த வயதிற்கு ஏற்றதுதானா என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். வீட்டின் பொருளாதாரம் இதற்கெல்லாம் கட்டுபடியாகுமா? என்று மாணவர்கள் யோசிப்பதில்லை. நோ சொல்லிவிட்டால் தலைகீழாக குதிக்கிறார்கள். இதையெல்லாம் விவாதம் தொடர்பான பக்கங்கள் ஒதுக்கி மாணவர்களை பேச வைக்கிறார்கள்.


நோ சொன்னதால் என்னென்ன நன்மை விளைந்திருக்கிறது என்று விளக்குகிறார்கள் நூல் ஆசிரியர்கள். சித்தார்த்தன் நோ சொன்னதால் ஒரு போர் நிறுத்தப்பட்டது. ரோசா பார்க்ஸ் என்பவர் பேருந்தில் எழுந்து நிற்க மறுத்துவிட்டார். வெள்ளைக்காரர் வந்து நின்றால் எழுந்து நிற்க வேண்டும் என்ற ஒரு நடைமுறை. அதை மீற வேண்டும். தனக்கு சுதந்திரம் இருக்கிறது. நான் நடத்துனரிடம் பயணம் செய்வதற்கு காசு கொடுத்து இருக்கிறேன். நான் ஏன் எழுந்து நிற்க வேண்டும் என்ற ஒரு மறுப்பின் வெளிப்பாடு தான் நோ சொல்லுதல். 381 நாட்கள் நடந்த போராட்டத்தின் முடிவில் ரோசா பார்க்ஸ் சொன்ன ஒரு நோ"வால் நிறத்தை வைத்து பாகுபாடு பார்க்கும் சட்டத்தையே மாற்ற வைத்தது. காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கம் நடத்திய பொழுது வெள்ளைக்காரர்களுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு வரமாட்டோம் என வழக்கறிஞர்கள் நோ சொன்னார்கள். ஆங்கிலேயர்களின் துணியை உடுத்த மாட்டோம் என மக்கள் நோ சொன்னார்கள். கதர் ஆடையை மட்டுமே உடுத்த ஆரம்பித்தார்கள். ஆங்கில ஆட்சிக்கு எதிராக இந்தியா முழுக்க நோ சொன்னார்கள். ஒத்துழையாமை இயக்கத்திற்கு வெற்றி கிடைக்க முக்கிய காரணம் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக காந்தியடிகள் நோ சொல்லியதுதான். "பொம்பள புள்ளன்னா கல்யாணம் பண்ணனும், சமைக்கணும், குழந்தை பெத்துக்கணும், எதுக்கு படிப்பு?" என சுற்றி இருந்த எல்லாரும் சொன்ன போது சாவித்திரிபாய் பூலே அதை மறுத்து நோ சொன்னார். அவர் இந்தியாவில் பெண்களுக்கான பள்ளியை ஆரம்பித்தார். முதன்முதலாக தொடங்கிய அந்த பள்ளி 3 பள்ளிக்கூடங்களாக விரிவடைந்தது. இதற்கு காரணம் நோ சொன்னது தான்.


ஆனால் நாம் எத்தனை விஷயங்களில் நோ சொல்லி இருப்போம். அதுவும் துணிச்சலாக சொல்லி இருப்போம் என்பது கேள்விக்குறிதான். ஒரு திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது என்றால் அது குறித்த மேற்பார்வை செய்ய அதிகாரிகள் வருவார்கள். அந்த திட்டம் சரியில்லை என்ற மனப்பான்மையுடன் நாம் இருப்போம். ஆனால் அந்த பதிலை அவர்கள் விரும்ப மாட்டார்கள். இது தொடர்பாக பாசிட்டிவான பதிலை எதிர்பார்ப்பார்கள். ஆதலால் நெகட்டிவ் ஆக எதுவும் கூறிவிட வேண்டாம் என்று நாம் அறிவுறுத்தப்படுவோம். அதற்காக ஆமாம் சாமி போடும் கூட்டம் பல இடங்களில் உண்டு. ஆக இந்த நூல் மறுத்துப் பேசும் திறன் பற்றிய சிறார் நூல் மட்டுமல்ல. கொஞ்சம் நமக்கும் சேர்த்துத்தான்.


