Monday 30 May 2022

லூசாடா நீ...


 பேசும்போது சந்தோசப்படுறோம்

பேசாதபோது வருத்தப்படுறோம்

பேசாதபோதும் வருத்தப்படகூடாது என்பதற்காகத்தான் இப்போது பேசிக்கொண்டிருக்கிறோம்.

இந்தப் பேச்சு தான் நினைவாக மாறி

நம்மைக் காக்கும்...


ப்பா... எவ்ளோ அறிவா பேசுறீங்க...

தேங்க்ஸ்ப்பா. இனிமே வருத்தப்பட மாட்டேன்ப்பா...


ஏன்டி வென்ன... அப்போ பிரிஞ்சிருக்கும்போது உனக்கு வருத்தம் வராதா...


லூசாடா நீ... 


#ஆத்தீ_கோவமாயிட்டாபோல...


🤔

Saturday 28 May 2022

அழகென்ற சொல்லுக்கு...


 #அழகென்ற_சொல்லுக்கு...


❣️

ஒரு பூவைப்போல

நீ நடந்து செல்கிறாய்

ஒரு வண்டைப்போல

நான் தொடர்ந்து வருகிறேன்


❣️

நீ பேசுவதையெல்லாம்

கவிதை என்கிறேன்


அப்படியானால்

நீ யார்?


❣️

சிலை கல்லாலானது என

யார் சொன்னது?


❣️

பருவம் தொடங்கியது என்பது ஊருக்கு.

பருவம் பூத்தது என்பது உனக்கு.


❣️

நீ சிரிக்கும் சிரிப்பனைத்திற்கும்

வெல்லச் சிரிப்பென்று பெயர்


❣️

எக்குளத்தின் மீன்கள்

உன் கண்கள் எனக் கண்டு

பாதுகாக்கவேண்டும்

அக்குளத்தை!


❣️

உன் அழகுதான்

உனக்கே தெரியாமல்

தெனாவெட்டாகப் பார்க்கிறது என்னை.

பவ்யம் காட்டுதலை விட

வேறென்ன செய்ய இயலும் நான்...


❣️

எதிரெதிரே அமர்ந்து

பழச்சாறு பருகுகிறோம்.

இதழ்கள் வழியாக

நீதான் உயிருக்குள்

சென்று கொண்டிருக்கிறாய்...


❣️

ஒரு கல்யாணம்

இரு குழந்தைகள் என

வாழ்ந்துவிடத்தான் ஆசை.

பேராசை

நாம் காதலர்களாகவே

வாழ்ந்து மடிவதில்தானிருக்கிறது.


எது வேண்டுமானாலும்

வெல்லட்டும்.


❣️

என் கவிதைகள் அனைத்தையும்

வாசித்து விடுகிறாய்.

அதென்னமோ

நாம் வாழ்ந்த நாட்களைச் சொல்லும்

கவிதை வாசிப்பின் போதுதான்

வரிகளுக்கு முத்தம் கிடைத்துவிடுகிறது...


❣️

அருகருகேயமர்ந்து

புகைப்படம் எடுக்க ஆசை நிறைய.

பயம் காரணமாக

ஒத்திப் போடுகிறாய் ஆசையை.

ஆனாலும்

உயிரால் நாம் வாழாமல் இருக்கிறோமா என்ன...?


❣️

ஒவ்வொரு கவிதையைப் படித்தபின்பும்

யாருக்கு இந்தக் கவிதை என்ற கேள்வியோடு நிமிர்வாய்.

உன்னைப் பார்த்தபடியே நிற்பேன் நான்.


புரியாதா பேரன்பே...!


❣️

எப்போப்பாரு

காதல் காதல்...

வேறொன்னும் தெரியாதா?


காமம் தெரியும்...


காதலிச்சே தொலை எருமை...


❣️

கவிழ்த்து வைக்கப்பட்டுள்ள

கோப்பையிரண்டிலும்

போதை வஸ்து.


நீ கற்சிலையல்ல

கள் சிலை...


❣️

இமைகளுக்கு மையிடும் லாவகத்தில்

தெரிவதெல்லாம்

வாளினைக் கூர் தீட்டும் உத்தி...


❣️

ஒருமுறை முத்தமிட்டு

அமைதிப்படுத்தேன்

என் இதழ்களை...


நீ பேசும்போது

அசையும் உன் இதழ் கண்டு கண்டு

துடித்துக் கொண்டேயிருக்கின்றன

அவை...


