Friday 27 March 2020

எங் கதெ #இமையம்

எங் கதெ
#இமையம்

43 வயது உடைய விநாயகம் திருமணம் முடிக்காமல் கமலா என்பவரோடு எல்லாமுமாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாகப் பேசும் கமலாவுக்காக எல்லாவற்றையும் விடுத்து அவளே கதி என்றிருக்கிறான். அவள் மேல் இவனுக்கு சந்தேகம். அதற்குத் தகுந்தாற்போல் சிற்சில சம்பவங்கள் நடக்கிறது. ஆனால் அவள் எப்போதும் போல் பேசுகிறாள் எதுவும் நடக்காதது போல. பலமுறை அவளிடம் சண்டை போட்டுத் திரும்புகிறான். இவன் வீட்டில் அம்மா, அப்பா, மூன்று தங்கைகள், இவன் தம்பியாக வரும் அம்பலவாணன் என பலரும் இவன் நிலை குறித்து பெரும் வேதனை கொள்கிறார்கள். ஒரு இளைஞனின் காதல் குறித்துப் பேசும்போது கொண்டாடும் விதத்தையும் அதில் ஏற்படும் பிரிவின் வலியையும் விநாயகத்தின் வழியாக சொல்லி வருகிறார் இமையம். கணவன் இழந்தவள் கமலா, இரு பெண் குழந்தைகள், அவளின் மேலதிகாரி, அவளின் அப்பா, அம்மா என பாத்திரங்கள் இருந்தாலும் மிக குறைவான இடங்களே அவர்களுக்கு. ஒரு கட்டத்தில் கமலா மேல் வெறுப்புக் கொண்டு அவளைக் கொலை செய்து தானும் இறந்துவிட முடிவெடுத்து அவளிடம் நோக்கிச் செல்கிறான் விநாயகம். என்ன முடிவாக இருக்கும் என்பதை வாசித்து உணருங்கள்.

ஆசிரியர் தன் கதை கூறுவது போல அவ்வளவு இயல்பாக வந்திருக்கிறது நாவல். பாமா எழுதிய கருக்கு நாவல் போல இது ஒரு எழுத்து நடை. கிராமத்து சொல்லாடல் அப்படியே. பல வார்த்தைகள் அப்படியே நம்மை கிராமத்துக்குள் இழுத்துச் செல்வது போல இருக்கின்றன.

பாலு குடிச்சிக்கிட்டு இருக்கும்போதே தூங்கிப்போற குழந்தை மாரி பாய விரிச்சதுமே அவ தூங்கிட்டா.
வெதய வெதச்சவன் தூங்குனாலும் அவன் வெதச்ச வெத தூங்காதில்லையா? அந்தமாரிதான் நான் தூங்கல.

கூரயிலிருந்து தண்ணி எறங்குற மாரி எங் கண்ணுல தண்ணி எறங்குச்சி.

பொங்கக் காசி கொடு மாமான்னு மூணு தங்கச்சிப் புள்ளைங்களும் என்னெச் சுத்திக்கிச்சி. வெறும் மூணு ரூபாதான் இருந்திச்சி. எதிரில ஏழெட்டுப் புள்ளைங்க. அதுகளப் பாத்ததும் துணியில்லாம நிக்குற மாரி இருந்திச்சி.

வெலக்கி வாங்குனவன் இயித்துக்கிட்டுப் போற ஆடு மாரி நான் வூட்ட வுட்டு வெளியே நடந்தன். ஆட்டுக்காரி மாரி எங்கம்மா வாசல்ல நின்னு என்னயே பார்த்துக்கிட்டு இருந்திச்சி...

இப்படிப் பல இடங்கள்.
வாசியுங்கள்
நீங்கள் வினாயகமாக மாறலாம்...
கமலாவாக மாறலாம்.
அல்லது இவர்களை வேடிக்கை பார்க்கும் ஊர்க்காரர்களாக மாறலாம்.

வாழ்த்துகள் தோழர் இமையம்...
க்ரியா பதிப்பகம்.

யாழ் தண்விகா