நோ சொல்லுங்க என்று மனம் சொல்லுகிறது காரணம் 199 ரூபாய். வெறும் 72 பக்கங்கள். ஆனாலும் வாங்கியாச்சு. படிச்சாச்சு. 


பள்ளியில் உயர் கல்வி படிக்கக்கூடிய குழந்தைகள் அனைவரும் இந்த நூலை படிக்கலாம். சிறுவர்களும் இந்த நூலை படிக்கலாம். விழிப்புணர்வைத் தரக்கூடிய நூல்.


வாசிக்க வேண்டிய நூல். 


பெ. விஜயராஜ் காந்தி

Tuesday, 1 July 2025

அடுக்கு மல்லிகை


 

அடுக்கு மல்லிகை... பாடல்

திரைப்படம் : தங்கமகன்

இசை: இளையராஜா


காமத்தை கொண்டாட்ட மன நிலையில் ஆராதிக்க கற்றுக் கொடுத்தவர் இளையராஜா என்பதை மெய்ப்பிக்க உள்ள பல பாடல்களில் அடுக்கு மல்லிகை பாடலும் ஒன்று. 


வில்லனின் இடத்தை நோட்டமிட வந்திருக்கும் ரஜினி மற்றும் சில்க் ஸ்மிதா இருவரும் பாடும் பாடல் காட்சி. இந்தப் பாடலின் தொடக்கத்தில் ரஜினி அறையில் படுத்து இருக்கிறார். அந்த அறைக்கு வரும் சில்க் கதவின் அருகில் நின்று ரஜினியைப் பார்த்து, இரு கவனித்துக் கொள்கிறேன் என்பதுபோல் தலையசைத்து கதவைப் பூட்டுகிறார். அந்த நேரம் சில்க்கை திரும்பிப்பார்க்கும் ரஜினி ஒரு கொண்டாட்ட மனநிலையில் கால்களை குதிப்பது போல பாவனை செய்கிறார். சில்க் கதவை அடைத்துக்கொண்டு வரும் அழகு அவ்வளவு அற்புதமாக இருக்கும். இந்த இடைவெளியை பாடல் துவக்கத்திற்கு அளித்திருக்கும் இளையராஜாவின் இசை அவ்வளவு லாவகமாக நிரப்பியிருக்கும். சில்க் வந்தவுடன் ரஜினியை கால்களில் இருந்து தொட்டு முகத்தில் முத்தமிட்டு ரஜினியை திகைக்க வைத்து அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது என்று பாடத் தொடங்குகிறார். அந்த குரல் மயக்குவதற்காக படைக்கப்பட்டதா என்ற சந்தேகம் நிச்சயம் எழும். உன்னைத் தொட்டால் போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும் என்ற அந்த குரல் உண்மையிலேயே சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் சுகம்தரும். சில்க்கிற்குள் புகுந்த ஜானகியின் குரல் இப்படித்தான் இருக்கும் என்றும் சொல்லலாம். தொடர்ந்து ரஜினிக்கு எஸ்பிபி பாடுகிறார். உச்சஸ்தாயியில் பாடத் தொடங்கி சில்க்கின் பார்வைக்கு மெல்ல இறங்குகிறது எஸ்பிபி குரல்.


இது காமத்தை தூண்டும் பாட்டா அல்லது ஒரு காதல் பாடலா அல்லது ரஜினியின் பாடலா அல்லது சில்க்கின் பாடலா அல்லது இளையராஜாவின் பாடலா என ஒரு பட்டிமன்றமே வைக்கலாம் அத்தனைக்கும் பொருந்தும் இசையும் குரலும்.


முதல் சரணத்தில் 

நீ வாடி செல்லக்குட்டி நான் தூக்கும் வெல்லக்கட்டி


கைகள் அள்ள... கண்கள் உன்னை... தேடுது


என்ற வரிகளும்


இரண்டாவது சரணத்தில்

ராசாத்தி முல்லைமொட்டு நான் தேடும் காதல்சிட்டு


கைகள் அள்ள... கண்கள் உன்னை... தேடுது

என்ற வரிகளும் எஸ்பிபி பஞ்ச்.