❣️

இடுப்பில் என்னவோ

ஊர்வது போலருக்கு

பார்த்துவிட்டு வருகிறேன் எனப் பேசும்போது சொல்லிவிட்டு எழுந்து சென்றாய்...


ம்மென்றேன்


பார்த்துவிட்டு வந்து 

ஒன்றுமில்லை

அப்புறம் ஏன் அப்படித் தோணுச்சு என

ஒன்றும் புரியாமல் கேட்டாய்


நீ கொஞ்ச நேரத்திற்கு முன்னால்

தரை பார்த்துப் பேசும்போது

என் கண்கள் உன் இடையை

மேய்ந்து கொண்டிருந்தது.

இப்போது வரை என் கண்கள்

என்னிடம் வந்து சேரவில்லை

அது தான் இடையுள்புறம் சென்று

ஊருகிறதோ என்னவோ என்றேன்


என்னவோ ஊர்வதாகச் சொன்ன

இடையில் ஒரு கை

கண்களில் ஒரு கை வைத்து மறைத்து

ப்ளீஸ் கூச்சமாயிருக்கு

பார்வையால் மேயாதே என்னை

என்றாய்


எப்போது கூச்சம் போகும்

என்றேன்


உயிரால் என்னுயிர் மேல்

ஊர்ந்து கொள்.

இப்போது வேண்டாம் என்றாய்.


என் கண்களைப் பிடித்து

என்னிடம் தந்தபின்னர்தான்

உன் கண்கள் திறந்தாய்.

வெட்கத்தின் ரேகைகள் ஒவ்வொன்றாய் உதிரத் தொடங்குகிறது உன்னிலிருந்து.

கைகளில் பிடித்து

தன்னை நிரப்பிக்கொள்ளும் காதலுக்கு இப்போது

வெட்கத்தின் சாயல்...


❣️

கவிதை கவிதைன்னுக்கிட்டே

வாழ்க்கையில உருப்படாமப் போயிடப் போறடா


உன்னைப் பற்றி எழுதிட்டுத் திரிவதைத் தவிர

உருப்பட வேறு வழியில்லை அன்பே...


❣️

நீயழுதால் அழுது

சிரித்தால் சிரித்து

மௌனமாயிருந்தால் மௌனமாயிருந்து...


நீ ட்ராமா தான் பண்ற என்பது

உனக்குத்தான்.

எனக்கில்லை.


❣️

கர்த்தரின் பரிசுத்த நாமத்திற்கு

ஸ்தோத்திரம்...

போலவே

உன்னோட பரிசுத்த நாமத்திற்கு

என்னோட ஸ்தோத்திரம்...


❣️

நினைவால்

நீ உறங்குதலை என்முன் வரவழைத்து

வழக்கம்போல் 

உன் அழகின்மேல்

என் கண்களால் முத்தமிட்டபின்

உறங்கத் தொடங்குகிறேன்


தூரமே... தொலைந்து போ...


29.05.2022

02.19 அதிகாலை


யாழ் தண்விகா

Thursday 26 May 2022

ஆதலினால்...




 ஒரு பைத்தியத்திற்கான

அத்தனை தகுதியும் 

எனக்கிருப்பதாகச் சொல்கிறாய்

ஆம் என்பதைத் தவிர

வேறு வழியில்லை 

என்றில்லை

குற்றம் சாட்டுவது என்றபின்

சமாதானங்கள் என்ன 

செய்துவிடப் போகிறது

பைத்தியம் காதலிக்கும்

பைத்தியத்தின் காதல் 

பைத்தியக்காரத்தனம் தான்

பைத்தியத்தின் ஏகாந்தம்

யாருக்கும் எந்த சலனத்தையும்

உண்டாக்காது

பைத்தியத்தின் சொற்கள்

யாருக்கும் புரிய அவசியமில்லை

பைத்தியத்தின் சுவாசம் குறித்து

யாரும் கவலைப்பட அவசியமில்லை

பைத்தியத்தின் உணவு குறித்தும்

அவசியமில்லை

பசித்தால் கையேந்தப் போகிறான்

பைத்தியத்தின் இருப்பை

யாரும் பார்த்துக் கொண்டேயிருக்க

என்னவிருக்கிறது

காணாமல் போனால் 

பைத்தியம் எங்காவது போயிருக்கும்

என்று சொல்லிக் கடக்கலாம்

பைத்தியத்தின் பார்வைக்கு இரங்கி 

யாரும் கண்ணீர் துடைத்து

வீட்டில் சேர்த்துக் கொள்ளப் போகிறார்களா

பைத்தியத்தின் பாடலுக்கு

யாரும் தலையாட்ட வேண்டியதில்லை

பைத்தியத்தின் வேண்டுகோள்

ஒன்றே ஒன்றுதான்

அதன் காதுபட

பைத்தியம் என்றழைக்க வேண்டாம்

என்பது மட்டுமே.


