Monday, 1 December 2025

காதலின் பின் கதவு - பழநி பாரதி

 


காதலின் பின் கதவு

Palani Bharathi

கவிதைத் தொகுப்பு...


 நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு கவிதைத் தொகுப்பை வாசித்தேன். தலைப்பே ஒரு வசீகரத்திற்குள் அழைத்துச் சென்றது முதல் காரணம். கவிக்கோ அப்துல் ரகுமான் முன் கதவு வழியாக அணிந்துரை அளித்திருக்கிறார். 


காதல் கவிதைகள் தொகுப்பு என்றெண்ணி ஆர்வம் மேலிடப்புகுந்தேன் தொகுப்பிற்குள். அதற்கேற்ப உற்சாகம் தூண்ட முதல் கவிதையும்...

"தண்டவாளத்தில்

தலை சாய்த்துப் பூத்திருக்கும்

ஒற்றைப்பூ

என் காதல்


நீ நடந்து வருகிறாயா

ரயிலில் வருகிறாயா?"

எப்போதோ காதல் படிக்கட்டுகள் என்ற நூலில் படித்த கவிதை. இதயத்தை விட்டு இன்றளவும் மறையாதிருந்த கவிதை . ஒரு மனிதனின் காதல் ஏற்கப்படுமா ஏற்கப்படாதா என்பதை உணர்தல் நிமித்தமாக எழுதப்பட்ட கவிதை. சிறப்பு. தொகுப்பின் உள் செல்கிறேன். 


ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு பரிமாணத்தில் மிளிர்கிறது . மலையேற்றம் கவிதை வர்ணனை அழகு.


"உடைந்த 

வளையல் துண்டுகளையாவது 

கொடுத்துவிட்டுப் 

போ


கலைடாஸ்கோப்பில்

உன்னைப்

பார்த்துக்கொண்டிருப்பேன்"


முதல் கவிதை போலவே இதுவும் காதலில் மூழ்கிக் கிடக்கும் மனதின் கவிதை...


மழைக் குரல் கவிதையில் காதல் மழை.  அவள் இல்லாத நேரத்தில் பொழியும் மழை. அது உண்டுபண்ணும் வலியை ஒப்பிட்ட விதம் அத்தனை அழகு அதே நேரத்தில் வலியும் ...


இன்று

நீ இல்லாமல்

விட்டு விட்டு

விடாமல் பொழியும்

இந்த மழையில்

ஒரு மண் குடிசைவாசியாக

மறுகிக் கொண்டிருக்கிறது

காதல்


அதைக் கடக்கும் அடுத்த பத்தியில்

அரசியல் நுழைக்கிறார் கவிஞர் ... ஆனால் அந்த ரசனை வேறொரு உச்சத்தில் .. 

"வெள்ளப் பிரதேசத்தை

ஹெலிகாப்டரில் பார்வையிடும்

பிரதமர் மாதிரி

கண்ணாடி ஜன்னலுக்குப்

பின்னாலிருந்தாவது

கை நீட்டித் தொடு

இந்த மழையை"

என்கிறார் கவிஞர். ஒரு காட்சியை கண்முன் வர வைத்து ஏங்குதலை நிகழ்த்தும் அற்புதம் இது. 

 


உறைந்த நதி என்னும் கவிதையில்

"எந்த நிழலிலும் 

உன் ஆறுதல் இல்லை

எந்த வாழ்த்திலும்

உன் குரல் இல்லை" என்ற வரிகள் உரைக்கும் தலைப்பிற்கான நியாயத்தை .


நீ இல்லாத போது தலைப்பில் 3 கவிதைகள். 

ஒவ்வொன்றிலும்

ஒவ்வொரு ரசனைக்கான கூறுகள்...

"நீ வராத வெறுமையில்

பூங்காவின் காவலாளிக்கு

ஒரு புன்னகையைக் கூட

திருப்பித் தராமல் 

இன்று நான் வெளியேறியது

எத்தனை உறுத்தலானது"

ஒருமுறை காதலிக்காக பூ வாங்கிச் செல்கிறேன். அவள் வரவியலா சூழல் திடீரென. சந்திக்கும் நட்பு அத்தனையிடமும் மெளனம் மட்டுமே பேச்சாக எனக்கு. கவிதையில் உள்ளது போலென்றால் காவலர் போல் எத்தனை மனங்களுக்கு நான் அந்நியமாக இருந்திருப்பேன் என்ற உறுத்தல் தோன்றுகிறது இப்போது...


இப்படிக் கடக்கும் காதல் கவிதைகள் சட்டென வேறு பாதையில் பயணிக்கத் தொடங்குகிறது.


உலகம் பயணிக்கும் பாதை, பெண் குறித்த கவிதைகள், நடிகைக்கு, நகைக்கு, தாத்தாவுக்கு ஒரு கவிதை என நீள்கிறது.


செடி மகள் என்ற கவிதையில்

"செடியை வளர்ப்பது 

சுலபமாக இருக்கிறது

பூக்களைப்

பத்திரப்படுத்துவதுதான்

எப்படியென்று தெரியவில்லை" ...

வன்புணர்வு குறித்த வலி உயிரெங்கும் பரவுகிறது வரிகள் வாயிலாக ...


இரத்தத்தின் நிறம் பச்சை என்ற கவிதையில்

தாயாக, மனைவியாக, குழந்தையாக என உயிர் உறவுகளை ஒப்பிட்டு மரத்தின் உச்ச குணத்தினை அழகுறக் கூறியுள்ளார். 


ரயிலில் வந்த 3 வது கவிதை.

"எங்கு இறங்குவாள் 

என்று தெரியாது

எதிரில் உட்கார்ந்திருந்தாள்


அவளிடம் கொஞ்சம்

தண்ணீர் கேட்க நினைத்து

கேட்காமலேயே

கண்ணயர்ந்துவிட்டேன்


விழித்தபோது

அவள் இல்லை

இருந்தது

ஒரு தண்ணீர் பாட்டில்"

எத்தனை பரவசம் அளித்திருக்கும் அந்த கணம். தாகம் தோற்றுவிக்கிறது ரயிலில் கிடக்கும் அந்தத் தண்ணீர் பாட்டில் ...


"நான் யோசித்துக் கொண்டிருப்பேன்

தடயங்களற்றுப்

பறக்கும் சுகத்தை" என்கிறார் கவிஞர் ...

தொகுப்பானது உலகில் தடம் பதித்து ஏறக்குறைய 20 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனாலும் சம காலத்திற்கும் பொருந்தும் பொருண்மையால் இது கவிஞர் பழநி பாரதி அவர்களின் தடயம் என இன்னும் பறைசாற்றிக் கொண்டிருப்பதே போதும் கவிதைக்கான வெற்றியெனக் கூற...


வாழ்த்துகள் கவியே...


யாழ் தண்விகா

Saturday, 15 November 2025

நிலா காயுது - பாடல்

 


காமத்தின்போதான பாடல் எப்படி இருக்கவேண்டும் என்று இளையராஜா என்ற மகான் இசை வழியே பல படங்களில் பாடம் எடுத்துள்ளார். அதில் ஒன்றுதான் சகலகலா வல்லவன் என்ற படம். முறையே அப்பாடல்கள்

நிலாக் காயுது நேரம் நல்ல நேரம்...

நேத்து ராத்திரி எம்மா...

இதை உணர்வுப் பூர்வமாக உணர அந்தப் பாடல்களைக் கேளுங்கள். 


இரவின் கூர்மை என்பது காமத்திற்கு எப்படி உகந்ததாக இருக்கும் என்பதை இசையில் இவர்போல உணர்த்தியவர் யாருமில்லை என்றே சொல்லலாம். மலேசியா வாசதேவனின் குரல் ஜானகியின் குரலில் குழைந்து உருகியிருப்பதும் கேட்கக் கிடைத்த அபூர்வம். இன்று இது போல சூழல்கள் படங்களில் இடம்பெறவில்லை என்பது உண்மை. இருந்தாலும் ராஜாவின் காமம் சார்ந்த பாடல்கள் போல அவை இருக்காது என்பதும் உண்மை. மாசி மாசம் ஆளான பொண்ணு இசையை எடுத்தும், நிலாக்காயுது பாடலில் வருகிற இடையிசை மற்றும் குரல் ராகத்தை (தண்ணி கேட்டியே புள்ள... என்பதற்கு முன் வரும்... குரல்களும் இசையும்... முடிவில் ச்சீய்...) எடுத்தும், கட்டிப்பிடி கட்டிப் பிடிடா பாடலுக்குப் பயன்படுத்தி  குஷி படத்தில் தேனிசைத் தென்றல் தேவா வெற்றி கண்டிருப்பார். இன்றும் என்றும் நிலவைக் குறித்து பல பாடல்கள் வந்து போனாலும் இடையில்/குறுக்கே வந்து மென் புன்னகையை வன்மமாகச் சிரித்து வைத்துப் போகும் இந்தப் பாடல். ஆம் இதுவும் நிலாப் பாடல் தான். காமத் தனிமை.

https://youtu.be/sxh8JP4obiU


❣️

Sunday, 9 November 2025

சரக்கொன்றை நிழற்சாலை - ஷாஜிலா பர்வீன் யாகூப்



 சரக்கொன்றை நிழற்சாலை

ஹைக்கூ கவிதைத் தொகுப்பு


ஷாஜிலா பர்வீன் யாகூப்

Mohamad Sarjila Yakoop 


படைப்பு பதிப்பகம்


விலை ரூ: 100


பக்கங்கள் : 112


ஹைக்கூ ஒளியில் வாழ்வின் நிழல்...


மூன்று வரிகளில் எடுத்துக்கொண்ட கருவை கவிதையாக்கும் வித்தகம் ஹைக்கூ... மிஷ்கின் மொழிபெயர்த்த ஹைக்கூ ஒன்று. "நத்தை போன

பாதையில்

வெயிலடித்தது".

மிக இயல்பாக வாசித்துக் கடக்கும் ஒரு கவிதை. ஆனால் உள்ளே பொதிந்திருக்கும் வரலாற்றைத் தோண்டிப் பார்க்க மெனக்கெட வைக்கும் சூட்சுமம் கவிதையில் இருக்கிறது. அவ்வாறு வாசிக்க வைப்பதுதான் ஹைக்கூவின் சாமர்த்தியம் மற்றும் சாகசம். தோழர் ஷர்ஜிலா அவர்களின் ஹைக்கூக்கள் பல அவ்வாறான தேடலை உண்டுபண்ணும் கவிதைகள். வாசிக்க வாசிக்க இயற்கையின் உள்ளார்ந்த அதிசயங்களில் நம்மை மூழ்கடிக்கிறார் தோழர்.


இயற்கையை அழித்தல் என்பது வெறும் அழித்தல் என்பதோடு முடிந்து விடுகிறதா... அது சூழலை அழித்தல், உயிர்களை அழித்தல், உயிர்களுக்கிடையேயான சங்கிலியை உடைத்தல். அதனை மனிதனுக்குக் கடத்தும் வரிகள் இவை.

தன்கூட்டைப் பின்தொடரும் பறவை

ஜேசிபியில் செல்கிறது

வேருடன் மரம்.

ஏனோ நம் குழந்தையை யாரோ பறித்துப் போக நாம் பின்னால் ஓடுவது போலான வலி.


இயற்கைப் பேரழிவுகள் பெரும்பாலானவை மனிதன் தனக்குத்தானே உண்டாக்கிக் கொண்டவையோ என்றெண்ணும் வண்ணம் அவ்வப்போது வெள்ளம், புயல் உள்ளிட்ட பாதிப்புகளைக் காணும்போது ஏற்படும். சென்னையில் முழுதும் நிடம்பியபின் நள்ளிரவில் திறக்கப்பட்ட நீர்த்தேக்கம் உண்டாக்கிய பாதிப்புகள் சொல்லி மாளாது. அலையாத்திக்காடுகளை கடற்கரை ஓரங்களில் அமைக்காததால் ஊருக்குள் சுனாமி பாய்ந்து கொத்துக்கொத்தாக கடலுக்குள் இழுத்துச் சென்ற உயிர்கள் பல லட்சங்கள். இது போன்ற சம்பவங்கள் நடந்து முடிந்தபின் காணும் காட்சிகள் போர் முடிவுற்றபிறகு காணும் ஓலங்கள் போலவிருக்கும். அது போன்ற ஒரு காட்சி.

வெள்ளம் வடிந்த வீதி

வீட்டுக் கூரையின் மேல்

தரைதட்டி நிற்கும் படகு.


இனி எப்போது பெங்குவின்களைப் பார்த்தாலும் இக்கவிதையே கண்முன் விரியும். ஆச்சர்யப்பட வைத்த ஒப்பீடு.

கருப்பு மேலங்கி

கழட்டாத வழக்கறிஞர்களா

கடற்கரை பெங்குவின்கள்...!


பால்யங்களைக் கண்முன் நிறுத்தும் பல ஹைக்கூக்கள் தொகுப்பெங்கும். அதற்குள் நம்மைப் புகுத்தி விளையாட வைத்த ஒரு ஹைக்கூ...

மணல்வீடு கட்டும் அண்ணனுக்கு

காத்திருக்கும்

பாப்பாவின் சிரட்டைமண் இட்டிலி... 

சிறுவயது அன்பின் நேர்த்தி எவ்வளவு சுவாரஸ்யமானது... அருமை.


குழந்தைகள் பள்ளிக்குச் சென்றபின் வீடு அனுபவிக்கும் கொடுமை என்பது பேரவலம் தான். அப்படி வீடு என்ன கொடுமை அனுபவித்து விடப் போகிறது... தோழர் சொல்கிறார்.

பள்ளி சென்ற குழந்தைகள்

தனித்துக் கேட்கும்

நகரும் கடிகார முட்கள்.

வீடு யாருக்கு? கடிகார ஒலிகள் யாருக்கு? என்ற கேள்விகள் உதிக்கும் அதே நேரத்தில் பள்ளியிலிருந்து குழந்தைகள் திரும்பும் நேரத்தைக் கணக்கிட்டு காத்திருக்கிறதோ கடிகாரம் என ஆறுதல் கொள்கிறது மனம்.


நத்தையாகிறேன்

நிழலெல்லாம் பூக்களுடன்

சரக்கொன்றை நிழற்சாலை...

பூ வீதி எதுவென்றாலும் அது உண்டாக்கும் சலனம் மனித மனத்தை ஒரு பாடுபடுத்த் வேண்டும். உதிர்ந்த பூ என்று அவ்வளவு வேகமாக மிதித்து விடுகிறதா நமது காலடிகள்? அவற்றை மிதிப்பதால் என்ன பாதகம் இந்த மண்ணுக்கு நேர்ந்துவிடப் போகிறது... ஆயினும் நாம் யோசிப்பதால் தான் மனிதம் ஒவ்வொரு உயிருக்குள்ளும் தன் வேர்களை ஆழப் பாய்ச்சுகிறது. அதுவே இந்த பூமி இன்னும் வாழ காரணமாக இருக்கிறது. உதிர்ந்துகிடக்கும் சரக்கொன்றைப் பூக்கள்... கடக்க நத்தையாகும் மனிதம்... நிழலெல்லாம் பூக்கள்... நத்தை சுரக்கும் திரவம்... இதுபோன்ற காரணிகளுக்குள் ஒளிந்து கிடக்கும் ஏதோவொன்று உண்டாக்கும் கிளர்ச்சி கவிதையின் சிறப்பை மிளிரச் செய்கிறது. 


பதிப்பாளர் Mohamed Ali Jinna தோழரின் பதிப்புரை, Surulipatti Si Vaji அண்ணன் அவர்களின் அணிந்துரை, இந்து தமிழ் திசை மு.முருகேஷ் தோழரின் தொகுப்பு குறித்த  ஹைக்கூப் பார்வை ஆரணி இரா. தயாளன் தோழர் கூறும் தறி வீட்டுப் பூனைகள், ஷர்ஜிலா தோழரின் என்னுரை இவையே ஒரு ஹைக்கூ வகுப்பைப் பார்த்த பெரும் திருப்தி அளிக்கிறது.


நிறைய கவிதைகள். நிறைவான பார்வை. 


வாசிப்போம், ஹைக்கூ மிளிர.


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️

பெறுநர், தேவதை, வானவில் வீதி - 143 #துளசி வேந்தன்


பெறுநர், தேவதை, வானவில் வீதி – 143

துளசி வேந்தன் 

படைப்பு பதிப்பகம்

விலை : 100

பக்கங்கள் : 116


காதலாகிப் போன கவிஞனின் கவிதைகள்...


நாடி, நரம்பு, எலும்பு, தசை அத்தனையிலும் காதலால் ஆன மனிதரால் தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியும் என்றெண்ணும் வகைக் கவிதைகள். தபூ சங்கரை வாசிக்கும்போது உண்டான வியப்பையும் கடந்து நிற்க வைத்துவிட்டன கவிதைகள். பதிப்பாளரும் கவிஞருமான Mohamed Ali Jinna தோழர் அவர்கள் தன்னுடைய பதிப்புரையில் ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராகப் பணி புரிவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனக்கென்னமோ காதல் தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறாரோ என்று தோன்றுகிறது. கவிஞர், தன்னுடைய நூலை மனைவிகளையும் காதலிகளையும் தேவதைகளாய் கொண்டாடித் தீர்க்கும் மொத்த ஆடவர் உலகத்திற்கும் சமர்ப்பணம் செய்துள்ளார். அது, மனைவிகளையும் காதலிகளையும் “தேவைதைகளாய்” கொண்டாடித் தீர்க்கும் மொத்த ஆடவர் உலகத்திற்கும் சமர்ப்பணம் என்று உள்ளது. பிழையாக இதைக் கருத முடியவில்லை. மனைவியோ காதலியோ இல்லாமல் அது ஒரு வாழ்வா... காதலுக்கும் காதலிக்கவும் அவர்கள் இல்லாமல் எப்படி... இவை போன்ற கவிதைகளை உடனிருந்து ரசிக்கக் கிடைத்த மனைவிகள், காதலிகள் கொடுத்து வைத்தவர்கள். மனித வாழ்வு சுபிட்சம் பெறத் “தேவை” தேவதைகள்...!


தபூவின் கவிதை ஒன்று...

“பல நூற்றாண்டுகள் ஆகுமாமே

ஒரு வைரம் உருவாக

நீ மட்டும் எப்படி

பத்தே மாதத்தில் உருவானாய்” தேவதைகளின் தேவதை விகடனில் வெளிவந்த காலத்தில் படித்தவுடன் சிலிர்த்த காலம் அது. கவிஞர் துளசி வேந்தன் தொகுப்பின் முதல் கவிதையாக கீழ்க்கண்ட கவிதையை வைத்துள்ளார்.

“நீ சிசேரியன்

செய்துதான் பிறந்தாயாமே?

என்ன செய்வது,


வெட்டித்தானே 

எடுக்கவேண்டும் வைரத்தை!” மிரண்டுட்டேன் கவிஞரே. சிசேரியனை இப்படியெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா... காதலி கொடுத்து வைத்தவர். (காதலியின் அம்மா ஓரமாக நின்று தனக்கு செய்யப்பட்ட சிசேரியனையும் சிசேரியனுக்கான காரணத்தையும் மருமகன் எழுதிய கவிதையை வைத்து (மகளுக்காக) ரசித்துக்கொள்ளவும்!)