முதல் சரணத்தின் இறுதியில் ஜானகி அடுக்குமல்லிகை என தொடங்க எஸ்பிபி ஹா என ஹம் செய்ய இது ஆள் புடிக்குது என ஜானகி தொடங்க ஹாஹ்ஹா என எஸ்பிபி பாட ரெண்டு தோள் துடிக்குது என ஜானகி பாட எஸ்பிபி ம்ம்ம் எனத் தொடர பின் இருவரும் இணைந்து லாலால்லா என நீட்டித்து காமத்தின் வெள்ளோட்டத்திற்கான ஒரு சூழ்நிலையை இளையராஜா வைத்திருப்பார்.

இதே போன்று இரண்டாவது சரணத்தின் இறுதியில் எஸ்பிபி பாட ஜானகி கிறங்கும் (கிறக்கும்) குரலில் சிரிக்க என நீளும். எந்த இடத்திலும் காமத்தின் உச்சத்தைச் சிதைக்காத இசையும் வரிகளும் பாடலுக்கும் கதையின் சூழலுக்கும் ஆகப் பொருத்தம். விரசம் என்பதை மனதிற்குள் கொண்டு செல்லாமல் ராஜா, எஸ்பிபி, ஜானகி, ரஜினி, சில்க் என்ற ஆளுமைகளின் திறன்களை இப்பாடல் வழியாகவும் கண்டுணரலாம். கேட்டும் உணரலாம்.


பாடல்:


அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது


ரெண்டு தோள் துடிக்குது மனம் துடிதுடிக்குது


ஒன்ன தொட்டா போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும்


ஒன்ன தொட்டா போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும்


அட ஆளாகி நாளாச்சு... வந்தால் என்ன


நா வாரேன் புது பாய்போடு நாள்தோறும் இளநீரோடு


நா வாரேன் புது பாய்போடு நாள்தோறும் இளநீரோடு


கையோடு சேர்த்தணைச்சு கட்டில்வரை கண்ணடிச்சு


ஆத்தோடு போவதுபோல் ஆசையில நீச்சடிச்சு


நீ வாடி செல்லக்குட்டி நான் தூக்கும் வெல்லக்கட்டி


கைகள் அள்ள... கண்கள் உன்னை... தேடுது


மாம்பூவே இளம் பூங்காத்தே மார்போடு எனை தாலாட்டு


மாம்பூவே இளம் பூங்காத்தே மார்போடு எனை தாலாட்டு


தீராத ஆச வச்சே அங்கே இரு கண்ணிருக்கு


தில்லானா பாடிக்கிட்டு இங்கே ஒரு பெண்ணிருக்கு


ராசாத்தி முல்லமொட்டு நான் தேடும் காதல்சிட்டு


கைகள் அள்ள... கண்கள் உன்னை... தேடுது


அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது


ரெண்டு தோள் துடிக்குது மனம் துடிதுடிக்குது


ஒன்ன தொட்டா போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும்


ஒன்ன தொட்டா போதும் சொர்க்கலோகம் முன்னால் ஆடும்


அட ஆளாகி நாளாச்சு... வந்தால் என்ன


அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது


ரெண்டு தோள் துடிக்குது மனம் துடிதுடிக்குது


யாழ் தண்விகா

மீண்டும் ஒரு காதல் கதை



 ஒரு காதல் கதை

#நெடுங்கதை


மீரான் மைதீன்


புலம் பதிப்பகம்


பக்கங்கள் 56. விலை 80/=


 எழுத்தாளர் மீரான் மைதீன் அவர்கள் எழுதிய நூலை இப்போதுதான் முதன்முறையாக வாசிக்கிறேன். ஒரு கதை சொல்லி, இந்நெடுங்கதையில் சக பயணியின் கதையைக் கேட்கிறார். அதுவே ஒரு காதல் கதை.

