Wednesday 12 August 2020

#சிலேட்டுக்குச்சி_சக. முத்துக்ண்ணன்

 #சிலேட்டுக்குச்சி 

கட்டுரைத்தொகுப்பு 

#சக_முத்துக்கண்ணன் 


பாரதி புத்தகாலயம் வெளியீடு

விலை ரூ 110/-


Muthukannan Muthukannan


பள்ளியில் பயின்ற காலத்திலிருந்து பள்ளியில் பணியாற்றும் காலம் வரை தான் வாழ்ந்த வாழ்க்கையில் பல பக்கங்களை நம் கண்முன் படர்த்தி வைத்திருக்கிறார் ஆசிரியர். அரசுப் பள்ளி ஆசிரியர் என்றாலே இளக்காரம் தான். ஆனால் அரசுப் பள்ளிக்கு வரும் குழந்தைகள் என்ன மனநிலையில் வருவார்கள்? அவர்களின் வாழ்க்கைச் சூழல் எப்படி இருக்கும்? அவர்களுக்கான கல்வி எத்தகையதாக நாம் அளிக்க வேண்டும்? அக்குழந்தைகளின் பெற்றோர்கள் இடத்தில் நாம் என்ன வகையான உறவு நிலையைப் பேண வேண்டும்? அக்குழந்தைகளை நாம் எவ்வாறு கையாள வேண்டும்? அக்குழந்தைகளுக்கு என்ன விதமான கல்வி பிடிக்கும்? என்பதையெல்லாம் தன்னுடைய கட்டுரையில் கதைகளை கூறுவதைப் போல அழகாக எடுத்து வைத்திருக்கிறார் ஆசிரியர். கட்டுரைகளைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு கட்டுரையும் ஒரு அனுபவத்தைச் சொல்லுகிறது. ஒவ்வொரு கட்டுரையும் ஏதோ ஒரு இடத்தில் மனதைக் காயம் செய்கிறது. அரசுப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகளிலும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளைக் கூறுவதுபோல பல அனுபவங்கள் எழுத்துக்களில் கொட்டிக்கிடக்கிறது. எழுத்தாளரும் சமூகச் செயல்பாட்டாளருமான தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் அணிந்துரை அழகு.


ஆசிரியர் அடித்ததால் மனோஜ் என்ற மாணவனுக்கு சொல்லக் கூடாத இடத்தில் வலி அதிகரித்ததாக கூறுகிறான். படிக்கவில்லை என்பதற்காக அடித்தது இப்படி ஆகும் என்று ஆசிரியர் நினைத்திருக்க மாட்டார். பள்ளியில் நடந்த சம்பவம் வீட்டில், மறுநாள் பயிற்சிக்கு செல்லும் இடத்தில் மனதின் நிம்மதியைக் கலைத்த படியே இருக்க,  சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவன் எப்படி இருக்கிறான் எனக் கேட்கும் ஆசிரியரின் மனநிலையில் அவர் அடித்தது தவறா என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் அந்தக் காயம் அந்த மாணவனை விட்டுச்செல்லும் வரை ஒரு தாயாக தந்தையாக ஆசிரியர் காட்டும் கரிசனம் ஒவ்வொரு ஆசிரியருக்கும் இருக்க வேண்டும். பள்ளியில் ஓடி விளையாடும் ஒரு சிறுவன் தவறி விழுந்தான் என்றாலும் அதனை வீட்டிற்குத் தெரியப்படுத்தும் பொழுது அதைக் கேள்விப்பட்டு ஓடிவரும் பெற்றோர் தன்னுடைய கோபத்தை முதலில் காட்டுமிடம் ஆசிரியர்தான். ஆனால் காயம் பட்ட குழந்தையிடம் அந்த நேரத்தில் ரத்தம் வழியும் இடம் எதுவானாலும் அவ்விடத்தைக் கழுவி மேலும் ரத்தம் வடிந்துகொண்டிருப்பின் உடனே மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று காயத்தின் மேல் கட்டுப் போட வைத்து ஊசியினை போடச்செய்து மாத்திரையை வாங்கிக் கொடுத்து தேநீரின் உதவியுடன் அதை குடிக்கச் செய்து பெற்றோர்கள் வந்தவுடன் அவர்களிடம் நிலவரத்தைச் சொல்லி அந்தக் குழந்தையை ஒப்படைக்கும் வரை  ஓர் ஆசிரியர் அனுபவிக்கும் அவஸ்தை ஒரு தந்தைக்கும் மேலானது தாய்க்கும் மேலானது. ஆனால் இங்கு மனோஜ் வேறுபட்டு வேறு மாதிரி பயமுறுத்துகிறான். பாவம்டா வாத்தியார்...


ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு பள்ளியிலும் பட்டப்பெயர்கள் மாணவர்கள் சூட்டி இருப்பார்கள். அரசனுக்கு பட்டங்களை சூடுவதைப் போல இது இல்லை. ஒவ்வொரு ஆசிரியரின் உருவத்தைப் பொறுத்து, அவருடைய பாடம் நடத்தும் தன்மையைப் பொறுத்து, அவரின் குணத்தைப் பொறுத்து, அவர் அளிக்கும் தண்டனையைப் பொறுத்து இந்த பட்டப்பெயர்கள் ஆசிரியர்களுக்கு மாறுபடும். அதனைக் குறித்தும் ஒரு கட்டுரை இருக்கிறது அதற்குள் தேடிப் பாருங்கள். உங்களுக்கான பட்டப் பெயரும் கூட ஒளிந்திருக்கலாம்.


பன்னீர் சார் கொஞ்சம் நாசூக்கானவர். ராமரய்யா குழந்தையாக மனநிலையில் வகுப்பு எடுப்பவர். அவரிடம் அன்பு காட்டும் குழந்தைகளாக நாம் மாறுவதா அல்லது ராமரய்யாவாக மாறுவதா... ராமரய்யாவின் நண்பராக, சக ஆசிரியராக முருகன் சார். இருவருக்கும் இடையில் உள்ள நட்பு - அந்த நட்பு வகுப்பறைக்குள் எப்படி இருக்கிறது, அந்த நட்பால் அந்த வகுப்பு எப்படி கலகலப்பாக மாறுகிறது, அவர்கள் குழந்தைகளிடம் எப்படிப் பழகுகிறார்கள் அந்த அன்னியோன்யம் எத்தனை குழந்தைகளுக்குக் கிடைத்துவிடும்... 


டீச்சர் ஒண்ணுக்கு என்ற கட்டுரையில் வரும் "அந்த வகுப்பில் இருந்து டீச்சர்ஸ் பாத்ரூம் வரையிலான தூரம் என்பது தேச அவமானத்தின் நீளம்" என்ற வார்த்தை வெறும் வார்த்தை மட்டுமல்ல, அது அரசுப்பள்ளியில், தனியார் பள்ளிகளில் இந்தக் காலமும் பல இடங்களில் நடந்து வரும் கழிப்பறை இல்லாத அவலம் சுட்டப்படும் இடம்.


டியூசன் எடுக்கும் சாந்தி அக்கா ஒவ்வொரு ஊரிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிடம் மாணவர்கள் காட்டும் அன்பு இன்னும் கொஞ்சம் நெருக்கமானது. ஆசிரியரின் வாசிப்பு அனுபவம் எந்த அளவிற்கு அதிகம் இருந்தால் ஒரு வகுப்பறையை அழகாகக் கொண்டு செல்லலாம் என்பதற்கு நூலாசிரியர் அவர்களின் பிரபஞ்சன், வண்ணதாசன் உள்ளிட்ட ஆளுமைகளின் கதைகளை வாசித்து அவற்றை மாணவர்களிடமும் கொண்டு செல்லுதலும் சிறப்பான ஒரு வழிகாட்டலாகக் கொள்ளலாம். 


ஒவ்வொரு குழந்தைகளுக்கும் குழந்தைப் பருவத்தில், உள்ள ஆசை என்பது பெற்றோர்களால் திணிக்கப்படாத பொழுது உள்ள ஆசை நிச்சயமாக எதிர்காலத்தில் அவர்கள் கூறுவதைக் காட்டிலும் வேறு மாதிரியாகத்தான் இருக்கும். அதை ஒரு கட்டுரை அலசுகிறது. 


யானை என்ற கட்டுரையில் முற்போக்கு இருக்கிறது, பக்தி இருக்கிறது, எல்லாவற்றிற்கும் மேலாக மத நல்லிணக்கம் இருக்கிறது. முடிப்பு அருமை பல கட்டுரைகள் போல இதிலும்.

வீட்டுப்பாடம் என்ற தண்டனை யதார்த்த கட்டுரை. குடிகாரத் தந்தைகளால் சீரழியும் குழந்தைகள் பாடு பரிதாபம்.


முழு ஆண்டுத் தேர்வு முடிந்தவுடன் ஒவ்வொரு மாணவனும் ஒரு காலத்தில் அதனை ஒரு கொண்டாட்ட காலமாக வாழ்ந்திருப்பான். நேரத்திற்கு உணவு இல்லை என்ற போதிலும், வீட்டில் அம்மா அப்பா இருவரும் வேலைக்குச் சென்ற பொழுதிலும், வெயில் வாட்டி எடுக்கும் பொழுதிலும், பக்கத்து வீட்டு நண்பர்கள் ஊருக்குச் சென்ற பொழுதிலும், திருவிழாக்கள் வரும் அந்த காலகட்டத்தில் கடன் வாங்கித் துணிகளை உடுத்தும் பொழுதிலும் இருந்த சந்தோசம் இன்று கோடை விடுமுறைகளில் தனித் திறனை வளர்ப்பதற்காக வகுப்புகளை உருவாக்கி வைத்திருப்பவர்களிடம் குழந்தைகளை தள்ளிவிடும் மனப்போக்கு வளர்ந்து வருகிறது. கொரோனா காலத்தில் உயிர் குறித்த பயம் ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருந்தாலும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பணம் பறிக்கும் வேலையும், குழந்தைகளை அலைபேசியின் முன்னால் அமர வைக்கும் போக்கும் அதிகரித்து வருவது கண்கூடு. கடைசிக் கட்டுரையான அவன விட்ருங்க பாஸ் என்ற கட்டுரையில் கடைசிப்பத்தி "கோடை அழகாகத் தெரியும். ஏனெனில் அவர்களைப் பொறுத்த மட்டிலும் இதுதான் நிழல் மாதம்" இதுதான் மாணவன். ஆயிரம் பொருள் பொதிந்த வார்த்தைகள்.


உளவியல் ரீதியாக மாணவனை அணுகும் வித்தையைக் கட்டுரைத் தொகுப்பு என்ற பெயரில் சிறு சிறு சம்பவங்களைச் சிறுகதை போல அழகாக, உயிரில் பதியும் வண்ணம் எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர் சக.முத்துக்கண்ணன். வாசியுங்கள் நான் சொன்னதை விட பலப்பல வாசிப்பனுபவம் கிட்டும் உங்களுக்கும்.


நானும் ஓர் ஆசிரியர் என்ற முறையில், தேனி மாவட்டம் என்ற முறையிலும் தோள்களில் கை போட்டு மகிழ்வைத் தெரியப்படுத்திக்கொள்கிறேன் நிறைய நிறைய...


வாழ்த்துகள் தோழர்.


யாழ் தண்விகா

Thursday 23 July 2020

வருச நாட்டு ஜமீன் கதை #வட_வீர_பொன்னையா

புத்தகம்:     வருச நாட்டு ஜமீன் கதை
ஆசிரியர்:   வடவீர பொன்னையா
பதிப்பகம்:  விகடன் பிரசுரம்

மூன்று தலைமுறைகளை இந்த நூல் பேசுகிறது. ஆண்டி வேலப்ப நாயக்கர், அவருடைய தம்பி இளைய ஆண்டி வேலப்ப நாயக்கர் இருவரின் காலகட்டத்தில் கதை தொடங்குகிறது. இளைய ஆண்டி வேலப்ப நாயக்கர் மூன்று திருமணம் முடித்த பின்பு நான்காவதாக ஆண் வாரிசுக்காக வெள்ளையம்மா என்பவரை திருமணம் முடிக்கிறார். அவருக்கு பிறந்த மகன்தான் திருமலை ராமகிருஷ்ண சாமியப்ப நாயக்கர். மக்களிடம் இருந்து வரக்கூடிய வரிப்பணம், தானியங்கள், விலங்குகள் இப்படி பல வரும்படிகளை வைத்துக்கொண்டு ஜமீனுக்கு உரிய பலான வேலைகளையெல்லாம் செய்துவருகிறார்.  இடையில் பளியன் சித்தன் என்பவனோடு நட்பு ஏற்படுகிறது. அந்த நட்பின் மூலமாக பல்வேறு சித்துவேலைகளை கற்றுக் கொள்கிறார்  ஆண்டி வேலப்ப நாயக்கர். ஒரு கட்டத்தில் பளியன் சித்தன் வேலப்ப  நாயக்கரிடம் பள்ளிகளுக்கும் ஜமீனில் பளியர் இனத்திற்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும். அவர்களையும் ஜமீனுக்கு இணையான பணிகளில் அமர்த்தவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறான். இதைக் கேட்ட வேலப்ப நாயக்கர் சித்தனை வேல் கொண்டு  எய்தி கொன்றுவிடுகிறார். இறப்பதற்கு முன் சித்தன், உன் ஜமீனுக்கான ஆண் வாரிசு பிறப்பதற்கு முன்பு நீ இறந்து விடுவாய். அதுபோலவே அது காலம் முழுவதும் தொடரும். ஆண் வாரிசுகள் பார்ப்பதற்கு முன்பே தகப்பன் உயிர் இருக்காது என்று சாபம் விடுகிறான். அதுபோலவே சாமியப்ப நாயக்கரைப் பார்க்காமலேயே வேலப்ப நாயக்கரின் உயிர் பிரிகிறது.  சிறு வயதில் அரியணை ஜமீனாக வரமுடியாது என்பதால் வெள்ளைத்தாயம்மா பொறுப்பில் ஜமீன் வருகிறது. சாமியப்ப நாயக்கர் சென்னையில் படிக்க செல்கிறார். சென்னையிலிருந்து திரும்பி வரும்பொழுது ஜனகம் என்ற நாட்டியக்காரி உடன் திரும்பி வருகிறார். அவள் வெள்ளைக்கார துரையுடன் செல்ல வேண்டியவள். அவளின் அழகில் மயங்கி இழுத்து வருகிறார் சாமியப்ப நாயக்கர்.  நீண்ட காலம் ஜனகத்துடன் காதல், காம வாசம் தொடர்கிறது. அவளுக்காக அனைத்து வசதிகளுடன் மாளிகை ஒன்றும் கட்டித் தருகிறார். பொன்னும் பொருளும் அள்ளி இறைக்கிறார். அத்தனையும் மக்கள் பணம். இச்சூழலில் சாதியிலிருந்து வேலுத்தாயம்மாள் என்ற பெண்ணை கட்டி வைக்கிறார்கள். வேலுத்தாயம்மாளை கட்டிய பின்னரும் சாமியப்ப நாயக்கரின் பெண் வாசம் நிற்கவில்லை. செல்லும் இடங்களில் எல்லாம் பெண் பித்து பிடித்துத் திரிகிறார். இது தெரிந்த  வேலுத்தாயம்மாள் ஜனகத்தை ஆள் வைத்து கொன்றுவிடுகிறார். எவ்வளவு சொல்லியும் சாமியப்ப நாயக்கர் கேட்காததால் தெப்பம்பட்டி சென்றுவிடுகிறார் வேலுத்தாயம்மாள். ராஜமாணிக்கம் முதல் பெண்ணாக பிறக்கிறார், பிரச்சினை இல்லை. மனம் திருந்தி வந்த சாமியப்ப நாயக்கருடன் கூடல் நடக்க, இரண்டாவதாக ஒரு ஆண் பிறக்கிறது. அந்த ஆண் குழந்தையைப் பார்க்கும் முன்னரே சாமியப்ப நாயக்கர் மறைந்துவிடுகிறார். சாமியப்ப நாயக்கர் மக்களிடமிருந்து வாங்கிய வரிப்பணம் முறையாக வெள்ளையர்களுக்கு கப்பமாக செல்லாததால் கண்டமனூர் ஜமீன் ஏலம் போகிறது, கொஞ்ச பகுதிகளைத் தவிர்த்து அனைத்தையும் எட்டயபுரம் ஜமீன் ஏலத்திற்கு எடுத்துக்கொள்கிறார். எல்லாம் பறிபோன நிலையிலும் ஆட்டம் மட்டும் அடங்கவில்லை சாமியப்ப நாயக்கருக்கு. ஜமீனை மீட்க உதவி செய்வதாக திருவாங்கூர் ராஜா சொல்ல அவரைப் பார்க்க குமுளி வழியாகச் செல்லும்போது நெஞ்சு வலி வந்து பாளையம் ராவுத்தர் வீடு வர அங்குதான் உயிர் பிரிகிறது சாமியப்ப நாயக்கருக்கு. அவர் இறந்த இந்தச் சூழலில் பிறந்த கதிர்வேல் சாமி பாண்டியன் என்ற மைனர் பாண்டியன் சென்னைக்கு சென்று படிக்கும் சூழல் வந்தபோதிலும் அங்கு வேண்டாமென்று வேலு தாயம்மாள் மறுத்துவிடுகிறார்.  மைனர் பாண்டியன் தன்னுடைய தந்தையைப் போலவே பெண் பித்து பிடித்து திரிகிறார். முறையான படிப்பும் இல்லை சேவகர்கள் பலரை வைத்துக்கொண்டு அடாவடியில் ஈடுபடுகிறார். பித்தனின் வாக்கு பலித்துக் கொண்டு வருவதை நம்ப மறுக்கிறார். எத்தனையோ பெண்களிடம் சல்லாபம் செய்த மைனர் பாண்டியன் ஒரு கட்டத்தில் 13 வயதான வேலம்மா என்பவரை தூக்கி சென்று திருமணம் முடிக்கிறார். முடித்த போதிலும் வழக்கம்போல் அடாவடி தொடர்கிறது. பெண் சகவாசம் தொடருகிறது. ஜமீன் ஒருபக்கம் வெள்ளையர்களுக்கு கப்பம் கட்டாமல் மூழ்கிக் கொண்டிருக்கிறது இன்னொரு பக்கம் சுதந்திரப்போராட்டம் நடந்து கொண்டிருக்க மக்கள் ஜமீனில் இருந்து விடுபடும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசி காலத்தில் உடல்நிலை சரியில்லாமல் சித்தன் வாழ்ந்த அதே குகையில் வாழத் தொடங்கிய மைனர் பாண்டியன் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் கூழைக் குடித்து நாட்களைக் கடத்துகிறார். அப்படியே அவருடைய வாழ்க்கையும் முடிந்துவிடுகிறது. அடக்கம் செய்வதற்கு கூட சொந்த நிலம் இல்லாத ஒரு ஜமீனாக மைனர் பாண்டியன் கடைசியில் இறக்கிறார்.
        ஜம்புலிபுத்தூர் கோவிலில் பெண்களை கோவிலுக்கு பொட்டுக்கட்டி விட, அந்தப் பெண்களை ஜமீன் ஏகபோகமாக அனுபவித்தல், வயசுக்கு வந்த பெண்களை காத்துக் கருப்பு அண்டக்கூடாது என்று அரண்மனைக்கு கொண்டு வந்து விட அவர்களை அனுபவித்தல், விரும்பும் பெண்களை சேவகக்காரர்கள் துணையோடு தூக்கி வந்து அனுபவித்தல், பிறரின் சொத்துக்களை அடித்துப் பிடுங்குதல், தாம் தூம் செலவு, சாதகம் செய்யும் பிறருக்கு ஊரைத் தானமாக வழங்குதல், வெள்ளைக்காரன் கண்களை மறைத்து பல திருட்டுத் தனங்களைச் செய்தல், பெண்களை போகப் பொருளாகப் பார்த்தல், சொத்துக்களை பாதுகாக்க பெண்களை ஜமீன் பொறுப்பில் அமர வைத்தல் வரலாறெங்கும் உள்ள அவலங்களை மண்ணின் மொழியோடு வட வீர பொன்னையா கூறியுள்ளார். வாசிக்க வாசிக்க அந்தக் காலத்திற்குள் பயணிக்கும் எண்ணம் பீறிடுகிறது. இன்னொன்றையும் சொல்லவேண்டும்.