“உன் அரை மணி நேர அலங்காரம்

நான் அரை நொடியில் 

கலைக்கத்தானே...” 

என்கிறது ஒரு கவிதை.

கொஞ்சம் பொறுமையும் கொஞ்சும் கால அவகாச நீட்டிப்பும் காதல் கேட்கிறது கவிஞரே. செவி மடுக்கவும்.


காவல் நிலையமா? காதல் நிலையமா? குழப்பம் தந்துவிட்டது ஒரு கவிதை. ஆனால் விழும் அடி ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று உயிரைக் கேட்க வைக்கிறது. 

“விசாரணை என்று

காதல் நிலையம் அழைத்துவந்து


வெட்கத்தால் அடிக்கிறாய் நீ!”

வலிக்குமா என்ன வெட்க அடிகள்...!


மச்சம் என்றால் என்ன? என்பதற்கு விளக்கம் தருகிறது ஒரு கவிதை. மச்சமே விழித்துப் பார்க்கும் கணம் அது.

“உன் அழகில்

பிரம்மன் மெய்மறந்த 

இடமெல்லாம்,


“மச்சங்கள்”.


தொகுப்பெங்கும் துணுக்குகள் போலிருக்கும் ஒவ்வொன்றும் கூட மின்மினிகளாய் கவிதை வாசம் பரப்புகிறது.

“ஆயுள் சந்தா கட்டி

படிக்கவேண்டிய இதழ்

உன்னுடையது”

“அடிக்கும் பறை நானுனக்கு

அதிர்வுகள் நீயெனக்கு”

“குழந்தை போல

பேசுமுனக்கு

முப்பத்தி இரண்டும் 

பால் பற்கள்”

“உன் நிழலுக்கு

நெத்திச் சுட்டியாய்,

உதிர்ந்த பூவொன்று...” (22 & 28 இரு பக்கங்களில் உள்ளது)


மதங்கள் நிறைய இருந்தாலும் மும்மதம் மட்டுமே பிரதானமாக சொல்லக் கேட்டிருக்கிறோம். தொகுப்பில் மூன்று மதம் சார்ந்த கவிதைகள் சொல்லி, காதலின் மதச் சார்பின்மையைக் காட்டுகிறார் கவிஞர். காணும் காட்சி யாவும் காதல் என்றால் மதமும் காதலாதல் சரிதான்.

“அய்யர் உன் தலையில்

சடாரி வைக்கும்போது

அனிச்சையாய் குனிகிறார்

பெருமாள்”

(சடாரி என்றால் பெருமாளின் திருப்பாதமாகப் பாவித்து தலையில் வைக்கப்படும் கிரீடமாம். கூகுள் சொன்ன தகவல். இன்னைக்குத்தான் தெரியும்)

“நீ சொல்லும்

ஸ்தோத்திரங்கள்


சிலுவையில் அறையுண்ட

இயேசுவுக்கு ஒத்தடங்கள்”


உசைன் பாய்

சாம்பிராணி தூவி

தூபமிட்டுப் போவது போலவே

நீயுன் வெட்கத்தைத் தூவி

காதலிட்டுப் போகிறாய்...”

சநாதனத்திற்கு எதிராக, எல்லா மதத்தையும் சமமாகப் பாவித்து காதலிட்ட கவிதைகள் படைத்திட்ட கவிஞருக்கு வாழ்த்துகள்...


ஒன்றிரண்டு கவிதைகள் ஒரே சாயலில் இருக்கிறது கவிஞரே.

“புயலுக்குப் பெயர் சூட்டும்

வழக்கத்தைக் கண்டுபிடித்தது

உன் அப்பன் தான்...”

“நான் மட்டும் 

வானிலை ஆய்வுத்துறையில்

இருந்திருந்தால்

உன் செல்லப் பெயர்களைத்தான்

புயல்களுக்குச் சூட்டிக் கொண்டிருப்பேன்...”

(போலவே 28 ம் பக்க பிள்ளையார் கவிதையும் 110 ம் பக்க கண்ணாடிக் கவிதையும்...) கூறியது கூறல் ஒரு குற்றம் என்பார்கள். காதலில், காதல் கவிதைகளில் குற்றம் காண்பது தவறு என்றாலும் சொல்லி வைக்கிறேன்.


அறிவியலைக் காட்சிப்படுத்துவது போல பல கவிதைகள். கற்பனை எண்ணத்தை ஓடவிட்டு காதலை ரசிக்க வைக்கிறது வரிகள்.

“இரவும் 

மழையும்

சன்னலும்

மின்னலும்

உன் முகமும்

ஒரே நேர்கோட்டில்

சந்திக்கிற நிகழ்வுதான்

எனக்குக் காதல் கிரகணம்”

எப்படியெல்லாம் மனுஷன் யோசிக்கிறார் என யோசிக்க வைக்கிறார் கவிஞர். இப்படித்தான் போகிற போக்கில் பெரும் ஏக்கமொன்றையும் கவிதையாக்கி வைத்திருக்கிறார் கவிஞர்.

கனவில் கூட 

கதவடைத்துக்கொண்டுதான்,

ஆடை மாற்றுகிறாய்

நீ...”


காதலில் நனைந்து, மூழ்கி, திளைத்து, அதற்குள்ளேயே மூர்ச்சையாக்குவதுபோல கவிதைகள். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பது போல காண்பவை யாவும் காதலாகவே தெரிவது கவிஞருக்கு கிடைத்த வரம்தான். அட, ஆமால்ல… அடடா... ப்ச் என்னா மனுஷன்யா... கவிஞன்யா... என்று வாசிக்கும்போது நம்மை உச்சரிக்க வைத்த சொற்கள் அனைத்தும் கவிஞருக்கான மகுடங்கள். அவை எப்போதும் கவிஞருக்குக் கிடைக்கும். கவிஞரின் பார்வைக்கு பேரன்பு.

“சிவாஜிகணேசன் நடிக்குமளவு

இல்லையென்றாலும்

ஓரளவு காதலிக்கத் தெரியும் உன்னை” என்கிறார் கவிஞர். ஓரளவில்லை. மிகச் சிறப்பாகவே காதலிக்கிறீர்கள். இலக்கிய உலகிலும், சமூகத்திலும் காதல் பரவ, காதலைக் கொண்டாட கவிதைகள் படைத்துக் கொண்டேயிருங்கள். அட்டைப்படம் சிறப்பு. வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️

Thursday, 23 October 2025

நீ துளையிட்ட எனது புல்லாங்குழல் - ஜின்னா அஸ்மி

 

நீ துளையிட்ட எனது புல்லாங்குழல்

ஜின்னா அஸ்மி

Mohamed Ali Jinna 

படைப்பு பதிப்பகம்

பக்கங்கள் : 114

விலை : 120


கண்ணீரிலும் காதலிலும் கரைந்த கவிதைகள்


 காதலாகக் கசிந்துருகுபவரின் கஸல் கவிதைகள், நீ துளையிட்ட எனது புல்லாங்குழல். இசையாக ராகமாக கவிதையாக கண்ணீராக கடவுளாக வலியாக காதலாக ஒவ்வொரு கவிதையும் தன் முகம் காட்டுகிறது. தொடர்ந்து காதலை தான் படைப்பாக்குவதோடு, காதலை கவிதையாக்கும் பல கவிஞர்களையும் ஊக்குவிக்கும் ஜின்னா அஸ்மி தோழரின் கவிதைகளை கடவுள் மறந்த கடவுச் சொல் தொகுப்பிலேயே ருசித்திருக்கிறேன். இத்தொகுப்பு அதன் தொடர்ச்சி நிலை.


 என்னுரையில், காதலில் வெற்றி என்பது தோல்வி. தோல்வி என்பது வெற்றி என்றும் நான் கஸலை நினைக்கிறேன் கஸலாகிறேன் என்கிறார் கவிஞர். கவிதைகளில் அடிநாதமாக இவ்வரிகளே அமைந்திருக்கிறது. கவிக்கோ எழுதிய மொழிபெயர்ப்புக் கவிதை ஒன்று. எப்போதும் மனதிற்குள் இருந்து உருத்திக்கொண்டே இருக்கும் வரிகள் அவை. 

“நீயும் நானும் சேரக்கூடாது என்றுதான்

ஒவ்வொரு முறையும் வேண்டுகிறேன்.

ஏனென்றால் என் பிரார்த்தனைகள்

ஒருபோதும் நிறைவேறுவதில்லை”

எதுவும் நடக்காத விரக்தியிலும் இணை உயிர் தேடும் ஒரு காதல் மனம் இப்படியெல்லாம் பாடுமா என்று வியக்க வைத்த வரிகள் இவை. போலவே பல கவிதைகள் இன்மையைப் போற்றி ஞானம் தேடும் தன்மையுடையதாக தொகுப்பில் காணக் கிடைக்கின்றன. மெல்லப் பயணித்து வேகம் கூடிச் செல்லும் திரைப்படம் போல கவிதைகளும் தன்னுடைய வலியை கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி வேகம் கூட்டுகின்றன தொகுப்பின் இறுதி செல்லச் செல்ல.


“வாசலுக்கும் 

வருகைக்கும்

எந்தச் சம்மந்தமுமில்லை

காதலென்பது காற்றைப் போல”

எங்கும் காதல் வியாபித்திருக்கும். அது இதயத்தின் உள்ளே வர கதவு திறந்திருக்க வேண்டிய அவசியமில்லை. காதல் இது போன்ற சூழல் இல்லாமலே காற்றைப்போல எங்கும் நிறைந்திருக்கும். காதல் என்பது அன்பைச் சூடிக்கொண்டிருக்கும் அனைவருக்குள்ளும் நிறைந்திருக்கும் இறை. அதை வணங்கினால் போதாதா இறை வரம் பெற என்றுணர்த்தும் வரிகள் இவை.


“இந்தக் கணம் 

ஒரு நிச்சயமற்ற பொழுதாகிவிட

காதல் ஒன்று போதும்”

காதல், ஒரு மாயம் நிகழ்த்தும் கடவுள். அது எப்பொழுதும் ஒரே போன்றதொரு சுகம் தராதெனினும் அது தரும் சுகமனைத்தும் வலியாக இருந்தாலும் துயராகயிருந்தாலும் சுகமே. மயக்கம் தரும். விழிப்பு தரும். விஷம் தரும். உலகை மறக்க வைக்கும். இதோ இப்போது வாழும் வாழ்வை நிச்ச்சயமற்ற ஒன்றாக்க காதல் போதும் என்கிறார் கவிஞர். நிச்சயமற்ற ஒன்று என்பதில் எதை நிரப்பிக்கொள்வது என்பது அவரவர் காதல் சூழல் பொறுத்தது.


 காதலை பல நேரங்களில் ஒரு மிகப்பெரும் வக்கிரமமாக பார்த்திருக்கிறேன். அது மன்றாடுதலை ஏளனம் செய்வதை உணர்ந்திருக்கிறேன். தன்னிலை தொலைத்து சரணாகதி அடைதலை தூக்கி எறிவதை அனுபவித்திருக்கிறேன். ஆனாலும் காதலைத் தொடர்ந்திருக்கிறேன் என்பது எதனை நோக்கிய பயணம்? அது மனதை வாழவைத்தல். கண்ணீரை வாழ வைத்தல். காதலை வாழவைத்தல். இந்தக் கவிதையில் கவிஞர், கண்ணீருக்கு என்ன பெயர் சூட்டுகிறார் பாருங்கள்...

“நான் 

கண்ணீரைப் பிரசவிக்கிறேன்

நீ 

“காதல்” எனப் பெயர் சூட்டுகிறாய்”


 அனுபவங்களே கவிதைகளாகின்றன பலருக்கு. அது பார்ப்பதாக, கேட்பதாக, அனுபவித்தலாக என எப்படியும் அமையலாம். உலகின் ஏதோ ஒரு மூலையில் உருவாக்கப்படும் மீம்ஸ் பார்த்து நாம் சிரிப்பது போல, அட ஆமாப்பா என்பது போல. உணர்வு என்பது உலகப் பொது. அதிலும் காதல் தரும் உணர்வுகள் அவ்வளவு இயல்பாக காதலர்களுக்குப் பொருந்திப் போகும். காதலில் ஓர் ஆணின் சொல்லோ, பெண்ணின் சொல்லோ உண்டாக்கும் வலி இரு தரப்பிற்கும் பொதுவானதாக இருக்கும். அன்பின் கண்களுக்கு அதன் வலி புரியும். வெறுமனே வேடிக்கை பார்க்கும் கண்களுக்கு ஒன்றும் புரியாது. சிறுபிள்ளைத்தனமாக இருக்கும். கத்தியால் குத்தினால் மட்டும்தான் காயமா? தழும்பு இருந்தால்தான் காயமா? இதோ கவிஞர் கூறுகிறார்.

“உன் காதல் வார்த்தைகள்

எப்போதும் காயங்களாக இருந்ததில்லை

ஆனால் வலி நிறைந்தவை”


 “பெண்மனசு ஆழமென்று ஆம்பளைக்குத் தெரியும் அது பொம்பளைக்கும் தெரியும் அந்த ஆழத்திலே என்ன உண்டு யாருக்குத்தான் தெரியும்...” என்றொரு பாடல் உண்டு. பெண் ஒரு ஆணை என்ன செய்கிறாள் எப்படி வழி நடத்துகிறாள் எவ்வாறான அன்பை வழங்குகிறாள் வழங்கத் தலைப்படுகிறாள் என்பதை எப்போதும் உணர முடியாது. சரணாகதி என்ற ஒன்றை செய்தபிறகும் அவளின் விருப்பம் சார்ந்த விசயங்களைத் தான் அரங்கேற்றுவாள். அது நாம் விரும்பியதாக இருக்கலாம். துயரானதாக இருக்கலாம். நாம் நிர்ணயித்து வைத்திருந்த எல்லைக்கும் மேலாக பறந்து விரிந்திருக்கலாம். எல்லாம் உணரும்போது பெண் என்பவளை, காதல் என்பதை வைத்த கண் மாறாது அதிசயிக்கும் சூழல் வாய்க்கும். அந்தச் சூழல் மகிழ்வின் உச்சமாக கிடைக்கப்பெறும் காதலிணை கொடுத்து வைத்தவர்கள் தான்.

“உனக்குள்ளே நான் மிதந்துகொண்டிருந்தாலும்

உன் ஆழம் பற்றி அறியமுடியாத

ஒரு தக்கையைப் போலவே வைத்திருக்கிறாய்

என்னை...”


 கண்ணீர் வெளிச்சம் என்பது எவ்வளவு ஆற்றாமைகள் நிறைந்தது. அதுதான் நான் உனக்கு அளிக்கும் பரிசு. அதில் நீ என்னைக் காண்பாய். அது உன்னை மேலும் ஒளியாய் மாற்றும். அதற்கு உனதருகில் வாழும் வரம் கிட்டிவிடும். கண்ணீர் தனது பாவத்தை, நீ பெற்றுக்கொண்டதால் கழுவிக்கொள்ளும். கண்ணீர் வெறும் நீர்மப் பொருள் அல்ல. அது காதல். விருப்பம் இல்லை என்றால் சொல்லிவிடு என்று முடியவேண்டிய கவிதையை “வெளிச்சம் வேண்டாமெனில் ஊதி அணைத்துவிடு” என்கிறார் கவிஞர். “அவள் பெறாமல் போவது வெளிச்சம். எனக்கு வாழ்வு” என்பதான பொருளில் காதல் வெளிச்சம்!

“என் அழுகையை ஏற்றுக்கொள்

அது உனது சன்னதியில் என் கண்கள் ஏற்றும் தீபம்

வெளிச்சம் வேண்டாமெனில் 

ஊதி அணைத்துவிடு


 காதலிடும் கட்டளைகள் பல சமயம் அபத்தமாக இருக்கும். ஆனாலும் அபத்தத்தையும் ஏற்கும் வேண்டுதலைக் கைக்கொண்டிருக்கும் மனம் என்ன செய்யும்? ஏற்று தன்னை வருத்தியபடி மீண்டும் துளிர்க்கும் காதலுக்காக காத்திருக்கும். இது காதலிடும் சாபம். காதல் தந்த சாபம் என்பதால் கைகளில் பெருமையோடு ஏந்திக்கொள்ளும் நம்முயிர். 

“இது என்ன சாபம்

வாசம் வேண்டாம் என்றால்தான்

பூவுக்கான வரம் கொடுப்பேன் என்பது”


“உன் கூண்டுக்காகவே 

உருவாக்கப்பட்ட பறவை நான்

ஏன் வானம் வரைந்து வேடிக்கை காட்டுகிறாய்” (55)

“என் இறகுகளைக் கொய்து

கூடு கட்டுகிறேன்

இப்பொழுது 

வானத்தைக் காட்டி விளையாடுகிறாய்” (22)


“நான் விசமாக இருந்தாலென்ன...

நீ மகுடி ஊதியதும்

நான் ஆடத்தானே செய்கிறேன்

ஒரு பாம்பைப் போல” (31)

“நான் இசையைக் கேட்டேன்

நீ மகுடி ஊதுகிறாய்

நான் இப்போது 

எதற்காக ஆடுகிறேன் எனத் தெரியவில்லை” (71)

மேற்சொன்ன ஈரிரு கவிதைகளும் பொருண்மையில் வேறுபட்டிருப்பினும் சொல்லாடல் ஒன்றாகவே தெரிவதால் படித்த கவிதையைப் படிப்பது போலொரு தோற்றத்தைத் தருகிறது. இணையில் ஒன்றை தொகுப்பில் இல்லாமல் செய்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அவற்றில் என்மனதிற்குப் பிடித்தவையாக கீழ்க்கண்டவற்றைச் சொல்லலாம்.

“என் இறகுகளைக் கொய்து

கூடு கட்டுகிறேன்

இப்பொழுது 

வானத்தைக் காட்டி விளையாடுகிறாய்” 

“நான் விசமாக இருந்தாலென்ன...

நீ மகுடி ஊதியதும்

நான் ஆடத்தானே செய்கிறேன்

ஒரு பாம்பைப் போல”

தொகுப்பெங்கும் மைய இழையாகப் பரவிக்கிடக்கும் காதலின் வலி சொல்லும் அடர்த்தி இக்கவிதைகளிலிருக்கிறது.


தொகுப்பின் தலைப்பையொட்டிய இக்கவிதை,

“வெட்டு 

துளையிடு

மூங்கிலாகப் பிறந்த என்னை

உன் உதட்டருகில் வைத்து

ஒருமுறையாவது இசைத்துவிடு”

இன்முறைக்குத் தூபமிடும் வன்முறைக் கவிதை. ஆமாம், ஒருமுறையாவது உன் உதட்டருகில் வைத்து இசைத்துவிடு என்று கெஞ்சுகிறது. மூங்கில் மரம் இசையாகவேண்டும். உன் உதடுகள் வழியாக காற்று மூங்கிலில் ஊடுருவி இசையை காதல் உருவாக்கவேண்டும். நீ துளையிட்ட எனது புல்லாங்குழல் என்பது அலாதி சுகமல்லவா!


நிறைவாக...