  ரயில் சினேகத்தில் கதாசிரியருக்கு ஷீலா என்ற பெண் அறிமுகம் ஆகிறாள். கதைகள் எழுதும் நபர் என்பதாலும், உரையாடலின்போது பிடித்துப்போன மனிதர் என்பதாலும் 1980களில் தன்னுடைய வாழ்வில் நிகழ்ந்தவற்றைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார் ஷீலா. தன்னுடைய திருமணம் ஒரு காதல் திருமணம். அதுவும் சீர்திருத்தத் திருமணம். தன்னுடைய பெயர் வஷீலா என்றும் தன்னுடைய காதல் கணவரின் பெயர் மணிகண்டன் என்றும் கூறுகிறார் அப்பெண்மணி. காதல் இரு குடும்பத்திற்கிடையே என்னென்ன மனச் சிக்கல்களை உண்டாக்கியுள்ளது என்பதைத் தன்னுடைய உரையாடல் வாயிலான கேள்விகள் மூலம் ஷீலாவிடமிருந்து தெரிந்துகொள்கிறார். ஷீலாவின் அம்மா, அப்பா, தம்பி ஆகியோர் தற்போது என்ன ஆனார்கள்? அவர்களிடையே அப்பெண்ணிற்கு உறவு நீடிக்கிறதா? என்பன போன்ற கேள்விகள். ஷீலா தற்போது 60 வயதாகும் பெண்மணி. அவளுக்குக் கணவன் மணிகண்டன். ஒரு மகன். ஒரு மகள். இந்த ரயில் பயணத்தில் கூட அப்பெண்மணி தன்னுடைய பேரனைப் பார்க்கச் செல்கிறாள். கல்லூரி ஒன்றில் முதல்வராகப் பணி செய்தபின்னர் பணி ஓய்வு பெற்று இன்னும் ஈராண்டு கூட முடிவடையவில்லை. இசுலாம், இந்து இவர்களின் திருமண வாழ்வு இணக்கமாகச் செல்கிறதா இல்லையா என்பது உள்ளிட்ட அனைத்தும் கதாசிரியர் மீரான் மைதீன் மற்றும் ஷீலா ஆகிய இருவரின் உரையாடல் வழியாகவே அறிந்து கொள்ளலாம். தொய்வின்றிச் செல்கிறது கதை ஒரு தெளிந்த நீரோட்டம் போல. ஸ்பரிசத்தைத் தொட்டும் தொடாமல் செல்லும் தென்றல் போல. மனதை மயக்கும் பாடல் போல. 


அருமை. வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா

Sunday, 22 September 2024

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்

 


எந்த திட்டமானாலும் 

எனக்கான உரிமையானாலும் 

நீள்சதுர டப்பாவில் 

அடர் ஊதா மையில் பெருவிரல் அழுத்தி 

சொல்லும் இடத்தில் அச்சுப்பதிக்கவேண்டும் 

சில நேரங்களில் அதற்கும் வாய்ப்பற்று 

என் விரலைப் பிடித்து 

எதிரில் நிற்பவர் 

அவர் விரும்பும் இடத்தில் 

முன்னும் பின்னுமாக உருட்டி 

விரலை அச்செடுப்பார்கள் 

அது விரல் அச்சல்ல 

என் அறியாமையின் மேல் 

விழுந்து கிடந்த 

அவல அடையாளம் கல்லாமையினால் பூத்திருந்த கண்ணீர்ப் படிமங்கள் 


என் வாழ்க்கைக்கு,

நீங்கள் சொல்லும் அறிவுரை.

என் வயலுக்கும், 

நீங்கள் சொல்லும் உரம். 

என் வயிற்றுக்குக் கூட, 

நீங்கள் கைகாட்டும் அரிசி.

எல்லாம் கிடைத்தது,

என் விருப்பம் தான் 

எங்கும் இல்லாமல் போனது.


கீறல் என்று எழுதி 

என் பெயரை 

என் கைநாட்டுக்குப் பின் 

யாரோ ஒருவர் எழுதிக் கொள்ள எப்படிச் சம்மதித்தது மனது?

யாரோ ஒருவரின் குரலில் 

தன்மானம் கூசச் செய்யாமல் 

எப்படி என் காதுகள் கேட்டன செய்தித்தாளின் வரிகளை புத்தகத்தின் வரிகளை அழைப்பிதழ்களின் வரிகளை...?


புதிய பாரத எழுத்தறிவு திட்ட அழைப்பு

வெட்கம் பூக்கப் பூக்கத்தான் 

களம் செல்ல எத்தனித்தேன் 

தயக்கம் அழுத்த அழுத்தத்தான் வேண்டாம் எனத் தயங்கியும் நின்றேன் 

காலம் போன கடைசியில் என்ற பரிகாசம் கேட்க கேட்கத்தான் கொஞ்சம் பம்மிக் கொள்ளவும் செய்தேன் 


வாழ்வின் அந்திமக்காலத்திற்குள் முடிந்தளவு 

என்னை நான் எழுத படிக்க 

உங்களை நான் எழுத படிக்க 

இதை விட்டால் வேறு கதி என்ன...?