         இப்படிப் பட்டவர்களின் செயல்களைத்தான் அப்படியே தொடர ஆண்ட பரம்பரை என்று சொல்லி கொண்டாடி வருகிறதோ பல கூட்டம், அக்காலம் போல இப்பவும் சொத்துக்களை களவாடுதல், பெண்களை வன்புணர்வு செய்தல் போன்ற செயல்களைச் செய்ய நினைக்கிறதோ என்ற எண்ணமும் மேலிடாமல் இல்லை.

வாழ்த்துகள் வட வீர பொன்னையா தோழர்.

யாழ் தண்விகா

Saturday 18 July 2020

குறி அறுத்தேன் #திருநங்கை_கல்கி

குறி அறுத்தேன் -திருநங்கை கல்கி
----------------------------------------------------
தாமரைக்குளம் எனது ஊர். பத்தாண்டுகளுக்கு முன்பு இருக்கும். வ.உ.சிதம்பரனார் சிலை அருகிருக்கும் பகுதியில் பலமுறை அந்த திருநங்கையைப் பார்த்திருக்கிறேன். நல்ல ஒப்பனையுடன் வேலைக்குச் செல்லும் அலுவலக பெண் போல பல காலைகளில். அவளும் மனுசிதான் என்பதைத் தாண்டி அவள்மேல் விழும் சக மனிதர்களின் கிண்டலையும் கேட்டுத்தான் வளர்ந்தேன். நாட்களின் திசைகளில் பயணித்த வாழ்வில் ஓர் காலை தினசரி நாளிதழில் படித்து அறிகிறேன். பல வருடங்களாக அந்த திருநங்கையுடன் பழகிய ஒருவன், விரைவில்,அவனுக்கு திருமணம் நடக்கப்போவதாகவும் அதனால் அத்திருநங்கையுடன் தனக்கு இதுவரையிலும் உள்ள உறவை இனி தொடரப்போவதில்லை எனவும் அவன் முடிவெடுக்கிறான். அத்திருநங்கை அவனிடம் கெஞ்சுகிறாள், தன்னால் இயன்றவரை அவனோடு வாழத் துடிப்பதையும் அந்த்த துடிப்பு இறப்பு வரையும் தொடரும் என்று உத்திரவாதமும் தருகிறாள். ஆனால் திருநங்கையுடன் வாழ்ந்தால் சமூகம் தன்னைக் கேவலமாக நினைக்கும் , வீட்டில் திருமணத்திற்கு கட்டாயப்படுத்துகிறார்கள், "ஒரு பெண்ணோடு" தனக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்கள் பெற்றோர் என்று கூறி மறுதலிக்கிறான் அவளை..திருநங்கையாக மாறியவர்களுக்கும் கற்பு இருக்கும் என்பதை அறியாத அவனின் வார்த்தைகள் ரணமாகக் குத்துகிறது அவளை. வாழ்ந்த வாழ்வின் அம்மணப் பக்கங்கள் அத்திருநங்கையை உடல் கூசச் செய்கிறது. ஆத்திரம் மேலேற அத்திருநங்கை அவனின் ஆண்மைத் திமிரினை திருகிப்போடுகிறாள் கொலையென. அதுவும் அத்திருநங்கையும் அவனும் தனித்திருந்த ஒரு விடுதியில் நிகழ்கிறது.

மேற்சொன்ன நிகழ்வின் உக்கிரம் வழியாகவே "குறி அறுத்தேன்"நூலினைப் பார்த்தேன். படித்தேன்.

பெண் என்பவள்
இதுவே இதுதான்
என்றால்
பெண்ணில்லை நான்.
ஏதோ ஒன்று
-அந்த ஏதோ ஒன்றிற்குள் என்னன்னென்னவெல்லாம் இருக்கின்றன... அது அதீத அன்பாக காமமாக சீறும் காளியாக... சுயம் குறித்த ஒற்றை அழகான அபார அபாயச் சொல் ஏதோ ஒன்று.

முத்தம் என்றொரு
புதுக்கவிதையை
என் இதழ்களில் எழுதவும்
கவ்விய இதழ்களில்
கலந்துவிட்ட மூச்சோடு
காவியம் பாடவும்
கவிதைக்காதலன்
வேண்டும் எனக்கு...
-மானுடம் நோக்கி கல்கியால் வரையப்பட்டுள்ள காதல் மடல்தான் இது. இது தனித்தலைய பணிக்கப்பட்டுள்ள திருநங்கைச் சமூகத்தின் ஒருமித்த அன்பு குறித்த எதிர்பார்ப்பாகவும் இருக்கலாம்....

அது எப்படி
சாதி வெறிக்கு
காமம் மட்டும்
விதிவிலக்காகிறது...
-என்ற வரிகள் இயலாமையில் பூக்கும்
வார்த்தையாக தோன்றும் அதே கணம்...

மதம் துறந்து
சாதி துறந்து
மறுக்கப்பட்டவர்கள்
ஒன்றுகூடி
வாழும் வாழ்க்கையை
வாழ முடியுமா உங்களால்...?
-எனும்போது மனிதத்தை நிமிரச் செய்யாமல்
சாதி என்னும் "ஆண்மையை தொங்கவிட்டுத் திரியும்" கூட்டத்தின்மேல் துப்பிய தீக்கனலாக மாறி நிற்கின்றன
கல்கியின் வரிகள்...

சமூகத்தால் இன்றுவரை புறக்கணிக்கப்பட்டவர்களாக
வாழும் திருநங்கைகளின் வாழ்வு, காதல், காமம் அவர்களுள் ஓடும் சமூகம் என எளிமையான மொழியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு வலுவான பதிவாக இக்கவிதைகள்... 

தொடரட்டும் கல்கியின் களப்பணி
கலைப்பணி...

அன்பு மற்றும் தோழமையுடன்...

-யாழ் தண்விகா.

Friday 17 July 2020

ஓசை புதையும் வெளி #தி_பரமேசுவரி

ஓசை புதையும் வெளி
#கவிதைத்தொகுப்பு
#தி_பரமேசுவரி

கால நதி சில பெரும் வெள்ளோட்டத்தையும் சில பாலையையும் சிலபல இயல்பான பயணத்தையும் எப்போதும் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒரு சிறு சருகு காற்றிலோ நீரிலோ நிலத்திலோ அலைவுறும் தருணத்தில் சருகின் உள்ளோடும் வாழ்வின் நிலையற்ற தன்மையானது எத்தகைய துயர்களைக் கொண்டிருக்கும்... அதன் வலிகளை இயல்பின் மொழிகளில் எடுத்தாளும் தீட்சண்யம் கவிஞனின் மொழிகளில் படர்ந்து கிளைத்திருக்கிறது. அத்தகைய கிளைத்தலுக்குரிய மொழி லாவகம் உடைய கவிஞராக #ஓசைபுதையும்வெளி கவிதைத்தொகுப்பின் ஆசிரியர் #தி_பரமேசுவரி அவர்களை கூறலாம்...

இயல்புக்கு அப்பாற்பட்ட எதையும் புனைவென்று கூறி பக்கங்களைக் கடத்தும் உத்திகளற்று நம் வாழ்வின் யதார்த்தங்களை கவிதைகளில் பதிவிட்டுள்ளார் கவிஞர்...

சிறகுகள் கோதும் சாளரம் என்று தலைப்பிட்ட கவிதை.
"மேலும் தீட்டிக் கூராக்குகிறது
சிறிய மூக்கை
தொட்டி நீரில் அமிழ்த்திக்
கோதுகிறது சிறகுகளை
தானியங்களைக் கொத்தியும்
நீர் குடித்தும் பறந்தும்
விழுந்தும் அணைத்தும்
செய்யும் சில்மிஷங்கள்
குஞ்சுப் பறவையின் சேட்டைகளைச்
செல்லமாய்க் கண்டிக்கும் தாய்ப்பறவை

சன்னலில் பதித்த முகத்தில்
பதியும் கோடுகள்

வலிக்க வலிக்க
ரசித்துக்கொண்டிருக்கிறாள்..."

ஒரு பறவையின் வாழ்வு, அதன் பறத்தலும் பறத்தல் நிமித்தமுமான வாழ்வின் கணங்களின் கூறொன்றை பார்க்கும் ஒரு பெண்ணின் ஏக்கங்கள் கவிதை வரிகளில் முகத்தில் பதியும் கோடுகளாக்கப்பட்டிருன்றன விடுதலைக்கான வலியின் வார்த்தைகள் இவை.

துரோகத்தின் பாஷை நேரடியாக நம்மை அணுகும்போது சிலிர்த்ததிரும் உடலின் வலிகளை உதிர ஓவியமாக்கியிருக்கிறார் கவிஞர்.
"ஆதரவு தேடித்
தோள் சாய்கிறேன்
அடி வயிற்றில்
கத்தி செருகுகிறாய்
சிதறும் துளிகள் கொண்டு
தீட்டுகிறேன் உன் ஓவியம்..."

எத்தனை வரையறைகள் கொடுத்தாலும்  காதலுக்கான வரையறை அவரவர் பார்வையில் ஆகச் சிறந்த பொறுத்தமாகவே அமைந்து விடுகிறது. இது கவிஞரின் விளக்கம்...
"காயமுற்று விழுந்த புறாவின்
சிறகு தடவி
பயம் தணித்து
வலிக்காமல் தலை திருகும்
உன் மென்மைக்கும்
காதல் என்றுதான் பெயர்"

இயல்பாக கடந்து செல்ல வேண்டிய ஒன்றாக நாம் நினைப்பவற்றையும் கவிஞரின் பார்வையில் கண்ணாடி மதிலில் பதிவிடுகிறார் இப்படியாக...
"கண்ணாடிச் சில்லுகள்
பதிக்கப்பட்ட மதில்களில்
சிறிதும் சேதாரமின்றி
நகர்கிறது நத்தை
மௌனத்தின் இடைவெளிகளை
இட்டு நிரப்பியபடி"
இந்த மௌனத்தின் இடைவெளிகள் என்பதில் இட்டு நிரப்பவேண்டிவைகள் என என்னென்ன நாம் வைத்திருக்கிறோம் என்பதை நம் மனம் ஒன்றே அறியும்.

ஓசை புதையும் வெளி என்ற தலைப்பிலான கவிதை.
"உரக்கப் பேசுவதாய்க்
கோபப்பட்டாய்
மிகுந்த ஓசையுடன் காரியமாற்றுவதாய்க்
குற்றம் சாட்டினாய்
புணர்ச்சியில் கூட முனகல்கள்
தெருவெங்கும் இறைவதாய்
எரிச்சல்பட்டாய்
வெடிக்கும் என் ஆர்ப்பரிப்புகள்
உனக்குள்
வெந்நீர்க் கொப்புளங்களையே
உருவாக்கின எப்போதும்
மெல்ல அடங்கிய என் சப்தங்கள்
புதைக்கப்பட்டன உன் வெளியில்"
ஒரு காதலாலோ நட்பாலோ தன்னை தொலைக்கும் உறவின் வலியோ இன்பமோ என்பது சொல்லி மாளாதது. தன்னைத் தொலைத்தல் என்பதைத் தொடர்ந்து நிகழும் விருப்பத்திற்கு அப்பாற்பட்ட கொடுமைகள், அதனாலான வேதனைகள் ஆகியனவற்றை அனுபவித்தும் அதனை இயல்பாக்கிக்கொள்ளும்
ஜீவனின் வெளி இது.

நகர மயமாதல், சந்தேகம், வாழ்வு, சுயம், கலவி, இன்னும் பல தலைப்புகள் மற்றும்  சில ஹைக்கூ கவிதைகள் என நிரம்பிக்கிடக்கிறது தொகுப்பு. வாசித்தறிவோம் கவிஞரின் ஓசை புதைந்திருக்கும் கவிதை வெளியை...

வாழ்த்துகள் #கவிஞர்தி_பரமேசுவரி

#யாழ்தண்விகா

Wednesday 3 June 2020

தேர் சுமக்கும் நிலம் #யாழ் தண்விகா

❣️
1
உன்னைப் பார்த்து விட்டுத்
திரும்பும் போதெல்லாம்
கவிதைகளால்
நிரம்பி இருப்பேன்

❣️
2
சில இரவுகள்
சில பகல்கள்
இந்த ஆயுளுக்கும் போதும்
என்பதாகிவிட்ட வாழ்வு
காதலால் அமைந்ததும் சுகமே...

❣️
3
பனிக்காலை
கொன்றைப் பூக்களின் நிறத்தில்
உன் முகத்து மஞ்சள்

❣️
4
அறைக்குள் இருந்து
வெளியில் வருவாய்

கருவறைக்குள் இருந்து
கடவுள் வருவது போலிருக்கும்

❣️
5
பயணத்தில்
வியர்வை ஒட்டிக் கிடக்கும்
நம் ஸ்பரிசத்தில்
மிதந்தது காதலா காமமா

❣️
6
உன்னை கண்ட தினத்தில்
நீ சூடி இருந்த
புடவையின் வண்ணத்தில்
எப்போதும் என் கனவுகள்

❣️
7
பிரிவின்போதான
இரவில் ஒலிக்கும்
பல்லிச் சத்தம்
உன் முத்தத்தை
நினைவுபடுத்தும்

கூடுதலின் போதான
உன் முத்தச் சத்தம்
கடல் அலையை
நினைவு படுத்தும்

❣️
8
மனசு தடுமாறும்
வரியை நீ பாடும் பொழுது
கொடியிலே மல்லிகைப்பூ
வைத்தகண் மாறாது
பார்க்கும்

❣️
9
தேர் சுமக்கும்
நிலமாகிப் போகிறேன்
உன்னைச் சுமக்கும் போது

❣️
10
முதன் முதலில்
நான் வாங்கித் தந்து
நீ சூடிய மலர் மல்லிகை

உன்னால் நான்
சூடிக்கொண்ட மலர்
நீ

❣️
11
உன் காதல் தான்
எப்போதும்
நான் வாழ...

❣️
12
என்னால்
சிரிக்கிறாய்
சிரித்தாய்
சிரிப்பாய்
பூ என்பதன்
குணம் அது தானே...

❣️
13
கனவு போலான
வாழ்க்கை
வாழ்ந்ததும்
வாழப் போவதும்

❣️
14
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
பாடலை இப்போதும் நாம்
பாடிக் கொண்டிருக்கிறோம்
முடியாத அந்தக் காலம் தொட்டு

❣️
15
பேரன்பின்
பெருநிலம்
நீ

❣️
16
உன் முத்தச் சுவையின் போது
நீயாக என்னை
எழுப்பினால் தான் உண்டு...

❣️
17
உன்னை நீயே
செதுக்கி வைத்திருக்கிறாய்
அழகளவுகளில்...

❣️
18
உன் மௌனத்திலும்
அழகு தானியங்கள்
சிதறிக்கிடக்கும்

❣️
19
உன் கோபத்தின் போது
உன்னைப் பார்த்துச் சிரிப்பது
உனக்குக்கோபம் வரவில்லை என்பதை உணர்த்துவதற்காக மட்டுமே...

❣️
20
என்னை அழ வைத்திருக்கிறாய்
உன்னால் அழாமல்
உனக்காக அழாமல்
யாருக்காக அழப் போகிறேன்

❣️
21
நெடிய பயணம் உன்னோடு வாய்த்திருக்கிறது
இந்த வாழ்வில்
அதுபோன்ற பயணம்
கைகாட்டி மரங்களாக நின்று
இன்று பூத்தூவுகிறது

❣️
22
குட்டச்சி
குண்டாத்தி என்பதெல்லாம்
என்னைவிடக்
குட்டையாக இருக்கிறாய்
குண்டாக இருக்கிறாய்
என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காக மட்டுமல்ல
அதுதான் உனக்கு அழகு
என்பதை உணர்த்துவதற்காகவும் தான்

❣️
23
எழுதத் தெரிகிறது என்பது மகிழ்ச்சிகரமானதாக
மாறக் காரணம்
உன்னை எழுதுவதால்...

❣️
24
ஒரு குழந்தையாக
என்னைத் தாங்கிக் கொள்
உன் குரலை தாலாட்டாகக் கேட்டு உறங்கவேண்டும்

❣️
25
உன் பாதங்களில்
முத்தமிட்டுருக்கிறேன்
உன் பாதங்களால்
ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்
முன்னது தவம்
பின்னது வரம்

❣️
26
உன் கைச் சமையலில்
காதல் வாசனை

❣️
27
நீ உணவு ஊட்டுகிறாயா
உன்னை ஊட்டுகிறாயா
என்ற குழப்பம்
எப்போதும் உண்டு

❣️
28
காமத்தின் போதான ஒன்றை
நினைவு படுத்திய ஒரு தருணம்
நீங்க ரொம்ப மோசம் என்றாய் நீயா-நானா என்றேன்
உன் புன்னகையில்
அப்படி ஒரு வெட்கம்

❣️
29
பரதேசி என்று ஒருமுறை
திட்டிருக்கிறாய்
இப்போதுவரை அந்தப் பட்டமும் மிகப்பிடித்தம் எனக்கு

❣️
30
அழகை உச்சமாகும் வேலையை
உன் காலணியும் தான் செய்கிறது
ஹீல்ஸ் வாயிலாக...

❣️
31
உன் மடியில் தலைசாய்த்து இருக்கிறேன்
தோள் தட்டிக் கொடுப்பாய்
உறக்கம் வராது
அது
உயிரினைத் தட்டிக்கொடுக்கும்
சுகந்தம்

❣️
32
எந்த ஒரு பதட்டமும் இன்றி
நம் கூடல் அரங்கேறிய பொழுது
அறியும்
நமக்குள் பாய்ந்திருக்கும்
காதலின் வல்லமை
எவ்வளவு ஆதுரமானது என்று...

❣️
33
பேசப்பேச கேட்டுக்கொண்டிருப்பேன்
இத மட்டும் கேளுங்க என்று சொல்லிவிட்டு
நீயே, கேட்டுத்தான் ஆகணும்
என்றும் சொல்வாய்
அதையும் கேட்டுக் கொண்டுதான் இருப்பேன்

❣️
34
பெரும் ஆசை எல்லாம்
ஒன்றே ஒன்றுதான்
அது நீ மட்டும் தான்

❣️
35
பார்க்காத நேரம் எல்லாம் பார்த்து
பார்க்கும் நேரம் இன்னமும் பார்த்து
எனக்குள் நீ ஊடுருவினாயா
என்னை உனக்குள் ஊடுருவச் செய்தாயா

❣️
36
என் ஆடையை நீ உடுத்தி என்னைப்போல் பேசிக் காட்டுவாய் அவ்வளவு அசலாக இருக்கும்
ஆனால் உண்மையில் அப்போது
உன் வெட்கம்
எனக்கு வரவே இல்லை

❣️
37
நான் தூங்க போறேன்

நீ தூங்கு போ

இல்ல போகல

ஏன்

உங்க கண்ணு என்னை கேக்குது

ம் எங்க கேட்குது

ஆமா கேட்குது எனக்குத் தெரியும்
நாம தூங்காம இரவைத் தூங்க வைக்கலாம் சரியா

என்ற கண் மொழி பயின்றவள் நீ...

❣️
38
கைகள் கோர்த்து
காலாற பேசிக்கொண்டே
பகலில் நாம் நடக்கும் வாய்ப்பு இருப்பின்
அது இரவாக மாறி விட்டால் நன்றாக இருக்கும்

நீ இரவில்தான் அப்படி நடந்து போக விருப்பப்பட்டாய்...

❣️
39
கட்டிப் பிடித்துக் கொள்வாய்
விட்டு விலகிக் கொல்வாய்

❣️
40
என் நிலத்தில்
துளிர்க்கும்
பூ
நீ

❣️
41
எந்த உடையும் உனக்கு பொருத்தமாயிருக்கும்
இல்லை இல்லை
எந்த உடைக்கும்
உன்னோடு
பொருத்தம் இருக்கும்

❣️
42
முத்தம் கொடுக்கத் தெரியாது சொல்லிக்கொடுங்க
என்பாய்
தொலைவில் இருக்கும் போது

அருகில் வரும்போது
நீ முத்தம் கேட்க
நான் புள்ளி வைப்பேன்
நீ தொடர்ந்து கொண்டே இருப்பாய்

வேடிக்கை பார்ப்பேன் நான்
வெட்கப்பட்டுச் சிரிக்கும் காதல்...