“உன் சாயலில்தான்

காதலும் மரணமும் இருக்கிறது

உன்னைத் தேடி வரத்தானே செய்வேன்”

கவிஞரின் கவிதைகளை மீண்டும் மீண்டும் வாசிக்கத் தேடி வருவேன். அந்தக் காதல் மனம் தரும் கவிதையில் நான் காதலைக் காண்கிறேன். கடவுளைக் காண்கிறேன். என்னைக் காண்கிறேன்.


கஸல் வழியில் காதல் வேள்வி...

வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️

Wednesday, 22 October 2025

கடவுளைத் தோற்றுவித்தவன் - யாழ் தண்விகா


 

சிறார் கதை 2


கடவுளைத் தோற்றுவித்தவன்


யாழ் தண்விகா 


 பள்ளிக்கூடத்திலிருந்து வந்தும் வராததுமாக பையைத் தூக்கி எறிந்துவிட்டு “அம்மா உனக்கு எதுக்கும்மா நாகம்மான்னு பேரு வச்சாங்க” என்றான் நவீன். “ஏன்டாப்பா இந்தப் பேருக்கு என்ன குறைச்சல்? நாகம்மா மகனுக்கெல்லாம் பள்ளிக்கூடத்தில் இடமில்லைன்னு உங்க பள்ளிக்கூடத்துல சொல்லிட்டாங்களா” என்றாள் நாகம்மா. 


 “கிண்டல் பண்ணாதம்மா. என்னோட வகுப்புல படிக்குற கண்ணன், உங்கம்மா பேரு நாகம்மா தான. நாகப்பாம்பு மாதிரி படமெடுத்து ஆடுமான்னு கேக்குறான். எனக்குக் கோவம் கோவமா வருது. ஒரு நா இல்லைன்னாலும் ஒருநா என்கிட்ட செமக்க அடி வாங்கப் போறையான்” நவீன் கோவமாகப் பேசினான். 


 “நாகம்மாங்குறது சாமிப் பேருன்னு அவங்கிட்ட சொல்லவேண்டியது தானடா. இல்லன்னா சாருகிட்ட சொல்லவேண்டியது தானடா. சாரு கண்டிச்சு வப்பாருல்ல. இவ்வளவு கோவம் ஆகாதுடா நவீன்” அவனைச் சாந்தப்படுத்தும் விதமாக நாகம்மா பேசினாள்.


 “சரிம்மா. நாளைக்கு நான் சார்கிட்ட சொல்றேன் அவனை. அதுக்கப்புறமும் ஏதாவது சொன்னான்னா அவனுக்கு இருக்கு” என்ற நவீனை முறைத்துப் பார்த்த நாகம்மா சட்டென யோசனை வந்தவளாக சிரித்துக்கொண்டே “ சரிடா. எம்பேருக்கே அவன் கிண்டல் பண்ணுனதுக்கு இவ்வளவு கோவப்படுறயே. ஒன் தாத்தா பாட்டி பேரு உனக்குத் தெரியும்ல. காத்தவராயன். இருளாயி. இதெல்லாம் அவனுக்குத் தெரிஞ்சா இன்னும் கிண்டல் பண்ணுவான்ல. அப்ப என்னடா பண்ணுவ” என எதிர்க் கேள்வியைக் கேட்டாள். “அது தெரிஞ்சாத்தான. அப்படியே தெரிஞ்சாலும் அதையும் சாமிப்பேருன்னு சொல்லி சமாளிச்சுடுவேன்” என்ற அவனை “என்னது சமாளிச்சிடுவியா? உண்மையிலேயே அது சாமிப் பேர் தான்டா” என்ற நாகம்மாளை நிமிர்ந்து பார்த்து “என்னம்மா சொல்ற? நெசமாவா?” என்றான் நவீன் ஆச்சரியத்துடன்.


 “ஆமா. இதெல்லாம் சாமிப் பேர் தான். உன் பாட்டி பேர் இருளாயி. அந்தக் காலத்துல ஆதி மனுசன் இருட்டைப் பார்த்து மிகவும் பயப்படுவான். நெருப்பைக் கண்டுபிடிக்குறதுக்கு முன்னரும் பின்னரும் இருட்டின் மேலிருந்த பயம் அவனுக்குப் போகவே இல்லை. இரவு நேரங்களில் எதையாவது பார்த்து பயந்து அதிர்ச்சியில் இறந்து போவது அடிக்கடி நடந்தது. அவங்களைப் பேய் அடிச்சு செத்ததாக நெனச்சாங்க. அதனால இதையெல்லாம் கோரக் கடவுள்களாக நெனச்சு அதைத் திருப்திப்படுத்த தம்மோட குழந்தைகளுக்கு கருப்பன், கருப்பாயி, இருளன், இருளாயின்னு பேர் வச்சாங்க. அப்படி வந்த பேர் தான் இருளாயி. புரியுதாடா?” என்றாள் நாகம்மா.


 “புரியுதும்மா. அப்ப தாத்தாவுக்கு எதுக்கு காத்தவராயன்னு பேரு?” என்று கேட்டான் நவீன். “ஆதி காலத்தில் இந்த மண்ணு உழுதுபோடாம அப்படியே கிடந்துச்சு. பெரும் சூறாவளிக் காத்து அப்பப்போ அடிக்கும். அந்தச் சூறாவளி மேல் மண்ணை அள்ளிப் பறக்கும்போது அதிலிருக்க பாஸ்பரஸ் காத்தோட சேர்ந்து தீப்பிடிக்கும். அதைப் பார்த்த ஆதிமனுசன் அதை கொள்ளிவாய்ப் பேய் என நெனச்சான். அந்தப் பயத்திலிருந்து விடுபட காற்றை வழிபட ஆரம்பிச்சான். அப்படி காற்றைத் திருப்திப் படுத்த உண்டான பேர் தான் உன் தாத்தா பேரு, காத்தாயி, காத்தப்பன், காத்தவீரி, காத்துக்கருப்பு இப்படிப் பேரெல்லாம்” என்ற நாகம்மாவை வச்ச கண் மாறாமப் பார்த்துக்கொண்டிருந்தான் நவீன். 


 “எவ்ளோ விசயம் தெரிஞ்சு வச்சிருக்கம்மா. சூப்பர்ம்மா. அப்படியே உன் பேருக்கும் ஒரு விளக்கத்தைச் சொல்லிடும்மா. யார் கேட்டாலும் இனி நல்லா பதில் சொல்லிக்கிறேன்” என்றான் நவீன். “பாம்பைக் கண்டால் படையே நடுங்கும்” என்ற பழமொழியைக் கேட்டருக்கிறயா?” என்றாள் நாகம்மா. “ம்‌ம்‌ம் கேட்ருக்கேன்” என்றான் நவீன். “ஆதி மனுசன் நல்லா பலசாலியா இருந்தான். வேட்டைக்குப் போற வழில ஏதாவது பாம்பு கடிச்சாக்கூட அதுக்குப் பசிக்கும்போல. அதான் கடிக்குதுன்னு நெனச்சிட்டே நடந்து போவான். கொஞ்ச தூரம் போன பின்னாடி விஷம் தலைக்கேறி உயிர் போயிரும் கடிச்சவனுக்கு. கூடப் போற மத்த ஆளுங்க எல்லாம் அவன் தூங்குறான்னு நெனச்சு விட்டுட்டுப் போயிடுவாங்க. கொஞ்சநா கழிச்சு அந்த உடம்பு கழுகு கொத்தி புழு ஏறி கெட்ட வாடை அடிக்கும். அந்தச் சமயத்திலதான் பொதைக்குற வழக்கமே வந்திருக்கும்னு சொல்றாங்க. சரி. விசயத்துக்கு வாரேன். பாம்புக்குப் பிடிச்ச உணவு கறையான் தான். கறையான் புத்துக்குள்ள போயி கறையானை நல்லாத் தின்னுட்டு, புத்தை விட்டு வெளில வர நினைக்குறப்ப பாம்புக்கு வயிறு முழுக்க இரை இருக்குற தன்னோட உடம்பைத் தூக்கிட்டு வர முடியாம தத்தளிக்கும். அப்போ படமெடுத்து ஆடும். அதைப் பார்த்து பயந்த ஆதி மனுசன் புத்துக்கு முன்னால இறைச்சி, பால் இதெல்லாம் வச்சு “ஏய் பாம்பு, இதெல்லாம் உனக்குத்தான். நல்லாச் சாப்பிடு. எங்க பக்கத்துக்கு வராத”ன்னு சொல்லி வேண்டிக்குவாங்க. அப்படிப் பாம்புக்குப் பயந்த மக்கள், பாம்பால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களோட குழந்தைகளுக்கு வச்ச பேரு தான் நாகம்மா, நாகப்பன், பாம்புலம்மா, பாம்புலய்யா இதெல்லாம். இனிமே கண்ணன் கிண்டலா சொன்னா என்னோட அம்மா பேருக்கு இதுதான்டா விளக்கம்னு சொல்லுடா. கேட்டுக்குவான். கிண்டலடிக்கமாட்டான்” என விளக்கம் சொன்னாள் நாகம்மா. “இனிமேல் அவன் நக்கலடிக்கட்டும். அப்புறம் பார்த்துக்கிறேன்ம்மா” எனச் சொல்லிக்கொண்டே கிளம்பினான் நவீன். கிளம்பியவனிடம் “லேய், உங்கப்பா பேருக்கு என்ன விளக்கம் தெரிஞ்சுக்க. இங்க வா” என்றாள். “எனக்குத் தெரியும்மா. எங்க சார் சொன்னார்” என்றவுடன் அவள் “என்ன சொன்னார் உங்க சார்? எங்க சொல்லு பார்ப்போம். அவர் சொன்னது சரியா இல்லையான்னு சொல்றேன்” என்றாள் நாகம்மா.

 “ஆதி காலத்தில் வாழ்ந்த மனுசங்க எல்லாம் குழுவாக வாழத் தொடங்கியபின்னர் அவர்களுக்குள் எழும் சச்சரவுகளைத் தீர்க்க, பிற குழுவுடன் உண்டாகும் சச்சரவுகளைத் தீர்க்க தங்கள் குழுவில் தலைவன் ஒருவனைத் தேர்ந்தெடுத்தனர். குழுவினர் அனைவரும் அவனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டனர். சில சமயங்களில் தனது குழுவைக் காக்க, பிற குழுவோடு சண்டையிட்டு இறந்தும் போயிருக்கிறான். தம்மை வழிநடத்தியவன் என்பதாலும் தம்மை ஆண்ட, காத்த தலைவன் என்பதாலும் தான் தம்மில் வாழ்ந்த அவனுக்கு ஆண்டவன் என்று பெயர் வந்ததாம். சார் சொன்னார். நம்ம குடும்பத்தைக் காப்பவராக அப்பா இருப்பதால் அப்பாவுக்கும் ஆண்டவன் என்ற பேர் பொருத்தம் தானம்மா?” என்றான் நவீன். 

 “அப்பா மட்டும் தான் வீட்டைக் காப்பாத்துறார். நானெல்லாம் காப்பாத்தலயாடா?” என்றாள் நாகம்மா. “எனக்கு எப்பவும் அப்பா, ஆண் ஆண்டவர். அம்மா, பெண் ஆண்டவர்” என்றவனின் நெற்றியில் முத்தமிட்டு மகிழ்ந்தாள் நாகம்மா.

 விரைந்து கிளம்பியவன் சட்டென நின்று “எல்லாருக்கும் சாமிப் பேர் இருக்கு. எனக்கு ஏன்ம்மா நவீன் என்ற பெயர்?” என்றவுடன் நாகம்மா சொல்லத் தொடங்கினாள் “என்னோட அப்பா, அம்மா, அவங்களோட அப்பா, அம்மா எல்லோருக்கும் கடவுள் நம்பிக்கை இருந்துச்சு. வச்சாங்க. நான் உனக்கு கொஞ்சம் நவீனமா பேர் வைக்கணும்னு தோணுச்சு. அதான் நவீன் என்று பேர் வச்சிட்டேன்” என்று சொல்லியதைக் கேட்டபடி விளையாடச் சென்றான். சுவற்றில் தொங்கவிடப்பட்டிருந்த நாகம்மா ஆண்டவர் திருமணத்தின்போது வழங்கப்பட்ட பெரியார் புகைப்படத்தில் ஒரு கம்பீரம் தோன்றி மறைந்தது அப்போது.




வீட்டின் வேர்கள் - யாழ் தண்விகா


 கதை சொல்லல் பயிற்சிக்குச் சென்று எழுதிய சிறார் கதை...


வீட்டின் வேர்கள்


யாழ் தண்விகா 

 

   வீட்டிற்குச் செல்வதற்கான மணிச் சத்தம் “டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்ங்” என்று அடிக்கத் தொடங்கியதும் பிள்ளைகள் அனைவரும் தங்கள் பைகளைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு சந்தோசமாகக் கிளம்பத் தொடங்கினர்.  கவின் ஐந்தாம் வகுப்பும், தனு இரண்டாம் வகுப்பும் அதே பள்ளியில் தான் படிக்கின்றனர். இருவரும் வகுப்பறையிலிருந்து வெளியேறி ஒன்றாகச் சேர்ந்த பின்னர் வீடு நோக்கிக் கிளம்பினர். தெருவின் ஒரு ஓரமாக, இருவரும் பேசிக்கொண்டே வீடு வந்து  சேர்ந்தனர்.


 வீட்டிற்குச் சென்று புத்தகப் பைகளை வைக்கவேண்டிய இடத்தில் வைத்துவிட்டு கைகளைக், கால்களைக் கழுவிவிட்டு வந்தனர் கவினும் தனுவும். சற்று நேரத்தில் அவர்களுக்கு மாலை நேரச் சிற்றுண்டியாக பால் கொழுக்கட்டையைச் செய்து பாட்டி எடுத்து வந்து தந்தார். வாரத்தில் இப்படி இரண்டு மூன்று நாட்கள் அதிரசம், முறுக்கு, புட்டு, கொழுக்கட்டை இப்படி ஏதாவது ஒன்றை பாட்டி செய்து தருவார். அதை மகிழ்வோடு உண்டபின்னால் வீட்டின் முன்புறம் சென்று விளையாடத் தொடங்கினர். அப்போது தான் எதிர்வீட்டில் வசிக்கும் கண்ணன், அமுதாவின் பிள்ளைகளான வாசனும் ஜோதியும் பள்ளியிலிருந்து வந்தனர். இருவரும் கவினும் தனுவும் படிக்கும் அதே வகுப்பு தான் படிக்கின்றனர். அதே பள்ளியில் தான் படிக்கின்றனர். ஆனாலும் இவ்வளவு தாமதமாக வருவதற்குக் காரணம் என்ன?


 கண்ணனும் அமுதாவும் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்ப மாலை 7 மணி ஆகிவிடும். அது வரை வீட்டில் வாசனும் ஜோதியும் தான். அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். சில சமயம் காயம் ஆகும் அளவுக்குக் கூட சண்டை போடுவார்கள். பெரிய காயம் என்றால்  வேலை முடித்து வந்தவுடன் அம்மாவோ அப்பாவோ அவர்களை மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு ஓடுவார்கள். சண்டை போட்டுக்கொண்டாலும் அம்மா அப்பா வந்தவுடன் அவர்கள் முன்னால் எதுவுமே தெரியாதது போல இருப்பார்கள். அம்மா காலையில் சமைத்த பாத்திரங்களையும், பயன்படுத்திய பொருட்களையும் கழுவி எடுத்துவைப்பாள். இரவுச் சமையலை செய்யத் தொடங்குவாள். அப்பா கடைக்குச் சென்று வருவார். அம்மாவிற்கு சமைக்கும்போது உதவிடுவார். இருவரும்  கொஞ்ச நேரம் பிள்ளைகளிடம் பள்ளியில் என்ன நடத்தினார்கள் என்பதைக் கேட்டுவிட்டு உறங்கிவிட்டு மீண்டும் அதிகாலையில் எழுந்து சமையலை முடித்து, பிள்ளைகளைச் சாப்பிட வைத்துவிட்டுக் கிளம்புவார்கள். சில நேரங்களில் கொஞ்சம் தாமதமானால் வாசனையும் ஜோதியையும் சாப்பிட்டுப் பள்ளிக்குச் செல்லச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிடுவார்கள். பரபரப்பான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.  இது ஒரு தொடர்வேலை போல தினந்தோறும் நடந்துகொண்டே இருக்கும்.  இந்த வேலைகளில் எதுவாவது ஒன்று தடைபட்டாலும் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் இடையே சண்டை வந்துவிடும். 


 ஆனால் கவின், தனு வீட்டில் இது போன்ற பிரச்சனையில்லை. மாலை நேரங்களில் தன்னால் இயன்றவரை பாட்டி, வீடு வாசலைச் சுத்தம் செய்து வைப்பார். தாத்தா, தன்னுடைய பேரக் குழந்தைகளுக்கு சிலம்பாட்டம் கற்றுத் தருவார். ஒயில், தேவராட்டம் போன்ற ஆட்டங்களைக் கற்றுத் தருவார். காலாற இருவரையும் அழைத்துக்கொண்டு வயல்பக்கம் அழைத்துச் சென்று வருவார். அவர்களை வீட்டுப்பாடம் செய்யச் சொல்லி அருகில் இருந்து கவனித்துக்கொள்வார். மில்லில் இருந்து பணி முடித்து பெரும்பாலும் எட்டு மணிக்கு மேல் தான் கவின், தனுவின் பெற்றோர் வீட்டுக்கு வருவார்கள். வந்தவுடன் விரைவாக சமையலை முடிப்பாள் அம்மா. பிள்ளைகளின் படிப்பைக் கவனிப்பார் அப்பா. ஒருவேளை அவர்கள் வரத் தாமதமானாலும் பாட்டி சமையலை முடித்து வைத்துவிடுவாள். ஆனால் ஒரு சில நாட்களில் வாசன், ஜோதியின் அம்மாவும் அப்பாவும் தாமதமாக வீட்டுக்கு வரும்போது சாப்பிடாமல் கூட அவர்கள் உறங்கியிருப்பார்கள். கவினுக்கும் தனுவுக்கும் அதுபோல பட்டினியால் உறங்கும் சூழல் இதுவரை வாய்த்ததில்லை.


 கவினும் தனுவும் இரவில் சாப்பிட்டு முடித்தவுடன் பாட்டி அருகில்தான் பெரும்பாலும் படுப்பது வழக்கம். இருவரின் படிக்கும் ஆர்வத்தை மேலும் வளர்க்குமாறு தூங்கும்வரை பாட்டி அவர்களுக்குக் கதைகள் கூறுவாள். பழமொழிகள் கூறுவாள். திருவிழாக்கள், கோவில், குளம் போன்ற தகவல்களைக் கூறுவாள். மூலிகைச் செடிகள் பற்றிக் கூறுவாள்.  இதையெல்லாம் கேட்டுக்கொண்டுதான் கவினும் தனுவும் தினந்தோறும் உறங்குவார்கள்.  