மெல்ல மெல்ல அறியாமைப் படிகளைக் கடந்தேன் தன்னார்வலர்களும் 

கல்வித்துறைப் பெருமக்களும் கத்தியின்றி இரத்தம் இன்றி புத்தியில் செய்த பெரும் புரட்சி 

சீரியதோர் சிகிச்சை

கல்விக்கண்ணைத் திறந்து வைத்தது


புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கரங்களை 

இன்னும் ஆதுரமாகப் பற்றிக் கொண்டேன் 


வாசிக்க வாசிக்க 

உணர உணர 

கல்வி சுகம் 

கடல் சுகம் 

வானம் சுகம் 

பூமி சுகம் 

இயற்கை சுகம் 

ஆறறிவு சுகம் 

மனிதம் சுகம் 


இரு கண்ணின் ஒளியுடன் 

இன்று மூன்றாவது கண்ணும் 

பிறந்து விட்டது 

எதிர்ப்படும் 

எல்லோரிடமும் சொல்கிறேன் உலகைப் படிக்க 

உன்னைப் படிக்க 

முதலில் படி 

படிக்கும் வயதில் படி


பாதைகள் திறக்கும் 

வாழ்வு சிறக்கும் 


வாய்ப்பிற்கு நன்றி 


இப்படிக்கு 

நேற்று வரை ஏய் பெருசு 

என்று அழைக்கப்பட்ட 

அமரர் கதிர்வேல் மகன் 

திரு. கா. பெரியசாமி.

இளமையிலேயே கற்று இருந்தால் இன்னும் கெத்தாகச் சொல்லி இருக்கலாம் 

இப்படிக்கு 

உயர்திரு கா. பெரியசாமி 

மாவட்ட ஆட்சியர் என்று கூட...


///புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட மண்டல அளவிலான போட்டியில் "வாசிக்க" எழுதிச் செல்லப்பட்ட கவிதை வரிகள். கற்போரும் கற்பிப்போரும் ஆர்வ மிகுதியால் மேடையை ஆக்கிரமிக்க, அவர்களுக்கு வழிவிட்டு... இந்த வரிகள் இந்தப் பக்கத்தில்...///


பெ.விஜயராஜ் காந்தி

@ யாழ் தண்விகா

பெரியகுளம்.


❣️

Saturday, 17 August 2024

அறிவே கடவுள் - வைரமுத்து

 


அறிவே கடவுள்


வைரமுத்து


NCBH வெளியீடு


35 ரூ 40 பக்கங்கள்


08.08.2017ஆம் தேதி ஈரோடு புத்தகத் திருவிழாவில் வைரமுத்து அவர்கள் ஆற்றிய உரை. மிகச் சமீபமாக பெரியகுளத்தில் தென்கரை நூற்றாண்டு நூலக விழாவில் கலந்துகொண்டு நூலக மலரை வெளியிட்டுப் பேசினார். இதற்கும் சில மாதங்களுக்கு முன்னர் தேனி புத்தகத் திருவிழாவில் கலந்துகொண்டு பேசினார். தெளிந்த நீரோட்டம் போல அங்கும் இங்கும் திசை மாறும் போக்கில்லாமல் அமைந்த பேச்சு. அதே போன்றதொரு உரை தான் 2017லிலும். அவரின் ஒவ்வொரு பேச்சும் இது போலத்தான் இருக்கும் என்பதை ஒப்பிட்டு உணரக் கிடைத்த வாய்ப்பு.


மிக எளிமையான சொற்கள். புரிந்து கொள்ளக்கூடிய வகையிலமைந்த மிக எளிய கதைகள். மிக அழகான தமிழ். ஒரு பேச்சு, கேட்பவரையும் படிப்பவரையும் சென்று சேர இதைவிட வேறு வகையில் பேசிவிட முடியாது. பெரும் குரலெடுத்து கத்துவது, உணர்வுகளைத் தூண்டுவது, பிறரைக் காயப்படுத்துவது என எந்தத் தொனியும் இல்லை. தலைப்பிற்கு, சமூகத்திற்கு நியாயம் செய்யும் பேச்சு. அறிவே கடவுள் என்ற நூலிலும் பேச்சை எழுத்தாக்கியதை வாசிக்கும்போது அதைக் காணலாம்.