❣️
43
இதழ் வரி எல்லாம் கவிதைதான்
உன் எச்சில் தடவியோ
என் எச்சில் தடவியோ
வாசிக்கும்போது
காமக் கவிதையாகி விடுகின்றன
அவை

❣️
44
தலை திரும்பும் திசையெல்லாம்
திரும்பும் கரகக் கிளி போல
நீ வாசம் செய்யும் திசையெல்லாம்
திரும்பிப் பார்க்கிறேன் நான்...

❣️
45
எறும்பு ஊறக் கல்லும் தேயும்
நான் ஊற நீ மின்னுகிறாய்

❣️
46
நீயும் நானும் மட்டுமான
உலகமாகிவிடுகிறது
உன்னோடு நானிருப்பது...

❣️
47
நிலவின் துணைக்கோள்
ஆகிவிடுவேன் நான்
உன்னுடனான பயணத்தில்

❣️
48
நீ அணிந்த பொழுதுதான்
எவ்வளவு ஆரவாரச் சத்தம்
இந்தக் கண்ணாடி வளையலுக்கு...

❣️
49
எப்போதும் உன்னோடு வாழவேண்டும்
என்பதற்கு
உன்னோடு நான்
வாழ்ந்த வாழ்க்கை
வாழும் வாழ்க்கை
வாழ வேண்டிய வாழ்க்கை
எல்லாமும் தான் காரணம்...

❣️
50
என் மேல் அடித்துக்கொள்ளும்
வாசனைத் திரவியத்தில்
உன் வாசம்

❣️
51
அவரவர் வேலைகளில் மூழ்கியிருப்போம்
எப்போதாவது நீ என்னைப் பார்க்கத் திரும்புவாய்
நான் உன்னைப் பார்ப்பேன்

நான் உன்னைப் பார்க்கத் திரும்புவேன்
நீ என்னைப் பார்ப்பாய்

அதுவும் நமது வேலைதான்

❣️
52
அளவுக்கதிகமான கோபம்
நீ கொண்ட நாளில்தான்
முதல் முத்தம்
நமக்குள் வாய்த்தது

❣️
53
அனைத்து உறவும்
எனக்கு நீதான்
என்பாய்

அத்தனை உறவின் அன்பும்
எனக்கு நீதான்...

❣️
54
பேசித் தீராத
காதல் நமது

❣️
55
இப்போதுவரை
ஒரு சேய்போல
காதலைக் காத்துவருகிறேன்
தாயின் நிலையில் நின்று...
போதுமா குழந்தையே...

❣️
56
பிரியும் போதெல்லாம்
கண்ணீர் விடுவாய்
பிரிந்து வந்தபின்
எனது முறை

❣️
57
பால்யத்தில் உன்னுடன் இல்லை
என்பதை ஈடுகட்டவே
இரவெல்லாம் உன் நினைவுகளோடு
உறவாடுகிறேன்

❣️
58
உன் நெற்றியில்
முத்தமிட்டுத் திரும்பிய நாளில்
பூமி பார்த்துச் சிரித்தது
எனதிதழில்
குங்குமமும் மஞ்சளும்...

❣️
59
உனக்காக நான் எழுதிய கவிதைகள்
நீ வாசித்தபின் மின்னுகிறது
நட்சத்திரங்களாக...

❣️
60
உயரப் பறக்கும் பட்டம் நாம்
இதயம் பிடித்திருக்கும் நூல் காதல்...

❣️
61
கரை வந்தவுடன் காணாமல் போகும்
அலையாகத் தான்
உன்னைக் காணும் போது
நான் காணாமல் ஆவதும்...

❣️
62
உன் மடி மீது துயில்தல் போல
உயிர் மடிதல்
சவுந்தர்ய வாழ்வின் கடைசி வரம்
இப்படி அமைந்தால் எப்படி இருக்கும்...

❣️
63
நெருங்கி நீ வரவர
உயிரினிடைத்தூரம் இல்லாமல் போகும்
மாயம் போக்கும்
நம்மில்

❣️
64
என் வீட்டு ஜன்னலின்
பார்வைக்கு எட்டும் தூரத்தில்
உன் வீடு
யார் சொன்னது தொலைவு என்று
தொலைவு என்பது தொலைவு அல்ல

❣️
65
ஓ...
அடடா...
ப்பா...
அதிகம் உன்னால் உச்சரிக்கப்பட்ட
குட்டிச் சொற்கவிதைகள்
இவை...

❣️
66
கண்ணாடிமுன் நின்று கொண்டிருக்கும் பொழுது

என்ன செய்கிறாய்
என்றேன்

கலைந்து இருக்கும் அழகைச்
சரி செய்கிறேன்
என்றாய்

கலைந்து இருப்பதும் அழகு
என்றேன்

ஆளும் பிள்ளையும் என்று சொல்லிக்கொண்டே என் கண்களை மூடுகிறாய் கைகளால்...

❣️
67
எதை எதையோ பேசிக் கொண்டிருப்போம்
ஐ லவ் யூ எனும் வார்த்தையைச்
சட்டென இருவரும் ஒரே சமயத்தில் உதிர்த்துக் கொள்வோம்
ஹே ஜாலி ஜாலி எனக் காதல்
கை தட்டிக் கொள்ளும்

❣️
68
நட்சத்திரப் பொருத்தம்
நாம் பார்த்துக் கொண்டதில்லை
மச்சப்பொருத்தம்
பார்த்திருக்கிறோம்

❣️
69
உதிரும் இலை
காற்றில் தவழும் அழகு
காண்கிறேன்
உன் ஸ்பரிசம் தொடும் பொழுது
நீ
கண் மூடும் அழகில்

❣️
70
காதல் பாடலைப் பாடும் பொழுதும்
ஒரு குழந்தையின் குரலில் தான் இருக்கிறது
உன் அன்பு...

❣️
71
எப்படியும் பேசி விடுவோம்
ஒவ்வொரு நாளும்
உயிராலோ
நினைவாலோ

❣️
72
காட்டன் புடவைகளை
விரும்பிக் கட்டுவாய்
கொடுத்து வைத்த வியர்வை

❣️
73
தேவதை
வெள்ளை உடையில் மட்டும் வருவாள்
என்ற கட்டமைப்பை
உடைத்தவள் நீ

❣️
74
நமக்குள் ஒளிந்திருக்கும் வாழ்வு
வாழ்வில் ஒளிந்திருக்கும் நாம்
ஆனால் எல்லாம் உண்மை

❣️
75
மூன்று நாள் வலி என்பாய்
முத்தங்கள் அளிப்பேன்
தென்றலாய் நாட்கள் கடந்த சுகம் சொல்வாய்
முத்தங்கள் பிறவிப் பயன் அடையும் இப்படியும்

❣️
76
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு விதமாக
என்னைப் பிறப்பிக்கிறாய்

❣️
77
உன்னோடு பழகும்
அதிகாலைத் தேநீருக்கு
நீ சோம்பல் உதிர்க்கும் அழகு...

❣️
78
காதுகளின் ஓரமாக
கழுத்தின் மேல் புறத்திலிருந்து கீழ்ப்புறமாக
மூச்சுக்காற்று பரவப்பரவ
கண்கள் மூடி
சுவாசம் நிறுத்தி
இதழ் சுளித்து
கழுத்து சிலிர்த்து நின்றவள்
டக்கெனத் திரும்பி
முத்தமிட்டாய்
எல்லாம் நானும் செய்தேன்
கண்கள் மூடி
சுவாசம் நிறுத்தி
இதழ் சுளித்து
கழுத்து சிலிர்த்து...

❣️
79
ஜன்னலோர இருக்கையை
நீயே வைத்துக்கொள்
உன்னைத் தழுவி வரும் காற்றின் சுவாசத்தால் இன்னும் கொஞ்சநாள் ஆயுள் கூடும் எனக்கு

அப்போ நான்...

முத்தத்தின் போது பகிர்வோம்
ஆயுள்
உனக்கும் எனக்கும் சமம் என சுவாசத்தின் மூலமாக

❣️
80
தோள் சாயும் போதும்
மடி சாயும் போதும்
உறங்கிவிட வேண்டும்
அதற்கான திளைத்த காதலின் பின்னான வாழ்வு
எப்போது வரும் நமக்கு

❣️
81
என் கவிதைகள்
உன்னில் நான் பறித்தவையா
என்னில் நீ உதிர்த்தவையா...

❣️
82
ஒரு தனிமைக் கூடலுக்கான நாளில் எனக்காகச் சமைத்து
நெடுநேரம் கழித்து
தாமதமாக வந்தாய்

லூசா நீ
கடையில கூட வாங்கி சாப்பிட்டு இருக்கலாம் இல்ல
இன்னும் எவ்ளோ நேரம் என்னோடு இருப்ப
என்றேன்

இன்னொரு நாளில் நாம் சந்திக்கவே மாட்டோமா என்ன
வாங்க சாப்பிடுங்க
என்றபடியே
பரிமாறத் தொடங்கிய
காதல்காரி நீ

❣️
83
வாழ
வாழ
வாழ
காதலிக்கிறேன்
காதலித்தேன்
காதலிப்பேன்

❣️
84
பெரும் போதை நீ
எப்போதும் மயக்கம் உன்னால்...

❣️
85
எல்லாக் கண்களும் ஒரு திசையை நோக்க
காதலர்களின் கண்கள்
காதல் நோக்கும்
பேரன்பு வாய்த்தல் வரம்

❣️
86
பசியைச் சந்திக்கும்
சவால் போலானது
உன்னைப் பார்க்காது
நீளும் நாட்கள்...

❣️
87
நட்சத்திரப் பெருங்கூட்டத்தினிடை நிலவு
இளஞ் செம்பருத்தி நிறத்தில் இருந்தது
நம் முதல்நாள் சந்திப்பு குறித்து இப்படித்தான் சொல்ல முடியும்

❣️
88
உன்னை நினைத்திருக்கிறேன் என்பதுதான்
முக்காலத்திற்கும்

❣️
89
யார் நதி
யார் கரை
மையமாக நின்று
பேசிக் கொண்டிருக்கிறது
காதல்

❣️
90
என் உலர்ந்த கனவுகளின் மேல் பனியாய் உதிர்ந்தாய்
சிலிர்த்துதித்தேன்
உனக்கே உனக்காக...

❣️
91
தாயின்
கதகதப்பான சிறகுகளுள் நிற்கும்
சிறு குஞ்சுகள் போல
என் கரங்களுள் நீ நின்றாய்
உனக்கான காதலாக நான் எப்படி இருக்கவேண்டும்
என அப்போது உணர்ந்தேன்

❣️
92
ஒரு தேநீர் அருந்தலாமா என
நான் உன்னைக் கேட்க நினைக்கும் நேரம்
நீ என்னைக் கேட்பாய்
அதே கேள்வியை
இது போதாதா
நாம் காதலுக்கு விசுவாசமானவர்கள் என்று உணர்த்த

❣️
93
மலைகள்
கடல்கள்
நாடுகள்
கடந்து நிகழும் சந்திப்பு
நாடுகள்
கடல்கள்
மலைகள்
கடந்து படிப்படியாக நிகழும் பிரிவு

❣️
94
எப்போது வாழ்வோம்
எப்போது சாவோம்
என்ற கேள்விகளின் ஊடே தான்
காதல் வாழ்கிறது
மகிழ்ந்தபடி

❣️
95
சட்டென அறுந்து போகும்
நரம்பிசைக் கருவியின் இழையாய் வெறுமையின் உச்சத்தில்
தனித்தலையும் என் நாட்களின்
ஒரு துளிக் கண்ணீர்
உன் பிரிவால் நான் படும்
துயர் சொல்லும்

❣️
96
உனக்கான நானாக என்னை மாற்ற
ஏதேதோ மாயம் செய்கிறாய்
செய்துகொள்
பிடித்திருக்கும் இவ்வாழ்வு
நீ தந்தது

❣️
97
என் காயங்களின் போது
மீண்டெழும் உன் நினைவில் இருந்து முத்தங்கள் எடுத்துப் பூசிக் கொள்வேன்
எல்லாம் சுபம்...

❣️
98
என் உயிரின் ஈரத்தில்
எப்போதும்
உன் காதல் படகு
மிதக்கும்...

❣️
99
இப்படியே இந்தப் பிரிவிருள் தொடர்ந்தாலும்
உன் நினைவு வெளிச்சமாகக் கொண்டு செல்லும்
சாகும் கடைசி துளியிலும்
உனது எதிரில் என்னை...

❣️
100
நீ அளிக்கும் மரணமும்
எனக்கான காதல் பரிசு தான்...

யாழ் தண்விகா


Friday 29 May 2020

வகுப்பறை வாழ்க்கை #யாழ் தண்விகா

#வகுப்பறை_வாழ்க்கை

அடைக்கப்பட்டிருக்கும் பள்ளியில்
என் வகுப்பறைக் கரும்பலகையில் எழுதிக் கொண்டிருக்கிறேன்
பேசிக்கொண்டே சொல்லிக்கொண்டே
எழுதுகிறார்கள் என் குழந்தைகள்

இன்று ரொம்பவும்தான் திட்டிவிட்டேன்
என் பிள்ளைகளை
ரொம்ப செல்லம் கொடுக்கிறேன்
வீட்டுப்பாடம் செய்யாவிட்டால் சூழல் கேட்கிறேன்
நன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அறிவுரை சொல்லி கல்வியின் பெருமையைச் சொல்கிறேன்
எப்போதும் விளையாட்டுப் புத்தி
கொஞ்சமும் பணிவு இல்லை
பணிவு கிடக்கட்டும்
ஓர் ஒழுக்கம் என்பது இல்லை
ஒரு சின்ன இடைவெளி என்றாலும்
சுற்றிக் குழுமி நின்று ஒரே சத்தம்
பாட தொடர்பான ஒரு வேலையும் அவர்கள் செய்வதில்லை
இன்று ரொம்பவும் தான் திட்டிவிட்டேன்

மௌனம் குடியிருக்கிறது
கரும்பலகையின் பக்கமிருந்து
திரும்பி குழந்தைகளைப் பார்க்கிறேன்
காணவில்லை அவர்கள்
அறைக்குள் எல்லா இடங்களிலும் தேடுகிறேன்
பீரோவில் பக்கவாட்டில் அடியில் மேசையின் அடியில்
புத்தகப் பைகளின் அடியில் அதனுள்
இப்படி எங்கும் தேடுகிறேன் அவர்களை
காணவில்லை
தேடலின் முடிவில்
என்னையும் காணவில்லை

குழந்தைகள் அடிக்கடி கிறுக்கிய சுவற்றில்
வண்ணங்கள் குறைகிறது
சாக்பீஸ்களின் துகள்கள்
கல்லறையின் மேல்விழும் பூக்களாக
உதிர்கிறது
வகுப்பறையின் இருள்
என்னவோ போலிருக்கிறது
உறங்கிக் கொண்டிருக்கும் மாரியப்பனின் தலையில் கொட்டிவிட்டு
அமைதியாக எதுவும் தெரியாதது போல் அமர்ந்திருக்கும்
சொக்கலிங்கம் நன்றாக படிப்பவன்
அவனை அழைக்கிறேன் எதிர்க்குரலில்லை
உள்ளே வரலாமா ஐயா குரலை அளிப்பவனான கருப்பசாமிக்கு
ம் ம் வாடா
என்கிறேன் குரல் வந்த திசையில் கருப்பசாமி இல்லை
வாய் மட்டும் அசைகிறது எனக்கும்
காலையில் உண்ணாமல்
வழிபாட்டுக் கூட்டத்தில் மயங்கி விழுந்த
ஹரிணி இப்போது பலத்த அரட்டை அடிக்கிறாள்
குச்சியைக் காட்டி அடி விழும் என்பதுபோல் பாவனை செய்கிறேன்
சிரிப்பவள் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறாள்
எப்போதும் என்னைப் பார்த்து குமரியைப் போல பேசும் விஷ்ணுப்ரியா சத்தமில்லாமல் அமர்ந்திருக்கிறாள்
ஏனென்று கேட்கிறேன்
சொல்லமுடியாது சார் இன்னிக்கு நீங்க எதுக்கு இவ்ளோ கோவமா இருக்கீங்க என்று கேட்டுவிட்டு ஓடுகிறாள்
ஒவ்வொருத்தனையும் குறை சொல்லும் நித்தீஸ் இப்போதும் பல குறைகளோடு வந்து நிற்கிறான்
எதுவும் கேட்கவில்லை
சார் இனி உங்களைத் திட்டல
நாளை முதல் நல்லா படிப்பீங்க தான
வீட்டுப் பாடம் சரியா எழுதிட்டு படிச்சிட்டு வருவீங்களா என்று கேட்கிறேன்
சரிங்க சார் என்று கட்டிடம் சிலிர்க்கும் அளவு குரலும் மின்னும் என் பிள்ளைகளும்...

உள்ளொலிக்கும் எங்கள் குரல்களையும்
கரும்பலகையையும்
உள்ளே திரியும் எங்கள் கடந்த கால வாழ்க்கையையும்
எப்படியாவது எங்கள் கைகளில் கொண்டு வந்து தாருங்கள்
வகுப்பறையைச் சுற்றிலும் நின்று நானும் என் பிள்ளைகளும்
கதறுகிறோம்
அல்லது
அறைக்குள் எப்போதும் எரியும் விளக்கொன்றை ஏற்றியாவது வையுங்கள்
நாங்கள் உள்ளேயே கற்றலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்...

யாழ் தண்விகா

Friday 1 May 2020

வாக்காளனாகிய நான்... #மானசீகன்

#வாக்காளனாகிய_நான்...
கட்டுரைத் தொகுப்பு

Maanaseegan தோழர்

தமிழினி பதிப்பகம்
சென்னை

ஏன் அரசியல் என்பதற்கும் சமகால இந்தியா மற்றும் தமிழகம் இரண்டிற்கும் தேவையான அவசியமான அர்த்த பூர்வமான அரசியலை கண்டு கொள்வதற்கும் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் யாரை நாம் ஏற்க வேண்டும் யாரை புறந்தள்ள வேண்டும் என்ற புரிந்துணர்வை உண்டு பண்ணக்கூடிய வண்ணம் தலைவர்கள் குறித்த கட்டுரைகளும் நிரம்பிய ஒரு கட்டுரைத் தொகுப்பு.

நீண்ட நாட்களாக தோழர் மானசீகன் அவர்களுக்கு தன்னுடைய வாக்காளர் ஆகிய நான் என்ற நூலினை குறித்த விமர்சனம் பெரும்பாலும் யாரும் செய்யாமல் இருப்பதை அவரே சுட்டிக்காட்டியிருக்கிறார். அது அவருடைய நூல் குறித்த விமர்சனத்தை அறிந்து கொள்ளக்கூடிய எண்ணமா அல்லது இந்த அரசியலை இந்த மண்ணும் மக்களும் எப்பொழுது கண்டுணர போகிறார்கள் என்ற ஏக்கமா என்ற வெளிப்பாட்டினை எந்த வகையில் எடுத்துக் கொள்வது என தெரியாமல் இருந்தேன். ஆனால் நூலை வாசிக்க வாசிக்க இந்த மண் பயனுற வேண்டும் என்றால் இந்த நூலினை ஒவ்வொரு தமிழனும் வாசித்த வேண்டும் என்பதால் ஏற்பட்ட ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் அந்த எதிர்பார்ப்பு என்பதனை புரிந்து கொண்டேன்.

நூலினைப் பொருத்தவரையில் அது பிரதமராக இருந்தாலும் சரி முதலமைச்சராக இருந்தாலும் சரி மனதில் உள்ளதை தோழர் மானசீகன் அவர்களின் சொற்களில் கூறுவது என்றால் அக உணர்வின் அடிப்படையில் உள்ளது உள்ளபடி தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக அதேசமயம் ஆதாரப்பூர்வமாக சுட்டிக் காட்டியிருக்கிறார். 49 கட்டுரைகள். 192 பக்கங்கள்.

ஆ ஊ என்றால் இந்த அவலம் நேரு உண்டாக்கி வைத்தது என்று வாய் கூசாமல் பொய்யை அவிழ்த்து விடும் சவடால் பேர்வழிகளுக்கு நேருவை ஜனநாயகத்தின் காவலன் என்ற கட்டுரை பதில் சொல்கிறது. "இந்தியா என்றென்றும் காந்தியின் தேசமாக மட்டுமே அடையாளம் காணப்படும். அந்த மதிப்பீடுகளின் நாயகனாக நேருவே கொண்டாடப்படுவார்" "காந்தி கொல்லப்பட்டபோது படேல் உள்துறை அமைச்சராக இருந்து ஆர் எஸ் எஸ் அமைப்பை தடைசெய்தவர். படேல், நேதாஜியை மட்டுமல்ல; விவேகானந்தரை கூட இவர்களிடம் விட்டுக் கொடுத்துவிட முடியாது. விட்டுக் கொடுத்துவிட கூடாது என்பதுதான் என் நிலை" என்கிறார்  தோழர். செம்மறியாட்டு கூட்டம் போல சாயும் மனிதக் கூட்டத்திற்கு எப்போது இது புரியப் போகிறதோ...

சாதித் தலைவர் என்ற வட்டத்திற்குள் அடைக்கப்பட்டுள்ள வ வு சி குறித்த கட்டுரை அவரின் பன்முக ஆளுமையைக் கூறுகிறது. மேலும் அவருக்கும் இசுலாம் மக்களுக்கும் உள்ள தொடர்பைக் கூறுகிறது. சிதம்பரம் அவர்களின் மகனான வாலேஸ்வரன் பெயருக்குப் பின்னால் உள்ள சிறு கதை உருக்கம்.

அரசியல் குறித்த எந்த அறிவும் இல்லாமல் இட ஒதுக்கீடு குறித்த புரிதல் இல்லாமல் பேசும் அனைத்து (அனைத்து வயது, அனைத்து சாதி) மனிதர்களும் வாசிக்க வேண்டிய கட்டுரை. "வி பி சிங் அவர்கள் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றும் போது உச்சரித்த வார்த்தைகள் ' பெரியார், அம்பேத்கருக்கு நன்றி '. தமிழ்நாட்டில் பெரியார் என்ன கிழித்தார் என்பதற்கு அந்த வார்த்தைகள் போதும் பதிலாக. வரலாற்றின் பதிவாக. அம்பானிக்கு எதிராக அந்தக் காலத்திலேயே வாள் சுழற்றியவர் என்பது போதாதா இவரை வரலாற்றிலிருந்து ஒதுக்கும் போக்கிற்கு. இந்தக் கட்டுரையில் வரும் இரண்டு வாக்கியங்கள் "பன்னீரும் எடப்பாடி மட்டும் திடீர் யோக்கியர்களாக்கப்பட்டு தினகரன் மட்டும்தானே குறி வைக்கப்பட்டார்" "தான் மைய வெளியில் வருவதற்குக் காரணமான வி பி சிங்கிற்கு அத்வானி செய்த துரோகம் தான் மோடியின் வடிவில் நின்று கொல்கிறது" எதனையும் வலிய ஆதரிக்கும் பலர் இந்த  அரசியலை அதன் பின்னணியை அறியவேண்டும்.

தனக்குப் பின்னால் பத்து பேர் இருந்தால் போதும் பலருக்கு முதல்வர் கனவு வந்துவிடுகிறது. முக்கியமாக திரைத்துறை சார்ந்தவர்களுக்கு. அவர்களின் கொள்கை குறித்த கேள்விகளை தேர்தல் கமிஷன் முன்வைக்கலாம். அப்போதுதான் புற்றீசலாகப் புறப்படும் கட்சிகளுக்கு தடை போட முடியும் என்கிறது எந்தக் கட்சி நம்ம கட்சி என்ற கட்டுரை. மே தினம் கட்டுரை உழைக்கும் மக்கள் பயணிக்க வேண்டிய அடுத்த கட்டப் பார்வையை எடுத்துக் கூறுகிறது. ஆதி அரசியல், ஈழ அரசியல், சாதி அரசியல் என்று பயணிக்கும் பாதை திருமாவின் அரசியலில் வந்து நின்றபோது அரசியலில் அவர் அடைந்து நிற்கும் புதிய பரிணாமத்தை கண்கொண்டு பார்க்கும் உணர்வு. மண்ணுக்கேற்ற அம்பேத்கரியம் என்ற கட்டுரையும்.

காடுவெட்டி குரு மறைந்த போது, இளவரசன் இறந்தபோது முறையே திருமாவளவன் அவர்கள் காட்டிய கண்ணிய இரங்கல் மற்றும் பொறுமையான முன்னெடுப்பு குறித்துக் கூறும் கட்டுரையாளர், 2000க்குப் பின்னர் ஒரு தலைவராக பரிணாமம் பெற்று சக தலைவர்களுடன் பழகும் விதம், நிதானம், தொலைநோக்கு, பிடி கொடுக்காத இலாவகம், யாரையும் பகைத்துக் கொள்ளாத தெளிவு என கலைஞரின் பாதையில் பயணிப்பதாக கூறுகிறார். திருமாவின் முரட்டு பிள்ளைகளுக்கு அரசியல் கற்றுத்தர வந்திருக்கும் வாத்தியார், சிறுபான்மையினரின் பாதுகாவலன், பிற சாதியினர் வியந்து நோக்கும் அரசியல்வாதி எனத் திகழ்கிறார். மேலும் அம்பேத்கரியத்தை பெரியாரியத்தோடு இணைத்து மண்ணுக்கேற்ற அம்பேத்கரியத்தை உருவாக்கியுள்ளார் என்ற புகழாரங்கள் எதுவும் பொய்யில்லை. நிதர்சன உண்மை என்பதை திருமாவின் களச் செயல்பாடுகள் மூலம் நாம் அறியலாம்.

வை கோ அவர்களின் பலம், பலவீனம் என்ன என்பதனை ஒரு கட்டுரை தெளிவாகக் கூறுகிறது. வை கோ அவர்கள் ஸ்டாலினை மனதளவில் அங்கீகரிக்க வேண்டும். அப்போதுதான் ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க முடியும் என்று கட்டுரையாளர் விரும்பியது இன்றைய அரசியலில் சாத்தியமாகி உள்ளது மகிழ்ச்சி.

அரை நூற்றாண்டு அடையாளம், வெற்றிடத்தை நிரப்பும் திராவிடம், காமராசரை கொண்டாடும் அரசியல் ஆகிய கட்டுரைகள் தி மு க வை மையப்படுத்தியவை. இதில் கலைஞர் இந்திய அளவில், தமிழகத்தில் ஆளுமை செலுத்திய விதம், அவரின் அரசியல், பன்முகத் திறன், கட்சியினரை எதிர் கட்சியாக இருந்த காலத்திலும் கட்டுக்கோப்பாக கொண்டுவந்த விதம், அவரைச் சுற்றியே 50ஆண்டுகால அரசியல் நடந்த விதத்தைக் கூறுகிறது. வெற்றிடம் என்பது எதுவுமல்ல, அதனை ஸ்டாலின் நிரப்புவார் என்ற எதிர்பார்ப்பு, அதற்கான காரணம் எப்படி சாத்தியமாக இருக்கும், பிறரை விட ஸ்டாலின் எவ்விதத்தில் முந்துகிறார் என்பதைப் பட்டிலிடுகிறது ஒரு கட்டுரை. காமராஜர் ஆட்சி என்பதை எவர் தூக்கிப் பிடிப்பார், அதற்கான போலிக் காரணங்கள் என்ன என்பதைக் கூறி இந்த 50ஆண்டுகளில் திராவிடம் செய்த சாதனைகள் காமராசர் ஆட்சிக் காலத்தை விட சிறந்தவையாக, வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்பவையாக இருந்திருக்கும் விதத்தையும் கூறுகிறார். உடன்பிறப்பே என்ற கட்டுரை கலைஞரின் இடத்தில் ஸ்டாலின் எவ்வாறு பணி செய்தல் வேண்டும், அதன் சம காலத் தேவை என்ன என்பதை உணர்த்துகிறது.

ஜெயலலிதா அவர்கள் சர்வாதிகாரப் போக்குடையவர், அரசியல் பழி வாங்கல், அதிகார ஆணவம், கிரிமினல் குற்றவாளி, இப்படியெல்லாம் அவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்படுகிறது என்று சொல்லிக்கொண்டே சொல்லும்போது அது தடம் மாறி நல்லவர் என்ற பிம்பம் அளிக்குமோ எனப் பயந்தேன். நல்லபடியாக அது நடக்கவில்லை. எனக்கு அரசியல் பிடிக்காது என்று சொன்னவர் நடத்திய அரசியல் எவ்வித பாதிப்புகளை தமிழகத்திற்கு கொடுத்தன என விவரிக்கிறது ஒரு கட்டுரை. அவர் வாழ்ந்த வாழ்க்கை இளவரசிகள் கூட வாழாத வாழ்க்கை. ஆனால் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் அதனை தவ வாழ்க்கை என அழைத்துக்கொண்டார் என்கிறார் கட்டுரையாளர். உண்மைதானே... சசிகலா குறித்த கட்டுரை, திடீர் சின்னம்மா சட்டமன்றத் தலைவர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறை பேசுகிறது. அந்தக் கட்டுரையின் இறுதியில் வரும் வரி, ஜெ சசி இருவரின் வாழ்வில் நடந்த சதுரங்கத்தில் யார் ராணி என்ற கேள்விக்கு இப்போதும் விடையில்லை என முடியும். அதே கேள்வி எனக்கு இன்று வரை நீடிக்கிறது. யார் அதற்கு ஆதாரத்தோடு விடையளிக்க முடியும்...?

பிம்ப அரசியல் கட்டுரையில் ஜெயலலிதாவின் வருகையும், அவரது வளர்ச்சியும் தமிழக அரசியல் வரலாற்றில் மாபெரும் கறை, என்பதும் தேசியம், திராவிடம் குறித்த குறைந்த பட்ச அறிவில்லாத விசிலடிச்சான் குஞ்சுகளால் தான் ஜெயலலிதா போன்ற ஒருவர் மிக எளிதாக கலைஞருக்குச் சமமான தலைவராகிறார் என்பது ஆய்ந்து உணர்ந்த கருத்தே.

வச்சு செஞ்சிருக்காங்க என்ற வார்த்தைப் பிரயோகம் கேட்டிருப்போம். சேக்கிழார் உலா, பாவம் விடலைப் பசங்க (தமிழக பா ஜ க தலைவர்கள், இரத்தத்தின் ரத்தங்கள் அளிக்கும் பேட்டிகள்), அந்தச் செம்பு ரொம்பப் பழசு கட்டுரை(எம் ஜி ஆர், ரஜினி, கமல்,  அர்ஜூன், ஆர் வி உதயக்குமார், கே எஸ் ரவிக்குமார் படங்களை கிழித்துத் தொங்க விட்டிருக்கிறது), இது கோடம்பாக்க ஏரியா கட்டுரை (ரஜினி கமல் உரையாடல் - தூத்துக்குடி சென்று திரும்பிய ரஜினி அளித்த பேட்டியை கமல் எப்படி டீல் செய்வார் என்பதை பேசுகிறது), மய்யத்தின் அரசியல், தேவர் மகனும் தமிழ் தேசியமும் கட்டுரை (நாம் தமிழர் தம்பிகளின் அரசியல்), அண்ணன் காட்டிய வழியம்மா (சீமான் அரசியல்), த்ரீ இடியட்ஸ் (மோடி அமித்ஷா சீமான்), இம்சை அரசர்கள் (தமிழக பா ஜ க தலைவர்கள் பேட்டி), மோடி எடப்பாடி பின்னே போப்பாண்டவர், பக்தாள் நேர்காணல் (பா ஜ க பக்தாள் எல்லாவற்றிற்கும் முட்டுக்கொடுத்தல்), அதான்டா இதான்டா (ரஜினி), தேனிக்காரன்டா (ஊர் கெத்து) இன்னும் சில கட்டுரைகள் சம கால அரசியல் கோமாளிகளை வச்சுச் செய்யும் பகடி என்றால் மிகையில்லை.

காங்கிரஸ் குறித்த கட்டுரை, பெண்களைப் புனிதப்படுத்தி நடத்தும் கொடுமைகள் குறித்த கட்டுரை, ஆளுநர் பதவி குறித்த கட்டுரை, ஒட்டக அரசியல், பண மதிப்பிழப்பு  நாளை முட்டாளாக்கிய தினம் என்று கூறும் கட்டுரை, பிடல் குறித்த கட்டுரை, சகலமுமாகி விட்ட பூதம் பேசும் கார்ப்பொரேட்டு அரசியல் என நூலெங்கும் அரசியல்.

இந்த நூல் ஆமைக் கறிக்கு கை தட்டும் கூட்டத்திற்கு, ஊடக வெளிச்சத்தில் மின்னும் நடிகர்களுக்கு கொடி பிடிக்கும் கூட்டத்திற்கு, அடிமை அரசியலையும், மத்திய ஆதிக்க அரசியலையும் புரியாத திருட்டு திராவிடம் என்று பேசித் திரியும் கூட்டத்திற்கு உண்மை அரசியலை உணரும் வாய்ப்பு அளிக்கிறது. திராவிடத்தை வளர்த்தெடுக்கும் கடமை உள்ளதாக நினைப்பவர்களுக்கு பல்வேறு வரலாற்றுத் தகவுகளையும், பொது அரங்கில் பேசுவதற்கான காரண காரியங்களையும் உள்ளடக்கியுள்ளது இந்நூல்; மற்றும் கல்லூரி மாணவர்கள் முதற்கொண்டு வாக்களிக்கும் உரிமையை உடைய அனைத்து நபர்களும் வாசிக்கவேண்டிய நூல்.

வாழ்த்துகள் தோழர்.

Monday 20 April 2020

ஆரண்யம் #கயல்

#ஆரண்யம்
கவிதைத் தொகுப்பு

Kayal S

கயல் தோழரின் ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் கவிதைத் தொகுப்பிற்குப் பின் நான் வாசிக்கும் அவரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு. கயல் தோழருக்கு  மூன்றாம் கவிதை தொகுப்பு.   கவிதைத் தொகுப்பின் தலைப்பிற்கு ஏற்ப காடும் காடு சார்ந்த சொற்களும் விரவிக் கிடக்கின்றன. மரங்கள், மலர்கள், பறவைகள், விலங்குகள், காடுகள், மழை, வானம், நிலம் என நாட்டைவிட்டு நாம் பார்க்க மறந்த அல்லது அழித்துத் தொலைத்த பகுதிகளுக்குள் அழைத்துச் செல்கிறது கவிதை.

கல்யாண்ஜி, என் லிங்குசாமி, இளையபாரதி ஆகிய ஆளுமைகள் நூல் குறித்து எழுதியிருக்கிறார்கள்.

கைகளில் ஏந்தி ரசிப்பதற்கு மலர் எவ்வளவு சுகந்தமாக இருக்குமோ அதேபோன்ற மலராக ஒவ்வொரு கவிதையும் நீளமாக இல்லாமல் கைகளில் எடுத்தது கண்களில் ஒற்றிக்கொண்டு இதயத்தில் பரவவிடும் சுகம் ஒவ்வொன்றிலும்...

முயலுக்கு உவமை சொல்லும் கவிதை ஒன்று. ஒரு வரி போதும் ஆனால் ஒவ்வொரு வரியையும் விடுகதையை கூறுவதுபோல கவித்துவம் படர அமைத்திருக்கிறார். மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். ஒவ்வொரு வரியை வாசிக்கும் பொழுதும் முயலினை கைவிரல்களால் தடவிக் கொடுக்கும் சுகம்
"மல்லிகைப் பூப் பந்து
தரை நடக்கும் மேகக்கூட்டம்
கரைக்கு வந்த கடல் நுரை
குறுகுறுவென பார்க்கும் பஞ்சுப்பொதி
துள்ளும் பனிக்கட்டி
சீனத்து வெண்பட்டு
பெயர் சொன்னாலே மனம் பூரிக்கும்
செல்ல முயல்..."

புத்தன் மட்டும்தான் புத்தனாக முடியுமா... போதிமரம் மட்டும்தான் புத்தனுக்கான மரமா... இல்லை இல்லை...
"கொப்பும் குலையுமாகப்
பூக்கள் காய்கனிகளோடு
தாய்மை தழும்ப நிற்கும்
ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து
அண்ணாந்து பார்த்தால்
எம் மனிதனும்
புத்தன்
எந்த மரமும்
போதி"
என்கிறார் கவிஞர்.

யானை ஒரு பெரிய விலங்கு. ஆனால் அதனை மனிதன் படுத்தும்பாடு என்பது சொல்லில் அடங்காதது. பெரிய விலங்கு எனினும் அதன் குழந்தைத் தன்மை போன்ற செயல்கள் காண்போரை பரவசப்படுத்தும். காடுகளின் வழியாக மனிதன் வசதியாக வாழ்தலின் பொருட்டு சாலைகள் அமைத்து காட்டு விலங்குகளின் வாழ்வை சுக்கு நூறாக்கிப் போட்டிருக்கிறான். சமீபத்தில் தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டதனால் ஏற்பட்ட காயத்தால் மெல்லமெல்ல அவ்விடத்தை காயங்களுடன் கடந்துசென்ற யானையின் முகம் ஒவ்வொரு யானை கவிதையை படிக்கும் பொழுது மனதிற்குள் வந்து செல்கிறது. இதோ யானை பற்றிய வலிமிகுந்த கவிதை ஒன்று...
"தன்னை
அண்ணாந்து பார்க்கும் சிறுமி
தவறவிட்ட தன் குட்டியை நினைவூட்ட, சுரக்கும் பால்மடி கனக்கத்
தள்ளாடியபடி ஆசீர்வதிக்கும்
கோயில் யானை"
குட்டியைப் பிரித்து அழைத்து வரப்பட்ட யானையின் கனவு வேறு என்னவாக இருக்கும்...?

இன்னொரு யானை(வலி)க் கவிதையில்...
கோடி சுடர் என நீர் தெறிக்க
புனலாடி குளித்திருந்த யானை
புரியாமல் பார்க்கிறது,
நகர் வந்த நாளாய்ப்
பாகன் தன்னை நீராட்டும்
ஓரங்கள் நசுங்கிய வாளியை..."
கோயில் கடவுள் யானை பாகன் வாளி அத்தனையையும் பொருத்திப் பார்க்கையில் கவிதையில் ஒளிந்திருக்கும் வலியைக் கண்டடையலாம்...

காடுகள்  ஒரு தனி உலகம். அதனை விடுத்து வெகு தூரமாக வீடுகள் இருக்கும். ஆனால் இன்று காடுகளை அழித்து விட்டு வீட்டின் ஓரமாக ஓரிரு மரங்களை மட்டும் வைத்துக்கொண்டு அதனைக் காடுகள் என்று கூறிக்கொண்டு வாழ்கிறோம். அப்பேர்ப்பட்ட மனிதர்களைச் சாடும் கவிதை...
"அத்தியூர்
அரசம்பட்டி
ஆலங்குளம்
இலுப்பையூர்
விளாத்திகுளம்
வேப்பங்குளம்
தாண்டிக்குடி
தாழையூத்து
என மரத்தின் பெயரால்
ஊர்களை அழைத்தவர்கள் நாம்
இன்றும் ஊர்ப் பெயர்களில்
மரங்கள் இருக்கிறதுதானே"
ஊரின் பெயரில் மட்டும் வைத்திருக்கிறோம் என்று சொன்னாலும், அல்லது ஊரின் பெயரிலிருந்தும் அப்பெயரையும் நீக்கிவிட்டோமா என்ற கோபத்தின் வெளிப்பாடு இது...

என்னதான் சரணாலயங்கள் அமைத்து அழிந்து வரும் விலங்கினங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும் அது தான் வாழ்ந்த ஆதிக் காடாக ஒருபோதும் விலங்குகளுக்கு அமைந்துவிடாது என்பதனை "ஆரத்தழுவி
முகமெங்கும் முத்தமிட்டு
குறுகுறுத்த கண்களில் லயித்து
மென்மையாய் காதுகள் வருடி
எவ்வளவு கொஞ்சியும்
வாழ்ந்திருந்த காட்டையே
வழிநெடுகத் தேடும்
என் முயல்குட்டி..." என்ற கவிதையின் வாயிலாக உணர்த்துகிறார் கவிஞர்.

காடு என்பது என்ன என்பதற்கு கவிஞர் கூறும் விளக்கத்தைப் பாருங்கள் "அழகின் உச்சம் மலர்கள்
அன்பின் உச்சம் காதல்
மொழியின் உச்சம் கவிதை
ஞானத்தின் உச்சம் மௌனம் இறைவனின் மிச்சம் காடு"
ஒவ்வொன்றிலும் சலித்தெடுத்துத் தேடிய பின் கிடைக்கும் ஒரு உச்சம் கூறிய பின் இறைவனில் சலித்தெடுத்த உச்சம் காடு என்கிறார் கவிஞர். எவ்வளவு ஆழ்ந்து யோசிக்க வேண்டிய வரி இது...

தொகுப்பிலிருந்து...

வைரப் புனலின் துகள்
விளக்கில்லா பலவண்ணக் கனல்
நிலாத்துண்டின் நகரும் அகல்
மின்னல் கொடியின் மலர்
வனமகள் மூக்குத்திச் சுடர்
இருள் எதிர்க்கும் கலகக்குரல்
கதிரிடம் களவாடிய சிறு பகல்...
மின்மினி!

மலர்
சருகு
ஒன்றே போல்
மடியேந்தும்
பூமி

எதிர்ப்பட்ட பின்
கடப்பது கடினம்
காதல்,
கடவுள்,
காடு

விற்று விட்ட மாந்தோப்புக்கு
அப்பா நள்ளிரவில் தடுமாறியபடி செல்ல
தயங்கித் தொடர்ந்த அம்மா மட்டுமே
அறிவாள்
ஒவ்வொரு மரத்தின் முன்னும்
அவர் விழுந்து மன்னிப்பு கேட்டதும்
பின் சாகும்வரை
மாம்பழத்தை உண்ணாமல்
வாழ்ந்ததும்...

இன்னும் இன்னும் பறவைகளாக, பூக்களாக, இயற்கையாக மின்னும் கவிதைகள் நிறைய நிறைய தொகுப்பில்...

வாசியுங்கள்
நாம் தொலைத்த காட்டிற்குள் பயணம் செய்யலாம்.
நாம் மீட்டெடுக்க வேண்டிய காடுகளை அடையாளம் கண்டுகொள்ளலாம்...

கவிதைப் பயணம் தொடரட்டும் சிறப்பாக...
வாழ்த்துகள் தோழர்.

யாழ் தண்விகா

Saturday 18 April 2020

எனக்கு எதுவோ உனக்கும் அதுவே #இசைஞானி இளையராஜா

எனக்கு எதுவோ உனக்கும் அதுவே...

இசைஞானி இளையராஜா

குமுதம் பதிப்பகம்

இளையராஜா தனது ஆன்மீகக் கருத்துகளை கவிதை வடிவில் தந்திருக்கிறார். ஆன்மீகம் என்பது ஒரு சரணாகதி நிலை. மோன நிலை. பைத்திய நிலை. அந்நிலை உள்ளவர்கள் அசாதாரண நிலையை விரும்பும் சாதாரணன் போன்றிருப்பர். இளையராஜா அவ்வகைப்பட்டவர்.

ஆன்மீகத்திற்கும் எனக்கும் எப்போதும் ஆகாது என்பதற்கு ஆயிரம் காரணங்கள்.   ஆனால் நிம்மதியை, துன்பங்களை உண்டாக்குவது, நீக்குவது, இன்பம் அளிப்பது, மனம் ஒரு நிலைப்படுத்தும் சூழலை ஆன்மீகம் மட்டுமே உருவாக்குவதாக, அதை கடவுள் மட்டுமே உண்டாக்குவதாக கூறுவது ஆன்மீகத்தின் பெயரால் காலம் காலமாக கூறிவரப் படுகிறது. கடவுள் உனக்குள் தான் இருக்கிறார். அவரைத் தேடி நீ எங்கே செல்கிறாய், கடவுளை அடைய இன்பத்தை விட கண்ணீர் எளிய வழி என்று கூறுகிறார் இளையராஜா. இன்றைய உலகில் மட்டுமல்ல, ஆதி காலம் தொட்டு பசியால் அழுபவனின் கண்ணீர் கடவுளுக்கு சென்று சேர்கிறதா... தவறுகள் செய்பவன் தண்டனைக்கு எப்போதும் உள்ளாக்கப் பட்டிருக்கிறானா... கர்மம், பாவம், புண்ணியம் என்று பல கேள்விகள் ஆன்மீகம் தோற்றுவிக்கும். நம்பவியலாத பதில்களை கூறி மடை மாற்றும். இசையை உணர்ந்தவரின் வாக்கு, அவரின் இசை போல் சாந்தம் வடிய அமைந்திருக்கிறது. வாசிக்க வாசிக்க மனதினை நோக்கிய பல கேள்விகளைப் பூக்கச் செய்கிறது சொற்கள். அவரின் இயல்புத்துவம், அன்னை மூகாம்பிகை, ரமண மகரிஷி மேலான நம்பிக்கை அனைத்தும் சொற்களில் காணலாம். இசை குறித்துக் கூறும்போது
"இசை என்பது
புத்தி அல்ல
மனம் அல்ல
எண்ணம் அல்ல!
நாதம்-
நாதம் மட்டுமே!
என்கிறார்.

இளையராஜா குறித்தும் அவரின் ஆன்மீக எண்ணங்களும் பற்றி அறிந்துகொள்ள வாசிக்கலாம்.

"கர்மம் செய்கிறேன் என எண்ணாதே
உன் தேகமே அதைச் செய்கிறது
நீ அப்படியே இருக்கிறாய்!
செயலுக்கு அப்பால் நீ இருக்கிறாய்
என்ற தொடர்பினால் தான்
செயலே நடக்கிறது..."

வாழ்த்துகள் இசைஞானி இளையராஜா...

யாழ் தண்விகா

யா ஒ #சிவசங்கர் எஸ் ஜே

யா - ஒ
மறைக்கப்பட்ட மார்க்கம்

#சிவசங்கர்_எஸ்_ஜே

வெற்றிமொழி வெளியீட்டகம்
திண்டுக்கல்

 128பக்கங்கள்

திருச்சாணரத்து மலையின் சமணப்பள்ளி பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை தாக்குப் பிடித்து இருக்கிறது. அதில் பயின்று பின் அதனின்றும் வெளியேறிய யா ஒ ஆசான் உண்டாக்கிய மார்க்கம் பேசிய 108 உரையாடல்களை இந்நூலில் கூறியுள்ளார் ஆசிரியர். குரு சீடர் இவர்களுக்கிடையே நிகழும் உரையாடல் வாசிக்க எளிமையாக, புரிந்துகொள்ளும் விதமாக, கொஞ்சம் வாழ்வின் உள் அர்த்தங்களை உணரவும் வாய்ப்பளிக்கிறது. ஆசீவகம், பௌத்த கருத்துகள் இந்த உரையாடலில் தொக்கி நிற்பதாக ஆய்வுக் குழுவினர் கூறியதாக நூலாசிரியர் கூறுகிறார். நூலில் கடைபிடிக்க இயலாத விசயங்கள் என்று எதைக் கூறியும் வாசிப்போரை சிரமத்திற்கு மார்க்கமும், நூலாசிரியரின் உரையும் ஆளாக்கவில்லை என்பது பெரு மகிழ்வான ஒன்று.

ஒவ்வொரு உரையாடலையும் ஒவ்வொரு ஓவியத்தின் மூலமாக சிறப்பாக்கித் தந்திருக்கிறார் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் தோழர்.

மார்க்க கடலில் ஒரு துளி:

#சுயம்

இது தனியே உங்களுக்கெனக் கொண்டு வந்திருக்கிறேன் என்றபடி மரத்தின் முதல் கள்ளை முன்னே வைத்தான் யாவா(சீடன்)

ஆஹா என்றவாறே ரசித்து ருசித்த ஆசான் (யா ஒ) யாவாவை ஏதேனும் கேட்கும்படி சைகை செய்தார்

உண்மையில் தனித்துவம் என்பதுதான் என்ன ஆசானே

அது மழையில் கரையாத சாயம் யாவா

வாழ்த்துகள் தோழர் சிவசங்கர்
தோழர் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்...

யாழ் தண்விகா

மஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும் #பா.ஜெய்கணேஷ்

மஞ்சள் வெயிலும்
மாயச் சிறுமியும்
#கவிதைத்தொகுப்பு

 Jai Ganesh தோழர்

96பக்கங்கள்

பரிசல் வெளியீடு
சென்னை

கவிதை என்பது எழுத்து வடிவிலான குறும்படம். கவிதையை இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வரையறையை இப்போதெல்லாம் நேரடியாகக் கூறிவிட முடிவதில்லை. புதுப்புது முயற்சிகள், புதுப்புது வடிவங்கள், புதுப்புது கோணங்கள், புதுப்புது சொல்லாடல்கள் என தனது பயணத்தை விரிவுபடுத்திக்கொண்டே செல்கிறது கவிதை இத்தொகுப்பு SRM அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் புலத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றிவரும் ஜெய்கணேஷ் தோழரின் முதல் கவிதைத் தொகுப்பு.

தான் காணும் ஒவ்வொரு உலகம் குறித்தும் பல பக்கத்தில் தன் பார்வைக் கோணத்தைச் செலுத்தும் வல்லமை இவர் தன் கவிதைகளில் காணக் கிடைக்கிறது. வெயில் என்றால் வெயிலால் காய்ந்துவிடும் கடைசி மண் துகள் வரை இவரின் சொற்களில் வந்து விடுகிறது. மழை என்றால் நனைந்து தன்னைக் குழைத்துக்கொள்ளும் ஈரம் இறங்கும் ஆழம் வரை இவரின் எழுத்து இறங்குகிறது. தொல் விளையாட்டுகள், பாரம்பரியம் குறித்துப் பேசினால் அது புழக்கத்தில் விட்டு மறைந்து போனதன் உள்ளார்ந்த வலியை இவரின் எழுத்துகள் பதியம் போடுகிறது. அதுபோல் தான் ஒவ்வொரு கூறையும் காட்சிக் கவிதையாக்கியுள்ளார். 

தனிமையின் நினைவுகள் கவிதையில்
தனிமையைக் கூறும் வித வலி இப்படியாக...
"நெடுந்தூரப் பயணத்தில்
நிராதரவற்று நிற்கும்
பயணியைப் போல

சுற்றிலும் அடர்ந்த மரங்கள் இருந்தும்
பார்வையற்ற ஒரு பறவையைப் போல

இருண்ட வானத்தின் எல்லையற்ற ஓசையில்
கரைந்துபோன
ஒரு குருவியின் குரலைப் போலத்தான்
என் தனிமையும்..."
தனிமையையும் கவியால் வாழ வைத்துள்ளார்.

நீரற்ற நதித் தடங்கள் கவிதையில் இல்லாமல் போய்விட்ட நதிகளைக் குறித்து கூறுகையில்
"நீரற்ற நதிக்கு மேலாக
கட்டப்பட்ட பாலத்திலிருந்து
சிறுவர்கள் எச்சில் துப்பு
விளையாட்டின் வழி
நதியொன்றை ஓட விடுகின்றனர்

மழையற்ற வானம்
தன் இயலாமையினால்
வெயிலை உமிழ்ந்து தள்ளுகிறது

ஈரமற்ற நதி
மௌனத்தில் உறைந்து கிடக்கிறது"
என்பதாக முடிக்கிறார். காணாமல் போன வாழ்வை கண்ணீரோடு வாசிக்க வைக்கும் வரிகள்.

மாயச் சிறுமியும் மஞ்சள் மலர்களும்,
மஞ்சள் நிற யானை உள்ளிட்ட கவிதைகள் புனைவின் உலகத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன. யாழின் இசையில் கவிதைக்குள் இலக்கணத்தின் கருப்பொருட்கள் யாவும் தஞ்சம் அடைந்துள்ளன.

நகர்தலில் உடைகிறது பொழுது கவிதை அறிவியலை பகடி செய்கிறது புதிய கோணத்தில்...
"நடு சாலையில்
அடிபட்டுக் கிடக்கிறது
நாயொன்று.

இரயில் பாதையில்
மரித்துக் கிடக்கிறது
யானையொன்று.

மின்சாரக் கம்பியில்
தொங்கிக் கிடக்கிறது
காகம் ஒன்று.

செல்போன் கோபுரங்களில்
தொலைந்து போகிறது
குருவிக் கூட்டமொன்று.

உங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளில்
ஒவ்வொரு நொடியும்
உருக்குலைந்து போகிறது
ஏதோ ஒரு உயிரினமொன்று..."
இயல்பான வரிகளில் செயற்கை உண்டாக்கிய அதிர்ச்சியை இப்படியெல்லாம் கூறலாமோ என வியக்க வைக்கிறார்.

பெரும்பாலான கவிதைகள் இயற்கையைக் கருப்பொருளாகக் கொண்டிருக்கிறது. பல கவிதைகள் சுயத்தைக் குறி வைக்கின்றன. நீட்டி முழக்கும் வித்தையைத் தவிர்த்து கருவின் திசையெங்கும் தான் அறிந்த சொற்களின் நளினத்தைப் படரவிட்டிருக்கிறார் என்று தான் கூறவேண்டும். இன்னும் பல உயரங்களை கவிதை உலகம் தங்களுக்கு அளிக்கும் என்ற நம்பிக்கை பெருக்கெடுக்கிறது. தொடருங்கள் தோழர். வாழ்த்துகள்.

யாழ் தண்விகா

செங்கிஸ்கான் #முகில்

செங்கிஸ்கான்

முகில்

கிழக்கு பதிப்பகம்

184 பக்கங்கள்

#மெர்கிட் என்ற மங்கோலிய இனத்தை சேர்ந்த சிலுடுவின் மனைவியான ஹோலுன் என்பவரை #போர்ஜிகின் இனக்குழுவைச் சேர்ந்த யெசுகெய் என்பவர் கவர்ந்து சென்று மணம் முடிக்கிறார். அவர்களுக்குப் பிறந்த குழந்தையே டெமுஜின். செங்கிஸ்கானின் நிஜப்பெயர் டெமுஜின். #டட்டார் இனக் குழுவின் தலைவன் பெயர் டெமுஜின் முந்தைய நாளில் போரிட்டு வென்ற எதிரி குழுவின் தலைவன் பெயர் அது. இப்படி மங்கோலிய இனத்திற்குள் ஏகப்பட்ட இனக்குழுக்கள் பிரிந்து பிரிந்து வாழ்ந்த காலகட்டம். அவர்களில் ஒவ்வொருவரும் தங்கள் இனக்குழுக்களை வலுப்படுத்த பிற இனக் குழுக்களுடன் போரிட்டு அவர்கள் வைத்திருக்கக்கூடிய குதிரைகளை கால்நடைகளை பெண்களை அபகரித்துக் கொண்டு வந்து தங்கள் இனக்குழுக்களை வலுப்படுத்திக் கொள்ளும் வழக்கம் அல்லது அவர்களை அடிமைப் படுத்திக் கொள்ளும் வழக்கம் அவ்வப்போது தொடர்ந்து கொண்டே வந்திருக்கிறது.

மங்கோலிய நாடோடிகளைத் தடுக்கவே சீனர்கள் தடுப்புச் சுவரைக் கட்டினார்கள். கோடை, குளிர், வசந்த காலம் என்று ஒவ்வொரு காலத்திற்கும் குடியிருக்கும் நிலத்தை மாற்றிக்கொண்டே இருப்பார்கள் மங்கோலியர். ஒன்பது வயதில் டெமுஜினுக்கு பொருத்தமான பெண்ணை நிச்சயம் செய்வதற்காக தந்தையுடன் பாதுகாவலர்கள் சிலருடன் கிளம்புகிறார். போர்ட்டெ என்ற பெண்ணை நிச்சயம் செய்கிறார்கள். டெமுஜின் மணப்பெண் சேவைக்காக அங்கேயே தங்கி தந்தை தனது இருப்பிடம் நோக்கி வரும் வழியில் பிற இனக்குழு ஒன்றில் வாங்கி உண்ட விச பாலால் கொல்லப்படுகிறார்.

குடும்பத்தின் சுமை டெமுஜின் மேல் விழுகிறது. சில காலங்களுக்கு பின்னால் அவனுக்கு அறிமுகமாகும் நட்பு ஜமுக்கா. இவன் மூலம் நட்பு வளரும் அதே சூழலில் மங்கோலிய இனம் அனைத்தையும் ஒன்று சேர்க்கவேண்டும் என்ற லட்சியமும் பூக்கிறது இருவருக்கும். ஜமுக்கா #ஜடாரன் இனக்குழுவினர்.

#டாய்சூட் இனக்குழுவிடம் ஒருமுறை சிக்கிக்கொண்ட டெமுஜின் பல போராட்டத்திற்குப் பின் அங்கிருந்து தப்பித்து வருகிறான். திருடர்களால் தனது இடத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட குதிரைகளை மீட்கச் சென்று வெற்றியோடு டெமுஜின் திரும்புகிறான். 16வயதில் போர்ட்டே உடன் திருமணம். தேனிலவின் போது எதிர்பாரா தாக்குதலால் போர்ட்டே எதிரி குழுவால் கடத்தப்படுகிறாள். அவளை மீட்க #கெரியிட் குழு தலைவன் ஆங் கானிடத்தில் உதவி கேட்டு மனைவியை மீட்க செல்கிறான். சில மாதங்கள் ஆன சூழலில் அங்கு சிறு போருக்குப் பின் போர்ட்டேவைக் காண்கிறான். ஆனால் அவள் எதிரிக் குழு நபரால் கர்ப்பம் ஆன நிலையில். ஆனாலும் அழைத்து வருகிறான். ஆண் குழந்தை பிறக்கிறது.

தொடர்ந்து சிறு சிறு படையெடுப்புகள். அனைத்திலும் வெற்றி. இனக்குழுக்கள் சமரசத்தின் மூலம், போரின் மூலம் இணைக்கப்படுதல். இடையே ஜமுக்கா தான் தான் மங்கோலியப் பேரரசின் தலைவனாக இருக்கவேண்டும் என்ற ஆசை. ஆங் கான் ஒரு புறம். இவர்களை எவ்வாறு வென்றான், மங்கோலியப் பேரரசு செங்கிஸ்கான் அமைத்த பின்னர் உலகை வெல்லும் வாய்ப்பு எப்படி எவ்வளவு தூரம் வந்தது, இந்தியாவுக்குள் ஏன் ஊடுருவ முடியவில்லை என்பதை அருமையாக எழுத்தால் காட்சிப்படுத்தியுள்ளார் முகில்.  ஐரோப்பா மற்றும் ஆசியாவில் வாழும் இருநூறில் ஒருவர் செங்கிஸ்கானின் பரம்பரை என்று மரபணு சோதனை சொல்கிறது. சேர சோழ பாண்டிய பரம்பரை என்று சொல்லிக்கொள்வது போல செங்கிஸ் பரம்பரையாகவும் நம்மில் ஒருவர் இருக்கலாம். வாசிக்க வாசிக்க கண்முன் ஒரு திரைப்படம் பார்க்கும் பிரமிப்பு.

வாழ்த்துகள் தோழர் #முகில்.

Wednesday 15 April 2020

முழு விடுதலைக்கான வழி # டாக்டர் அம்பேத்கர்

முழு விடுதலைக்கான வழி

டாக்டர் அம்பேத்கர்

தலித் முரசு  வெளியீடு
சென்னை.

மத மாற்றம் செய்வதற்கு முன்னால் ஒடுக்கப்பட்ட மக்களைத் திரட்டி அவர்களிடம் மத மாற்றத்தின் தேவை குறித்த கருத்தைக் கொண்டுசேர்க்கும் விதமாக அவர்களின் கருத்தை அறியும் முகமாக அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய மாபெரும் உரை.

தீண்டத்தகாதவன் என்பவன் மேல் பரிவு, சமத்துவம், சுதந்திரம் இப்படி எதையும் அளிக்காத இந்து மதம் அவசியமா... சாதி என்பது இல்லாத இந்து மதம் என்பது ஒரு காலமும் சாத்தியமில்லை. அப்படியிருக்க காலமெல்லாம் அடிமையாக, சாதி இந்துக்களின் ஏவலாளாக எதற்கு இருக்கவேண்டும்? இந்து மதம் பொருளாதார நன்மையை அளிக்கிறதா? சாதி இந்துக்களுக்கும் தீண்டத்தகாதவனுக்கும் இழைக்கப்படும் கொடுமைகள் ஒரே வகைப்பட்டதா? மானுட சிந்தனைக்கு இந்து மதம் மதிப்பளிக்கிறதா? ஹரிஜன் என்ற சொல்  இழிவைப் போக்கிவிட்டதா? இந்து மதத்தை எதிர்த்து மகாத்மா காந்தியால் சத்தியாக்கிரகம் இருக்க முடியுமா? முன்னோர்கள் பின்பற்றிய அதே இந்து மதத்தை அப்படியே காலம் காலமாக தொடரத்தான் வேண்டுமா... எந்த மதம் என்று தீர்மானிக்க மக்களுக்கே உரிமை. ஆனால் எப்பொழுது? எத்தனை பேர் மதமாற்ற மக்கள் திரளில் பங்கேற்பது...
என்பது போன்ற பல கேள்விகளுக்கான பதில்களை முன்வைத்து அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய உரை. இன்றைய காலகட்டம் வரை அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுக்கப்பட்ட கேள்விகள் அப்படியே தான் இருக்கின்றன. மத மாற்றம் என்றவுடன் அதைத் தடுக்கும் வண்ணம் முன் வந்து நின்று அதைத் தடுக்க நினைக்கும் இந்து மத சீர்த்திருத்தவாதிகளிடம் அம்பேத்கர் கேட்ட கேள்விகளும் அப்படியேதான் நிற்கின்றன. 85 ஆண்டுகள் கடந்துவிட்டன பதில்கள் இல்லை. மாறாக இன்னும் தீவிரத் தன்மையுடன் ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கிய இந்து மதத்தின் கொடுங்கரங்கள் நீண்டபடிதான் இருக்கின்றன.

தலித் முரசு, பதிப்புரையில் கூறிய கடைசி வார்த்தை அம்பேத்கரின் உரையை ஒற்றை வார்த்தையில் நிறைவு செய்து வைக்கிறது
"கீழ் வெண்மணிகளை விவாதிப்பதற்குப் பதில் அவற்றைத் தடுக்கும் மீனாட்சிபுரங்களை விவாதிக்கத் தொடங்குங்கள்"

முற்போக்கு சக்திகள் வாசிக்க வேண்டிய புத்தகம். பிற்போக்கு சக்திகளிடம்  கொண்டு சேர்க்கவேண்டிய புத்தகமும் கூட.

யாழ் தண்விகா

Tuesday 14 April 2020

வயது வந்தவர்களுக்கு மட்டும் #கி.ராஜநாராயணன்

வயது வந்தவர்களுக்கு மட்டும்
(நாட்டுப்புறப் பாலியல் கதைகள்)

கி. ராஜநாராயணன்

அகரம் வெளியீடு
தஞ்சாவூர்

248 பக்கங்கள்

பாலியல் கதைகள் என்றவுடன் மேற்படி கதைகள் என்ற நினைவு வந்து போகும். காதலையும் காமத்தையும் கொண்டாடும் ஒரு சமூகம் தான் அன்பு என்ற சொல்லைக் கரம் பிடித்து அழைத்துச் செல்வதற்கு தகுதியை உடையதாயிருக்கும். பாலியல் கதைகள் என்றால் காதை மூடிக்கொண்டு கடக்கும் மனிதர்கள் தன்னைப் பற்றிய ஒரு பிம்பத்தை வலிய கொண்டு வர முயற்சி செய்கிறார்கள் என்பதைத் தவிர வேறொரு சுவாரஸ்யமும் இருக்கப் போவதில்லை. அப்பனும் ஆத்தாளும் சேராமப் போனா நீயும் தான் பொறக்க முடியுமா... என்ற வார்த்தை காதல் என்பது பொது உடைமை என்ற பாடலில் வரும். இந்த வார்த்தை வெறும் காதலால் மட்டும் நிரப்பப் பட்டிருக்குமா என்பது ஆய்ந்து உணரப்படவேண்டிய ஒன்று.

மஞ்சள் பத்திரிக்கைகள், சரோஜா தேவி கதைகள் என்று எண்ணற்றவை புழங்கிய மண் இது. அது செக்சு படங்கள் என்ற பெயரில் திரைப்படமாக வந்து மனித மனத்தை தேடலின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. அதில் வெறுப்புத் தட்டிய ஒரு பொழுதில் அதே திரைப்படத்தில் பிட் சீன்ஸ் வைத்து அதனால் திருப்தி காண வைத்தது. என்னதான் ஷகிலா படம் என்றாலும் பிட் இல்லாமல் படம் முழுமையடையாது என்ற கால கட்டம் கடந்த பின்னர் அதீத தொழில் நுட்பம்! முழுக்க முழுக்க ஆபாச படங்களை குறுந்தகடு, தொடர்ந்து அலைபேசியின் மூலமாக கைக்குள் கொண்டுவந்து திணித்தது. இன்று காமம் என்பது உடலின் வேலை என்பதாக மட்டும் மாறிப் போனது எதனால்... காமம் என்பது இதுதானா...

நண்பர்கள், தோழிகள், காதலர்கள், கணவன் மனைவி, முறைமைக்காரர்கள் என பலரும் பலவிடத்தில் பகிர்ந்த ஒன்று தான் பாலியல் கதைகள், இரட்டை அர்த்த வார்த்தைகள். அது ஆழ் மனதில் எப்பொழுதும் போல் பூத்துக் கிடக்கிறது. அதை வெளிப்படுத்தும் விதத்தில் அது அர்த்தப் படுகிறது. அது எதற்காக ஒவ்வொரு மனிதனால் வெளிக்கொணரப்படுகிறது என்பதும் உணரவேண்டிய ஒன்று.

கட்டற்ற பாலியல் சுதந்திரம் என்பது கணவன் மனைவியாக உறவுக்குள் வந்த பின்னர் சமூகம் மாற்றம் பெற்றது. அந்த சுதந்திரம் ஆண் பெண் இரு பாலருக்கும் சமத்துவத்தைப் பெற்றுத் தந்து விட்டதா என்றால் நாம் வாழும் சமூகத்தில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஆண் பாலியல் குறித்து பேசினால் அவனின் தனித்திறன் என்றும் பெண்  பேசினால் அவளை வேறொரு கோணத்தில் பார்ப்பதையும் பார்க்கிறோம். பசி உணர்வு போலவே பால் உணர்வு. அது ஆணுக்கும் பெண்ணும் பொது என்பதை உணரத்தக்க பல கதைகள். இந்த நூலானது நாட்டுப்புறப்பகுதிகளில் வழங்கி வந்த பாலியல் கதைகள்.

இதில் அரசர்கள் காலம், குருகுல காலம் முதல் தற்போது வழங்கி வரும் கதைகள் வரை சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதைக்கும் பின்னால் உள்ள அரசியலை நாம் முடிச்சிட்டு பார்ப்பதில் நமது அறிவினை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லலாம். அரச சாம்ராஜ்யம் எப்படி அழிந்தது, பாலியலில் பெண் என்பவள் எப்படி பயன்படுத்தப் படுகிறாள், ஓர் ஆண் ஒருத்தியை சேர்த்துக்கொள்ளும் கதைகளும் உண்டு. ஒரு பெண் ஓர் ஆணைச் சேர்த்துக்கொள்ளும் கதைகளும் உண்டு.  கையாலாகதவள் என்று பெண்ணைக் குற்றம் சாட்டுவது போல கையாலாகாதவன் என்று ஆணைக் குற்றம் சாட்டவும் கதைகள் உண்டு.

மாமனார் மருமகள், மாமியார் மருமகள் இவர்கள் இடையே தேவைப்படும் இடைவெளி எங்கிருந்து தொடங்கியது அதற்காக வழங்கப்பட்ட கதைகள் என்ன,
அலைகளில் ஆண் அலை, பெண் அலை என்று ஏன் வழங்கப்படுகின்றன, அந்த அலைகள் ஏன் ஒன்று சேர்வதில்லை, தந்தை மகள் உறவு என்பது என்ன, சுரைக்காய் என்பது எதன் குறியீடு இப்படி பல கதைகள். நாம் தற்போது பேசிவரும் கதைகள் அல்லாத புதிய கதைகள் பல உண்டு. நாம் பேசி வரும் கதைகளும் சில உண்டு.

கி.ரா. அவர்கள் இது போன்ற பாலியல் கதைகளை சேகரிப்பதற்கு யாரும் இல்லாததால் நான் இந்த வேலையைச் செய்கிறேன் என்கிறார். பேச்சு வழக்கில், ஒரு கதை சொல்லியின் இடத்தில் நின்று தன்னால் இயன்ற அளவுக்கு பாலியல் கதைகளை எழுத்தில் கொண்டு வந்துள்ளார். வயது வந்தவர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய கதைகள். வயது வந்தும் வயதுக்கு தேவையான முதிர்ச்சியை அடையாமல் இருப்பவர்களும் வாசிக்க வேண்டிய புத்தகம்.

யாழ் தண்விகா

Saturday 11 April 2020

சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை #அம்பை

#சிவப்புக்_கழுத்துடன்_ஒரு_பச்சைப்_பறவை

சிறுகதைத் தொகுப்பு

 #அம்பை

காலச்சுவடு பதிப்பகம்

நீண்ட நாள் வாசித்த ஒரு சிறுகதைத் தொகுப்பு. 167பக்கங்கள். 13 சிறுகதைகள்.

பெண்களை மையப்படுத்திய கதைகள் அனைத்தும். கதைகளை சுவாரஸ்யப்படுத்த எதையும் செய்யாமல் அனைத்தையும் அதனதன் போக்கில் இயங்க வைத்திருப்பது இவரின் தனித்துவம் போல. முதல் கதையான தொண்டை புடைத்த காகம் ஒன்று என்பதில் வயது முதிர்ந்த தந்தையுடனான வாழ்வை, சமையலறை வழியாகக் காணும் காகம், சாலையில் பைக்கின் சக்கரங்களின் கீழ் அடிபட்டு சாகும் காகத்தின் கண்களில் இருந்து வழியும் நீர் என்பதாக நகர்த்தியிருக்கிறார். கழுத்தேறி இதயம் இறங்குகிறது வலி.

சாம்பல் மேல் எழும் நகரம் கதையானது வீடு இடம் பெயரும் வலியை அதுவும் வயதானவர்கள் உடன் வாழும்போது அவர்களைப் பராமரித்தல், அவர்களை உடனழைத்துச் செல்லுதல் என்பது உள்ளிட்ட வலிகள் எதை நோக்கி வாழ்வை இழுத்துச் செல்லும் என்பதைப் பேசுகிறது.

வீழ்தல் கதை நோயில் வீழ்ந்த தந்தைக்கு செலவழிக்க யோசிக்கும் வெளிநாட்டு வாழ் மகனின் மன நிலையையும் அதனால் தாய் எடுக்கும் முடிவையும் வலியோடு பதிவு செய்திருக்கிறது.

சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை   ஒரு நீள் கதை. வாழ்தல் பற்றிய எண்ணங்கள் காலப்போக்கில் எப்படி மாறுகிறது, அதற்கேற்றாற்போல் வாழ்பவர்கள் தங்களை என்ன மனநிலைக்கு உட்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை வசந்தன் மைதிலி தேன்மொழி கதாபாத்திரங்கள் மூலமாக கதாசிரியர் கூறுகிறார்.

1984 கதை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இறந்த பொழுது உண்டான கலவரங்கள் குறித்த பின்னணியில் செல்கிறது.

வில் முறியாத சுயம்வரங்கள் கதையானது பணி ஓய்வு பெறும் காலத்தில் ஒரு பெண் தேடிக் கொள்ளும் உறவு குறித்துப் பேசுகிறது.

இன்னும் சில கதைகளும்
பயணம் 21, 22, 23 குறித்த கதைகளும்....

பொய்கை கதையும்
சிங்கத்தின் வால் கதையும் புனைவின் வழி செல்கிறது.

வாசிப்பில் ஒரு புதிய அனுபவம் அம்பையின் கதைகளை வாசிக்கும்போது அடைய முடிகிறது. மனதை ஊடுருவும் வரிகள், மனதைப் படம் பிடித்திருக்கும் வரிகள் என இரு நிலைகளையும் வாசிப்பவர் அடைவர்  என்பதில் மாற்றமில்லை...

யாழ் தண்விகா

Saturday 4 April 2020

மியாவ் # சி.சரவணகார்த்திகேயன்

#மியாவ்

சிறுகதைத் தொகுப்பு

Saravanakaryhikeyan Chinnadurai.

உயிர்மை பதிப்பகம்

#அணங்கு

மியாவ் தொகுப்பில் கடைசி. நவீன தொழில் நுட்ப கண்டுபிடிப்பு சார்ந்தே இருக்கும் என்று கடைசி வரை எதிர்பார்த்தேன். ஆனால் தொடக்கம் முதல் நீட் தேர்வின் வலிகளுடன் பயணிக்கிறது. அப்பா மகள் இருவரும் தமிழகத்திலிருந்து கேரளம் பயணித்து தேர்வெழுத வேண்டும். நீதிமன்றங்களின் கைவிரிப்பு, மாணவ மாணவிகளின் மன உளைச்சலை அருமையாக கண்முன்னே நிறுத்தியிருக்கிறார். பயணத்தால் திடீரென்று ஆன மாதவிடாய், அதற்காக அப்பாவிடம் நாப்கின் வாங்கச் சொல்லுமிடம், அவர் இல்லையென்று திரும்புதல், அதனால் அவள் துணியைப் பயன்படுத்துதல், தேர்விடத்தில் நடக்கும் சோதனைகள் என ஒவ்வொன்றும் கண்முன் நடப்பதுபோல. வாசிக்க வாசிக்க கண்ணில் நீர் கட்டிக்கொண்டது. அங்கு நடக்கும் சோதனைகள் வலிகளின் உச்சம். இப்படி சொந்த நாட்டு மக்களை சோதனைக்கு உள்ளாக்கியவர்கள்தான் Corono கொண்டு வந்தவர்களை நாடு முழுக்க நடமாடவிட்டவர்கள் என்றெண்ணம் வந்துபோனது. வயதுக்கு வரும் முன்னரே சற்றே பெரிய மார்பகங்களைக் கொண்டிருத்தல், அதுவும் வறுமை தொற்றியிருக்கும் நிலையில் வாழும் ஒரு பெண்ணின் அசூயையான உணர்வு இதனை எவ்வித பூச்சும் இன்றி வடித்திருக்கிரார். கதையின் இறுதி நீட்டின் மேல் குருதியை உமிழ்வது போலிருந்தது. மேலும் தேர்வெழுதும் மாணவியின் பெயர் கதைக்கு அவ்வளவு பொருத்தம்...

#மோகினியாட்டம்

Facebook மூலமாக அறிமுகம் இருவர். நாளாக நாளாக காதலாகிறது. ஒருநாள் ரமணி தன் காதலை சுஜாவிடம் சொல்கிறான். சுஜா கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்கிறாள். ரமணியின் பிறந்தநாள் அன்று தான் ஒரு பெண் அல்ல ஆண் என்றும் fake id என்றும் கூறுகிறான் சுஜா. இதை யாரிடமும் கூறவேண்டாம் என்ற புரிதலின் படி பிரிக்கின்றனர். சுஜா ஒரு fb பிரபலம். மேலும் ரமணி மெசஞ்சரில் அனுப்பிய பல தகவல்கள் சுஜாவிடம் இருப்பதும் ஒரு காரணம். சுஜா ஆண் என்று சொன்னாலும் தான் ஒரு பெண் தான் எனச் சொல்லிவிட மாட்டாளா என ஏங்குகிறது ரமணியின் மனது. ஆனால் ரமணி யார்...? ஆணா பெண்ணா...? அது ரமணிக்குத்தானே தெரியும்... அந்த முடிச்சின் சுவாரஸ்யம் கதையைப் படித்தால் புரியும்...

#பெட்டை

சாதி மறுப்புத் திருமணம் செய்யத் துணிந்தவளின் காதலனை மிரட்டிப் பிரித்து விடுகின்றனர். அதன்பின் அவளை அதே சாதிக்காரன் ஒருவன் திருமணம் முடிக்கிறான். உடலெங்கும் விசம் அவனுக்கு. அவ்வப்போது வார்த்தைகளால் கொல்கிறான். ஆனாலும் வீட்டிலேயே இருக்க இயலாமல் கணவனிடம் அனுமதி பெற்று ஒரு அடகுக் கடையில் சேர்கிறாள். மேலாளராக இருப்பவனால் வரும் தொந்தரவு காரணமாக அங்கு செல்லவில்லை என்று கணவனிடம் கூறுகிறாள். அதற்கு அவன் என்ன பதில் அளித்திருப்பான்... அவள் வாழும் தெருவில் உள்ள ஒரு பெட்டை நாயைச் சுற்றி ஆண் நாய்க் கூட்டம். ஆனால் கணவனாக உள்ளவன் எந்த நாயைப் பலிகடா ஆக்குகிறான்... இந்த இரண்டையும் முடிச்சிட்டு முடிகிறது கதை. மாதவியின் முடிவும் பெட்டைத் தனமாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்வதா... அல்லது இவர்கள் முன் வாழ்வதற்கு இதுதான் இவர்களுக்கு அளிக்கும் தண்டனை என மாதவி முடிவெடுத்துவிட்டாளா என யோசிக்க வைக்கிறது கதை...

#நீதிக்கதை

தற்கொலை விளையாட்டான ப்ளூவேல் கேமை மையப்படுத்திய கதை. சாக விரும்புபவன் மற்றும் அவனுக்கான டாஸ்க் கொடுக்கும் நபர் இருவருக்கும் இடையே நடக்கும் அன்பு யுத்தம். ஆனால் கடைசியில் என்ன நடக்கிறது என்பதை பதட்டத்தோடு நகர்த்திக்கொண்டு சென்று சொல்கிறது கதை. நீலத் திமிங்கல விளையாட்டு என்பதன் சுருக்கம் நீதிக்கத்தை என்று வைத்துக்கொண்டாலும் விளையாட்டின் நீதியையும் காப்பாற்றுகிறது கதை. வேற லெவல்...

#அழியாக்கோலம்

டிவிட்டர்ல டி எம்மில் பகிர்ந்துகொண்ட டாப்லெஸ் செல்ஃபி திருமணத்திற்கு முன் ஒருத்தியின் வாழ்வை எப்படிப் பதம் பார்க்கிறது என்பது கதை. ஆனால் அது யாரால் எப்படி லீக் ஆனது என்பதுதான் திருப்பம்...

#மியாவ்...

ஆண் பெண்ணிடையே நிகழும் ரசவாதம்  தான் மையம். இளமையை எப்படிக் களிப்போடு வைப்பது என்பதை பெண்களுடனான சுவாரஸ்யத் தொடர்புகளுடன் கோர்த்து கோர்வையாக்கிக் காட்டியிருக்கிறது கதை. வசியம் என்பதை எல்லோரும் கைக்கொண்டுவிட்டால் வசியத்திற்கு மதிப்பில்லாமல் போய்விடும் போல. அத்தகைய வசியம் எழுத்தாக கதாசிரியருக்கு வாய்த்திருக்கிறது...

#நியூட்டனின்_மூன்றாம்_விதி

இயந்திரத்திற்கும் பூக்கும் காதலை கிரகம் விட்டு கிரகம் கொண்டு சென்று காட்சிப்படுத்தியிருக்கிறார்...

#காமத்தாழி...

யதேச்சையாக ஒரு ticket 100000 ரூபாயில். தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை அதனால் கலந்துகொள்ள முடியாது என 85000 ரூபாய்க்கு கொடுக்கிறான் ஒருவன் அந்த டிக்கெட்டை.... அது புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஒரு தம்பதியர் வேறொரு தம்பதியரோடு குலுக்கல் முறையில் கூடுதல்,  அறைச் செலவு, மது என திளைக்க வாய்ப்பு. பார்த்திபன், சில்வியா இருவரும் அதில் கலக்க முடிவெடுக்கிறார்கள். அதற்கான சம்மதம் கோருதல், சம்மதிக்க வைத்தல் என பார்த்திபன் வேலைகள், அதன்பின் சில்வியா ஆயத்தம் அழகு நிலையம் செல்லுதல், சுயநாவிதம் என நீள்கிறது அதற்கே சில ஆயிரங்கள் செலவு என்பதாக. கொண்டாட்டத்தில் கலக்க செல்லும் நாளில் அவளை பார்த்திபன் வெகு ரசனையுடன் உற்று நோக்கல், தகுந்தாற்போல் அவளும் வசீகரத்தை அழகில் கொண்டு வருதல்... நிகழ்வு நடைபெறும் இடத்தில் பார்த்தி வேறொருத்தியுடன், சில்வியா வேறொருவனுடன்... புத்தாண்டு புதுமையாக விடிகிறது... சில்வியா பார்த்திபனுக்கு good morning மெசேஜை அனுப்புகிறாள். அப்பொழுது அவள் காணும் ஒரு செய்தி அவளை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அது என்ன என்பதாக கதை முடிகிறது. இது போன்ற கதைகள் எல்லாம் மஞ்சள் பத்திரிக்கைகளில் வெறும் ஆபாச சொற்களால் நிரம்பியிருக்கும். ஆனால் இக்கதை எழுத்தின் உணர்ச்சிகளால் அன்பின் உரையாடல்களில் நிரம்பியிருக்கிறது. தோழர் ஒருவரிடம் இந்த கதை பற்றி பகிர்ந்தால் அவர் கார் key யை வாங்கி மொத்தமாகப் போட்டு குலுக்கி எடுத்து இணையாக வரும் நபர்களை தேர்வு செய்வார்களாம். கேள்விப்பட்டிருக்கிறேன் என்றார். ஆச்சரியமாக இருந்தது.

#நான்காவது_தோட்டா

காந்தி இறப்பின்போது அவரின் மேல் பாய்ந்த நான்காவது புல்லட் என்பது உண்மைதானா என்ற தற்போதைய தேடல், மற்றும் காந்தி இறப்பதற்கு முன் வாழ்ந்த கடைசி நாட்களில் அவர் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் அவரை நோக்கி நெருங்கி வந்த இறப்பை அவர் உணர்ந்தே இருக்கிறார் என்ற இரண்டையும் வைத்து பின்னப்பட்ட கதை. நேரு, இந்திரா, ராஜிவ், கோட்சே, வல்லபாய் பட்டேல் என பலரும் கதைக்குள் இருக்கிறார்கள். அன்பால் மட்டுமே இந்த உலகை மீட்டெடுக்க முடியும் என உணர்ந்த காந்தி இவ்வாறுதான் பேசியிருப்பார் என்பதை அவர் கூறுவதாக உள்ள உரையாடல்கள் அனைத்திலும் காணலாம்... மரணத்தின் வாசத்தை உணர்ந்து வாழ்ந்த காந்தியின்   அந்திமக் காலத்தை கண்முன்னே நிறுத்துகிறது கதை.

ஒவ்வொரு கதையும் அலுப்புத் தட்டாமல் நவீன கால பிரச்சனைகள், வாழ்க்கைச் சூழல், தொழில்நுட்பம் இவற்றோடு செல்வது மிகப் பிடித்திருக்கிறது...

தொடருங்கள் தோழர்
வாழ்த்துகளும் பேரன்பும்...

யாழ் தண்விகா

Friday 27 March 2020

எங் கதெ #இமையம்

எங் கதெ
#இமையம்

43 வயது உடைய விநாயகம் திருமணம் முடிக்காமல் கமலா என்பவரோடு எல்லாமுமாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாகப் பேசும் கமலாவுக்காக எல்லாவற்றையும் விடுத்து அவளே கதி என்றிருக்கிறான். அவள் மேல் இவனுக்கு சந்தேகம். அதற்குத் தகுந்தாற்போல் சிற்சில சம்பவங்கள் நடக்கிறது. ஆனால் அவள் எப்போதும் போல் பேசுகிறாள் எதுவும் நடக்காதது போல. பலமுறை அவளிடம் சண்டை போட்டுத் திரும்புகிறான். இவன் வீட்டில் அம்மா, அப்பா, மூன்று தங்கைகள், இவன் தம்பியாக வரும் அம்பலவாணன் என பலரும் இவன் நிலை குறித்து பெரும் வேதனை கொள்கிறார்கள். ஒரு இளைஞனின் காதல் குறித்துப் பேசும்போது கொண்டாடும் விதத்தையும் அதில் ஏற்படும் பிரிவின் வலியையும் விநாயகத்தின் வழியாக சொல்லி வருகிறார் இமையம். கணவன் இழந்தவள் கமலா, இரு பெண் குழந்தைகள், அவளின் மேலதிகாரி, அவளின் அப்பா, அம்மா என பாத்திரங்கள் இருந்தாலும் மிக குறைவான இடங்களே அவர்களுக்கு. ஒரு கட்டத்தில் கமலா மேல் வெறுப்புக் கொண்டு அவளைக் கொலை செய்து தானும் இறந்துவிட முடிவெடுத்து அவளிடம் நோக்கிச் செல்கிறான் விநாயகம். என்ன முடிவாக இருக்கும் என்பதை வாசித்து உணருங்கள்.

ஆசிரியர் தன் கதை கூறுவது போல அவ்வளவு இயல்பாக வந்திருக்கிறது நாவல். பாமா எழுதிய கருக்கு நாவல் போல இது ஒரு எழுத்து நடை. கிராமத்து சொல்லாடல் அப்படியே. பல வார்த்தைகள் அப்படியே நம்மை கிராமத்துக்குள் இழுத்துச் செல்வது போல இருக்கின்றன.

பாலு குடிச்சிக்கிட்டு இருக்கும்போதே தூங்கிப்போற குழந்தை மாரி பாய விரிச்சதுமே அவ தூங்கிட்டா.
வெதய வெதச்சவன் தூங்குனாலும் அவன் வெதச்ச வெத தூங்காதில்லையா? அந்தமாரிதான் நான் தூங்கல.

கூரயிலிருந்து தண்ணி எறங்குற மாரி எங் கண்ணுல தண்ணி எறங்குச்சி.

பொங்கக் காசி கொடு மாமான்னு மூணு தங்கச்சிப் புள்ளைங்களும் என்னெச் சுத்திக்கிச்சி. வெறும் மூணு ரூபாதான் இருந்திச்சி. எதிரில ஏழெட்டுப் புள்ளைங்க. அதுகளப் பாத்ததும் துணியில்லாம நிக்குற மாரி இருந்திச்சி.

வெலக்கி வாங்குனவன் இயித்துக்கிட்டுப் போற ஆடு மாரி நான் வூட்ட வுட்டு வெளியே நடந்தன். ஆட்டுக்காரி மாரி எங்கம்மா வாசல்ல நின்னு என்னயே பார்த்துக்கிட்டு இருந்திச்சி...

இப்படிப் பல இடங்கள்.
வாசியுங்கள்
நீங்கள் வினாயகமாக மாறலாம்...
கமலாவாக மாறலாம்.
அல்லது இவர்களை வேடிக்கை பார்க்கும் ஊர்க்காரர்களாக மாறலாம்.

வாழ்த்துகள் தோழர் இமையம்...
க்ரியா பதிப்பகம்.

யாழ் தண்விகா

Monday 17 February 2020

பறவையின் நிழல் _ கவிஞர் பிருந்தா சாரதி

#பறவையின்_நிழல்
#கவிதைத்தொகுப்பு
#கவிஞர் Brindha Sarathy

தன்னிலை மறந்து பேரின்பத்தை உணர்ந்து கொண்டிருக்கும் உன்னத நிலையே காதல். என்னிலை வந்தாலும் அவளேதான் வேண்டும் அவள் மடியில் உயிர்மடிய வேண்டுமென உச்சநிலைக்குச் சென்று ஒப்படைப்பது காதல்.
வெயிலின் வெம்மை குளிரும்.. குளிரைக் கூட மழையில் நனைவதைப்போல சிலாகிக்கும் மனதை உண்டு பண்ணக் கூடியது காதல். உயிரின் கடைசி அணுவைக் கூட அசைய வைத்து ஆதியின் அந்தத்தைத் தேட வைக்கும். ஏகாந்தத்தைச் சுமந்து கொண்டு பேரண்டப் பெருவெளியில் மிதக்கும் உணர்வில் வாழ்பவர்களே காதலர்கள். அவர்களுக்கு கவிதை என்பது உறைக் கிணறு போன்றது. அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி போன்றது. வானத்தில் எப்போதோ தோன்றும் வானவில்லும் காதலிக்குப் போட்டியாக வந்துவிடும். இப்படி பிரபஞ்சத்தின் முதல் மொழியான காதலைப் பற்றிய நூறு கவிதைகளை கவிஞரும், தித்திக்குதே திரைப்படத்தின் இயக்குனரும், ஆனந்தம், பையா, வேட்டை, அஞ்சான் போன்ற திரைப்படங்களின் வசனகர்த்தாவுமான தோழர் Brindha Sarathy எழுதியிருப்பது அவரின் காதல் உணர்வைப் படம்பிடிப்பதாக இருக்கிறது

"அதுவரை
போட்டியே இல்லாமல்
ஜெயித்துக் கொண்டிருந்த வானவில்
நீ பிறந்த பிறகு
பொறாமைப்படத் தொடங்கியது"
என்ற கவிதையில் இயற்கையை விட என்னவள் பேரழகியே என்கிறார் கவிஞர்.

"என் உள்ளங்கை நெல்மணிகளை
நீ கொத்திக் கொத்தித் தின்றபோது
உன் கூரிய அலகுகள் தந்த வலி சுகமாயிருந்தது
இன்று கைநிறைய தானியங்கள்
நீ வராத வெறுமைதான்
வலிக்கிறது"
இந்தக் கவிதையில் கூரிய அலகுகள் கொடுத்த வலியின் சுகத்தையும், பிரிவின் வலியில் துடிக்கும் அவலத்தையும் ஒரே நேர்கோட்டில் காணமுடிகிறது. பறவையையும் காதலையும் ஒருங்கிணைத்து வரிகளைப் படைத்திருக்கிறார்.

பிற உயிரினங்களின் மீது பரிவைக் காட்டும் காதலி அதனோடு கொஞ்சி விளையாடும் குழந்தைத் தனத்தை காதலன் தன்னை அங்கு முன்னிறுத்தி அந்த உயிரினமாக மாறிவிடும் நேரத்தை
"உன் வீட்டுத் தொட்டி மீன்களிடம்
நீ காட்டும் கரிசனத்தைப் பார்த்தபோது
அந்தக் குட்டி மீன்களில்
ஒன்றாகி விட்டேன் நான்" என்கிறார்.

இன்னொரு இடத்தில் உயிரற்ற பொருளின்மீது அவளிட்ட முத்தத்தைச் சொல்கிறார்
"நிலைவாசல் கதவுக்கு
நீ தந்த முத்தம்
இன்னமும்
அங்கேயேதான் இருக்கிறது"

இன்னுமொரு கவிதையில் நினைவுகளைச் சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கும் காதல்கள் இங்கு ஏராளமாக இருக்கின்றன. அலைந்து அவதியுறும் அலாதியான இன்பமும் துன்பமும் சுகந்த மனநிலையுமே காதலின் பித்து நிலை. தன்னிலை மறந்து தானாக அவளுள் வாழ்வது அப்படி வாழ்வதற்கான சாத்தியங்களை காதல் உருவாக்கும் அல்லது காதலர்கள் கொள்வார்கள் என்கிறார்.
"வார்த்தைகளை
இறைத்து இறைத்துத்
தோற்றுக் கொண்டிருக்கிறேன் நான்
மௌனத்தை
நீட்டித்து நீட்டித்து
ஜெயித்துக் கொண்டிருக்கிறாய் நீ"
என்ற கவிதையின் மூலம் அதனை நிறுவுகிறார்.

கொடூரத்தின் சொற்களை விட பன்மடங்கு வலியையும் வேதனையையும் ஏற்படுத்தும் மௌனம். காலமும் நேரமும் காதலை காவு வாங்கும். வெறுமையை உண்டு பண்ணும். மௌனமும் வெறுமையும் காதலை ஓட ஓட விரட்டிக் கொல்லும். காதலர்கள் இறப்பார்கள் தவிர காதலும் அதன் நினைவும் அழியாமல் தொடரும். சுவடைப் போல படிந்திருக்கும்.

இப்படிப் பறவையின் நிழல் தொகுப்பைப் படிக்கும்போது
காதல் உலகில் பறந்து கொண்டே இருக்கலாம். நிழல் தேடி ஒதுங்கிக் கொள்வது போலவே காதலில் மூழ்கி அவ்வப்போது இளைப்பாற மட்டுமல்லாது நினைவில் ஊறித் திளைக்க கவிதை பேரின்ப உலகம். கவிஞர் பிருந்தா சாரதியின் கவிதைத் தொகுப்பும் அப்படியே. காதலின் பேரின்பம்,உச்சநிலை,பிரிவு,கோவம், போன்றவற்றை பேசும் இத்தொகுப்பின் கவிதைகள் எல்லோர் வாழ்விலும் கடந்து வந்த காதல்களை நினைவுபடுத்துவதாக உள்ளது. கடந்த காதல்களை மீட்டுணரும் அதே சமயம் அதன்மேல் சுவாரசியங்களை அள்ளித் தெளிப்பதாகவும் உள்ளது.

வாழ்த்துகள் தோழர் Brindha Sarathy.

Wednesday 29 January 2020

தனித்திருக்கும் அரளிகளின் மதியம்

#தனித்திருக்கும்_அரளிகளின்_மதியம்
#கவிஞர்_ப_காளிமுத்து
#கவிதைத்தொகுப்பு

கவிதை எப்போதும் ஒரு வழிப்பாதையாக அமைந்துவிட்டால் அது எத்தகைய அனுபவத்தையும் கடத்தும் வேலையைச் செய்யாது. அதே கவிதை இருவழிப் பாதையாக அமையும் பொழுது ஒரு வாசகன் கவிதையை கண்டடைகிறான். ஒரு கவிதை ஒரு நல்ல அனுபவத்தை கடத்தும் பணியை செய்து விடுகிறது. புத்தகம் வாசகன் இரண்டுக்குமான செயல் இங்கு ஒரு ஆத்மார்த்தமான எண்ண ஓட்டத்தை இருதரப்பிலும் கடத்தும் பணியை செய்ய வேண்டும். அத்தகைய அதிசயத்தக்க ஒரு பணியை தனித்திருக்கும் அரளிகளின் மதியம் என்ற இக்கவிதைத்தொகுப்பு அனாயசமாக செய்து முடித்திருக்கிறது.

ஒரு கவிதை நம்மைப் பேச வைக்க வேண்டும். ஒரு கவிதையோடு நாம் பேசவேண்டும். இந்தக் கவிதை நூல் நம்மைப்பேச வைக்கிறது. நாமும் கவிதையோடு பேசுகிறோம். இதற்கும் மேலாக கவிதை நம் குரலை காது கொடுத்துக் கேட்கிறது. இதனை எப்படி நாம் உணர்வது.
ஒரு கவிதை...

சிறு நிலம்
கொஞ்சம் தீனி
பரிவு நிழல்
பசி தீர்க்க அவகாசம்
ஒரு வேடனும்

மற்றும் ஒரு கவிதை...

அது வேடன் வீடு தான்
எனக்கும் தெரியும்
அந்தப் பறவைக்கும் தெரியும்
பிறகு கீச்சிடுவதெதற்கென்றுதான் தெரியவில்லை...

கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முடிப்பினைக் கைவசம் வைத்திருக்கின்றன. அந்த முடிப்பு என்பது நாம் அறியாத ஒன்றாக இருப்பதுதான் கவிதையின் சிறப்பு எனக் கருத வேண்டியிருக்கிறது
"மாதக் காலண்டரில் இத்தேதி அடிக்கோடிடப்படவில்லை
மகிழ் தினங்களின் வரிசையிலும் இல்லை
ஒரு மழை
காதல் செடிக்குத் தூறாத
ஒரு நாளை
எவரின் சபித்தலுக்கும்
ஆட்படாத ஒரு நாளை
வேண்டுமானால்
பிறந்த தேதியே அறியாத ஒருத்தியின்
பிறந்தநாளை
இன்றைக்குக்
கொண்டாடினால் என்ன?"
சொற்களில் காணப்படும் வித்தகத் தன்மை ஒரு புறம் இருந்தாலும் அதனுள் பொதிந்து கிடக்கும் அன்பிற்கு சொற்கள் தன்னை ஒப்புக்கொடுக்கும் வித்தை மிகவும் இலகுவாக கைகூடியிருக்கிறது கவிஞருக்கு. எவரின் சபித்தலுக்கும் ஆட்படாத ஒரு நாளை என்ற வார்த்தையும் பிறந்த தேதியே அறியாத ஒருத்தியின் பிறந்தநாளை இன்றைக்குக் கொண்டாடினால் என்ன என்ற வார்த்தையும் கவிதையின் தளத்தை மிகச் சிறப்பாக வேறொரு இடத்தில் நிறுத்துகிறது...

காதல் கவிதைகளும் தொகுப்பில் காணக் கிடைக்கின்றன
"ஒரு மரத்தின்
எப்போதும்
உதிர்க்காத இலையை
உன் பெயர் எழுதித் தந்து செல்கிறாய்
அவ்விலை
என்னுள் ஒரு பெரும் மரமானது
எக்கிளை காணினும்
உதிரவே உதிரா இலைகள்..."

"காத்திருத்தலைச் சுவையூட்ட
ஒரு மழையை அனுப்பினாய்
அது வேடிக்கை பார்த்தபடி இருந்த
நிலத்தை துள்ளல் இசைக்கு ஆடச் செய்தது
ஓர் உடலின் ஒட்டுமொத்த சூட்டையும்
ஒரு கோப்பையில் இறக்கித் தந்தது
காலிக் கோப்பையை நிரப்பத் தொடங்கினேன்
வழியும் முன்னமே வருகிறாய்
பிறகு
அந்த மழையை
சுமந்தபடி பயணமானோம்..."

பெயர் எழுதி தந்து செல்லக்கூடிய இலை மனதில் பெரும் மரமாகி நிற்கிறது. கிளைகள் எங்கும் உதிரவே உதிரா இலைகள்! காதலின் தனித்துவம் சொல்லும் அற்புத வரிகள்.

 ஒரு மழையை காதலி அனுப்புகிறாள். மழையால் நிலமாடுகிறது. உடலின் ஒட்டுமொத்த சூட்டையும்  கோப்பையில் நிரப்புகிறது.  தொடர்ந்து காலி கோப்பையை மழையால் நிரப்ப தொடங்குகிறார் கவிஞர். ஆனால்  காலி கோப்பை நிரம்புவதற்கு முன்னரே காதலி வருகிறாள். காலி கோப்பை அப்படியே இருக்கிறது. இன்னும் வழியவில்லை மழை காலிக் கோப்பையில். மழையை என்னசெய்ய... அந்த மழையை சுமந்தபடி பயணம் ஆகின்றனர் காதலர்கள். ஒரு அற்புத உணர்வை காதல் கொடுக்கிறது. அந்த உணர்வை கவிதையும் கொடுக்கும் என்று நிரூபித்துள்ளார் கவிஞர்.

தொகுப்பெங்கிலும் மென் ரசனைக் கவிதைகளே அதிகளவில் இருக்கின்றன. சில கவிதைகளில் ரசனையின் உச்சம் வெளிப்படுகிறது. கவிதையை கவிதையாக கண்டறியும் வாகு இவருடைய கவிதை எனலாம்.
அப்படி ஒரு கவிதை இது.
"பறத்தலில் சற்று குறைபாடுள்ள பறவை மேல் செல்கிறது
சக பறவைகளின் விரைவைப் பொருட்படுத்துவதில்லை
சின்னஞ்சிறு பறவைகள் முந்திச் செல்கையில்
சுருக்கமாய் தேற்றிக்கொள்கிறது மழைக்காலங்களில் சிறகுதற்றும் பறவைகளை நேசிக்கிறது உடன்பிறப்பு பறவைகளின் கவனிப்புகளை விரும்புவதில்லை
வழக்கமான இடங்களில் இருக்கும் தீனிகளே போதுமானதாகிறது 
யார் மீதும் புகார்கள்அற்ற அந்தப் பறவைக்கு
உயரப் பறத்தல் இல்லை பறத்தலின் பொருட்டே திருப்தியுறுகிறது"

ஒரு கவிதையை ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாசித்தல் என்பது புரியாமல் வாசித்தல் ஒன்று. ரசனையின் பால் மீண்டும் மீண்டும் வாசித்தல் மற்றொன்று. காளிமுத்து அவர்களின் கவிதை ரசனையின் பால் வாசிக்கத் தூண்டும் கவிதை. மேலும் கவிதையின் பால் நம்மை இழுத்துச் செல்லக்கூடிய வகைமை.
"அம் மேசையிலிருந்து
இடறி விழுந்த
இரு குவளைகளில்
ஒன்று என்னுடையது"
அவ்வளவுதான் கவிதை. மேஜையில் பார்வை விழுதல், அந்த பார்வையின் திசை அடுத்து இடறி விழும் குவளையின் பக்கம் செல்லுதல், அடுத்து விழுந்த குவளை தன்னுடையது என்று அறிதல், அந்த மற்றொரு குவளை யாருடையது என்று வினவுதல், ஏன் விழுந்தது என்று கேள்வி எழும்புதல், எந்த மாதிரியான சூழலில் இந்த விழுதல் சாத்தியம் என்ற வினா தோன்றுதல், யார் யார் சந்தித்துக் கொண்டது என்று எண்ண வைத்தல், இப்படியான எண்ணத்தை உருவாக்கி விடுவது இவர் திட்டமிட்டு அமைத்ததா அல்லது கவிதை அமைக்கிறதா என்பதுதான் மீண்டும் மீண்டும் படிக்கச் செய்தலில் காணக்கிடைக்கும் லாவகம்...

கவிதைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையான கரு, கவிதைக்கான சொற்கள் பிரயோகம் என்பது ஒரு தேர்ந்த அனுபவசாலியான கவிஞன் கையாள்வது போல அவ்வளவு நேர்த்தி, என் கவிதைகள் இப்படித்தான் இருக்கும் என்பது போலான உத்தியை கையாளுதல், இயற்கையை பாடுதல் என தன்னுடைய முதல் தொகுப்பிலேயே கவிதையை கொண்டாடித் தீர்த்திருக்கிறார் கவிஞர். அவரோடு சேர்ந்து நாம் கொண்டாடும் அதே கணம் ஆச்சரியத்தையும் முன்வைத்து கொண்டாடித் தீர்க்கிறோம்.

இறுதியாக ஒரு கவிதை...

"இந்நேரமாகியும்
ஒளிரும் அவ்வீட்டை
கடப்பவளின் கைகளுக்குள்
ஒரு மெல்லிய பகை
சிணுங்கிக் கொண்டிருந்தது"
இந்நேரம்  என்பது எவ்வளவு நேரம், ஒளிரும் வீடு யார் வீடு, கடப்பவள் என்பவள் யார், அவளுக்குள் எதற்கான பகை சிணுங்கிக் கொண்டிருந்தது, எப்பொழுது வீரியமாகும்...

கவிஞர் அம்சப்ரியா கூறுவது போல
"கவிஞன் தனக்குள் இடைவிடாமல் கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற வேளையில் தனக்கான பாதிப்பை வெளிப்படுத்துகிற போது அது தனக்கான வடிவத்தை தேர்ந்தெடுக்கிறது. அது ஒரு சிறந்த கவிதையும் ஆகிறது..." அப்படித்தான் கவி காளிமுத்துவின் கவிதைகளும்.

வாழ்த்துகள் தோழர் Kavi Kalimuthu
9629446203
இருவாட்சி பதிப்பகம்...

Wednesday 22 January 2020

கோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள்

தோழர் சேலம் ராஜா எழுதிய #கோழிக்கறி_வாங்குபவனின்_சித்திரக்குறிப்புகள் என்ற கவிதை நூலை தபாலில் கிடைக்கப் பெற்றவுடன் வாசித்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது அதில் உள்ள முதல் கவிதையை படித்த உடனே.

ஒரு ஊரின் சாதியப் பாகுபாட்டை
ஒரு ஊரின் வர்க்க பாகுபாட்டை
ஒரு ஊரின் மனிதர்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை
ஊரை குறித்த ஒரு சித்திரத்தை இதைவிட அற்புதமாக எளிய வரிகளில் கூறிவிட முடியுமா என்றால் என்னால் வேறு எந்த கவிதையையும் மேற்கோள் காட்டி விட முடியுமா என்று தோன்றவில்லை அந்தக் கவிதை "அழகிய
கோபுரத்தில் தொடங்கி
அம்பேத்கர் சிலையோடு
முடிந்து விடுகிறது
எங்கள் ஊர்" என்பதுதான்.
ஆச்சரியமாக இருக்கிறது. அவ்வளவு எளிமையாக ஆனால் ஒரு மூர்க்கம் இதற்குள் இருக்கிறது. அந்த முகம் தான் கோபுரமும் அம்பேத்கரும் என காண்பிக்கப்பட்டுள்ளது.  அற்புதமான முதல் கவிதை. இந்த ஒரு கவிதைக்காகவே சேலம் ராஜாவின் கைவிரல்களில் படிந்துள்ள சித்திரக் குறிப்புகளுக்கு ஆயிரம் ஆயிரம் முத்தங்களைத் தரலாம்...

கவிதை என்றால் என்ன
கவிதை என்பது எதைக் குறித்து பேசவேண்டும்
கவிதை என்ன செய்யும்
என்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலாக இத்தொகுப்பை அடையாளம் காட்டலாம் கவிதை என்பது எளிமையாக இருக்கவேண்டும்
கவிதை என்பது மனிதர்களை குறித்துப் பேச வேண்டும்
கவிதை என்பது நாம் பார்க்காத உலகத்தை காட்ட வேண்டும்
பார்த்த உலகத்திலுள்ள வேறுபாடுகளை மனிதத்தை நமக்கு அடையாளம் காட்ட வேண்டும். அதனை இந்தத் தொகுப்பு நிறைவேற்றி இருப்பதாகவே நம்புகிறேன். நட்பை மையப்படுத்தி ஒரு கவிதை கருப்பி என்ற தலைப்பில்...
தனக்குள் கிடைக்கும் உள்ளக்கிடக்கையை எந்தவித சங்கோஜமும் இல்லாமல் நண்பனிடம் தெரிவிக்கும் ஒருத்தி பற்றியது இந்தக் கவிதை. கவிதையின் நிறைவில்
"இன்று பேருந்தில் ஏறி என்னருகே அமர்ந்ததுமே
"பீரியட்ஸ் டைம்டா வயிறு வலி முடியல
நாப்கினே நனஞ்சிடுச்சு"
 எந்தவித சங்கோஜமுமின்றி சொல்லிவிட்டுத் தோள் சாய்ந்தாள். எனக்குள் தாய்மை பூக்கும் முன் வேர்த்த நொடி
பாறை இடுக்கில் விதை முட்டும் தருணம் போலிருந்தது"
 நட்பு என்பது என்ன செய்யும்? இதைப் போன்ற சொற்களை கேட்கும்பொழுது தோளில் சாய்த்து ஆறுதல் அளிக்கும் ஒரு தாயின் அன்பை போல அந்த தோள்கள் ஆக ஒவ்வொரு ஆண்களின் தோள்களும் மாறினால் எவ்வளவு அற்புதமான ஒரு வாழ்வாக இருக்கும் நட்பு பாராட்டும் தோழிகளுக்கு...

எல்லா இடங்களிலும் கொட்டிக் கிடப்பதை கவிதை என ஒவ்வொருவரும் எழுதி வைத்து விடுகிறோம். ஆனால் சேலம் ராஜாவின் பார்வை கவிதையை மட்டுமே கவிதையாக்கி வைத்திருக்கிறது. அந்த கவிதை அலங்கோலத்தில் இருந்தும் பிறந்திருக்கிறது. அழகியலில் இருந்தும் பிறந்திருக்கிறது. விடுதலை வேண்டி ஒரு யாசகம் என்றொரு கவிதை. அந்த கவிதையில் அரசு கட்டி கொடுத்திருக்கும் கழிப்பறைகளில் தனியார் கழிப்பறைகளில் சுவர்களில் எழுதி உள்ள வாசகங்கள் சுவரில் வடித்து வைத்துள்ள ஓவியங்கள் சுவரில் குறித்து வைக்கப்பட்டுள்ள அலைபேசி எண்கள் இதனை மையமாக வைத்து எழுதப்பட்ட அந்த கவிதையில் ஆண்களின் கழிவறை என்பது எவ்வளவு வக்கிரபுத்தி இருக்கக்கூடிய ஒன்று என்பதனை காட்சிப்படுத்தி இருக்கிறது. ஒவ்வொன்றையும் சொல்லிவிட்டு அந்த கவிதையின் முடிவில் இவ்வாறு முடிக்கிறார்
"எட்டிப் பார்க்க விருப்பமில்லை
வெட்கம் இன்றி கேட்கிறேன்.
 நீ புழங்கும் கழிவறைக்கு
என்னை அழைத்துச் செல் சினேகி..." இதுபோன்ற வக்கிரங்களை காண சகிக்கவில்லை. இதுபோன்ற வக்கிரங்களுக்கு அப்பாற்பட்ட இடங்களை காண விரும்புகிறேன்.
இது போன்ற மனிதர்கள் உங்களிடம் இருக்கிறார்களா என்ன
இது போல உங்களில்  இவ்வளவு அதிகமாக தோழியர் இருக்க மாட்டார்கள் என்று நம்பிக்கையுடன் எட்டிப் பார்க்க வருகிறேன் என்ற பல கோணங்களில் கவிஞரின் எண்ண ஓட்டத்தை நான் காண்கிறேன் இக்கவிதையில்...

அரசியலற்ற எதுவும் முழுமையான கவிதை ஆகிவிடாது என்பது உண்மைதான். அதற்காக எல்லாவற்றிலும் அரசியல் இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. ஆனால் இத்தொகுப்பில் அழகியலை காட்சிப்படுத்திய அதேநேரத்தில் வாழ்க்கையை காட்சிப்படுத்திய அதே நேரத்தில் காதலை காட்சிப்படுத்திய அதே நேரத்தில் வயல் வெளியை காட்சிப்படுத்திய அதேநேரத்தில் அரசியலின் அவலத்தையும் காட்சிப்படுத்தியிருக்கிறார். எட்டு வழி சாலை எவ்வளவு கொடூரமானது?
 எட்டு வழிச் சாலை ஏழைகளின், வயல்வெளிகளின், உழைக்கும் மக்களின் முகத்தை எவ்வாறு கசக்கிப் எறிகிறது. எவ்வாறு இந்த மண்ணிலிருந்து அப்புறப்படுத்துகிறது என்பதனை புரட்சிகரமான வார்த்தைகளின் மூலமாக சேலத்திற்கும் எடப்பாடிக்கும் தூரமில்லை என்ற கவிதையில் வடித்திருக்கிறார் கவிஞர். "எங்கள் நிலம் கேட்டு
எங்கள் உரிமை கேட்டு
எங்கள் வாழ்வாதாரம் கேட்டு எதற்கெடுத்தாலும் போராட்டம் எதுவாகினும் போராட்டம்
நாங்கள் எல்லாம் சமூக விரோதிகள் நீங்களெல்லாம்...?"
என்ற கேள்வியை முன்வைக்கிறார் அரசியல்வாதிகளை நோக்கி. தலைப்பே சொல்லும் இது யாரை நோக்கிய கேள்வி என்று...
தாமரை மயிரிலும் மலராது என்று மிக அதிகமாக தமிழகத்தில் புழங்கிய ஒரு வார்த்தையை எடுத்துக்காட்டும் விதமான ஒரு கவிதையும் உண்டு தொகுப்பில்...

பூனைக்கு தெரியாத உலகம் கொத்துக்காரர் கிழவி உள்ளிட்ட  கவிதைகள் வறுமையை பேசுகின்றன. வறுமைக்கும் கார்ப்பரேட்டுக்கும் இடையே உள்ள மேடு பள்ளத்தினை காட்சிப்படுத்தி  இருக்கின்றன. பிரதமரின் செயல்பாடுகளை அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை விமர்சனம் செய்யக்கூடிய முட்டாள் பெட்டி என்ற கவிதை எல்லாவற்றையும் ஒரு பகடி போல கடந்து போகும் மக்களின் மனநிலையைக் காட்டுகிறது...
மேலும் ஊர் நாட்டு வழக்காடு மொழியில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு கவிதையும் மனிதர்களின் வெள்ளந்தித்தனத்தையும் அவர்களின் ஆற்றாமையையும் அவர்களின் அன்பையும் ஒரு வாழ்வியலோடு நாம் வாசிப்பதன்மூலம்  அறிய முடிகிறது. அதேசமயம் கிராமத்தில் வாழ்கின்ற அப்பாக்கள் மனைவியை தெரிந்தோ தெரியாமலோ வைத்திருக்கக்கூடிய இடம் ஒரு பெண்ணடிமைத்தனத்தை எப்படி எல்லாம் காலம்காலமாக கடத்திவந்திருக்கிறது என்பதையும் உணர வைக்கிறது. தொகுப்பின் இடையிடையே உள்ள குட்டி குட்டி கவிதைகள் வேதனைகள் தொனிக்கும் கவிதைகளுக்கு ஒத்தடம் வைப்பதுபோல் அழகியலை வெளிப்படுத்தும் வண்ணம் உள்ளன. வார்த்தை என்ற தலைப்பிலான கவிதை
"உன் கீழ் உதட்டின் கீழ்
கிளை போல் என் கைகளை விரிக்கிறேன்
அதில் உன் வார்த்தை மூட்டையை அவிழ்த்து விடு" என்ற கவிதையை வாசிக்கும்போது இயல்பாகவே கைகள் விரிகிறது பிடித்த நபரின் இதழின் கீழ்ப்புறம்...

அழைப்பற்ற வீடு என்ற ஒரு கவிதை தன்னுடைய வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரின் நிலை குறித்தும் வாழ்வாதாரம் குறித்தும் வறுமை குறித்தும் உள்ளதை உள்ளபடி காட்சிப்படுத்திச் சென்று கொண்டிருக்கக்கூடிய இந்த கவிதை கடைசியாக உங்களை நான் என் வீட்டிற்கு அழைக்க வில்லை என்பதற்கு காரணம் கூறுவது போல் முடிகிறது எல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரியும் எல்லாம் நீங்கள் பார்த்தவுடன் நீங்கள் எங்கள் மேல் காட்டும் கழிவிரக்கத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது இந்த காலம் எங்களுக்கு சபிக்கப்பட்ட ஒரு வாழ்வு வழங்கியிருக்கிறது என்பது போல் நீங்கள் பரிகாசம் செய்வீர்களா அறிவுரை கூறுவீர்களா தெரியாது ஆனால் அந்த கழிவிரக்கத்தை அந்த பரிதாபத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது நாங்கள் எல்லாவற்றையும் கடக்க பிறந்தவர்கள் நீங்கள் எங்களை நோக்கி பரிகாசம் செய்யும் அந்த பரிதாபத்தை ஒருபோதும் நாங்கள் விரும்புவதில்லை ஆதலால் தான் நான் உங்களை என் வீட்டிற்கு அழைப்பதில்லை என்ற சொற்களோடு அந்த கவிதை முடிந்திருக்கும். அற்புதம் தோழரே.

திரு. செயராமன் என்கிற அப்பாவாகிய புறா மேய்ப்பன் என்றொரு இருபக்க கவிதை ஒரு தந்தையை நாம் எவ்வாறு புரிந்து வைத்திருப்போம். அந்தப் புரிதல் சரியா தவறா என்பது புரிய எவ்வளவு காலம் ஆகும். நாம் நினைத்த நினைப்பு சரி என்று மட்டுமே முழுதும் உணர்ந்து இருக்கிறோமா. நம் நினைப்பு தவறு என்று அறிவதற்கு ஒரு காலமெனும் பூத்து விடுகிறதா. இந்தக் கவிதையில் அதற்கான விடை ஒன்று இருக்கிறது பெயர் என்ற அடையாளம்
அப்பா என்ற அடையாளம்
புறா மேய்ப்பன் என்ற அடையாளம்
இந்த மூன்று அடையாளத்தின் பின்னே  அவருடைய மனிதத்தை
தன் மகன் வாங்கி வந்த புறாவை பாதுகாக்கும் அடையாளத்தை
தன்மகன் வாங்கி வந்த புறா என்பதற்காக அதன் மேல் காட்டும் அன்பை அந்த புறாவை தன் மகனாக பாவிக்கக் கூடிய அந்த அடையாளத்தை அற்புதமாக காட்சிப்படுத்தியுள்ளார்...

கவிதைக்கான மெனக்கெடல்கள் அதிகமில்லை. ஆனாலும் ஒவ்வொரு கவிதையிலும் ஒரு படிமம் இருக்கிறது. அந்த காட்சி என்பது புரியாத ஒன்றாக இல்லை. அனைத்தும் நாம் பார்க்காத ஒரு வாழ்க்கை, பார்த்த ஒரு வாழ்க்கை எதுவாயினும் அந்த வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே அமைத்திருப்பது இந்த தொகுப்பின் ஒரு ஆகச்சிறந்த சிறப்பாகவே கருதலாம். இன்னும் பல கவிதைகளை கூறலாம் என்றாலும் அது விமர்சனம் என்பதைத் தாண்டிய ஒரு அலுப்பூட்டும் செயலாக மாறி விடக்கூடும் என்பதால் கடைசியாக சகமி என்ற ஒரு கவிதை...
கரம் பிடி
பாதை செய்
அரவணை
அழுது உலர்
அதட்டிடு
அடங்கமறு
தோள் சாய்
துயில் கொள்
மடி கொடு
தவிக்க வை
தேடித் தொலை
தொலைந்து பிற
ஆதுரம்  கேள்
பாகுபாடு களை
சேர்ந்து பயணி
நெருங்கி வா
தூரம் தா
மழை பொழி
என் மேலேறி
எனக்குக் கை கொடு
நாட்கள் சிறியது
பயணிப்போம் வா
என் சகமி"
ஒவ்வொரு வரியிலும் காதல் கையளித்திருக்கும் சொற்கள். கவிஞரோடு ஒரு தோழியாகவும் பயணிக்கலாம். ஒரு தோழனாகவும் பயணிக்கலாம். தோழரோடு ஒரு தோழனாக நானும் பயணிக்கிறேன். கவிதைகளின் சொற்கள் போல. மேலும் மேலும் மேலும் எழுதுங்கள் தோழர். நீங்கள் காணும் உலகம் உண்மையானது அந்த உண்மையை உலகம் விரிவாக அறிந்து கொள்ளட்டும் உங்கள் கவிதைகளின் வாயிலாக...
வாழ்த்துகள் தோழர்...

வெளியீடு:
இடையன் இடைச்சி நூலகம்,. ஈரோடு - 9841208152

கிடைக்கும் இடம்:
வெற்றி மொழி வெளியீட்டகம்
திண்டுக்கல்
9715168794

கவிஞர் சேலம் ராஜா 9159919739