 வாசன், ஜோடியின் குடும்பத்தை விட ஏழ்மைக் குடும்பம்தான் கவின், தனுவின் குடும்பம். அவர்களின் பெற்றோரை விட கவின், தனுவின் பெற்றோர்களின் படிப்பும் கம்மி தான். ஆனால் முறையான வளர்த்தலால், கண்காணிப்பால், திட்டமிடலால் கவினும், தனுவும் படிப்பில் முதலாக வந்தனர். படிப்பு என்பது வாசனுக்கும் ஜோதிக்கும் பெரிய ஒரு விசயமாகத் தெரியவில்லை. இதை மாற்றக்கூட வாசன், ஜோதியின் அம்மா, அப்பாவிற்கு நேரமில்லை. ஒருநாள் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் கலந்துகொண்டு கவினும் தனுவும் முதல் இடத்தைப் பிடித்தபோது பள்ளியே அவர்களை வாழ்த்தியது. தலைமையாசிரியர், ஆசிரியர்கள் அவர்களைக் கொண்டாடினர். அதை தற்செயலாகத் தெரிந்துகொண்ட வாசனின் அப்பா, வாசனையும், ஜோதியையும் திட்டினார். “அவர்களைப் பாருங்கள். எப்படி படிக்கிறார்கள்? எவ்வளவு திறமையாக விளையாடுகிறார்கள்? அவர்களின் வகுப்பு தானே நீங்களும். உங்களால் ஏன் முடியவில்லை” எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் திட்டினார். பதில் சொல்லத் தெரியாமல் இருவரும் திருதிருவென்று அமர்ந்திருந்தனர். 


 மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. காலை உணவை முடித்துவிட்டு விளையாடிக்கொண்டு இருந்தார்கள் வாசன், ஜோதி, கவின் மற்றும் தனு. அப்போது எதிர்பாராமல் தனு கீழே விழுந்துவிட்டாள். அதனைப் பார்த்துக்கொண்டிருந்த பாட்டி சட்டென வீட்டிற்குள் சென்று மஞ்சளை எடுத்துவந்து காயம் பட்ட இடத்தைத் துடைத்துவிட்டு அவ்விடத்தில் வைத்துவிட்டாள். இரண்டு நாட்களில் காயம் ஆறிவிட்டது. வாசனுக்கும் ஜோதிக்கும் இது ஆச்சர்யமாக இருந்தது. எப்படி இதெல்லாம் பாட்டிக்குத் தெரிந்தது? பாட்டி மருத்துவரா? நமது வீட்டைப் போலவேதான்  இங்கும் இருக்கிறார்கள். ஆனால் எப்படி கவினும் தனுவும் சிறப்பாகப் படிக்கிறார்கள். புத்திக் கூர்மையுடன் இருக்கிறார்கள், எப்படி சிறப்பாக விளையாடுகிறார்கள் அவர்கள் தாத்தாவுக்கு மட்டும் எப்படி இவ்வளவு கலைகள் தெரிகிறது? என்றெல்லாம் சந்தேகம் வந்துவிட்டது. அந்தக் கேள்வியை நேரடியாக கவினிடமே கேட்டுவிட்டான் வாசன்.

 அதற்கு கவின், “என்னுடைய அம்மா, அப்பாவின் பல வேலைகளில் எங்கள் தாத்தாவும் பாட்டியும் அவர்கள் இருக்கும்போதும் இல்லாதபோதும் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு மட்டுமல்லாமல் எங்கள் பெற்றோருக்கும் வழிகாட்டுகிறார்கள். அம்மா அப்பா வேலைக்குச் செல்கிறார்கள். சம்பாதிக்கிறார்கள். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எப்போதாவது ஏதாவது சண்டை வந்தால் அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துத் தீர்த்துவைக்கிறார்கள்.  எங்களுக்கு நன்னெறிக் கதைகள் சொல்கிறார்கள். படிப்பதன் அவசியம் சொல்கிறார்கள். தாத்தாவும் பாட்டியும் வாழ்வில் தாங்கள் கற்ற அனுபவங்களை எங்களுக்குச் சொல்லித் தருகிறார்கள். எங்களுக்குப் பாதுகாவலாக இருக்கிறார்கள். மொத்தத்தில் அவர்கள் எங்களுக்கு வாழ்க்கையைக் கற்றுத் தருபவர்கள். ஒரு வார்த்தையில் சொல்வதானால் எங்களுடைய தாத்தாவும் பாட்டியும் எங்களுக்கு இன்னொரு அப்பா அம்மா. அவர்கள் இல்லாமல் எங்கள் படிப்போ விளையாட்டோ இவ்வளவு சிறக்க வாய்ப்பில்லை” என்று சொல்கிறான். எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்தான் வாசன்.


 அன்று இரவு வாசனும் ஜோதியும் அவர்களின் அம்மா, அப்பாவிடம் சரியாகப் பேசவில்லை. சாப்பிடவும் இல்லை. “ஏன் இப்படி இருக்கிறீர்கள்?” எனக் கேட்டதற்கு எங்களுக்கு இன்னொரு அப்பா அம்மா வேண்டும் எனச் சொல்கிறார்கள். “என்ன இது முட்டாள் தனமான விருப்பம்?” அது எப்படி முடியும்? என வாசனின் அப்பா கோபப்படுகிறார். அப்போது “அந்த இன்னொரு அப்பா அம்மா வேறு யாருமில்லை. ஏன் எங்க தாத்தா பாட்டியாக இருக்கக்கூடாது... கவின், தனுவின் தாத்தா பாட்டியைப் போல” என ஒரே குரலில் சொல்கிறார்கள். இதைக் கேட்டவுடன் இவ்வளவு நாள் தாத்தா பாட்டியை, பேரக் குழந்தைகளோடு இருக்கவிடாமல் ஊரில் தனியாக விட்டு வந்துவிட்டோமே என்ற உண்மையைப் புரிந்துகொண்டும், குற்ற உணர்வோடும் “சரி, கவலைப் படாதீர்கள், நாளை எல்லோரும் தாத்தா பாட்டியைக் கூப்பிட ஊருக்குப் போகலாம், இப்போ சாப்பிடுங்க” என்று கூறுகிறார் வாசனின் அப்பா மகிழ்வோடு.   


வகுப்பு : 3

பாடம் : சமூக அறிவியல்

பாடத் தலைப்பு : குடும்பம்

Saturday, 18 October 2025

நான் மீண்டும் திரும்புகிறேன் - ஷக்தி

 


"இருண்ட காலக் கதைகள்" தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதை. கொரானோ காலக் கொடூரம் பற்றியது. முதலாளி கொள்ளை லாபம் அடிக்கப் பார்க்கிறான், தொழிலாளி நேரம் காலம் தெரியாமல் உழைக்க நிர்பந்திக்கப் படுகிறான். இதற்கு மத்தியில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட பெண், அவள் கணவன், மாமனார் என்று ஓடும் கதை. கொரோனா வந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபின் தனது மனைவியைக் காணத் துடிக்கும் கணவனின் வலி, மனைவிக்கும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் கொரோனா இருக்குமோ என்ற பதட்டம் கதைக்கு வலு சேர்க்கிறது. கொரோனோ கால அரசியல், போலீஸ் இவற்றையெல்லாம் மீண்டும் படிக்கும்போது எவ்வளவு துயர் மிகுந்த காலங்களைக் கடந்து வந்திருக்கிறோம் என்று உணர முடிகிறது. கதையில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. வாழ்த்துகள் தோழர்.


❣️

இருள் எனப்படுவது யாதெனில்... ஏகாதசி

 


இருள் எனப்படுவது யாதெனில்...

ஏகாதசி Kavi Ekadasi Ekadasi 

படைப்பு பதிப்பகம்

பக்கங்கள் : 128

விலை : 120


இருட்டில் ஒளிரும் தரிசனம்


தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார்...? இந்தப் பாடல் வரிகள் உருவாக்கிய நிஜத்தின் முன்னால் மற்றுமொரு நிஜத்தைப் பார்க்கிறேன். அது தண்ணீரின் வலி என்ற ஒன்றாக ஏன் இருக்கக்கூடாது என்பதே. இருளில் அழும் மனிதர்கள், இரவின் மர்மம், இருளின் குணாம்சம் என பல தகவல்களை அறிந்திருப்போம். இருளைக் கிழித்து, இருளில் கவிதையெழுதி, இருள் தாள்களைக் கசக்கித் தூக்கியெறிந்து, இருளுக்குள் அவற்றைக் கண்டடையுங்கள் என்றால் இதென்ன அபத்த இருள் என்ற எண்ணம் தோன்ற வாய்ப்பாகுதல் இயல்பு. எனினும் அது போன்றதொரு சிலிர்ப்புண்டாக்கும் இருளை தான் கண்ட ஐந்து நாள் இருளின் வாயிலாக கண்டடைந்திருக்கிறார் அதைக் கவிதையில் கொண்டு வந்திருக்கிறார் கவிஞர் ஏகாதசி. 


100 இருள். ஒவ்வொன்றுக்கும் எத்தனை கண்கள் இருக்கும் என்பது முடிவிலி. எப்போதோ எழுதிய வரிகள் “இரவுக்கு ஆயிரம் கண்கள்” என்பது. அது நட்சத்திரம் மட்டுமா? கண்கள் என்பது ஏன் கண்களாகவே இருக்கக்கூடாது? தொகுப்பில் என்னை உலுக்கிய கவிதை இந்தக் கேள்வியை இப்போதுவரை எனக்குள் எழுப்பிக்கொண்டே இருக்கிறது. 

“எங்காவது செல்லும்போது

விளக்கை அணைத்து 

வீடு பூட்டுகிறீர்கள்

யாரும் அறிந்திருக்கவில்லை

உள்ளே இருட்டிருப்பதை...” 

பூட்டிய வீடுதான் என்றபோதும் வெளியில் நாம் வந்தபின், கதவு திறக்காமல் நம்மை நாம் உள்ளே அனுப்பி எல்லாம் சரியாக பூட்டியாகிவிட்டதா? மூடி வைத்துவிட்டோமா? என வேவு பார்க்கும் வேலையையும் நாம்தானே செய்கிறோம்! கவிஞரின் கேள்வியில் நங்கூரமிட்டு அமர்ந்திருப்பது இருள் என்னும் மாயப் பிசாசு.


இருட்டை வைத்து ஒருசில விளையாட்டுகளையும் நகைப்பாக நம்முன் எடுத்துவைக்கிறார் கவிஞர். வாசிக்கும்போதே நமது கால்களும் இருட்டை மிதிக்காமல் செல்லும் லாவகத்தைக் கற்றுவிடுகிறது. 

“காலடியில் கிடக்கும்

இருட்டையெல்லாம் மிதித்து விடாமல்

தாண்டித் தாண்டிச் செல்கிறான்

ஒரு குடிகாரன்”  

வெறும் குடிகாரன் மட்டும் என்று எடுத்துக்கொள்வதா? மனித மனங்களில் எப்போதும் தனக்கே தனக்கேயான ஒரு பாதுகாப்பு உணர்வு தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும். அது வாழ்தலின் நிமித்தம் நமக்குள் நாம் தோற்றுவித்துக்கொள்வது. அதனை நாமிங்கு குடிகாரனில் புகுந்துகொள்வதன் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.


என்னுரையில் கவிஞர் சொல்கிறார், “இருட்டை நம் அன்பிற்குரிய ஒன்றென பழகியிருந்திருந்தால் மரணம் என்கிற ஒன்றுகூட நம் அஞ்சறைப் பெட்டிக்குள் இருந்திருக்கும் என்று என்னுரையில் கவிஞர் குறிப்பிடுவதை ஒவ்வொரு கவிதையையும் வாசிக்கும்போது உணரமுடியும். 

“நெடுஞ்சாலையில் போற வார

லாரிகளுக்கு கைபோட்டபடி

நின்றிருப்பவளின் இருட்டு நேரத்திற்கு

சோறு என்று பொருள்” 

என்ற கவிதையில் உள்ள மூன்றாம் வரி அவளின் முக்காலத்தையும் உணர்த்துவது. அதை இருள் என்றுமட்டும் கடந்துவிட முடியுமா? அது அவளின் வாழ்வு. அதனை நீட்டி முழக்கிச் சொல்லாமல் சோறு என்று பொருள் என்று முடித்துவைப்பதிலிருக்கிறது கவிஞரின் சொல்லாட்சி. வெளிச்சத்தை மட்டும் நேசிப்பவர்களுக்கும், கோடிட்டுக் காட்டுபவர்களுக்கும் பிறிதொரு கவிதையில் இருட்டின் தேவை குறித்து நான்கு வரிகளில் நச்சென்று கூறுகிறார் கவிஞர்,

“பிளாட்பாரவாசிகள்

உண்பதற்கும் மலம் கழிப்பதற்கும்

மற்றும் புணர்வதற்கும்

ஒரே சுவர் இருட்டு”

இருட்டு என்பது இங்கு அரசியல், பொருளாதாரம், சமூகம் எல்லாமுமாகத்தான் இந்தக் கவிதையிலிருக்கிறது.


ஒவ்வொரு இருளும் பார்க்கும் கோணத்தில் பரவசப்படுத்திவிடுகிறது. மூடியிருக்கும் அறைக்குள் வரும் வெளிச்சத்தை உணராதோர் யார்? அது கவிஞரின் பார்வைக்கு அகதியாகத் தெரிவது ஆச்சர்யம். அகதியும் இங்கு வெளிச்ச அகதியாகத் தெரிவது பேராச்சர்யம். அவர்களை அகதியாக, நிர்க்கதியாக இப்படி நிற்கவைத்து, இந்த நிலைக்குக் காரணமாக கையாலாகாத நிலையில் இருந்து இப்போது குடியுரிமை வழங்கினால் எல்லாம் சரியாகிவிடுமா? ஆகவேதான் இந்த வார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிடுகிறது... “குடியுரிமை வழங்குகின்றது இருள்...”

“வெளியிலிருந்து வரும்

வெளிச்ச அகதிகளுக்கெல்லாம்

குடியுரிமை வழங்குகின்றது

இருள்”


சிறுவனின் சிறுநீர் இரவு, உச்சி வெயில் நிழல், நாய்களின் இரவு, கரும்பலகை இருட்டு, சேவல் உண்ணும் வெளிச்சம் என நீளும் இரவும், இருளும் பல வெளிச்சக் கீற்றுக்களை நமக்குள் உண்டுபண்ணுகின்றன. பார்க்கத் தவறிய அவற்றை இருள் எனப்படுவது யாதெனில் என்ற தலைப்பில் 100 கவிதைப் பார்வையை அளித்திருக்கிறார் கவிஞர் ஏகாதசி. கவிதை வழியாக ஓர் ஆய்வுரையை வழங்கியிருக்கிறார் மா.காளிதாஸ் தோழர். கவிதையை இப்படியெல்லாம் ஆராயமுடியுமா என்றெண்ணும் வண்ணம் அணிந்துரை. அருமை. “புற அழகைப் புகழ்வதைவிட அக அழகை ஆராதிப்பதே ஆன்ம தரிசனம். அப்படியெனில் அகம் என்பது அழகிய இருளின் ஞான வெளிச்சம்” என பதிப்புரையில் வழக்க முத்திரை பதிக்கிறார் பதிப்பாளரும் கவிஞருமான Mohamed Ali Jinna தோழர். அட்டைப்படம் அடடா...!

நிறைவாக,

“ஓர் அழகிய கண்ணையோ

ஓர் அழகியின் கண்ணையோ

வரைந்துவிட முடியாது

இருட்டு வண்ணம் கொஞ்சம்

எடுத்துக்கொள்ளாமல்”

காதலுக்கான, காதலிக்கான இருட்டு எப்போதும் வெளிச்சம்தான். மேற்சொன்ன கவிதையைப் போல.

எழுத்துப்பணி தொடரட்டும்.


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா 


❣️

Tuesday, 14 October 2025

அட்டு

 


அட்டு பிகருக்கு வந்த வாழ்க்கை


#சிறுகதை


யாழ் தண்விகா


 பெரு மழை பொழிந்து கொண்டிருந்தது. தட்டுப்படும் எல்லா வீடுகளின் கதவுகளும் அடைக்கப்பட்டிருந்தன. காற்றின்றிப் பெய்யும் மழையாதலால் ஜன்னல்கள் திறந்திருந்தன. யாரும் எட்டிப் பார்க்கவில்லை எனினும் ஜன்னல் வழியாக வீட்டில் உள்ள அனைவரையும் மழை பார்த்துக்கொண்டிருந்தது. யார் நனைந்தாலும் மழைக்குக் குளிர் அடிக்கப் போவதில்லை. குளிர் வேண்டாம் என்ற மனநிலை ஒருபுறம் இருந்தாலும் காய்ச்சல் வரும் என்ற பயமே மனிதர்களை வீட்டுக்குள் முடக்கிப் போட்டிருந்தது. நின்று ஆடிக்கொண்டிருந்த மழைக்குள் குடையோடு ஒருத்தி வந்துகொண்டிருந்தாள். மழைக்கு முன்னால் நெய்த ஒப்பனை மழையால் இன்னும் மிளிரத் தொடங்கியிருந்தது அவளில்.


 வலது கையில் அவள் பிடித்திருந்த வண்ண நிற குடையையும் அவளையும் பார்க்கும்போது பட்டாம்பூச்சி ஒன்று  பூவை வாயால் கவ்விச் செல்வது போலிருந்தது.. இடது கை விரல்களால் மடிப்பு வைத்துக் கட்டியிருந்த அப்புடவையை கரை நனைந்து விடாமல் மையமாகப் பிடித்து தூக்கிப் பிடித்தபடி வந்தாள். பூனை தன்னுடைய குட்டியைக் கவ்விக்கொண்டு செல்வது போல என்று இதைச் சொல்லிக் சொல்லலாம் இதுவரைதான் நினைவில் இருக்கும்படியான காட்சிகள்.  இதனைத் தொடர்ந்து வருவதை அவனின் கண்கள் பார்க்கப் பார்க்க மழைக்காமத்தில் பூத்த மனசு மீண்டும் மீண்டும் பிரதிகளாக எடுத்து உயிரின் சுவர்கள் அனைத்திலும் ஆணியடித்து மாட்டிக்கொண்டே இருந்தது.  


 மழைக்கு எவ்வளவு இரக்கம் இருக்கும் என்பது அவளை அவள் விருப்பம் இல்லாமல் தொடக்கூடாது என்றெண்ணும் மழையின் விருப்பத்தின் பக்கமிருந்தே அறியலாம். ஒரு தேவதைக்கான பாதை என்று அந்தத் தெருவில் இருந்திருந்தால் இதோ இவன் இப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்திருக்க முடியாது. வெறுமனே அதனை வேடிக்கை என்று எப்படிச் சொல்வது? தரிசனம் தான் அது.


 முழங்காலுக்குச் சற்றுக் கீழ்வரை மட்டுமே புடவை மறைத்திருந்தது. மீதப் பக்கங்களில் அவள் ஒளிர்ந்தாள். மென் மஞ்சள் பூசிய அக்கால்களில் மழைத்துளி ஒவ்வொன்றும் நட்சத்திரப்பூக்களாக மாறி தன்னுடைய அர்ச்சனையை தூவலாகப் பதிவுசெய்துகொண்டிருந்தது. வழுவழுவென்ற அக்கால்களில் வழிந்தோடிய நீரில் குளிக்கும் மீன்கள் பாக்கியம் பெற்றவை. மெல்லக் கூடும் நீரில் அடிக்கும் அவளின் அலை எப்படியும் இந்நீரை கடலில் சேர்த்துவிடும்.