இனியொரு போதும்

பைத்தியம் என்றழைக்காதே

என் காதல் 

இன்னும் பைத்தியமாகிவிடும்...


யாழ் தண்விகா

Wednesday 25 May 2022

உயிர் மீளாத நாட்கள்



 ❣️

கடைசியாய் நீ எதிர்பார்த்தது நடந்தேறிவிட்டது 

எப்பொழுதும்போல் காத்திருக்க 

மனது சொல்கிறது காத்துக்கொண்டிருக்கிறேன் 

அதே வலிகளுடன் 

அதே காதலுடன் 

அதே காமத்துடன் 


❣️

நீ இல்லாத நாட்கள் 

உயிர் மீளாத நாட்கள்


❣️

என்னை நான் எப்படி 

மீட்டெடுக்கப் போகிறேன் 

தெரியவில்லை 

ஆனால் நான் உன்னில் 

உரையாடிக் கொண்டிருக்கிறேன் உனக்குத் தெரியாமல் 

உன் காதலுக்குத் தெரியாமல் 

உன் உயிருக்குத் தெரியாமல் 

உன் உணர்வுகளுக்குத் தெரியாமல் 

என் காதல் எப்பொழுதும்போல் உன்னோடு இருக்கிறது 

என்னை நான் எப்படி 

மீட்டெடுக்கப் போகிறேன் 

தெரியவில்லை


❣️

உன் உறவற்ற நேரங்களில் 

உயிர் தொலைந்து போனால் என்ன


❣️

என் ரேகைகள் எல்லாம் 

உன் ஸ்பரிசம் என மாறிக் கிடக்கிறது

நான் நானாகப் புறத்திலும் இல்லை

அகத்திலும் இல்லை


❣️

கோட்டை சிதிலமடைந்து போகும் முன்பு உயிர் பிரிந்துவிட வேண்டும்

கோட்டையில் வாழ்வதும் 

கோட்டை சிதிலமடைந்து போனபோது வாழ்வதும் 

இனி கோட்டையில் வாழ்ந்த வாழ்வு

கிடைக்குமா என வாழ்வதும் 

எப்படி ஒரு வாழ்வாக இருக்கும்...

உன்னோடு நான் மீண்டும் கூடுவேனா...


❣️

எனக்கென்று எந்தத் தனிமையும்

வாய்க்கவில்லை நேற்று 

தனிமைக்கென்று வாய்த்திருக்கிறேன் இன்று...


❣️

எரியாத அடுப்புக்குள் பூனை படுத்திருப்பது போல 

நீயிருந்த இடத்தில் உன் நினைவை வைத்து அதன்மேல் என் கைகளைப் படரவிட்டுள்ளேன்...


❣️

நீயும் நானும் வாழ்ந்த ஏகாந்த உலகத்தில்

காதலும் காமமும் பிரதானமாகக் கிடந்தது 

இன்று நீயும் நானும் உடலாக மட்டும் கிடக்கிறோம் 

காதலும் காமமும்

பரிதவித்துக் கிடக்கிறது...


❣️

இந்தக் காலத்திற்காகவா 

நாம் காதலித்துக் கிடந்தோம்...


யாழ் தண்விகா

உன் குரலில் என் வாழ்க்கை...


 கொஞ்சம் மழை தான்

வெயில்தான்

பனிதான்

மந்தமான வானிலைதான்

வெக்கைதான்

எல்லாம் அதீதமாகுப் பூக்கும்

குறைவாக மாறும்

நீ அருகில் இருப்பதைப் பொறுத்தோ

தூரத்தில் இருப்பதைப் பொறுத்தோ...


பெரு மயக்கத்திற்காகவே

கழுத்தின் வழியாக

காது மடல் தீண்டி

பின்

முன் முகம் பார்த்தல்...


எந்தச் சாயலும் இல்லாத

அழகு உன்னிடம்.

அது எதில் தான் இல்லை

பேசுவதில்

நடையில்

நடனத்தில்

உடையில்

முத்தத்தில்

கட்டியணைப்பில்

கவிதையில்

வெட்கத்தில்

கனவில்

...

ஆதலினால்

உன்னைப் பேரார்வத்துடன் எப்போதும் காதலிப்பேன்...

யாழ் தண்விகா

❣️