கடவுள் உள்ள இடத்தில் அறிவுக்கு வேலை இருக்காது. அறிவினுள்ள இடத்தில் கடவுளுக்கு வேலை இருக்காது. அறிவு வினாக்களை உண்டு பண்ணும். அறிவு வினாக்களுக்கு பதிலைக் கொணரக் கொணர அங்கிருக்கும் கடவுள் பின்னால் நகர்ந்து செல்வார். அறிவுதான் கடவுள் என்பதைச் சொல்கிறது நூல். 


கலைஞரிடம் ஒருமுறை யார் பெரிய தயாரிப்பாளர் என்ற கேள்வி சில தயாரிப்பாளர்களின் பெயர்களைச் சொல்லி முன்வைக்கப்பட்டது. அவர் சொல்கிறார் மனிதன்தான் உலகில் மிகப்பெரிய தயாரிப்பாளர். ஏன் என்றதற்கு பதில் " அவன்தானே கடவுளையே தயாரித்தான்". வியக்க வைக்கும் பதில். புத்தக வாசிப்பையும், கேட்கும் தன்மையையும் அதிகரிக்க இது போன்ற பேச்சும் உதாரணங்கள் எவ்வளவு அவசியம். இதை பலரிடம் காணவும் முடியாது. சில நிமிடங்களிலேயே அங்கும் இங்கும் திரும்பி கூட்டத்தினரை வேடிக்கை பார்க்க வைத்து விடும் பல பெரிய பேச்சாளர்கள் பேச்சு. எம் தேனி மண் தந்த கவிஞரின் பேச்சு அவ்வகைப்பட்டதல்ல என்பதில் எங்களுக்கு பெரும் மகிழ்வு.


அக்பர் - பீர்பால் இருவரிடம் வரும் புலவன் முன்வைக்கும் கேள்விக்கு பீர்பால் அளிக்கும் பதில்கள் கண நேர அறிவுச் செயல்பாட்டிற்கு அவ்வளவு பொருத்தம். அறிவையும் பயன்படுத்த வேண்டும். அதே சமயம் எதிராளியை அவர் தம் தவறு உணரச் செய்ய வேண்டும். இரண்டையும் செய்கிறது சில உதாரணங்கள். பாரதியார் 11 வயதில் புலவர் பட்டம் பெற்றதைத் தாங்கவியலாத காந்திமதி நாதன் என்பவர் பாரதி சின்னப்பயல் என்னும் ஈற்றடி வருமாறு ஒரு பாடல் பாடச் சொல்கிறார். பாரதியை அவர் வாயாலேயே சின்னப்பயல் என ஒத்துக்கொள்ள, சொல்ல வைக்க செய்யும் செயல். பாரதி கேள்வி கேட்டவரையே பாடலின் உள்ளிழுத்து அவரை மூக்குடை பட வைப்பது மட்டுமில்லாமல் தன்னுடைய புலமைத் தன்மையையும் வெளிக்காட்டிய பாடல் நினைவில் வந்து போனது.


பெர்முடா முக்கோணம், கடலில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள், விக்கிரமாதித்தன் கதை என பல உதாரணங்கள் வாயிலாக சொல்லும் கருத்துகள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை. முக்கியமாக கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள். மூன்றாம் உலகப்போர் என்பது கவிஞர் எழுதிய நூல். அதில் ஒரு பறவையின் வெற்றி எதில் இருக்கிறது என்ற கேள்வி எழுப்பி இருப்பேன். அடையும் இலக்கா? பறக்கும் வேகத்திலா? எந்தக் கூட்டத்தோடு பறக்கிறது என்பதிலா? எதிலும் இல்லை. மொத்த வானத்தையும் மறக்கடித்து தன்னை மட்டும் கவனிக்கச் செய்யும் வித்தையில் தந்திரத்தில் இருக்கிறது என்று பதில் சொல்லியிருக்கிறேன். அது போல கோடி கோடி மக்கள் வாழும் உலகில் நீங்கள் கவனிக்கப்பட இந்த யுகம் அறிவை முன் வைக்கிறது. ஆக, நீங்கள் அறிவை நோக்கி பயணம் செய்யுங்கள் என்ற வார்த்தை எவ்வளவு நேர்த்தி...


இன்னும் நிறைய தகவல்களுடன் கூடிய அருமையான புத்தகம்.

வாசியுங்கள். 

வாழ்த்துகள் கவிஞருக்கு.


யாழ் தண்விகா 


❣️