 கால்களின் கூச்சம் சட்டெனக் கூடு பாய்ந்து மூளைக்குள் மின்னலைப் பாய்ச்சுகிறது. யாரோ தன்னைப் பார்க்கிறார்கள் என்பதை உணர்த்தும் சமிக்ஞை அது. தலை சாய்ந்து தலையில் ஈரம் பட்டுவிடாமலிருக்க வந்த குடை மெல்லத் தலை நிமிர்கிறது. கண்களை மழைக்கண்களின் ஊடே நனைந்துவிடாமல் அவளின் கால்களில் ஊடுருவவிட்ட அவனுக்கு அவளின் முகம் மெல்ல மெல்லத் தெரிகிறது. விதையிலிருந்து முட்டி மோதி வெளிவந்து தனக்கான காற்றைச் சுவாசிக்கும் தளிரின் மென்னிலைகள் இமைகளாகி காற்றைக் கண்ணடிக்கிறது. மழை தாண்டி ஓடும் கண்கள் இதோ இங்கிருந்து பார்க்கிறானே இவனின் கண்களை கண்விலங்கிட்டுக் கைப்பற்றுகிறது. குற்றம் தாளாமல் கண்களைத் தரை நோக்கித் தாழ்த்திக்கொள்வதா? இவளைக் காண எனக்காக  நேர்ந்துவிடப்பட்டிருக்கும் இந்த மழை நாளை இவள் என்ன செய்தால் என்ன என நேரடியாகப் பார்த்துக் கொள்வதா? என்றெல்லாம் குழப்பம் இல்லை. நேர் பார்வைதான். மின்னல் மோதிக் கொள்வது மழைக்குள் சாத்தியம் தானே. 


  “இப்படி மழைக்குள்ள நடக்குற பொம்பளைய உத்துப் பார்க்குறயே, அசிங்கமாத் தெரியலையா?” தேவதை உதிர்த்த முதல் வார்த்தை அதுதான். 

 “ம்ஹூம் அழகாத்தான் தெரிஞ்சது” என்ற பதில் மனசுக்குள்ளிருந்து ஓடி வந்து நாக்கின் நுனியில் சிரிப்பாய் மாறிவிட்டது.

 “ஏய், உன்னைத்தாண்டா என்னடா சிரிப்பு? பிஞ்சிடும்” என்றபோது இன்னும் கொஞ்சம் இவனை நெருங்கிவிட்டிருந்தாள். 


 யார்டா இவள்? இவ்வளவு துணிச்சல் இவளுக்கு எப்படி? எந்த வெண்ணையாக இருந்தால் என்ன? என்றபடி கொஞ்சம் நன்றாகவே அவளைப் பார்த்தான். வாயில் கைகளை வைத்துக்கொண்டான். கண்களில் ஒரு ஆச்சர்யத் தேர் ஓடத் தொடங்கியது. இவளா? சின்ன வயதில் தலை முடியை ஒழுங்காக் கட்டத் தெரியாமல் தெருவே ஓடித் திரிவாளே. மூக்கு வழியுறத சரியாத் தொடைக்காம அதுக்காகப் பார்க்கும் பலரிடமும் முகச்சுழிப்பைச் சம்பாதிப்பாளே இவளா. சரியாகக் குளிக்காமல் கரேரென கை காலில் தொன்னி தொன்னியா வந்திருக்கும். அதுக்காகவே இவளைச் சொறிச்சி என்று பட்டப்பெயர் வைத்தோமே இவளா இவ்வளவு பேசுகிறாள்?


 “அடியே நதியா! நல்லாருக்கியா?” நினைவிலிருந்து அவனாகவே வெளியில் வந்து கேள்வியையும் கேட்டுவிட்டான் அவளிடம்.

 “டேய், என்னடா பண்ற? இப்போ வரைக்கும் இந்த மாதிரி பழக்கத்தை நீ விடலையா? எப்படிப் பார்க்குற? எருமை மாடே. அதும் கல்யாணம் முடிஞ்சவளை” என்றாள் நதியா.

 “கல்யாணம் முடிஞ்சதா? எப்ப முடிஞ்சுச்சு? நான் கொஞ்சநாள் ஊரில் இல்ல. இப்போதான் கொஞ்ச நாளுக்கு முன்னால ஊருக்கு வந்தேன். உன்னை விசாரிக்குற அளவுக்கு நீ இல்ல. அட்டு பிகரு. கோவிச்சுக்காத. எதுக்கு விசாரிச்சுட்டு? அதனால விசாரிக்கல. நானும் கார் எடுத்துட்டு எவன்டா வாடகைக்குக் கூப்பிடுவான்னு பாத்துட்டே திரியுறேன். உன்னை இன்னைக்கு பார்ப்பேன்னு நெனைக்கவே இல்ல. எப்படிடி இவ்வளவு அழகா மாறுன? கொஞ்ச நேரத்துல என்னென்னமோ உள்ளுக்குள்ள ஆகிடுச்சு” பேசிக்கொண்டே போனான்.


 நதியா, வாயைப் பொத்து என்பதுபோல கையை வைத்துக் காண்பித்துவிட்டு, “இப்போ நல்லாருக்கேன்ல. போதும். அந்தாளு வந்துதான் வீட்டில் விட்டுட்டுப் போச்சு. பிசினஸ் பண்றார் சென்னைல. இன்னும் மூணு நாள் இங்கதான் இருப்பேன். நாளை பேசுறேன். சரி என்னோட நம்பரைக் குறிச்சுக்க. என் செல் வீட்டுல கிடக்கு. வாரேன்” என்றபடி கிளம்பினாள்.


 வெற்றசைவாகத் தெரியவில்லை அவளின் புறப்பாடு. ஒவ்வொன்றும் அழகு என்பதை பார்க்கும் ஒவ்வொரு கணமும் ஒவ்வொன்றாக வெளிப்படுத்தும் பணியைச் செய்தால் என்னதான் பண்ணுவது? பின்னழகும் ஆட்டிவைத்தது புத்தியை. நீர் தெளிக்கப்படும் ஆடாகத் தலையை ஆட்டி கண்ணை மூடிப் பெருமூச்சும் விட்டுக்கொண்டு காருக்குள் ஏறி அமர்ந்தான் ராஜா.


 மூன்று நாள் ஓடியதே தெரியவில்லை. தினமும் நதியா அழைப்பாள். பேசுவான். வாட்சப்பில் மெசேஜ் பரிமாற்றம் ஓடியது. காலை வணக்கம் தொடங்கி குட் நைட் என்பது வரை நாளெல்லாம் தமதாக்கிக் கொண்டார்கள். நினைவுகளைப் பரிமாறும் புகைப்படங்கள் பகிர்ந்துகொண்டார்கள். மெருகேறிப் போய் இதற்குமேலும் கூடுவதற்கு அழகு இல்லை என்ற பூரணத்துவத்தில் இருந்தாள் நதியா. கழுத்தில் கைகளில் விரல்களில் தங்கம் ஜொலித்தது. யாரிடமும் பகை வளர்க்காமல் புன்னகைத்து அன்பை மட்டுமே தனக்கான சொத்தாகச் சேர்த்து வைத்திருந்தான் ராஜா. அதனால் என்ன பிரயோஜனம்? ஒன்றுமில்லை என்று தெரிந்தாலும் கார் ஓட்டி தன் பிழைப்பைப் பார்த்துவந்தான் அவன்.


 நான்காம் நாள் காலை நதியா அழைத்தாள். வழக்கம் போல பேச்சில்லை ராஜாவிடம். கொஞ்சம் மந்தமாக “ம்ம் சொல்லுடி” என்றான். “கார் எடுத்திட்டு வா. திண்டுக்கல் வரை. அந்தாளு என்னை ட்ரைன்ல வரச்சொல்றான். ரயில்வே ஸ்டேஷன் போகணும்” என்றாள் நதியா. எதையும் ராஜாவால் நம்ப முடியவில்லை. உடனே கார் எடுத்துச் சென்றான் நதியாவை அழைக்க. அவள் கிளம்பி தயாராகாவே இருந்தாள். “நம்ம ராஜா தம்பியா? சரியா. வண்டிய வெரட்டாம மெதுவாப் போய் ட்ரைன் ஏத்தி விட்டுட்டு வாயா” என்றாள் நதியாவின் அம்மா. “அதெல்லாம் பொறுமையாத்தான் போவேன் அத்த. கவலைப் படாதீங்க” என்று புன்னகைத்தபடி பொருட்களை எடுத்து வைத்தான். நதியா பின் சீட்டில் அமர்ந்துகொண்டாள். கார் கிளம்பியது.


 ஓரிடத்தில் காரை நிறுத்தி தேநீர் அருந்தினார்கள். “அப்பப்போ பேசுடி. மறந்துடாத. உன்னை தொந்தரவு தார மாதிரி ஒண்ணும் பண்ணமாட்டேன். உன்னை ஏன்டா பார்த்தேன்னு இருக்கு. தப்பு தான். ஆனாலும் மனசெல்லாம் என்னமோ பண்ணுது. என்ன பண்ண. ஒண்ணும் புரியல” என்றான் ராஜா. 

 மீண்டும் பின்னால் சீட்டில் அமரப் போனவள் “வெறும் டயலாக் மட்டும்தான் போல. முன்னால வந்து உக்காருடி சொல்லணும் எரும” என்று சொல்லிக் கொண்டே முன்னால் வந்து அமர்ந்துகொண்டாள் நதியா. அவன் பேசப் பேச அவன் முகத்தையே பார்த்துக்கொண்டே வந்தாள். ட்ரைன் எப்போ எனக் கேட்க அவள் “நைட் எட்டரைக்கு” என்றாள். “அப்போ அதுவரை என்ன பண்ண?” என்றான் ராஜா. 

 “வா சொல்லித்தாரேன். ஆளைப் பாரு ஒன்னொன்னாக் கேட்டுக்கிட்டே இருக்குறத” என்றவளைப் பார்த்து “எதுக்கு இவ்வளவு சீக்கிரம் கிளம்புறன்னு வீட்டில் கேட்கலையாடி” என்றான் ராஜா. “திண்டுக்கல்லில் ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போயிட்டுப் போகணும் சொல்லிட்டேன்’ என்றாள் சிரித்தபடியும் கொஞ்சம் அர்த்தம் பொதிந்தபடியும்.


 ட்ரைனில் அனுப்பிவிட்டுத் திரும்பும்பொழுது சிலமணி நேரங்கள் அவளோடு மகிழ்ந்திருந்த விடுதி கண்ணை விட்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னே சென்று கொண்டிருந்தது. எவ்வளவு சாமர்த்தியமாகப் பேசுகிறாள். நடந்துகொள்கிறாள். சிரிக்கிறாள். ஆளே முழுவதுமாக மாறிவிட்டாள்.  அவளோடு ஒப்பிடும்போது இப்போது தான்தான் அட்டு பிகராக இருப்பதாக அவனுக்குத் தோன்றியது.  அவ்வளவும் அவனுக்கு இப்போதும் நம்பமுடியவில்லை. ‘”வாடகையா நெனைக்காத” எனச் சொல்லி சில பல ஆயிரங்களை அவனின் பாக்கெட்டில் வைத்து அவன் நெற்றியில், இதழில் முத்தமிட்டபின் திறந்த அறை மீண்டு அவன் கண்ணெதிரே வந்து போனது. அட்டு பிகருக்கு வந்த வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டான் தனக்கு முன்னால் இருந்த கண்ணாடியில். வருத்தமில்லை. அத்தனையும் அவள் தந்தது. அதை இப்படியும் சொல்லலாம். திருவிழா முடிந்தது. இனி மீண்டும் திருவிழா எப்போது வரும்?

Friday, 3 October 2025

நீ காதல் நான் கஸல்


நீ காதல் நான் கஸல்


தி.கலையரசி

Kalaiarasi Thirunavukkarasu 


கவிதைகள்


படைப்பு குழுமம் வெளியீடு

விலை : 120

பக்கங்கள் : 130


காதல் மீது உள்ள காதலால் நான் தொடர்ந்து எழுத முயற்சி செய்ததன் வெளிப்பாடாக வந்திருக்கிறது இக்கவிதைத் தொகுப்பு என என்னுரையில் கூறுகிறார் கவிஞர். போதாதா தொகுப்பில் என்ன இருக்கும் என்று அறிய. காதல் என்பது பரிசுத்தம். ஞானம். மகிழ்ச்சி. துயரம். தேடல். மயக்கம். இன்னும் என்னென்னமோ பொருளுக்குப் பொருந்தும் உன்னதம்.


வாசிக்கும் ஒவ்வொருவரும் தன் காதலோடு, மனதோடு பொருத்திப் பார்க்கத் தூண்டும் கவிதைகள். சொல்லாடலின் சிறப்பாக கவிதைகள் அத்தனையும் மிளிர்கின்றன. எளிய மொழியில் வலிய காதல். அழுத்தமான கவிதை நயம்.

"நீரை விலகாது ஈரம்

நெருப்பை விலகாது வெப்பம்

நான் உன் நீர்

நீ என் வெப்பம்".

யாதுமாகி நின்றாய் என்று சொல்லிக் கடத்தலை சொல்லில் கடக்கும் வித்தை கவிதை. அதனை இக்கவிதை நன்றாகவே செய்கிறது.


எனக்கு நீதான் வேண்டும். நீதான் எல்லாம். நீயில்லாத வாழ்க்கையை என்னால் கற்பனை கூட செய்ய முடியாது இப்படியெல்லாம் சொல்லிக்கொள்ளும் காதலின் அவஸ்தையை காதல் எப்படிச் சொல்லும்? அது எப்படி கவிதையாக அமையும்?

"நீ கடல்

நான் அலை

என்னை நீ கரையேற்றினாலும்

நான் உன்னிடம் தான் 

திரும்புவேன்".

கடல், அலையை தன்னிலிருந்து வெளியேற்ற நினைக்கிறது என்பதைச் சுட்டும் கரையேற்றினாலும் என்ற சொல்லுக்குள்தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்... என்ன இருந்தாலும் நான் உன்னிடம் தான் திரும்புவேன் என்பது அர்த்தத்திற்கும் மேலான அன்பு.


காதல் சுழிக்குள் மாட்டுவது சூழலா? திணித்தலா? எதுவானாலும் அங்கு எதுவும் திட்டமிடப் படுவதுபோல் நடப்பதில்லை. அது ஒரு மகிழ்ச்சிப் பிரவாகம். அங்கு இன்பமும் துன்பமும் பேராழியின் ஆழமென நீளும். குறையும். அது தரும் மயக்கம் என்பதை உயிர் வேண்டிப் பெறும். இந்தக் கவிதை அவ்வாறான மகிழ்ச்சியாகவும் இருக்கலாம். துயராகவும் இருக்கலாம். எது என்பது இங்கு அவசியமில்லை. அதைத் துய்ப்பது மட்டுமே இக்கவிதை.

"எப்போதும் காதலில்

நீந்திக்கொண்டே இருக்கிறேன்

கரையே

தென்படாமல் இரு".

கடலில் மிதந்தபடி

கண்கள் ஒருமுறை இல்லாத கரை தேடும் சூழலை உண்டுபண்ணச் செய்திடும் வல்லமை சொற்களில்.


மென் சோகம், ஓரளவு சோகமா? இல்லை. சோகத்தில் ஏது கொஞ்சம், நிறைய? வலி என்பது வலி தான். அப்படிக் கவிதைகள் தொகுப்பில் நிறைய. 

"காதலும் பிரிவும்

தராசுத் தட்டுகளில் அமரும்போது

உயிரின் முள் தள்ளாடுகிறது".

ஒரு பக்கம் காதல், மறு பக்கம் பிரிவு. இரண்டும் தராசுத் தட்டுகளில் இருக்கும்போது காதல் கீழ்நோக்கி இழுக்க வேண்டும். அல்லது பிரிவு கீழ் நோக்கி இழுக்க வேண்டும். எது மகிழ்வானது? எது துயரானது? இரண்டும் எப்படி சமமாக, முன்னே பின்னே ஆடி தன்னைச் சமப்படுத்திக்கொள்ள முடியும்? வாசிக்கும் நாம் அந்த உணர்வைப் பெறுவது, கவிதை நமக்குள் செய்யும் மாயம். 


கண்ணீர், காதல், பிரிவு, கடல், மழை இவைகள் போன்று நாம் தரிசித்த பொருண்மைகளை  வைத்துக்கொண்டு காதலைச் சொல்லிக்கொண்டேயிருக்கிறார். நாம் காதலிலும் கவிதைகளிலும் மூழ்கிக்கொண்டே இருக்கிறோம்.

"உன் கடலில் கலந்துவிட்ட

நீர்த்துளி நான்.

ஆவியாய் கரையும் விதியை

நீதான் எழுதவேண்டும்".

கவிதை, கவிஞரால் தன்னை எழுதிக்கொண்டுவிட்டது.  வாசிப்பவர்களுக்கு, ஆவியாய் கரையும் விதியை ஆகிருதியாய் உள்ளவர் எழுதுவார். அந்த ஆகிருதி என்பவர் நமக்குள் காதலாக மூழ்கிக் கிடப்பவர் தான். ஆவியாக மாறுவதா? கரைந்தே கிடப்பதா? கடலே ஆவியாவதா? காதலை சாட்சியாக வைத்து யோசித்துக் கிடப்போம்.


கடலுக்குள் சில முத்துகள், கண்ணீர்த்துளியின் சிறு அணுக்கள், மகிழ்வின் ஒற்றைச் சிறு சீனிக் கட்டி போலத்தான் நான் சொன்னவை. வாசியுங்கள். காதலின் உயரம் அடையலாம்.


கஸல் கவி Mohamed Ali Jinna தோழரின் பதிப்புரை, ந.சிவநேசன் தோழரின் அணிந்துரை, கோ. பாரதிமோகன் தோழரின் வாழ்த்துரை நூலாய்வைச் செய்திருக்கிறது தொடக்கத்திலேயே. அருமை.


