Wednesday 20 January 2021

108 காதல் கவிதைகள் #ஆத்மார்த்தி

 108 காதல் கவிதைகள்

#ஆத்மார்த்தி


வதனம் வெளியீடு


குட்டிக் குட்டி கவிதைகளாக 108.

காதல் ஒரு போதும் திகட்டாது. அதற்கு தொடக்கம் மட்டுமே. முடிவு இல்லை. நீள் பயணத்துடன் அதனை ஒப்பிடலாம். இலக்கில்லாத வானம் அதற்கு. அங்கு நதி, மழை, கடல், வனம், கவிதை, நட்சத்திரம் எல்லாம் உண்டு. உங்களுக்கு என்ன தேவையோ அதை அடையலாம். கண்கள் மூடி கண்ட தேவதையை கண் திறந்து காணலாம். காதல் ஒரு தவம். வரம். தேடல். ஊற்று. நிசப்தம். எல்லாம் தான். இந்த நூல் இளையராஜாவின் how to name it இசைத் தொகுப்பிற்கு சமர்ப்பணம் செய்துள்ளார் தோழர். எப்படி பெயரிடுவது காதலுக்கும் இசைக்கும்... 


ஊடல், கூடல் எல்லாம் உண்டு இதனில். எதுவாக இருந்தாலும் கொண்டாடுகிறது கவிதை.

எனக்குப் பிடித்தவை எதுவும்

உனக்குப் பிடித்தவற்றுடன்

ஒத்துப்போகவே இல்லை

என்கிற ஒன்று

ஒத்துப்போகிறது

நமக்குள்...

என்பது ஊடலா கூடலா...!


ஆச்சர்யம் நிறைந்தது காதல். எதிர்பாராத ஒன்று. எப்போது எப்படி யாரால் எங்கிருந்து... இதோ பாருங்களேன்...

உன் மீது

எனக்கு

எந்த ஆச்சர்யமுமில்லை

என் 

ஆச்சர்யமெல்லாம்

உன்னைப் 

பின்தொடரும்

என் மீது தான்...


ஆலயம் புனிதம். அங்கு கடவுள் , பிரார்த்தனை மட்டும் தான். இது காதலர்களுக்குமா... காதல் எங்கும் தொடரும். கோவிலிலும்.

கோயில் பிரகாரத்தில்

வரிசையாய்

சிற்பங்களை

ரசித்துக்கொண்டே

நகர்ந்தாய்.

உன்னை

ரசிப்பதற்காக

வரிசையாய்

வந்துகொண்டிருந்தன

சிற்பங்கள்.

காதலிக்கும் அனைவருக்கும் காதலியின் அழகு பிரமாண்டம் தான். யார் தேவதையாக இருந்தாலென்ன சிற்பமாக இருந்தாலென்ன... காதலிக்குப் பின்னால் தான். 


கிராஃபிக்ஸ் என்ற கவிதை சிறுவயது குரூப் போட்டோவை அளித்து தன்னை கண்டுபிடிக்கச் சொல்லும் காதலி, அவளிடம் கண்டுபிடித்ததை கூறாமல் அவள் அருகில் அமர்ந்திருந்த ஒருவனைத் தூக்கிவிட்டு சின்ன வயதில் உள்ள தன்னை உட்கார வைக்கிறார் கவிஞர். சுயநலம் தான். அது காதலுக்கானது. காதலிக்கானது. வாழ்வுக்கானது.


காதலை தன் கோணத்தில் மட்டும் காணாமல் காதலியையும் பேசவிட்டு ரசித்திருக்கிறார் கவிஞர். பேரம் என்றொரு கவிதை. கடையில் பேரம் பேசும்போது கேட்பதைக் கொடுக்கச் சொல்கிறாள் காதலி. மறுக்கிறான் காதலன். அப்படியே கொடுக்கவா முடியும் என்கிறான். அவள் அமைதியாக சொல்கிறாள்

"நீ கேட்டதை

அப்படியே தானே 

கொடுத்தேன்" இந்த வரிகள் வாசிக்கும்போது

 அவரவர் காதலியின் முகம் கண்முன் வந்து போகும். நாம் கேட்டதும் அவள் அளித்ததும் நினைவுக்கு வந்து உயிரை சில்மிசம் செய்து சிரிக்க வைக்கும். ரசிக்க வைக்கும்.


இன்னும் பலப்பல கவிதைகள்.

முத்தக் கவிதை ஒன்று.

"முத்தமிடவா என்றேன்

கைகளை நீட்டினாய்

கையா நான் கேட்டது

என்றேன்

கண்மூடி

இதழ்கள் காட்டினாய்"


பிரிவுக் கவிதை ஒன்று.

"நீ இல்லாமல்

எப்படி வாழவேண்டும்

என்று அறிவுரைகள்

அள்ளி வழங்கிச் சென்றாய்

அதெல்லாம் இருக்கட்டுமடி

முதலில் 

தூங்குவதற்கு மட்டும்

ஒரு வழி சொல்"


இப்படி இப்படியாக 108 கவிதைகள். பாரதி கிருஷ்ணகுமார் தோழர் வழங்கிய அற்புத அணிந்துரையுடன். அதில் அவர் கூறியுள்ள "பாரதி எழுதினான், "கல்லாய்ப் பிறந்தால் காந்தக் கல்லாய்ப் பிற; செடியாய்ப் பிறந்தால் தொட்டால் சிணுங்கிச் செடியாய்ப் பிற. மனிதனானால் காதல் செய்..." என்பதோடு நிறைவு செய்யலாம் இவ்வாசிப்பு அனுபவத்தை.


காதலில் வாழ

வாசிக்கலாம்.


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா