Wednesday, 16 July 2025

ஓசை புதையும் வெளி


ஓசை புதையும் வெளி

#கவிதைத்தொகுப்பு

#தி_பரமேசுவரி


கால நதி சில பெரும் வெள்ளோட்டத்தையும் சில பாலையையும் சிலபல இயல்பான பயணத்தையும் எப்போதும் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒரு சிறு சருகு காற்றிலோ நீரிலோ நிலத்திலோ அலைவுறும் தருணத்தில் சருகின் உள்ளோடும் வாழ்வின் நிலையற்ற தன்மையானது எத்தகைய துயர்களைக் கொண்டிருக்கும்... அதன் வலிகளை இயல்பின் மொழிகளில் எடுத்தாளும் தீட்சண்யம் கவிஞனின் மொழிகளில் படர்ந்து கிளைத்திருக்கிறது. அத்தகைய கிளைத்தலுக்குரிய மொழி லாவகம் உடைய கவிஞராக #ஓசைபுதையும்வெளி கவிதைத்தொகுப்பின் ஆசிரியர் #தி_பரமேசுவரி அவர்களை கூறலாம்...


இயல்புக்கு அப்பாற்பட்ட எதையும் புனைவென்று கூறி பக்கங்களைக் கடத்தும் உத்திகளற்று நம் வாழ்வின் யதார்த்தங்களை கவிதைகளில் பதிவிட்டுள்ளார் கவிஞர்...


சிறகுகள் கோதும் சாளரம் என்று தலைப்பிட்ட கவிதை.

"மேலும் தீட்டிக் கூராக்குகிறது

சிறிய மூக்கை

தொட்டி நீரில் அமிழ்த்திக்

கோதுகிறது சிறகுகளை

தானியங்களைக் கொத்தியும்

நீர் குடித்தும் பறந்தும்

விழுந்தும் அணைத்தும்

செய்யும் சில்மிஷங்கள்

குஞ்சுப் பறவையின் சேட்டைகளைச்

செல்லமாய்க் கண்டிக்கும் தாய்ப்பறவை


சன்னலில் பதித்த முகத்தில்

பதியும் கோடுகள்


வலிக்க வலிக்க

ரசித்துக்கொண்டிருக்கிறாள்..."


ஒரு பறவையின் வாழ்வு, அதன் பறத்தலும் பறத்தல் நிமித்தமுமான வாழ்வின் கணங்களின் கூறொன்றை பார்க்கும் ஒரு பெண்ணின் ஏக்கங்கள் கவிதை வரிகளில் முகத்தில் பதியும் கோடுகளாக்கப்பட்டிருன்றன விடுதலைக்கான வலியின் வார்த்தைகள் இவை.


துரோகத்தின் பாஷை நேரடியாக நம்மை அணுகும்போது சிலிர்த்ததிரும் உடலின் வலிகளை உதிர ஓவியமாக்கியிருக்கிறார் கவிஞர்.

"ஆதரவு தேடித்

தோள் சாய்கிறேன்

அடி வயிற்றில்

கத்தி செருகுகிறாய்

சிதறும் துளிகள் கொண்டு

தீட்டுகிறேன் உன் ஓவியம்..."


எத்தனை வரையறைகள் கொடுத்தாலும் காதலுக்கான வரையறை அவரவர் பார்வையில் ஆகச் சிறந்த பொறுத்தமாகவே அமைந்து விடுகிறது. இது கவிஞரின் விளக்கம்...

"காயமுற்று விழுந்த புறாவின்

சிறகு தடவி

பயம் தணித்து

வலிக்காமல் தலை திருகும்

உன் மென்மைக்கும்

காதல் என்றுதான் பெயர்"


இயல்பாக கடந்து செல்ல வேண்டிய ஒன்றாக நாம் நினைப்பவற்றையும் கவிஞரின் பார்வையில் கண்ணாடி மதிலில் பதிவிடுகிறார் இப்படியாக...

"கண்ணாடிச் சில்லுகள்

பதிக்கப்பட்ட மதில்களில்

சிறிதும் சேதாரமின்றி

நகர்கிறது நத்தை

மௌனத்தின் இடைவெளிகளை

இட்டு நிரப்பியபடி"

இந்த மௌனத்தின் இடைவெளிகள் என்பதில் இட்டு நிரப்பவேண்டிவைகள் என என்னென்ன நாம் வைத்திருக்கிறோம் என்பதை நம் மனம் ஒன்றே அறியும்.


ஓசை புதையும் வெளி என்ற தலைப்பிலான கவிதை.

"உரக்கப் பேசுவதாய்க்

கோபப்பட்டாய்

மிகுந்த ஓசையுடன் காரியமாற்றுவதாய்க்

குற்றம் சாட்டினாய்

புணர்ச்சியில் கூட முனகல்கள்

தெருவெங்கும் இறைவதாய்

எரிச்சல்பட்டாய்

வெடிக்கும் என் ஆர்ப்பரிப்புகள்

உனக்குள்

வெந்நீர்க் கொப்புளங்களையே

உருவாக்கின எப்போதும்

மெல்ல அடங்கிய என் சப்தங்கள்

புதைக்கப்பட்டன உன் வெளியில்"

ஒரு காதலாலோ நட்பாலோ தன்னை தொலைக்கும் உறவின் வலியோ இன்பமோ என்பது சொல்லி மாளாதது. தன்னைத் தொலைத்தல் என்பதைத் தொடர்ந்து நிகழும் விருப்பத்திற்கு அப்பாற்பட்ட கொடுமைகள், அதனாலான வேதனைகள் ஆகியனவற்றை அனுபவித்தும் அதனை இயல்பாக்கிக்கொள்ளும்

ஜீவனின் வெளி இது.


நகர மயமாதல், சந்தேகம், வாழ்வு, சுயம், கலவி, இன்னும் பல தலைப்புகள் மற்றும் சில ஹைக்கூ கவிதைகள் என நிரம்பிக்கிடக்கிறது தொகுப்பு. வாசித்தறிவோம் கவிஞரின் ஓசை புதைந்திருக்கும் கவிதை வெளியை...


வாழ்த்துகள் #கவிஞர்தி_பரமேசுவரி


#யாழ்தண்விகா

No comments:

Post a Comment