வாழ்த்துகள் தோழர் தி.கலையரசி


யாழ் தண்விகா 


❣️

Saturday, 23 August 2025

ஒற்றைச் சிறகு ஓவியா


 ஒற்றைச் சிறகு ஓவியா 

விஷ்ணுபுரம் சரவணன் 

பாரதி புத்தகாலயம் 

பக்கங்கள் 120

விலை ரூ. 120


சாவித்திய அகாடமி பால புரஸ்கார் விருது பெற்ற நாவல்


பள்ளி ஆண்டு விழாவுக்காக தயாராகிறார்கள் மாணவர்கள். முகிலன், பவித்ரா, பிரின்சி, சாதிக் மற்றும் ஓவியா இவர்கள் ஐந்து பேரும் நண்பர்கள். இதில் ஓவியா தவிர நால்வரும் கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகிறார்கள். பள்ளி பியூன் கதிரேசன் தாத்தா இவர்களுக்கு உதவுகிறார். கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள பொருட்கள் வாங்குவதற்கு ஓவியாவிடம் பணம் இல்லை. அதுவும் இல்லாமல் இனி கலந்து கொள்ளவும் முடியாது. பெயர் கொடுக்கும் நாள் முடிந்து விட்டது. அதனால் நால்வர் வைத்திருக்கும் பொருட்களை வைத்து ஒப்பனை செய்கிறார்கள். இதனால் ஓவியாவின் மனக்கவலை மாறும் என்ற நப்பாசைதான். பிரின்சி தன்னுடைய தேவதை கவுன் மற்றும் இரண்டு சிறகுகளில் ஒரு சிறகை ஓவியாவிற்கு அளிக்கிறாள். பவித்ரா தன்னுடைய கிரீடம் ஒன்றை தலையில் சுற்றி விடுகிறாள். சாதிக் தன்னிடம் இருந்த மேஜிக் கம்பினை அளிக்கிறான். முகிலன் தன் கழுத்தில் இருந்த இலை மாலையை ஓவியாவின் கழுத்தில் அணிவிக்கிறான். கையில் போட்டிருந்த இலை மோதிரத்தையும் மாட்டி விடுகிறான். இத்தனையும் அணிந்திருந்த ஓவியாவிற்கு பறக்கும் சக்தி கிடைக்கிறது. பள்ளியில் உள்ள மணியின் நாக்கை அடித்தவுடன் மஞ்சள் நிற வெளிச்சம் பூக்கிறது. அந்த மஞ்சள் நிற வெளிச்சம் நந்தியாவட்டை மரத்தின் மேல் விழுகிறது. அப்பொழுது மரத்திலிருந்து பூக்கள் உதிர்கின்றன. பூக்களை அவள் புறா வடிவில் அடுக்கியவுடன் புறாவாக உருமாறி திரும்பி வருகிறது. 10 புறாக்கள் வந்தவுடன் அந்த இடமே பறவைகள் சரணாலயம் போல் தெரிகிறது. இந்த மாயாஜாலத்தை கைப்பற்றுபவனாக விகேஷ் இருக்கிறான். மாயாஜாலம் மீண்டும் ஓவியா மற்றும் அவளது நண்பர்களிடம் கிடைக்க கீழ்க்கண்ட படிநிலைகளில் பயணிக்க வேண்டி இருக்கிறது.

O

மண்புழு அழிந்து வருவதன் காரணம்.

மண்புழுவின் அவசியம்.  

O

நிலத்தடி நீர் முழுவதும் மாசுபாடு அடைந்து விட்டது. அதற்கான காரணம். 

O

விளைநிலங்களுக்கு அடியில் எரிபொருள் எடுப்பதற்காக குழாய் பதித்தல்

எரிபொருள் எடுப்பதற்காக விளை நிலங்களுள் குழாய் பதிக்கக் கூடாது என்று போராட்டம்.

ஓவியா மற்றும் அவளது நண்பர்களிடம் மாயாஜாலம் கிடைக்கப்பெற்று ஆண்டு விழாவில் இந்த மாயாஜாலம் அரங்கேற்றம் செய்யப்படுகிறது. இதுதான் நாவலின் சுருக்கம்.


நாவலில் மண்புழுவின் தேவை பற்றி அழகாக கூறப்படுகிறது. விவசாயி /உழவர்களின் நண்பன் என்பதை படிக்கிறோம். ஆனால் எத்தனை மாணவர்கள் அதனை உணர்ந்திருப்பார்கள்? அதுவும் இன்றைய காலகட்டத்தில் மண்புழுவின் தேவை பற்றி அறிய வேண்டியிருக்கிறது. நிலத்தடி நீர் பூமியில் கீழே போய்க் கொண்டே இருக்கிறது. அதுவும் அசுத்தமாக தான் கிடைக்கிறது. நிலத்தடி நீர் மேலாக இருந்த நிலை மாறி அதுவும் அசுத்தமான வேதிப்பொருள் கலந்த நிலத்தடி நீர் தான் கிடைக்கிறது. இதற்கு முடிவு என்ன என்பதையும் நாவலாசிரியர் கூறுகிறார். விளை நிலங்களில் எரிபொருள் எடுப்பதற்காக குழாய்கள் பதிப்பதற்கு அரசு முயற்சிக்கிறது. அதை எதிர்த்து மக்கள் போராடுகிறார்கள். அந்த போராட்டம், அதன் வீச்சு என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கி இருக்கிறார். இந்த செயல்கள் அனைத்தும் கதையோட்டத்தில் வருவதால் நாவல் மிகவும் அழகாக, அருமையாக இருக்கிறது.


ஒற்றைச் சிறகு ஓவியா 

விளைநிலங்களில் பதிக்கப்படும் எண்ணெய்க் குழாய்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நாவல்.


வாழ்த்துக்கள் தோழர்.

Sunday, 17 August 2025

அத்தினி - Chitra Sivan

 


அத்தினி

நாவல் 

சித்ரா சிவன்

Chitra Sivan 

பிறகு பிரசுரம் 

230 பக்கங்கள் 

280 ரூபாய்


பெண்களின் பிரச்சனைகளை பேசும் ஒரு நாவல். பெண்களின் அக உணர்வுகளை பேசும் இந்த நாவலில் பெரும்பாலும் பெண் கதாபாத்திரங்கள் தான். அதில் சில ஆண் கதாபாத்திரங்கள் வருகிறது என்றாலும் அது அனைத்தும் துணை கதாபாத்திரங்களாகவே இருக்கிறது. 


பவித்ரா தேவி மற்றும் உமையாள் என்ற இரு கதாபாத்திரங்கள் முதன்மையாக இருக்கிறது. இவர்கள் சேதுராமன், அன்னக்கொடி இருவரின் மகள்கள். அன்னக்கொடி கதாபாத்திரம் கிராமங்களில் நிறைய பார்க்கலாம். திருமணத்திற்கு முன் சீட்டு பிடித்தல் தொழிலை எவ்வளவு சாமர்த்தியமாக நடத்துகிறாள் என்பது கூறப்பட்டுள்ளது. ஆண்கள் நடத்தும் சீட்டுகள் பாதையில் நின்று விடுகிறது அல்லது ஓடிவிடுகிறார்கள். இந்த சூழ்நிலையில் அன்னக்கொடி நடத்தும் சீட்டு சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அடுத்து 50 ஆயிரம் ரூபாய் சீட்டை முன்னெடுக்கிறாள். முதல் சீட்டை பாலன் என்பவனுடன் சேதுராமன் ஏலம் கேட்டு, பின் பாலனையே எடுக்க வைக்கிறான். அதில் பாலன் செய்யும் செயலால் அதுல பாதாளத்தில் விழுகிறாள் அன்னக்கொடி. சேதுராமனுக்கும் அன்னக்கொடிக்கும் திருமணம் நடக்கிறது. அன்னக்கொடிக்கு மாமன் முறை வேண்டும் கணேசனுக்கு கொஞ்சம் பணக்கஷ்டம்.  கணேசனுக்கு உதவுகிறாள். சீட்டில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பணம் திரும்ப தேவைப்படுகிறது அன்னக்கொடிக்கு. வீட்டில் சேதுராமனுக்கும் அன்னக்கொடிக்கும் பணத்தை வைத்து பிரச்சனை வருகிறது. கணேசனிடம் கொடுத்த பணத்தை கேட்டு நடையாய் நடக்கிறாள். அன்னக்கொடி வீட்டில் பெரிய அளவில் பிரச்சனை வரும் பொழுது கணேசன் வீட்டின் முன் சென்று மண்ணெண்ணெயால் உடம்பில் தீ வைத்து எரித்துக் கொள்கிறாள் அன்னக்கொடி. அதன்பின் கணேசன் தன்னுடைய குடும்பத்தாருடன் தற்கொலை செய்து கொள்கிறான். சேதுராமன் தன்னுடைய குழந்தைகளான பவித்ரா தேவி மற்றும் உமையாளுடன் சென்று வாழ்க்கையை தொடர்கிறார். சேதுராமன் இறந்த பின்பு பவித்ரா தேவி மற்றும் உமையாள் இவர்களின் வாழ்க்கை எவ்வாறு செல்கிறது என்பதே கதை.


இந்த நாவலில் வரும் பெயர்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சாராரை சொல்ல வருகிறது. எந்த இடத்திலும் ஜாதி காட்டும் குறியீடு இல்லை. ஜாதிப் பெயர்கள் இல்லை என்ற வகையில் மகிழ்ச்சியே. 


ஏ ஜே பி மருத்துவமனை கேண்டீன் இதுதான் கதையின் மையம்.


அன்னக்கொடி இறந்ததற்குப் பின் பவித்ரா தேவிக்கு 34 வயது உமையாளுக்கு 29 வயது சமயத்தில் கூத்தும் கும்மாளமுமாக வாழும் சேதுராமன் இறந்து விடுகிறார். அந்த இறப்பிற்கு வரும் மாறன், உமையாளை பெண் பார்க்க வருகிறார். உமையாள் மாறனை விட ஒரு வயது மூத்தவள். இந்த கதாபாத்திரம் ஆரம்பத்திலேயே வந்தாலும் கடைசியில் தான் திருமணம் முடித்து துபாய் செல்லும் காட்சி வருகிறது. மாறன் யார் என்று டிவிஸ்ட் வைத்திருக்கிறார் நாவல் ஆசிரியர். 


நாவலில் வசந்தமுல்லை, பூங்கொடி, கமலா, பாண்டியம்மாள், மல்லிகா, சரிதா இப்படி ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். எந்த ஒரு கதாபாத்திரமும் துருத்திக் கொண்டு தெரியவில்லை. சரிதாவுக்கு, கமலாவுக்கு, வாசவதத்தைக்கு, மல்லிகாவுக்கு ஒரு பிளாஷ்பேக்...  மல்லிகாவின் ஃபிளாஷ்பேக் என்பது காதல் திருமணத்தில் முடிந்த கதையைச் சொல்கிறாள். வாசவதத்தை திருமணம் முடித்த பின்பு எவ்வாறு ஏமாற்றப்படுகிறாள் என்பதை சொல்லுகிறது. கமலா கணவனால் எவ்வாறு அடிபட்டு மிதிபட்டு வந்து அந்த நரக வாழ்க்கையில் எப்படி ஜெயிலுக்கு போய் வந்தாள் என்பதை கூறுகிறது. சரிதா தன்னுடைய காதலனுடன் கொடைக்கானலுக்கு வருகிறாள். பணி நிமித்தமாக ஆப்பிரிக்கா சென்ற தன்னுடைய கணவனுக்கு தெரிந்து விட்டது. இந்நிலையில் சரிதாவின் காதலன் இருவரும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுக்கிறான். அவள் வேண்டாம் என்று கூறியும் அதில் அவன் இறந்து விட உயிருக்கு போராடும் நிலையில் சரிதா மட்டும் தப்பிக்கிறாள். இதற்கு இடையே அன்னக்கொடியின் பிளாஷ்பேக். அன்னக்கொடிக்கு இரண்டு குழந்தைகளும் பெண் குழந்தையாக பிறந்ததால் சேதுராமனின் அம்மா கள்ளிப்பால் கொடுக்க முடிவெடுக்கிறாள். இந்த செயலைச் செய்வதற்கு முன் படுத்த படுக்கையாக கிடந்து உயிரிழக்கிறாள். இது ஆச்சரியமான ஒன்றாக தோன்றினாலும் கள்ளிப்பால் கொடுக்க முயற்சி செய்யும் பெண்களுக்கு இப்படி நடந்தால் என்ன என்று மனதிற்குள் வந்து போகிறது எண்ணம். இந்த பிரச்சனைகள் யாவும் சுவாரசியமாக இருக்கிறது. சிலஅதிர்ச்சிகரமாக இருக்கிறது. இந்த பிரச்சனைகளுக்குள் பெண் என்பவள் மாட்டிக்கொண்டு என்ன பாடுபடுகிறாள் என்பதை நாவலின் ஓட்டத்தோடு நாம் காண முடிகிறது.


உமையாள் மாறன் இவர்களுடைய திருமணத்தை நடத்திப் பார்க்க  ஆசைப்படும் பவித்ரா தேவி அந்த விஷயத்தில் வெற்றியும் விட்டு விடுகிறாள். பவித்ரா தேவி தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஆசைப்படுபவள் அல்ல. வாழ்க்கை என்பது போகும் போக்கில் நாமும் போவோம் என்ற எண்ணம் கொண்டவள். அந்த வாழ்க்கையில் இளங்கோ வருகிறான் டாக்டர் வேலை பார்ப்பவனாக. மதுரை கொடைக்கானல் குமுளி என்றெல்லாம் இவளுடன் பிரயாணப்படுகிறான். ஆனால் பவித்ராதேவியுடன் அவனுக்கு என்ன முரண் என்பது புரியவில்லை. தனக்கு உள்ள வேலைகளை கூறுகிறாள் கேண்டீனில் கமலா, அவள் மகன் சேதுராமன், பாண்டியம்மாள், அந்தோணி முத்து, சென்னையில் சரிதாவின் இறந்த காதலனோட அம்மா, ஹோம்ல மூணு பசங்க, ரெபேக்கா இவர்களை எல்லாம் தனக்கு பார்த்துக் கொள்ளும் கடமை இருப்பதாக பவித்ரா கூறுகிறாள். இவ்வளவுக்கு அப்புறமும் "நீங்க என் கூடவே இருங்க. என்னை விட்டு எங்கேயும் போயிராதீங்க" என்று கூறும் ஒரு எளிய மனம் பவித்ராவுக்கு. இளங்கோ என்ன முடிவு எடுக்கிறான் என்பதுதான் கதை. இந்த இடத்திலும் ஒரு பெண்ணின் முடிவு என்பது இரண்டாம் பட்சத்திற்கு தள்ளப்படுவது போல் அமைந்து விடுவது துரதிஷ்டம்.


தாய்ப் பாசம் பற்றிக் கூறும் நாவல் என்றோ, தங்கைப் பாசம் பற்றிக் கூறும் நாவல் என்றோ பொத்தாம் பொதுவாகக் கூறி கடக்கும் நாவல் இல்லை. ஜனரஞ்சகமான ஒரு நாவல் என்றே கூறலாம். ஆண்களைப் போல பெண்களுக்கும் ஆசைகள் இருக்கும். மாதத்திற்கு ஒரு முறை தோட்டத்தில் சிக்கன், மட்டன், பிரியாணி சமைத்து அவற்றை ஓட்கா உடன் இணைந்து கொண்டாடுவது என்பது கதையில் வரக்கூடிய பெண்களின் கொண்டாட்டத்தில் ஒன்று. பெண்கள் தங்களைத் தாங்களே ரசித்துக்கொள்ளும் இடங்களாக இருக்கட்டும் (ஆங்காங்கே இது போன்ற பகுதிகள் இடம்பெறுவது ஒரு கவிஞராக அடையாளம் கண்டு கொள்ளும் இடமாக இருக்கிறது), தத்துவார்த்தமான வசனங்களை எளிய முறையில் கூறி கடப்பதாக இருக்கட்டும், இயல்பான நகைச்சுவையாக இருக்கட்டும் கொஞ்சமும் அலுப்புத் தட்டாதவாறு சுவாரசியமாக நாவலை நகர்த்திச் செல்வதில் வெற்றி பெறுகிறார் நாவல் ஆசிரியர். கூறுவதற்கு நிறைய இருக்கிறது நீங்கள் வாங்கிப் பார்த்து வாசித்து மகிழுங்கள். நன்றி.


வாழ்த்துகள் தோழர் சித்ரா சிவன்.

Wednesday, 13 August 2025

ஊசிகள் - மீரா


ஊசிகள்வி

கவிஞர் மீரா

சீதை பதிப்பகம்

விலை ரூபாய் 50

1974ல் வெளிவந்த கவிதைத் தொகுப்பு. முழுவதும் சமூகச் சீர்கேடு, அரசியல் அவலங்களைத் தோலுரிக்கும் கவிதைகள். பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் இப்போதைய அரசியலுக்கும் பல கவிதைகள் பொருந்துகின்றன. அரசியல்வாதி, ஊழல், போலித் தமிழன் எனப் பல விசயங்களைப் பேசுகிறது தொகுப்பு. ஊரே கொண்டாடும்,


உனக்கும் எனக்கும் 

ஒரே ஊர் 

வாசுதேவநல்லூர் 


நீயும் நானும் 

ஒரே மதம்... 

திருநெல்வேலிச் 

சைவப் பிள்ளைமார் 

வகுப்புங் கூட 


உன்றன் தந்தையும் 

என்றன் தந்தையும் 

சொந்தக்காரர்கள்- 

மைத்துனன் மார்கள் 


எனவே 

செம்புலப்பெயல் நீர் போல 

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே


என்ற கவிதை இத்தொகுப்பில் தான் உள்ளது. 


சிக்கனமாக இருக்கச் சொல்லிவிட்டு ஆடம்பர செலவு செய்யும் பிரதமர் குறித்த கவிதையும் உண்டு. சினிமாவில் அரசியல் தேடும் தமிழ் மக்கள் அன்றும் இருந்துள்ளார்கள். கல்விக்கு லஞ்சப் பட்டியல் அப்போதும் இருந்துள்ளது... இப்படி இவை யாவும் கவிதைகளில்.


வாய்ப்பிருந்தால் வாசியுங்கள்

மீராவின் அரசியல் கவிதைகளை.


வாழ்த்துகள்... 

Wednesday, 30 July 2025

கமலி

 


கமலி
நாவல்
சி.மோகன்
புலம் பதிப்பகம்
பக்கம் 144
விலை ரூ.150/=

ரகு கமலி இருவரும் கணவன் மனைவி. கமலியின் அப்பா, கமலியின் ஜாதகத்தை ஆய்ந்து அறிந்து கண்டறிந்த மாப்பிள்ளை ரகு. இவர்களுக்கு நந்திதா என்ற பெண். இவர்களின் வாழ்வில் புதிதாக நுழைகிறார் கண்ணன். கொஞ்சம் கொஞ்சமாக கமலியின் மனதில் பதியத் தொடங்குகிறார் நல்ல மனிதராக, ரசனைக்குரியவராக, படிப்பாளியாக, வார்த்தைகளில் வசியம் செய்பவராக, கமலியின் மனம் கவர்ந்தவராக... கமலியின் எண்ணத்தில் உண்டான மாற்றத்தை கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்குகிறான் ரகு. ஒரு சில கட்டத்திற்குப் பின்னர் கண்ணனுடன் உள்ள தொடர்பு முற்றிலுமாக தடைபடுகிறது ரகுவின் கட்டளையின் பேரில். ஆனாலும் கமலி கண்ணன் இடையே உள்ள காதலுக்கும் காமத்திற்கும் முற்றுப்புள்ளி இல்லாமல் தங்கு தடையின்றி அது தொடர்கிறது அது எப்படி என்று வாசித்தறிக. இடையில் கமலியின் அப்பா இறந்துபோகிறார். அம்மாவிற்கு உடல் நலமில்லாமல் போய்விடுகிறது. அம்மாவைக் கவனிக்க சென்னைக்கு கமலி புறப்படுகிறாள். செல்லும் வழியில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. கண்ணனும் கமலியும் ஒரே பேருந்தில், படுக்கும் வசதியுள்ள இருக்கையில். கமலி எப்படி கண்ணனுடன் இந்த வாழ்வை வாழ்கிறாள்? ரகு கண்ணனுடன் பேசினானா, நந்திதாவுக்கு ஒரு தம்பிப் பாப்பாவோ தங்கச்சிப் பாப்பாவோ கிடைத்ததா என்பதை அறிய வாசிக்கவேண்டும் இந்த நாவலை. சரியோ தவறோ என்ற ஊசலாட்டம் கமலியின் எண்ணத்தில் புகவில்லை. அவள் மெல்ல கண்ணனின் வசியத்திற்குள் சிக்குகிறாள். கண்ணனும் நல்ல மனிதர். ஒரு இடத்திலும் கமலியின் பாத்திரமோ கண்ணனின் பாத்திரமோ குற்ற உணர்ச்சி என்று காலம் காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கும் விடயத்தில் சிக்குவதாகக் கதையில் சொல்லாமல், ரகுவிடம் தோன்றும் மனக் கிலேசத்தை எப்படி கச்சிதமாக கமலி தீர்க்கிறாள், கமலியும் கண்ணனும் இந்த வாழ்க்கையை எவ்வளவு கவனமாகக் கடத்துகிறார்கள் என்பதை கிளர்ச்சியைத் தூண்டும் மொழிநடையில் படைத்துள்ளார் நூலாசிரியர். முக்கியமாக கதையின் இறுதி.

கதையிலிருந்து...
கண்ணன், காதலை மிகச் சாதாராமாக எவ்விதத் தயக்கமுமின்றிச் சொன்னபோது, கமலி விதிர்விதிர்த்துத்தான் போனால். அவள் உடலும் மனமும் படபடத்து நடுங்கியது. ஆனால் அந்தப் படபடப்பில் பயமில்லை. மாறாக, பரவசமிருந்தது. அன்று இரவு வெகுநேரம் தூக்கம் பிடிக்காமல் மனம் ஏதோ ஒரு கிறக்கத்தில் கிறுகிறுத்துக் கொண்டிருந்தது.

வாழ்த்துகள் தோழர்




Friday, 25 July 2025

பாக்கெட்டில் உறங்கும் நதி

 




பாக்கெட்டில் உறங்கும் நதி

சிறுவை அமலன்


Amalan Bernatsha


ஹைக்கூ கவிதைகள்


அகநி வெளியீடு


ரூ 25/= பக்கங்கள் 48


சொற்களில் கூர்மை, நறுக்குத் தெரித்தாற்போல சொல்வது ஹைக்கூவிற்கு பெரும் அவசியம். இயற்கையோ, சமூகமோ, தத்துவமோ எதைக் கூறுவது என்பதில் சிறுவை அமலன் தனக்கு சமூகத்திற்கான பார்வை போதும் என்று நினைத்து அதனை தன்னுடைய கவிதைகளுக்கான பாடுபொருளாக எடுத்தாண்டு வென்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். அனல் தெரிக்கிறது பல கவிதைகளில்.


முதல் கவிதை...

வேப்பங்குச்சி

மின்னியது

அக்காவின் மூக்குத்தி...

ஒரு பொட்டுத் தங்கம் கூட இல்லாத வறுமை என்ன செய்யும்

வேப்பங்குச்சியை மூக்குத்தியாக கம்மலாக அணிந்துகொள்ளும். அதுவும் மூக்குத் துளை. காதுகளின் துளை மூடிவிடக்கூடாது, மீண்டும் அதற்காக செலவு செய்யும் சூழல் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் குச்சியைச் செருகிக் கொள்ளுதல் இங்கு கவிதையாகி உள்ளது.


வெந்தது 

மனிதத்தோல்

தோல் பதனிடும் தொழிற்சாலை

வயிறு என்ற ஒன்றில்லாவிட்டால் எதற்காக இந்த பாடு? தன்னை வருத்தி தனது உடலை உயிரை வருத்தி சம்பளம் ஒன்றைப் பெற்று தனக்காக தன் குடும்பத்திற்காக ஓய்வின்றி உழைப்பவன் இந்த வேலையும் இல்லாவிட்டால் என்ன செய்வான்... பசியால் மாண்டுபோவான். இங்கு வாழ்வதற்காக இறந்தபடியே வாழ்கிறான். அந்தச் சூழல் கவிதையாகியுள்ளது.


வேரோடு அழி

சாமின்னு குனிய வைத்தது 

சாமியானாலும்...

சாதியால், மதத்தால், வர்க்கத்தால் பிளவுபட்டுக்கிடக்கும் இந்த சமூகத்தில் இன்னும் ஆண்டான் அடிமை என்ற வறட்டுப் பித்தலாட்டத்தனம் புரையோடிப்போய்க் கிடக்கிறது. அதை நேரடியாகச் சாடுகிறது இக்கவிதை. மனிதர்களுக்கு மட்டுமல்ல அந்தக் கடவுளேயானாலும் வேரோடு அழி என்று முகத்தில் அறைந்தாற்போல சொல்கிறது கவிதை.


பறையடித்த தாத்தா

பறையடித்த அப்பா

திருப்பி அடிக்க நான்...

குலத்தொழிலில் திணிக்கும் காலம் மலையேறிப் போய்விட்டது. என் கல்வி, என் உணவு, என் வேலை எதைத் தேர்ந்தெடுப்பது என்பதெல்லாம் என் உரிமை. மீண்டும் பறை அடிக்க அல்ல, திருப்பி அடிக்க நான் என்பது சமூகத்திற்கு விடுக்கும் எச்சரிக்கை. 


கல்லானாலும் கணவன்

புல்லானாலும் புருஷன்

விந்து படிந்த நாப்கின்...

இந்த வரிகளைப் படித்தபோது பெரும் வலி சூழ்ந்தது. ஒரு பெண்ணின் வாழ்வில் வலிகளாகக் கடந்துபோகும் நாட்கள் மாதவிடாய்க்காலம். இயல்பாகவோ, சட்டென வந்ததும் செல்வதும் தெரியாமல் கடக்க அந்த நாட்கள் பெரும்பாலும் பெண்களுக்கு வாய்ப்பதில்லை. அந்த நாட்களிலும் வழமையான வேலைகள் பெண்களுக்கு இருக்கவே செய்யும். அப்போதும் அங்கு ஆண் என்பவன் ஆணாகவேதான் இருக்கிறான். அவனுக்கு மனைவி என்பவள் தனக்கு நேர்ந்துவிட்ட ஒரு அடிமையாகவே தெரிகிறாள். அதுபோன்ற திமிர்த்தனம் மனிதத்தன்மைக்கு எதிர்நிலையில் வைத்துப் பார்க்கப்படும் என்ற சராசரி அறிவற்றவனின் செயலேயாகும் என்பதை இக்கவிதையில் உணரலாம்.


இது போல தொகுப்பெங்கும் பல கவிதைகள். வாசியுங்கள். 

எல்லாம் புரட்சித்தீப்பந்தம் ஏந்திய கவிதைகள்


வாழ்த்துகள் தோழர்...

Tuesday, 22 July 2025

நசீபு


 

#நூல்_விமர்சனம்


தன்னைச் சுத்திகரிக்கும் சமூகக் கதைகள்


 சிறுகதைகள் என்பவை சிற்சில சம்பவங்களின் தொகுப்பு. அது வாசிப்பவனை கதைக்குள் ஒன்றச் செய்யவேண்டும். கதைக்குள் நிகழும் சம்பவங்கள் வாயிலாக ஏதேனும் ஒரு பாடத்தை உணர்த்தவேண்டும். அப்படிச் செய்யும் எந்தவொரு தொகுப்பும் வெற்றிக்கான முத்திரையைப் பதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. நசீபு சிறுகதைத் தொகுப்பு அப்படிபட்ட தொகுப்பு. தொகுப்பில் மொத்தம் ஏழு சிறுகதைகள். அனைத்தையும் தான் சார்ந்திருக்கும் இஸ்லாமியப் பின்புலத்திலிருந்து எழுதியிருக்கிறார். பழைமைவாதத்தின் முகத்திரையைக் கிழிக்கவும், பெண்களின் இருப்பு இஸ்லாமிய சமூகத்தில் எப்படி இருக்கிறது என்பதைக் காட்சிப்படுத்தவும், அங்கிருக்கும் ஆணாதிக்க சூழலை வெளிக்கொணரவும், அங்கும் வறுமையில் இருக்கும் குடும்பம் பசி போக்கத் திண்டாடும் சூழலையையும் தன்னுடைய தொகுப்பின் மூலமாக காட்சிப்படுத்தியுள்ளார் கதாசிரியர் மு.அராபத் உமர். 


ஷஜ்தா

பானுவின் அப்பா ஒப்புக்கொண்டபடி வரதட்சணைப் பணத்தைக் கொடுக்காததால் அவள் அனுபவிக்கும் இன்னல் எங்குவரைக்கும் போகிறது என்பதை கதை சொல்கிறது. இப்படிக் கதைகள் அனைத்துச் சமூகத்திலும் இருக்கிறது. நஜீம் கணவனாக இருந்தாலும் வீட்டில் தன்னுடைய அம்மா, மற்றும் அக்காவின் சொல் கேட்டு நடப்பவனாக இருக்கிறான். தனக்கு நல்லது நடந்தால் அக்காவால் நடப்பதாகவும் கெட்டது நடந்தால் மாமனார் வீட்டால் நடப்பதாகவும் எண்ணுகிறான். அதனாலேயே மனைவி என்றும் பாராமல் மிகவும் கீழாக நடத்துகிறான். வீட்டில் பானுவின் கொழுந்தன் பானுவிற்காகப் பேசினாலும் அவனுடைய பேச்சு எடுபடவில்லை. தன்னுடைய இரு பெண் குழந்தைகளை வளர்க்க நஜீமின் துணை அவசியம் என்பதால் மாமனார் வீட்டை எதிர்த்து தன்னுடைய தந்தையின் இறப்பிற்குக் கூடச் செல்லாமல் மனதால் புழுங்கும் பாத்திரம் பானுவிற்கு. வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பானுவின் வலிகள் கடத்தப்படுவது அவளின் பாத்திரப் படைப்பை சிறப்பாக்குகிறது. பானுவின் அம்மா, பானு திருமணம் முடித்த ஆரம்ப காலத்தில் உனக்கு எதுவும் மனக்குறைகள் இருந்தால் அதனை அல்லாவிடம் தொழு செய்துகொள். அவர் தீர்த்து வைப்பார் என்கிறார். அதையே கடைசி வரை தொடர்கிறார் பானு. இதன் மூலம் ஒரு பெண் என்பவள் தனக்குத் தீங்கு செய்பவர்களை எதிர்த்து நிற்க, கேள்விக்கு உள்ளாக்க வைக்கப்படாமல் இருப்பதற்கு கடவுள் என்பதையும், அவள் ஒரு பெண் என்பதையும் நினைவுபடுத்தும் பல விஷயங்கள் தொடர்ந்து பெண்களுக்கு மட்டும் கற்பித்துக்கொண்டே வரப்படுவதைச் சுட்டுகிறது. வரதட்சணை என்பதை தன்னுடைய அண்ணனின் மகள் என்றாலும் கேட்கும் காலம் என்பதை மாமியார் கதாபாத்திரத்தின் மூலமாகக் காட்டுகிறார். இக்கொடுமை இஸ்லாமிய சமூகத்தில் மட்டுமல்ல பல சமூகத்திலும் இருக்கிறது. இதனை உணரச் செய்யும் வேலையைக் கதை செய்கிறது. 


கியாமத்

பதினைந்து வயதே ஆன ஆயிஷா என்ற பெண்ணிற்கும் முப்பத்து இரண்டு வயது ஆணுக்கும் திருமணம் முடிகிறது. இவர்களுக்கு ரேஷ்மா என்ற பன்னிரண்டு வயது பெண் குழந்தை. திருமணம் முடிந்த காலத்திலிருந்தே ஆயிஷா மேல் சந்தேகம் கணவனுக்கு. குடும்பம் அவளை எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே அனுப்புவதில்லை. அவளின் அழகும், தன்னை விட மிக இளையவள் என்பதும் கணவனுக்கு அவள் மீது சந்தேகத்தை வரவழைக்கிறது. அது தன் மேல் உள்ள நம்பிக்கையின்மை. தன் அன்பின் மேல் வரவேண்டிய நம்பிக்கையின்மை. பழமையில் ஊறிப்போன குடும்பம் என்பதால் வயல் வேலைக்கு வரும் நபர்களுக்கு உணவளித்தல் கூட சந்தேகத்தைக் கிளறுகிறது. இந்த சமயத்தில் வீட்டின் பக்கமாக வரும் பாத்திமா என்ற பெண்ணோடு நட்பு. அந்த நட்பில் அவ்வளவு ஆத்மார்த்தம். கொஞ்சம் கொஞ்சமாக தன்னைப் பற்றி, தன்னுடைய வலியைப் பற்றி ஆயிஷா பாத்திமாவிடம் பகிர்கிறாள். வீட்டில் படுத்தும்பாட்டினால் தான் இறந்துகூட போய்விடுவேன் என்று ஆயிஷா கூறுகிறாள். ஆனால் பாத்திமாவின் பேச்சைக் கேட்டபின் அப்படியெல்லாம் பண்ணமாட்டேன். என் பிள்ளையை காலேஜ் வரைக்குமாவது படிக்க வச்சுட்டு ஒருத்தன் கையில் பிடிச்சுக் கொடுக்கும் வரை சாகமாட்டேங்க்கா என்று நம்பிக்கையுடன் செல்பவள் இறந்துவிட்டாள் என்பது எவ்வளவு துயரம். இறப்பின் பின்னர் மாமியார், கணவன், நாத்தனார், உறவுகள் என ஒவ்வொருவர் நடவடிக்கையும் சந்தேகம் அளிப்பதாக இருக்கிறது. ஆனால் இது ஆணாதிக்க சமூகம். இங்கு பெண்களின் பேச்சு எடுபடாது. ஆனால் உண்மையாக இரக்கம், அன்பு, கருணையால் நிரம்பிய ஒரு பெண் எப்படி இறக்கலாம்? அவளிடம் வலி இருந்தது. ஆனால் கோழைத்தனம் இல்லை. அவளை இப்படி யார் செய்திருப்பார்கள்? யார் யார் கொலையாளிகள்? அவள் என்ன தவறிழைத்தாள்? அவளைக் கொலை செய்துவிட்டு எப்படி நீங்கள் நல்லவர்களாகலாம்? என்ற கேள்வியை பாத்திமா, சையதலி மூலமாக எடுத்தாண்டுள்ள விதம் அருமையாக இருக்கிறது. தன்னைப்போல தன்னுடைய மகளும் இருந்துவிடக்கூடாது என்ற அக்கறையில் மகளை கல்லூரிப் படிப்பை முடித்து வைத்த பின்தான் திருமணம் செய்துவைப்பேன் என்ற ஆயிசாவின் எண்ணம் கல்வியின் முக்கியத்துவத்தைக் காட்டுவதாகவும் இள வயது திருமணத்திற்குள் அவளைத் தள்ளிவிட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் காட்சிப்படுத்துவதாகப் பார்க்கலாம். கதையின் இறுதிப் பத்தியில் சொன்னவாறு யாராச்சும் காப்பாத்துங்க என்ற துயர் நிறைந்த வார்த்தைகளுக்கு முன்னால், முன்கூட்டியே அவளின் வலி அறிந்தும் தூர நின்று கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் குற்றவாளிகளாக கைகட்டியே நிற்கிறோம்.


வெம்மை

ஃபஹீமாவின் மாமனார் இறந்துவிடுகிறார். வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற கணவன் திரும்பும் வரை ஃபஹீமாதான் பார்த்துக்கொள்ளவேண்டும். அவள் சித்த மருத்துவம் படித்தவள். அவளுக்கு மாமனார் இறக்கும் வேளை வந்துவிட்டது. நடக்கும் ஒருசில சம்பவங்களும் அதை உணர்த்தியது. எனவே, கூட இருங்க என்று கணவனிடம் கூறியும் கட்டாயம் போகவேண்டிய சூழல் என்பதால் சென்றுவிடுகிறான். இறப்பு செய்து கூறியபோதும் வருவதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லுகிறான். ஃபஹீமாவின் வற்புறுத்தல் காரணமாக வருகிறான். வந்தவன் அத்தாவைப் பார்த்தபோதும், அம்மாவைப் பார்த்தபோதும் அழவில்லை. ஃபஹீமாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அடக்கம் செய்துவிட்டு வந்த இரவில் அப்பா இறந்ததற்கு உங்களுக்கு கண்ணீர் வரவில்லையா, ஏன்? என்ற கேள்விக்கு பணம் பணம் என்று ஓடி ஓடி அப்பாவைக்கூட கவனிக்கவில்லை. அவர் கூட நான் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கடைசியாக அவர் உயிரோடு இருக்கும்போது கூட பார்க்கவில்லை என்று கூறி கண்ணீர் விடுகிறான். வாழ்க்கைக்காக பணம் என்று ஓடி உறவுகளை மறந்துவிடுகிறோம் என்பதை கதையை வாசிக்கும்போது உணரமுடிகிறது. கணவன் இறந்தாலும் அருகே சென்று அமர்ந்து பார்த்து அழுவதற்குக் கூட அருகே ஆண்கள் யாரும் இல்லை, அவர்கள் இனி காலையில்தான் வருவார்கள். இப்போது சென்று பார்க்கலாம் அழலாம் என்ற நிலையில் மாமியார் பாத்திரம் மூலமாக குறிப்பால் உணர்த்துகிறார் கதாசிரியர். எல்லா உணர்வுகளையும் இப்படிக் கட்டுப்படுத்தி வைத்திருப்பது எவ்வளவு வலி? இந்த நேரம் சிரிப்பதற்கு, இந்த நேரம் அழுவதற்கு? என்று பிரித்து வைப்பது எவ்வளவு பெரிய வன்மம் என்பதை மாமியாரின் கதாபாத்திரம் மூலமாக உணர முடிகிறது. ஃபஹீமாவால் குடும்பத்தை, அப்பாவை, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள இயலும் என்ற கணவனின் எண்ணப்படி அவள் சிறப்புற வழிநடத்துகிறாள். கணவனும் அவளின் வார்த்தைகளை காதுகொடுத்துக் கேட்கிறான். அதற்கு முறையான பதில் சொல்கிறான். ஃபஹீமாவின் பாத்திரப் படைப்பு சிறப்பாக உள்ளது. இயல்பான ஒரு குடும்ப வாழ்வைக் கண்முன்னே நிறுத்தியதும் பணம் மட்டும் குறிக்கோளாகக் கொண்டு இயங்கியதால் தன்னுடைய தந்தையைக்கூட இறுதியில் பார்க்க இயலவில்லை என்று தவறை உணரும் மகனின் இயல்புத் தன்மையும் கதையில் சிறப்பாக அமைந்துள்ளது.


இத்தா

அரசுக் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்க்கும் காஜா திடீரென்று இறந்து விடுகிறார். அவருடைய மனைவி ரோஜாவுக்கு அணிவிக்கும் வெள்ளை நிறப் புடவையைக் கண்டு பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகள் ஜெனி கதறுகிறாள். ஆனால் அங்கு நிலவும் சூழல் அதனை மாற்றுவதாக இல்லை. பெரிய மாமியார் பழைமையைச் சுமந்து நிற்கும் நபர். அவர் பிள்ளைகளுக்கு இதையெல்லாம் சொல்லி வளர்க்கமாட்டாயா என்று திட்டுகிறார். அடக்கம் எல்லாம் முடிந்த பின்னர் தன்னுடைய அம்மா ரோஜா இருக்கும் அறைக்குச் சென்று அவள் கேட்கும் கேள்வி, கணவன் இறந்தால் மனைவி வெள்ளை உடை உடுத்தினால்தான் கணவனுக்கு சொர்க்கத்தில் வெளிச்சம் கிடைக்கும் என்னும்போது மனைவி இறந்துவிட்டால் கணவன் வாழ்நாள் முழுக்க வெள்ளை உடை அணிந்தால் தானே மனைவிக்கு சொர்க்கத்தில் வெளிச்சம் கிடைக்கும். அதை ஏன் கணவன்மார்கள் பின்பற்றுவதில்லை என்ற கேள்வியை ஜெனி கேட்கிறாள். பழைமைவாதம் பதில் தெரியாமல் விழிக்கும் இடம் இது. ஹெச்.ஜி.ரசூல் ஊர்விலக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தோடு ஒப்புமைப்படுத்திப் பார்க்கவேண்டிய வினா இது. கதை வாயிலாக இளைய தலைமுறையின் இதுபோன்ற கேள்விகள் வெளிப்படல் கதாசிரியர் கையாண்டுள்ள நல்ல உத்தியும் கூட.  


நசீபு

பெண்களின்மீது காலம்காலமாக திணிக்கப்படும் வன்முறை என்பது அவர்கள் கேள்வி எதையும் கேட்டுவிடக்கூடாது. அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதுதான். சுபைதா என்பவள் காரணமே இல்லாமல் கணவன் இறப்பிற்கு முன்னர் மன்னிப்பு கேட்க நிர்பந்திக்கப்படுகிறாள். அவளும் சம்மதித்து தான் எதுவும் தவறு செய்திருந்தால் மன்னித்துவிடுங்கள் என்று மன்னிப்பு கோருகிறாள். இறக்கும் தருவாயில் கூட அன்பாக எதையும் பேசாமல் உதாசீனப் படுத்தப்படுகிறாள். இது பேரன் வரை நீள்கிறது. அவளுக்குள் ஆயிரம் வருத்தங்கள். ஆனால் அதைக் கேட்க யாரும் இல்லை. பெண்கள் தமக்குள் கூடி தமக்குள் வருத்தங்கள் பகிர்ந்து, தமக்குள் ஆறுதல் வார்த்தைகள் பெற்று வாழ்க்கையை ஓட்டிக்கொள்ளும்படியான கடமைக்கான வாழ்க்கையை மட்டுமே வாழ்ந்து தீர்க்கிறார்கள். அவர்கள் ஆண்கள் சொல்வதைக் கேட்டுச் செய்யும் பணியாளர்களாகவே உள்ளனர். அவர்களின் ஆசாபாசங்கள் கேட்க யாருமில்லை. சொன்னால் அதற்கும் ஆயிரம் தடைக்கற்கள். வேளாவேளைக்குச் சோறு, வருசத்துக்கு இரண்டு உடை என்பதுதான் அவர்களின் வாழ்க்கை என்று ஆண்கள் நிர்ணயம் செய்துவிடுகிறார்கள். அந்த உடையும் ஆண்களின் விருப்பப்படிதான். ஒரு நோன்பிற்கு பாவாடை, தாவணி கேட்கும் விருப்பத்தைக்கூட நிறைவேற்றித்தராமல் வேறு உடையை எடுத்துத் தருவதோடு அதனை உடுத்தாதற்காக அம்மாவைக் கோபத்தில் அறைந்து பயமுறுத்தும் அப்பா என்பது மகளுக்கு சாபம்தான். சுபைதாவின் காலம் முதல் பேரனின் கேள்வி வரை பல தலைமுறைகளாக பெண்களின் எதிர்பார்ப்பையும் அதற்கு கிடைத்த எதிர்வினையையும் கடந்து வாழும் பெண்கள் பரிதாபத்திற்கு உரியவர்களாக இருக்கிறார்கள். அது மீறப்படும் நாள் பயங்கரகரமானதாக இருக்கும் என்பதை கதையின் இறுதியில் வரும் சுபைதா வெத்தலை இடிக்கும் சத்தம் வழக்கத்தி விட வலிமையானதாக இருந்தது என்ற வார்த்தையால் கதாசிரியர் உணர்த்தியுள்ள விதம் மிகச் சிறப்பு.


பரக்கத்

கணவன் இல்லாத நிலையில் தன்னுடைய மகன் நிஜாமை வளர்க்கிறாள் ஜன்னத். லாரி ஓட்டுனரான அவன் வரும்பொழுதே பரக்கத் பெண்ணை அழைத்து வருகிறான். வேறு மதமாக இருப்பாளோ என்று எண்ணிக் கோபப்பட்ட ஜன்னத் தன்னுடைய மதம் என்பதால் சமாதானமாகி திருமணம் செய்து வைக்கிறாள். அவர்களின் திருமண வாழ்க்கையின் பயனாக ஒரு மகன் பிறக்கிறான். மகனின் பிறந்தநாளுக்கு வருவதாகக் கூறிச் சென்ற நிஜாம் இறந்துவிடுகிறான். ஒரு மாதத்தில் கையில் வைத்திருந்த பணம் யாவும் தீர்ந்துவிட்டது. துக்ககாலம் முடியும் முன்னர் இட்லிக்கடை எப்படிப் போடமுடியும் என்ற பரக்கத்தின் கேள்விக்கு ஜன்னத் அளிக்கும் பதில் அல்லாவிற்கு எல்லாம் தெரியும். நாம் நம் வாழ்க்கைக்காக இந்த வேலையைத் தொடங்குகிறோம். அதனால் அல்லா நம்மைத் தண்டிக்கமாட்டார் என்று பதில் கூறுகிறார். தெருவும் பரக்கத் கடை இட்லி ருசியில் துக்ககாலம் குறித்து எதுவும் பேசவில்லை என்பதாகக் கதை முடிகிறது. கதையில் முடிவெடுக்கும் நிலையில் பெண்கள் இருக்கின்றனர். அவர்களின் வாழ்வை அவர்களே தீர்மானிக்கின்றனர். அவர்களுக்குள் பிணக்கு இல்லை. ஆதலால் வெற்றி அவர்கள் கைவசம் வருகிறது. பெண்களால் சுயமாக உழைத்து ஆண் துணையில்லாமல் வாழ இயலும் என்னும் உத்வேகத்தைக் கொடுக்கும் கதை இது. 


ஈமான்

வறிய நிலையில் உள்ள இஸ்லாமியக் குடும்பம் கொரோனோ காலத்தில் வேலைக்கு எப்படி அல்லாடுகிறது என்பதையும் பசியையும், நோன்பையும் ஒரே காலத்தில் எப்படிச் சமாளித்தார்கள் என்று கதை பேசுகிறது. தொகுப்பை முன்வைத்துப் பேசுவது என்றால் பசி உள்ள இடத்தில் குடும்பத்தில் இணக்கம் என்பது இருக்கிறது. அங்கு பழமைவாதம் என்பது இல்லாமல் இருக்கிறது. கதையில் வரும் பக்கத்துவீட்டு அக்கா, கடைக்கார ராணி அக்கா போன்றோர் மதத்திற்கு அப்பாற்பட்டு உதவும் கதாபாத்திரங்கள். சிங்கிள் சோர்ஸ் என்ற பதத்தின்மூலம் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தின்மீது குற்றம் வாசித்த அரசியல், அவர்களின் வறுமை குறித்து எந்த இடத்திலாவது பேசியிருக்கிறதா என்றால் இல்லை. அதனை இந்தக்கதை உணர்த்துகிறது. 


 ஆம் என்பதை ஆம் என்பதற்கும் இல்லை என்பதை இல்லை என்று சொல்வதற்கும் கூட இங்கு எத்தனையோ தடைகள். மேல்பூச்சுடன் சொல்லி புதியதொன்றைக் கட்டமைக்க விரும்பி சொல்ல வந்ததன் சாயல் எதுவுமற்றுக் கடந்துபோய்விடும் அபத்தம் நிறைந்த உலகம் இது. ஆனால் நசீபு சிறுகதைத் தொகுப்பு இதையெல்லாம் உடைத்து எறிந்து நம்மை தனக்குள் இழுத்துக் கொள்கிறது. இக்கதைகள் சொல்லும் மனிதர்கள் மேல் நாம் கொள்ளும் வாஞ்சையையும் வெறுப்பையும் வைத்து எவ்வளவு தூரம் அவர்களுள் நாமும் ஒருவராக மாறிப்போகிறோம் என்பதை ஒவ்வொரு கதையையும் வாசிக்கும்போது உணர முடிகிறது. மொத்தம் ஏழு கதைகள். இஸ்லாம் மக்கள் உபயோகிக்கும் சொற்கள் தான் தலைப்பு. வெம்மை ஒன்றைத் தவிர்த்து. இன்னொன்று, கடைசிக் கதை ஒன்றைத் தவிர்த்து பிற கதைகளில் இறப்பும் அதனைச் சுற்றிய களமும் தான் கதையின் மையமாக இருக்கின்றன. பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். முதல் சிறுகதைத் தொகுப்பு என்று தோன்றாதவாறு எழுத்து அமைந்திருப்பது சிறப்பு.


நூல் பற்றி:

நசீபு

மு.அராபத் உமர்

டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்

பக்கம் எண்: 104

விலை: ரூ 120/=


யாழ் தண்விகா 


❣️

Monday, 21 July 2025

அன்பளிப்பு

 


அன்பளிப்பு

கு. அழகிரிசாமி

சீர்வாசகர் வட்டம்

விலை ரூபாய் 10

பக்கம் 32


சாகித்திய அகாடமி பால புஷ்கார் விருது பெற்ற விஷ்ணுபுரம் சரவணன் அவர்களின் இனிய எளிய சுருக்கமான அணிந்துரையுடன் நூல் ஆரம்பமாகிறது. குழந்தைகளை யார் என்ன என்ற பேதம் பார்த்தாலே அது இக்கதையில் வருவதைப் போல நாசுக்காக சொல்வதே நச்சென்று அறைவதுபோல் இருக்கும்.


அழகிரிசாமி, சாரங்கன், பிருந்தா, சித்ரா, சுந்தரராஜன், கீதா, தேவகி எல்லோரும் நண்பர்கள் என்று தான் கூற வேண்டி இருக்கிறது. இதில் அழகிரிசாமி ஒரு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர். மற்ற அனைவரும் குழந்தைகள். பள்ளியில் படிப்பவர்கள். சுந்தரராஜனும் சித்ராவும் வயதில் சற்று மூத்தவர்கள். சனிக்கிழமை இரவில் கொஞ்சம் கூடுதல் நேரம் தூங்க கூடியவர் அழகிரிசாமி. ஏனென்றால் ஞாயிற்றுக்கிழமையன்று சற்று கூடுதலாக ஓய்வு எடுத்துக் கொள்ளும் மனநிலை அவருக்கு. அப்படித்தான் சனிக்கிழமை இரண்டு மணியைப் போல தூங்குவதற்குச் செல்கிறார். எப்பொழுது படுத்தாலும் ஒரு அரை மணி நேரம் கூடுதலாக தூக்கம் வருவதற்கு ஆகிவிடுகிறது. அப்படிப்பட்டவர் காலையில் ஏழ தாமதமாய் விடுகிறது. அவரை மேலே சொன்ன வாண்டுகள் எழுப்பத் தொடங்கி விடுகிறார்கள் என்பதில் தான் கதை ஆரம்பமாகிறது. மேலே சொன்னவர்களில் சாரங்கன் கொஞ்சம் அமைதியான சுபாவம். எங்களுக்கு புத்தகம் வாங்கி வரவில்லையா என்று குழந்தைகள் அவரை தொந்தரவு செய்து எழுப்பி கேட்கின்றனர். இவர் வாங்கவில்லை என்று கூற வீட்டிலிருந்து அவரது புத்தகங்களை எல்லாம் கீழே தள்ளி தேடுகின்றார்கள். பின்னர் இவரே புத்தகங்களை எடுத்து கொடுக்கிறார். சித்ராவுக்கும் சுந்தரராஜனுக்கும் என் பிரியமுள்ள சித்ராவுக்கு அன்பளிப்பு, என் பிரியம் உள்ள சுந்தரராஜனுக்கு அன்பளிப்பு என்று எழுதி என்று கையெழுத்துட்டு கொடுக்கிறார். பிருந்தாவும் தேவகியும் எனக்கு என்று கேட்க சித்ராவிடமும் சுந்தரிடமும் வாங்கி படித்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். அவர்களும் மறுப்பேதும் சொல்லாமல் ஏற்றுக் கொள்கின்றனர். 


அவ்வப்போது வந்து வீட்டில் விளையாடி பேசி மகிழ்ந்து ஆடிப்பாடி இருந்த இந்த குழந்தைகளில் பிருந்தா மட்டும் வரவில்லை. பிருந்தாவிற்கு என்ன ஆயிற்று என்று கேட்க அவளுக்கு காய்ச்சல் என்று மட்டும் பதில் வருகிறது. ஒரு நாள் இரவு எட்டு மணி போல வெளியில் அமர்ந்திருக்கிறார் அழகிரிசாமி. பிருந்தா வீட்டு வேலைக்காரனிடம் பிருந்தாவிற்கு என்ன ஆயிற்று என்று கேட்க, அவளுக்கு காய்ச்சல். ஒன்றும் முடியவில்லை. ஒவ்வொரு நாளாக அவள் இளைத்துக் கொண்டே செல்கிறாள் என்று கூற அழகிரிசாமி அச்சிறுமியைப் பார்த்து வர மறுநாள் ஒத்திப் போட்டாலும், மனசு கேட்காமல் உடனே கிளம்புகிறார். போய் பார்க்க அவள் மாமா மாமா என்று அன்பை கொட்டுகிறாள். அவள் அவரை விடாமல் எங்கே இருங்கள் மாமா என்று கூறும்போது மறுநாள் காலை வருகிறேன் என்று கூறிவிட்டு திரும்புகிறார். மறுநாள் காலையும் பிருந்தாவை வந்து பார்க்கிறார். சற்று நேரம் அளவளாவி விட்டுத் திரும்புகிறார். இதை பார்த்துக் கொண்டிருந்த சாரங்கன் வாங்க மாமா வாங்க மாமா என்று வீட்டுக்கு அழைக்கிறான். இவர் வரும் ஞாயிற்றுக்கிழமை வருகிறேன் என்று கூறிவிட்டு சென்று விடுகிறார். பிறகு பிருந்தாவிற்கு ஒரு கட்டத்தில் குணமாகி விடுகிறது. இவர் வந்து சென்றதால் தான் அந்த காய்ச்சல் குணமானது என்று கூறக் கேட்கிறார். அதன் பின் சாரங்கன், பிருந்தா உட்பட அனைத்து வாண்டுகளும் அழகிரிசாமி வீட்டிற்கு வந்து செல்கின்றனர். சாரங்கன், வால்ட் விட்மன் எழுதிய ஒரு நூலை அழகிரிசாமியிடம் கேட்கிறான். நான் உனக்குச் சொல்லி இருக்கிறேன் அல்லவா இது பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது நீ எடுத்து படித்துக் கொள். அப்பொழுது தான் உனக்கு புரியும் என்று கூற இவன் அழுது கொண்டே தன்னுடைய வீட்டிற்குச் சென்று விடுகிறான். மறுநாள் சாரங்கன், அழகிரிசாமியை தன்னுடைய வீட்டிற்கு அழைக்கிறான். நீங்கள் ஞாயிற்றுக்கிழமை வருகிறேன் என்று சொன்னீர்களே வாருங்கள் என்று கூறுகிறான். இவருக்கு பிருந்தா அவர்கள் வீட்டிலும், தெரியாத அப்பா தெரியாத அம்மா என்ற சூழ்நிலையிலும் வழியில்லாமல் அந்த குழந்தைக்கு காய்ச்சல் என்பதால் வீட்டிற்கு சென்று பார்த்தார். இப்பொழுது இவன் வீட்டிற்கு என்ன காரணம் சொல்லி செல்வது என்று எண்ணி மறுக்கிறார். சாரங்கன் வீட்டிலும் அவனுடைய அம்மா அப்பா தெரியாதவர்கள் என்ற நிலையில் எப்படி வீட்டிற்கு செல்வது என்று எண்ணி மறுக்கிறார். அவன் அழுது கொண்டே இருக்கிறான். சரி நான் வருகிறேன் என்று கூறி சாரங்கனின் வீட்டிற்கு செல்கிறார். சாரங்கன் அங்கு இவருக்கு உப்புமாவும் காபியும் கொண்டு வந்து தருகிறான். இவருக்கு இதை என்ன சொல்வது என்று தெரியாமல் மருந்து போல நினைத்து சாப்பிட்டு விடுகிறார். வீட்டில் அவ்வளவாக வசதி இல்லை என்பது புரிகிறது. அவனுடைய அப்பா இவரை வீட்டில் பார்க்கிறார். வாருங்கள் என்று கூறிவிட்டு அவரும் சென்று விடுகிறார். ஒரு பவுண்டன் பேனா ஒன்றை எடுத்து அழகிரிசாமியிடம் கொடுத்து சாரங்கன் என்ன செய்கிறான் என்பதுதான் கதை.


கதையின் ஆரம்பத்தில் "இரவில் வெகு நேரம் கண்விழித்தால் உடம்புக்கு கெடுதல் என்று எங்கள் பாடப் புத்தகத்தில் போட்டிருக்கிறது மாமா" என்று சாரங்கன் கூறுவதை இந்த இடத்தில் யோசிக்க வேண்டியிருக்கிறது. அதிகம் பேசாத சிறுவன் படிப்பில் சிறப்பாகவும் இருப்பான் என்பதை இவ்விடத்தில் கவனிக்க வேண்டியிருக்கிறது. தனக்கு அன்பளிப்பு கிடைக்காத இடத்தில் வேண்டாம் என்று ஒதுங்கி கொள்வார்கள் என்று நாம் நினைப்போம். ஆனால் அவர்கள் என்ன விதமாக யோசிப்பார்கள் என்பதையும் நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது. பிருந்தா தன்னுடைய உடல் நலன் தேறியதற்கு காரணம் அழகிரிசாமியின் அன்பு என்பதையும் இந்த இடத்தில் நாம் குறிப்பிட்டாக வேண்டும்.


நூலில் இருந்து,

"உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்வதும், அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டு உணர்ச்சியும், ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போல பேசி, குழந்தையைப் போல ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டு பொம்மையாகக் கருதி அதற்குத் தக்கவாறு நடந்து கொள்ளுகிறார்கள். ஆனால் அந்த சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை. அவர்களுடைய அன்பில் அந்த விளையாட்டு உணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள். இந்த உண்மை எனக்கு என்றோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனதில் தைத்தது. அன்று முதல் நான் அவர்களைக் குழந்தைகளாக நடத்தவில்லை. நண்பர்களாக நேசித்தேன். உற்ற துணைவர்களாக மதித்தேன். உள்ளன்பு என்ற அந்தஸ்தில் அவர்களும் நானும் சம உயிர்களாக மாறினோம்".


வாசிக்க வேண்டிய கதை.